தொடரோட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 12,330 
 

அடுப்படியை சுத்தம் செய்துகொண்டிருந்த விசாலம் ……..போன்ஒலிகேட்டு கையை முந்தானையில் துடைத்தபடி ரிசீவரை எடுத்தாள்.எதிர்புறம் மகள் மாலினி பேசினாள்.

“ஏம்மா …அப்பா ஓய்வு பெற இன்னும் பத்து நாள்தானே இருக்கு? பாவம் அப்பா.. ரிடையர்மென்ட்டுக்கு அப்புறம் பொழுது போகாம ரொம்ப கஷ்டப்படுவார் இல்லையா? கோடு போட்டது மாதிரி வாழ்ந்தவர், உனக்குப்பரவயில்லை..இனி காலையில் நாலு மணிக்குகெல்லாம் எழுந்திரிக்கவேண்டாம். மெதுவாக எதையும் செய்யலாம்”

“ப்ச் ..பாவம்டி அவர் இருபத்தொன்பது வயசுல வேலைக்குப்போனவர் ..எதிலும் மிலிடரி மாதிரி நடந்துக்கிறவர் .அவருக்கு கொஞ்சம் சிரமம்தான். ஆனா இத்தனை நாள் உழைச்ச உடம்புக்கு கொஞ்சமாவது ரெஸ்ட் வேண்டாமா? இனி கோவில் .குளம்னு இருக்க வேண்டியதுதான் ..அது சரி பேரக்குழந்தை, மாப்பிள்ளை எல்லாம் எப்படி இருக்காங்க? உன் மாமனார் ,மாமியார் சௌக்கியமா?”

“எல்லாரும் நல்லாருக்காங்க. நீயும் உன் உடம்பை பார்த்துக்க ..வெச்சுடட்டுமா “.

அடுத்து மகன் பேசினான், “என்னம்மா ..அப்பாவுக்கு கவுன்ட் டவுன் ஆரம்பமாயிருச்சா ? என்ன சொல்றார்?”

“ஏண்டா, உங்களுக்கெல்லாம் அப்பாவைப்பார்த்தா கிண்டலா இருக்கா? நானே பயந்துகிட்டு இருக்கேன் அவரால வீட்டிலே ஓய்ந்து உட்கார முடியாதேன்னு, நீயும் மாலினியும் போன் பண்ணி விளையாடுறீங்களா?”

“அயோ ..அப்படியெல்லாம் இல்லேம்மா சும்மா அவராலே உட்கார முடியாதே..பேசாம என் வீட்லேயும், மாலினி வீட்லேயும்பொழுதை கழிக்க வேண்டியதுதானே, பேரக்குழந்தைகளுக்கும் தாத்தா ,பாட்டின்னா சந்தோஷமா இருக்கும், என்னம்மா சொல்றீங்க ?”

“நீ சொல்றதெல்லாம் சரிதான் ராஜா ….ஆனால் அப்பா பூர்வீக வீட்டை விட்டு வந்திடுவாரா?/ அதது அந்தந்த இடத்தில் இருந்தாதான் நிம்மதி விருந்தாளியா வந்துட்டுபபோறதைதான் அப்பா விரும்புவார். எனக்கும் அதுதான் சரின்னு படுது. முடியாத காலத்தில் பார்த்துக்குவோம். இப்பவே உங்களுக்கு ஏன் தொந்திரவு?”

“சரிம்மா ..உங்க இஷ்டம் ..உடம்பை பார்த்துக்குங்க நான் வைக்கிறேன் ”

விசாலத்தின் கணக்கு வேறாக இருந்தது. கணவர் ரிடையர்மென்ட் வாங்கியதும் எங்கெங்கு போக வேண்டும் என்று டைம் டேபிள் போட்டு வைத்திருக்கிறாள். முப்பத்தாறு வருடங்களாக உறவு, அக்கா, தங்கை, நாத்தனார், மைத்துனர் என்று எந்த நல்லது கெட்டதுக்கும் கூடப்போகாமல் விலகியே இருந்தாயிற்று..குடும்ப வருமானம், பிள்ளைகள் வளர்ப்பு, அதன் பின் கல்வி, கல்யாணம் என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாயிற்று..இனி மேலாவது சாவகாசமாக எல்லோரையும் போய்ப்பார்த்துப்பேசி, உறவை புதுப்பித்தாக வேண்டும், கோவில் குளம் என்று ஆன்மீக யாத்திரை போக வேண்டும், பெண் பிள்ளைகள் வீட்டுக்கெல்லாம் போகலாம்தான். ஆனால் அங்கெல்லாம் அவருக்கு வேண்டுமானால் ரெஸ்ட் கிடைக்கலாம்..தன்னால் சும்மா உட்கார முடியுமா?

இத்தனை வருடமாக அவர் மட்டுமா பந்தயக்குதிரையாக ஓடிக்கொண்டிருந்தார்? விசாலமும்தானே ஓடித்தேய்ந்திருக்கிறாள்? எதுவரை மற்றவர்களுக்காகவே வாழ்ந்தாச்சு. மிச்ச காலத்துக்காகவாவது நம்ம விருப்பப்படி வாழனும் என்று வைராக்கியமே கொண்டிருந்தாள் விசாலம்.

பத்து நாட்களுக்குப்பிறகு …….

மாலையும் கழுத்துமாக மேள தாளத்துடன் நீலகண்டனை சகல மரியாதையுடன் கொண்டு வந்து விட்டார்கள் பேங்க் ஊழியர்கள். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப்போனாள் விசாலம்.

“என்னடி இது கூத்து?..புது மாப்பிள்ளை மாதிரி எதெல்லாம் எனக்குப்பிடிக்காதுன்னு தெரியுமில்லே? எவ்வளவோ சொன்னேன் கேட்கிறாங்களா? உன்னை கல்யாணம் பண்ணின அன்னைக்கே மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு ஒத்துக்காதவன் நான். இன்னைக்கு அத்தனை பெரும் சேர்ந்து கழுதை கூத்து அடிச்சுட்டானுங்க..ரோட்டிலே போறவன் வாறவனெல்லாம் வேடிக்கை பார்க்க ச்சே எனக்கு பிடிக்கவே இல்லை”

“அதுக்கென்னங்க பண்றது? அவங்க வழக்கம். அவங்க மானேஜர் மேள இருக்கிற மரியாதயையும், அன்பையும் பின் எப்படித்தான் காட்டறது? நீங்க வேளையில் இருந்தா இதுக்கெல்லாம் சம்மதிப்பீங்களா? அதான் இப்படி காட்டிட்டாங்க நீங்களும் இப்பவெல்லாம் கொஞ்சம் விட்டுக்கொடுக்க ஆரம்பிச்சிருக்கீன்களே?”

“சரி சரி, அந்த பேனை போடு ஒரே புழுக்கமா இருக்கு ”

நீலகண்டன் படுத்து ஓய்வெடுத்தார்.

நான்கைந்து நாட்கள் போனது எப்போதும் ஓய்வென்பது அவருக்கு ஒரு தண்டனையாகவே பட்டது பழக்கதோஷத்தில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வெட்டு வெட்டென்று உட்கார்ந்திருப்பார் விசாலம் மெதுவாக எழுந்து காப்பி போட்டுக்கொண்டு வருவதைப்ப்ரர்ததும் சின்ன கோபம் வேளையில் இருந்தால் எழுந்தவுடனே காப்பி வந்துடும் ஆனா இப்போ ,,இத்தனை லேட்டா வருதுன்னா ..வீட்ல சும்மாதானே இருக்காருன்னு நினைப்போ?

“காப்பியை குடிச்சுட்டு மெதுவா குளிங்கோ ஒன்னும் அவசரமில்லே இத்தனை நாளும் தான் வெந்தது பாதி வேகாதது பாதின்னு சாப்பிட்டீங்க இனிமேலாவது ஆற அமர சாப்பிடுங்க ஒரு விஷயம் சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே ?”

“என்ன சொல்லு”

“நம்ம குடும்பத்துக்காக நிற்கக்கூட நேரமில்லாம ,மூச்சிரைக்க ஓடி கடமைகளை முடிச்சுட்டோம் இனிமேலாவது நம்ம உறவுகளுக்காக நம்ம மன நிம்மதிக்காக கோவில் குளம்னு ஆன்மீக ட்ரிப் போகலாமா?”

நீலகண்டன் சிறிது நேரம் மொவுனம் சாதித்தார். பாவம் விசாலம் வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் நின்னு நிதானிச்சு அனுபவிக்காமே தன்னோடவே ஓடிகிட்டு இருந்திட்டா..அவ சொல்றபடி ..அவ நிம்மதிக்காகவும் கொஞ்சநாள் வாழ்வோமே “உன் இஷ்டம் விசாலம் .முதலில் எங்கே போகலாம் ?நீயே சொல்லு ?”

விசாலத்துக்கு முகம் மலர்ந்தது . “காசிக்குப் போகலாம்” என்றாள்.

“நாளைக்கேப்போய் ஏதாவது டுரிஸ்ட்குருபில் பேர் கொடுத்துட்டு பணத்தை கட்டிட்டு வந்துடுறேன்” என்று சொல்ல ..விசாலத்துக்கு மகிழ்ச்சி கரை புரண்டோடியது.

காலையில் …பணம் எடுத்துக்கொண்டு போனில் பேசி வைத்திருந்த டு ரிஸ்டசர்வீஸ் கம்பெனிக்கு புறப்பட்டார் நீலகண்டன் .வாசலில் ஆட்டோ வந்து நின்றது.

“அடேடே வா மாலினி .விசாலம் யார் வந்திருக்கானு பாரு” மனைவியை கூப்பிட்டார். திக்கேன்றாலும் காட்டிக்கொள்ளாமல் மகளை வரவேற்றாள்.

“மாப்பிள்ளை வரலே?”

“இல்லேம்மா நானும் குழந்தையும்தான் வந்திருக்கோம். பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லே ..சந்தோஷ மான விஷயம்தான்” என்றபடி உள்ளே வந்தாள்.

நீலகண்டன் மகளின் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து வைத்தார், “விசாலம் மாலினிக்கும் குழந்தைக்கும் சாப்பிட ஏதாவது கொடு”

“வேண்டாம்மா சாப்பிட்டுட்டுத்தான் பஸ் ஏறினேன் இந்தாங்கப்பா ஸ்வீட் எடுத்துக்குங்க, அம்மா நீயும் எடுத்துக்க”

“என்னடி விஷேசம்? “புரியாமல் கேட்டாள் விசாலம்.

“அம்மா, அப்பா எனக்கு கொடுத்த படிப்புக்கு கவர்மென்ட் வேலை கிடைக்கும்போது கிடைக்கட்டும்னு எம்ப்லாய்மேன்டுல பதிவு பண்ணியிருன்தோம்ல, இப்ப அங்கேயிருந்து ஆர்டர் வந்திருக்கு. குழந்தையை பார்த்துக்க என் மாமியாரால முடியலே, அதான் உன்கிட்டே விட்டுட்டு வரச்சொன்னார் உன் மாப்பிள்ளை. எனக்கும் அதுதான் நல்லதுன்னு பட்டுது, அப்பாவும்தான் ரிடையர் ஆயிட்டாரே. அவரும் கூட மாட இருந்து பார்த்துக்குவாரில்லே. அவராலேயும் நேர்ல வரமுடியலே இவளுக்கு ஸ்கூல் போற வயசு வந்ததும் நான் அழைச்சுகிட்டு போறேன். எங்கள எல்லாம் ஆளாக்கின மாதிரி நீ இவளையும் ஆளாக்கிவிடும்மா. உன் கைதான் ராசி அதான் குழந்தையை கொண்டு வந்து விட்டுட்டு ஆசிர் வாதம் வாங்கிட்டுப்போகலானும்னு வந்தேன். சாயந்திர பஸ்க்கு நான் கிளம்பனும், குழந்தை துணி எல்லாம் பெட்டியிலே இருக்கும்மா” என்றாள்.

நீலக்கண்டன் விசாலத்தை பரிதாபமாக பார்த்தார். ஓயாத அலைகலாகத் துரத்தும் இந்த வாழ்க்கை அனைவரும் அறிந்ததுதான். ஆனால் இத்தன காலம் எதிர்பார்த்த ஒய்வு ….அதுவும் இல்லாமல் போய்விட்ட இந்த ஏமாற்றம் …இதை தாங்குவாளா விசாலம்.

ஆனால் விசாலட்சியோ பேத்தியை கொஞ்சிக்கொண்டிருந்தாள் உற்சாகமாக..அடுத்த தொடர் ஓட்டத்திற்கு தயாராக, இதுதான் தாய் உள்ளமோ?. வியப்பிலாழ்ந்தார் நீலகண்டன்.

– தேவதை ஜூலை 1-15 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *