பெரியவர் பக்தவச்லம் வீட்டு வாசலில் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து ஒரு வாரப்பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார்.
அவரது பேரன் மகேஷ் புதிதாக வாங்கிய மோட்டார் பைக்கை பளபளவென்று துடைத்துக் கொண்டிருந்தான்.
வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்தவர் கண்ணாடியை மட்டும் இறக்கிவிட்டு பெரியவரே, இங்கே பிருந்தாவன் நகர்னு புதுசா பிளாட் போடறாங்களே, அது எங்கே ? என்று கேட்டார்.
அது மாதிரி எந்த நகரும் இங்கே இல்லையே! என்றார் பக்தவச்லம்.
சார், நேரா போயி லெப்ட்ல கட் பண்ணுங்க, ஒரு சவுக்குத் தோப்பு வரும், அது பக்கத்துலதான் பிருந்தாவன் நகர்’ என்றான் மகேஷ்.
ரொம்ப தேங்கஃஸ் தம்பி” என்றார் காரிலிருந்தவர்
”மகேஷ், இத்தனை வருஷமாக இருக்கேன் , எனக்குத் தெரியாத அட்ரஸ் எல்லாம் எப்படி உனக்குத் தெரிஞ்சுது?’ என்று பக்தவச்லம் கேட்டார்
தாத்தா, மூணு மாசத்துக்கு முன்னாடி, நீங்க, அப்பா, சித்தப்பா அத்தை எலாரும் போய் உங்க பூர்வீக சொத்தை வித்தீங்களே அது எங்கே இருக்கு? என்று கேட்டான் மகேஷ்.
அதுவா? சவுக்குத் தோப்பு பக்கத்துல…
அதுதான் தாத்தா, இப்போ பிருந்தாவன் நகர்!
– சு.மணிவண்ணன் (நவம்பர் 2013)