கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)  
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 13,706 
 

ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம்.

’வனாந்திரமான இடம். பாம்புப் புற்று போல் ஓங்கி வளர்ந்திருந்த மண்மேடிட்ட பெரிய குகைகள். அவன் தனியாக அந்தப் பிரதேசத்தின் வழியாகப் போய்க் கொண்டிருக்கிறான். அங்கு நிலவிய நிசப்தம் ஒரு பாரமாகச் சூழ்ந்து அவன் நெஞ்சை அழுத்தியது. குகைகளிலிருந்து பாம்புகள் புறப்பட்டுத் தன்னைத் தாக்க வருமோ என்ற பயம் அவனை வேகமாக நடக்கத் தூண்டியது. குகைகளில் பாம்பு இல்லை. திடீரென்று அவற்றிலிருந்து கூட்டம் கூட்டமாக ஜனங்கள் வெளியே வந்தார்கள். அனைவரும் முடவர்கள்! அப்பா, அம்மா குழந்தைகள் என்று குடும்பம் குடும்பமாக முடவர்கள்! அவர்கள் வரிசை வரிசையாக நின்றுகொண்டு அவனைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய பார்வையின் வேகத்தில் அவனுடைய கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கழன்று… ஐயோ! அவனுடைய கைகள்! கீழே விழுந்துவிட்ட அவன் கைகளை எடுத்து வைத்துக்கொண்டு குழந்தைகள் விளையாடுகிறார்கள்! எல்லோரும் அவனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். ‘ஓ’ என்ற அவர்கள் சிரிப்பு, அந்த அகன்ற பிரதேசத்தில் எதிரொலிக்கிறது.’

உடம்பைத் துண்டினால் துடைத்துவிட்ட பிறகு, ராஜப்பா தன் கைகளை உற்றுப் பார்த்தான். அவற்றுக்கு ஓர் ஆபத்தும் ஏற்படவில்லை. பத்திரமாக இருந்தன.

எதற்காக? அதுதான் அவனுக்கும் புரியவில்லை. இந்தக் கைகளினால் உழைத்து அவன் சம்பாதித்தது கிடையாது. வயிறுதான் உழைத்தது. கல்யாணம் எங்கே, கருமாதி எங்கே என்று வீடு தேடிச் சென்று உழைக்கிறது. கடந்த சில நாள்களாக அந்த உத்தியோகத்துக்கும் வழியில்லை. ஊரில் கல்யாணமும் நடக்கவில்லை, ஜனங்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

போன வாரம் மேலத்தெரு பாமா பாட்டிக்குப் பிராயச்சித்தம் நடக்கிறது என்று கேள்விப்பட்டவுடன், அவன் அவசரம் அவசரமாக அங்கு ஓடினான். உதட்டைப் பிதுக்கிக்கொண்டு வெளியே வந்த டாக்டரைப் பார்த்ததும் அவனுக்கு நம்பிக்கையாக இருந்தது. பாட்டிக்குத் தொண்ணூறு வயசு என்றார்கள். மேல் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. கல்யாணச் சாவுதான். கை ஓங்கிய குடும்பம். பதினைந்து நாள் சாப்பாட்டுக்குக் கவலையில்லை. கிடைக்கப் போகிற பணம், அவன் பெண் மைதிலிக்குப் புடவை வாங்கப் போதுமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, பாட்டி கண்களைத் திறந்து மிரள மிரளப் பார்த்தாள். அவ்வளவுதான், வந்த யமன் பயந்துபோய் ஓடி விட்டான். பிராயச்சித்தத்துக்குக் கிடைத்த பணம் வெற்றிலை சீவல் வாங்கத்தான் சரியாக இருந்தது.

ராஜப்பா திண்ணையிலிருந்து கீழே இறங்கினான். திண்ணை ஓரத்தில் படுத்துக்கொண்டிருந்த ஆராமுது எழுந்து கோயில் காரியத்தைக் கவனிக்கப் போய்விட்டான். ஆராமுதைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பிரம்மச்சாரி. பிரம்மச்சாரியாக இருப்பதற்கு அவன் உடம்பும் ஒரு காரணம். சாய்வு நாற்காலியைப் போல் வளைந்த சரீரம். முதுகும் வயிறும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்தன. எந்தப் பெண் இவனைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்ள முன் வருவாள்?

ராஜா மாதிரி இருக்கிறான் என்பதற்காக அவனுக்கு ராஜப்பா என்று பேர் வைத்தார்கள். சின்ன வயசில் ராஜா மாதிரிதான் இருந்தான். சாப்பிடுவதற்குச் சம்பாதிக்கவேண்டுமென்ற விவரமே அவனுக்கு அப்போது தெரியாது. பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் படித்திருந்தால், எமனை நம்பி வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமிருந்திருக்காது. அல்லது, ஆரம்பத்திலிருந்தே ஒழுங்காக அத்தியயமாவது செய்திருக்கலாம். வடக்கே வைதீகர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி என்று தில்லியிலிருந்து வந்த அந்த நாச்சியார்கோயில் பையன் சொன்னான். பிராமணணாய்ப் பிறந்துவிட்டு, மந்திரமும் தெரியாது. வேறு எந்தத் தொழிலுக்கும் லாயக்கில்லை என்றால் தன்னைப் போல் வயிற்றை மூலதனமாகக் கொண்டு வாழ்வதைத் தவிர, வேறு வழி என்ன இருக்கிறது.

அவன் தம்பி படித்துவிட்டு உள்ளூரிலேயே எல்.ஐ.சி.யில் இருக்கிறான். அவனுக்கு நான்கு பெண்கள். இரண்டு வருஷங்கள் முந்திவரை, அம்மா உயிரோடிருந்த காலத்தில், ஒரே குடும்பமாகத்தானிருந்தார்கள். சுபஸ்வீகாரம் முடிந்த மறுநாளே தம்பி சொல்லிவிட்டான்: ‘இதோ பாரு ராஜப்பா, எனக்கும் நாலு பொண்ணாச்சு. நாம சேர்ந்து இருக்கிறது என்கிறது கட்டுப்படியாகாது. இடைக்கட்டு ரூமை நீ வச்சுக்கோ! ஒரு ரூம் போறுமான்னு கணக்குப் பாக்க ஆரம்பிச்சா, உனக்கே தெரியும், ஏதோ அம்மா இருந்தா, உன் சக்கரம் ஓடியாச்சுன்னு. எத்தனை நாளைக்குத்தான் நீ பொறுப்பு இல்லாம இருக்க முடியும்? உன் மூணு பொண்ணையும் ஆம்படையாளையும் நீதான் இனிமே காப்பாத்தியாகணும். சொல்றேன்னு கோவிச்சுக்காதே.’

அன்று முதற்கொண்டு ஒரே வீட்டில் இரண்டு குடித்தனம். அவன் பெண்களும் அவனைப் போலவே, சரஸ்வதியை அடித்து விரட்டிவிட்டார்கள். படிப்புமில்லை, பணமுமில்லை. எப்படி அவர்களுக்குக் கல்யாணம் பண்ணுவது? பிரச்னைதான்.

இது இப்பொழுதையப் பிரச்னையல்ல. இப்பொழுதையப் பிரச்னை அவன் காப்பி குடித்தாக வேண்டும். நேற்றே அவன் மனைவி சொல்லிவிட்டாள்: ‘காப்பிப் பொடி கிடையாது. காசு கொண்டு வந்தா காப்பி. இல்லாட்டா தீர்த்தத்தைக் குடிச்சுட்டு சும்மா கிடங்கோ. நான் வீடு வீடா போய்க் கடன் வாங்கத் தயாரா இல்லே.’

ராஜப்பா வீட்டுக்குள் நுழைந்தான். கூடத்தில் அவன் தம்பி பெஞ்சில் உட்கார்ந்துகொண்டிருந்தான். கையில் தினசரித்தாள். அவன் அருகில் ஆவி பறக்கும் காப்பி. தினசரித் தாளில் லயித்திருந்த பார்வையை விலக்கி, ஒரு விநாடிகாலம் அண்ணனை அவன் உற்றுப் பார்த்தான். காலையில் எழுந்ததும் காப்பி குடிக்காமல் அண்ணன் எவ்வளவு கஷ்டப்படுவான் என்பது அவனுக்குத் தெரியாத விஷயமல்ல. அவன் என்ன நினைத்துக் கொண்டானோ, திடீரென்று எழுந்து உள்ளே சென்றான். ஒரு வேளை மனைவியிடம் இது பற்றி மன்றாடச் சென்றிருக்கலாம். வெகு நேரம் வெளியில் வராமல் இருந்துவிட்டானானால், அவன் சிபாரிசு பலனளிக்காமல் போய்விட்டது என்று அர்த்தம். அவள் தெய்வாதீனமாகக் காப்பி கொடுக்கச் சம்மதித்துவிட்டால் தம்பி என்ன செய்வான் என்பது ஒரு சுவாரசியமான விஷயம். அவன் கூடத்துக்கு வந்து பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு சற்று ஓங்கிய குரலில், ‘டீ, ராஜப்பாவுக்குக் காப்பி கொண்டா!’ என்று சொல்லுவான். அவன் சொல்கிறபடி மனைவி கேட்கிறாளாம்.

ராஜப்பா சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். உள்ளே போன தம்பி, போனவன் போனவன்தான்! தனக்குக் காப்பி கிடைக்காது என்று அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது.

அவன் கொல்லைக்கட்டை நோக்கிச் சென்றான். அவன் மனைவி முள்வேலியருகே நின்றுகொண்டிருந்தாள். அவன் பூணூலைக் காதில் மாட்டிக்கொண்டே கேட்டான்: ‘என்ன?’

‘என்ன? அதான். ருக்கு தளிகை. கூடமாட ஒத்தாசைப் பண்ணப் போங்கோ.’

‘ருக்குவா? ஏன் மைதிலி எங்கே?’

’அபிராமி மாமியாத்திலே ராஜராஜேஸ்வரி பூஜை பண்றாளாம். கன்னிப் பொண்ணுக்குப் புடவை வாங்கித்தரப் போறாளாம். அனுப்பிச்சேன்.’

‘அபிராமி ஆத்திலேயே? ஸ்மார்த்தப் பொண்ணுக்குன்னா கொடுப்பா?’

’நான்தான் அபிராமி மாமி கால்லே விழாத குறையா கெஞ்சிக் கேட்டுண்டேன். பதினெட்டு வயசாச்சு, மைதிலிக்குக் கட்டிக்க ஒரு நல்ல புடவை கிடையாது. எல்லாம் கிழிசல். கல்யாணத்துக்கு இருக்கிற பொண்ணு.’

‘பிராம்மணாளுக்கும் சாப்பாடு உண்டோ?’

‘புடவை கட்டிண்டு போனா உண்டு.’

ராஜப்பா தன் மனைவியை உற்றுப் பார்த்தான். இதழோரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த விஷமப் புன்னகையுடன் அவள் வைக்கோலறையை நோக்கிச் சென்றாள்.

அவன் காதிலிருந்து பூணூலை எடுத்துக்கொண்டே திரும்பி வந்தபோது அவள் வைக்கோலறையில் உட்கார்ந்திருந்தாள். அதற்குப் பேர்தான் வைக்கோல் அறை. ஒரு காலத்தில் அவனுடைய தாத்தா ‘மிராசு’ என்று கொழித்த காலத்தில் வீட்டில் மாடுகள் இருந்தன. வைக்கோலுமிருந்தது. வைக்கோற்போரை அந்த அறையில்தான் அடுக்கி வைப்பது வழக்கம். அவன் தாத்தாவினுடைய விளையாட்டெல்லாம் ஓய்ந்த பிறகு அப்பா காலத்தில் நாலு வேலி ஒரு வேலி ஆனது. அவனுடைய அப்பா சாப்பிட்டே தீர்த்தார். இப்பொழுது இருப்பது கொல்லைப் புறத்திலிருக்கும் முள்வேலிதான். வீடு மிஞ்சியிருக்கிறது.

அவன் வைக்கோலறையைத் தாண்டி உள்ளே செல்ல முற்பட்ட போது, ‘அப்படியே கிணத்தடியிலே குளிச்சிட்டுப் போங்கோ!’ என்ற குரல் கேட்டது. மனைவியின் உத்தரவு.

‘எதுக்காக?’

‘எதுக்காகவா? அதான் சொன்னேனே, ருக்கு ஒண்டிமா…’

‘வைதேகி எங்கே?’

‘குழந்தைதானே, ‘நானும் போறேம்மா’ன்னா. காய்கறி திருத்திக் கொடுத்தா, அபிராமி மாமி சாதம் போட மாட்டாளா?’

கொடியில் உலர்த்தியிருந்த பழுப்பேறிய வேட்டியையும் துவாலையையும் எடுத்துக்கொண்டு கிணற்றங்கரைக்குச் சென்றான் ராஜப்பா. ராட்டினத்தில் கயிறு இல்லை.

‘கயிறு எங்கேடி?’

‘ஏற்கனவே இத்துப் போயிருந்தது. நேத்திக்கி சாயங்காலம் அப்படியே துண்டு துண்டா போயிடுத்து. அதோ பாருங்கோ. மிஞ்சியிருக்கிறது ஒரு சாண்தான். அதுவும் சமயத்துக்கு வேண்டியிருக்குமேன்னு வச்சிருக்கேன்.’

‘யாருக்கு வேண்டியிருக்கும்? எனக்கா?’

‘உங்களுக்கு எதுக்கு வேண்டியிருக்கும்? எனக்குத்தான். இந்த மாதிரி குடும்பம் நடத்தறதை விட…’

‘என்னை என்ன பண்ணச் சொல்றே?’

’பிராம்மணார்த்தத்தை நம்பிக் குடும்பம் நடத்த முடியுமா? ஒரு கடையிலே போய்க் கணக்கு எழுதறது.’

‘எவண்டி வேலை தரேங்கிறான்? நான் கணக்கு எழுதமாட்டேன்னு சொன்னேனா?’

‘அம்பது வயசு வரையிலும் வேலை செய்யாம உட்கார்ந்திட்டு, ‘இப்போ வேலை தா!’ன்னா எவன் தருவான்? நம்ம அதிர்ஷ்டம் யாராத்திலேயும் ஒரு மாசத்துக்கு சிரார்த்தம் கிடையாது.’

‘விசாரிச்சுட்டியா?’

‘ஆமாம். வீடு வீடா போய் ‘உங்காத்திலே எப்போ சிரார்த்தம்’னு விசாரிச்சேன். கேக்கறதைப் பாரு. அன்னிக்குக் குப்பு வாத்தியார் வந்தார், சொன்னார்.’

‘சர். அது கிடக்கட்டும். இப்போ எப்படி ஸ்நானம் பண்றது’

‘தம்பி ஆம்படையாளைக் கேளுங்கோ. தினம் துவைக்கிற கல் மேலே அவ கயத்தை வச்சிருப்பா. இன்னிக்கு நாம எடுத்துடப் போறோமேன்னு மகராசி, உள்ளே கொண்டு போயிட்டா.’

அப்பொழுது அவனுடைய தம்பியின் மனைவி, கயிற்றைத் துவைக்கிற கல்லின் மீது ‘தொப்’பென்று கொண்டு போட்டு விட்டு உள்ளே போனாள்.

‘பார்த்தேளோன்னோ, எப்படி கொண்டு போடுறான்னு? நீங்க இங்கே குளிக்கவேணாம். குளத்துக்கே போய்..’

‘வெக்கம் மானம் பாத்தா நம்மாலே இருக்க முடியுமோடி? எல்லாத்தையும் எப்பவோ துடைச்சு எறிஞ்சாச்சு’ என்று சொல்லிக்கொண்டே கயிற்றை ராட்டினத்தில் மாட்டினான் ராஜப்பா.

நாலு வேலி ‘மிராசு’ ராஜகோபால் அய்யங்கார் தமது பேரன் மற்றவர்களுடைய பிதுர்க்களின் பிரதிநிதியாக இருந்து அவர்களுடைய பசியைத் தீர்த்து வைப்பான் என்று எதிர்பார்த்திருப்பாரா? அல்லது அவனுடைய அப்பாதான் இதை நினைத்துப் பார்த்திருப்பாரா? பார்க்கப் போனால் அவனுடைய இப்பொழுதைய ‘உத்தியோகம்’ அவனுக்கே ஆச்சரியத்தைத் தருகிற விஷயம். அம்மா போனபிறகு வயிற்றுப் பிரச்னை எழுந்தபோது குப்பு வாத்தியார்தான், அவனை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினார். இதற்காக அவன் ‘வேஷம்’ தரிக்க வேண்டியது அவசியமானது. கிராப்பு போய், குடுமி வந்தது. தட்டுச்சுற்று போய்ப் பஞ்சக்கச்சம். நெற்றியில் ‘பளிச்’சென்று நாமம். அவனுடைய தம்பிக்கு ஆரம்பத்தில் இது பிடிக்கவில்லை. ஆனால் ஆட்சேபித்தால் தன்னைப் பாதிக்குமோ என்று பயந்து பேசாமலிருந்துவிட்டான்.

ராஜப்பா ஸ்நானம் செய்துவிட்டு உள்ளே போனபோது, ருக்கு சமைத்துக்கொண்டிருந்தாள்.

‘என்ன தளிகை?’ என்று கேட்டான் ராஜப்பா.

‘சாதம் ஆயிடுத்து. நேத்தி சாத்தமது இருக்கு. அப்பளம் காய்ச்சப் போறேன்.’

‘காப்பிக்கு வழி உண்டா?’

ருக்கு காப்பி டப்பாவைக் கவிழ்த்துக் காட்டினாள்.

‘நான் அப்பளாம் காய்ச்சறேன். நீ போய் குப்பு வாத்தியார் ஆத்திலேர்ந்து…’

‘நான் ஒத்தர் ஆத்துக்கும் போய்க் காப்பிப் பொடி வாங்கிண்டு வரமாட்டேன்.’

‘காப்பி குடிக்காம என்னமோ மாதிரி இருக்குடி.’

‘அப்புறம் இன்னோராத்துக்குப் போய் சர்க்கரை வாங்கிண்டு வரணும். அதுக்கு நீங்களே போய் யாராத்துலயாவது காப்பி குடிச்சுக்குங்கோ. நீங்க அப்பளம் காய்ச்ச வேணாம். நானே காய்ச்சிடறேன்.’

ராஜப்பாவுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. யார் மீது கோபித்துக் கொள்ள முடியும்?

காப்பி குடிக்க வேண்டுமென்ற ஆவேசம் அவனுள் எழுந்தது. வெளியே போனால் யாராவது அகப்பட மாட்டார்களா?

அபிராமி மாமி வீட்டுக்குப் போய், ‘வைதேகி வந்திருக்காளான்னு விசாரிக்க வந்தேன்’ என்று கேட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் அங்கு தயங்கிக்கொண்டே நின்றால், காப்பி கிடைக்கக்கூடும். ரிடையர்டு எஞ்சினியர் ராமதேசிகன் வீட்டுக்குப் போகலாமென்றால், அவர் பெண்ணுடன் சீராட கும்பகோணம் போயிருக்கிறார். காலத்தை அனுசரித்துக் கோயிலில் பெருமாளுக்குக் காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா? ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ரொட்டி தருகிறார்கள். இந்த ஊர்ப் பெருமாளுக்கு காப்பி குடிக்கும் ஒரு நாச்சியார் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? கோயிலில் தினம் காப்பிப் பிரசாதம் கிடைத்திருக்கும்.

‘நீங்க சாப்பிடப் போறேளா இப்போ?’ என்று கேட்டாள் ருக்கு.

‘அதுக்குள்ளேயுமா? நான் கொஞ்சம் வெளியிலே போயிட்டு வரேன்.’

ராஜப்பா வீட்டைவிட்டு வெளியில் வந்து தெருவின் இரு திசைகளிலும் நோக்கினான். காப்பிக்கு வழி உண்டா என்பதுதான் அவனுடைய மகத்தான பிரச்னை.

பஸ் ஸ்டாண்டுக்குப் போனால் யாராவது தென்படக்கூடும்.

பஸ் ஸ்டாண்டில் நல்ல கூட்டம். கல்யாண நாளில்லை. இத்தனை பேர் எங்கு வருகிறார்கள். எங்கு போகிறார்கள் என்று தோன்றியது ராஜப்பாவுக்கு.

மாணிக்கத்தின் பழக்கடையில் கணவன், மனைவியுமாக இரண்டு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். கணவனுக்குத் தன் வயசுதான் இருக்குமென்று ராஜப்பாவுக்குப் பட்டது. தடித்த ஃபிரேம் போட்ட கண்ணாடி. ஜரிகை வேட்டி, அங்கவஸ்திரம், காலில் போட்டிருந்த செருப்பைப் பார்க்கும்போது வடக்கேயிருந்து வந்திருப்பவன் போல் பட்டது. அவன் மனைவிக்கு நாற்பது வயசிருக்கலாம். பட்டுப் புடைவை. ஒடிசலாக இருந்தாள். கையில் பை, அவளும் கண்ணாடி அணிந்திருந்தாள்.

ராஜப்பா அவர்களை நோக்கிச் சென்றான்.

‘ரூபாய்க்கு எட்டுப் பழம் கொடுப்பா!’ என்று கணவன், மாணிக்கத்திடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான்.

‘கட்டுப்படியாகாதுங்க. ஏழு படம்னு எடுத்துக்குங்க.’ என்றான்.

‘என்னடா மணிக்கம், ஊருக்குப் புதுசுன்னு ஏமாத்தப் பாக்கறியா? டஜன் ஒரு ரூபாய்னு சிரிப்பா சிரிக்கறது பழம்’ என்று கடைக்காரனிடம் சொல்லிவிட்டுக் கணவனைப் பார்த்துப் புன்னகை செய்தான் ராஜப்பா.

‘வாய்யா. நீ எப்போய்யா காசு கொடுத்துப் பளம் வாங்கிச் சாப்பிட்டிருக்கே? பெரிய நியாயமில்ல பேச வந்துட்டாரு’ என்றான் மாணிக்கம்.

ஜரிகை வேட்டிக்காரன் ராஜப்பாவை சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். எதற்காக அவன் தன்னை அப்படிப் பார்க்கிறான் என்று ராஜப்பாவுக்குப் புரியவில்லை. கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது.

‘உங்க பேரு?’ என்று கேட்டான் ஜரிகை வேட்டிக்காரன்.

‘ராஜப்பா.’

‘நினைச்சேன். மை காட், இது என்னடா வேஷம்? பஞ்சக்கச்சம் நாமம், குடுமி?’

ராஜப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘தெரியலியாடா என்னை? உத்துப் பார்றா.’

ராஜப்பா நினைவைத் துழாவினான். ஒன்றும் பொறிதட்டவில்லை.

‘ஆச்சாபுரம் அனந்துன்னு சொன்னா போறுமா?’ என்று கேட்டுக் கொண்டே அவன் ராஜப்பாவின் தோளில் கையை வைத்தான்.

‘அனந்துவா? நீங்க, எங்கேயோ வடக்கே…’

‘கரெக்ட். டில்லியிலே இருக்கேன். இவதான் என் ஆம்படையா, சரோஜா. அது கிடக்கட்டும், என்னடா ‘நீங்க’ போட்டுப் பேசறே? வருஷம் போனாலும் சிநேகிதம் போயிடுமா?’

அனந்து! இத்தனை உரிமையுடன், பழைய நட்பை உணர்ச்சிப் பூர்வமாக நினைத்து இவனால் பேச முடிகின்றதே, தன்னால் முடியுமா? அனந்துவின் மாமா சவுக்குத் தோப்பு நாராயண அய்யங்காருக்கு இந்த ஊர்தான். மேலத் தெருவில் இருந்தார். இப்பொழுது அவர் காலம் ஆகி, பிள்ளைகளும் ஆளுக்கொரு திசையாகப் போய்விட்டார்கள். அப்பொழுதெல்லாம் அனந்து, விடுமுறைக்கு இங்கு வந்துவிடுவான். அனந்துவுக்கு சினிமா என்றால் ஒரே பைத்தியம். சினிமாவில் சேர்ந்துவிடப் போவதாகச் சொன்னான். இப்பொழுது என்ன செய்கிறான்?

‘பாத்துக்கோ சரோஜா, இவன்தான் சின்ன வயசிலே என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். ஆத்தங்கரைக்குப் போய் ஒண்ணா சிகரெட் பிடிப்போம். அப்புறம் ராத்திரி ஆட்டம் சினிமா. உடம்பு பூரா பவுடரைக் கொட்டிண்டு மல் ஜிப்பாவுமா அதுவுமா இருந்த இவன், இப்போ பாரு, வேத வித்தா, நெருப்பா நிக்கறான். உலகத்திலே என்னென்ன அதிசயமெல்லாம் நடக்கிறது பாரு!’ என்று அனந்து தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

‘நீ…ங்…க.. நீ என்ன செய்யறே இப்போ?’ என்று கேட்டான் ராஜப்பா.

‘என்ன செய்யறேன், வயத்துப் பொழப்புக்கு ஒரு கம்பெனியிலே இருக்கேன். நாலு காசு சம்பாதிக்க என்னென்ன அக்கிரமமெல்லாம் பண்ணணுமோ, அதெல்லாம் பண்ணிண்டிருக்கேன். உன்னைப் பார்த்தா பொறாமையா இருக்குடா ராஜப்பா. யாரையும் ஏமாத்த வேணாம். ஊரோட வாசம். பெரியவா எழுதி வச்ச மந்திரம், சோறு போடறது. நீ வாத்தியாராத்தானே இருக்கே? நீ சொல்லாட்டாலும் உன் வேஷம் சொல்றதே! மஞ்ச சூர்ணம், முகத்தில் தேஜஸ்..’

‘நன்னாயிருக்கு நீங்க இப்படித் தெருவிலே நின்னுண்டு பேசறது. ரூமுக்குப் போய்ப் பேசிக்கலாம், வாங்கோ!’ என்றாள் சரோஜா.

‘ரூமுக்கா?’ என்று கேட்டான் ராஜப்பா.

‘ஆமாம். அதோ தெரியறது பாரு லாட்ஜ். அங்கேதான் இருக்கேன். நீ இங்கே இருக்கிறது எனக்குத் தெரியாம போச்சேடா. இல்லாட்டா, ‘ஜாம் ஜாம்’னு உங்காத்திலேயே வந்து தங்கியிருப்பேனே. இந்தாய்யா கடைக்காரரே! ரெண்டு டஜன் பழம் எடு. உன்னாலேதான் நம்ம பழைய சிநேகிதனைப் பார்க்கக் கொடுத்து வச்சுது’ என்று பேசிக்கொண்டே போனான் அனந்து.

அறைக்குச் சென்றதும் ராஜப்பா கேட்டான்: ‘நீ எப்படி இந்த ஊர்ப் பக்கம் வந்தே?’

‘சொன்னா நம்பமாட்டே. நான் சவுத்துக்கு வந்து பத்து வருஷமாறது. என் ஆம்படையா டில்லியிலேயே பொறந்து வளர்ந்தவ. வேட்டாமும் டில்லியாயிடுத்து. எனக்கும் இங்கே யாருமில்லே, இந்தப் பக்கம் வர அவசியமே இல்லாமப் போயிடுத்து. அப்படி வந்தாலும், மெட்ராசுக்கு வந்து திரும்பிடுவேன். இப்பத்தான் இந்த ஊரிலே நாம சின்ன வயசிலே இருந்திருக்கோமே, சரோஜாவுக்கும் சுத்திக் காமிக்கலாம்னு வந்தேன். இந்த ஊருக்கு வந்தவுடனே உன் நினைவு வராமலில்லே. ஆனா நீ எங்கே இருக்கேன்னு யாருக்குத் தெரியும்? உன்னை இங்கே பாக்கப் போறோம்னு நான் சத்தியமா நினைச்சுக்கூடப் பார்க்கலேடா. அதுவும் இந்தக் கோலத்திலே… ‘கோலம்’னு தப்பா சொல்லலே. உன்னைப் பார்த்தா பெருமையா இருக்கு. அது கிடக்கட்டும், உனக்குக் கல்யாணம் எங்கே, யாரு பொண்ணு, உனக்கு எத்தனை குழந்தைகள்?’

‘என் ஆம்படையாளுக்கு வடுவூட். குழந்தைகளுக்கு குறைச்சலில்ல்லே. மூணு பொண்ணு. எல்லாம் கல்யாணத்துக்கு நிக்கறது.’

‘மூணு பொண்ணு என்னடா பெரிய குழந்தைகள்? ‘ஜாம் ஜாம்’னு கல்யாணம் ஆயிடறது. பகவத் பிரீதி இருந்தா எதுதான் நடக்காது? எனக்கு ஒரே பிள்ளை. அமெரிக்காவிலே டாக்டரா இருக்கான். ஒரு பொண்ணு இருந்தா நன்னாத்தான் இருந்திருக்கும். ஆனா இந்த விஷயத்திலே பகவான் எனக்கு அனுக்கிரகம் பண்ணலே’

‘என்ன நீங்க பேசிண்டே இருக்கேளே, அவரை ஒண்ணும் சாப்பிடச் சொல்லாம? காப்பி குடிக்கிறேளா?’ என்று கேட்டாள் சரோஜா.

‘அடச் சீ! டில்லிக்காரின்னு காமிச்சுட்டியா…. வேதவித்தா நிக்கறான். கண்ட கண்ட ஓட்டல்லேந்து காப்பி குடிப்பானா? இவ சொல்றதெல்லாம் டில்லியிலே நடக்கும். என் ஊர் வைதீகாளைப் பத்தி எனக்குத் தெரியுண்டி. பாலுக்குத் தோஷமில்லே, குடிக்கிறியா?’

‘வேணாம்.’ – ராஜப்பாவின் குரல் பலகீனமாய் ஒலித்தது.

’பாத்தியாடி? பால்கூடக் குடிக்க மாட்டேங்கிறான். அந்தக் காலத்து ராஜப்பாவான்னு இருக்கு. வேதம் படிச்சா என்ன கட்டுப்பாடு வந்துடறது பாத்தியா? ராஜப்பா, உன் மாதிரி அத்தியயானம் பண்ணவாளைப் பாத்தா, கால்லே விழுந்து சேவிக்கணும் போலிருக்குடா. நிஜமாச் சொல்றேன். சமஸ்கிருத மந்திரத்தைப் படிச்சவா சொல்லிக் கேக்கணும்னு எனக்குக் கொள்ளை ஆசை. டில்லியிலே பள்ளிக்கூடத்திலே ஒரு சமஸ்கிருத வாத்தியார் இருக்கார். நம்மடவர். ஸ்ரீநிவாச வரதன்னு பேரு. மந்திரம் சொன்னார்னா கணீர்னு இருக்கும். அவரை அடிக்கடி ஆத்துக்கு  வரச் சொல்லி, புருஷ சூக்தம் சொல்லச் சொல்வேன். ஒரு தடவைக்குப் பத்து ரூபா தட்சிணை, சாப்பாடு. அவருக்குக் கனகாபிஷேகம் செய்யலாம், நியாயமா பாக்கப் போனா. ஆனா என்னாலே முடிஞ்சது இவ்வளவுதான். தொழிலுக்காக நாம எவ்வளவோ தப்புகாரியம் பண்றோம். அதுவும் நாம எவ்வளவோ தப்புகாரியம் பண்றோம். அதுவும் என் மாதிரி தொழில்லே இருந்தா கேக்க வேணாம். இதுக்கு உன் மாதிரி வேதம் படிச்சவாளைக் கூப்பிட்டு கவுரவம் பண்றது ஒரு வகையான பிராயச்சித்தம்னு வேணுமானலும் வச்சுக்கோ.’

‘வாய் ஓயாம நீங்களே பேசிண்டிருக்கேளே! அவரைக் கொஞ்சம் பேச விடுங்கோ…’ என்றாள் சரோஜா.

‘ஆமாமாம். பேச ஆரம்பிச்சேன்னா ஓய மாட்டேன். என் தொழில் அப்படி. நீ கொஞ்சம் சாம வேதம் சொல்லேன். கேக்கணும்னு ஆசையா இருக்கு.’

‘என்னை டில்லிக்காரின்னு சொல்லிட்டு நீங்க இப்போ இப்படி அவரைப் போய்க் கேக்கறது நன்னாயிருக்கா? வேதம் சொல்ல வேளை, இடமெல்லாம் கிடையாதா?’ என்றாள் சரோஜா.

‘எனக்கிருக்கிற ஆதங்கத்திலே பேத்திண்டே போறேன். நீ சொல்றது சரிதான், சரோஜா. ராஜப்பா, புறப்படு. உங்காத்துக்குப் போவோம். உன் ஆம்படையா, குழந்தை எல்லாரையும் பாக்கணும் போலிருக்கு. எங்களுக்கு இன்னிக்கு உங்காத்திலேதான் சாப்பாடு. இந்தா, பழமாவது சாப்பிடு. காப்பியோ பாலோ வேற எதுவும் தொடமாட்டேங்கிறே.’

’திடுதிப்னு உங்காத்திலே சாப்பிட வரோம்னா என்ன அர்த்தம்? பாவம் அவரோட ஆம்படையா என்ன செய்வா? ஆத்திலே என்ன சௌகரியமோ, ஒண்ணும் தெரியாம இப்படிப் பேசினா…’ என்றாள் சரோஜா.

‘இது டில்லியில்லேடி, தெரிஞ்சுக்கோ! டில்லியிலேதான் ஒத்தருக்கு சாப்பாடுன்னாலும் அரை வயத்துச் சாப்பாடு. இங்கெல்லாம், கூட ரெண்டு பேர் சாப்பிடறதுக்குத் தயாரா சமைச்சி வச்சிருப்பா. என் ஊரைப்பத்தி எனக்குத் தெரியாதா? உன்னை எதுக்காகக் கூட்டிண்டு வந்தேன் தெரியுமா? என் ஊர் பெருமையைக் காட்டத்தான். சின்ன வயசிலே, இவாத்திலே எத்தனை தடவை சாப்பிட்டிருக்கேன் தெரியுமா? இவனோட அம்மா ஒரு ஊறுகா போடுவா, அதுக்குப் பேர் என்னடா ராஜப்பா? எஸ். மாகாளிக்கிழங்கு. மூட்டைப் பூச்சி வாசனையா இருக்குமே. வாயிலே போட்டா என்ன ருசியா இருக்கும் தெரியுமா? உங்கப்பா பெரிய சாப்பாட்டுப் பிரியர். பக்தர்னு சொல்லணும், அப்படித்தானே?’

அப்பா சாப்பாட்டுப் பக்தர்தான். தாத்தா வைத்துவிட்டுப் போன நிலத்தையெல்லாம் சாப்பிட்டே தீர்த்தார். இவன், சாப்பாட்டை நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகின்றேன் என்கிறானே, இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது? இந்த ஊரைப் பற்றிய அவனுடைய முப்பத்தைந்து வருடத்திய ஆதாரமான நினைவுக்குப் பங்கம் வரக்கூடாது என்ற பிடிவாதத்துடன், ஆவேசம் வந்தவன் போல் பேசுகிறான். அவனுடைய இளமைப் பருவ உலகத்தைக் காட்டுவதற்காக மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான். தன் வீட்டு நிலைமையைப் பற்றித் தெரிந்தால் இவனுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்! தனக்கு இப்பொழுது காப்பிக்குக்கூட வழியில்லை.

ஊருக்குப் புதியவர்கள் போல் இருந்தார்களே, கோயிலையும் குளத்தையும் சுற்றிக் காண்பித்து காப்பிக்கு வழி பண்ணிக் கொள்ளலாம் என்று தான் போட்ட திட்டம், கிணறு வெட்டப் பூதம் போல் ஆகிவிட்டதே! இவனிடமிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது?

புருஷ சூக்தமாம், சாம வேதமாம். யாருக்குத் தெரியுமாம் இவையெல்லாம்? அது கிடக்கட்டும். படிப்பு எதற்காக? பணமுள்ளவனிடம் விலையாவதற்காகவா? இவன் சம்பாதிப்பதற்காகத் தப்புத்தண்டா செய்வானாம்.

பிராயச்சித்தம் செய்ய ஒரு பிராம்மணன், வேதமந்திரம் எல்லாம்! அநியாயத்துக்கு துணை போக! நான் எவ்வளவோ தேவலை இவனுக்கு! வேஷத்திலே எது ஒசத்தி வேஷம், தாழ்த்தி வேஷம்!

‘என்ன ராசப்பா போகலாமா, உங்காத்துக்கு?’ என்றான் அனந்து.

‘சொல்லாம கொள்ளாம சாப்பிடப் போக வேண்டாம். போய் பாத்துட்டு வருவோம். வேணும்னா, காப்பி குடிச்சிட்டு….’

அனந்து இடைமறித்தான். ‘என்னை கரெக்ட் பண்ணிட்டு என்னடி நீயே சொல்றே, வேதவித்து அவாத்திலே காப்பி குடிப்பாளா?’

ராஜப்பாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உண்மையை அவர்கள் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

‘தோ பாரு, அனந்து! நான் வேதவித்துமில்லே, ஒரு மண்ணாங்கட்டியுமில்லே. வேதவித்து வேணும்னா நீ வேத காலத்துக்குத் தான் போகணும். முதல்லே நான் கேக்கறதை முதல்லே கொடு, அப்புறம் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்.’

அதிர்ச்சி அடைந்த அனந்து பலகீனமான குரலில் கேட்டான். ‘என்ன வேணும்?’

‘ஒரு கப் காப்பி.’

Print Friendly, PDF & Email

5 thoughts on “ஒரு கப் காப்பி

  1. இது சிறுகதையே இல்லை. 1000 நூல்களுக்கு நேர். நாங்குனேரி போனால் செத்துப் போய்த்தான் திரும்புவேன்.அரசு மட்டுமல்ல இனத்தாரும் இந்த நிலை மாற ஏதாவது செய்யவேண்டும்.
    இந்தக் கதை ஆழமானது. அரசு பின் தங்கிய இனம் ,தாழ்த்தப்பட்ட என வகை பிரிக்கையில் தலையாய கருத்து அவர்கள் பலதலைமுறையாகக் கல்வி மறுக்கப்பட்டவர்கள் என்பதோடு கல்வி அருமை உணராதவர்கள்;உணர்த்தவேண்டும் என்பது.
    இங்கேயும் கல்வி அருமை உணராத நிலை, காரணம் எதுவாக இருந்தாலும்; அரசும் சமுதாயமும் ஏதாவது செய்யவேண்டும். எப்படி முதல் பட்டதாரிக்கு வாய்ப்புகள் தரப் படுகின்றனவோ அது போல் Forward community யில் படிக்காத பெற்றோரின் குழந்தைகளைப் பின் தங்கிய வகுப்பாகக் கருதவேண்டும்.

  2. எந்த காலத்தில் எழுதப்பட்ட கதையோ! ஆனால் இன்றும் இந்த நிலை மாறவில்லை என்பது நிதர்சனமான உண்மை. வேதம் படிக்காத பிராமணர்கள் யாசகத்துக்காக போட்டிப் போட்டுக்கொண்டு காத்திருப்பதை இறந்தவர்களுக்காக காரியம் செய்யப்படும் இடங்களில் காணமுடிகிறது. மனதை உருக்கும்படியாக கதை எழுதப்பட்டிருக்கிறது.

  3. இது சீரியாசான சிறுகதை.இந்திரா பார்த்தசாரதியின் சிறந்த சிறுகதைகளில் இதுவும் ஓன்று.இதை நகைச்சுவை பட்டியலில் வெளியிட்டிருப்பது தவறு.

    1. நன்றி சுப்ரஜா, கதைதொகுப்பை மாற்றிவிட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *