கொட்டு மேளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,014 
 

பரதேசிக் கோலம் படி தாண்டிவிட்டது. அப்புறம் அவளுக்குத் தாளவில்லை. சின்னம்மாவைக் கூப்பிட்டுச் சாய்வு நாற்காலியை எடுத்துவரச் சொன்னாள்.

“என்னம்மா பண்ணப்போறே?”

“கீழே வரப்போறேன்; மங்களத்தையும் கூப்பிடு. பக்கத் திலே ரெண்டுபேரும் வந்து என்னைத் தாங்கிக்கோங்கோ.”

திறந்த வாய்மேல் சின்னம்மா இருகைகளையும் பொத்திக் கொண்டாள்.

“என்னம்மா சொல்றே? ஐயா எங்களை உசிரோடெ வெப்பாரா?”

“அவன் கிடக்காண்டி இருந்திருந்து இன்னிக்கும் மாடியிலே இருப்பேனா? என்னை இதிலே வெச்சு மெதுவாக் கீழே இறக்கி அவாள்ளாம் வரத்துக்கு முன்னாலே கூடத்து உள்ளே கொண்டு போயிடுங்கோ. இரு இரு சின்னம்மா, மயிரைக் கொஞ்சம் கோதி முடிஞ்சுடு, பீரோவைத் திற. அந்தக் கிளிப்பச்சையை எடு. அதுதான்-”

“பட்டுப் புடைவையாம்மா?

“ஏண்டி? என்னைப் பாத்தா உடுத்திக்கிறமாதிரி இல்லையா? இந்தக் கல்யாணத்துக்-கில்லாமெ எப்போ உடுத்திக்கிறதாம்? சரி சரி, நான் ரெடி மேளம் நெருங்கறாப் போலயிருக்கே. ஐயர் உங்களைத் திட்டாமெ பாத்துக்கறேன். என்னைக் கீழே சேத்துடுங்கோ.”

உள்ளங்கையில் ஏந்தினாற் போல்தான் அவர்கள் அவளைக் கீழே கொண்டுபோனாலும், அந்தப் பிரயாசை கூட அவளுக்குத் தாங்கவில்லை. நரம்புகள் மார்பில் சுருட்டி அடைத்தன. மூச்சு திணறிற்று. நல்ல வேளையாய்ப் பெண்கள் கூட்டமெல்லாம் வாசலில் நெரிந்திருந்தது. கூடத்து அறையில் சேர்ந்துவிட்டோம் என்று நிச்சயப்பட்டதும் ஜானாவுக்கு திடீரெனக் கண்கள் இருட்டின.

“சின்னா, ஒரு முழுங்கு தீர்த்தம் கொண்டு வாயேன்!-”

மேளச் சப்தம் நெருங்கிக்கொண்டே வந்தது. மேளநாதம் துாரத்திலிருந்து நெருங்கிக்கொண்டே வந்து அவளுள் பொழிந்து ஒரு பரபரப்பைப் பரப்பியது. அவள் விழுங்கியது ஜலமா, அல்லது அந்த நாதத்தின் விறுவிறுப்பா என்று நிச்சயமாய்த் தெரியவில்லை. உடல் பரபரத்தது. அந்த இன்ப வேதனை தாங்க முடியாது நாற்காலியை விட்டு எழுந்து அங்குமிங்குமாய் எங்கேனும் ஒடலாமா என்று தோன்றிற்று. ஆனால் அவளை, அவள் உடல் நாற்காலியோடுதான் அறைந்து வைத்தது. மண்டையில் போய் அந்த வேகம் அழுத்துகையில் அவளுக்குப் பட்டது. இதைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுதாரித்து சுவாதீனத்துக்குக் கொண்டுவர வேண்டுமே யொழிய, அதன்படி விட்டால் அதோ கதிதான்.

இந்தப் போராட்டத்தில் வாசலில் பச்சை சுற்றலும் ஊஞ்சலும் எப்பொழுது முடிந்தன என்று தெரியவில்லை. கல்யாணப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு அவளுடைய ராமதுரை கம்பீரமாய்க் கூடத்துள் நுழைவதைக் கண்டாள். உற்சவருக்கு அலங்காரம் செய்ததுபோல், பஞ்சக் கச்சத்தில் பட்டை ஜரிகை அருவிபோல் நெளிந்து மறைந்தது. மார்பில் யோக வேஷ்டி

மார்பில் கைகளை ஜான அழுத்திக்கொண்டாள். “இரு இரு உசிரே கொஞ்சம் பொறு அதுக்குள் அவசரப் பட்டுடாதே-”

இத்தனை கூட்டத்திலும், அதுவும் ஒருக்களித்த கதவின் பின்னாலிருக்கும் ஜானாவை ராமதுரை எப்படியோ பார்த்து விட்டான். மை தீட்டிய விழிகளிலிருந்து அவன் முறுவலின் ஒளியும் கலந்த அடையாளத்தின் சுடர் அவள் மேல் ஆடுகை யில், அவள் கண்கள் நிறைந்து நீந்த ஆரம்பித்துவிட்டன.

“ஜானா, எப்படிக் கீழே வந்தாய்?”

அப்போதுதான் தன்னருகில் நிற்கும் சந்துருவைக் கண்டாள். அவள் கன்னங்களில் கண்ணிர் அடக்க முடியாமல் கரகரவென வழிந்தது. சிரித்துக்கொண்டே ரேழிப் புறம் ஒரு கையைச் சுட்டிக்காட்டினாள். சுண்ணாம்பாய் வெளுத்திருந்த முகத்தில், கன்னங்களில் மாத்திரம் செந்திட்டுக்களிரண்டு இரு சக்கரங்களாய்ச் சுழன்றன. அவள் சுட்டிய வழியே சந்துரு நோக்கினான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“மேளத்தைக் கவனி!-” என்றாள்.

நாயனத்தின் வாசிப்பைவிட மேளத்தின் சப்தம்தான் தூக்கி நின்றது. யாரோ சின்னப்பயல், முழு உற்சாகத்துடன் வெளுத்து வாங்குகிறான். வேளையின் சந்தோஷமே அவன் மேளத்திலிருந்து குண்டு குண்டு மணிகளாய்த் தெறித்து, கலியாணக்கூடம் முழுவதும் சிதறி ஓடி உருண்டு, பந்துகள் போல் எகிறி எழும்பியது. மாவு கட்டிய விரல்கள் தோல்மேல் துடித்துத் துழாவி மறுபடியும் துடித்து அக்குண்டு குண்டுமணி களை எழுப்பின. மேளத்துள் சலங்கை குலுங்கி அதிர்ந்தது.

இந்தச் சப்தத்திற்குத்தான் சந்துரு இருபத்திரண்டு வருடங்களாய்க் காத்திருந்தானோ என்னவோ, ஜானா அறியாள், ஆனால் அவள் நிச்சயமாய்க் காத்திருந்தாள். புருஷாளுக்கு இதில் எல்லாம் ஆசை ஒடுமோ ஓடாதோ? ஆனால் சந்துருவுக்குக் கலியாணம் ஆன பிறகு கொட்டு மேளத்தின் சப்தம் இன்றுதான் வீட்டில் கேட்கிறது. இதற்கு முன்னால் ராமதுரையின் பூணுால்கூட ஏதோ பிரார்த்தனை யென்று எங்கோ, சுவாமி கூட இருக்க முடியாத அவ்வளவு மூலை க்ஷேத்திரத்தில் நடந்தது. அங்கு அவள் போக முடியவில்லை.

எப்படிப்பட்ட கிழமாயிருந்தாலும் அதற்குக்கூட இத்தகைய சமயங்களில் தனக்கும் இம்மாதிரி நடந்ததெல்லாம் நினைவு வருமோல்லியோ!

# # #

ராமதுரையின் பக்கத்தில் நிற்கும் மணப்பெண்ணின் இடத்தில் தானும் இப்படியே தலை குனிந்து நின்றதை ஜானா நிறுத்திப் பார்த்துக்கொண்டாள். அவள் பக்கத்தில் அவள் கணவன் நின்றுகொண்டிருந்தான்.

ஜானாவின் அழகுக்கு அவள் கணவன் உறை போடக் காணான் என்று அப்போதே எல்லாரும் சொல்லிக் கொண்டார்கள்.

ஜானாவின் தாயாரிடம் வந்தவர் போனவர் எல்லாம் ஜாடையாகவும் வெளிப்படையாகவும் கலியாணத்துக்கு முன்னாலும் பின்னாலும் முறையிட்டுக்கொண்டார்கள்.

“ஏண்டி இத்தனை நாள் காத்திருந்தேளே. இருந்திருந்து இந்த இடந்தான் உங்களுக்கு அகப்பட்டதா?”

“எங்களுக்கு உன் பொண்ணை முன்னே பின்னே பார்க்காட்டாலும் பரவாயில்லை; தெரியாட்டாலும் பரவாயில்லை. எங்கள் கண்ணெதிரே பாவாடை கட்டி, சித்தாடை கட்டி, புடவை கட்டற வரைக்கும் வளந்துட்டு இப்போ எங்கள் கண்ணிலே மண்ணைப் போட்டுட முடியுமா?”

“இன்னும் எத்தனை நாள் மாமி காத்திண்டிருக்கிறது? இப்போ இப்படிச் சொல்றவா நீங்களே, இன்னுங் கொஞ்ச நாள் பொண்ணை வீட்டிலே வெச்சிண்டிருந்தோமானால், வேறே தினுசாப் பேசுவேள். நாங்கள் இப்போ இருக்கிற நிலையிலே இதுக்கு மேலே வீங்கறத்துக்கில்லை. இப்போ படற கடனையே சந்துரு தலையெடுத்துத்தான் அடைக்கணும். இத்தோடே போகல்லையே- அவனுக்கு இன்னும் ரெண்டு தங்கை இருக்காளே-”

“இருந்தாலும்-”

“அதெல்லாம் என்னத்துக்கு மாமி? ஆண் பிள்ளைக்கு அழகென்ன வேண்டியிருக்கு? எங்கேயாவது மானமாய் வயத்தெ அலம்பிண்டு தீர்க்காயுசா இருந்தாப் போறும்-”

“தீர்க்காசுயாய்” என்ற பதத்தொடர் பட்டவுடனே ஜானாவின் மனக்கண்ணெதிர் காட்சி மாறியது

–அப்பொழுதுதான் சேவல் கூவி ஒய்ந்தது. வாசற் கதவை யாரோ படபடவெனத் தட்டுகிறார்கள். ஏற்கெனவே ஏதோ வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கண் விழித்திருக்கும் அவள் ஒடிப்போய்த் திறக்கிறாள். வாசலில் சைக்கிளில் ஒருவன் கையில் ஒரு சீட்டைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான்.

“இது 23ஆம் நெம்பரா? ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். மெட்டர்னிடி வார்டுலே, 13ஆம் நெம்பர் பெட் பேஷண்டு தவறிட்டுது, அம்மா–”

“ஐயோ ”

கல்யாணம் நடந்து மூன்று வருஷங்கள் முழுக்க ஆகவில்லை. வெள்ளிக்கிழமையாய்ப் பார்த்து, காலன் அவள் கழுத்துக் கயிற்றைப் பிடுங்கிக்கொண்டு போய்விட்டான்.

நல்லவேளையாக, சந்துருவும் அம்மாவும் அந்தச் சமயத்தில் அவள் பக்கத்திலிருந்தார்கள். இப்பொழுது கூட நினைவு வருகிறது; தனக்கு வந்திருக்கும் கஷ்டத்தின் முழு மகத்துவமும் புரியாமலே அலறுகையில், அவள் தலையைச் சந்துரு தன் மடியில் வைத்துக்கொண்டு “ஜானா, நீ இனி எனக்குத் தம்பி. எனக்குத் தம்பியில்லை. எனக்கு நீ– உனக்கு நான்-”

ஜானா தன் அண்ணனைக் கடைக் கண்ணால் கவனித்தாள். அவனும் யோசனையில் ஆழ்ந்துதான் நின்று கொண்டிருந்தான். ஒற்றை நாடி தேகம்; அம்புபோல் நிமிர்ந்த உடலில் வெள்ளை ஜிப்பா நீண்டு தொங்கிற்று: முகத்தின் செந்தாழைச் சிவப்பு இன்னும் இம்மிகூடக் குறைய வில்லை. கரடி மயிரால் வளைத்த புருவங்கள் உள் வலியில் நெரிந்திருந்தன. ஆனால் அவன் தலைமயிரைப் பார்க்கையில் தான் ஜானாவுக்கு மனம் பெருந் தாங்கலாயிருந்தது. மயிர் தும்பையாய் நரைத்திருந்தது. அப்படி நரைக்க அவனுக்கு இன்னும் வயதாகவில்லை.

சந்துரு முகத்தில் இன்னும் அதன் இயற்கை அழகு குன்றவில்லை. ஆனால் அதில் முந்நூறு வருடங்களின் மூப்பு தேங்கியிருந்தது. இந்த நரை புது நரையில்லை. இருபது வருடங்களுக்கு முன்னாலேயே கண்டுவிட்டது. சாயம் அடிப்பதுபோல் நெற்றிப் பொட்டில் கரைபோல் ஆரம்பித்துத் திடீரென்று தலை முழுவதும் படர்ந்துவிட்டது. சீவிவிட்டிருந்த மயிர் வெண்பட்டாய்ப் பளபளத்தது. என்னதான் அவளுக்கு அவன் மேலிருந்த பாசம் கண்ணை மறைத்தாலும், அவனுக்கு இப்படி நரைக்க இன்னும் வயதாகவில்லை.

சந்துருவுக்கு மயிர் நரைத்ததிலிருந்து ஜானா மற்றெல்லார் மயிரையும் கவனிப்பாள். அதுவே ஒரு கெட்ட பழக்கமாய்விடும் போலிருந்தது. ராமதுரைக்கு ஒரே சுருட்டை சீவினால் வங்கி வங்கியாய் அடுக்கும். ஆனால் பாதிப் பொழுது வாரவும் மாட்டான். முழுக் கறுப்பு இல்லை; சிறு செம்பட்டை பூத்த மோதிரக் குவியல்.

ஜானாவுக்கு மயிர் வெகு முரடு அடர்த்தி. அதுவும் தனக்கு இந்தக் கதி நேர்ந்தபின் பின்னுவதையே விட்டு விட்டாள். மயிரின் முடிச்சு ஒரு சிறு இளநீர் பருமனுக்குக் கழுத்தில் கனத்துக்கொண்டிருக்கும். ஆனால் நரைமயிர்கூடக் கிடையாது.

“-உங்களை சாஸ்திரிகள் கூப்பிடறார்.”

அவளுடைய மன்னி நாதாங்கியைப் பிடித்துக்கொண்டு வாசற்படிக்கு வெளியே நின்றாள். சிந்தனையின் அரைப் போதையில் ஜானா கெளரியைப் பார்த்தாள். அவளுக்குக் கூந்தல் குட்டை. ஆனால் நடு வகிட்டிலிருந்து சீவப்பெற்று, ஒரு மயிர்கூடப் பிரியாது பின்னுக்குப் போகையில் அதன் ஒழுங்கும், பளபளப்பும், முன்னடர்த்தியும் பறவையின் ஒடுங்கிய சிறகுகளை நினைவு மூட்டின.

“நாழியாயிடுத்தாம்-”

சந்துரு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றான். கூட்டத்தில் அவன் கலக்கையில் அவன் முதுகைப் பார்த்துக்கொண்டே கெளரி நின்றாள்.

“கெளரி, எங்கேடி போயிட்டே? பருப்புத் தேங்காயை எங்கே வெச்சுட்டே?” என்று ஒரு குரல் கத்திற்று. கெளரி அவ்விடம் விட்டகன்றாள். அவள் முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. அவள் முகமே ஒரு முகமூடி.

இப்பொழுது தன் பிள்ளைக்குக் கல்யாணம் நடக்கையில் கெளரிக்கும் தன் மணத்தின் நினைவு வருமோல்லியோ? எப்படியோ தன் கல்யாணத்தை யாருமே எப்பொழுதுமே மறக்காதபடி அவள் பண்ணிக்கொண்டு விட்டாள்.

சந்துருவுக்குக் கல்யாணம் நடந்தபோது அது குடும்பத் திற்கே ஒரு முக்கியமான சம்பவம். மற்றத் தங்கைகளையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டு, அந்தக் கடனையும் அடைத்துவிட்டுத் தலை நிமிர்கையில் சந்துருவுக்கு முப்பது வயதாகிவிட்டது. அதற்குமுன் எந்தக் கட்டிலும் பட மறுத்து விட்டான். ஆனால் அப்புறமும் தன் மணத்தைத் தள்ளிப் போட நியாயமில்லை. தகப்பனார் காலமாகிவிட்டார்; தாய்க்குத் தள்ளாமை, ஜானா பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண் டிருந்தாள். ஆகையால் கிழவியைக் குந்த வைத்துச் சாதம் போடவும், வீட்டுக்கு வந்தவர்களுக்குக் குங்குமச் சிமிழ் நீட்டவும் மருமகள் வர நாளாகிவிட்டது. வேளையும் வந்துவிட்டது.

மன்னி கழுத்தில் மூன்றாம் முடிச்சைப் போடா விட்டாலும், மன்னி வந்தாள் என்ற சந்தோஷத்திலேயே ஜானா குழந்தையாகிவிட்டாள். அருமைச் சந்துருவுக்கு ஒரு அகமுடையாள்.

ராமதுரை இப்போது ஆயிரம் செல்லமாயிருந்தாலும் எப்படியும் சந்துருவின் அருமை ஆகமாட்டான். இதை ஜானா தனக்கே ஒப்புக்கொள்ளுகையில் அவளுக்குச் சந்துருவின் தனி முக்கியத்தில் அதுயைகூட உண்டாயிற்று. ஏனெனில் சந்துரு திலோமம் செய்து, குலதெய்வத்தின் கோவில் வாசற்படியை நெய்யால் மெழுகி, ராமேசுவரம் போய்க் கடுந்தவங் கிடந்து, ஒரே பிள்ளையாய், முதல் இதயபூர்வத்தில் ஜனித்தவன். இந்த முக்கியம், அவன் அவர்கள் கண்ணெதிரில் வளருகையில் அவன் இயக்கும் ஒவ்வொரு செயலிலும், அவனில் இயங்கும் ஒவ்வொரு உணர்ச்சியிலும் தன்னைத் தெரிவித்துக்கொண்டேயிருந்தது. ஒருவேளை நாளாக ஆக, அவனே அதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, அது போகப் போகப் பெருகிக் கொண்டேதானிருந்தது.

சந்துருவுக்கு நேர்ந்த மாதிரி குடும்பப் பொறுப்புகளும் பாரங்களும் ஒருவேளை இன்னும் கொடியவையாய்க் கூட வெகுபேர் சிறுவயதிலேயே வகித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாயகத்தன்மை- விஸ்தரிக்க இயலாத இந்த ஒளிஎல்லோருக்குமே கிட்டுவதில்லை. அதாவது, சூரியனைச் சுற்றி மற்றக் கிரகங்கள் சுற்றுகிற மாதிரி- கொதிக்கும் பாலிலிருந்து மணம் கமழ்கிற மாதிரி. அது பிறர் சூட்டுவதா, அல்லது பிறவி யுடனேயே பிறந்ததா? சில சாயல்களில் சந்துருவைப் பார்க்கையிலோ, கேட்கையிலோ, பிறர் அவனைப் பற்றிச் சொல்வதைச் சிந்திக்கையிலோ அவளுக்கு அடிக்கடி கோயிற் சிலையைத்தான் அவன் நினைவு மூட்டினான். அதன் லக்ஷணங்கள் எவ்வளவு நுணுக்கமாய்ச் செதுக்கியிருப்பினும், அதன் புன்னகை எவ்வளவுதான் இன்பமாயிருந்தாலும், அது உருவாகி ஆதிக்கல்லின் உரத்தையும் உக்கிரத்தையும் தாங்கிக் கொண்டுதான் நிற்கும்.

ஆம். சந்துரு ஒரு உக்கிரப் பொருள். அவன் உணர்ச்சிகள் இரண்டுங் கெட்டான் உணர்ச்சிகளல்ல. நல்லவையோ கெட்டவையோ, கண்டிப்பாய் அவை சாதாரணமானவை. யில்லை. விழுதுகள் இறங்கியதும் எப்படி பூமியில் வேரூன்றி விடுகின்றனவோ, அம்மாதிரி அவனாலேயும் கலைக்க முடியா கனமான உணர்ச்சிகள்.

சந்துருவுக்கும் தனக்குமிடையில் உள்ள நெருக்கத்தை ஜானா எண்ணமிட முயல்கையில், அதற்கு முடிவேயில்லாத் அகன்ற வான் வீதிகளும், ஆழமான நதிகளும் அதில் பாய்ந்து ஓடின. உடன்பிறப்பெல்லாம் ஒரே தொப்புள் கொடி என்பது இதுதானோ? ஆனால் மற்றத் தங்கைகளும் உடன்பிறப்புத் தானே! அவர்களுக்கு ஏன் இப்படி ஒட்டுதல் ஏற்படவில்லை? ஜானாவின் நிலை கண்டு வெறும் அநுதாபத்திலேயே பிறந்ததல்ல அவர்களிடையில் உள்ள பாசம்.

குழந்தைப் பருவத்துச் சம்பவம் ஒன்று அவள் நினைவில் மின்னியது. சிறுவயதில் சந்துரு மகா துஷ்டன். திடீரென்று ஏதோ வெறி வந்து ஜானாவைக் கீழே தள்ளிவிட்டான். ஜானா அழுதுகொண்டே போய் அப்பாவிடம் சொன்னாள். அப்பாவுக்கு ஆபீஸிலிருந்து வந்த சிரமம் சாரத்தில் செருகி யிருந்த கயிற்றை உருவி, சந்துருவை வீறுவீறென வீறிவிட்டார். கண்ணெதிரில் சந்துரு துள்ளித் துடிப்பதைக் கண்டதும் ஜானாவுக்கு உடம்பு வெலவெலத்துவிட்டது. சந்துருவைத் தேடிக்கொண்டு போனாள். கட்டில்மேல் சுருட்டி வைத் திருக்கும் படுக்கைகளுக்கிடையில் சந்துரு குப்புறப் படுத்துக் கொண்டிருந்தான். முதுகில் கிண்டு கிண்டாய் எழும்பியிருந்தது. அங்கங்கே சிராய்ப்பு.

“அண்ணா!-”

“போடி!- உன்னாலேதாண்டி!” –

சந்துரு சீறி விழுந்தான். அவன் கன்னங்களில் கண்ணிர் காய்ந்து போயிருந்தது.

அவள் கண்கள் தளும்பின.

“இல்லேண்ணா!-”

“ஏண்டி வந்தே? போ- போ-?”

“தேங்காயெண்ணெய் தடவறேன், குப்புறப் படுத்துக்கோ, அசக்காதே-” –

வெறும் பார்வையிலிருந்தே ஒன்றன் நிலையை ஒன்று அறிந்துகொள்ளும் மிருகத்தன்மை அவர்கள் உறவில் மிளிர்ந்தது. இத்தனைக்கும் அவர்களிடையில் தனி ரகசியங்கள் கிடையாது. வான் என்றும், எப்பொழுதும், எல்லோருக்கும் திறந்துதானே இருக்கிறது. ஆயினும் அதில் இன்னும் புதைந்து கிடக்கும் ரகஸ்யங்கள் எத்தனை அநேகமாய் அவர்களிடையில் தர்க்கங்களும் மனஸ்தாபங்களும்தான் இருக்கும். வானத்தில் மேகங்கள் மோதி மின்னல்கள் பிறக்கவில்லையா? கடுமழை உடைப்பெடுத்துக் கொள்ளவில்லையா? சமுத்திரத்தில் அலைகள் கக்கவில்லையா? அவர்கள் உறவின் மூல மூர்க்கம் புரியவுமில்லை, புரியாமலுமில்லை. அதன் இரட்டைத் தன்மையின் சூட்சுமமே அதுதான்.

கல்யாணமான புதிதில் சந்துரு பார்த்தவர் அதிசயிக்கும் படி தகதகத்தான். அடர்ந்த புருவங்களின் அடியில் பூனைக் கண்கள் விட்டுவிட்டுப் பிரகாசித்தன. அப்பொழுது அவன் மயிர் மைக் கறுப்பாய்த்தான் இருந்தது.

நெற்றியில் சில சமயங்களில் குங்குமம் இட்டுக் கொள்வான். பக்தியினால் அல்ல; அழகுக்காக.

ஒரிரவு மணி இரண்டு இருக்கும். ஜானாவுக்குத் திடுக்கென விழிப்பு வந்தது. திடீரென்று போட்ட விளக்கில் அறை ஒரே வெளிச்சமாயிருந்தது. சந்துரு கட்டிலருகில் நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள் விரிந்து அவள்மேல் தாழ்ந்திருந்தன. ஆனால் பார்வை அவள் மேல் இல்லை. ஏதோ பரவசத்துடன் ஆழ்ந்திருந்தன. அவன் உதடுகளில் ஒரு புன்னகை ஆரம்பித்தது, ஆரம்பித்த நிலையிலேயே தோய்ந் திருந்தது.

ஜானா எழுந்து உட்கார்ந்தாள். “என்னடா அண்ணா?

சந்துரு கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தாள்.

“ஜானா, நான் ஒரு கனாக்கண்டேன். இப்பொத்தான் கண்டேன். கண்டதிலிருந்து என் நிலையில் இல்லை. என்னை என்னவோ பண்ணுகிறது. உன்னிடம் உடனே சொல்ல வந்தேன்.”

எழுந்துபோய் ஜன்னலண்டை நின்றான். அவனுக்கு இன்னும் இருப்புக் கொள்ளவில்லை. வெளியே நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென விரைந்துகொண்டிருந்தன.

“-இது மாதிரிதான் வானம் இருந்தது. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலைமலையாகக் குவித்திருந்தது. என் கண்ணுக்கு எட்டிய வரையில் இந்த மேகங்களில் கற்கண்டு கட்டிகள் போல் நrத்திரங்கள் வாரியிறைத்திருந்தன.

“அப்பொழுது யாரோ பாடும் குரல் கேட்கிறது. ஆண் குரல். ஹிந்துஸ்தானி சங்கீதம். “கஜல் என்பார்களே, அது. இடையிடையே நீண்ட தொகையறாக்கள். குரலோடு இழைந்து இழைந்து பத்து சாரங்கிகள் அழுகின்றன. திடீரென்று தபேலாவின் மிடுக்கான எடுப்புடன் ஆரம்ப அடியில் பாட்டு முடியும் போதெல்லாம், இன்பம் அடிவயிற்றைச் சுருட்டிக் கொண்டு பகீர் பகீர்” என்று எழும்புகிறது. அந்த மாதிரி குரலை நான் கேட்டதேயில்லை. என் எலும்பெல்லாம் உருகி விடும் போலிருக்கிறது. நான் அதைத் தேடிக்கொண்டே போகிறேன்.

“நான் போகிற வழியெல்லாம் யார் யாரோ மேடுகளிலும், பள்ளங்களிலும் மரத்தடிகளிலும், பரந்த வெளிகளிலும் கூட்டங் கூட்டமாயும், கொத்துக் கொத்தாயும், தனித் தனியாயும் அசைவற்று உட்கார்ந்திருக்கிறார்கள். நான் போகப் போக, பாட்டின் நெருக்கமும் இனிமையும் இந்த உடல் தாங்கக் கூடியதாயில்லை.

“பாடும் ஆளும் தென்படுவதாயில்லை. என் எதிரே கட்டிடமுமில்லை. ஒரே பரந்த வெளிதான். ஆனால் குரலின் கணகணப்பும் நெருக்கமும் இனிமையும் ஒரே இரைச்சலாய் வீங்கி, என்மேல் மோதுகையில் எனக்கு ஏற்பட்ட தவிப்பு இன்னமும் தணிந்தபாடில்லை. திகைப் பூண்டாமே, அதை மிதித்த மாதிரி கடைசியில் நான் என்னையே சுற்றிச் சுற்றி வருகிறேன். என் மார்பே வெடித்துவிடும் போலிருக்கையில் நல்ல வேளையாய் விழித்துக்கொண்டேன். ஜானா, இதற்கு அர்த்தம் உண்டா?”

– சொல்லிக்கொண்டே வருகையில், சந்துருவுக்கு முகம் சிவந்துவிட்டது. நடு நெற்றியில், நீல நரம்பு கிளைவிட்டுப் புடைத்தெழுந்தது. அந்நிலையில் அவனைப் பார்க்கையில் அவளுக்கு ஏதோ வேதனை பண்ணிற்று.

“மன்னிகிட்டே சொன்னையா? அவள் என்ன சொல்கிறாள்:”

அவன் சிரித்தான். “அவள் என்ன சொல்லுவாள்? நான் சொன்னதையே அவள் வாங்கிக்கொண்டாளோ இல்லையோ? அவளுக்கு ஒரே தூக்கக் கலக்கம். ஏதோ சினிமாவுக்கு என்னை விட்டுட்டுப் போயிருப்பேள். அதன் பின்னணி சங்கீதம் மனசில் பதிஞ்சிருக்கும் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டு விட்டாள்.”

அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவனுடைய கனவு அவள் நெஞ்சிலும் ஏதோ இம்சை பண்ணிற்று.

“நாங்கள் யாராவது அந்தக் கனவில் வந்தோமா? நான், அம்மா, மன்னி

“இல்லை, நீங்கள் ஒருவருமே இல்லை. பெருமூச்செறிந்து சந்துரு திரும்பினான்.

ஒருவேளை கெளரி சொல்வதும் சரிதானோ, என்னவோ? ஒண்ணும் இல்லாததைப் பிரமாதம் பண்ணிக் கொள்கிறேனோ என்னவோ?-”

“அட! அதுக்குள்ளே மன்னி உன்னைத் தேடிண்டு வந்துட்டாளே!”

கெளரி வாசற்படியில் நின்றுகொண்டிருந்தாள். அவள் முகமே ஒரு முகமூடி.

“இல்லை, குழாயில் ரப்பரைக் கட்டிவிட்டேன்” என்றாள் அவள்

“சரி சரி, ஜானா, தூங்கு அநாவசியமாய் எழுப்பி விட்டேன். எப்படியும் கனாத்தானே! எல்லாமே கனாத்தானே! கனாக்குள் கனா-”

ஆனால் அவளுக்கு வெகுநேரம் வரையில் தூக்கம் வரவில்லை. அந்தக் கனவைப்பற்றி வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அதைக் கனாவென்று சட்டென உதறித் தள்ள முடியவில்லை! கண்டதற்கெல்லாம் சந்துரு அவளை யோசனை கேட்பதில்லை. இது எதனுடைய அடையாளமோ மாதிரி இருந்தது.

ஜானாவுக்கு மனப்பிராந்திதானோ என்னவோ, அன்றிலிருந்து தன்னை மன்னி ஏதோ தினுசாய்ப் பார்ப்பது போலும் கவனிப்பதுபோலும் தோன்றிற்று, கேஸ்-க்கு அலையும் போலீஸ்காரன் கவனிப்பதுபோல்.

மன்னி அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் சுய ரூபத்தைக் காண்பிக்க ஆரம்பித்தாற்போலவும் இருந்தது. திடீரென்று மணிக்கணக்கில் சுவரில் சாய்ந்தவண்ணம் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ இருப்பாள்.

“என்னடி கெளரி, இப்படி உட்கார்ந்திண்டு இருக்கே? எழுந்து காரியத்தைப் பாரேண்டி!”

ஊஹூம் கெளரிக்குக் காது திடீரென்று செவிடாகிவிடும். வாயும் கிட்டிவிடும். ஒர் ஆணியையோ கல்லையோ எடுத்துக் கொண்டு சுவரில் கெளரி மனோஹரி என்று செதுக்கிக் கொண்டிருப்பாள். ஏனோ திடீரென்று முரண் செய்ய ஆரம்பித்துவிட்டாள். ஏதோ தனக்குள் ஒர் எண்ணத்தை ஸ்தாபிதம் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டாள். என்ன வென்றுதான் புரியவில்லை. காரியங்களில் அசிரத்தைக்குக் கண்டித்தாலோ, கோபித்தாலோ வாய் திறவாள். வாசலில் ஜன்னலுக்குப் போய் அடிக்கடி நின்று தெரு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை குழாயடிக்குப் போய் முகம் கழுவிக்கொள்வாள். எஞ்சிய பொழுதுக்குத் தன் பெட்டியிலிருக்கும் சாமான்களைக் கலைத்துப் புதுப்புது விதமாய் அடுக்கிக் கொண்டிருப்பாள். அதிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தில் ஏதோ குறித்துக் கொண்டிருப்பாள்.

சந்துருவின் அம்மாவுக்கு இதெல்லாம் புதிதாயிருந்தது. பிடிக்கவும் இல்லை. அவள் அப்படி ஒன்றும் பழங்காலத்து மனுஷியல்ல; ஆசாரக் குடுக்கையுமல்ல. ஆனால் என்னதான் புது சம்பந்தமாயிருந்தாலும், நாட்டுப்பெண்ணின் சில பழக்க வழக்கங்களை அவளால் ஜெரித்துக்கொள்ள முடியவில்லை.

“என்னடி கெளரி, அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை அலங்காரம்? நெத்திக் குங்குமத்தை நீ அடிக்கடி கலைச்சுக்கிறது எனக்குப் பிடிக்கல்லே. பூர்வ கர்ம வினையாலே தாயும் பெண்ணுமா நாங்கள்தான் அதை இழந்துட்டு நிக்கறோம். “பளிச்”சுன்னு முகத்துலே பத்தும்படி மஞ்சள் பூசிக்க மாட்டையா? நீ இனிமே வெள்ளைப்புடவை கட்டாதே-”

“எங்காத்துலே-” “உங்காத்துக்கு இதைக் கொடுத்தனுப்பிச்சுடு”

“எங்காத்துலே-”

“இதோ பார் கெளரி, உங்காத்துலே அப்படியிருப்பேன், இப்படியிருப்பேன் இதைப்பத்தி என்னிடம் இனிமே சொல்லாதே. இனிமே நீ இந்தாத்து மனுவி. அதனாலே இந்தாத்துப் பழக்க வழக்கங்களைச் சுருக்கப் படிச்சுக்கோ. தெரியாட்டா எத்தனை தரம் வேனுமானாலும் சொல்லித்தரோம். ஆனால் புடிச்சுக்கோ இஷ்டத்தோடு புடிச்சுக்கோ. உன் டோலக்கைக் கழற்றி வை. பெட்டியிலே என் தோடு இருக்கு தரேன், போட்டுக்கோ. உன் பரந்த முகத்துக்கு அது தான் நன்னாயிருக்கும். தொட்டதுக்கெல்லாம் உங்காத்தைப் பத்தி ஆரம்பிச்சுக்கிறையே, கொசுவம் வெச்சுப் புடவை கட்டிக் கொள்ளச் சொல்லிக் கொடுத்தாளா? அதுதான் பாக்கப் பதிய வீட்டுக்கு லக்ஷ்மிகளையாயிருக்கும்.”

ஆனால் மருமகள் திருந்துவதாயில்லை. மாமியாருக்கு உள்ளுறக் கவலை பிடுங்கித் தின்ன ஆரம்பித்துவிட்டது. தனக்காகவும் தெரியவில்லை; சொன்னாலும் தெரிய வில்லையே! அல்லது தெரிந்துகொள்ளவே இஷ்டமில்லையா? நயம் பயம் எதற்குமே மசியாத பெண். இது பெண்ணா, அல்லது கொட்டு மேளம் கொட்டி வீட்டுக்கு வரவழைத்துக் கொண்ட விபத்தா? சந்துருவோ ஆபீஸுக்குப் போகிறான். அவன் இல்லாத சமயங்களில் இவள் அடிக்கும் லூட்டிகளில் எதெதை என்னென்று சொல்வது? நம்மைப்பற்றி அவன் ஏதாவது தப்பிதமாய் எண்ணிக்கொண்டுவிட்டால்? ஆனால் இவள் ஏதோ மாபாரதத்துக்குத் தயாராய்க்கொண்டு வருகிறாள் என்கிற திகில் அவளைப் பிடித்துக் கொண்டு விட்டது. தின்னும் சோறு உடம்பில் ஒட்டவில்லை. பக்கென்று உடல் இளைத்துவிட்டது.

சந்துருவுக்கு என்னென்று புரியாவிட்டாலும் வீட்டில் ஏதோ சரியாயில்லை என்கிற வரைக்கும் புரிந்தது. ஆனால் யாரை என்னென்று கேட்க முடியும்?

“ஏம்மா, ஒரு மாதிரியா எப்பவும் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கிறாய்? உடம்பு சரியில்லையா? வைத்தியனை வரவழைக்கட்டுமா?”

“ஒண்ணுமில்லேடா: வயசாயிடுத்தோன்னோ, தள்ளல்லே-”

“அப்படி என்னம்மா வயசு ஆய்விட்டது, திடீரென்று?

கெளரியை ரகசியமாய்க் கூப்பிட்டான்.

” ஏன் அம்மா ஒருமாதிரியாயிருக்கிறாள்:”

“என்ன மாதிரி இருக்கிறார்? எனக்கென்ன தெரியும்? ”

“ஜானா, அம்மா ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறாள்?”

“எனக்கென்ன தெரியும்? கவனிக்க எனக்கெங்கே போதிருக்கு? எனக்குப் பரீட்சை நெருங்கிடுத்து. அண்ணா, இந்தப் பாடம் வாத்தியாருக்கே புரியல்லே. எனக்குச் சொல்லித் தாயேன்!-”

அன்று இரவு எத்தனை நாழிகை ஆயிற்று என்றே தெரிய வில்லை. சந்துரு பேசினால் விஷயத்துள் அப்படியே முழுகி விடுவான். கேட்பவர்களும் அவனுடன் ஒன்றிவிடுவார்கள். அவனிடம் விசேஷ சக்திகள் இருந்தன. சாமர்த்தியங்கள் அல்ல; சக்திகள். கூடவே பிறந்து, அவன் கூப்பிடும் வேளைகளில் அவனிலிருந்து எழுந்து, அவனையும் அவனைச் சுற்றி யிருப்பவரையும் ஆட்கொண்டுவிடும் சக்திகள். பாடத்தை யொட்டி, அவன் வாயிலிருந்து அவனுடையனவே இல்லாதவை போன்று உதிர்ந்த வார்த்தைகளையும் தர்க்கங்களையும் ஸ்தம்பித்துப் போய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். திடீரென்று அவளுக்குப் பிடரி குறுகுறுத்தது. தன்னை யாரோ கவனிப்பது போன்ற ஒர் உணர்ச்சி; திரும்பிப் பார்த்தாள்.
சந்துருவுக்கு அதற்கெல்லாம் சட்டெனக் கோபம் வந்து விடும்.

“நான் முக்கியமா ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்ன பராக்கு?”

“மன்னி அண்ணா!”

மன்னி ஜானாவையே அவள்மேல் வைத்த விழி மாறாது
கவனித்துக்கொண்டிருந்தாள். சந்துருவுக்குக்கூட அந்தப் பார்வை பிடிக்கவில்லை.

“கெளரி, ஏன் அப்படிப் பார்க்கிறாய்? புசுக்கெனச்சத்தம் போடாமெ ஏன் அப்படி வந்து நிற்கிறாய்?”

கெளரிக்கு விழி மாறவில்லை. அவள் தன் கணவனைக் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. சந்தருவுக்குப் கோபம் வந்து விட்டது.

“கெளரி, உன்னைத்தான் சொல்கிறேன். கெளரி கெளி” “என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள்.”

“என்ன?”

திடீரென உயர்ந்த தொனி கேட்டு, சுவரோரம் கண் ணயர்ந்த அம்மாவுக்கு விழிப்பு தூக்கிப் போட்டுக்கொண்டு வந்தது.

“ஏண்டா அவளைக் கோவிச்சுக்கறே?”

கெளரி முகத்திலோ குரலிலோ எவ்விதமான உணர்ச்சியும் இல்லை; குரூரமான ஒரு வெறிச்சுத்தான் இருந்தது.

“என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டுடுங்கோ”

அம்மா கெளரியிடம் ஓடிவந்தாள். “என்னடி கெளரி பேத்தறே?”

கெளரி சந்துருவைப் பார்த்துக்கொண்டு பாடம் சொல்வதுபோல், “என்னை என் வீட்டில் கொண்டுபோய் விட்டுடுங்கோ. இந்த வீட்டில் உங்க தங்கைக்கும் எனக்கும் சேர்ந்து இடமில்லை.”

அம்மாவுக்கு உடல் வெடவெடவென உதறிற்று. “ஐயோ சந்துரு இதுமாதிரிதாண்டா ஏதோ என் வயத்தைக் கலக்கிண் டிருந்தது.”

சந்துரு அம்மாவைப் பிடித்துக்கொண்டான். இல்லா விட்டால் அவள் கீழே விழுந்திருப்பாள்.

ஜானா சந்துருவின் வலது கையையே வசியமானவளாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அது மூடிமுடித் திறந்தது, எதையோ தேடுவதுபோல்.

“என்னை என் வீட்டிலே கொண்டுபோய் விட்டுடுங்கோ நீங்கள் விடாட்டா நானா வெளியேறிப் போய்விடுவேன்.”

கொஞ்ச நாழிகை அம்மாவின் விசிவிசிப்பான அழுகை யைத் தவிர, கூடத்தில் எதுவும் கேட்கவில்லை. மன்னி எங்கேயோ பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் அப்போது அழகாயிருந்தாள். சந்துருவிடமிருந்து வார்த்தைகள் கிளம்பிய போது அவை அமைதியாகவும் சாதாரணமாயுந்தான் இருந்தன.

“கெளரி, நாளைக் காலை உன் அப்பாவுக்குச் சொல்லியனுப்புகிறேன். நீ போய்விடு!”

“டேய், அவள் தெரியாமல் சொல்றாடா!”

“பூட்டுச் சாவி எங்கே வைத்திருக்கிறாய்? கெளரி பயப் படாதே, நீ சொன்ன வார்த்தைகளுக்கு உன்னை அடித்து விடுவேனோ என்று. உன்னை மடிக்கொம்பால்கூடத் தொடப் போவதில்லை- அம்மா, பூட்டு சாவி எங்கே வைத்திருக்கிறாய்? இரவு வரை இவளை இவளிடமிருந்து காப்பாற்றி இவளைப் பெற்றவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இவளுக்கில்லா விட்டாலும் நம் மானத்தை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.”

சந்துரு பூட்டையும் சாவியையும் எடுத்துக்கொண்டு வாசற் பக்கம் சென்றான். தாழ்ப்பாளை இழுத்துப்போட்டு, சங்கிலி புரளுகையில் ஜானாவுக்குத் தன் மார் மேலேயே கல் இறங்குவது போல் இருந்தது.

துர்ச்சொப்பனம் போன்ற அந்த இரவை என்றும் மறக்க முடியாது. சொக்கட்டானில் காயை நகர்த்தினாற்போல் அவரவர் தம்தம் இடத்தில் நின்றபடி கழிந்த அந்த இரவை மறக்க முடியாது. இப்பொழுதுகூட அது ஏதோ திகிலை உண்டாக்குகிறது.

அவளைக் கூட்டிக்கொண்டு போக வந்தவர்களும் அவளுக்குப் புத்தி சொல்லவில்லை. ஏன், என்ன என்று கேட்கும் மரியாதைகூட இல்லை. அவளுக்கு மூன்று தலைமுறைக்குச் சாதம் போட எங்கள் வீட்டில் இருக்கிறது என்று சவால் கூறிவிட்டு அவள் தகப்பன் அவளைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய்விட்டான்.

வீட்டுக்கு வந்து குடித்தனம் பண்ணி இன்னும் பத்து மாதங்கள் முழுக்க ஆகவில்லை. கெளரி போய்விட்டாள்.

அப்படி அவள் போகும்போது மூன்று மாதங்களாய் ஸ்நானம் பண்ணவில்லை.

அவள் வீட்டை விட்டு வெளியேறின பத்து நாட்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. அப்புறம் ஈசல் கூட்டம் மாதிரி வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. அவைகளையும் ஒரளவு எதிர் பார்க்க வேண்டியதுதான். இதுவரை எந்த நாத்தனாரோ, மாமி யாரோ நல்ல பேர் வாங்கியிருக்கிறார்கள்? ஆனால் மன்னிக்கு என்மேல் இவ்வளவு க்‌ஷாத்திரம் விழும்படி நான் என்ன செய்தேன் என்று ஜானா யோசிக்கையில் அவளுக்குச் சிரிப்புக் கூட வந்தது. ஏனெனில் அவள் அதிகம் வீட்டு விவகாரங் களைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. அவள் பாடங் களுக்கும், பள்ளிக்கூட அலுவல்களுக்குமே பொழுது சரியா யிருந்தது. நாளாக ஆகத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் தன்னைக் கண்டதும் ஏதோ தம்முள் ரகசியம் பேசிக்கொள் வதும், தோளை இடித்துக்கொள்வதும், தான் அவர்களைப் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டபோதெல்லாம் தன்னைச் சுட்டிக் காண்பிப்பதும் ஜானாவுக்குப் புரியவில்லை, பிடிக்கவில்லை. அப்புறம் ஒருநாள் அவளை பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயினி கூப்பிட்டு அனுப்பினாள்.

“என்ன ஜானா? இப்படி உட்கார். உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். உன் வீட்டு விவகாரத்தில் புகுகிறேன் என்று நினைக்காதே. ஆனால்- உன் மன்னி வீட்டில் இல்லையா?”

ஜானாவுக்கு ஆச்சரியம் கோபம் எல்லாம் ஒருங்கே வந்துவிட்டன.

“இது வீட்டு விவகாரம். இதற்கும் பள்ளிக்கூடத்துக்கும் என்ன சம்பந்தமென்று எனக்குத் தெரியவில்லை” என்றாள்.

பிரின்ஸிபால் கீழ்நோக்கிய வண்ணம், மேஜை மேல் பென்ஸிலை நிறுத்தி வைக்க முயன்றுகொண்டே, “கோபிக்காதே ஜானு, நீ இம்மாதிரி சொல்வாயென்று எனக்குத் தெரியும். இன்று காலை உன் மன்னியின் தாயார் இங்கு வந்திருந்தாள். உன்னைப் பற்றி என்ன என்னவோ கன்னாபின்னா என்று பேசினாள்” என்றாள்.

“என்னைப் பற்றியா? என்ன சொன்னாள்?” ஜானா வுக்குக் கண் நரம்புகள் குறுகுறுக்க ஆரம்பித்தன. வாத்தியாரம்மா பென்ஸிலை நிறுத்தி வைப்பதிலேயே முனைந்தாள்.

“என்ன சொன்னாள் என்று நான் வாய்விட்டுச் சொல்ல வேண்டுமா? அவள் கத்தின. கத்தலும் ஆடின சதிரும் எனக்குப் பிடிக்கவில்லை. வெளியே போய்விடு என்றுகூடச் சொல்லி விட்டேன்.”

“ஒ” என்றாள் ஜானா, சற்று ஏளனமாய்.

“ஆம்; அவள் வாயிலிருந்து கிளம்பிய ஆபாசத்தைக் கேட்டதும் உண்மையில் நம் வர்க்கத்தைப் பற்றியே நினைக்கக் கூட வெட்கமாய்ப் போய்விட்டது. ஆண்களை நாம் ஆயிரம் அவதூறு சொல்கிறோம்; சம உரிமை வேணுமென்கிறோம். ஆனால் ஆண்களுக்கு இருக்கும் பெருந்தன்மை நமக்கில்லை. ஆண்கள் தவறுகள் செய்யலாம்; ஆனால் அவர்களுக்கு மனத்தில் அழுக்குக் கிடையாது. ஆபாசம் கிடையாது. ஆனால் நமக்கு அதுதான் இருக்கிறது. நமக்குப் பெருந்தன்மை கிடையாது. நம்மைப்பற்றியே நாம் தூற்றிக்கொள்ளும் ஆபாசங்களே அதற்குச் சாக்‌ஷி”

“இந்தச் சக்கர வட்டமெல்லாம் எதற்கு? உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றிருந்தால் என் அண்ணனிடம் சொல்லுங்கள். உண்மையில் இதற்கும் எனக்கும் சம்பந்த மில்லை.”

“வாஸ்தவந்தான். நல்லவேளையாய் உன் அண்ணனை நேரிடையாகத் தெரியாவிட்டாலும் அவரைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உன் அண்ணனிடம் சொல்லக் கூடியதுமில்லை.”- திடீரென்று அலுப்புடன் பென்ஸிலை மளுக்கென்று இரண்டு துண்டுகளாய் முறித்து எறிந்துவிட்டு, எழுந்துபோய் முதுகை அவள் பக்கம் திருப்பிக் கொண்டு நின்றாள்.

“மொத்தத்தில் எனக்கு ஒன்று படுகிறது. நான் நமக்காக நடத்தும் இந்தப் பள்ளிக்கூடத்திலேயே வரவர எனக்கு நம்பிக்கை குறைகிறது. ஏனெனில் இளவயதிலேயே நம் கதிக்கானவர்கள் மரியாதையாய் அந்தக் காலத்திய வழக்கப் பிரகாரம் உடன்கட்டை ஏறிவிடுவதே நலம். உயிர் போனாலும் மானமாவது பிழைக்கும். நான் சொல்லுகிறது புரிகிறதா? அல்லது இதைவிடப் புரியப் பண்ண வேண்டுமா?”

“ஸிஸ்டர்- சந்துரு என் அண்ணா!” என்று ஜானா அலறினாள்.

ஸிஸ்டர் அவளிடம் வந்து அவள் தோள்மேல் கை வைத்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன.

“எனக்கு அது தெரியும் ஜானா! உன்னை ஜாக்கிரதைப் படுத்தவே உன்னைக் கூப்பிட்டேன். இது பொல்லாத உலகம் சுத்த அல்பம். மானங்கெட்ட உலகம். உட்கார்ந்து கொள். வேனுமானால் இங்கேயே கொஞ்சநாழிகை படுத்துக்கொள்:

ஜானாவுக்கு மார்பு பக்பக்கென அடைத்தது. இல்லை ஸிஸ்டர் நான் வீட்டுக்கே போறேன்-”

“ஜானா, இதெல்லாம் நீ சமாளித்துக்கொள்ள வேண்டும். நீ இவ்வளவு கோழையாயிருப்பாய் என்று தெரிந்தால் நான் உன்னைக் கூப்பிட்டே இருக்க மாட்டேன்.”

ஜானா போகும் வழியெல்லாம் குழந்தை மாதிரி விக்கி விக்கி அழுதுகொண்டே போனாள். தான் பண்ணின குற்றந் தான் என்ன? சந்துருவுடன் கூடப் பிறந்ததும், தான் கைம்பெண்ணாய் வீடு வந்து சேர்ந்துவிட்டதுந்தானே? அதன் அபாண்ட விளைவை எண்ணவே முடியவில்லை.

அம்மாவுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் ஒன்றுமே புரியவில்லை.

“ஏண்டி ஜானா?”

ஜானாவுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

“சந்துரு, ஜானா ஏனோ அழறாடா!”

சந்துரு அறையிலிருந்து வெளிவந்தான்.

“ஏன் அழுகிறாய்?”

ஜானா பதில் பேசாமல் அழுதுகொண்டிருந்தாள். அவளைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு சந்துரு வெளியே சென்றான். அவன் திரும்பி எப்போது வந்தான் என அவளுக்குத் தெரியாது. குப்புறப் படுத்துக் கைகளிடை முகத்தைப் புதைத்துக்கொண்டிருந்தாள்.

“ஜானா, நீ எனக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம்!”அவன் குரல் நடுங்கிற்று. “நான் உன் பள்ளிக்கூடத்துக்குப் போய் வாத்தியாரம்மாளைக் கண்டு வருகிறேன். நான் எல்லாம்
தெரிந்துகொண்டு விட்டேன். எனக்கு வாய்த்தவள் பதர். அதுவும் அது முளைத்த மண்ணிற்குத் தகுந்தாற்போல்தான் பயிராயிருக்கிறது. இது நமக்கு நேர்ந்திருக்கவேண்டாம். ஆனால் நேர்ந்தது நேர்ந்துவிட்டபின், நேர்ந்ததை அநுபவித்துத்தான் தீரவேண்டும். இது எங்கு கொண்டுபோய் விடுமோ நான் அறியேன். எங்கு வேண்டுமானாலும் கொண்டு விடட்டும். ஒன்று மாத்திரம் உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். நம் வீட்டு மாப்பிள்ளை இறந்த பொழுது, உன் தலையை என் மடியில் வைத்துக்கொண்டு, “ஜானா நீ இனி என் தம்பி. எனக்கு நீ உனக்கு நான் என்று சொன்னேனே..! உனக்கு நினைவு இருக்கிறதா? எனக்கு இப்பவும் எப்பவும் அப்படித்தான்.”

ஜானாவுக்கு அழுகை புதிதாக மடை திறந்துகொண்டு வந்தது.

# # #

ஜானாவுக்கு ஏதோ தனக்குள் லொட்டென்று ஒட்டை விழுந்துவிட்ட மாதிரி ஓர் உணர்ச்சி- இடி விழுந்து பள்ளம் ஆகிற மாதிரி. தன் வாழ்க்கைதான் வீணாயிற்று என்றால், அண்ணா வாழ்க்கையும் இப்படிப் போக வேண்டுமா? அம்மாவுக்கு இந்த வயசில் அநுபவிக்க வேண்டியது இன்னும் எவ்வளவு பாக்கி? குடும்ப மானம் ஏன் திடீரென்று அவிழ்ந்த பொட்டலம் மாதிரி ஆகிவிட்டது?

“ஏண்டி ஜானா, உன் மன்னியை நீதான் வாழவிடவில்லை யாமே! கிழவிகடட நல்லவளாம். நீதான் தடங்கலா நிக்கறையாம்!”

“என் காதுலே எதுவும் போடாதேங்கோ, மாமி!”

“உன் மன்னியை இன்னிக்கு நான் சினிமாவிலே பாத்தேன். அடையாளமே தெரியல்லே. எங்கிருந்தடி திடீர்னு கோண வகிடு வந்தது? அவள் ரிப்பன் என்ன, உள்பாவாடை தெரிய ஜார்ஜெட் ஸாரி, மாரிலே ப்ரூச்சு கையிலே கடிகாரம்:- இப்போ என்ன அவளுக்கு மாசமா? கூட அவள் அம்மாவும் வந்திருந்தா. ஏதேதோ பேசினோம். புகுந்த இடத்திலேதான் என் பொண்ணுக்குச் சுகமில்லே. வயறும் பிள்ளையுமாயிருக்கா. இருக்காளோ, போயிடறாளோ- அவள் ஆசைப்பட்டபடி இருக்கட்டும்னு இருக்கேன் என்கிறாள்.”

“என்னடி கெளரி செளக்கியமா? எப்போ புக்காம் போப் போறே? வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் இருக்கேன்னு ஜாடையாக் கேட்டேன். அது ஸ்டைலா, பின்னல் ரிப்பனைச் சீண்டிண்டு, அசட்டுச் சிரிப்பு சிரிச்சுண்டு, கம்முனு. இருக்கு எனக்கு அப்பவே தெரியும், நம்ம மாதிரி குடும்பத் துக்கும் அவா ஸ்டைலுக்கும் சரிப்படாதுன்னு. என்னை ஒரு வார்த்தை கலந்திருந்தால் இந்தச் சம்பந்தத்தை அப்பவே தடுத்திருப்பேன்.”

போங்கோ மாமி தயவுசெய்து போங்கோ”

ஜானா இரு காதுகளையும் பொத்திக்கொண்டாள்.

“என்னவோ அம்மா, விஷக்கடி வேளை, உங்களையும் எனக்குத் தெரியும்; அவாளும் கெட்டவாளில்லை. இந்தக் காலத்துலே வீட்டுக்கு வரதே குதிரைகளாய்த்தான் வரதுகள். அதுகளை விட்டுத்தான் பிடிக்கணும்.”

“சரி, போறும் மாமி.”

ஆனால் இந்த மாமி சொல்ல வந்ததை முடித்துக் கொண்டுதான் விடுவாள்.

“இப்பவும் ஒண்னும் குடி முழுகிப் போயிடல்லே. நீ எங்கேயாவது ஹாஸ்டல்லே போய்ச் சேர்ந்துடேன்! உனக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு:”

“யார் இவள்?”

பின்னால் குரல் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு உயரமாய் சந்துரு நின்றுகொண்டிருந்தான்.

“என்னடாப்பா, நான்தான்-”

“நீங்கள் யாராயிருந்தாலும் சரி, வாசற்படி விட்டுக் கீழிறங்குங்கள்.”

“ஆ-ங்-ங்-ங்?

“நான் இழுத்துக்கொண்டு போய் உங்களை வெளியில் விடவா மரியாதையாய் நீங்களே போய்விடுகிறீர்களா? இனி இந்த வாசற்படியில் உங்களை நான் காணக்கூடாது!”

கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு சந்துரு கூடத்துக்கு வந்தான்.

“உங்கள் ரெண்டுபேருக்கும் ஒன்று சொல்கிறேன், ஊர் வம்பைக் கேட்டுக்கொண்டிருந்தால் இன்னும் இந்த வீடு உருப்படாமல் போய்விடும்.”

“நாங்களாகப் போய் அழைக்கிறோமா? நம்மைத் தேடிண்டுன்னாடா வரது!” .

“இது நம் கஷ்டத்தைத் தீர்த்து வைக்கப் போவதில்லை. இதனால் நம் பலத்தைக் குறைக்கத்தான் முடியும். ஆகையால் அது தெருவோடு போனாலும் சரி, வாசற்படி ஏறி வந்தாலும் சரி, அதை சட்டை செய்யாமல் நம் காரியத்தை கவனிக்க வேண்டியதுதான்.”

“நம் காரியந்தான் என்ன?”

அவன் முழுப்பார்வையும் அவர்கள் இருவரையும் அனைத்தது.

“இப்போதைக்குக் காத்திருப்பதுதான்.”

“எதுக்கு?

“அது புரியும் வரையில்.”

அம்மாவுக்கு அலுப்பு வந்துவிட்டது.

“இந்தப் புதிரெல்லாம் யாருக்குப் புரியறது? இந்த மாதிரி இன்னும் எத்தனை நாள்? நம்ம சொத்து அது. போய்க் கரகரன்னு இழுத்துண்டு வந்து இந்தக் கன்னத்திலே நாலு, அந்தக் கன்னத்திலே நாலு கொடுத்தால் நல்ல மருந்தாகிவிடும்.

சந்துரு சிரிக்க முயன்றான். “அது நடக்காத காரியம் அம்மா. மானமுள்ளவளாயிருந்தால் இதுவரைக்குமே வைத்துக் கொள்ள மாட்டாளே! நான் என்னவோ என்று நினைத்தேன். நம்பினேன். மோசம் போனேன்.” . .

“இல்லை, காலுக்கு உதவாத செருப்பைக் கழட்டி எறிஞ்சுடு, நமக்குச் செளகரியமா இன்னொண்ணு பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.”

“அதுவும் என் காரியம் அல்ல.”

“பின் என்னதான் உன் காரியம்? இந்தக் குடும்பம், நேத்திக்கு வீட்டுக்கு வந்தவள் கூத்தில் குட்டிச்சுவராய்ப் போவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் உன் காரியமா?

சந்துரு பதில் பேசவில்லை. அவன் விழித்த விழியிலேயே அம்மாவுக்கு அழுகை அடங்கிப் போயிற்று. சந்துரு தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

காத்திருப்பதென்றால் என்ன? சந்துரு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்த தலையுடன், ஜன்னலண்டை மணிக் கணக்கில் அசைவற்று நின்றிருப்பான்.

மலைத்தொடர்கள் அசையாமல் நின்றுகொண்டிருக் கின்றன. அவை காத்துக் கொண்டிருக்கின்றனவா? காத்துக் கொண்டிருக்கின்றன என்றால் எதற்காகக் காத்துக்கொண் டிருக்கின்றன? ஐயனார் கோவிலிலோ கிராம தேவதைக் கோவில்களிலோ, மதில்மேல் பிரம்மாண்டமான சிலைகள் கையொடிந்தும் காலொடிந்தும், தலையில் பட்சிகள் எச்ச மிட்டும் தம் தீனிகளைக் கிழித்துச் சதையும் ரத்தமும் சிந்த அவைகள் மேல்வைத்துத் தின்றும், வெயிலோ மழையோ, எதுவும் தெரிந்தோ தெரியாமலோ பொருட்படுத்தாமல், வெண்டயம் போன்ற விழிகளை எந்நேரமும் விழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்றன; அவை காத்துக் கொண்டிருக்கின்றனவா? அவை காத்துக் கொண்டிருந்தால் எதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றன?

அம்மாதிரி மெளன அரணில் சந்துரு வீற்றிருக்கையில் அவனருகே போகக்கூட அச்சமாயிருக்கும்.

ஆனால் அதையும் பிளக்கும் ஏதோ ஒன்று அவனைச் சில சமயங்களில் சூழ்கையில் காதைப் பொத்திக்கொண்டு தலையை உதறிக்கொள்வான். அது என்ன, அவன் தன் கனவில் கேட்ட கானமா? தனக்குள்தானே பற்றிக்கொண்டு எரிவதன் துடிப்பா?

ஜானா நாளுக்கு நாள் இளைத்துத் தேய்ந்தாள். நல்ல எண்ணத்துடனோ வேடிக்கைக்கோ நாலுபேர் பேசும் பேச்சும் சொல்லும் புத்திகளும் பொறுக்கக் கூடியனவாயில்லை.

“காயும் பூவுமாய்க் காய்ச்சுத் தழைக்கிற நாளிலே, உன் அண்ணனும், மன்னியும் ஏண்டி இப்படி இருக்கணும்?”

“எனக்கென்ன மாமி தெரியும்? அவளேதானே போனாள்:”

“அவள் போனதுக்கு உன்னைக் காரணமா ஏன் சொல்லிண்டு திரியனும்? இந்தக் காலத்திலே அண்ணனாவது தங்கையாவது! அவாவா வழியை விட்டு அவாவா ஒதுங்கி விடறதுதான் நல்லது.”

ஜானாவுக்கு எதிலும் புத்தி செல்லவில்லை. பரீட்சைக்குப் பணம் கட்டினதுதான் மிச்சம்; பரீட்சைக்கு உட்கார முடியவில்லை. அவள் வளைய வருவதற்கும் அவளுக்குமே சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது. சப்தங்கள் இல்லாத இடத்தில் சப்தங்கள் கேட்டன; சப்தங்கள் இருக்கும் இடத்தில் காது செவிடாகிவிட்டது.

வைத்தியனிடம் காண்பித்தால், “ஒன்றும் புரிய வில்லையே! உறுப்புக்கள் கோளாறில்லாமல் ஒழுங்காய்த் தானே வேலை செய்கின்றன: ஒன்றும் புரியவில்லையே!” என்று திகைக்கிறான். ஆனால் இளைத்து வந்தாள்.

“ஜானா இன்னிக்கு உன் மன்னியோட அம்மாவைப் பாத்தேன். ஈரத்துணியோடெ அனுமார் கோவிலைச் சுத்திண்டிருந்தாள். நான் ஏதேதோ கேள்விப்படறேனே! ரகசியமாப் பூஜைகள் எல்லாம் நடக்கிறதாம். என்னமோ சஞ்சீவிமலை கொண்டுவர அனுமார் படத்திலே வாலிலே நாளுக்கு ஒரு பொட்டா ஒரு மண்டலம் வெச்சு முடிச்சு யார் வேண்டாதவாளோ அவா மேலே விடறதாமே! எனக் கென்னமோ பயமாயிருக்குடியம்மா. உன் அண்ணாவும் மன்னியும் எக்கேடு கெட்டுப்போறான்னு நீ ஒதுங்கிடறதுதான் நல்லது.” –

“நான் என்ன மாமி பண்ணினேன்! நான் அவளைப் போ என்றேனா? வருபவளை வேண்டாமென்கிறேனா?”

“அதென்னவோ அம்மா, நான் சொல்றத்தைச் சொல்லிப் பிட்டேன்.”

திக்திக்திக்திக்திக்திக்திக்திக் –

ஒருநாளிரவு வீலென்று அலறிப் புடைத்துக்கொண்டெழுந்தாள்.

“என்னடி என்னடி ஜானா?”

கூந்தல் கசகசக்க அவள் தேகம் முழுவதும் வியர்வை கொப்புளித்திருந்தது. ஓடிவந்தாற்போல் மூச்சு இரைத்தது.

“இருட்டிலேருந்து கறுப்பா ஒர் உருவம் உருவாகிப் பிரிஞ்சு வந்து என்னைத் தீண்டினாற் போலிருந்தது, அம்மா!”

“பயப்படாதேம்மா. நம் சாஸ்தாவை நெனச்சுக்கோ, விபூதி யிடறேன். ஐயனாரே! என் குழந்தை எவ்வளவோ கஷ்டப் பட்டுட்டா; நீதான் அவளைக் காப்பாத்தணும்.”

திடீரென்று எப்படித்தான் அது நேர்ந்ததென்று ஒருவருக்குமே தெரியவில்லை. உடம்பில் நீர் வைத்துவிட்டது. அவளை ஒருநாள் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்க்கும் நிலைமை வந்துவிட்டது.

ஆஸ்பத்திரியில் வெள்ளைப் பீங்கான் கற்கள் பதித்த துரிய வெண்ணிறச் சுவர்களும், வார்டுகளில் வரிசை வரிசையாய் நிற்கும் கட்டில்களில் படுக்கைமேல் போர்த்த வெண் துப்பட்டி களும், கால்மாட்டில் சுத்தமாய் மடித்து இடுக்கிய சிவப்புக் கம்பளிகளும், சதா வேலையாய் அங்குமிங்கும் வெள்ளை உடுப்பில் டாக்டர்களும் நர்ஸுகளும் அலைவதும் மனத்துக்குச் சற்று ஆறுதலாக இருந்தன. .

“ஜானா! உன் அண்ணாவுக்குப் பிள்ளை பிறந் திருக்காமே! எங்களுக்கு சக்கரை கிடையாதா?”

ஜானாவுக்கு மார்பை இரண்டு தடவை அடைத்தது.

“நல்ல இடமாப் பாத்துக் கேட்க வந்தேளே, மாமி!”

சாயந்தரம் சந்துரு ஆஸ்பத்திரிக்கு வந்தான்.

“அண்ணா அண்ணா, எனக்கு மருமான் பிறந்திருக் கானாண்டா.”

சந்துரு சூக் கொட்டிவிட்டு, இன்னிக்கு டாக்டர் என்ன சொன்னார்?” என்றான்.

டாக்டர்களுக்கு அவள் நிலைமையைப் பற்றி ஒன்றுமே நிச்சயப்பட முடியவில்லை.

பிறகு –

வழக்கம்போல் ஒரு மாலை சந்துரு ஆஸ்பத்திரிக்கு வந்தான். அன்று கிறிஸ்துமஸ் தினம். வார்டைக் கடிதாகப் பூக்களாலும், நிஜப் புஷ்பங்களாலும், வர்ண விளக்குகளாலும் அலங்கரித்திருந்தார்கள். ஜானா மாத்திரம் கட்டிலில் கழுத்து வரை சிவப்புக் கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். அவள் கண்களில் அசாதாரண ஒளி வீசிற்று. ஒட இடமிலாது. கடைசியில் ஆள்மேல் திரும்பிவிடும் மிருகத்தின் கண்களில் காணும் வெறி ஒளி, பீதியிலிருந்தே புறப்படும் விரக்தியின் தைரியம். அவன் கண்களில் எழுந்த வினாவைக் கண்டு அவள் சிரித்தாள்.

“ஒண்ணுமில்லே அண்ணா, இன்னிக்குப் பல் தேய்க் கறப்போ ஏதோ புரையேறினால் போலே இருந்தது. வயத்திலே ஐஸ் வெச்சாப்பிலே சில்லின்னுது. கிளுக்குன்னு ரத்தம் கக்கித்து. ஒரு கையகலம் இருக்கும்-”

“ஆ! என்னது?”

அவன் அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.

“உஷ், ஒண்ணுமில்லே. எனக்கு அதனாலே ஒண்ணு மில்லே. தலைவலிதான் மண்டையைப் பிளக்கிறது. இதை உன்னோடு வெச்சுக்கோ. அம்மாகிட்டே சொல்லாதே. வீணா இடிஞ்சு போயிடுவா. இத்தோடு போச்சு. மறுபடியும் வரணும்னு ரூலா என்ன?”

ஆனால் அது மறுநாளும் வந்தது. அதற்கடுத்த நாளும் வந்தது. அடுத்த நாள், அடுத்த நாள்- விடாது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் தவறாமல் ஐந்து மாதங்கள். இத்தனை ரத்தம் கக்கியும் அந்த உடலில் உயிர் இருந்ததுதான் அதிசயம். இன்னும் கக்குவதற்கு ரத்தம் இருந்தது அதைவிட அதிசயம்.

சந்துரு ஆபீஸைத் துறந்துவிட்டான். ஸ்திரீகள் வார்டு ஆதலால் மாலை வேளைதான் உள்ளே வரமுடியும். மற்ற வேளைகளில் வார்டு வாசலில் காவல் கிடந்தான். இரவழிந்தது. பகலழிந்தது. சிவப்புக் கம்பளியைக் கழுத்து வரை போர்த்து, கட்டிலில் கிடக்கும் ஜானா, வாசல்படியில் அவன் நின்று கொண்டு, நர்ஸ்களுடைய கோபத்தையும், டாக்டர்களின் சீறலையும் உணராது, அழுக்கேறிய தன் ஆடையை உணராது, குளி மறந்து, உணவு மறந்து, அவளைத் தவிர எல்லாமே மறந்து அவளையே கவனித்துக்கொண்டு நிற்கையில் யார் கஷ்டம் அதிகம் என்று அவளுக்கே சொல்லத் தெரியவில்லை.

“யாரு அம்மா? உன் அண்ணாத்தையா? ஐயோ பாவம்! உனக்கோசரம் உயிரையே விட்டுடுவாருபோல இருக்குதே! எங்களுக்கும்தான் கூடப் பொறந்தவங்க இருக்காங்களே!”

அன்று முதல் நாள் ரத்தம் வந்ததெனக் க்ேட்டவுடன் துடித்தது தவிர, சந்துரு ஒன்றும் வாய்விட்டு அப்புறம் வேதனைப்பட்டதில்லை. அவளுடன் அதிகம் பேசினதுகூட இல்லை. மாலை வந்ததும் கட்டிலண்டை மெளனமாய், மணியடிக்கும் வரை உட்கார்ந்திருப்பான். அவளும் மார்பில் கோத்த கைகளின்மேல் தாழ்ந்த கண்களுடன் யோசனை பண்ணிக்கொண்டிருப்பாள்.

ஒரே ஒருநாள் அவன் அவளைக் கேட்டான். ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டுமென்பதற்கோ என்னவோ?

“என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?”

“இந்த ஜன்மம் இத்தோடு போனப்புறம் அடுத்த ஜன்மத்தில் அல்லது வேறெந்த ஜன்மத்திலும் உன்னோடு கூடப் பிறக்கக்கூடாதுன்னு. உன்னோடு பிறந்து இப்போ படற அவஸ்தை போறும்!”

அவன் கண்களில் முதன்முதலாய்த் தண்ணீர் தளும்பிற்று. அதைக் கண்டதும் அவளுக்கு அழுகை வந்துவிட்டது.

“அண்ணா, அண்ணா, என்னை மன்னிச்சுடு. நான் ஏன் இப்படி விஷத்தைக் கக்கறேன்னு எனக்கே தெரியல்லே.”

“பரவாயில்லை; என்னை என்ன வேணும்னாலும் திட்டிக்கொள். ஆனால் உடம்பை மாத்திரம் எப்படியாவது சரிபண்ணிக் கொண்டுவிடு”

“இல்லே அண்ணா: எனக்கு ரொம்ப அலுப்பாயிருக்கு நான் பிழைப்பேன்னு எனக்குத் தோணல்லே. எனக்குச் சாகப் போறேனேன்னு பயமாயில்லை. ஆனால் அம்மாவுக்கு இந்த வயசுலே இந்தக் கஷ்டத்தையும் வெச்சுட்டுக் போறேனே இந்த துக்கத்தைத் தவிர எனக்குச் சாகப்போறோம் என்கிற பயமில்லே.”

“உயிருடன் இருப்பது எவ்வளவு முக்கியமில்லையோ, அதேமாதிரி சில சமயங்களில் சாவது ஒன்றும் முக்கிய மில்லை.”- கரடி மயிரால் வளைத்த புருவங்களினடியில், கனிந்த தணலாய், அனல் கக்கும் கண்கள் அவளைத் துருவின. அவனுடைய தாழ்ந்த குரலின் தீர்க்கம் அவளை மெதுவாய் அழுத்தியது.

“சாவதையும் வாழ்வதையும்விட எதற்காகச் சாகிறோம். எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கை வீம்பாகிவிடும்பொழுது அதில் சாவுக்கும் உயிருக்கும் பிரமாத இடமில்லை. ஆகையால் நீ இப்பொழுது செத்தால் உன் சாவுக்கு நான் அழப்போவத ல்லை. ஆனால் அது உன் தோல்வி என்றுதான் என்னுடைய பெரும் அழுகையாயிருக்கப் போகிறது. இன்று நீ செத்தால் ஊருக்காகச் சாகப் போகிறாய். உனக்காகவே நீ சாகவில்லை. ஊர்ச்சொல் தாங்காமல் நீ சாகப் போகிறாய். இந்த ஊருக்கு என்ன தெரியும்? உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரியுமா? எச்சில்பட்ட நாக்கு ஒன்றுதான் அதற்கு உண்டு. நீ உயிருடனிருந்தாலும் அதற்கு ஒரு வேடிக்கைதான்; நீ இறந்தாலும் அதற்கு இன்னொரு வேடிக்கை. ஆகையால் அவர்களுடைய வேடிக்கைக்காக நீ சாகப்போகிறாயா என்பதைத் தீர்மானம் பண்ணிக்கொள். நாளடைவில் உபயோகத்தால் நைந்து நேரும் உடல் அழிவைத் தான் தடுக்க முடியாது. ஆனால் இப்பொழுது உனக்கு வந்திருக்கும் சாவை நீ சாவதோ தவிர்ப்பதோ உன் இஷ்டத்தில் தான் இருக்கிறது. ஏனெனில் இந்தச் சாவை நீ செத்தால் அது சாவில்லை. நீ உயிருக்கு இழைக்கும் துரோகம் தவிர வேறில்லை.”

ஆஸ்பத்திரியில் நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் வெளியே போவதற்காக மணியடித்தது. சந்துரு உயரமாய் எழுந்து நின்றான். நெற்றிப் பொட்டில் அடையடையாய் நரை யோடிய மயிருக்கும், அடர்ந்த புருவத்துக்கும், கூடிவரம் செய்ய மறந்து வளர்ந்த தாடிக்கும் அவன் ரிஷி போன்றிருந்தான். கனிவுடன் அவள்மேல் குனிந்தான்.

“ஜானா ”

” அண்ணா!”- அவள் உடல் பரபரத்தது.

“நீ என் தம்பி-”

அன்றிரவு அவள் ஒரு கனவு கண்டாள். அவளை ஒரு மாடு துரத்துகிறது. தட்டி நீட்டி நிமிர்த்திய கொடிக்கம்பி போல் வாலை உயர்த்திக்கொண்டு நாலுகால் பாய்ச்சலில், பீப்பாய் போன்ற உடல் குலுங்க அவளைத் துரத்துகிறது. அவள் ஒட அது ஒட, அவளை வெகு சீக்கிரம் நெருங்கிவிட்டது. அதன் மூச்சு அவள் முதுகை எரித்தது.

“அம்மா! அம்மா-”

கத்திக்கொண்டே ஓடுகிறாள். கல் ஒன்று தடுக்கிக் கீழே குப்புற விழுந்துவிட்டாள். மாடு அவள்மேலேயே வந்து கொண் டிருந்தது- வந்துவிட்டது. இனி எந்தக் கணம் கொம்புகள் முதுகில் ஏறிவிடப் போகின்றனவோ! கண்ணை இறுக மூடிக் கொண்டு விட்டாள்.

“தடக்-தடக்-தடக்” எங்கிருந்தோ குளம்பின் சப்தம் அவளை நோக்கி வருகிறது. மாடு அலறிக்கொண்டு ஓடிற்று

“தடக்-தடக்-தடக்”

அதைத் துரத்திக்கொண்டு ஒடும் அந்தக் குளம்பின் சப்தம் தூரத்தில் ஒய்ந்துகொண்டே போவது காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

“தடக் தடக் தடக் தடக் தடக் – ”

இப்பொழுது சத்தம் நெருங்கி வருகிறது. ஆனால் மாட்டின் மிரண்ட ஒட்டத்தின் சப்தம் இப்பொழுது இல்லை. குதிரைக் குளம்புச் சப்தம் மாத்திரந்தான். கண்களைத் திறந்தாள். அவளுக்குச் சற்று துரத்தில் அது நின்றுகொண் டிருந்தது. செவ்வரி படர்ந்த அதன் கண்கள் அவளை ஊடுருவின. பிறகு அது சாவதானமாய்த் திரும்பி வாலைச் சுழற்றிக்கொண்டு, பிடரிமயிர் சிலிர்க்க தலையை உதறிக் கொண்டு எதிரே புதர்களிடையே சென்று மறைந்தது.

ஜானா கண் விழித்துக்கொண்டாள். ஜன்னலுக்கு வெளியே ஆஸ்பத்திரியின் முற்றங்களிலும், தாழ்வாரங்களிலும் ஜோவென மழை கொட்டிக்கொண்டிருந்தது. அது அவள் உள்ளேயே பிரவாகமாய் இறங்கி உடல் நரம்புகள் ஒவ்வொன்றிலும் குளிர்ந்து பாய்வது போலிருந்தது.

மறுநாள் அவள் ரத்த வாந்தியெடுக்கவில்லை. அடுத்த நாளும் இல்லை. அதற்கடுத்த நாள், அடுத்த நாள். அன்றி லிருந்தே இல்லை. எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாது தானாகவே போய்விட்டது.

ஒருநாள் ஜானா விடும் திரும்பிவிட்டாள். அவள் குணமாகி வந்து சேர்ந்ததுதான் தாமதம். சந்துரு திடீரென்று ஒரு இளைப்பு இளைத்து ஒரு நரை நரைத்தான். சாய்வு நாற்காலியில் உடம்பு பஞ்சாய், கைகால் போட்டது போட்டபடி இரண்டு நாள் கிடந்தான். விபூதிப் பட்டைபோல் நெற்றியை உழுதுகொண்டு மூன்று வரிகள் விழுந்திருந்தன.

“ஜானா, வந்தயா? அம்மாடி, உன் அம்மா வயத்துலே பாலை வார்த்தயா? நீங்கள் எல்லாம் இனிமேலாவது நல்ல படியா இருக்கணும், அம்மா! நீ பிழைச்சது புதுப் பிறப்புத்தான். உங்க வீடு ராஜ குடும்பமாயிருக்க வேண்டியது. நல்ல மரத்துலே புல்லுருவி பாஞ்சாப்போலே உங்களுக்குன்னு கஷ்டம் வாய்ச்சிருக்கு!”

நாம் உலகத்தை விட்டு ஒதுங்க முயன்றாலும் உலகம் நம்மை விட்டு விடுவதில்லை.

“உன் மன்னிச் சிறுக்கி சொல்றாளாம். இருக்கறத்துக் குள்ளே சமத்தாய் ஆஸ்பத்திரிக்குப் போய்த் தொலைஞ்சாளே என் நாத்தனார், அப்படியே செத்துத் தொலையப்படாதோ? மறுபடியும் வந்து சேர்ந்துட்டாளா? இதுகளுக்கெல்லாம் ஏன் பகவான் உசிரை இரும்பாலே அடிச்சுப் போட்டிருக்கானோ தெரியல்லே” என்றாளாம்.”

“ஓ”

“அவளுடைய மன்னி வீட்டுத் தூற்றல் முன்போல அவ்வளவு உறுத்தவில்லை. அவளுக்கே ஏதோ சில எல்லை களைக் கடந்துவிட்டாற்போல் ஒர் உணர்ச்சி. உள்ளுற ஏதோ ஒரு வெற்றி வெறி. –

“உன் மருமான் அப்படியே உன் அம்மாவை உரிச்சு வச்சிருக்கானாம். கறுப்புத்தானாம். உன் அண்ணா இன்னும் போய்ப் பார்க்கலையா? எங்கே போறார், பிள்ளைப் பாசம் இழுத்தால் தானா ஒருநாள் வரார். நானா இனி போக மாட்டேன்” என்று சொல்லிண்டு திரியறாளாம்! இவ்வளவு அசடைக் கட்டிண்டு அழறதும் கஷ்டந்தான்.”

அந்த ஐந்து வருஷங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் எப்படிக் கழிந்தது என்பதற்கு அவளால் கணக்குச் சொல்ல முடியும்.

“அவ கிடக்காடி, அதைவிட்டுத் தள்ளு! சொல்லறவா என்னத்தைச் சொன்னாலும் தனக்காத் தெரியணும். ஏன் இப்படித் தன் தலைலே தானே மண்ணைப் போட்டுக்கறது? என்னதான் மலைலே விளையட்டுமே, உரலிலே மசிஞ்சுதானே ஆகணும்? அப்படி என்னடி இவ ஜமீந்தார் வீட்டுப் பொண்ணு தட்டுக் கெட்டுப் போறது! இவள் அப்பனை எனக்குத் தெரியாதா என்ன? விரலுக்கு மிஞ்சி வீங்கிப்பிட்டு எத்தனை பேருக்கு எவ்வளவு எவ்வளவு தொகைக்குப் பத்தரம் எழுதிக் கொடுத்திருக்கான், தெரியுமா? மானத்தை விட்டவாள்ளாம் பெரிய மனுஷான்னா, அவன் ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன் போ! அதுக்குச் சந்தேகமேயில்லை. மக்களுக்குச் சத்துரு மாதாபிதா”

மறுபடியும் நாட்கள் பழைய நாட்கள்தாம். வேலைகளும் பழைய வேலைகள்தாம். ஆட்டம் முடிந்து கூட்டம் கலைந்து, வெறும் நாற்காலிகளும் மேடைகளும் மாத்திரம் நிற்கும் கொட்டகை போன்ற வெறிச்சிட்ட நாட்கள். கலகலப்பாயிருக்க முயன்றாலும், பேச்சில் அதற்குச் சம்பந்தமற்ற எண்ணங்கள் எதிரொலித்துக்கொண்டிருக்கும் நாட்கள். வாய்தான் பேசிச் சிரித்துச் சீறித் தணிந்து மறுபடியும் சிரித்தது. மெளனமும் ஆழமும் நிறைந்த கண்களுடன் சந்துரு மெதுவாய் மாடிப் படியேறுகையிலோ இறங்குகையிலோ, வளையவருகையிலோ, வீட்டில் வாழும் பாம்பு நடமாடுவது போலிருந்தது. சத்தியத் துக்குக் கட்டுப்பட்டு அதுவும் யாரையும் கடிக்காது. அதன் வழிக்கும் யாரும் போக முடியாது. எந்தப் புதையலை அப்படிக் காத்தானோ?

சில சமயங்களில் கூடத்தில் மாட்டியிருக்கும் சுவாமி படங்களைப் பார்த்துக்கொண்டு நிற்பான். அவைகளில் கிருஷ்ணன் படம் ஒன்று. பாலகிருஷ்ணன், குஞ்சம் கட்டிய புல்லாங்குழலை அக்குளில் இடுக்கிக்கொண்டு படபடவெனச் சிறகுகளை அடித்துக்கொண்டு தன்னிடமிருந்து தப்ப முயலும் ஒரு பச்சைக்கிளியை இரு கைகளாலும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்துக்கொண்டு சந்துருவைப் பார்த்துச் சிரிக்கிறான். சந்துரு செவிகளைப் பொத்திக் கொள்வான்.

“ஏண்டி, மருமான் முழிமுழியாய்ப் பேசறானாமே! நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா ஒரு தங்கை பிறந்திருக்காம். அதுலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம். என்னமோ உன் மன்னி அவ அம்மாவைக் கேட்டாளாம், “எனக்குத்தான் புத்தியில்லேன்னா என்னைக் கூட்டிண்டு வந்துட்டேளே”ன்னு, எங்கேடி போறான், பிள்ளைப்பாசம் இழுத்தால், தானா வரான்”னு என்னை அடக்கி அடக்கி வெச்சு அவரும் வரல்லே, என் வாழ்க்கையும் பாழ் பண்ணிட்டேள்” இன்னாளாம். நாங்கள் கூப்பிட்டோம்னா நீ ஏண்டி வந்தே? என்று அவ ஏசினாளாம். அப்படி இப்படி வார்த்தை முத்தி அவள் அம்மா பெண்ணை ஒரு அடிகூட அடிச்சுட்டாளாம். கேட்டையோ விபரீதத்தை! அம்மாவாயிருந்தா என்ன, பெண்ணாயிருந்தா என்ன? அவாளவாளுக்குக் குழந்தைன்னு ஏற்பட்டுட்டா, அப்புறம் காட்டிலே வாழற புலி சிங்கங் கரடி தான். இந்தப் புத்தி அன்னிக்கே வந்திருந்தா இதெல்லாம் வேண்டாமோன்னோ? முதலையாவே பொறந்துட்டாக்கூட, ஆட்டை முழுங்கலாம், மாட்டை முழுங்கலாம். மனுஷனை முழுங்கலாம். அதுக்கோசரம் ஆனையை முழுங்க முடியுமா? வாயைக் கிழிச்சிண்டு நிக்க வேண்டியதுதான்!-”

அப்புறம் ஒருநாள், கோகுலாஷ்டமி தினம், குனிந்து கொண்டே, ஜானா வாசற்படியிலிருந்து இழை கோலத்தில் சிற்றடிகளைப் போட்டுக்கொண்டே நடை தாண்டிக் கூடத்துள் வந்துகொண்டிருக்கையில் திடீரென்று, வெறும் பால் சதையில் அப்பம்போல் இரு குழந்தைப் பாதங்கள் அவள் வரையும் சிற்றடிகளுடன் ஒன்றினாற்போல் இருந்தன. கதவோரத்தில் பதுங்கிக் காத்திருந்த மிருகம்போல் தாய்மை உணர்ச்சி அவள் மேல் பாய்ந்து நெஞ்சை நெருக்குகையில் ஜானா அப்படியே ரேழிக் கதவில் சாய்ந்துவிட்டாள். கண்ணிர் மாலை மாலை யாய்க் கன்னங்களில் வழிந்து குளிர்ந்தது. கைக் கந்தையிலிருந்து இழை கோலமாவு சொட்டுச் சொட்டெனச் சொட்டிற்று. பாதச் சங்கிலியின் சதங்கை சலசலத்தது. வெள்ளி அரைஞாண் பட்டை தீட்டிக்கொண்டு வளைந்து வளைந்து ஒடிற்று.

ஜானாவுக்கு இப்பொழுது எதுவுமே தாங்க முடிவதில்லை. சாவு தப்பினாலும் உடல் ஒட்டைச் சட்டிதான். எப்படியும் வீம்புக்கு வாழும் உயிர்தானே! அவள் தன் மருமானைப் பற்றி நினைப்பதுண்டென்றாலும் இம்மாதிரி இதுவரை நேர்ந்ததில்லை. ஆனால் அவள் கொட்டகை மேடை அன்றிலிருந்து வெறிச்சென்றில்லை. இன்னும் அவள் கண்ணால் கண்டிராத ராமதுரை அவள் மன அரங்கில் ஆட ஆரம்பித்துவிட்டான். காலி நாற்காலி சோபாக்களிடை ஜானா ஒண்டியாய், சிரித்துக் களிக்க ஆரம்பித்து விட்டாள். எப்படியும் இது இப்படியே இருக்க முடியாது. என்றேனும் ஒருநாள் வருவான் அல்லவா? தனக்காகக் காத்திருக்கச் சொல்லாமல் சொல்லுகிறாள், அவ்வளவுதானே!

“அத்தே நான் வரேன் இரு அத்தே நான் ஜூட்- ஒளிஞ் சிண்டிருக்கேன். என்னைக் கண்டுபிடி! அத்தையாலே கண்டு பிடிக்க முடியல்லியே! முடியல்லியே! நானே வந்துத்தேனே! மடிலே வந்து வீந்துத்தேனே!-”

அப்படி அவன் வந்த நாளும் வந்தது.

அன்று ஏதோ விடுமுறை. ரேழியில் சந்துரு பக்கத்து வீட்டுக் குழந்தையை மடியில் வைத்து அத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வாசலில் ஒரு ரிக் ஷா வந்து நின்றது. “அண்ணா, மன்னிடா!”

அம்மா ஈரக்கையைத் தலைப்பில் துடைத்துக்கொண்டு உள்ளிருந்து ஓடி வந்தாள். கஷ்டங்களைப் பட்டுப்பட்டு உடல் தளர்ந்து பெருத்துவிட்ட தாய்மலைபோல் இருந்தாள்.

கெளரி இடுப்புக் குழந்தையைக் கீழே இறக்கிவிட்டுக் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றாள்.

“என்னை மன்னிச்சுடுங்கோ!”

சந்துரு முகம் சுவர்ப்பக்கம் திரும்பியிருந்தது. இன்னும் அவன் தன் மனைவியைப் பார்க்கவில்லை. அவன் குரல் கனிரென்றது.

“ஜானா, இவளை முன்னால் பச்சை ஜலத்தில் தலைக்கு ஊற்றி ஸ்நானம் பண்ணி வைத்து வேறு புடவை உடுத்து இங்கு அழைத்துவா.”

ஜானாவுக்குத் திக்கென்றது.

“இவள் பிறந்த வீட்டார். இவளுக்கு ஸ்நான பூர்வமாக இறந்துவிட வேண்டும், நான் இவளுடன் பேசுமுன்பு”

“அண்ணா, வீட்டுக்கு வந்த பெண்ணை அப்படி யெல்லாம் பண்ணக்கூடாது.டா!”

“நான் சொன்னதைக் கேள்.”

“சந்துரு!”

“எனக்கு எதிர் பேசாதேயுங்கள்!”

சந்துரு அடிபட்ட மிருகம்போல் கத்தினான். அவன் கண்கள் கொதித்தன. “இந்த நிமிஷத்திற்காக நான் இத்தனை நாட்கள், மாதங்கள், வருஷங்கள், காத்திருந்தேன். இந்த நிமிஷத்தை என்னிடமிருந்து பிடுங்குபவரோ, இதை மாற்றப் பார்ப்பவர்களோ யாராயிருந்தாலும் சரி, அவர்களை நான் என்னுடைய சத்ருக்களாகவே பாவிக்கிறேன்!”

வறண்டு போன உதடுகளை அவன் நாக்கால் நக்கி ஈரப் படுத்திக்கொள்கையில் அவன் அசல் பாம்பு போலவே இருந்தான்.

ஸ்நானம் பண்ணிவிட்டு வேறு புடைவையுடன் கெளரி மறுபடியும் ரேழியில் வந்து நின்றாள். காலை வேளையின் சிறு குளிரில் உடல் கொஞ்சம் நடுங்கிற்று. அவள் முகத்தில் ஒன்றுமே தெரியவில்லை. அவள் முகமே ஒரு முகமூடி ஜானாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. ஐந்து வருஷங்களுக்கு முன் அன்றிரவு கண்டபடிதான் இன்னும் இருந்தாள்.

“என்னை மன்னிச்சுடுங்கோ.”

அவள் வார்த்தைகளைச் சந்துரு வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை.

“பையன் சட்டை நிஜார் எல்லாவற்றையும் கழற்று.”

கழற்றினாள்.

“ஜானா, என் சொக்காய் ஜோபியில் கத்தியிருக்கிறது. கொண்டு வா.”

“அண்ணா! அண்ணா!” என்று ஜானா அலறினாள். சந்துரு இன்னதுதான் செய்வான் என்று என்ன சொல்ல முடியும்? அவன் எதிர்பாராத தன்மைகளுடையவன். சந்துரு உள்ளே போய், பேனாக்கத்தியை எடுத்து வந்து, குழந்தை இடுப்புக் கயிற்றை அறுத்துக் கீழே எறிந்தான்.

“உன் வீட்டுத் துணிகளையும் கயிற்றையும் சுருட்டித் தெருவில் கொண்டுபோய் எறி.”

கெளரி எறிந்துவிட்டு வந்தாள். அவள் கண்கள் பெருகின. “என்னை மன்னிச்சுடுங்கோ. சந்துரு கத்தியை மடக்கிக் கொண்டான்.

“நீ இந்த ஐந்து வருஷங்களாய் எப்படி இருந்தாய், என்ன பண்ணிக்கொண்டிருந்தாய் என்றெல்லாம் உன்னைக் கேட்கப் போவதில்லை. இந்த வீட்டிலும் உன்னை யாரும் கேட்கமாட் டார்கள். இது என் கட்டளை. ஆனால் இனி நீ இங்கு இருப்ப தற்கு ஒரே காரணந்தான் உண்டு. உன் வயிற்றில் பிறந்த இந்தக் குழந்தைக்கு நான் தகப்பனாயிருக்கிறேன். என்னுடைய குழந்தையைப் பெற்றவளாய் நீ வாய்த்துவிட்டாய். அவ்வளவு தான்.”

“என்னை மன்னிச்சுடுங்கோ!”

“உன்னை மன்னிப்பது- அதோ கூடத்தில் அடுக்கடுக்காய் மாட்டியிருக்கும் அந்தப் படங்களைக் கேட்டுக்கொள். அது என் வேலையுமில்லை. அதற்கு எனக்குச் சக்தியுமில்லை. ஏனெனில் நான் மனிதன்- சந்துரு காதைப் பொத்திக் கொண்டு மாடிக்குப் போய்விட்டான்.

“என்னை மன்னிச்சுடுங்கோ”

ஜானா குழந்தையை வாரி மார்புடன் அனைத்துக் கொண்டாள்.

“அம்மா இந்தாம்மா- உன் பேரன்”- இப்பொழுதுந்தான் அழுகை வருகிறது.

“அம்மா என்னை மன்னிச்சுடுங்கோ”

“எல்லாரும் உன்னை மன்னிப்பார்கள், அம்மா! கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும். எப்படியோ, இப்பவாவது வந்தையே!”

“அக்கா என்னை மன்னிச்சுடுங்கோ”

ஜானாவுக்குக் காது கேட்டதோ இல்லையோ, குழந்தை யைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அவனை மார்போடு தழுவிக் கன்னங்களை மாறிமாறி முத்தமிடுகையில் பையன் மூச்சுத்திணறி விசித்துக்கொண்டு திமிறப் பார்க்கிறான். ஜானா வுக்கு அந்த ஒரு நிமிஷத்தில் எல்லாம் மறந்துபோய்விட்டது.

“என்னை மன்னிச்சுடுங்கோ”.

சந்துரு உள்ளுறக் கருகிப் போய்விட்டான். எவ்வளவு முயன்றும் அவனால் மறுபடியும் புஷ்பிக்க முடியவில்லை. ராமதுரையைப் பார்க்கையில், அவன் தனக்குள் ஏதோ மறந்து போனதை ஞாபகப்படுத்திக்கொள்வதுபோல் நெற்றிப் பொட்டைத் தேய்த்துக்கொண்டு நிற்பான்.

“டேய் கண்ணா! உங்கப்பாடா- உங்கப்பாகிட்டப் போடா! அதான் உங்கப்பா சந்துரு வேணுமென்றே முதுகை அவன் பக்கம் திருப்பிக்கொள்வான். “என் குழந்தைக்கு அதன் தகப்பனையே பரிச்சயம் செய்துவைக்கும் கட்டம்கூட வந்து விட்டது பார்த்தையா!” என்று குமுங்கிக் குமுங்கிக் கருகிப் போனான்.

“கொட்டு மேளம், கொட்டு மேளம்”- பயல் கழுத்தில் ஒரு தகரத்தை மாட்டி அடித்துக் கொண்டு குஞ்சுநடை போட்டுக்கொண்டு வருவான். சந்துரு அவனைக் கவனிக்கை யில் மழைக்காலத்தில் மேகங்களைச் சூரியகிரணம் பிளந்து எட்டிப் பார்ப்பதுபோல் முகம் சற்று இளகி அதன் வரிகளும் சுருக்கங்களுங்கூடச் சில மறைந்து இளமையடைந்தாற்போல் தோன்றும். ஆனால் மறுபடியும் மூட்டமடைந்துவிடும். குழந்தை திகைத்து நிற்பான். அந்தக் கண்ணராவியைக் கண்கூடாய் ஜானா பார்த்துவிட்டு அவளுக்குப் பொறுக்கவில்லை. குழந்தையை அப்படியே வாரிக்கொண்டாள்.

“அடே! குழந்தை உன்னை என்னடா பண்ணித்து? அதை ஏண்டா வெறுக்கறே? அவன் உன் குழந்தைதாண்டா!” சந்துரு அசதியுடன் தலையை அசைத்தான்.

“இல்லை; அவனை என் குழந்தை என்று நான் நினைத்துக் கொள்ளும்படி அவள் வைக்கவில்லை. அது பிறக்கு முன்னரே அவள் அதைத் தன் குழந்தையாக்கிக் கொண்டுவிட்டாள். எங்கள் இருவர் குழந்தை, அதனால் அது நம் குழந்தை என்று எண்ணுவதற்கே இடம் வைக்கவில்லை. எங்கள் குழந்தையா யிருந்தால்தானே அது என் குழந்தையாகும்? இனி அதற்கே வழி தோன்றுமா? நான் நினைக்கவில்லை. ஒருவேளை நானும் அவனும் தோழர்களாவோம்; ஆனால் அப்பனும் பிள்ளையும் ஆவோமோ? இல்லை. என்னுள் அம்மாதிரி உணர்ச்சிக்கு ஆதாரமான ஏதோ எரிந்துவிட்டது. இனி நான் என்ன செய்வேன்!”

வாழ்க்கை வதங்கிப் போவது ஆச்சரியமல்ல. ஆனால் வதங்கிப்போன நினைவு மாத்திரம் வாடாமல் வாசமும் இலாது இருக்கும் நிலைதான் பயங்கரம்.

“எனக்கென்று இப்பொழுது ஒன்றுமில்லை. இதுவரை என் வீம்பு இருந்தது. இப்பொழுது நான் அதனுடையதாய் விட்டேன்.”

வாழ்க்கை ஒரு பரீட்சைக் கணக்கு மாதிரிதானிருக்கிறது. எங்கேயோ எப்படியோ ஒரு சிறு தப்பு நேர்ந்துவிட வேண்டியதுதான்; விடை எங்கேயோ கொண்டுபோய் விட்டு விடுகிறது. இத்தனைக்கும் தெரிந்த கணக்கு புரிந்த கணக்கு முன்னால் போட்ட கணக்குத்தான்.

“என்னை மன்னிச்சுடுங்கோ !”

இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடந்தேடி யலையும் வெளவால் போன்று, மன்னிச்சுடுங்கோ, மன்னிச்சுடுங்கோ என்ற வார்த்தையின் ஒலியும் உணர்வும் சதா நீந்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் ராமதுரை, குழந்தை, என்ன செய்வான்? ஜானா இல்லாவிடில் அவனும் பாழா யிருப்பான். இந்த வீட்டில் ஏதோ நேரக்கூடாதது நேர்ந்து விட்டதென மூங்கையாய்ப் புரிகிறது. நாளாக ஆக அரை குறையாகக் கொஞ்சங் கொஞ்சமாய் விவரங்கள் புரிந்து கொண்ட பிறகு, அவன் அத்தையுடனேயே ஒட்டிவிட்டான். சில சமயங்களில் அவளையே அம்மாவென்று கூப்பிட்டுப் பார்த்துக்கொள்வான்.

சந்துருவும் கெளரியும் ராமதுரையைப் பெற்று அவளிடம் கொடுத்தாற்போல்தான் ஆகிவிட்டது. தான் வளர்த்த பிள்ளை யின்மூலம் ஜானா தன் நினைவு பெற்றாள்.

ராமதுரையும் சமாளித்துக்கொண்டு விட்டான். நல்ல வேளையாக அவன் காவிய புருஷன் அல்ல. காவிய புருஷர் களாலும் தெய்வங்களாலும் பிறர்க்குப் பெரும் பயன் இருக்கலாம். ஆனால் தமக்கும் தம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் பெருந்துன்பந்தான்.

இதோ வருஷங்களும் ஒடிவிட்டன. ராமதுரைக்குக் கல்யாணம் நடக்கிறது. ஜானாவின் இஷ்டம் அப்படித்தான். மருமான் கல்யாணத்தைச் சுருக்கப் பார்த்துவிட வேண்டு மென்னும் அவா. எப்படியும் ஒட்டைச் சட்டியாகிவிட்டதால், ராமதுரை வீட்டுக்கு வந்துவிட்ட பிறகு உடல் நலிய ஆரம்பித்து விட்டது. ஆனால் அந்தப் பழைய பயங்கரத்துடன் அல்ல. கொஞ்சங் கொஞ்சமாய் நைந்து ஒடுங்க ஆரம்பித்தது. கொழுக்கட்டை அதில் வெந்தாய் விட்டது. இனி சட்டிக்கு உபயோகமில்லை.

கொட்டுமேளம் கொட்டுகிறது. இது எதற்கு? ராமதுரைக்கு மாத்திரமா? சந்துருக்குந்தான். தனக்குந்தான். ஏதோ இன்னும் தனக்குப் புரியாத முறையில் தன் மன்னிக்குந்தான். எல்லோ ருக்கும் இன்று ஒரு புதுக்கல்யாணம் நடந்துகொண்டிருக்கிறது. வீம்பின் நித்திய கல்யாணம்.

“கொட்டு கொட்டு, நன்றாய்க் கொட்டு.”

“கெட்டிமேளம், கெட்டிமேளம்: மாங்கல்ய தாரணம் நடக்கிறது; கெட்டிமேளம்!”

தம்பதி சகிதமாய் ராமதுரை அத்தையை நமஸ்கரிக்க அறைக்குள் நுழைந்தபோது ஜானாவின் கண்கள் விழித்தது விழித்தபடிதான் இருந்தன. அவள் முகத்தில் அன்பும் இன்பமும் அமைதியும் நிறைந்த புன்னகை உறைந்து போயிருந்தது. தீராத் தாகம் தீர்ந்த முகத்தில்தான் அந்த பாவத்தைக் காணமுடியும்.

பின்னாலேயே சந்துரு வந்து நின்றான். அவன் பின்னால் கௌரி.

“அக்கா, என்னை மன்னிச்சுடுங்கோ!”.

ஜானாவுக்கு அது கேட்டதோ இல்லையோ, ஜானா தன் சுனை போய்ச் சேர்ந்துவிட்டாள்.

– ஜனனி (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு ஜூன் 1992, திருநாவுக்கரசு தயாரிப்பு. நன்றி: https://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *