‘’பக்கத்து வீட்டு சுதா டீச்சர்கிட்டே நீ அதிகம் வச்சுக்கிறதில்லை மாதிரி இருக்கே… ஏன்?’’ ரம்யா கேட்க…
‘’அவ சாதாரண எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர், நான் ஹையர் செகண்டரி ஸ்கூல்ல பி.ஜி.அஸிஸ்டென்ட். அப்படியிருகிறப்ப அவகிட்டே போய் நான் ஏன் வச்சிக்கிறேன்’’ என்றாள் ஆர்த்தி கர்வத்துடன்.
ஒரு மாதம் ஓடி விட்டது.
துவைத்த துணிகளை எடுத்து வர வீட்டின் பின்பக்கம் சென்றாள் ஆர்த்தி.
சுவருக்கு அந்தப்புறம் சுதா யாருடனோ பேசிக்கொண்டிருப்பது மெதுவாக கேட்டது.
என்ன பேசுகிறார்கள்? யாதார்த்தமாக கவனித்தாள்.
பக்கத்து வீட்டு ஆர்த்தி டீச்சர்கிட்ட, நீ அதிகம் வச்சுக்கிறதிலிலை மாதிரி இருக்கே..ஏன்?
‘என் பெர்சனாலிட்டி என்ன..அவ பெர்சனாலிட்டி என்ன…சினிமா நடிகை மாதிரி இருக்கிற நான் எங்கே…வத்தலும் தொத்தலுமா கரிக்கட்டை மாதிரி இருக்கிற அவ எங்கே..அப்படியிருக்கிறப்ப அவகிட்டே போய் நான் ஏன் வச்சிக்கிறேன்…’’
அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் ஆர்த்தி!
– இரா.வசந்தராசன் (பெப்ரவரி 2013)