கொடுத்து வைத்தவன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 10,160 
 

‘எத்தனை நாளா இந்த வலி இருக்கு.?’

“இப்போ தான் ஒரு 4 நாளா ..’

எதாவது புதுசா வேலை பண்ணினேளா??

‘இல்லை எப்போவும் இருக்கற வேலை தான்..என்ன இப்போ குழந்தைகள் எல்லாம் லண்டன்லேர்ந்து வந்திருக்கற சந்தோஷம் அது மட்டும் தான் எக்ஸ்ட்ரா ‘
புன்னகைத்தபடி சொன்ன பத்மா மாமியை பார்த்தேன்.

‘ ஓ ஸ்ரீதர் வந்திருக்கானா ?தடியன் எனக்கு போன் பண்ணவே இல்லை.’ என்றவுடன்..

‘இல்லப்பா வந்து இறங்கின மறானாள் லாவண்யா தம்பி நிச்சயம் .அதுல கொஞ்சம் பிஸி. இப்போ தான் கொஞ்சம் ப்ரீ நாளைக்கு உன்னை வந்து பார்கறேன்னு இருக்கான். இப்போ நான் வந்ததே அவனுக்கு தெரியாது . கை வலின்னு சொன்னா ரொம்ப ப்ஸ் பண்ணுவான்.அப்புறம் என்னால ஒரு வேலையும் பார்க்க முடியாது.ரெஸ்ட் எடுக்க வெச்சுடுவான். அவா இருக்கறதே 3 வாரம் தான். அப்போ உடம்பு பாராட்டிண்டு இருந்தால் எப்படி?அவனுக்கு தெரிய வேண்டாம். எனக்கு எதாவது மருந்து குடு. நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்.”

மாமியை பார்த்தேன். ஸ்ரீதர் என் பால்ய நண்பன். பள்ளிகூடத்தில் படித்த நாட்களில் என் வீட்டில் இருந்து என் தாயார் கையால் உண்டதை விட பத்மா மாமி கையால் சாப்பிட்டது தான் அதிகம்.

நான் பிராமணன் இல்லை. எனக்கு அவர்கள் வீட்டில் அந்த உணர்வு ஏற்பட்டதே இல்லை.. தங்கள் குடும்பத்தில் ஒருவன் போல என்னை நடத்தியது என்னால் மறக்கவே முடியாது. 15 வயதில் எங்கம்மா என்னை விட்டு போனா.அந்த நாள் முதல் எனக்கு ஒரு தாயாகவும் மாறிய பத்மா மாமி ஒரு தேவதை.

10 வகுப்பு முடித்தப்பின் ஸ்ரீதர் இன்ஜினியரிங் படிக்க கோச்சிங் கிளாஸ் சேர்ந்த போது , சாம்பு மாமா. .பத்மா மாமியின் கணவர் என்னைக் கேட்டார்.. ” டேய் நீ என்னடா பண்ண போறே?’

‘டாக்டருக்கு படிக்க ஆசை மாமா ஆனா எங்கப்பாக்கு வசதி இல்லை.. சயின்ஸ் குரூப் தான் படிக்கப் போறேன். அப்புறமா பி. எஸ் .சி எதாவது படிக்க வேண்டியது தான்.’

‘ என்னாடா மக்கு மாதிரி பேசறே!! ஒண்ணுமே இல்லாதது எல்லாம் காசு குடுத்து சீட் வாங்கிண்டு டாக்டர்ன்னு போர்டு மாட்டிண்டு ப்ராணனை வாங்கர்துகள்.நீ நன்னா படிக்கற பையன். உனக்கென்ன கேடு.? மெரிட்ல வாங்கிடலாம்டா சீட். உங்களுக்கு தான் நெறைய கோட்டா எல்லாம் இருக்கே. யூஸ் பண்ணிக்கோ. என்ன கோச்சிங் வேணுமோ சொல்லு நான் சேத்து விடறேன். எங்கப்பா சம்பாதிச்ச சொத்து வெரும போச்சுனு இல்லாம இதுக்கும் உபயோகபடட்டும்.நீ டாக்டர் ஆகி எனக்கு வைத்தியம் பாரு.. ஓகே வா??”

வார்த்தை இல்லை எனக்கு அவருக்கு நன்றி சொல்ல. எங்கப்பாவிடமும் பேசி எனக்கு வேண்டியதை செய்து கொடுத்த அந்த மனித தெய்வம் நான் படித்து முடித்து வரும் வரை காத்திருக்கவில்லை..நான் மூன்றாம் ஆண்டு முடிப்பதற்குள் அவர் போய் சேர்ந்து விட்டார்.

என் படிப்பு முடிந்த நாள் முதல் மாமி என்னை தவிர வேறு யாரிடமும் வைத்தியத்துக்குப் போக மாட்டார்..அவர்கள் இருந்த பூர்வீக வீட்டை ஒரு ஜாய்ண்ட் வென்ச்சர் போட்டு ப்ரோமொடேரிடம் கணிசமான தொகையும் ரெண்டு வீடும் பெற்று செட்டில் ஆகி விட்டார்கள்..அந்த இடத்திலேய எனக்கும் கொஞ்சம்கம்மி விலையில் ஒரு 2 பெட்ரூம் வீடும் வாங்க உதவி செய்தார் மாமி.

ஸ்ரீதர் லண்டனில் வேலை கிடைத்து சென்ற போது அவன் தான் அதிகம் அழுதான். மாமி ” நீ வாழ வேண்டிய வயசு இந்த வயசுல சம்பாதிச்சு பொண்டாட்டி குழந்தை எல்லோரையும் சந்தோஷமா வெச்சுக்கணும்டா . எனக்கு என்ன கொறச்சல்.கையும் காலும் நன்னா தானே இருக்கு. போதா கொறைக்கு நம்ம அருண் வேற பக்கத்துலேயே இருக்கான் அவன் என்னை பாதுப்பன்.’

ஸ்ரீதர் என் காலில் விழாத குறையாக ‘டேய் அருண் நீ பக்கத்துல இருக்கிற நிம்மதி ஒண்ணு தான் எனக்கு இப்போ இருக்கு. அம்மாவை பாத்துக்கோ.’. என்று ஒரு ஆயிரம் முறை சொல்லி விட்டுத் தான் போனான்.

பத்மா மாமி ரொம்ப பிஸி.அந்த பிளாட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஸ்லோக கிளாஸ். வெயில் காலத்தில் வடாம் போட்டு குடுப்பது. யாருக்காவது உடம்பு சரி இல்லை என்றால் கை வைத்தியம் மட்டும் இல்லாமல் சாப்பாடும் செய்துத் தருவது என்று தன்னை எப்போதும் பரபரப்பாக வைத்து கொள்ள தேர்ந்து கொண்டார்.

இப்போது குடும்பத்துடன் வகேஷனுக்கு வந்து இருக்கான் போல இருக்கு.அவன் மனைவியும் மகளும் கூட வந்திருப்பதாக மாமி சொன்னார்.

‘ என் பேத்தி பத்மாசினி இருக்காளே .. ஒரு நிமிஷம் சும்மா இருக்கறது இல்லை. ஸ்லோக கிளாஸ் வர குழந்தைகளோட சேர்ந்து என்னமா அவளும் பாடறா தெரியுமா?? ராத்திரில என் பக்கத்துல தான் படுத்துப்பென்னு ஒரே அடம். ஸ்ரீதரும் லாவண்யாவும் பாட்டியை டிஸ்டர்ப் பண்ண கூடாது. நீ உன்னோட பெட்ல தனியா படுத்துகோன்னு ரொம்ப சொல்லி பார்த்தா.அது மாட்டவே மாடேன்றுத்து.என் பக்கத்துல படுத்துண்டு ரெண்டு கதையாவது கேக்கணும் அவளுக்கு . நீ ஆத்துக்கு வாயேண்டா . எல்லாரையும் பார்த்த மாதிரியும் இருக்கும். என் கையால சாப்ட மாதிரியும் இருக்கும்.’

சாம்பிள் மருந்து தேடி எடுத்து ஒரு பெயின் பாம் குடுத்தேன்.

‘ ஒண்ணும் இருக்காது மாமி. இந்த மருந்து தடவிக்குங்க .சரியாய் போய்டும். இல்லைனா ரெண்டு நாள் கழிச்சு எக்ஸ் ரே எடுத்து பாக்கலாம்.நான் நைட் கிளினிக் முடிச்சுட்டு ஒரு எட்டரை மணிக்கு வரேன். ஸ்ரீதர் கிட்ட சொல்லுங்க.” என்றபடி வழி அனுப்பி வைத்தேன்.

இரவு அவர்கள் வீட்டை அடையும் பொது உள்ளே பயங்கர சிரிப்பு சத்தம் கேட்டது. ஸ்ரீதர் மனைவி லாவண்யா
எதற்கோ சத்தமாக சிறிது கொண்டிருந்தாள். என்னை பார்த்தவுடன்..’ ஹலோ அருண் ஹொவ் ஆர் யூ ? கம் கம் ஸ்ரீ அண்ட் அம்மா ஆர் வைடிங் பார் யூ என்றபடி அழைத்தாள் . உள்ளே சென்று பார்த்தேன் . டிவியில் எதோ காமெடி ப்ரோக்ராம் ஓடி கொண்டிருந்தது.

‘ நீங்க இந்த தமிழ் ப்ரோக்ராம் எல்லாம் பாப்பிங்களா ?’ என்றபடி அங்கிருந்த சோபாவில் உக்கார்ந்தேன்.
‘ ஓ எஸ்ஐ டூ..இன் பாக்ட் என் பொண்ணும் பாப்பா. அவ நன்னா தமிழ் பேச இந்த தமிழ் சேனல்ஸ் ஒரு முக்கிய ரீசன். ஒரு நிமிஷம் நான் பொய் ஸ்ரீயை கூப்பிட்றேன்.. அவன் அம்மா கூட உள்ள ரூம்ல எதோ பேசிண்டு இருக்கான்.’

‘ பரவாயில்லை நான் உள்ளே போய் பாக்றேன் . நீங்க டிவி பாருங்க..’ என்றபடி உள்ளே சென்றேன்.

‘ அம்மா பிடிவாதம் பண்ணாதே.. இந்த தடவை நீ எங்க கூட வா. சீ பத்மாசினி இஸ் சோ பாண்ட் ஒப் யூ . நீ அங்கே வந்தேன்னா எங்களுக்கும் ரொம்ப நிம்மதியா இருக்கும் நீ இங்க எப்படி இருக்கியோன்னு நினைக்கரப்போ ரொம்ப கஷ்டமா இருக்குமா எனக்கு. நான் இவ்ளோ சம்பாதிச்சு என்ன யூஸ் .. உன் கூட இருக்க முடியலையேனு வருத்தப்பட்டுண்டு தான் இருக்கேன்.’
என்னை பார்த்தவன் ‘ வாடா தத்து புத்ரா … நீயாவது கொஞ்சம் எடுத்து சொல்லு கிளம்ப மாட்டேன்க்ரா இங்கேர்ந்து .நீ தான் அவளோட டாக்டர்.. எதோ கை வலி போல இருக்கு என் கிட்ட சொல்லவே இல்லை மருந்து தடவிண்டு ரகசியமா இங்க உக்காந்துண்டு இருக்கா.இது மாதிரி என்ன எல்லாம் என் கிட்ட சொல்லலியோன்னு எனக்கு இப்போ கவலை. ‘

மாமி எதற்கும் கவலை படாது கட்டிலில் தன் பேத்தியோடு உக்கார்த்திருந்தார்.அந்த கட்டிலை பார்த்தேன். அந்த காலத்து இரும்பு ஒற்றை கட்டில்.சுவரை ஒட்டி ஓரமாக போடப் பட்டிருந்தது.

‘ சாப்பிட போலாமா? என்றபடி எழுந்த மாமியை பார்த்து . ‘ நோ அம்மா நீ வர வேண்டாம் நானும் லாவண்யாவும் எல்லாம் ரெடி பண்ணி வெச்சுட்டு கூப்பிடறோம். ப்ளீஸ் கையை ஸ்ட்ரியின் பண்ணாதே.” கம் லிட்டில் கேர்ள் லெட்ஸ் ஹெல்ப் பாட்டி . நீ தான் இன்னிக்கி எல்லாருக்கும் சாதம் போடணும் ‘ என்று சொல்லியபடி தன மகளை அழைத்துக் கொண்டு செல்லும் மகனை வாஞ்சையுடன் பார்த்தாள் .

‘ ஏன் மாமி இந்த கட்டிலேயா படுக்கறீங்க..?’

‘ஆமாம்பா .. குழந்தையை ஓராம விட்டுடுவேன் . நான் இந்த பக்கம் படுத்துப்பேன்..கீழ விழுந்துடாம இருக்கணுமே..’

‘ மாமி உங்க தோள்பட்டை இதுனால தான் வலிக்குது .இந்த கட்டில் ரெண்டு பேர் படுக்க இல்லை. அதுவும் ஒரு 8 வயசு குழந்தையை படுக்க வெச்சா நீங்க திரும்பி படுக்க கூட முடியாது. நீங்க ஒரே பக்கமா படுக்கறீங்க அதுனால தான் வலிக்குது’

‘நீ ஒண்ணும் சொல்லாதே அருண். அவன் ஏற்கனவே என்னை எதோ ஒடியற பொருள் மாதிரி ட்ரீட் பண்றான். நீ இதை சொன்னா குழந்தையை என் பக்கத்துல்ல படுக்க விட மாட்டான் . இன்னும் 2 வாரம் தான் அதுக்கப்புறம் இந்த கைக்கு என்ன வேலை இருக்கு?? அப்புறம் ரெஸ்ட் எடுத்து சரி பண்ணிக்கிறேன்.. அவனுக்கு என்னை எப்படியாவது கூட்டிண்டு போனும்னு எண்ணம் இருக்கு. எனக்கு இப்போ தான் 65 வயசு ஆறது. கை கால் நன்னா இருக்கு.. லாவண்யா டெலிவரி போது நான் போய் இருந்துட்டு வந்தாச்சு. கொழந்தைகள் ரொம்ப அருமையானவா. கொஞ்ச நாள் ப்ரீயா நன்னா இருக்கட்டும் . முடியலன்னா அப்போ பாத்துக்கலாம். எனக்கு நீ இருக்கே பக்கத்துல . என்ன கவலை. சொல்லு?? அவனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணு.. ரொம்ப உடம்பை போட்டு அலட்டிக்கிறான்.”

டின்னர் முடிந்து நான் கிளம்பும் போது வாசல் வரை வந்து வழி அனுப்ப வந்தனர் ஸ்ரீதரும் லாவண்யாவும் .
‘அம்மாவை நல்லபடியா பாத்துக்கோ அருண். நானும் லாவண்யாவும் இன்னும் ஒன் இயர் தான் லண்டன் வாசம். தென் வி ஆர் கமிங் பாக்.அம்மாகிட்ட இப்போ இதை சொல்ல வேண்டாம். அவ தன்னால தான் நான் எதோப் பெரிய தியாகம் பண்றதா நினைச்சு பீல் பண்ணுவா. நெறைய சம்பாதிச்சாச்சு . அவளோட காலம் வரை ஐ வான்ட் டு ஸ்பென்ட் வித் ஹேர்.லாவண்யாவும் அதே தான் நினைக்கறா அது வரைக்கும் அம்மா உன் பொறுப்பு . நீ என்னோட பிரதர் . ஐ நோ ஐ கேன் டிபெண்ட் ஆன் யூ .’ என்றான் ஸ்ரீதர்.

கொடுத்து வைத்தவன் நான்.

இது போல் ஒரு அன்பும் நேசமும் இந்த வாழ்கையில் பார்த்து அனுபவிக்க…

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

1 thought on “கொடுத்து வைத்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *