ஒரு பிறப்பும் மறுபிறப்பும்….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 10,495 
 

ஜூன் பத்து என்று நாள் கொடுத்திருந்தார்கள். வழக்கம்போல் வாரா வாரம் செக் அப் போவது போல் அன்றும் சென்றிருந்தாள். அன்று சனிக்கிழமை . இரவு டிக்கட் புக் செய்யபட்டிருந்தது . அலுவலகத்தில் இருந்து சற்று முன்னதாக புறப்பட வேண்டும் . இதே நாள் அடுத்த வாரம் பாப்பா கையில் இருக்கும் என்று நினைத்து கொண்டே கிளம்பினேன் . பெண் குழந்தையா இல்லை பையனா ? ஸ்கேனில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை . ஒன்பது மாதம் உள்ளே இருப்பது என்னவென்று தெரியாமல் 270 நாட்கள் காத்திருப்பது ஏதோ ஒரு எதிர்பார்ப்பு கலந்த சுமை . என்ன பேர் வைக்க வேண்டும் . இன்று வரை யோசிக்கவும் இல்லை . முதலில் குழந்தை நன்றாக பிறக்கட்டும் . காத்திருக்கலாம் .

பேருந்து புறப்பட யத்தனித்த நேரத்தில் திருச்சியில் இருந்து அழைப்பு வந்தது .

‘இன்னைக்கே அட்மிட் ஆக சொல்லிடாங்க , Maximum Monday டெலிவரி இருக்கும்னு சொல்றாங்க ’ பதட்டமாக மனைவி .

திரும்பி வரும்பொழுது அப்பாவாகத்தான் வருவேனா ? ஒரு புது உணர்வு. முதலில் பிரசவம் நல்லபடியாக முடிய வேண்டும் . சும்மாவா சொன்னார்கள் . பிரசவம் மறுபிறப்பு என்று . சுக பிரசவம் நடக்க வேண்டும் என்று பல கோயில்களில் வேண்டுதல் , பெரியவர்கள் ஆசிர்வாதம் , எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி மாதம் வரை நடைபயிற்சி , உடற்பயிற்சி , பழங்கள் , மருந்து வகைகள் . கண்டிப்பாக சுக பிரசவமாகத்தான் இருக்கும் . சந்தேகமில்லை . ஏதேதோ சிந்தனை ஆக்கிரமிக்க தூங்கி போயிருந்தேன் .

சரியாக ஆறு மணிக்கு திருச்சி வந்தடைந்து , 30 ரூபாய் ஆட்டோவிற்கு குடுத்து ஹாஸ்பிட்டலில் குதித்த பொழுது , மனைவி காத்திருந்தாள் .

‘ஏதும் சாப்பிடகூடாதுன்னு சொல்லிடாங்க ’

‘ஜூஸ் குடுக்கலாமா டாக்டர் ?’

‘குடுங்க .பட் வேற எதுவும் குடுக்க வேண்டாம் ’.

சாத்துக்குடி கிடைத்தது. சாப்பிட பிடிக்கவில்லை. இன்னும் சில மணி நேரத்தில் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று நடக்கவிருக்கிறது . நல்லபடியாக நடக்க வேண்டும் . ஒன்றும் ஓடவில்லை .அருகில் உட்கார்ந்து கை பிடித்திருப்பதை தவிர .

சரியாக 8.30 மணிக்கு ஊசி போடப்பட்டது.

‘ நல்ல பெயின் வரும் . கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ’ என்று சொல்லிவிட்டு டாக்டர் போய் விட்டார்.

அவளுக்கென்ன சொல்லிவிட்டாள் . அகப்பட்டவன் நானல்லவா என்றாள் , சிரித்துக்கொண்டே. இந்த நேரத்திலும் பொறுமையை இருக்கிறாள் . தைரியசாலி . ஒரு பெண்ணின் மனதைரியத்திற்கு முன் எதுவும் இல்லை. காப்பதும் சக்தி. அழிப்பதும் சக்தி. நேரம் ஆக ஆக சொந்தம் ஒவ்வொன்றாக சேர ஆரம்பித்திருந்தது . ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவளின் அலறல் அதிகமாகி கொண்டிருந்தது . ஒவ்வொருவரும் வாழ்கையின் சில விஷயங்களை ஒருமுறையாவது அனுபவித்தே ஆக வேண்டும். சக்கரத்தில் ஏறியாகிவிட்டது. நம் முறை வந்தே தீரும். தப்பிக்க வழியில்லை. உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் இது எழுதப்படாத நியதி .

பக்கத்தில் இருந்தவரிடம் பேனா வாங்கி வாரமலர் குறுக்கெழுத்து போட்டி நிரப்ப ஆரம்பிதேன். ஒவ்வொரு மணி நேரமும் அலறல் அதிகமானது. மூன்று மணி வரை இதே போராட்டம் . சரியாக மூன்று பத்திற்கு பெரிய டாக்டர் வந்தார் . அதுவரை எட்டு மணி நேரம் கடந்திருந்தது. ‘

பேஷன்ட் கூட யாரு வந்திருக்காங்க ?

ஏதாவது விபரீதமோ?

‘சொல்லுங்க டாக்டர் ’

‘We tried a lot. குழந்தையோட தலைய பாக்க முடியுது . Its trying to come out. But some contraction is there. Forceps போட முடியாது . Better option is surgery. But we will try our maximum’ சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார் .

Anasthesia டாக்டர் சில நிமிடங்களில் வந்தார் . முதுகில் ஊசி போடப்பட்டது .

கடவுளே இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் ஏதாவது அற்புதம் நிகழ்த்த மாட்டாயா? நார்மல் ஆகாதா? மூன்று நாளில் எழுந்து ஓடி வர மாட்டாளா? தாயும் சேயும் நலமுடன் பார்க்க வேண்டுமே . இது நாள் வரை இருந்த தைரியமோ இறுமாப்போ இப்போது இல்லை. சில நிமிடங்களில் உன் இருப்பை உணர்த்துவது போல் இருக்கிறது. உன் தயவு இல்லாமல் எதுவும் இல்லை. என் பாவம் என்னோடு. அவர்களிடம் வேண்டாம் . எல்லாம் ஒழுங்காக நடக்கிறது , பயமில்லை என்று இருந்தேனே . அப்பொழுது உனக்கு நன்றி சொல்ல மறந்திட்டேன். இப்பொழுது உன்னை ஞாபக படுத்துகிறாய் . தலைகீழாக நின்று முயற்சி செய்தாலும் முடிவு நீ எடுப்பது தான்.

‘சார் நீங்க தான் பேஷண்டோட…. ?

பேப்பரை நீட்டினார்கள் . ‘ ……ஆதலால் சர்ஜரி செய்ய முடிவு எடுக்க பட்டுள்ளது . இதன் ஆபத்தினை நான் உணர்கிறேன் . எனக்கு புரியவைக்கபட்டுள்ளது …… மனத்தெளிவுடன் கையொப்பம் இடுகிறேன் ’

மிக கடினமானதொரு தருணம் . ‘உன் மனைவிக்கு ஆப்ரேஷன் பண்றாங்கப்பா . என்னனு தெரியாது . நீ தான் கையெழுத்து போடணும் , போட்டு குடு ’

இறைவா உன்னிடம் முழுவதும் ஒப்படைத்து விடுகிறேன் . நீயே பார்த்து கொள் .

சரியாக மூன்று முப்பதிற்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது . தொடர்ச்சியாக அழவில்லை . அடுத்த சோதனை . சந்தோஷமாக எல்லோரிடம் சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன் . ஆனால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு புது சேதியாக இருந்தது . எப்பொழுது சர்ஜரி என்று முடிவானதோ அப்பொழுதே மனம் சோர்ந்திருந்தது

குழந்தையை வெளியில் கொண்டு வந்து காட்டினார்கள் . குழந்தை அழவில்லை .

‘என்ன பேபி ?’

‘பெண் குழந்தை ’

‘மகாலட்சுமி ’ என்று யாரோ சொன்னது காதில் விழுந்தது .

ஆனால் மனம் முழுதும் மனைவி எப்படி இருக்கிறாள் என்றே கவலை பட்டு கொண்டிருந்தது . ‘எப்படி இருக்காங்க சிஸ்டர் ?’

‘She is fine’

வாழ்வின் ஆதாரம் அவள் .

மீண்டும் பெரிய டாக்டர் வெளியே வந்தார் .’ Baby has drunk some water. Pediatriciana சொல்லிருக்கேன் . She will come. எதுக்கும் ஒரு தடவ செக் அப் பண்ணிடலாம்.’.

அரை மணி நேரத்தில் எவ்வளவு மனப்போராட்டம் . இதற்கு முந்திய எட்டு மணி நேர மன நிலையும் தற்போதைய அரை மணி நேரமும் . நிறைய வித்தியாசங்கள் . ஒரு முறை மலை விளிம்பை சென்று எட்டி பார்த்து வந்தது போல் இருக்கிறது.

அடுத்த ஐந்து நிமிடங்களில் pediatrician உள்ளே சென்றார். அடுத்த ஐந்து நிமிடத்தில்,bb

‘பேபியோட அப்பா?’

‘சொல்லுங்க டாக்டர்’.

‘Baby is having some breathing trouble. ரெண்டொரு நாள் ICU ல வச்சிருந்து பாக்கணும் .Oxygen குடுக்கும் . Otherwise its fine.’

சர்ஜரி ஒன்றே போதுமே உன்னை உணர்த்த . இந்த குழந்தையும் வேண்டுமா . போதும் . இதற்கு மேலும் வேண்டாம் . இனி நான் வாழப்போகும் வாழ்வின் ஆதாரத்தை ஏற்கனவே அசைத்து பார்த்து விட்டாய்.. இந்த பிஞ்சு வேண்டாம் .

அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஸ்ட்ரெட்சரில் வெளியே வந்தாள் . ‘ஐந்து நிமிடம் முன்பு ஆபரேஷன் முடிந்துள்ளது . உன் வயிற்றை கிழித்துள்ளார்கள் . வலிக்கிறதா? . மரத்திருகிறதா ?. என்னை தெரிகிறதா? . இன்னும் மயக்கமாக இருக்கிறாயா? . உனக்கு பெண் குழந்தையம்மா . கேட்கிறதா?’.

கண் மட்டும் அசைந்தது . மேலே ரூமிற்கு கொண்டு சென்றார்கள் . கூடவே சென்றேன் . அதற்குள் கீழே கார் வந்திட , குழந்தைக்கு அப்பா யாருங்க ?

காரில் என் குழந்தை . ஒரு டவலில் சுற்றியிருந்தார்கள் . இப்போதும் அழவில்லை . மூன்று கிலோமீட்டராவது இருக்கும். இன்னொரு ஹாஸ்பிட்டல். அவசர சிகிச்சை பிரிவு , மரண ஓலம் , கூச்சல் , வெட்டு காயம் . ஏற்கனவே சோர்ந்திருந்த மனது மேலும் சோர்ந்தது .

நாலாவது மாடியில் ICU. குழந்தையை வாங்கி கொண்டு வெளியே காத்திருக்க சொன்னார்கள் . கதவை திறந்த பொழுது பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தெரிந்தன . இரண்டு மூன்று குடும்பம் வெளியில் உட்கார்ந்திருந்தது . எல்லோரும் தத்தம் குழந்தைக்காக காத்திருந்தார்கள் .

ஐந்து நிமிடங்களில் கதவு திறந்தது . மீண்டும் ஒரு பேப்பர் . ‘…இந்த காரணத்திற்காக குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது . ஏதேனும் விபரீதம் ……..தந்தையாகிய நான் …….சுய நினைவுடன் …..’ மீண்டும் அதே. உடற்சோர்வோடு மனசோர்வும் சேர்ந்து கொண்டது . மிக களைப்பாக உணர்ந்தேன் .

வெளியில் காத்திருந்தவர்களில் ஒருவர் புது கோட்டை , ஒருவர் கன்னியாகுமாரி .

‘அங்க முடியாதுனுட்டாங்க சார் . இங்க கொண்டு வந்துருக்கோம்’

‘இங்க நல்ல பாப்பாங்களா? ’ என் கவலை

ஒரு குழந்தைக்கு ஒரு கிலோ தான் எடை . இன்னொரு குழந்தை முதுகில் கட்டி . இன்னொரு குழந்தைக்கு ஜான்டிஸ் .

என் குழந்தைக்கு மூச்சு திணறல் மட்டும் தான் . அதுவும் நார்மல் . சரியாகிவிடும் என்று சொல்லிருந்தார்கள் . ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை ..’ மற்றவர் படும் துயரத்திற்கு இது பெரியதாக தெரியவில்லை . இந்த மட்டோடு விட்டாயே இறைவா என்று தான் தோன்றியது .

ஒரு மருந்து சீட்டு குடுத்தார்கள் . 10 சிரின்ஜ் , 3 இஞ்சக்க்ஷன் , ட்ரிப்ஸ் வகையறா என்று 20 ஐட்டம் . மொத்தம் இரண்டு நாட்கள் சொல்லப்பட்டது பின்பு ஜான்டிஸ் வந்து சேர்ந்து கொண்டது . இன்னுமொரு மூன்று நாட்கள் என மொத்தம் ஐந்து நாட்கள் ஆகியது . இதற்கிடையில் பிறந்தது முதல் ஒரு முறை கூட குழந்தையின் முகம் பார்க்காமல் மனைவி களைத்திருந்தாள் . ஐந்து நாட்கள் ஹாஸ்பிட்டல் சூழல் ஓரளவு மனதிற்கு பழகிவிட்டிருந்தது .

ஐந்தாம் நாள் குழந்தையை கையில் கொடுத்தார்கள் . அதன் கைகள் முழுவதும் ஊசி குத்தப்பட்டு புன்னாகிருந்தது . பிறந்த சில நேரங்களில் இந்த பிஞ்சு இத்தனை கஷ்டம் அனுபவித்திருந்தது . குழந்தையை தாயின் கையில் குடுத்து ‘இது தான் என் பாப்பாவா ? இவ்ளோ நாள் தனியாவே இருந்தியா?’ என்று கொஞ்சிய பொது இந்த ஐந்து நாள் வேதனையும் மறந்துவிட்டது .

இறைவா பிரார்த்தனை என்னோடுதாகட்டும் . கொடுப்பது உன்னோடதாகட்டும் .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *