தர்ம சங்கடம்..!

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 5,271 
 

தூக்கி வாரிப் போட்டது நம்ம சுப்பிரமணிக்கு.. சூப்பர் மார்க்கெட்டில் சாம்பார் மிளகாப் பொடி பாக்கெட்டை எடுத்து பையில் போட்ட போதுதான் அந்த உணர்வு தோன்றியது…!

அடி வயிற்றைக் கலக்கியது.. ! சுத்து முற்றும் பல பேர் மளிகைப் பொருட்களை தேர்ந்தெடுத்த வண்ணம் இருந்தனர்..! “இங்கு வேண்டாம்..! அசிங்கமாகி விடும்..! கடவுளே காப்பாத்துப்பா..! நாலு பேர் முன்னாடி அசிங்கப் படுத்திடாதப்பா.! ”

“பேசாம சப்தம் போடாம அடக்கமா ரிலீஸ் பண்ணி விடுவமா.?” ன்னு யோசிச்சான்.. அது நடக்க வாய்ப்பேயில்லை..!

சுப்பிரமணிக்கு தெரியும்..! அவனுக்கு ஒரு ட்ரபுள் இருக்கிறது.. ஒரு முறை வந்தாலும்.. “படார்” என்று வரும்..! சரி ஒன்றோடு நின்று விடுமா என்றால் … நின்னு தொலையாது… அடுக்கடுக்கா வரும்..! சுத்து வட்டாரமே அலறும்..!

” அட..! இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல வந்து தொலைக்கப் போகிறதே..?” நிலமை தர்ம சங்கடமாவதை உணர்ந்தான் சுப்பிரமணி..!

காலையில் கூட எழுந்த உடனே இதுதானே நம்ம முதல் வேலை.? “இன்றைக்கு ஒழுங்காக வந்ததா?!” என்று யோசித்தான்..!

தினமம் காலையில் எழுந்த உடனே இதுதான் முதல் வேலை நம்மாளுக்கு.. வித விதமாகப் பல்வேறு சப்தங்களில்.. பல் வேறு ஸ்வரங்களில் இது வந்து முடிந்தால்தான்.. அவனுக்கு அந்த நாளே பிரச்சினையில்லாமல் ஓடும்…!

இதற்காகவே தினமும் கதவு ஜன்னல்களையெல்லாம் சாத்திக்கொண்டு அவன் படும் பாடு சொல்லி மாளாது..! அக்கம் பக்கத்து வீடுகளுககுக் கேட்டு விட்டால்.. வெளியில் தலை காட்ட முடியாதே.?!

” சரி..! அந்த மூலையில் கூட்டம் அதிகமாக இல்லை.. அங்கு சென்று விடுவமா என்று யோசித்து கடைசி ஷெல்பு நோக்கி அடியெடுத்து வைக்கும்போதே அந்த குண்டு அம்மா எங்கிருந்தோ அசைந்தாடி. அசைந்தாடி அந்த மூலையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..!” வேண்டாம்..! சத்தம் அதிகமா வருமே..? நிக்காம வருமே..?!” என தன் ஐடியாவை ட்ராப் செய்து விட்டான் சுப்பிமணி.!

இது காதும் காதும் வைத்ததுபோல் “குசு குசு!” என நடக்கும் விஷயமில்லை என நன்றாகத் தெரியும் அவனுக்கு..!

இது வேலைக்காகாது என உணர்ந்து கொண்டான் சுப்பிரமணி.! கையில் எடுத்த பொருட்களையெல்லாம் .. பையோடு பில் போடுபவர் பக்கத்தில் வைத்து விட்டு.. “இதோ உடனே வருகிறேன்.!”. என அவரிடம் சைகையாலேயே சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு ஓட ஆரம்பித்தான் சுப்பிரமணி.!

பக்கத்திலேயே நாலாவது அப்பார்ட்மெண்டுதான் வீடு என்பது ஒரு அட்வான்டேஜாக இருந்தாலும்.. அதுவரை அடக்க முடியணுமே…? முட்டிக் கொண்டு வந்தது சுப்பிரமணிக்கு..! பயமும்தான்..!

கீழ்வீட்டு சாரி அங்கிள்.. “என்ன.? என்ன? ஓடி வர்ரேள்.?” என்று கேட்டுக் கொண்டிருப்பதைக் காதில் போட்டுக் கொள்ளாமல்.. ஓட்டமும் நடையுமாக .. அவசரம் அவசரமாக வீட்டுக்கு வந்து…நேராக பாத்ரூமுக்கு ஓடிப் போனான் சுப்பிரமணி… கதவைச் சாத்தக்கூட நேரமில்லை…!

” ஏங்க.? என்னாச்சு.? ஏன் பதட்டமா ஓடி வர்ரீங்க.?” என்று ஜானகி கேட்டுக் கொண்டிருக்கும் போதே…….!!!!

” ஆஆஆஆஆஆச்ச்ச்சூசூசூசூ” என்று தன் முதல் தும்மலை பலமாகப் போட்டான் சுப்பிரமணி.! தொடர்ந்து…!!

“ஹாச்..!ஆச்..!! ஆச்சூசூசூசூ…!! ஹச்..!! ஹச்..!! ஹச்சூ..! அக்கூ..! அக்..அக்கூ..!” என டிசைன் டிசைனாக தொடர்ச்சியாகத் தும்மல் …..!

இந்தப் பாழாய்ப்போன ஈஸ்னோஃபிலியா.. என்னமாப் படுத்துகிறது தெனமும்..பத்து நிமிஷம் தொடர்ச்சியா தும்மி.. மூக்க சிந்தினாத்தான் தொல்லை நிக்கும்..!

” இதுக்காகவா அவசரம் அவசரமா ஓடி வந்தீங்க ..?! ” என்று தலையில் அடித்துக் கொண்டாள் ஜானகி.!

“உனக்கென்னடி தெரியும்.. ? நான் பாட்டுக்கு தும்ம ஆரம்பிச்சு.. எவனாவது ஆம்புலன்ஸ கூப்டு ஏத்தி வெச்சிட்டானா என்ன பண்ரது .?” னு பயந்து போய்ட்டேன் நான்..!”

“அதுக்குதான் மாஸ்க்க டெய்லி தோய்ச்சு போடுங்கன்னு தலையால ஆடிச்சிகிட்டேன்.. நாலுநாளா இதோடயே திரிஞ்சா இப்படித்தான்..!” என்று அறிவுரை சொல்லிக் கொண்டே அடுக்களைக்குள் போனாள் ஜானகி..!

சுப்பிரமணி தன் வேலைய கன்டின்யூ பண்ண ஆரம்பிச்சான்..!

” ஹச்..! ஹச்சூ..!ஹாச்சு…!அக்..’அக்கூ…!”

சரி.சரி..!! நாம எதுக்கும் விலகியே நிப்போம்…!!

Print Friendly, PDF & Email

4 thoughts on “தர்ம சங்கடம்..!

  1. ஆரம்பத்திலிருந்தே சந்தேகமாவே இருந்தது.படார்னு சத்தத்தோட வரும்னு படிச்சதும்.கடைசியில் பார்த்தா அது இல்ல..வேற இது…நகைச்சுவை கதை முழுதும் மிளிர்ந்திருக்கிறது சார்.பாராட்டுகள்.

  2. சத்தியமாக நான் ஊகித்த மாதிரி இல்லை கதை…
    கடைசியில டிவிஸ்டா ஆகிட்டே….

    கொரனா வந்தவன் கூட ஹாயாக நொண்டி விளையாடுவான் ஹாஸ்பிட்டல்ல … ஆனால் இது மாதிரி சாதாரண தும்மல் வருகிறவன் தான் ரொம்ப கஷ்டபடுறான்….

    உண்மையை தும்மல் வருகிறவனுக்கு கொரனா மேல் பயமில்லை … கொரனா எண்ணிக்கைக்கு ஆள் பிடிக்கிற இந்த அரசாங்கத்தின் மேல்தான் பயம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *