சாமியார் ஜுவுக்குப் போகிறார்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 8,303 
 

தினகரன் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பார்.

‘அன்னா ஜுக்கு’ என்ற குமாரின் கீச்சுக்குரல் அவரை எழுப்பியது. எழுந்து கொண்டார். முகம் அலம்பிக் கொண்டு உடை அணிந்து கொண்டார்.

மனைவியும் தயாரானாள். குமாருக்கு கௌபாய் ட்ரெஸ்!

வெளியே முதல்நாள் பெய்த மழையில் புல் பாத்திகளில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரைப் பூமி மெள்ள மெள்ள முடிந்தமட்டும் உறிஞசிவிட்டன பிறகும், வேறு வழியில்லாமல் தேங்கிக் கிடந்தது.

இப்போது நல்ல வெயிலில் ஆவியாக மாறிக் கொண்டிருக்கிறது. புல், கலங்கலான மழைத் தண்ணீர் பட்டுச் சாம்பல் பூத்திருந்தது. உலர்த்தப்பட்ட அப்பளம் போல் ஈரம் காய்ந்த சாலையில் ஆங்காங்கே ரவுண்டு ரவுண்டாகத் தண்ணீர் பசை. அலம்பப்பட்ட தார் ரோடில் வெயில் பளீரென்று அடித்தாலும் தார் ரோடு கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தது. ஊசிப் பட்டாசின் மின்னலுடன் வெடித்துக் கண்களைப் பறிக்கவில்லை. அதற்கு ஏதுவான மே, ஜுன் மாதம் பின் தங்கிவிட்டது.

ஸ்கூட்டரில் போகும் போது வீட்டுச் சுவர்களிலும், ஆபீஸ் சுவர்களிலும், முதல் நாள் பெய்த மழையில் கண்ட ஈரப்பசை இப்போது மெல்ல உலர்ந்து கொண்டிருந்தது. உலர்ந்த இடங்களில் சுண்ணாம்பு சாம்பல் பூத்திருந்தது. ஒரு பதினான்கு வயது சிறுமி நடந்து கொண்டிருந்தாள். வெயில் அவள் மேல் பல ஜாலங்கள் புரிந்து கொண்டிருந்தது. தூரத்தே செக்டர் மூன்றில் மேகங்கள் பூமியில் நிழல்களைப் பரப்பிக் கொண்டிருந்தன. செக்டர் நிழல், அதற்கு அப்பால் பாலம் ஏரோடிரோம் வரையில் வெயில் எல்லாவற்றையும் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. வடமேற்காக நிழல் வெயிலைத் துரத்தியது. நல்ல பசுமைக் கதிர்களின் இனம் புரியாத வாசனையை வெயில் கரைத்துக் தன்னில் ஐக்கியப்படுத்திக் கொண்டு மெல்லிய காற்றின் துணை கொண்டு கனத்துப் படர்ந்து கொண்டிருந்தது. ஸ்கூட்டர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. டிராஃபிக்குக்கு அநுசரித்துக் கொண்டு வேகத்தை எட்டிப் பிடிக்கும் போது எழும் ரீங்காரம் ஒரு கட்டடத்தில் நிரந்தரமாவதைத் தினகரன் கவனித்தார். பலமுறை ஸ்கூட்டரில் குரலைச் சப்தமிட்டு குமாருக்கு நடித்துக் காட்டியிருக்கிறார். அதே போன்று குமார் எப்போதாவது கதை சொல்லு என்றால் காற்று, மலை, நதி, செடி, கொடி என்பார். அப்போதெல்லாம் அழகு என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார்.

இப்போது குமார் ‘அன்னா ஸ்கூட்டர் எவ்வளவு அழகாச் சப்தம் போடறது? என்று உச்சஸ்தாயில் கீச்சுக் குரலில் கத்தினான்.

தினகரன் ஆமாம். ஆமாம். எஸ்.எஸ். என்றார். திரும்பிப் பார்க்காமலேயே. தொடர்ந்து வந்து கொண்டிருந்த நாவல் மரங்களில் சலசலவென்ற சப்தம் தொடர்ந்து உருவங்கள் நீந்திக் கொண்டேயிருந்தன. கீழே நாவற் பழங்களைக் கூடையில் நிரப்பி மழையால் வேர்த்த உப்பை இட்டு இலைகளில் வைத்து விற்க வேண்டும். மெறாஸில் கடலையைக் கூறுபோட்டு விற்க வேண்டும். மிளகாயைக் கூறுபோட்டு விற்க வேண்டும். மாங்காயைப் பத்தையாக்கி விற்க வேண்டும்.

கடலையை வறுத்தே ஏதோ பாத்திரத்தில் ‘டிக்பிக்’ என்று சப்தமெழுப்பிக் கை ஒடிய வறுத்தே வாழ வேண்டும். இங்கு ஒரு சின்ன டின். அதில் கரி. இரண்டு செங்கல்தான் அடுப்பு. செங்கல் அடுப்பு மேல் டின்னில் கரித் தீ. அதில் சோளத்தைச் சுட வேண்டும். மழையில் நனைந்த கரியை விசிற வேண்டும். விசுறுகிறான் மனிதன். வருவோர் போவேரை எல்லாம் பார்க்கிறான். கொஞ்சம் மயிரிழையில் எதை நினைத்துக் தயங்கினாலும் தன்னுடைய சோளத்திற்குத்தான் என்று நம்பி அந்த சந்தேகத்தை ஒரு சோளம் வாங்குதலாக மாற்றும் தினவு கொண்ட வெறிபிடித்த எதிர்பார்ப்பு மிக்க அழைப்பு ‘ஆவ் ஸாஹப்’.

இந்த முறையீடுகளில் இந்த சாப்பாட்டில் அதாவது முதலில் பண்ண வேண்டும். பிறகு அதை ஒரு இடத்தில் வைக்க வேண்டும். பாத்திரங்களில் இட வேண்டும். சாப்பிட வேண்டும். பிறகு பாத்திரங்களைக் கழுவ வேண்டும். இதனுடைய துணியைத் துவைப்பது, ஷேவ் செய்து கொள்வது என்பதான எண்ணாயிரம் செய்கைகளின் எண்பது கோடிச் செய்கைகளின் அர்த்தமென்ன? நாமெல்லோரும் ஒரு நாள் பிணம் என்பதா?

கர்மாவைச் செய். பலனை எதிர்பார்க்காமே என்று சொன்னவன் என்ன நினைத்திருக்கக் கூடும்?

ஜுவில் நல்ல கூட்டம். இருந்தும் எவ்வளவு கூட்டமிருந்தாலும் கூட்டத்தை நாய்க் குடைக் குப்பல்கள் போல் தோற்றமடையச் செய்யும் விதத்தில் விஸ்தாரம் கொண்டதாக இருந்தது ஜு. ஆரம்பம் முடிவு தெரியாத ஒரு பெரிய கோளமாக, முக்கொணங்களாக ஒரு அலை எம்பலின் கனத்துடன் அது நடக்க நடக்கப் பெருகிக் கொண்டேயிருந்தது. தூரத்திலிருந்து பார்த்தால் பிரமிக்கச் செய்யும் ஆறாகவும், கிட்டப் போனால் சாதாரணத் தண்ணீர்த் தேக்கமாகவும் காணப்படும் சிறு சிறு ஓடைகளைப் பெற்றிருந்தது ஜு. ஏனோ – கத்தி போன்ற பெரிய அலகுகள் பெற்ற பெரிய நாரை இனம் போன்ற பறவைகள், சிவப்பாகத் தலையில் ஏதோ பழவக் கிரீடம் போன்ற சதைப் பற்றைத் தாங்கிய பறவைகள் குழிவிழுந்த பெரிய அளவு கிளிஞ்சலின் வெள்ளைப் பாகங்கள் போன்ற இடுப்பு இறக்கைகளைக் கொண்ட பறவைகள் இந்த பொய்க் காட்டு மரங்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வாழ்ந்து கொண்டிருப்போமே ஒழிய அந்த தண்ணீர்த் தேக்கத்தைத் தாண்ட மாட்டோம் என்பதுபோல் அவைகள் வளைய வந்ததில் மிளிர்ந்த சோக, அறிவற்ற தன்மை தினகரனைப் பெரிதும் அசதி அடையச் செய்தது.

ஜு முழுவதும் நட்டு வைக்கப்பட்ட மரங்கள் சாதாரண வளர்ச்சி கண்டு ஒரு பொய்க் காடாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்தது. குமாரின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த தினகரன். அந்த ஓடையைச் சார்ந்த மரத்தைப் பார்த்துக் கொண்டு நின்று விட்டார்.

அப்போது ஒரு பெரிய பறவை மரத்திலிருந்து புறப்பட்டு வானத்தில் நீந்த ஆரம்பித்தது. கீழே ஓடையை ஒட்டிய மர நில பாகத்தில் கும்பல்களாகப் பறவைக் கூட்டம். ஒரு பிளேன் இறங்குவதுபோல் அந்தப் பறவை நீந்தித் தரையில் இறங்கியவிதம் அது ஏற்படுத்திய சிறிய நிழல் கொய்ஞ் என்ற சப்தம் தினகரனை ஈர்த்தது. அந்தப் பறவை இறங்கி வேகமாகத் தத்தித் தத்தி மற்ற பறவைகளுடன் ஒட்டிக் கொண்டது. ஒரு பறவை தன்னுடைய பெரிய அலகு அவ்வளவையும் கழுத்தோடு வளைத்துத் தன் மார்பகத்தில் ஒட்டிய சிறகுகளுக்குள் மறைத்துக் கொண்டு அங்கு அலகால் கொத்தி கொத்தி எதையோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தது.

அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் தினகரன். குமார் என்னென்னவோ சொல்லித் தனக்குப் புரிந்த விதத்தில் கத்தி ஆர்ப்பரித்துத் தன்னுடைய மகிழ்ச்சியை விளம்பரப் படுத்திக் கொண்டே வந்தான். நல்லகாலம். குமார் தினகரனைத் தூக்கிக்கோ என்று அடம் பிடிக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று புறப்படும் முன் தினகரன் குமாரிடம் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

ஜுக்கு அழைச்சுண்டு போவேன். ஆனால் தூக்கிக்கோன்னு அடம் பிடிக்கப் கூடாது என்ன? சுட்டு விரலை நீட்டி அவனை அதிகாரம் பண்ணியிருந்தார்.

அப்போது அவனும் பெரிய மனிதனைப் போல். எல்லாம் புரிந்துவிட்டதுபோல் தலையை ஆட்டினான். அதனாலோ வேறு காரணமோ தினகரனைக் குமார் தூக்கிக்கோ என்று அடம் பிடிக்கவில்லை.

ஜுவில் தினகரன் ஒரு இரண்டு பர்லாங்கு தூரம் நடந்திருப்பார். அந்தத் தூரம் ஜுவை எப்படிப் பார்ப்பது, ஜுவில் எந்த வழியாக நடந்து போவது ஜுவில் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதாக இன்னும் சில அறிக்கைப் பலகைகளாக, விலங்குகளின் பட்சிகளின் விளம்பரப் பலகைகளான ஒரு அரிவாள் வளைவான ரஸ்தாகப் பின் தங்கிவிட்டன.

வெயில் பளீரென்று அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் வானத்தில் தூரத்தே அதனோடு அந்தரத்தின் விஸ்தாரணம் முடிவடைந்து விட்டதுபோல் கறுத்த மதில்கள் போன்ற மேகங்களின் ‘பேக்டிராப்பில்’ வெள்ளை மேகங்களின் அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது. அதிலெல்லாம் அவ்வப்போது மின்னல்கள் மெல்லிய கிளைகளாக, தாறுமாறாக வீசி எறியப்பட்ட நூல் கோணல்களாகத் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அங்கிருந்து வந்த காற்றில் தேங்கிய குளிர்ச்சியை வெயில், ரொம்பவும் சிரமப்பட்டுக் கரைக்க யத்தனித்துக் கொண்டிருந்தது.

தினகரனின் மனைவி மூச்சை இழுத்துச் சுவாசித்தாள். காலையில் நன்றாகச் சாப்பிட்டது, நல்ல உடை, ஸ்கூட்டர் சவாரி, குளிர்ந்த காற்று வெயிலில் கரைந்து கொண்டிருக்க அதில் நடந்து கொண்டிருந்ததெல்லாம் இவள் தோளுக்குள் எதையோ கரைத்தது. அந்த நிமிடமே அந்தப் புல் தரையில் அவரோடு கட்டிப் புரள வேண்டும் போல் இருந்தது.

காலையிலிருந்தே அவளுக்குத் தாபம். சாப்பிட்டப் பிறகு ஜுக்குப் புறப்படுமுன் கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படுக்கப் போனவரிடம் குமாரைத் தூங்கப் பண்ணிவிட்டுப் போய் அவரிடம் கேட்பதாக இருந்தாள். அப்போதுதான் அவள் கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் குமார் அன்னா ஜுக்கு என்ற கீச்சுக் குரலில் கத்தினான். அந்தக் குரலைக் கேட்டு அவர் வாரிச் சுருட்டி எழுந்து கொள்வதைப் பார்த்ததும், அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். பாத்ரூம் போய் முகத்தில் தண்ணீரை அடித்துக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு டிரெஸ்ஸிங் டேபிளுக்கு வந்தபோது கூடத் தாபத்தால் சுடச்சுட முறுகிச் சிவந்து சிறுத்த முகம் இன்னமும் சமனநிலை அடைந்திருக்கவில்லை. நல்ல ஜார்ஜெட் பிடிக்காது. ஆனால் அவள் ஜார்ஜெட் கட்டிக் கொண்டால் தினகரனுக்குக் கொஞ்சம் மயக்கம் உண்டாவதுண்டு. அன்று முழுவதும் அவரைத் தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி அவளை ஆட்கொண்டிருந்தது. அவரை ஒரே வீச்சில் தன் காலில் விழச் செய்ய வேண்டும் என்ற வெறி. அவரும் அவள் எதிர் பார்த்தபடியே நடந்து கொள்ள மனம் சந்தோஷித்துச் சிரித்தாள். உஷ் குமார் பார்க்கிறான் என்று அவரை அதட்டினான்.

குழந்தைகளுக்கு டிரெஸ் செய்யும் பொறுப்பு தினகரன் தலையில் விகுந்தது. அப்போது வராண்டாவில் நின்று கொண்டிருந்த மனைவியைப் பார்த்து இதுகளுக்கு யார் டிரெஸ் பண்ணறது.. இரு. இரு ஜுக்கு போயிட்டு வந்து உன்னோடு பேசிக்கிறேன் என்றார் தினகரன் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே.

இப்போது ஜுவில் அவருடைய மனைவி அவரைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். இவருக்கு இன்னொருத்தி இருந்திருக்கிறாள். அந்த நினைப்பு அடிவயிற்றில் சூடு ஏற்படுத்தியது. உள்ளுக்குள்ளே பந்து பந்தாக ஏதோ சுழன்று எம்பியது. கல்யாணத்துக்கு முன் தனக்கு ஏற்பட்டிருந்த நட்பை அவரே அவளிடம் சொல்லியிருக்கிறார்.

தாம் வந்துவிட்ட தூரத்தை திரும்பிப் பார்த்த தினகரன் தன்னுடைய மனைவியைப் பார்த்து உன் முகம் ஏன் இப்படி வேர்த்து விட்டது? என்றார்.

ஒன்றுமில்லை, என்றாள் அவள்.

தாகமாய் இருக்கா. பஃன்ன்டா கோகோ ஏதாவது சாப்பிடறியா என்றார் அவர்.

அன்னா கோகோ கோலா என்றான் குமார்.

பக்கத்தில் தெரிந்த கோகோ கோலா ஸ்டாண்டை நோக்கி நடந்தார்கள் அவர்கள். மணி இரண்டரை என்ற அந்த ஸ்டாண்டில் இருந்த டிரான்ஸிஸ்டரில் விவிதபாரதி நிகழ்ச்சி அறிவித்தது.

குமாருக்கு கோகோ கோலா கொடுத்ததும் தோள் மேலிருந்த அவருடைய கையிலிருந்த பாட்டிலைப் பற்றி இழுத்தாள். தினகரனுடைய மனைவி பஃன்டாவை உறிஞ்சினாள். அங்கிருந்து அசட்டுக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். பரவாயில்லை. போனால் போகட்டும். இனிமேல் கொஞ்சம் கவனித்துக் கொண்டால் போகிறது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். இருந்தும் அவர் தன்னிடம் சொன்ன விஷயம் காலையில் ஏற்பட்ட தாபம் எல்லாம் சேர்ந்து அவர் தன்னை அணைத்துக் கொண்டு நீதான் எனக்கு எல்லாம் என்று கதறினால்தான் அவள் மனசு சாந்தமடையும் போலிருந்தது.

அந்த கோகோ கோலா ஸ்டாண்டுக்கு இப்போது இன்னொரு குடும்பம் வந்திருந்தது. பாலைக் கெட்டிப்படுத்தி பிறகு நூலாக இழுத்து அதை வேஷ்டியாய்ப் பின்னியதே போன்று அப்படியொரு வெள்ளை வேஷ்டி, குர்த்தா போட்ட கிழவனார். அவருடைய மனைவி வெளிறிய சந்தனக் கலரில் ஓர் புடவை. ரவிக்கை போட்டிருந்தாள். கையில் பெரிய முதலைத் தோல் பர்ஸ். அவர்களுக்குப் பின்னால் அவர்களுடைய பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் வந்து கொண்டிருந்தார்கள். பெரியவருக்கு இந்துக்களுக்கே உரித்தானகர்மாவைச் செய்து விட்டேன் முகம். கிழவிக்குப் பிள்ளையைக் கொத்தி சென்றுவிட்ட பொறாமை தேங்கிய முகம். பிறகு சூட்போட்ட ஓர் ஆசாமி வந்தான். கையில் விலை உயர்ந்த காமிரா அந்த ஆசாமிக்கு சிறிது பின்னால் அக்கா தங்கை போன்ற இரு வளர்ந்த பெண்கள். வந்தவன் மூன்று கோகோ கோலாவிற்கு ஆர்டர் கொடுத்தான்.

அக்லாகானா என்று பேச்சின் தொடர்ச்சி காசு கொடுத்து விட்டு நகர்ந்த தினகரனுடைய குடும்பத்தை மரியாதையாகப் பின் தொடர்ந்தது. அவர்கள் ஜாலி கம்பிகளால் பிணைக்கப்பட்ட ஒரு பெரிய கூண்டை அடைந்தார்கள். பல நாடுகளிலிருந்து வந்த பலவித மயிலினங்கள் அதில் வளைய வந்து கொண்டிருந்தன.

தினகரனுடைய மனைவி ஆண் மயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதனுடைய தலை நிமிர்ந்த கர்வம் அவளுக்குப் பிடித்திருந்தது. ஏனோ முன்னால் மதறாஸில் ஆனந்தில் ஸ்பார்ட்டகஸ் படம் பார்க்கும்போது அதில் அடிமைகளைச் சாகும் வரையில் சண்டையிடச் சொல்லி வேடிக்கை பார்க்கும் ராஜ விளையாட்டுக் காட்சி ஞாபகத்திற்கு வந்தது. ஒருவித லஜ்ஜையுடன் அந்தக் காட்சிகள் எப்போதும் தனக்குப் பிடித்தமான ஒன்றாகத் திகழுமே ஒழிய ஐயோ பாவம் உணர்ச்சியை எழுப்பாது என்ற தன்மையை இப்போதும் மனதிற்குள் ஒப்புக் கொண்டாள். அன்று அவள் தன் கல்லூரி டீச்சருடன் அந்தக் காட்சிக்குப் போயிருந்தாள்.

என்னடி பத்மா ஆன்பிள்ளை வேண்டியிருக்கு.. ஏதோ பெரிசா சாகசம் செய்யறாப்பல நடந்துக் கறாங்களே ஒழிய அதோ அந்த ஸ்க்ரீனில் நீந்தும் மூஞ்சிகளைப் பாரேன். எல்லாம் பஞ்சு உருவங்கள். அவர்களுடைய உடம்பு பஞ்சாய் இருக்கும். உன்னுடையதும் என்னுடையதும் போல.. அதுகளுடைய மனசைப் பத்தியோ கேட்கவே வேண்டாம். எப்போதோ உளுத்துப் போயிருக்கும். என்று உரக்கவே சொன்னாள்.

அப்போது அவளை அடக்குவதற்காக அவள் கிள்ளினாள். அவள் ஊஊவென்று பாதி நிஜ பாதிப் பொய்க் குரலெழுப்பினாள். என்த ஆம்பிள்ளையைப் பார்த்தாலும் அந்த டீச்சர் யூ லில்லிவர்டு பாஸ்டர்ட் என்று முனகுவாள்.

அப்போதெல்லாம் இது எந்த நாவிலிருந்து என்பாள் பத்மா.

எந்த நாவிலிருந்து இருந்தால் என்ன பாரேன். இதுகள் மூஞ்சியை தொந்தியும் தொப்பையுமாக.. முப்பத்தைந்து வயதிலும் மாஸ்டர்பேடிங் பாஸ்ட்டர்ட்ஸ் யூ நோ பத்மா டோன்ட் மேரி நெவர் இஃப் யூ ஆர்ஃபெட் அப் வித் மீ ஸர்ச் அனதர் பார்ட்னர் லைக் மீ அஃப் கோர்ஸ்பட் டோன்ட் மேரி யூ ஸீ தட்..

ஆனால் அவளுக்குக் கல்யாணம் ஆயிற்று. தினகரன் பேப்பரில் விளம்பரம் செய்திருந்தார். அந்த விளம்பரத் துணுக்கை எடுத்துக் கொண்டு தூக்கத்தில் நடப்பவள் போல்தான் அன்று அவன் பேசினான். நாம் சிறிது மனம் விட்டுப் பேசலாம் என்றார் தினகரன். அன்று சுருக்கமாக நான் நான் நீ நீயாக இருப்போம் நாம் ஒன்றாக வாழ்வோம் என்றார். ஏனோ அவளுக்கு அந்த வார்த்தைகள் பிடித்திருந்தன. நான் நானாக இருப்பேன் என்று அவர் தனக்குச் சொல்லிக் கொண்டது சரி. ஆனால் நான்? அவளுக்கு அழுகை வந்தது. அவர் ஓடிப்போய் அவளைத் தழுவினார். முதலில் அவள் முரண்டு பிடித்தாள். பிறகு இணங்கினாள். அடிக்கடி அவர் ரூமுக்குப் போய்வர ஆரம்பித்தாள். பிறகு கல்யாணம் செய்து கொண்டாள். திருப்பதியில் கல்யாணம். கடைசி நிமிடத்தில் அம்மா வந்தாள். அப்பா அவள் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

அவர் அவரிடம் தன் டீச்சர் நட்பை இதுவரையில் சொன்னதில்லை. லில்லிவிவர்ட் பாஸ்டர்ட்ஸ் என்று டீச்சர் அடிக்கடி ஆண்களை வைத்து எவ்வளவு தவறு என்று அவளுக்குப் புரிந்தது. குண்டு குண்டான இரண்டு குழந்தைகள். அதற்கு ஏதுவான அடிவயிற்றில் அடிக்கடி அவர் குடிகொள்ளச் செய்த நமநமத்த இன்பவலிகள். பசி கலியாணத்திற்குப் பிறகுதானே அவளுக்குச் சாப்பாட்டில் அப்படியொரு ஆசை ஏற்பட்டது? அதற்கும் அவர்தானே காரணம்?

மேலும் டீச்சர் யூ ஆர் ராங். ஒரு ஆண் தன்னை நிர்வாணமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். ஹி ஹாஸ் ஏ பெட்டர் பில்டு. ஹி லுக்ஸ் மச் மோர் ஹோல்சம் மேலும் இந்த மயிலைப்பார். ஆண் மயிலில்தான் அப்படியொரு அப்படியொரு அழகு காம்பீர்யம் தெரிகிறது. பெட்டைக் கோழியைவிடச் சேவலைப் பார். நல்ல வளர்ந்த ஆண் ஆல்சேஷனை நீ பார்த்ததில்லை. கிழட்டு ஆண் சிங்கத்தைப் பார். நீ எப்போதாவது இங்கு வந்தால் தினகரனுடன் ஒரு வாரம் இருந்து பார்.

எனக்கு என்னவாயிற்று? போட்டி பொறாமை, பைத்தியக்கார எண்ணங்களில் நினைத்து என்னை வருத்திக் கொண்கிறேன். நான் இருபது வயதில் ஆண்களுடன் பேச முடியாது அவதியுற்றது காரணமாக இருக்கலாம். என் அம்மா என்னை அப்படிக் கட்டிக் காபாந்து செய்தாள். பிறகு நான் டீச்சரை அழைத்துவந்து ஜாடை மாடையாக வீட்டிலேயே அதை ஆரம்பித்த பிறகும் அம்மாவுக்கு என் நிலை புரியவில்லை.

உங்களுக்குக் கோடி தாங்க்ஸ் என்றாள் அவள் தன் கணவனைப் பார்த்து எதற்கு? என்றார் அவர்.

இரவில் சொல்கிறேன் என்றாள் அவர்.

தினகரன் தோளைக் குலுக்கிக் கொண்டார். சிரித்தார். நான் ராஜாவாக இருந்தால் இப்போது இங்கு இருக்கும் அத்தனைப் பேரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு உன்முன் மண்டியிட்டு இப்போதே சொல் என்பேன் என்றார்.

எவ்வளவு சினிமா பார்த்தால் என்ன? புத்தி வந்தால்தானே? என்றாள் அவள்.

என்ன உளறுகிறாய்? என்றார் அவர்.

இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் கூடாதாம். நியூஸ் ரீலுக்குப் பதிலாக இப்போதெல்லாம் அதைத் தானே போட்டுக் காட்டுகிறார்கள். மேலும் நீங்கள் அவர்கள் சொல்வதைக் கூட உபயோகப்படுத்துவதில்லை. ஜாக்கிரதை.

ஏய் மெல்ல யாராவது கேட்கப் போகிறார்கள். என்றார். அவர். அவள் தன் நாக்கைக் கடித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். அந்த வயதான தம்பதிகள் பின்னால் வந்து கொண்டிருந்தனர். பிள்ளையையும் மாட்டுப் பெண்ணையும் காணவில்லை. ஓர் கூண்டுப் பக்கமாக அந்த சூட்போட்ட ஆசாமியுடன் வந்த இரண்டு பெண்களில் மூத்தவளாகத் தெரிபவள் தனியாக நடந்து கொண்டிருந்தாள். சூட் ஆசாமியும் தங்கையும் புல் தரையில் உட்கார்ந்திருந்தனர். தங்கைக்காரி கைகளைப் பின்னால் ஊன்றிக் கால்களை முழுவதும் நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கழுத்தை அண்ணாந்து சிலிர்ப்பித்து, பாஃப் தலைமயிர் அசைந்தாட உடம்பே சிறு சிறு சிரிப்பு நகைகளாகக் குலுங்க உட்கார்ந்திருந்தாள்.

அந்த மூவரும் அன்று ஜுவில் பல சமயங்களில் தினகரனுடையவும் அவருடைய மனைவி கண்களிலும் பட்டனர். மூத்தவள் எப்போதும் பத்தடி பின்னாலேயே நடந்து கொண்டிருந்தாள். கோட் சூட் ஆசாமியும் வயதில் தங்கை போன்று தோற்றம் கொண்ட பெண்ணும் பேசிச் சிரித்து நடந்து கொண்டேயிருந்தனர். அடிக்கடி புல் தரையில் உட்கார்ந்தனர். கையோடு கொண்டு வந்திருந்த பிளாஸ்கிலிருந்து பிளாஸ்டிக் டம்ளரில் எதையோ கொட்டி அடிக்கடி குடித்துக் கொண்டிருந்தனர். ஜுவில் அவர்கள் எந்தக் கூண்டுப் பக்கத்திலும் ஒரு தடவைகூட நிற்கவில்லை. பொதுவாகப் பார்க்கில் உலாவுவது போன்று நடந்து கொண்டிருந்தனர்.

பையன் குமார் தினகரனை ரொம்பவும் தொளாவிக் கொண்டிருந்தான். அன்னா இது என்ன? அது என்ன? அன்று ஜுவில் கேள்வி சாகரமானான் குமார். தினகரன் அளந்தார். நான் என்ன பயாலஜி ஸ்டூடன்டா என்ன? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். எங்கிருந்து வந்தது? என்ன இனம்? மாமிச பட்சிணியா? இல்லையா போன்ற தகவல்களை வெள்ளைப் பறவை கறுப்புப் பூனை சிகப்புபறவை என்று சாதாரணமாகச் சுவரைப் பார்த்துச் சொல்வதிலிருந்து வானதது நட்சத்திரம் என்று தன் கற்பனையை அள்ளி வீசுவதிலிருந்து ஏதேதோ ஜாலங்கள் புரிந்து கொண்டிருந்தார் தினகரன். அப்போதைக்குக்போது மனைவியைத் திரும்பிப் பார்த்தார். அவள் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள். இரு அவ்வளவு சிரிப்பையும் இரவில் வலியாக, முனகலாக வேர்வையின் தெப்பக் கடலாக மாற்றுகிறேன் என்று மனதிற்குள் கருவிக் கொண்டார். தொடர்ந்து மனைவி சொன்னது ஞாபகம் வந்தது. இதுவரையிலும் உபயோகித்ததில்லை. இரண்டு குழந்தைகளாகி விட்டது. வாங்குவதா, வேண்டாமா? கடையில் போய்க் கேட்க முடியுமா? அப்படிக் கேட்டாலும் முதலில் நான் ஒரு கடை வைத்து விற்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். யாராவது வந்து என்னை ஒரு பாக்கெட் கேட்டால் சீ… மேலும் என்னால் அதை உபயோகிக்க முடியுமா? இருந்தும் மனைவியிடம் போகும்போதெல்லாம் பயம் தொற்றாமலிருந்ததில்லை.. எங்கோ வைகறையின் முதல் கீற்று கணக்காக ஒரு சிறு ஜொலிக்கும் பொட்டு ஒன்றே ஒன்று மீண்டும் அவளில் ஒளிர்ந்துவிட்டால்.

தினகரனை ஏதோ இனம் புரியாத அசதி தொற்றியது. மனித வாழ்க்கையே அர்த்த மற்றதாகி விட்டது போலப் பட்டது. பேராசை பிடித்த மனிதன்தான் கடவுளைப் படைத்தான். என்று சொன்ன அவளுடைய அண்ணா. முப்பத்திரெண்டு வயதில் நூற்றுக்கணக்கான துயரங்களுக்குப் பிறகு. எவனுக்கோ மனைவியாகப் போன ஜானா அதோ அந்தப் பெண்ணையும் ஆணையும் நடக்க விட்டுப் பின்னால் தயங்கித் தயங்கிக் கூண்டினருகில் நின்று நின்று நடக்கும் அந்தப் பெண் உள்பட. ஆமாம் அவள் முகத்தில் ஏன் அந்தச் சோகம்? எல்லோரும் என் கண் முன்னால் இப்போது நீந்துகிறார்களே? ஏதோ அவர்கள் இரைந்து கூப்பாடு போட்டு ஏதோ சொல்வது போலிருக்கிறதே? என்ன சொல்கிறார்கள் இவர்கள்? எங்களுடைய சோகத்திற்காக ஒரு பொட்டுக் கண்ணீர் விடுங்கள் என்று கெஞ்சுகிறார்களா? யாருக்காக அழுவது? எதற்கென்று அழுவது? அவரிடமிருந்து பெருமூச்சுக் கிளம்பியது.

இதோ பார்த்தியா குமார்.. இந்தப் புறா.

அது புறா இல்லை, அவள் சிரித்தாள்.

இந்தப் புறா குமார் வந்து,

குமார் அது புறா இல்லை.

இப்ப நீ சும்மா இருக்கிறியா? இல்லையா? தினகரன் தன்னுடைய மனைவியை அதட்டினார்.

அவள் இரண்டு அடி பின்னால் தள்ளி நின்று மீண்டும் சிரித்தாள்.

குமார் அது புறா அது இல்லை. போ போ உன்னை அடிப்பேன் என்றான் குமார்.

அச்சா பாபா அது புறா இல்லை என்றார் தினகரன். அப்படி வாங்க வழிக்கு என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு சிரித்தாள் அவள்.

அப்படித்தான் நீங்களெல்லோரும் அப்படித்தான். ஒரு வைரக்கல், ஒரு பவழம், இல்லை ஒரு பூ கொடுத்து உங்களை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அப்படியும் முரண்டு பிடித்தால் ஒன்றுமேயில்லாத ஒரு கற்பனைத் தோல்வியை ஒப்புக் கொண்டு உங்கள் காலுங்கீழ் விழுந்தால் அந்தப் பருத்த தனங்கள், வளப்பமான கைகள், உதடுகள் எங்களுடையது. உடம்பே பூஞ்சையானாலும் உங்கள் துடைகளில் அப்படியொரு அழுத்தம் எங்கிருந்து வந்தது? அதுவும் எங்களுடையதுதான்..

அன்னா சொல்லு புறா புறா என்று அவரை ஊக்குவித்தான் குமார். தினகரன் தன் மனைவியைப் பார்த்தார்.

அவள் உதட்டைப் பல்லால் அழுத்தி பறவை என்றாள்.

அவரைப் பார்த்துக் கண்களால் சிரித்துக் கொண்டே.

இவளா சில சமயங்களில் அப்படி இவ்வளவு சீரியஸாக ஒன்றுமே நடக்காதது போல் பசுவாட்டம், தன்னை அப்படி ஒரு பெரிய மனுஷி போல் ஆக்கிக் கொள்கிறாள்.

இப்போது ஆண் முறைகள் வகுக்கப்பட்டு விட்டதால் நான் வேண்டும் என்பதை எப்படி பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்கிறாள்.

அவருக்கு அவளைக் கண்டிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளுடைய எண்ணத்தில் அவளில் அவள் அழகாக இருந்தாள். பார்க்கும் இடமெல்லாம் அழகை வாரி இறைக்கிறாள். அவள் அன்னை. பெண்ணரசி. பராசக்தி. உலகத்தை உரு ஆக்குபவள். அவருக்கு அவளை அணைத்தால் தேவலை போலிருந்தது. தூரத்தில் தெரிந்த மரங்களுக்குப் பின்னால் அவளை அழைத்துக் கொண்டு போனார்.

குமார் அவரை விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதோ பார் மான் இல்லே.. எவ்வளவு அழகாய் இருக்கு இல்லே? என்று சொல்லி அவன் கவனத்தைத் திருப்பினார். அவன் திரும்பினதும் கையிலிருந்த குழந்தையைக் கீழே உட்காரவைத்து விட்டு அவளை இறுகக் கட்டிக் கொண்டார். இரண்டு. நெற்றியில் ஒன்று. உதட்டில் ஒன்று. தாங்க்ஸ் என்றார்.

குமாரை அழைத்துக் கொண்டு கூண்டுகள் பக்கமாக வேகமாக நடக்கலானார். ஏனோ அந்தரத்தில் காற்றில் அது அப்போது வியாபித்திருப்பதாகப் பட்டது. ஆடும் மரங்களில் அவளுடைய குரல் தேங்கி ஊர்ந்தது. மாலை பரப்பிக் கொண்டிருந்த நீண்ட நிழல்களில் நிழல்கள் எழுப்பிய அருவரு கட்டிடங்களில் அது சலனமடைந்து வியாபித்தது. எங்கோ விரைந்து கொண்டிருந்தது.

ஸ்ட்டரின் ரீங்காரத்தை அது தொடர்ந்தது. உலகத்தில் ஒரு பாட்டு ரூபமாக ஒரு இழை குரலாக இனம் புரியாத ஏதோ ஒன்று சதா எல்லாவற்றையும் அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. என்னைத் தேடினவனே உனக்கு ரொம்ப தேங்க்ஸ் என்ற குரல் எங்கிருந்தோ கேட்பது போலிருந்தது அதுவும் பாட்டு ரூபமாக.

மரங்களுக்குப் பின்னால் தினகரனுடைய மனைவி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.

அவரை வாட்டுவது எதுவாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய். அவருடைய முகத்தைப் பார்த்தால் விதியே நீ என்ன மாதிரி விளையாடக்கூடும் என்பதைச் சாகரமாக அவர் முகத்தில் தேங்கி உன்னைப் பிரதிபலித்துக் காட்டிக் கொள்வதை நான் அடிக்கடி பார்க்கிறேன்.

நான் உன்னை அவர் முகத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் அனுபவ முத்திரையைப் பார்த்துப் பயப்படுகிறேன். தலைகுனிந்து வணங்குகிறேன். இந்த மாதிரியான பழம் கிடைக்க நான் என்ன செய்தேன். பன்னிரண்டு வருட காலம் என் இனத்தவரோடு கட்டிப் புரளுவதை வெட்டிப் போட்டு பெண் ஆக்கியிருக்கிறாய். அனுபவ முத்திரையே விதியே எப்போதும் உன்னுடைய தேடலின் பிரதிபலிப்புக்கள் மனமொத்து ஒன்று சேருதலாகவே இருந்து போகட்டும். உன்னை நான் நினைத்தபடி நீ என்னில் வந்து குடிகொள்ள இந்த மாலை வேளையில் நீளும் நிழல்களில்கூட நின்றுகொண்டு அழைக்கிறேன். அந்த நிழல்களில் கூட நீ என்றோ அவைகளை உருவமாகக் கற்பனை செய்தது. பாதியாக நின்றுவிட்டது. முழுமை பெற நான் ஆசீர்வதிக்கிறேன். இங்கும் எங்கும் பிரதிபலிக்கும் துன்பங்களை அடித்துப் போடு மறையும் ரத்தச் சிவப்புச் சூரியனே என் வேண்டுதலை உன்னில் ஐக்கியப்படுத்திக் கொண்டு நாளை உதி.

பிறகு அவளுக்கு இரைச்சல் சப்தம் கேட்கவே துணுக்குற்றாள். குமாருக்கு மௌனமாக எதையோ கூண்டுக்குள் சுட்டிக் காட்டி விளக்கிக் கொண்டிருந்த அவர் பக்கம் தன் பெண்ணை வாரிக் கொண்டு ஓடினாள். அவர் பக்கத்தில் போய் அவர் தோளைப் பற்றி இழுத்து அவர் கவனத்தைத் திருப்பினாள்.

தூரத்தில் ஜனங்கள் குண்டு விழப்போகும் பயத்துடன் மூலைக்கு ஒருவராகச் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர். ஒரு புலி நான்கு கால் பாய்ச்சலில் ஜுவைத் திக்குகளின் முனைகளாக அளந்து கொண்டிருந்தது. தினகரன் கவனித்தார். குமாரைத் தூக்கிக் கொண்டு அவர் மேல் சாய்ந்த அவருடைய மனைவி ஸ்டில் போட்டோகிராபி ஆனாள். புலி கூண்டிலிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டு விட்டது. புலி நீளமாகப் பாய்ந்தது. அந்தரத்தில் முடிந்த மட்டும் எம்பி குதித்தது. கீழே விழுந்து உருண்டு புரண்டது. எழுந்தது. நிதானமாகச் சுற்றுமுற்றும் பார்த்தது. பிறகு ஓடும் ஜனங்களைப் பெரிய வட்டமாக அடித்து ஒன்று சேர்த்து நடுவில் குவித்தது. அலறல்கள் தொடர்ந்தன. புலி கண்மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது. முன்னங் கால்களை அழுத்திக் கொண்டு உடம்பை ஒரு பெருங் கோடாக வளைத்துக் கொண்டது. உறுமிப் பாய்ந்தது. மீண்டும் கூக்குரலுடன் மனித ஓட்டம் தொடர்ந்தது.

தினகரன் புலிக்கு வெகு தூரத்தில் இருந்தார். இருந்தும் புலி ஓரிரு தடவை அவருக்கு ஒரு ஐம்பது கஜ அளவு தூரத்தில் ஓடியது. அது அவர்களைக் காணவில்லை. அவருக்கு அடி வயிறு ஜில்லென்று ஆயிற்று. பிறகு தூரத்தில் ஜுவின் ஆரம்பத்தில் இருக்கும் ஆபீஸில் அலாரம் அலர ஆரம்பித்தது. இரண்டு, மூன்று, ஜீப்புகள் அதில் இரும்புத் தொப்பி அணிந்த போலீஸ். வெள்ளை உடை அணிந்த அதிகாரிகள் தென்பட்டனர். ஜுப்பின் வேகம் அதிகரித்தது. ஜனங்களைப் பயப்படாமல் அங்கங்கே அப்படியே நிற்குமாறு ஒலி பெருக்கியில் உத்தரவு வந்தது. இப்போது ஜீப் புலியைத் துரத்த ஆரம்பித்தது. இப்போது புலி புரானகிலா மதில்களை நோக்கி ஓட ஆரம்பித்தது. ஜீப் பிடாமல் புலியைத் துரத்தியது. புலி பாய்ந்தது. முள் கம்பி அதை ஒரு பந்தாக எதுக்களைத்துத் தள்ளியது. புலி மீண்டும் பாய்ந்தது. முள் கம்பி எவ்வளவோ இறுகக் கட்டப் பட்டிருந்தும் பூகம்பம் கண்டதுபோல் தொய்ந்து ஆடிப் புலியைக் கீழே தள்ளியது. புலி விழுந்த இடத்திலிருந்து எழுந்து தன்னை நக்கிக் கொடுத்துக் கொண்டது. சுற்றுமுற்றும் தரையில் எதையோ முகர்ந்து பார்த்தது. மீண்டும் ஓட ஆரம்பித்தது. இப்போது புலி பாய்ந்த வேகத்தில் கம்பியில் பட்டதும் அது ஒதுக்கப்பட்டு அந்தரத்தில் அப்படியே அரைக் கணத்திற்கு நின்றது. அப்போதுதான் அதன் மேல் முதல் குண்டு பாய்ந்தது. புலி சாகவில்லை. அடிபட்ட ஆத்திரத்தில் புரண்டெழுந்தபோது இரண்டாவது குண்டை நெற்றியில் பெற்றுக் கொண்டது. மூன்றாவது குண்டு பாய்ந்தபோது புலி எழுப்பிய ஓலம் கேட்டவுடன் தினகரனின் உடம்பு ஒரு தரம் குனிந்து எழுந்தது. அவருக்குள் எதையோ சொடுக்கி இழுப்பதுபோல் வலி ஏற்பட்டது.

குமாயுன் ஹில்ஸி லிருந்து பிடிக்கப்பட்ட புலியாம். பிடித்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறதாம். முதல் ஒரு மாதம் புலி எந்த ஆகாரத்தையும் தொடவில்லையாம். உறுமிக் கொண்டிருந்ததாம். லேசான ஒரு கண்டிப்பு மிகுந்த உறுமலோடு சரி. ஆட்டு மாமிசம். அப்போதுதான் கொன்ற மான். ஊஹிம் எதையும் திரும்பிப் பார்க்கவில்லையாம். நாளொன்றுக்கு உயரே ஒரு முப்பது அடிக்கு மூடப்பட்ட ஜாலி கம்பிகளை நோக்கி நூற்றுக்கணக்கான தடவைகள் தாவித் தாவிப் பொதக் பொதக்கென்று விழுந்து களைத்துக் கொண்டிருந்ததாம்.அவ்வாறு களைத்த பிறகு கால்களால் வெகுநேரம் கம்பியைப் பிராண்டிக் கொண்டிருக்குமாம். இன்னமும் எத்தனையோ கதைகள். நிருபர்கள் வந்து படம் பிடித்தார்கள். கையுடன் கொண்டு வந்து நோட்புக்கில் குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். தினகரனைத் தோளில் காமிரா தொங்க ஒருவன் நெருங்கினான். அவன் அவரை ஏதோ கேள்வி கேட்டான்.

தினகரன் லிசன் யூ கோ டு ஹெல் டு யூ அண்டர்ஸ்டாண்ட்? எஸ டு ல், என்றார்.

அன்று அவர் குமாருக்காகத்தான் லகுனாவுக்குப் போனார். புலி செத்துப்போனது மனதை ரொம்பவும் சங்கடப்படுத்தி விட்டது. புலியே நான் இப்போது லகுனாவுக்குப் போய் புரூட் சாலட் சாப்பிட போகிறேன். ஆனால் மேலெழுந்த வாரியாக என்ன செய்தாலும் உன்னுடைய சாவு என்னை ரொம்பவும் உலுக்கி விட்டது. என்பதை உண்மையான மனதுடன் முறையிட்டுக் கொள்கிறேன். என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

கல்யாணத்திற்கு முன் சின்னவளுடன் அடிக்கடி லகுனா வந்து போயிருக்கிறார். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு இதுவே முதல் தடவை. அவரை வரவேற்கத் திரும்பிய சர்வர் ‘ஹே’ என்று ஆச்சரியக் குரலெழுப்பினான்.

அவருடைய மனைவிக்குச் சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்தான். பிறகு ஒரு மூலை பக்கமாகக் கண்ணோட்டம் விட்டான். முன்பெல்லாம் தினகரன் வழக்கமாக உட்காருமிடத்தைத்தான் அவன் அப்படிப் பார்த்தான். அங்கு யாரோ உட்கார்ந்திருந்தார்கள். நான்கு வருடம் ஆகியும் சர்வர் தான் வழக்கமாக உட்காருமிடத்தை மறந்திருக்கவில்லை என்பதைத் தினகரன் கவனித்தார்.

தினகரனையும் அவருடைய மனைவி குழந்தைகளையும் ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு கொஞ்ச நேரத்தில் அவர்களுக்குப் பில் சமர்ப்பிக்கப்படும். பிறகு நீங்கள் அங்கு உட்காரலாம். என்று சர்வர் சொன்னான்.

O.K I am ready to wait

என்றார் தினகரன். அவருக்கு முன்பு பழக்கமான இடம் காலியானதும் அவர் தன் மனைவி குழந்தைகளுடன் அங்கு போய் உட்கார்ந்தார். பக்கத்தில் ஏதோ கனைப்புச் சத்தம் கேட்டது. மைக்கில் பாடுபவர் பக்கத்தில் வந்து சிரித்துக் கொண்டு நின்றிருந்தார். தினகரன் ஆச்சரியக் குரலெழுப்பி எழுந்து கொண்டு வந்தவரின் கையைக் குலுக்கினார். போயிட்டுப் போறது. மன்னித்து விட்டேன். என்றார் வந்தவர் சிரித்துக் கொண்டே.

தினகரன் அவருடைய தோளை அழுத்தி உட்கார வைத்தார். நம்மிடையே எதற்கு பார்மாலிடி என்று அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார் தினகரன்.

அட எங்கோ நடந்த திருப்பதி கல்யாணத்திற்கு அழைப்பு போடவில்லைன்னா நான் உன்னைக் கோபித்துக் கொள்கிறேன்? திரும்பி வந்தியே. இங்கு ஒரு நாளாவது எட்டிப் பார்த்தியா?

ஐ ஆம் ஸாரி. தப்பு என் மேல் தான் என்றார் தினகரன் இயல்பாக. அதுதான் சொன்னேனே, மன்னித்து விட்டேன் என்று. எனக்குத் தெரியாதா உன்னை? நீ எப்போதும் ஒரு விதம். என்று சொல்லிச் சிரித்தார். பிறகு குமார் முகத்தைச் செல்லமாகத் தட்டினார். பையில் கைகைவிட்டு ஒரு காட்பரீஸ் சாக்கலேட்டை எடுத்து அவனிடம் நீட்டினார்.

குமார் தயங்கிக் கொண்டே தன் அன்னாவைப் பார்த்தான். வாங்கிக்கோ என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

ப்ரூட் சாலட் வித் ஐஸ் க்ரீம் மேலே இரண்டு சேரி பழத்துடன் வந்தது.

இன்னொன்று இப்போது வேண்டாம் என்றார் அவர். சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றார் தினகரன்.

இல்லை. தொண்டை கட்டிக் கொண்டுவிடும். அப்புறம் பாட முடியாது. மேலும் ஒரு ப்ரூட் சாலட் கொடுத்து ஏமாற்றிவிட முடியுமா என்று சொல்லிக் கடகடவென்று சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டார்.

நிச்சயமாக உங்களுக்கு லன்ஞ் தரவேண்டியதுதான் என்று சௌகரியப்படும்? என்றார் தினகரன்.

‘Any day, Just drop a card,’ என்றார் அவர். சிறிது நடந்தவர் மீண்டும் திரும்பி வந்து உங்களுக்குப் பிடித்த பழைய பாட்டேவா? அல்லது என்று இழுத்தார்.

‘லாரா தீம்’ என்று ஒப்புக்குச் சொன்னார் தினகரன் சிரித்துக் கொண்டே.

ஷ்யர் என்று சொல்லி அவர் திரும்பி நடந்தார். மேடையிலிருந்து கை ஆட்டிச் சிரித்தார். லாரா தீம் இனிமையாக ஆரம்பித்தது. தினகரன் தன் மனைவி பக்கம் திரும்பினார். அவர் மனைவி ப்ரூட் சாலட்டை நாசூக்காக அனுபவித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். குமார் வாயில் அடிக்கடி ஊட்டப்பட்டதை அவன் சாப்பிடுவதை மேலெல்லாம் வழிய விட்டுக் கொண்டதுதான் ஜாஸ்தியாக இருந்தது. அவர் மனைவி அடிக்கடி சாப்பிடும் ஸ்பூனைக் கீழே வைத்து விட்டு அவனை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டாள். பெண் குழந்தை இரண்டு கைகளாலும் டேபிளில் தட்டி எப்படியெல்லாமோ கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தன.

தினகரன் கண்களை மூடிக் கொண்டார். தலையைக் குனிந்து கொண்டார். மண்டை வெடித்து விடும்போல் அப்படியொரு வலி. தலையைச் சிரிது உயர்த்திக் கண்ணைத் திறந்தபோது நேரே ப்ரூட் சாலட் கோப்பையில் விழிப்பதை உணர்ந்தார்.

முதலில் அவருடைய பார்வை குப்பென்று வெளிப்புறம் இப்போது நீர் பூத்திருப்பதில் சென்று லயித்தது. பிறகு பார்வை மேலேயிருந்த ஐஸ்க்ரிம் உருகிச் சிறிய ஓடைகளாகிக் கொண்டிருந்ததில் சென்று லயித்தது.

திடீரென்று ஐஸ்க்ரிம் மேலேயிருந்த இரண்டு செரி பழங்களும் இரண்டு கோரை நார் கணக்காகப் பிரிந்து உருகி ஓடும் ஐஸ்க்ரிம் ஓடையும் செத்துப்போன புலியின் இரண்டு கண்களும் இரண்டு மீசையுமாயின. அவர் உடம்பு விதிர்த்துக் கொண்டது.

பிறகு வீடு திரும்பும்வரை அவர் யாருடனும் பேசவில்லை. எதையும் கவனிக்கவில்லை. பரந்த டில்லியில் கூட்டங்களில் மனைவி மக்களிடையே தனித்தவரானார் ரீகல் வரையில் நடந்து சென்று பஸ்சிற்க்காகக் காத்திருக்க நேர்ந்தது. ஸ்வப்பனத்தில் நடந்ததுபோல் ஆயிற்று. உணர்ச்சியே இல்லாமல் பஸ்ஸில் ஏறி, கிடைத்த இடத்தில் உட்கார்ந்தார். பிறகுதான் மனைவி குமாரையும், குழந்தையையும் வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறாள் என்று புலப்பட்டது. எழுந்து கொண்டு அவளை உட்கார வைத்தார். மீண்டும் ஏதோ யோசனை.

வீடு திரும்பும்போது தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்து அரைமணி நேரம் ஆகியிருந்தது. உள்ளே நுழைந்த தினகரன் விளக்கைப் போட்டவர் விளக்கையே பார்த்துக் கொண்டிருந்தார். வெகுநேரங்கழித்துச் சோபாவில் உட்கார்ந்தார். தரைமயிரைக் கைகளால் கோதிக் கொண்டேயிருந்தார். மனைவி பலமுறை சாப்பிடக் கூப்பிட்டாள். குமார், அன்னா சாப்பிட வா என்று பலமுறை கீச்சுக் குரலில் கத்தினான். அவன் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவில்லை.

அவர் இடத்தை விட்டு எழுந்து படுக்கப் போனபோது மணி பதினொன்று. மனைவி அவர் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். அவர் படுத்த சிறிது நேரத்தில் அவருடைய மனைவி தான் பகலில் நினைத்ததைச் செயல்படுத்த யத்தனித்தாள். அவர் தூங்கினார். தூக்கத்தில் ஒரு கனாக் கண்டார். கனவில் ஒரு பெரிய பனி போர்த்திய மலைகள் சமன பூமி ஆகின்றன. திடும் திடும் என பெரிய மலைகள் பெரிய இரைச்சலுடன் தவிடு பாடி ஆகின்றன. அந்த வெடிப்பு உதிர்ந்த பனிப் பூக்கள் தூவான்கள் வெகுநேரம் அந்தரத்தில் ஊசலாடி மீண்டும் தணிந்து சோவென்ற பெரும் மழை வலுக்கின்றது. மழை தணிந்த இடத்தில் அப்படியொரு ஜனத்திரள் முளைத்திருக்கின்றது. நிறையப் புலிகள், மான்கள், தவளைகள், கோடானு கோடி பட்சி இனங்கள் கண் முன்னால் நீந்துகின்றன. மறைகின்றன. மரங்கள், செடிகள், கொடிகள் இன்னும் என்னவெல்லாமோ தோன்றி மறைய மறைய மனித இனம் ஒரு இம்மி அளவு நகர முடியாமல் பூமியில் ஊசிமுனைப் பொட்டளவு இடத்தில் நின்று நகரமுடியாமல் நெரிபட்டு நின்ற இடத்தில் இறக்கிறது. மனித இனத்தின் சாபக்கேடு பூமி தாங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது.

இந்நிலையில் அவர் விழித்துக் கொண்டார். அவர் உடம்பு வேர்த்து விட்டிருந்தது. தான் கண்டது கனா என்ற தீர்மானத்திற்கு வரமுடியவில்லை. விசுக்கென்று எழுந்து ஜண்ணலண்டை போனார். பானர்ஜி வளர்த்த யூகலிப்டஸ் மரம் பின்பகுதி சந்திரனில் ஏதோ மஞ்சள் சாயம் தீட்டிக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறது. மனம் சிறிது சாந்தமுற்றதுபோல் இருந்தது. வெளியே வராந்தாவுக்கு வந்து செருப்பை மாட்டிக் கொண்டு உலவக் கிளம்பினார்.

பிறகு அவருக்கு அது பட்டது. அவர் ஏழு கோர்ட் ஏறிச் சத்தியம் பண்ணத் தயாராக இருந்தார்.

ஜுவில் அன்று பிற்பகல் ஒரு பாவமும் அறியாத புலியை மனிதன் கொன்று விட்டான். நடந்து சென்று புலியினுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தால் கூட அது யாருக்கும் எத்தீங்கும் செய்திருக்காது என்று அவருக்குப் பட ஆரம்பித்தது. அவருக்கு அந்தப் புலியின் ஓட்டம் அதனுடைய முகம் எல்லாம் கண் முன்னால் நீந்த ஆரம்பித்தது. ஆம் அது யாருக்கும் எத்தீங்கும் செய்திருக்காது. அது வெளியே வந்தபோது தனக்கு விடுதலை கிடைத்து விட்ட சந்தோஷத்துடன் அது வாழ்ந்து கொண்டிருந்தது. சுவாசித்துக் கொண்டிருந்தது. விடுதலை கூண்டிலிருந்து விடுதலை தன்னுடைய நிலையிலிருந்து பிழறிய வடிவத்திலிருந்து விடுதலை.

வெகுநேரங் கழித்து அழித்து வாலைச் சொடுக்கினபோது தான் அதனுடைய தேடல் ஆரம்பித்தது. அதற்குப் பிறகுதான் தன் உடம்பால் தான் விடுதலை அடைந்து வந்த இடம் காடில்லை என்பதை உணர்ந்தது.

பிறகுதான் மனிதனுடைய ஆச்சர்யம் அவன் சுவாசிக்கும் காற்றாகத் தேங்கிக் கிடந்த ஆச்சர்யம். ஆச்சர்யமே என்ன என்று அறியாத அந்தப் புலியையும் தொற்றியது.

வேங்கையைக் கூண்டில் அடைத்து அதற்குச் சாசுவதமான தன்னுடைய புளித்துப் போன மனிதத் தன்மையைத் தர வேண்டும் என்ற வெறி மனிதனை எப்படி எப்போது தொற்றியது?

அவனுடைய கையாலாகாத்தனம். Ah! தினகரன், What a great rediscovery. Slowly proceed with this though.

ஆம், மனிதனுடைய கையாலாகாததனம்தான் அவனைப் புலியைக் கூண்டில் அடைக்கத் தூண்டியது. இரும்பு ஞானம் முதலில் புலியைச் சிறைப்படுத்த அஹ்ஹஹா.. அந்தக் கையாலாகாதனம் அவனுடைய அறிவு பலப்பட அதிகரிக்கச் செய்தது. மனிதன் தன்னுடைய பெரிய இழப்பை நினைத்துப் பார்த்தான். இல்லை அவன் மலை உச்சியில் எங்கோ வானத்தில் கண்களைப் பதித்தவாறு நடந்து கொண்டிருந்தபோது அங்கு ஓர் சிறுத்தை போய்க் கொண்டிருந்தது. அப்போது கனத்த மலைப்பாம்பு மரத்தின் மேலிருந்து நழுவி அந்த மிருகத்தின் மேல் விழுந்தது. கனம் தீவிரமான வேகம் இடும் சண்டையைப் பார்த்த மனிதன் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அதன் கையில் அகப்பட்டால் என்ற நினைப்பு அவனை ஜுவைக் கற்பிதம் செய்ய வைத்தது.

ஆம். அந்தக் தருணமே அறிவை வளர்த்துக் கொண்ட மனிதன். தனக்கு உடனே சாட்சியாக நின்ற எல்லையைத் தன் கற்பனா சக்தி கொண்டு ஒரு விதமாக கனித்துவிட்டுப் புறப்பட்டான். உண்மை. குதிரையை அடக்கச் சென்றபோது அது அவன் பல்லை உடைத்தது. சாதாரண எருமை தன் கொம்பால் அவனைக் கிழித்துத் தள்ளியது. அதற்கு பிறகுதான் நினைத்தபடி சூழ்நிலையைக் கணிக்கும் வரை மனிதனுக்கு அவனுடைய செயலில் ஒரு வெறி. உத்வேகம். குதூகலம் எல்லாம் இருந்தது.

இருந்தும் அவனுக்குத் தன்னிடம் குடிகொண்ட மிருகவெறி தொல்லையாக இருந்தது. விலங்குகளை அடக்கி ஆண்ட பிறகு தன்னில் மிளிர்ந்த விலங்கினத்தைச் சரிசெய்ய நீச்சல் போட்டி வைத்தான். ஓடினான். ஆட்டங்களைக் கற்பித்தான். வெறியை பந்துகளை உருவாக்கி அதன் மேல் செலுத்தினான். ஆம். நெருப்புப் பந்தைப் பிடித்துக் கொண்டு காட்டை அழித்துக் கொண்டே நடந்தான். சில சமயங்களில் அவனுடைய நம்பிக்கை பொய்த்து விஷ விதைகளை தின்று செத்தான். சில விலங்குகளின் பாலைக் குடித்துத் தீரா நோய் கொண்டான். நோய்க்கு ஆறுதல் கொடுக்கப் பலவிதப் பச்சை இலைகளைக் கடித்து உமிழ்ந்தான். பிறகு அவித்துவிட்டால் வேக வைத்துவிட்டால் தீவிரங்கள் குறைந்து ருசி அதிகமாவதைக் கண்டு மிருகங்களை வேகவைத்து அவித்துத் தின்ன ஆரம்பித்தான். சேகரிக்கக் கற்றுக் கொண்டான்.

என்னுடைய பெண்டாட்டி என்றான். என்னுடைய கால்நடை என்றான். வேலி கட்டினான். எண்ணிக்கையை நாடினான். பிறகு அவனுக்கு எல்லாமே சொற்கமாக காட்சி அளித்தது. அல்லது வைத்துக் கொள்வோமே என்ற தளர்ந்த நிலையில் தன்னுடைய சாமர்த்தியத்தைத் தானே வியந்து கொள்ள ஆரம்பித்தான் மனிதன்.

மனிதன் சமரசம் பேசக் கிளம்பினான். காட்டை அழிப்பதில்லை என்றான். பெரிய மரங்களில் குடிசை கட்டிக் கீழே நடமாடும் புலிகளைப் பார்வையிட்டான். இங்கே வேட்டை ஆடக்கூடாது. என்ற போர்டைத் தொங்க விட்டான். நீர் குடிக்க வந்த யானையின் மேல் உயரே குடிசை கட்டி அதில் உட்கார்ந்து அவைகளில் முதுகில் வெள்ளை சாக்குக்கட்டியால் கோடு கிழித்து மகிழ்ந்தான். புலியை ஜுவில் அடைத்த தன் கீழ்மைத்தனம் அவனை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.

இரண்டு பக்கங்களிலும் பெரிய பாரம் அழுத்தி திராசு முனை வேகமாக ஆடுவது எந்தப் பக்கத்தில் சாயும் என்ற அகோர நிலையில் தன்னைக் கண்டார் தினகரன். சுமையாக ஏதோ அவரை அழுத்த நடந்து கொண்டிருந்தவர் நின்று இரண்டு கைகளையும் மேலே தூக்கி நான் கையாலாகாதவன் என்னை மன்னித்துவிடு. நான் நம்புகிறேன் என்றார். அப்போது காலை மணி மூன்றரை இருக்கும்.

காற்று கிழக்கில் உருவாகும் சாம்பல் ஒளியை ஏந்தி வந்தது.

அன்று அவர் ஆபீஸ் போக நேரமாகிவிட்டது. பாஸ் எரிந்து விழுந்தார். பதிலுக்கு ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்தார் தினகரன். அவ்வளவு வேலைகளையும் பகல் இரண்டு மணிக்குள் முடித்து அவரிடம் சமர்ப்பித்தார்.

You are not a man, You are devil என்றார் அவருடைய பாஸ் சிரித்துக் கொண்டே.

No, we are Angels. We have come here to be blessed என்றார் தினகரன்.

பாஸ் கண்களைப் பிதுக்கித் தோளை குலுக்கினார். சின்னவள் மனைவி வலுக்கட்டாயமாக அவரிடம் பேசிச் சிரித்துச் சினேகிதம் பண்ணிக்கொண்டு லகுனா பாடகரைத் தவிர தினகரன் யாருடனும் அதிகமாகப் பேசாதிருந்த காலங்கள் அது. அன்று ஆபீஸில் வேலை சற்று முன்னதாகவே முடிந்து விட்டதா? மற்றைய டிபார்ட்மெண்டுகளுக்குச் சென்று எல்லோரையும் குசலம் விசாரித்தார். செய்தது. காட்டை அழிப்பதில்லை. தெரிந்த முகங்களையெல்லாம் பார்த்து How do you do? என்று கேட்ட பிறகு பேசவும் செய்தார். பல பேர்களை முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுக்கவும் செய்தார். ஓர் இளைஞன் அவர் முதுகில் தட்டிக் கொடுக்கும் அவருடைய அப்பாத்தனம் பிடிக்காததுபோல் நடந்து கொண்டான். மனப்பூர்வமாக ‘ஐ ஆம் ஸாரி’என்றார். வார்த்தையின் கனத்தை உணர்ந்தார்.

அன்று வெகுநேரம் எதையோ கான்டம்பிளேட் பண்ணிய நிலையில் அவருடைய தசை அசைந்து கொண்டிருந்தது. உள்ளுக்குள் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கிறது. எப்படிச் சொல்வது. இலை அசைவது கூட அவருக்கு அன்று தீவிர நெளிவு சுளிவு எல்லாம் சேர்ந்து தன்னுடைய நிலையை அப்பட்டமாக உணர்த்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.

பூக்கள் சாதாரண நிலைகளை விட நிறம் அதிகமாகத் தெரிந்தது. வானம் என்றும் போல் அல்லாமல் கொஞ்சம் கீழே இறங்கியிருப்பது போல் பட்டது. ஒளிரும் நட்சத்திரங்கள் முழுமை அடைந்து தனித்தனி உருண்ட ஜிகினா தொங்கட்டான் போல் காட்சி அளித்தன. பொதுவாக மனம் ஒப்பிடுதலை ஒதுக்க யத்தனித்தது. இருந்தும் இரண்டு நட்சத்திரங்களின் இடைவெளியைக் கண்கள் ஊர்ஜிதமான கோட்டை மனம் நமஸ்கரித்தது.

அன்று இரவு அவர் மனைவி இப்படி என்ன திடீர்னு பஞ்சுபோல் ஆகிவிட்டீர்கள் என்றாள். பரபரப்பில் அவரில் கனத்தை வரவழைப்பது போன்று இறுக்கினாள். அப்போது அவர் முகத்தின் முன் ஏதேதோ மின்னல்கள் வெட்டின. நா குழறியது. அப்படியே மூர்ச்சித்து விழுந்தார். நல்ல காலம் அவரை ஒருவிதமாகப் புரிந்து கொண்டிருந்த மனைவி பயந்து போய் ஊரைக் கூட்டாமலிருந்தாள். சுமார் இரண்டரை மணிக்கு அவருக்கு நினைவு திரும்பியது. ஓர் ஆப்பிள், இரண்டு வாழைப் பழங்கள், ஒரு மைசூர்ப்பாகுத்துண்டும் எல்லாம் சாப்பிட்டார். அன்புடன் அவளை அணைத்துக் கொண்டார். உடம்பு சாதாரண நிலையில் இருப்பதை அவள் பார்த்தாள். உடம்பை கொஞ்சம் பிடித்து விடு என்றார் அவர். அவள் கைபட்ட இடமெல்லாம் அவர் உடம்பு மடக் மடக்கென்று சொடுக்கிக் கொண்டது. தலைக்குத் தடவும் காஸ்டர் ஆயிலை நினைத்துக் கொண்டவள் போல் எழுந்து சென்று எடுத்துக் கொண்டு வந்து பையப் பையத் தடவி உருவி விட்டாள். உடம்பு சூடு கண்டது. பரக்கப் பரக்கத் தேய்த்தாள். அவளுடைய சூடான கண்ணீர் அவர் உடம்பில் விழுந்தது. பிறகு அவர் அவளைத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டார். எது சொன்னாலும் மிகை ஆகாது. அவரை மாற்றுவது என்னுடைய பொறுப்பு என்று நம்பினாள். இது என்னமோ இந்த ஜென்மத்தில் இந்த ஜென்மத்தில் என்ன எந்த ஜென்மத்திலும் அவருடைய அந்த நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அது எமக்கு வேண்டவும் வேண்டாம். நான் சதா அன்னையாகப் பிறந்தவள். சாகும் வரையில் கூட அதைத் தேடும் இந்த உருவங்களுக்கு அதைக் கொடுத்தும், அவர்களை அதிலிருந்து மீட்கும் பராசக்தி நான்.

நேற்று மத்தியானம் நடந்த என்னுடைய பிரார்த்தனை தானே. இவருடைய உடம்பை இப்படி லேசாக்கியிருக்கிறது?

ஆகாசமாக இரு தொடைகளையும் விரித்துப் பெரிய பள்ளத்தை உருவாக்கி அவரைத் தன்னுள் அழைத்தாள். இவருடைய கால் குமாரினுடைய டென்னிஸ் பந்ததைத் தடவி உருட்டிவிட்டது. அது ரூம் மூலையில் இருக்கும் மற்றொரு பந்தோடு சென்று அடித்து ஒட்டிக் கொண்டது. மறுநாள் காலையில் இரண்டு பந்துகள் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த தினகரன். Eight is a symbol! என்று முனகிக் கொண்டார். தான் முந்தின இரவு மனைவி மேல் படுத்து வரைந்த எட்டுக்களை நினைவு கூர்ந்தார். பிறகு அவர் வரைய ஆரம்பித்தார். எட்டுக்கள். முதல் எட்டு இரண்டு பந்துகள் இணைந்தது போல் அடுக்கடுக்காக மலர்ந்து இணைந்தது.

அந்த இரவுக்குப் பிறகு எதைக் கொடுத்து மீண்டும் அவரை முழுவதும் அடையலாம் என்று நம்பி ஜுவில் அந்த மரத்திற்குப் பின்னால் நின்று பிரார்த்தித்தாளோ அதே கணக்கு விகிதம் அவரை எங்கோ திருப்ப முடியாத ஓர் இடத்தில் விட்டுவிட்டதை உணர்ந்தாள். அது அவள் சுமக்க வேண்டிய சிலுவை ஆயிற்று. பராசக்தி அழுதாள். இருந்தும் அவள் நம்பினாள். அவரை ஓர் குழந்தையைப் போல் பராமரிக்க ஆரம்பித்தாள். அவரிடம் தங்கிய மற்ற நேரத்திற்காகக் காத்திருந்தாள். விட்டுப் பிடித்தாள். ஒளி நிழல் துரத்துவதை கண்ணாமூச்சி விளையாடுவதைப் பயின்றாள்.

அருவமாகி அண்டங்களில் சிதறிய பூமி என்ற கோளத்தில்கூட நிலங்களில் மனிதன் நினைத்துப் பார்க்க முடியாத பெரிய பள்ளங்களை உருவாக்கி அதில் தாதுக்களின் அமிலங்களின் சக்தி கொண்ட தண்ணீரைப் பசையுடன் சேராகி ஓர் விதைக்காக காத்திருந்தாள். அங்கு யாரும் மனிதர்கள் தென்படவில்லை. அன்னை தபஸ் இருந்தாள். ஏதோ ஓர் பறவை எங்கோ பறந்து கொண்டிருக்கும் போது அதனுடைய அலகிலிருந்த விதை பள்ளத்தில் பொளக்கென்று விழுந்தது. அன்னை வெண்பற்கள் தெரியச் சிரித்தாள். இப்போது இருபது மைல்களுக்கு அப்பால் சமன பூமியில் தெறித்த கிராமங்களில் அந்த மரத்தின் உச்சி தெரிகிறது. கிராமத்து ஜனங்களை வருடத்திற்கு ஒருமுறை அந்த மரத்தைக் கொண்டாட வருகின்றனர். பிறந்த முதல் குழந்தையை அதனுடைய வேர்ப்பொந்துகளில் கிடத்தி எடுக்கின்றனர்.

இந்த இரவுக்குப் பிறகு தினகரனுடைய மனைவி மீண்டும் காலை நேரத்தில் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

அந்த நாட்களில் தினகரனை வாட்டிக் கொண்டிருந்த இன்னொரு பிரச்சனையும் விடுபட்டது. அப்போது அவருடைய மனைவியினுடைய உடம்பு வெளுக்க ஆரம்பித்திருந்தது. மார்பகம் இரண்டு மடங்காகப் பெருத்திருந்தது. சிறிது நேரத்தில் அவளுடைய மடியில் படுத்துத் தூங்கிவிட்டார். அப்போது அவள் சாதாரண நிலையில் இருந்ததால் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. தன்னிடம் ரொம்பவும் எதிர்ப்பார்க்கப் படுவதாக நினைத்தாள். சின்னவள் சொன்னதுபோல் ஆண் பெண் முரண்பாடுகளின் அதிதீவிரமா? அவர் தன்னுடைய பெற்றோர்களைப் பற்றி அதிகமாக இதுவரையில் அதிகமாக ஒன்றும் சொன்னதில்லை. அந்தப் பிடிப்பும் பிணைப்பும் திகட்டும் போலிருந்தது. அகஸ்த்மாத்தாகத் திரும்பிய பார்வை தூங்கிக் கொண்டிருந்த மகன் குமார் மேல் சென்று லயித்தது. எவளுக்கு அதிர்ஷ்டமோ? என்று சொல்லிக் கொண்டாள்.

அன்று இரவு மீண்டும் தினகரனுக்குக் கனவு வந்தது. எங்கே பார் மாமிசப் போர்கள். விழிப்பு நேரங்களில் ஒரே ஒரு தரம். அவர் ஆட்டின் அலறலைக் கேட்டிருக்கிறார். வெட்டப்படப் போகும் கோழியின் சொக்கரிப்பையும்தான். அன்று அந்தக் கனவின் மாமிச மலைபோன்ற பெருத்துப் படர்ந்த மனிதன் அழுதுகொண்டே அது என்ன? ஆம் கசாப்புக்கடை அங்கே அழுதகொண்டே மனிதன் ஆட்டை வெட்டுகிறான். பிறகு செத்துப் போன ஆடுகளெல்லாம் உயிர்த்து எழுந்து மனிதர்களைக் கொன்று தின்ன ஆரம்பிக்கின்றன. மனிதன் சாப்பிட்ட மாமிசம் அவனுடைய வயிற்றிலிருந்து கிழித்து பீறிட்டுக் கொண்டு வெளியே வந்து விழுந்து ஒரு சின்ன மாமிசப் பாகமாக உயிர்த் துடிப்புடன் துள்ளுகிறது. அந்த அளவுக்கு உயிர்த்து மனிதனைத் துரத்துகின்றன. ப வடிவத்தில் பருத்த ஒரு மாமிசப் பத்தை பறந்து சென்று மனிதனின் உடம்பில் பக்கென்று ஒட்டிக் கொள்கிறது. அப்படி ஒட்டிக் கொண்டு அவனுடைய அவ்வளவு ரத்தத்தையும் உறிஞ்சி அவன் கீழே விழுந்த பிறகு அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் பொத பொதத்துப் பறக்கிறது.

மனிதன் ஓடப் பார்க்கிறான். ஒளிந்து கொள்ளப் பார்க்கிறான். முடிவதில்லை. எல்லோரையும் பிடித்து ஒருவர் பாக்கி இல்லாமல் விலங்கினம் துவம்சம் செய்கிறது. கடைசியாக மாமிச பர்வதம் போன்ற மனிதனிடம் விலங்குகள் வருகின்றன. அவன் ஓடவில்லை. ஒளியவில்லை. மனமுவந்து தன்னை விலங்குகளிடம் அர்ப்பணிக்கிறான்.I which the meat is good என்று ஆங்கிலத்தில் பேசுகிறான். பிறகு கனவு கலைந்து விட்டது. இதைப் பற்றி ரொம்ப நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தார் தினகரன்.

பிறகு தன் டயரியில் ஒருநாள் இவ்வாறு எழுதினார். நான் அழகைத் தரிசித்தவனானேன். எதுவுமே வேண்டாம் என்றோ – இல்லை எது கொடுத்தாலும் அது எவ்வளவு அல்பமாக இருந்தால்கூட மனப்பூர்வமாக எது கொடுத்தாலும் போதுமென்று எவன் நினைக்கிறானோ அங்கு அவனுக்கு அழகு தபஸ் செய்ய ஆரம்பிக்கிறது. தன்னைச் சதா வருத்திக் கொண்டு ஒரு தேடல் மயமாகி தனக்குப் பிடித்தவனைச் சந்தோஷப்படுத்த ஆசை கொள்கிறது. முயற்சி செய்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *