எதிரும் புதிரும்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,035 
 

“”ம்… பேஷன்ட் பேரு சொல்லுங்க,” ரிசப்ஷனில், பீமனுக்கு தங்கை மாதிரி இருந்த நர்சு, கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்துக் கொண்டே இந்தியில் கேட்டாள்.
எதிரும் புதிரும்!சொன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தார் ராஜாராமன். பதில் வராமல் போகவே, திடீரென நிமிர்ந்தாள்.
“”ம்… அது வந்து… பிரியம்வதா ராஜாராமன்.”
குனிந்தாள். நான்கு நொடிகள் சென்றதும், மீண்டும் நிமிர்ந்தாள். இந்த முறை ஆங்கிலம், “”ரூம் நம்பர் 302, மூணாவது மாடி… ஒன் மினிட், அவங்க பேரு, பிரியம்வதா ராஜகோபால். நீங்க கேட்டது…”
ராஜாராமனுக்கு திடீரென உறைத்தது. “ஆமாம்… அவங்களே தான்… அவளே தான்…’ என்று நாக்கு வரை வந்ததை, கடைசி நொடியில் மாற்றிக் கொண்டான். “”அவங்க பிரியம்வதா… நான் ராஜாராமன்… இரண்டையும் சேர்த்து சொல்லிட்டேன், சாரி!”
“சே… என்ன அசட்டுத்தனம்…’
அவள், ராஜாராமனை கேள்விக்குறியுடன் பார்த்தாள்.
“”நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?”
ராஜாராமனுக்கு என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று புரியவில்லை. இங்கு வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது. “எல்லை தெய்வமே ஆயிரம் எதிர் கேள்வி கேட்கிறதே?’
“”ம்… அது வந்து…” தடுமாறினான்.
அதற்குள் பின்னாலிருந்து, “”வாங்க…” என்ற சப்தம் கேட்டது.
ராஜாராமன் சட்டென திரும்பவும்…
கல்யாணி மாமி நின்றிந்தாள்.
“”என்ன மாமி… எப்படி இருக்கீங்க? இந்த இடத்துல நலம் விசாரிக்கிறது தப்புதான். நீங்க தான் பேஷன்ட் இல்லையே, அதனால, பரவாயில்ல.”
சிரித்தாள் கல்யாணி மாமி.
“”ஆன்டி… விசிட்டர் டைம் முடிஞ்சிருச்சு. பெரிய டாக்டர் வர்ற நேரம். சீக்கிரமா பார்த்துவிட்டு போகச் சொல்லுங்க… கூட்டமா இருந்தீங்கன்னா எனக்கு வேலை போயிடும்,” என படபடவென, எண்ணெயில் விழுந்த அப்பளம் போல், இந்தியில் பொறிந்தாள் நர்ஸ்.
மாமி அவளை நோக்கி, ஒரு வெற்று பார்வையை உதிர்த்து, மவுனமாக தலையாட்டி விட்டு நகர்ந்தாள்.
திடீரென ராஜாராமனுக்கு ஞாபகம் வந்தது. “அடசே… ஒண்ணுமே வாங்கிக் கொண்டு வரவில்லையே… வழக்கமாக எல்லாரும் வாங்கிக் கொண்டு வரும் ஆரஞ்சு பழம், ஆப்பிள், ஹார்லிக்ஸ் பாட்டில்… குறைந்த பட்சம் அவளுக்கு பிடித்த பெர்க் சாக்லேட்…
“நல்ல வேளை, இப்போதாவது ஞாபகம் வந்ததே. ஒரு வேளை நே@ர போயிருந்தால், “அம்மா உன்னோட அருமை மாப்பிள்ளை மாறவே இல்லை. கைய வீசிட்டு வந்துட்டு, நீ குடுத்த காப்பியை குடிச்சுட்டு போயிட்டார்… ரொம்ப பெருமையா இருக்கு; மெச்சிக்கோ…’ என்று கூறியிருப்பாள்.
“”மாமி ஒரு நிமிஷம். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்… காரை சரியா பூட்டலேன்னு நெனைக்கிறேன். சரியா தெரியலை… பார்த்துட்டு, வந்துடேறன்…” ஆமா… நீங்க இந்த பக்கம் எதுக்காக@வா வந்தீங்க @பாலிருக்@க… அதற்குள், நான் வந்துட்@டன்.”
“”அதுவா… ஒண்ணுமில்லே, ப்ரியாவுக்கு மருந்து வாங்கணும். இங்கேயேதான் எதிர் பில்டிங்கி@ல இருக்கு. நான் வாங்கிக்கிறேன். நீங்க போய்ட்டு, நேரே 302க்கு வந்துடுங்க.”
மாமி கையில் ஒரு நீள சீட்டு இருப்பதை அப்போதுதான் கவனித்தான்.
“”இல்லே… அந்த சீட்டை இப்படி கொடுங்க. நான் பேஸ்மென்ட் போ#, மாத்திரை மருந்த வாங்கிட்டு வந்துடறேன். நீங்க ரூமுக்கு போங்க.”
நேற்று காலை அப்பாவுடன் நடந்த உரையாடல் ராஜாராமனுக்கு நினைவுக்கு வந்தது. நேற்று காலையில் தான், சென்னையிலிருந்து டில்லிக்கு வந்திருந்தான் ராஜாராமன். ஆபீஸ் விஷயமாக, குர்கானில் நான்கு நாள் மீட்டிங். கனாட்பிளேசில் ரூம் போட்டிருந்தனர்.
ராத்திரி, 8:00 மணிக்கு அப்பா போன் செய்தார்.
“ராமா… ப்ரியா ஹாஸ்பிடலைஸ்டு தெரியுமா?’
“தெரியாது… தெரிஞ்சுக்கணும்ன்னு அவசியமும் இல்லே!’
அப்பா சில நொடிகள் பதில் கொடுக்கவில்லை.
“ஏண்டா எவ்வளவு நாள் தனியா இருக்கப் போற… நான் போய்ட்டேன்னா, சீர்கெட்டு போகப் போறே…’
“கமான்ப்பா… எத்தனையோ பேச்சலர்ஸ் தனியாதான் இருக்காங்க. அவங்க சீர்கெட்டா போயிட்டாங்க… அம்மா போனதுக்கு அப்புறம், நீங்க தனியாக தானே இருக்கீங்க. கெட்டா போயிட்டீங்க. உங்களுக்கு ஏதோ ஒண்ணு நடக்கணும். அத சுத்தி வளைச்சு பேசறீங்க. அதான் டைவர்ஸ் வரைக்கும் போயாச்சே … இனிமே என்ன இருக்கு?’
“ஏய்… கோர்ட்ல தீர்ப்பாகற வரைக்கும்,
அவ ஒன்னோட பொண்டாட்டிதான். அது கெடக்கட்டும். கல்யாணத்துக்கு முன்னால, நாலு வருஷம் பிரண்ட்சா இருந்திருக்கே. என்னமா வழிஞ்சிருக்கே. அதுக்காவது… அது சரி… அவ என்னடா பெரிய தப்பு பண்ணிட்டா… அவளுக்கு ஒரு தனி ஐடெண்ட்டிடி வேணும்ன்னு எதிர்பார்த்தா… அது தப்பா?’
“அப்பா… நான் தான், லீட் கிடார். நான் என்ன வாசிக்கறேனோ அதுக்கு ஏத்த மாதிரி அவ வாசிக்கணும். அவ தனியா இன்னொரு ஆர்கெஸ்ட்ரா நடத்தக் கூடாது. உங்களுக்கு இதெல்லாம் புரியாது. வீட்ல ரெண்டு ஹஸ்பெண்டா இருந்தோம். தேர் வாஸ் நோ வைப்… வேற ஏதாவது பே”ங்க…’
“சரி பேசறேன்… ம்… மன்மோகன் சிங் சவுக்கியமா?’
“இந்த கிண்டல் தானே, வேண்டாங்கிறது?’
“நீ வைபா இருந்திருக்க வேண்டியது தானே. அதை விடு… நான் சொல்றத கொஞ்சம் கேளு.
யு கோ வித் ஓப்பன் மைண்ட்… ஒரு பொக்கே வாங்கிக்கோ; “கெட் வெல் – வித் ரிகார்ட்ஸ் சந்திரமவுலி’ன்னு கார்டு போட்டு, அவ கிட்ட கொடு. அவ நல்ல பொண்ணுடா… என்ன மக நட்சத்திரம்; அப்படித்தான் கொஞ்சம் அப்பர் ஹாண்டா இருப்பா.’
“அப்பா… யூ ஆர் சைல்டிஷ்!’
“இப்பவும் ஒண்ணும் குடிமுழுகிப் போகலை. வேண்டாம், வேண்டாம்ன்னு சொல்ல, சொல்ல வழிஞ்சுட்டு, நீங்க தான் காதல் செஞ்சீங்க… சொல்ல, சொல்ல சண்டை போட்டீங்க… டைவர்ஸ் நோட்டீஸ் கொடுக்கறதுக்கு முன்னால, என்னை ஒரு வார்த்தை கேட்டியா… நீங்க தான் முட்டாள்கள்; முடிவை மறுபரிசீலனை செய்யறதுல தப்பே இல்லே…’
“என்னை கட்டாயப்படுத்தாதீங்கப்பா!’
“நான் சொல்றத செய்…’ என்று அப்பாவின் குரல் உயர்ந்து சிறிது மவுனம் நீடித்தது.
“ஓ.கே., ஓ.கே., நானா எதுவும் ஆரம்பிக்க மாட்டேன்… அவளா ஏதாவது சொன்னா…’
“போடா… போய் பாரு. கிழிஞ்ச நாரா கெடக்காளாம். கோ வித் பொக்கே அன்ட் ப்ரீ மைண்ட், மை டியர் டர்டி கூஸ்!’
“அப்பாவுக்கும், மகம் நட்சத்திரமாக இருந்திருக்குமோ…’ என்று ராஜாராமனுக்கு அப்போது சந்தேகம் வந்தது.
ராஜாராமன் மருந்துவமனையை விட்டு வெளியே வந்து, ஒரு பெரிய கூடை பொக்கே ஒன்றை வாங்கி, கார்டில் அப்பா பெயரை எழுதினான். காட்பெரி சாக்லேட் கிப்ட் பேக் ஒன்றை வாங்கிக் கொண்டான். அதில் பெர்க் இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டான்.
அதே நேரத்தில், கல்யாணி மாமி, அறை
எண் 302 ஐ அடைந்திருந்தாள்.
“”ப்ரியா, மாப்பிள்ளை வந்திருக்கார்…. ரிசப்ஷன்லே பார்த்தேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவார்.”
முகம் சுருங்கினாள் ப்ரியா. “”மாப்பிளையா வது, மண்ணாங்கட்டியாவது… அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே! எனக்கு யாரையும் பார்க்க இஷ்டமில்லே… நீ வேணா, கீழே போய் பார்த்து, பேசிட்டு அப்படியே அனுப்பிடு.”
அதற்குள் கதவு திறக்க, ஒரு நர்ஸ் கைகளில், ஒரு ட்ரேயுடன் உள்ளே வந்தாள். வந்தவள், மாத்திரைகளை சரமாரியாக டப்பாக்களில் அடைத்து விட்டு போனாள்.
அவள் போன இரண்டாவது நொடியில், கதவு மீண்டும் தட்டப்பட்டது.
இந்த முறை ராஜாராமன்.
“”வாங்க…” என்றாள் கல்யாணி மாமி. ப்ரியா கொஞ்சம் கூட சலனமில்லாமல், தன் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டாள். ராஜாராமன், அப்பா கொடுக்கச் சொன்ன பொக்கேயை, அவளை நோக்கி நீட்டினான்.
ப்ரியா, அம்மாவை நோக்கி கைகாட்டினாள். கல்யாணி மாமி பவ்யமாக வாங்கி, ப்ரியாவிடம் காட்டிவிட்டு, அருகிலிருந்த டேபிள் மீது வைத்தாள். ராஜாராமன் கேள்வியே கேட்காமல், கிப்ட் பாக்கெட்டையும் மாமியிடமே கொடுத்தான். அதுவும் எந்திர கதியாக டேபிளுக்கு போனது.
“”ஹவ் ஆர் யூ?”
“”ம்… இருக்கேன்.”
“”கொஞ்சம் உடம்புக்கு ஏத்த வேலை செய்யறது.”
“”நீங்க, “அட்வைஸ்’ செய்யுற காலமெல்லாம் போயிடுச்சு.”
கல்யாணி மாமி, ரெண்டு பேரையும், மாறி மாறி கலவரமாக பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியாமல், கையை பிசைந்தாள்.
“”அப்பா, “அவசியம் போய் பார்த்திட்டு வா’ன்னு சொன்னார். அதான்…”
“”அப்ப நீங்களா வர்லே… இல்லியா?”
ப்ரியா கொஞ்சம் வாலி டைப். எதிராளியின் பலத்தை சரி பாதி வாங்கி விடுவாள். அந்த நிமிடமே ராஜாராமனுக்கு பிடி அற்று போனது.
“”ஓகே., ஓகே., கெட் வெல். கீப் குட் ஹெல்த்!” ஒரு மாதிரி சமாளித்து, மாமி பக்கம் திரும்பி, “”என்ன மாமி… எப்படி இருக்கீங்க?”
மாமி ஒரு பெருமூச்சு விட்டுட்டு, “”ம்… ஏதோ இருக்கேன்பா… இந்த ஊர் இந்தி, ஒரு எழவும் புரியல. ஏதோ பாம்பே இந்தியை வச்சிக்கிட்டு சமாளிக்கறேன்… இவ என்னடான்னா விக்கிரமாதித்தன் போல, காடாறு மாசம், நாடாறு மாசம்ன்னு தேசாந்திரம் போயிடறா… பெரிய வீட்டுல, தன்னந்தனியா…”
“”அம்மா… போதும் …”
“”இந்த மாதிரி பேசி, வாயை அடைச்சுடுவா. அவர் கூடவே நானும் மேல போயிருக்கணும்?”
அதற்கு மேல் ராஜாராமன் அங்கிருக்க பிரியப்படவில்லை; போய் விட்டான். கல்யாணி மாமியும் கூடவே போனாள்.
கால் மணி சென்றதும் திரும்பி வந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது.
“”இருந்தாலும், உனக்கு இவ்வளவு ஆங்காரம் கூடாது.”
“”இப்ப என்னதான் சொல்ல வர்ற… பழங்காலத்து தமிழ் சினிமாவுல, கெடுத்த வில்லனை திருத்தணும். அப்புறம் அவனுக்கே அவளை கட்டி வைக்கணும்கிற மாதிரி, நான் அவரோட திரும்ப குடும்பம் நடத்தணுமா? அம்மா… உனக்கு என்ன மூளை மழுங்கிடுச்Œõ?”
“”சரிடி… நீ இப்படியே இரு, இன்னிக்கு வயத்தை கிழிச்சாச்சு. நாளைக்கு என்ன நடக்கப் போகிறதோ… ஈஸ்வரா!”
“”இங்க பாரு… உன்னால முடியலைன்னா சொல்லு. நாளைக்கே டிரெயின் ஏத்தி விடறேன். உங்க அண்ணன் வீட்டுக்கு போ.”
“”ஏன்… மாமான்னு சொல்ல முடியாதோ?”
“”எனக்கு யாரும் வேண்டாம். எல்லாரும் போய் தொலைங்க…”
பதில் பேசாமல் அழுதாள் கல்யாணி மாமி.
“”அம்மா… உனக்கு, உன் மாப்ளை அப்படியே சத்யசீலர்ன்னு நினைப்பு. ஆனா, அந்த ஆள் மாதிரி, மேல் ஷாவனிஸ்டை, வேற எங்கையும் பார்க்க முடியாது. உள்ளுக்குள்ள உளுத்து போன பிலாசபி… வெளியிலே பெரிய இன்ட்டெலிக்சுவல்ன்னு பந்தா… எல்லாம் வேஷம்…
“”ரெண்டு மூணு தடவை என்னை அடிச்சிருக்கான்… கடைசியா அடிக்க வந்த போது, கையை புடிச்சு, ஒரு முறுக்கு முறுக்கினேன். கை உடைந்து, இரண்டு வாரம் ஆபீஸ் போகல… ஒரு மாசம் இடது கையால, லாப் டாப்ல டைப் அடிச்சான். உன் மாப்ளே சரியான க்ராக்…”
“”ஆமா… நீ அப்படியே புடம் போட்ட தங்கம் பாரு… எல்லாம் என் தப்பு!”
“”என்ன தப்பு?”
“”உன்னை பெத்ததே தப்பு.”
“”அதை, உன் புருஷன்கிட்டே சொல்லியிருக்கணும்.”
கல்யாணி மாமி ஒன்றும் பேசவில்லை. ஒரு வெற்று பார்வை பார்த்தாள். “”நல்ல வேளைடி… உங்களுக்கு குழந்தைகள் பொறக்கல… இல்லேன்னா, அது படற பாட்டை, கண் கொண்டு பார்க்க முடியாது.”
“”அம்மா… இனிமே இந்த டாப்பிக்கை எடுக்காதே.”
“”ஏண்டி… நீ கொஞ்சம் இறங்கி வரக்கூடாதா?”
“”வரலாம்… என்னை மாதிரி, “அட்ஜெஸ்ட்’ செஞ்சுட்டு போற ஆள் வேறு யாரும் கிடையாதுன்னு எனக்கு ஆபீஸ்ல பேரு. ஆனால், உன் மாப்பிள்ளை கொஞ்சமாவது என்னை மதிச்சாரோ! வந்தவுடனேயே, “அட்வைஸ்’ செய்ய ஆரம்பிச்சாச்சு, “அப்புறம் எப்ப சென்னை வரப்போற’ன்னு, அடுத்த கேள்வி வரும். எனக்கு டில்லியை விட்டு போக முடியாது.”
“”ஆபிஸ்ல. “அட்ஜெஸ்ட்’ செய்வ… வீட்ல அதை செய்ய மாட்டே… நல்லாருக்கு உன் நியாயம். என்னையும் தான், உங்க அப்பா அடிச்சிருக்கார். ஒரு தடவை காலால மிதிச்சே இருக்கார்… அப்புறம் தான், நான், அவர் கோபத்தை கிளர்ற மாதிரி பேசிருக்கேன்னு தெரிஞ்சுது… அப்புறம் எப்படி கேட்டா, பதில் “சாந்தமா வரும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். சாகற சமயத்திலே, “நான் போய்ட்டா நீ என்னடீ செய்வே… என்னடீ செய்வேன்’னு கண்ணீர் விட்டு கதறினார்…”
“”அம்மா போதும்மா… உன் அடிமை புராணம். இப்பெல்லாம் ஆணும், பெண்ணும் ஒண்ணு!”
“”ஒண்ணு இல்லேடி. ஒண்ணுக்காக, இன்னொண்ணு!'”
“”சரி… என்ன எழவோ விடு… இந்த ராஜாராமனுக்கு, நீயே இன்னொரு சீதையை, ஒரு அடிமை சீதையை கல்யாணம் செய்து வை; என்னை இழுக்காதே. எனக்கு தூக்கம் வருது.”
அதன் பிறகு, கல்யாணி மாமி எதுவும் பேசவில்லை.
ராஜாராமன் சென்னை வந்து ஒரு மாதம் சென்றதும், ஈ.சி.ஆர்.ரோட்டில், அவன் காரை, ஒரு கன்ட்டெயினர் லாரி பதம் பார்த்தது. உடனடியாக, அப்போலோ ஐ.சி.யூ.,வில் “அட்மிட் ‘ செய்யப்பட்டான். அந்த சமயத்தில், ப்ரியம்வதா, தன் கம்பெனி விஷயமாக, சென்னை வந்திருந்தாள். கூடவே, அவள் அம்மாவும் வந்திருந்தாள். தகவல் கிடைத்ததும், அம்மாவின் பிடுங்கலின்படி, சில நிபந்தனைகளுக்குட்பட்டு, மருத்துவமனை வர ஒத்துக் கொண்டாள் ப்ரியம்வதா.
இருவரும் கால் டாக்சி பிடித்து, மருத்துவமனையை அடைந்தனர். ரிசப்ஷனில் இருந்த ஒல்லியான, சின்ன உடம்புக்காரி ப்ரியம்வதாவை பார்த்து கேட்டாள்,
“ம்… பேஷன்ட் பேரு சொல்லுங்கம்மா…’
கவலை தோய்ந்த முகத்தோடு ப்ரியம்வதாவை பார்த்தாள் கல்யாணி மாமி.

– பிப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *