கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 9,880 
 

கண்ண மூடினா இந்த ஃபைலோட கலர்தான் கண்ணுக்கு தெரியுது.

இதெல்லாம் வீசிட்டு எங்கயாவது போயிடனும் பா….

என் முனுமுனுப்பு என்னோடு மட்டும் இல்லை…. பக்கத்தில் இருந்த ஜானகியும் கேட்டிருந்தாள்.

இதுகெல்லாம் கஷ்ட்ரப்பட்டா எப்படி சேர்?.

உங்களை நம்பிதான் இந்த கம்பனியே இருக்கு.

உங்க அப்பா இறந்த பிறகு அத்தனை பொறுப்பும் உங்களுக்குதானே.

ஆயிரம் இரண்டாயிரம் சமாச்சாரமா இது? கோடி கணக்கில புரள்ற பிஸ்னஸ். இப்படித்தான் இருக்கும்.”

ஜானகி என் பிரத்தியேக செயலாளர் மாத்திரம் அல்ல, என் சிறு வயது சிநேகிதியும் கூட… என் அப்பா உயிரோடு இருந்தபோது வேலைக்கு சேர்ந்தாள். அவர் போன பிறகும் என்னுடன் வேலை பார்க்கிறாள்.

சிறுவயதில் இருந்தே அவளை நான் ரசித்திருக்கிறேன். அழகானவள், பெரிய கண்கள், சிவந்த உதடுகள் என்று எல்லா அழகான பெண்களுக்கும் உள்ள அத்தனையும் இவளிடமும் உண்டு.

ஆனால், எனது நிறுவனத்திலேயே பணியாற்ற ஆரம்பித்த பின், அவளை விட்டு விலகிவிட்டேன்.

கௌரவத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பார் என் அப்பா அடிக்கடி….

நீண்ட மௌனத்தின் பின்னர் ஒரு பெருமூச்சு,

“சரி தான்… அப்பா எப்படிதான் இதெல்லாம் தனி ஆளா பார்த்துக்கிட்டாரோ? அத அப்பாகிட்ட போய்தான் கேட்கனும்..”

சிரித்துக் கொண்டே அவள் அங்கிருந்து போனபோது, இந்த சிரிப்புக்காகவே என் கௌரவத்தை விட்டுக் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

என் மேசையில் அவள் வைத்துச் சென்ற கோப்புகளை, அவளது கை சூடு நீங்கும் முன்னமே பற்றிக் கொண்டேன்.

எங்கே சோதனை செய்வது… தொடர்ச்சியாக ஒப்பங்கள் தான்….

“இங்க பாருங்க சேர், உங்களோட வழமையான அவசரத்த இதுல காட்டாதீங்க…. ”

ஹி…. ஹி…. ஹி….

நான் மனதில் நினைத்தை புரிந்துக் கொண்டாள் போல, இதுக்கு கூட கௌரவத்தை விட்டிருக்கலாம்…

(மனதுக்குள் சிரிப்பு)

ட்ர்ர்ர்ர்ர்ட்ர்ர்ர்ர்……………. ட்ர்ர்ர்ர்ர்ட்ர்ர்ர்ர்ர்……

ஒலிச் சினுங்கல் முடக்கி மேசையில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசி அதிர்ந்தது.

இலக்கத்தை பார்க்கவில்லை, என் காதில் பொறுத்தப்பட்டிருந்த ப்ளுடூத் தானாக அழைப்பை ஏற்றது.

“ஹலோ… ஹலோ… ஹலோ…”

பதிலில்லை… கைப்பேசியை எடுத்து இலக்கத்தை பார்த்தேன். ஹோ, செல்வி…. செல்விக்கும் எனக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தபோது, அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்த கைப்பேசி அது! அதற்குள் பழுதாகிவிட்டது. நான் முதல் முதலில் வாங்கிக் கொடுத்தது என்பதால், அவளும் அதனை மாற்றாமல் வைத்திருக்கிறாள்.

ஆனால் இன்று அதை திருத்துவதற்கு கொடுப்பதாக சொன்னாளே….

யோசித்துக் கொண்டே அவளது இலக்கத்துக்கு அழைத்தேன்… அழைப்புக்குப் பதில் இல்லை.

“சரி திரும்ப எடுப்பாள் தானே…. ”

மீண்டும் எனது கருமமே கண்ணாயினேன்…

சிறிது நேரத்தில் மீண்டும் தொலைபேசி ஒலித்தது.

ப்ளுடூத் வழியாக, ஹலோ.. மறுப்பகத்தில் ஆணின் குரல்… செல்வியின் தொலைபேசியில் யாரிது….? இது வழமைக்கு முரண்… என்றும் கேட்டிராதகுரல் வேறு… சற்று அதட்டலாக கேட்டேன்,

“யார் பேசுறீங்க”

“சும்மா கத்தாதிங்க, நான் சொல்றத கேளுங்க, உங்களுக்கு உங்க வைஃப் உயிரோட வேணும்னா, பத்து லட்சம் ரூபா பணத்தை தயார் பண்ணிக்கிங்க… எங்க தரனும் என்றத நான் பிறகு சொல்றேன். ”

“ஹலோ…. யார் நீங்க….”

பீப்… பீப்…. அழைப்புத் துண்டிப்பு…. மீண்டும் தொலைபேசி அழைப்பை எடுக்க முற்பட்ட போதும், செல்வியின் கைபேசி தொழிற்படவில்லை.

“ஒருவேளை செல்வி என்னை ஏமாற்றுறாளா? வீட்டுக்கு எடுத்து பாப்போம்…”

காரியாலய நிலைபேசியில் வீட்டு இலக்கத்தை பதிக்க… பதட்டத்தில் வீட்டு இலக்கமும் மறந்தது…. எனது கைப் பேசியில் ஸ்வீட்ஹோம் என்று பதிந்து வைத்திருந்த இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.

மணி அடிக்கிறது……

“ஹலோ…. ”

வேலைக்காரப் பெண்ணின் குரல்….

“நான் தான் பேசுறேன்… செல்வி எங்க? ”

“ஐயா அம்மா டவுனுக்கு போனாங்க இன்னும் வரலைங்க.”

“தனியாவா போனாங்க?”

“ஆமாங்கையா..”

“ட்ரைவர் எங்க? அம்மாவோட போகலையா?”

“இல்லைங்க ஐயா, அம்மா வேணானு சொல்லீட்டாங்க.”

“சரி, அம்மா வந்தா எனக்கு ஒரு கோல் எடுக்க சொல்லு.”

வேலைக்கார பெண்ணின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தேன்….

இவ ஏன் தனியாபோனா? அப்ப அவள உண்மையிலேயே கடத்திட்டாங்களா….? போலிஸ்ல சொல்றதா? சரி பத்து லட்சம் தானே… போனா போகுது…

என் மனம் என்பாட்டில் யோசிக்கிறது… அடுத்த அழைப்பு வரும் வரையில் அது தொடரும்…. பணத்தை தயார் செய்து வைத்துக் கொண்டால் உடனே கொடுத்து, என் மனைவியை மீட்டு விடலாம் என்று முடிவெடுத்தேன்.

“ஜானகி… நான் சின்ன வேலையா வெளிய போறேன்… பைல் எல்லாம் செக் பண்ணீட்டேன். ”

நான் இல்லாத சமயத்தில் ஜானகி தான் அலுவலகத்தில் எல்லாமே… எனது கார் அருகே வந்தபோது, ட்ரைவர் கதவை திறந்துவிட, நானே போறேன்… நீ ஒப்பீஸ்லயே இரு… தனியாக செல்வதுதான் சிறந்தது என்று தீர்மானித்து, வாகனத்தில் தனியாகவே பயணிக்க ஆரம்பித்தேன்.

நானும், செல்வியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட சிறிய புகைப்படம் ஒன்று காரின் முன்னே தொங்கிக் கொண்டிருந்தது. செல்வியும் நானும் காதலித்த தருணங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன… செல்வி இல்லாத ஒருபொழுதைக் கூட, என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.

ட்ர்ர்ர்ர்ர்ட்ர்ர்ர்ர்…. தொலைபேசி… மறுபடி செல்வியின் இலக்கம்….

“ஹலோ…. பணத்தை எடுக்க தான் போறேன்… ப்ளீஸ்… அவள ஏதும் பண்ணீடாத… ”

“எதுக்கும் பயப்படாதீங்க. உடனே உங்க வைஃப்ப நான் விட்டுடறேன். நான் கேட்ட பணத்த எனக்கு தாங்க.”

“ஓகே.. பணத்தை எப்படி தாரது? ”

“பணத்த ரெடி பண்ணீட்டீங்களா?”

“இப்பதான் பேங்க்குபோறேன்… ”

“ஒகே… ரெடி பண்ணுங்க… நா திரும்பகோல் பன்றேன்… ஆனால் போலிஸ் அது இதுன்னு போனீங்கனா….. அப்பறம் தெரியும் தானே…. ”

“நோ…. நோ…. நான் போலிஸ்க்குபோகல…. உங்கள நம்புறேன்…”

துண்டிக்கப்பட்டது அழைப்பு…. வங்கியை நெருங்கியது வாகனம்….. பாதையின் ஒருமருங்கில் வாகனத்தை நிறுத்தி, விரைந்து வங்கிக்குள் சென்று… பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை வரைந்து வரிசையில் காத்திருந்தேன்….

மறுபடியும் செல்வியின் இலக்கத்தில் இருந்து அழைப்பு….

“ஹலோ…காசு ரெடி..”

“சரி… உங்களோட பணத்தை உங்க வாகனத்தோட பின் சீட்ல வெச்சிட்டு, பேங்க்கு நேரா முன்னுக்கு இருக்கிற ஹோட்டலுக்கு வாங்க….. கார் கதவ லொக் பண்ணாதீங்க…”

“என் வைஃப்..?”

“அவங்க பத்திரமா வீட்டுக்கு போய் சேருவாங்க… ”

கடத்தல்காரன் சொன்னபடி பத்து லட்சம் ரூபாவை என் காரின் பின் இருக்கையில் வைத்து, விருந்தகம் நோக்கி நடந்தேன்…. நான் விருந்தகத்துக்குச் சென்ற பிறகு ஒருவர் என் காரில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்வார்… இதுதான் அவர்களின் திட்டம்… எப்படியோ.. என் மனைவிக்கு ஏதும் ஆகவில்லை என்றால் சரி… செல்வியின் இலக்கத்தில் இருந்து மறுபடியும் அழைப்பு…

“ஹோட்டல்கு வந்துட்டேன்…”

“சரி, நீங்க கார் கிட்ட போகலாம்… உங்க வைஃப் திரும்பவும் கிடைக்க நான் கடவுள் கிட்ட பிரார்த்திக்கிறே(ன்)….”

தொலைபேசி துண்டிக்கப்பட்டது…. அதிருந்து போய் திரும்பு பார்க்கிறேன்…. காரின் கதவு திறந்த படிகிடந்தது…. ஓடிபோய் பார்க்க, அங்கு பணம் இருக்கவில்லை… ஆனால் செல்வியில் கைப்பேசி மாத்திரம் இருந்தது…. உடனே வீட்டுக்கு அழைத்தேன்…

“ஹலோ செல்வி வந்துட்டாளா?”

“இன்னும் இல்லீங்க ஐயா..”

கபடன் என்னை ஏமாற்றீட்டானா? அவள் வீடுபோய் சேர தாமதிக்குமா? அவளை ஏதும் செய்திருப்பானா?…

எத்தனையோ கேள்விகளுடன், வீட்டை நோக்கி வாகனத்தை செலுத்தினேன்….

பீப்…பீப்…. வாகனத்தின் சமிஞ்சை ஓசைக் கேட்டு, வாயில் கதவுகளை காவற்காரன் திறந்தான்… உள்ளே அவள் இல்லை…. நேரே எனது அறைக்கு சென்றேன். என்னால் அழுகையை அடக்கிக் கொள்ள முடியவில்லை. கதவுகளை பூட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தேன். இப்போ என்ன செய்றது… வேறுவழி இல்லை… போலிஸ்ட போறதுதான் சரி…. மீண்டும் சுதாகரித்துக் கொண்டு என் காரை நோக்கி நடந்தேன்… அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு… நான் காரில் வீட்டை நோக்கி பயணித்த போதும், விடுபட்ட அழைப்புகள் வந்திருந்தன…

“ஹலோ… ”

“சேர்…. உங்க வைஃப்… ”

“வைஃப்… என்னாச்சி?”

“நீங்களே வந்து பாருங்க சேர்…”

செல்வி அங்குதான் இருக்கிறாள் என்பது நிம்மதியை சந்தாலும், ஜனனி கூறிய விதம் அந்த நிம்மதியை கெடுத்தது…. செல்வி நேரா என்ன பாக்க ஒப்பீஸ்க்கு போய் இருக்கா போல…. காரில் ஏறிவேகமாக அலுவலகத்தை அடைந்தேன்…. என் அறைக்குள் நுழையும் போதே என் ஆசனத்தில் அமர்ந்திருந்த செல்வி ஓடிவந்து என் கழுத்தை இறுக்கி கதறி அழுதாள்… அவளை ஆறுதல் படுத்தி, என் சட்டைபையில் இருந்த அவளது கைப்பேசியை எடுத்து அவளிடம் நீட்டினேன்… ஆச்சரியமாக அதனை பிடிங்கியவள்,

“இந்த ஃபோன்… இந்த ஃபோன்… எப்படி உங்களுக்கு கிடைச்சது? ”

நான் பதில் கூறுவதற்குள்….

“இந்த ஃபோன தொலைச்சிட்டாங்கனு தான் இவ்வளவு நேரமாக அழுதுட்டே இருக்காங்க… நீங்க முதல் முதல்ல வாங்கி குடுத்ததாமே…”

என்ற ஜானகி, என் முகம் உமிழ்ந்த வியர்வையைக் கண்டு, அறையின் வளி பதனாக்கியில் குளிச்சியை கூட்டியவாறே அறையை விட்டு வெளியேறினாள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *