சைக்கிள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 3,087 
 

இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு போகவர வழியில்லாமல். .மனைவியின் கத்தலால், பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான் என்னமோ ஏதோவென்று ஓடிவந்தேன்.

என்ன கமலா ஏன் இப்படி கத்தற? இப்ப சைக்கிள் என்ன பண்ணுச்சு? இந்த கேள்வியை கேட்டவுடன் ஆங்காரத்துடன் என்னை பார்த்தவள் இருக்கற இரண்டே முக்கால் செண்ட் வீட்டுல இதைய வேற அலங்காரத்துக்கு வாசலில நிக்க வச்சுக்கறீங்க. போக வர வழிய அடைச்சுகிட்டு, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. இங்க பாருங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, இந்த சைக்கிளை எங்கயாவது போடுங்க. சொல்லிவிட்டு விறுவிறுவென உள்ளே போய்விட்டாள்.

இத்தனை கத்தலுக்கும் காரணமான அந்த சைக்கிள் வாசலிலிருந்து பத்தடிதூரம் தள்ளி தேமே என்று நின்று கொண்டிருக்கிறது. இவளாய் போய் அதில் மோதிவிட்டு சைக்கிளின்மேல் குறை சொல்கிறாள். மனதுக்குள் நினைத்தாலும் வெளியில் சொல்லமுடியாது. இந்த சைக்கிளை ஒழிப்பதற்கு இவள் மட்டுமல்ல, என்பையனும், பெண்ணுமே கங்கனம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நான் ஏதாவது சொன்னால் மூவரும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இவர்களுக்கு இது சாதாரண சைக்கிள் ஆனால் எனக்கு !

என் அப்பா விவசாய அலுவலகத்தில் பியூனாக வேலை பார்த்தார். அங்கு இருப்பவர்கள் எந்த வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சைக்கிளில் அலுவலகம் வந்து இறங்குவதை ஆச்சர்யமாய் பார்ப்பார். இவருக்கும் சைக்கிள் விட வேண்டும் என்று ஆசை, ஆனால் யாரிடமாவது ஓட்டி பழக்கி தரும்படி கேட்க வெட்கம். அதனால் நிறுத்தி இருக்கும் சைக்கிள்களின் அருகில் சென்று தொட்டு பார்த்து மகிழ்வதோடு சரி. ஒரு முறை இவரோடு பியூனாய் பணிபுரிந்த முருகேசனிடம் எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடு என்று கேட்டார். முருகேசு என்னயா இன்னுமா நீ சைக்கிள் ஓட்டி பழகாம இருக்கே? நக்கலாய் சிரிக்க இவருக்கு என்னமோ போலாகிவிட்டது. அதிலிருந்து யாரிடமும் இனி கேட்ககூடாது என்று முடிவுசெய்துவிட்டார்.

ஒருநாள் அலுவலகத்தில் கிளார்க்காய் இருந்த ரங்கசாமி இவரை கூப்பிட்டு நான் கோயமுத்தூர் ஹெட் ஆபிஸ் போறேன், வர்றதுக்கு ராத்திரி ஆயிடும். அப்படியே வீட்டுக்கு போயிடறேன். நீ என் சைக்கிளை எங்க வீட்டுல கொண்டு போய் நிறுத்திடு. அப்பாவுக்கு எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது என்று சொல்லவும் வெட்கம், சரி என்று தலையாட்டிவிட்டார். அவர் கிளம்பும் முன் மறந்துடாதே என்று மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திவிட்டு சென்றார்.

அப்பா அலுவலக்த்திலிருந்து நாலுமணிக்கே கிளம்பி இவர் சைக்கிளை தள்ளிக்கொண்டே நான்குமைல் சென்று அவர் வீட்டில் விட்டு விட்டு அதன் பின்னர் பஸ் ஏறி வீட்டுக்கு வந்தார்.

அப்பொழுதே முடிவு செய்துவிட்டார், நாமும் ஒரு சைக்கிள் வாங்கவேண்டும். சொந்த சைக்கிள் இருந்தால் நாமாக ஓட்டி பழகலாம். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து ஒரு வருடத்திற்குள் ஒரு சைக்கிளை வாங்கிவிட்டார். அம்மாவுக்கு ஒரே சிரிப்பு, ஏய்யா உனக்குத்தான் சைக்கிளே ஓட்ட தெரியாதே, அப்புறம் எதுக்கு இந்த சைக்கிள்.? இவர் நீ கம்முனு இரு எனக்கு தெரியும் என்று அம்மா வாயை அடக்கிவிட்டார்.

தினமும் காலை நாலு மணிக்கே எழுந்து ஒருவரும் நடமாடாத பொழுது சைக்கிளை எடுத்துக்கொண்டு உருட்டிக் கொண்டே செல்வார். அப்புறம் சுற்றுமுற்றும் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு ஏறி உட்கார முயற்சிசெய்வார்.

அப்பாவின் ஆசை ஒரு வழியாய் நிறைவேற மூன்று மாதங்களாகிவிட்டன. அன்று காலை ஆறுமணி இருக்கலாம் எனக்கு குடிப்பதற்கு காப்பி கொடுப்பதற்கு வந்த அம்மா மணிஅடிக்கும் சத்தம் கேட்டு வெளியே எட்டிபார்த்தாள் அப்பா ஜம்மென்று சைக்கிளில் உட்கார்ந்து தன் மனைவி பார்க்கிறாள் என்றவுடன் ஒரு சுற்று சுற்றி வந்து மீண்டும் சைக்கிளை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அம்மாவை பார்த்தார். அப்பொழுது அம்மாவுடன் வெளியில் வந்த ஆறுவயது சிறுவனான நானும் அப்பாவை கவனித்தேன். அம்மாவுக்கு ஒரே பெருமை அப்பாவின் அந்தசைக்கிள் சவாரியை பார்த்து.

நாற்பது வருடங்கள் ஓடிவிட்டன. இருவரும் இன்று இல்லாவிட்டாலும், அந்த காட்சிக்கு சாட்சியாய் நான் இருந்ததால் எனக்கு சைக்கிளைவிட அப்பா அன்று சுற்றியதும், அம்மா மனம் விட்டு சிரித்ததையும் மறக்கமுடியவில்லை. இதை இவர்களுக்கு சொன்னால் புரியாது. இன்று எனக்கு தனியாய் ஒருவண்டி, மகனுக்கு, மகளுக்கு தனியாய் வண்டி இத்தனை இருக்க இவர்களுக்கு இந்த சைக்கிள் ஏன் கண்னை உறுத்திக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. இதற்கும் மாதம் ஒரு முறை துடைத்து சுத்தமாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

நான்கைந்து நாட்கள் ஓடியிருக்கும். மாலை வீட்டுக்கு வரும்பொழுது சைக்கிள் இருந்த இடம் வெறுமையாய் இருந்தது. மனசு பக்கென்றது. கமலா இங்கிருந்த சைக்கிள் என்னாச்சு? என் குரலில் இருந்த அவசரம் அவளை புன்னகைக்க வைத்தது. சும்மாதான நிக்குது, எனக்கு கொடுத்தீங்கன்னா என் பையன் ஸ்கூல் போறதுக்கு உபயோகமாய் இருக்கும் அப்படீன்னு நம்ம தெருவுல கீரை விக்கற மாசிலாமணியம்மா கேட்டுச்சு கொடுத்திட்டேன்.

எனக்கு ஆத்திரம் வந்தாலும் ஏதோ சொல்ல வாயெடுத்தேன், சரி சும்மா நிக்கற சைக்கிள்தானே, ஒரு பையனுக்கு உபயோகமாயிருக்கட்டுமே என்று மனசு சொல்ல அப்படியே அமைதியாகிவிட்டேன். அப்பா, அம்மாவின் நினைவுகள்கூட நான் இருக்கும் வரைதானே. அந்த சைக்கிள் அந்த பையனுக்கு வேறொரு ஞாபகத்தை தொடங்கி வைக்கட்டுமே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *