கோடை மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 8,783 
 

வெயில் விளையாடிக் கொண்டிருந்தது…

“கல்யாணத்தைக் செஞ்சு பார்…. வீட்டைக் கட்டிப் பார்….” என்று எங்கோ… எப்போதோ யாரோ கூறியது ஞாபகத்தில்… நீர் சொட்டி வியர்க்குள் ஆவியானது…

அவன்… பின்னால் மாட்டிய பேக்கோடு தலையில் கவிழ்த்திய கவசத்தோடு… கழுத்து நசநசக்க…. முதுகில்.. சட்டை ஒட்ட… இரு சக்கர வாகனத்தில்… நகரத்தின்… வாசல் கடந்து…. வெகு தூரத்தில் சென்று கொண்டிருந்தான்….

“இங்க தான…..சொன்னாங்க…”- என்று முணங்கிய மூளைக்குள்…. புழுங்கி தவித்த.. சூட்டை அணைக்கவே முடியாத தார் சாலையில்…. சுருண்டு கிடக்கும்….மொட்டை மரம் ஒன்றின் எலும்புக் கூட்டின் நிழலில்… கொஞ்சம்…மறைந்து கொண்டு அலைபேசியில்.. மீண்டும் அழைத்தான்…

ஒரு வகையில் சொந்தம்… என்ன சொந்தம் எப்படி சொந்தம்.. தூரமா பக்கமா…..?…என்றால்….. இன்னொரு கதை எழுத வேண்டும்.. ஆக அவர்கள் சொந்தம்…..என்றமட்டும்.. தொடர… ரிங்… தன்னை மெல்ல சுற்றி சுற்றி நுழைத்துக் கொண்டு காதை வேகமாக இழுத்து வந்து அவன் காதுபக்கம்… படர விட்டது…

“ஆமாங்க…. இங்க தான்…ம்ம்ம்.. ஒரு பெரிய புளிய மரம் இருக்கு…”

“ஆமாமா.. ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு….. அதுக்கு முன்னாலதான் நிக்கறேன்…”

மறுமுனை அவனின் காதை கொத்தி எடுத்துக் கொண்டது…

“பெட்ரோல் பங்குக்கு நேரா உள்ள ஒரு ரோடு வருதா…..அதுல ..வாங்க. அப்டியே ஒரு அரை கிலோ மீட்டர் வந்தா….. அங்க ஒரு மூணு ரோடு ஜாய்ண்ட் ஆகும்…. அதுல லெப்ட்ல போற ரோட்ல வாங்க….. அப்டியே…..ஒரு ரெண்டு நிமிஷம் வந்தா.. அந்த ரோடு ஒரு சந்து மாதிரி ஒரு சின்ன வழில போய் ரெண்டா பிரியும்.. அதுல ரைட்ல வர்ற ரோட்ல.. வந்தா.. ஒரு பேக்கரி இருக்கும்…அந்த பேக்கரி தொட்ட மாதிரி… ஒரு மண் ரோடு போகும்.. அதுல வந்தா… ரெண்டு… தென்னை மரம் இருக்கும்.. அதுக்கு பின்னால… ஒரு கோயில் இருக்கும்.. அந்த கோயிலுக்கு பின்னால வர்ற ரோட்ல .வந்தீங்கன்னா.. நம்ம வீடு.. பெரிய கேட் போட்ருக்கும்.. மூணு நாய் இருக்கும்…”

அவர்கள் அலைபேசியை வைத்த பின்னும்….வழிகள் அவன் காதில் புது புது வாகனங்களை சர் சர்ரென இயக்கிக் கொண்டிருந்தது. உச்சி வெயில்.. பசிவேற… இந்த வாரம் முழுக்க அவன் தன தங்கை கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க அழைந்து கொண்டிக்கிறான்…. அதில் ஒரு பகுதி தான் இன்றைய இந்த நாடகம். மேடை முழுக்க வியர்வைக் கடல்.. களைப்பின் தவிப்பு… அவன், வழிகளை மனதில் ஓட்டிக் கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்….. உள்ளுக்குள்….வந்த பெரும் கோபம் இன்னதென தெரியாத ஒருவகை ஆற்றாமைக்குள் நிரம்பி வழிந்தது…..

கண்ணை திறந்து விட்டே காட்டில் விட்ட கதை போல புதிய பல மொழியை… மனதுக்குள் எழுதிக் கொண்டே சென்றான்…

2 மணி நேரத்துக்கு பின்… தொப்பலாக நனைந்தபடியே வீட்டுக் கதவைத் தட்டினான். நாய்கள் மூன்றும்….திருடனைக் கண்டது போல பயங்கரமாக குரைத்தன. அந்த சொந்தக்கார அம்மா மெல்ல தலையை வெளியே எட்டிப் பார்த்தது…

பத்திரிக்கை கொடுத்த அடுத்த பத்து நிமிடத்துக்கு பின்…

அலைபேசியில்….. மறுமுனை பேசியது…

“சொல்லு மச்சான்…. கேள்விப்பட்டேன்….”-நண்பன் ஒருவன் பேசினான்…

“அதான்டா… இப்போ… வீரபாண்டில இருக்கேன்… வீட்ல இருக்கியா… பத்திரிக்கை தரனும்…..” என்றான் அவன். குரல்..சக்தியே இல்லாமல்.. துவண்டிருந்தது…

“பத்திரிக்கை தர இவ்ளோ தூரம் வரியா…..போடா….. போய் வேற வேலைய பாரு….. கல்யாணம் என்னைக்கு….. எங்கன்னு மட்டும் எஸ் எம் எஸ் பண்ணு….. போதும்…நான் வந்துருவேன்…. டேக் கேர்டா….. வெயில்…பயங்கரமா இருக்கு….”

அலைபேசியை வைத்த பின்னும் அவனின் நண்பனின் கை அவன் தோளில் அணைந்தே கிடந்தது…போல உணர்ந்தான்…… மூளை எங்கும்.. குலு குலுவென.. வீசிக் கொண்டிருந்தது… நட்பின் சாமரம்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *