திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என முடிவுக்கு வந்த சுனிதாவும் சுந்தரும் ஏனோதானோவென வாழ்ந்து இப்போது ஆறு வருடம் கழித்து விவாகரத்து தீர்ப்பிற்காய் மகள் தீபாவோடு கோர்ட்டில் காத்திருந்தனர்.
குழந்தையை யார் பங்கு போட்டுக்கொள்வது என்ற பிரச்னையில் இருவரும் உரிமை கொண்டாட குழம்பிப்போன நீதிபதி குழந்தை தீபாவிடமே தீர்ப்பை கேட்டார்.
அங்கிள் ரெண்டு பேருமே ஏன் பிரியறாங்க..? என்ற எதிர்பாராத தீபாவின் கேள்வியில் ஆடிப்போனார் நீதிபதி.
அது… வந்து… அம்மா பேசறது அப்பாவிற்கும் அப்பா பேசறது அம்மாவுக்கும் புரியலையாம். அதான் பாப்பா அவங்க பிரியறாங்க… என சமாளித்தார்.
அங்கிள் ரெண்டு பேருமே பெரியவங்க. அவங்க பேசறதே அவங்களுக்கு புரியலைன்னா, நான் இன்னும் சின்னப் பொண்ணு. நான் பேசறதை அவங்களால எப்படி புரிஞ்சுக்க முடியும்? அதனால என் பேச்சை கேட்டு, புரிஞ்சு எனக்கு எல்லாம் செய்யற வேலைக்காரப் பாட்டி வீட்டிற்கே
போயிடறேன். என்ற தீபாவின் பேச்சைக் கேட்ட நீதிபதியின் பேனா தானாகவே உடைந்தது.
– கோவை நா.கி.பிரசாத் (நவம்பர் 2012)