தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 6,882 
 

“”எம்மா கல்பனா, உம்மக லீலா ஏன் அழுதுகிட்டே இருக்கா, சாப்டாளா இல்லையா?” என்று அப்பா திண்ணையில் இருந்தவாறே கேட்டார். “”இல்லப்பா, ஒரு குத்து பருப்பு சாதம் உள்ளப் போக இரண்டு மணி நேரமாகுது. நானும் இத அத சொல்லி பாத்துட்டேன். ம்ஹூம், சாப்பிடவே மாட்டுக்கா” என்று என் இயலாமையை எடுத்துரைத்தேன்.

“”என்னமோமா, நானும்தான் உங்க எட்டு பேரையும் வளர்த்தேன். சாப்பிடறதும் தெரியாது. விளையாடறதும் தெரியாது. இந்த காலத்து புள்ளைங்க முன் மடையில உக்கார வச்சா பின் மடைக்கு வந்திருதுங்க” என்றவாறே திண்ணையில் சாய்ந்தார்.

சித்தேசிஅடுக்களையில் அடுப்பும் அம்மியுமாக மாறி மாறி வேலையிலிருந்த மீரா, எட்டிப் பார்த்து சொன்னாள், “”அவ இன்னைக்கு மட்டுமா இப்படிப் பண்றா, தினமும் இதையேதான் பண்றா, அவள இரண்டு அதட்டு போட்டு ஊட்டிவிடு. இல்லைன்னா சித்தேசிய வரச் சொல்லி உன் மகள அவன் கிட்ட கொடுத்திரலாம்” என்றவாறே வேலையைத் தொடர்ந்தாள்.

இடுப்பிலிருந்த லீலா மிரட்சியுடன் என்னைப் பார்க்க, நானும் படுத்திருந்த அப்பாவை எழுப்பி,””அப்பா, அந்த சித்தேசிய கூப்பிடுங்க, இவ சாப்பிட மாட்டிக்கா. அவனுக்கு அரிசிக்குப் பதிலா இவள போட்டிறலாம்” என்றேன்.

அடுக்களையிலிருந்து மீரா ஒரு சில்வர் தட்டில் கரண்டியை வைத்து அடித்து ஒலி எழுப்பினாள். “”ஐயோ, சித்தேசி வர்றான். சீக்கிரம் சாப்பிடு” என்று இடையில் இருந்தவளை இருக்கு மீதமிருந்த பருப்பு சாதத்தை கீரையுடன் பிசைந்து ஊட்ட முயன்றேன்.

எனக்கு விபரமறிந்த நாளிலிருந்து சித்தேசி வந்து போகிறான். அதற்கு முன்னரும் வந்திருக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை தோளில் ஒரு ஜோல்னா பையும் கையில் ஒரு கோணியும், பெரிய புருவமும், தாடியும், சிவப்பு முண்டாசுமாக, துளசி மாலையுடன் மணி ஓசை எழுப்பியவாறே வருவான். அதுவரையிலும் கூத்தும் கும்மாளமுமாக ஓடித் திரிந்துகொண்டிருக்கும் சின்னதுகளெல்லாம், அந்த சத்தத்தைக் கேட்டதும் ஓடி ஒளிந்து கொள்ளும். கோடாங்கிக்காரனுக்கும் இந்த சித்தேசிக்கும் அவ்வளவு பெரிய வித்யாசமேதுமில்லை. ஆனால் சித்தேசி பகல்பொழுதில் மட்டும்தான் வருவான். நெற்றி நிறைய திருநீரும், தாடியுமாக அவனைப் பார்க்கும்போது பெரியவர்களுக்கே கொஞ்சம் பயமாகத்தானிக்கும்.

“”ஏட்டி, இன்னுமா சாப்பிட மாட்டுக்க. இந்தா சித்தேசி சுடலைமாடன் கோவில் வரைக்கும் வந்துட்டானாம். அடுத்து நம்ம காம்பவுண்டுக்கு வரும்போது அவன கூப்பிட்டு உன்னை கொடுத்திர வேண்டியதுதான்” என்ற மீராவை லீலா தன் முட்டைக் கண்களை உருட்டிப் பார்த்தாள்.

“”சித்தேசி வந்தாலும், வராட்டாலும் அவளுக்கு நாலுருண்டை பருப்பு சாதம்தான். இதுக்கு மேல இவ சாப்பிடமாட்டா” என்றவாறே மீதமிருந்த சாதத்தை காக்கைக்கு வைத்துவிட்டு திரும்புகையில் சித்தேசியின் மணிச்சத்தம் கேட்டது மிக அருகாமையில். லீலா ஓடிப்போய் மீராவின் கால்களைக் கட்ட அவள் அள்ளி தூக்கிக் கொண்டாள்.

“”என் தங்கக்கிளி, செல்லக்கிளி, மான்குட்டி உன்னைப் போய் சித்தேசிகிட்ட குடுப்போமாடி” என்று கன்னத்தில் முத்தமிட, “”சித்தி, சித்தி” என்று தன் பிஞ்சு விரல்கள் நீட்டி வாசலில் நின்ற சித்தேசியைக் காட்டினாள்.

கைகள் அலம்பிவிட்டு தட்டில் அரிசியுடன் வாசலுக்கு வந்தேன். “”தாயி உன் மவளா… அது” என்றவாறே மீராவின் இடுப்பிலிருந்த பயந்து பயந்து எட்டிப் பார்த்த லீலாவை தன் நீண்ட புருவங்கள் சுருக்கிப் பார்த்தார் சித்தேசி. “”ம்…ஆமாங்கய்யா” என்றவாறே நான் நீட்டிய அரிசியை வாங்கி கோணியில் போட்டுக் கொண்டார்.

“”நீ மவராசியா இருக்கணும். உன் மவ ராஜாத்தியா இருக்கணும்” என்றவாறே கோணியைக் கட்டினார்.

“”ஐயா, இந்தக் குட்டி ஒழுங்காவே சாப்பிட மாட்டுக்கா. அரிசிக்குப் பதிலா கோணிப்பையில் போட்டு இவள தூக்கிட்டுப் போங்க” என்றேன்.

“”அடப்போம்மா, ஆறு மாசமா இந்த திருநெல்வேலி முழுக்க திரிஞ்சு சேக்குற அரிசியையும் பணத்தையும் எம் மகளுக மூணு பேரும் பங்கு போட்டுட்டு பொயிறாளுக…மூணு பேத்தையும் கட்டி கொடுத்திட்டாலும் வருவு முழுக்க சீரும், செனத்தியும் செஞ்சு ஓயல… ஆம்பள புள்ள இருந்தா கொடு தாயி. தூக்கிட்டுப் போறேன்” என்றவாறே முடுக்கு வழியாக கோணியும் கையுமாக நடக்க…மீராவின் இடுப்பிலிருந்து குலுங்கி, குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள் லீலா. அவளுக்கேதும் புரியவில்லைதான். இரண்டாவதும் பொண்ணா பொறந்துட்டுன்னு அப்பா வீட்டுல விட்டுட்டுப் போன புருஷன் நியாபகம் வந்து அச்சப்படுத்தியது என்னை.

இரண்டு வயதும் ஒரு வயதுமாய் இருக்குற புள்ளைங்க நாளைக்கு வளர்ந்து ஆளாகும்போது சீரும், செனத்தியும் எப்படி செய்வது என்று பயம் மேலிட்டது.

இப்பொழுதெல்லாம் சித்தேசியின் மணியோசைக்கு லீலாவைவிட அதிகமாக பயப்படுவது நான்தான்.

– முத்துலெட்சுமி (செப்டம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *