நிழலும் நிஐமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 10,916 
 

வருடத்திற்கு இரண்டு முறைதான் நாங்கள் புதிதாக துணி எடுத்துத் தைப்போம். ஒன்று கிறிஸ்து பிறப்புத் திருவிழாவுக்கு. இன்னொன்று எங்கள் ஊர் மாதா திருவிழாவுக்கு. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்கு மதுரைக்குச் சென்று துணிமணி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நானும், என் மனைவியும் பத்து மணிக்கு வரும் வாய்தா வண்டியில் மதுரைக்குப் புறப்பட்டோம். அந்தப் பேருந்தில்தான் மதுரைக் கோர்ட்டுக்கு வாய்தாவுக்குச் செல்பவர்கள் வழக்கமாகச் செல்வார்கள். அதனாலேயே அந்தப் பேருந்துக்;கு வாய்தா வணடி என்ற பெயர் வந்தது. அதை யாரும் இப்போது மதுரைப் பேருந்து என்று சொல்வதில்லை.

எங்கள் ஊர்ப்பேருந்து நிலையத்தில் அவ்வளவு கூட்டமில்லை. உட்கார்ந்து கொண்டு வசதியாய்ப் பயணித்தோம். பேருந்துகளில் இருக்கையைப் பிடித்து உட்கார்ந்து விட்டாலே பெரிய சாதானையாகத்தான் இருக்கிறது. பயணிக்கும்போதே யார்யாருக்கு எவ்வளவு விலைகளில், என்னென்ன வகையானத் துணிகள் எடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுத்துக் கொண்டோம். கையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தது. எவ்வளவுக் கெவ்வளவு சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டுமோ அவ்வளவுக் கவ்வளவுச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்று மனதில் எண்ணிக் கண்டேன். கூடுமானவரையில் ஓர் ஐநூறு ரூவாயாவது இதில் மீதி கொண்டுவரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இப்படிப் பார்த்துப் பார்த்துத்தான் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. எங்களது பொருளாதார நிலை அப்படி.

நான் ஒருவன் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை. மூன்று பிள்ளைகளும் முறையே, மூன்று, இரண்டு, ஒன்று வகுப்புகளில் வரிசையாகப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். நல்லவேளையாக மூன்று பேரும் பையன்களாகப் பிறந்தார்கள் என்று உள்ளூர மகிழ்ந்தாலும் மூன்றாவது பிறந்தவன் பெண்ணாகப் பிறந்திருக்கலாம் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. என் மனைவிக்குக்கூட அப்படி ஒரு ஆசை இருக்கிறது. பெண்பிள்ளை என்றால் டிசைன் டிசைனாக டிரெஸ் போட்டு அழகு பார்க்கலாம்@ விதவிதமா நகைநட்டுப் போட்டுப் பார்க்கலாம் என்று அடிக்கடி கூறுவாள். அதற்கெல்லாம் வருமானம் இல்லையென்றாலும் ஆசைக்கு மட்டும் குறைவில்லை. எனக்கு அந்தமாதிரியெல்லாம் எண்ணமில்லை. பெண்பிள்ளை என்றால் எனக்குப் பிடிக்கும். பிடிக்கிறடிதல்லாம் வாழ்க்கையில் கிடைத்து விடுகிறதா என்ன?

ஆசிரியர் பயிற்சிபெற்று ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் வேலை கிடைக்கவில்லை. அட்டவணைச் சாதியில் பிறந்திருந்தாலும், கிறிஸ்தவன் என்ற காரணத்தால் நான் பிற்படுத்தப்பட்ட சாதிக்காரனாக்கப்பட்டுவிட்டதால் என்னோடு படித்த அட்டவணைச் சாதியைச் சேர்ந்த இந்துப் பையன்கள் வேலையில் சேர்ந்து கைநிறையச் சம்பாரிக்கும்போது நான் மட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் எங்கள் ஊர்ப்பள்ளியில் நியமிக்கப்பட்டு மாதம் இரண்டாயிரம் சம்பளத்தி;ல் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஓய்வு நேரத்தில் என் மனைவி தீப்பெட்டி ஒட்டுவதால் கிடைக்கும் பணத்தையும் வைத்துக் கொண்டு எப்படியோ சமாளித்து வருகிறோம்.

வருடத்தில் ஒருமுறையாவது இந்தப் பிள்ளைகளுக்கு நல்ல துணிமணி எடுக்க வேண்டும் என்றுதான் இந்த மதுரைப் பயணம். மதுரை விளக்குத் தூண் பக்க் சென்று துணிமணிகளை வாங்கிக்கொண்டு திருப்தியாக வெளியே வந்தோம். நான் நினைத்தபடி ஐநூறு ரூபாயை மிச்சம் பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மூன்று பையன்களுக்கும் ரெடிமேட் துணி எடுத்தபிறகு, மனைவிக்கு ஒரு சேலை எடுத்தோம். எனக்கு எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை. கையில் பணமிருக்கவே சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று எண்ணினேன். மனைவியும் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. எங்கள் ஊருக்கு நேராகச் செல்லும் பேருந்து இனி மூன்று மணிக்குத்தான்.

இப்பொழுது மணி ஒன்றுதான் ஆகியிருந்தது. பக்கத்தில் இருந்த உணவகத்தில் சென்று உணவருந்திவிட்டு வெளியே வரும்போது, “சார்…சார்… பசி எடுக்குது சார்… ஒரு அம்பது பைசா குடுங்க சார்.. சார்..” என் மூத்த மகனைவிட கொஞ்சம் பெரியவனா இருப்பான். கிழிந்த சட்டை, கலைந்த முடி இப்படி வழக்கமாக பிச்சை எடுப்பவர்களின் கோலத்தில் இருந்த ஒரு பையன் எங்கள் பின்னே கெஞ்சியபடி வந்தான்.

‘பாவம் இந்த பையன். படிக்க வேண்டிய வயதில் இப்படி பிச்சை எடுத்துக்கொண்டு அலைகிறானே. இவனுடைய தாய் தகப்பனுக்கும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லையோ என்னவோ? ஒருவேளை தாய்தகப்பனே இல்லையோ என்னவோ? பசிக்குது என்கிறான். சரி ஒரு ரூபாய் கொடுத்தேன். அவனுடைய முகத்தில் ஒரு சந்தோசம்.

“இந்தமாதிரி பையனுகளுக்கெல்லாம் குடுக்கவே கூடாது தெரியுமா? சின்னஞ்சிறுசுகள பிச்ச எடுக்க உட்டுட்டு தாயும் தகப்பனும் இவம் பிச்ச எடுத்துட்டு வாரத வாங்கிச் சாப்புட்டுக்கிட்டு ஒக்காந்து இருக்குதுங்க. இவனுக்கு பிச்ச போட்டா, இவனுக்கும் இதேத் தொழிலாப் போகும். இந்த வயசுல பிச்ச எடுக்கனும்னு இவந்தலைல எழுதி இருக்குது பாவம்” என் மனைவி கோபமாக ஆரம்பித்து பாவமாக முடித்தாள். “ஆமா இவந் தலைல எழுதி இருக்கு! யாரு எழுதுறது? எல்லாம் நம்ம எழுதுறதுதான். ஏங்கூடப் படுச்சவனெல்லாம் இன்னைக்கு கைநெறய்யாச் சம்பளம் வாங்கிக்கிட்டு சொகுசா இருக்கைல நாமட்டும் நாயிபடாத பாடு பட்டுக்ககுட்டு இருக்கம்ல. அப்படித்தான். பாவம் இந்தப் பையன். நல்ல புத்திசாலியான பையனா இருப்பாம்னு நெனைக்கேன். அவங் கண்ணப்பாத்தாலே தெரியுது. நம்ம குடுக்குற இந்த ஒரு ரூவாய வச்சு என்னத்த வாங்க முடியும்? ஏதோ இப்பிடி ஒரு நாலு பேரு குடுத்தா எதுனாச்சும் வாங்கிச் சாப்புட்டுக்குவான்.” மனiவியிடம் சொன்னேன்.

‘துணிக்கடைல அவ்வளவு ரூபா செலவழிச்சுத் துணிமணி எடுத்தமே… மீதி ரூபாகூட இருக்குதெ… கிறிஸ்துமஸ்கு நம்ம பிள்ளைகளுக்கு இவ்வளவு செலவு செய்யும்போது இந்தப் பையனுக்கு ஒரு டிரஸ் எடுத்துக் குடுக்கலாமே… அட ஒரு டிரஸ் எடுக்கவேண்டாம். நம்ம நல்லா வகுறு நெறய்யாச் சாப்புட்டுட்டு வரலை அந்தப் பையன் பாவம் பசிக்கிதுன்னு சொன்னப்ப ரெண்டு இட்லி எதுனாச்சும் வாங்கிக் குடுத்துருக்கலாமே… வெறும் ஒத்த ரூவாயக் குடுத்துட்டு வந்துட்டமே…’

‘ஆமா இதுவே பெருசு. செலபேரு இதுகூட குடுக்கமாட்டாங்க. கஞ்சப் பெயலுக. அவெ அம்பது பைசாத்தானக் கேட்டான். நானு ஒரு ரூவா குடுக்கவும் அவனுக்கு ரொம்பா சந்தோசமாத்தான இருந்துச்சு. நானும் பெரிய பணக்காரனா என்ன? ஏதோ ஏந்தகுதிக்கு இம்புட்டுத்தான் செய்ய முடியும்.’ ‘பள்ளிக்கூடத்துல பிள்ளைங்க கிட்டமட்டும் கிறிஸ்துமஸ் சமயத்துல நம்ம மத்தவுங்களுக்கு உதவி செய்யனும்னு வாய் கிழிய சொல்லிட்டு இப்ப இங்க ஒரு நல்ல வாய்ப்பு கெடச்ச பெறகும் செய்யாமெ வாரமே… அந்தப் பையனுக்கு ஒரு கால்ச் சட்ட, ஒரு மேச்சட்ட எடுத்துக்குடுத்துட்டு, சாப்பாடும்; வாங்கிக் குடுத்துட்டு வந்துருக்கலாம். சரி அடுத்த கிறிஸ்துமஸ்கு கண்டிப்பா ஒரு கஸ்டப்படுற பையனுக்குச் செய்யனும்’. பேருந்து நிலையம் சென்று சேரும் வரையில் எனக்குள் பலவிதமான யோசனைகள்.

பேருந்து நிலையத்தில் போடப்பட்டிருந்த சிமெண்டு பெஞ்சில் நானும் என் மனைவியும் அமர்ந்துகொண்டோம். எங்கள் ஊர்ப் பேருந்து வருவதற்கு இன்னும் அதிக நேரம் இருந்தது. அங்கே அமர்ந்தபடி சுற்றிலும் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

அப்போது சற்று தூரத்தில் மக்கள் கூட்டாக நின்று எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட நான் அது என்வென்று பார்;பதற்காக எழுந்தேன். உடனே என் மனைவி சொன்னாள்.
“எங்க கௌம்பிட்டீங்க? பஸ்சு இப்ப வந்துரும். இங்ன இருந்தாத்தான் ஒக்கார எடம் புடிக்க முடியும். போயிட்டு சீக்கிரமா வந்து சேருங்க. அப்பிடியே இந்தப் பெயல்களுக்குத் திங்கிறதுக்கு எதுனாச்சும் வாங்கிட்டு வாங்க. போன ஒடனே வந்து பையத்தான் பாப்பானுங்க.”

நேராகப் பழக்கடைக்குச் சென்ற நான் கொஞ்ம் பழம் வாங்கிக் கொண்டேன். சின்னவனுக்குப் பால்கோவா மிகவும் பிடிக்கும் என்பதால் கால்கிலோ பால்கோவா வாங்கிக் கொண்டேன். அப்படிய அருகிலிருந்த கடையில் பிஸ்கெட் பாக்கெட் இரண்டும், வெளியே இருந்த கடையில் அப்போதுதான் சூடாகப் போட்டுக்கொண்டிருந்த பத்து வடைகளும் வாங்கிக்கொண்டு வந்தேன். நேராக வந்த மனைவியிடம் கொடுத்துவிட்டு வேறு எதுவும் வேண்டுமா என்று கேட்டபோது, கொஞ்சம் பூ வாங்கிட்டு வரக்கூடாதா என்றாள். அவள் கேட்காமலே வாங்கிக் கொடுத்திருக்கலாமே என்றெண்ணியபடி அருகிலிருந்த பூக்கடையில் பூவை வாங்கிக் கொடுத்துவிட்டு கூட்டத்தைப் பார்க்கக் கிளம்பினேன்.

“இனி எங்க போறீங்க? அதான் எல்லாம் வாங்கியாச்சே. பஸ்சு வந்துரப் போகுது. இங்ன ஒக்காருங்க. சொல்லச் சொல்லப் போறதப் பாரு,” என்று என் மனைவி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தை நோக்கிச் சென்றேன்.

பல ஊர்களிலிருந்தும் வந்த மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க நடுவில் ஒரு பெண் கழுத்தைச் சுற்றி ஒரு மேளத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு அதை அடித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு அருகே வாட்டசாட்டமான ஒரு ஆண் அந்த மேளச் சத்தத்திற்கு ஏற்றபடி ஆடிக்கொண்டே கையில் ஒரு நீண்;ட சவுக்கை வைத்து தன் முதுகிலே ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டிருந்தார். முதுகில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஒரு காலில் பேண்டை முழங்கால்வரை தூக்கி விட்டிருந்த அவர், மேலெ சட்டை எதுவும் போடவில்லை. இப்படி பல இடங்களில் அடித்து அடித்தோ என்னவோ முதுகில் ஆங்காங்கே காய்ந்துப் போனதுபோல் தெரிந்தது. வியர்த்து ஒழுகியது. முதுகிலும் கைகளிலும் மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தார். கால்களில் கட்டியிருந்த சலங்கை, அவரது ஆட்டத்திற்கு ஏற்ப ‘சல்’ ‘சல்’ எனக் குலுங்கியது. அவருக்குப் பக்கத்திலேயெ மற்றொரு சிறுவன் அவரைப் போலவே பேண்ட் மட்டும் அணிந்துகொண்டு மேலே சட்டை எதுவும் போடாமல் சின்ன சவுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு பளார் பளார் என்று அவனது முதுகில் அடித்துக் கொண்டிருந்தான்.

அவனும் கால்களில் சலங்கை கட்டிக் கொண்டு மேளச் சத்தத்துக்கு ஏற்ப கால்களை மாற்றி மாற்றிப் போட்டு ஆடிக்கொண்டிருந்தான். ஆடிக்கொண்டெ அடித்தான். அடித்துக்கொண்டெ ஆடினான்.அவன் கால்களிலும் கைகளிலும் இருந்த வேகத்தையும், அவனது அம்மா அடித்த மேளத்துக்கு ஏற்றடி அவன் ஆடிய ஆட்டத்தையும் அனைவரும் ரசித்தார்கள். என்னால் அதை ரசிக்க முடியவில்லை. ‘இதென்ன பொழப்புன்னு இப்பிடிப் போட்டு ஒடம்ப ரணமாக்கிட்டு கெடக்காங்க! இந்த ஆளோட ஒடம்பு நல்லாத்தானே இருக்குது. எதுனாச்சும் வேல செஞ்சு பொழைக்கலாமே… இவரு சாட்டைய வச்சுக் கொடூரமா அடுச்சுக்குறது மட்டுமில்லாமெ இந்தச் சின்னப் பையனயும் இப்பிடி போட்டு உசுர எடுக்காங்களே.. சே… இந்த மத்தியான வெயிலுல இப்பிடி வேர்த்து ஒழுகைல இப்பிடித் தோலப் பிச்சுக்குற மாதிரி அடிச்சுக்கிட்டு… பாக்கவே ரொம்பாக் கண்றாவியா இருக்குது. இதவேற இம்புட்டுப் பேரு சுத்தி நின்னு வேடிக்கப் பார்த்துக்கிட்டு இருக்கோம்!

ஒரு மனுசன் அவனப் போட்டு அடுச்சுக் காயப்படுத்துறத இம்புட்டுக் குரூரமா பார்த்து ரசிககிறத நெனைக்கைல என்னமோ மாதிரி இருக்குது. அதுலயும் அந்தச் சின்னப் பையனப் பாத்தா நெஞ்சே கனத்துப் போகுது.’

எனக்குள் மண்டிய பலவித சிந்தனைகளோடு கூட்டத்தில் இருந்தவர்களை ஒருமுறைச் சுற்றிப் பார்த்தேன். பலவிதமான முகங்கள். பலவிதுமான முகபாவனைகள். கூட்டத்தின் முனபகுதியில் நின்ற சிறுவனைப் பார்த்ததும் அவனை அடையாளம் கண்டு கொண்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என்னிடம் பிச்சை கேட்ட சிறுவன்! இவன் இங்கே என்ன செய்கிறான் என்றெண்ணியபடி ஆட்டத்தை விட்டுவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் முகம் சஞ்சலப்படுவதுபோல எனக்குத் தோன்றியது. அந்தச் சிறுவனுக்கும் இவனுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான் இருக்கும். இடையிடையே சிலர் அந்தப் பெண் அருகே விரித்து வைக்கப்பட்டிருந்த துணியில் சில சில்லறைக் காசுகளைத் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார்கள். அவள் மேளத்தை அடித்துக்கொண்டே கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாள். சிறிது நேரம் சென்றபின் அந்தச் சிறுவனும், அவனது அப்பாவும் சாட்டையால் அடிப்பதை நிறுத்திவிட்டு கூட்டத்தைச் சுற்றி வந்து கையேந்தி காசு கேட்டார்கள். சிலர் காசு கொடுத்தார்கள். வேறுசிலர் வெறுமனே கையை விரித்தார்கள்.

என்னிடம் பிச்சை எடுத்த சிறுவன் நேராக உள்ளே சென்றான். சாட்டையால் அடித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுவனிடம் சென்று அவன் கையைப் பிடித்தான். அன்று அவன் பிச்சையெடுத்து வைத்திருந்த அத்தனை காசையும் அவன் கையில் கொடுத்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போய்விட்டான். என்னை யாரோ சாட்டையால் அடிப்பதுபோல இருந்தது.

– Dec 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *