கிராமத்து சகோதரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 21,898 
 

கிராமத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ள குடும்பத்தோடு சென்று வரலாம் என அப்பா கோவிந்தசாமி முடிவு செய்து அம்மாவிடம் கேட்டார்.

அம்மாவும், ஆமாம் கிராமத்துக்கு திருவிழாவுக்கு போயி ரொம்ப வருஷம் ஆச்சு,இந்த வருஷம் போய் வரலாம் என்றாள்.

கவிதாவுக்கு கோயில்திருவிழாவிற்கு கிராமத்துக்கு செல்வதில் விருப்பம் இல்லை. அவள்,இந்த விடுமுறையில் பள்ளி தோழியருடன் சென்னையை சுற்றி வர வேண்டும் என நினைத்து இருந்தாள்.

ஆனால்,அம்மா சரோஜா,”நீ அடுத்து வருஷம் கல்லூரியில் சேந்துட்டா, அடுத்து நாலு வருஷத்துக்கு நாம கிராமத்துக்கு திருவிழாவுக்கு வர முடியாது,அதனால இந்த வருஷம் நாம கட்டாயம் கிராமத்துக்கு போகணும், உன்னோட தாத்தா,பாட்டியும் உன்ன பாக்கணும்னு ஆசைப்படுறாங்க என்று கூறிவிட்டாள்.

ஊருக்குள் நுழைந்த உடனேயே அந்த கிராமத்தின் செழிப்பு தெரிந்தது. பச்சைபசேலெனவயல்கள், மாந்தோப்பு,தென்னந்தோப்பு போன்றவை வழி நெடுகிலும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.

வீட்டினுள் நுழைந்தவுடனேயே பாட்டி கவிதாவை கட்டிக்கொண்டு “ராசாத்தி,பாத்து எத்தனை வருஷம் ஆச்சு,என ஆசையாக பேசினாள்.தாத்தாவும் கவிதா கண்ணு எப்படிம்மா இருக்க? இந்த தாத்தா,பாட்டியைமறந்துட்டியா?என கேட்டார்

கவிதாவுக்கு இந்த கிராமத்து சூழ்நிலைபிடிக்கவில்லை.,மொபைல் போனும் நெட் ஒர்க் கிடைக்காமல் யாருடனும் சாட் செய்யமுடியவில்லை.

பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. சென்னையில் சகல வசதிகளையும்அனுபவித்துவிட்டு, கிராமத்தில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை அவள் பெரிய குறையாக நினைத்தாள்.

கிராமத்தின் எல்லையில் மாரியம்மன் கோவில் இருந்தது. நிறைய தற்காலிக திருவிழா கடைகள்போட்டிருந்தார்கள். ள்மைக் செட் அமைத்து சினிமா பாட்டுக்களை அலறவிட்டார்கள். கரகாட்டம்,இரவில் கூத்து நாடகங்கள் மெல்லிசை கச்சேரி போன்றவை தினமும் நடைபெற்றது.

சித்தப்பா பெண் ஈசுவரியை ஊரை சுற்றிக்காட்ட சொல்லி கவிதாவுடன் அனுப்பிவைத்தார்கள்.

அவள் மிகவும் அமைதியாக பேசினாள்,கிராமத்து பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பதாக கூறினாள்.அவளுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அக்காவை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இக்கிராமம் விவசாயத்தை தவிர மற்றபடி இன்னமும் வளர்ச்சி அடையாத குக்கிராமமாகவே இருந்தது. ஊரில் திருவிழா நடைபெறுவதால் பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.

சித்தப்பா மகள் ஈஸ்வரி,கவிதாவை அழைத்துக்கொண்டு தாத்தாவின் தென்னம்தோப்பு, மாந்தோப்புக்கு சென்றாள்.

ஈஸ்வரி, அக்கா,அக்கா என்று கவிதாவுடன், ஆசையுடன் பழகினாலும்,கவிதாவுக்கு,அவளின் கிராமத்து பேச்சும்,உடல் அசைவுகளும,பிடிக்கவில்லை. அவள்ட்கேள்விகளுக்கெல்லாம்,அவளை

கேலி செய்தும்,அவள் கிராமத்திலேயே இருப்பதால் அவளுக்கு ஒன்றும் தெரியாது என்றும் மட்டம் தட்டி பதில் கூறினாள்.

ஈஸ்வரி, அருகில் உள்ள அரசாங்க பள்ளியில் தமிழ் வழி கல்வி படிப்பதாலும்,பெற்றோர் படிக்காதவர்கள்,விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாலும்,நகரத்தில் படிக்கும் பிள்ளைகளை போல தன்னை அனைத்து விஷயங்களிலும் வளர்த்து கொள்ள முடியவில்லை.

ஈஸ்வரிக்கு, கவிதா தன்னை கேலி செய்கிறாள் என்று புரிந்தபோதும்,அக்காதானே கேலி செய்கிறாள் பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டாள்.

கவிதா,ஈஸ்வரியை கேலி செய்வதையும்,அவளிடம் பேசும்போது

எப்போதும்,சிடு,சிடுவென்று இருப்பதையும் கவனித்த அவளது பெற்றோர்கள் கவிதாவிடம் இவ்வாறு

நடந்து கொள்ள கூடாது என்றும், அவள் உன் சகோதரி என்றும், கடிந்துகொண்டார்கள்

கவிதா,எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை, மிகவும் bore ஆக இருக்கிறது, போன் கூட சரியாக இயங்கவில்லை,நாம் உடனே ஊருக்கு போகலாம் என்றாள்.

அப்பாவும்,அம்மாவும் இன்னும் இரண்டு நாளில் திருவிழா முடிந்தவுடும்,பிறகு நாம் ஊருக்கு புறப்பட்டு விடலாம் என சமாதானம் செய்தனர்.

மறுநாள்,மீண்டும் திருவிழா கடைகளை பார்த்துவிட்டு சகோதரிகள் இருவரும் அருகில் இருந்த குளக்கரைக்கு சென்றனர்.

அங்கு ஆண்களும்,பெண்களும் எதிர்,எதிர் கரைகளில் குளித்துக்கொண்டிருந்தனர்.

தண்ணீரை பார்த்தவுடன்,கவிதா ஈஸ்வரியிடம்,தான் குளத்தில் இறங்கி குளிக்க போவதாக கூறினாள்.

ஈஸ்வரி,அவசரமாக,வேண்டாக்கா, அப்பா,அம்மா சத்தம் போடுவாங்க,இந்த குளம் ஆழமானது என்றாள்.ஆனாலும்,கவிதா குளிக்க குளத்தில் இறங்கி விட்டாள்.

ஈஸ்வரி,கரையில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தாள்.

அருகில் குளித்துக்கொண்டிருந்த கவிதா,சற்று முன்னேறி செல்ல ஆரம்பித்தாள்,அதை பார்த்த ஈஸ்வரி பயத்துடன் ரொம்ப உள்ள போகாதீங்க, சேத்துல மாட்டிக்கிடுவீங்க எனக்குரல் கொடுத்தாள்,

எனக்கு நீச்சல் தெரியும்,நீ கவலைப்படாதே என கூறிக்கொண்டே இன்னமும் நகர்ந்து சென்றபோது,அவளது வலது கால் சேற்றில் மாட்டிக்கொண்டது,ஆழமான பகுதி ஆகையால்,அவள் காலை வெளியே எடுக்க முடியாமல் போனதுடன், நீரில் மூழ்கவும் ஆரம்பித்தாள்,தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தவுடன் பயத்தில் அலறினாள்.

இதை பார்த்தவுடன்,கரையில் அமர்ந்திருந்த ஈஸ்வரி சரேலென தண்ணீருக்குள் பாய்ந்து, கவிதாவின் தலைமுடியை பிடித்து இழுத்தபடியே அவளை வேகமாக கரைய நோக்கி இழுத்தாள்.அதற்குள் அருகில் இருந்த ஆண்களும் ஓடிவந்து கவிதாவை மேலே கொண்டுவந்து சேர்த்தனர்.

ஈஸ்வரி,கவிதாவுக்கு முதலுதவி செய்து அவள் குடித்திருந்த நீரை வெளியேற்றினாள்.

அதற்குள்ளாக செய்தி கேள்விப்பட்டு,கவிதாவின் அப்பா,அம்மா,பாட்டி,தாத்தா என அனைவரும் அழுதபடி ஓடிவந்தனர்.

உடனடியாக,கவிதாவை காரில் ஏற்றி அருகிலுள்ள நகரத்திற்கு கொண்டுசென்று மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அனைவரும்,ஈஸ்வரியை நீ தான் அக்காவை கவனமாக பார்த்துக்கொள்ளவில்லை என்று திட்டிக்கொண்டிருந்தனர்,

அவள்,நான் எவ்வளவு சொல்லியும் அக்காதான் கேட்காமல் குளத்தில் இறங்கி விட்டாள் என அழுதபடி கூறினாள்.

இதனிடையில்,கவிதா கண் திறந்து விட்டதாகவும்,இனி பயம் ஒன்றும் இல்லை என மருத்துவர் கூறி சென்றார்.

அனைவரும் உடனே கவிதாவை பார்க்க விரைந்தனர்.

கவிதாவை பார்த்ததும் அவள் அம்மா,பாட்டி,சித்தி என அனைவரும் அழுதனர். சித்தப்பாவும்,எல்லாம் இந்த ஈஸ்வரியினாலதான் நடந்தது,அவதான் உன்ன கவனமா பாத்துக்கல என்றார்,

உடனே கவிதா அவளை ஒன்னும் சொல்லாதீங்க, நான் இன்னைக்கு உயிரோட இருக்கறதுக்கு காரணமே என் தங்கச்சி ஈஸ்வரிதான். நான் தண்ணீல மூழ்க ஆரம்பிச்சதும் அவதான் உடனே தண்ணீக்குள்ள பாஞ்சு என்ன காப்பாத்தி மேல கொண்டு வந்தா என்றாள்.

எல்லோரும் நன்றியுடன் ஈஸ்வரியை பார்த்தார்கள்.

கவிதா,ஈஸ்வரியை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டாள்,

என்ன மன்னிச்சுடு ஈஸ்வரி,நான் சென்னையில பெரிய ஸ்கூல்ல படிச்சவனு நினைப்பிலயும்,உனக்கு ஒன்னும் தெரியாது என்ற தவறான எண்ணத்தினாலும், உன்ன மிகவும் மட்டமாகவும்,கேவலமா பேசினேன்.,

நீ சொல்ல,சொல்ல கேக்காம நான்தான் குளத்துக்குள்ள இறங்கினேன். ஆனாலும், கடைசியா நீதான் என் உயிரை காப்பாத்தி யிருக்கிறே, நான் செஞ்ச தவறுக்கெல்லாம் என்ன மன்னிச்சுடு என்று மீண்டும் கவிதா ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.

அப்படியெல்லாம் பேசாதீங்க அக்கா, நீங்க உயிர் பிழைத்து வந்ததே போதும் என்று, கவிதாவின் கைகளை பிடித்துக்கொண்டு கண் கலங்கியபடி சொன்னாள் ஈஸ்வரி.

கவிதா மனம் திருந்தியது கண்டு அவளது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்பா, நாம போறப்ப ஈஸ்வரியையும்,மற்ற எல்லாரையும் சென்னைக்கு கூட்டிகிட்டு போய் சென்னையை சுத்தி காட்ட போறேன் என்றாள். அப்பாவும் அதை சந்தோஷமாக ஆமோதித்தார். ஒரு கோவில் திருவிழா- தொடர்பே இல்லாம இருந்த இரு சகோதரிகளிடையே மீண்டும் பாச இணைப்பினை ஏற்படுத்தியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *