எச்சில் இலை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 7,097 
 

அந்தச் சாலையின் மேட்டுப்பகுதி ரொம்ப உயரமாக இருந்தது. என்னால் சைக்கிளை கொஞ்சம் கூட மிதிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும். உடம்பில் உள்ள பனியன், வியர்வையால் நனைந்து போயிருந்தது. சூரியன் மறைவதற்குள் எப்படியாவது அந்த மலைக்கிராமத்திற்குச் சென்றாக வேண்டும். இப்போது சைக்கிளை இன்னும் வேகமாக மிதிக்க ஆரமித்தேன். ஒருநாள் வருவதற்கே நமக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குதே. அவன் எப்படி ஏழு வருஷம் காலையிலும் மாலையிலும் வந்திட்டுப் போனான் என்று நினைக்கும் போதே மனசு கடுத்தது. நான் ஐஞ்சாவது பாஸ் பண்ணேன். ரொம்ப சந்தோசம். பெரிய ஸ்கூலுக்குப் போகப்போறேன்ல்ல.. அப்பாகிட்ட சண்டைப்போட்டு மூன்று ரூபா வாங்கி எல்லாத்துக்கும் மிட்டாய் வாங்கிக்கொடுத்தேன். ஒரே ஜாலியா இருக்கும். இப்பெல்லாம் அந்த மாதிரி நிகழ்வே நடக்கிறதுல்ல. பழைய நினைவுகளை நினைக்கும் போதே மனசு இனித்தது.

கவர்மண்ட் ஸ்கூல் முதல்நாள் ஆறாம் வகுப்பறை. பயபக்தியோடு அமைதியாக அமர்ந்திருந்தேன். புது நண்பர்கள். புது இடம் என எல்லாமே எனக்கு வித்தியாசமாய் தோன்றியது. அவரவர்களும் தங்களின் நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். மத்தியானம் அவரவர் நண்பர்களோடு சாப்பிடப்போனார்கள். நான் மட்டும் தனித்து விடப்பட்டேன். சின்ன வயசில இருந்தே அவ்வளவா எனக்கு நண்பர்கள் கிடையாது. அன்றும் அப்படித்தான். மத்தியான வகுப்புக்குச் சென்றேன். அப்பெல்லாம் ஸ்கூல்ல தரையிலதான் உட்காந்திருப்போம். பசங்க வரிசையில ஓரமா போயி உட்காந்தேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு காக்கி டவுசரோடு வெள்ளை சட்டை வேர்க்க விறுவிறுக்க ஒருத்தன் வந்தான். உள்ள வந்தவன் அந்த வகுப்பறையை ஒருமுறை சுற்றிப்பாரத்தான். என்ன நினைத்தானோ அவன்? வேகமாக வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். நானும் பதிலுக்குச் சிரித்தேன். ஒரு வாரத்திற்குப் பிறகு எனக்கு நல்ல நண்பனாகிப்போனான். ஆளு மாநிறமாத்தான் இருப்பான். பேரு வெள்ளையன். அப்பாவித்தனமான வெள்ளையனை எனக்கு ரொம்ப பிடித்துப்போனது. அடுத்தடுத்த ஆறாவது, ஏழாவது எட்டாவது என நானும் வெள்ளையனும் பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்புதான். அதனால நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமாயிட்டோம்.

வகுப்புக்கு தினமும் தாமதமாகத்தான் வருவான். எங்க ஊருக்கு வடக்கு பக்கமா ஒரு பெரிய மலைக்கிராமத்தில்தான் வெள்ளையனின் வீடு இருக்கு. தினமும் அங்கிருந்துதான் சைக்கிள்ள பள்ளிக்கூடத்திற்கு வருவான். நான் அவனுடைய கிராமத்தைப் பத்திக் கேட்டப்ப நிறைய சொல்லுவான். வெள்ளையனுக்கு மலையிலிருந்து வரது போரது எல்லாம் பழகிப்போயிடுச்சி. பத்தாவதுக்குப் பிறகு வெள்ளையன் படிக்கல. குடும்ப சூழ்நிலையா… படிச்சது போதும்ன்னு நினைச்சானா… தெரியவில்லை. அதுக்குப்பிறகு அவனுடைய தொடர்பு முற்றிலும் அறுந்துவிட்டது. காலம் மாறிப்போச்சு. பதினைஞ்சு வருஷத்துக்கு அப்புறம் வெள்ளையனிடமிருந்து போன் வந்தது. வெள்ளையனுக்கு கல்யாணமாம். கண்டிப்பா வரனும்முன்னு சொன்னான். நானும் போவனுமுன்னு முடிவு பண்னேன். இன்னிக்கு எப்படியோ இதுவரையில் வந்துட்டேன். கொஞ்ச நேரத்துல கிராமத்தை நெருங்கிடுவன். அப்பத்தான் நினைச்சன், இந்த வெள்ளையன் எப்படித்தான் ஐஞ்சு வருஷமா காலையிலும் மாலையிலும் இந்த மலையேறி இறங்கி வந்திருப்பானோ தெரியல.

சீரியல் பல்பு. வாசலில் இரண்டு பக்கமும் வாழைமரம். ஸ்பீக்கரில் புதுப்பாட்டு. கல்யாண வீட்டிற்குள் நுழைந்தேன். அப்போது வாசலை சாணியால் மெழுகிக்கொண்டிருந்தாள் ஒரு நடுத்தர வயதுமிக்க அம்மா.

“அம்மா… நான் வெள்ளையனுடைய பிரண்டு. வெள்ளையன் எங்க?” என்றேன். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே வெள்ளையனின் குரல் கேட்டு திரும்பினேன்.

“வா கதிர்….. உன்னைப் பார்த்து எவ்வளவு வருஷமாச்சு. எப்படி இருக்க.. நல்லா இருக்கியா…” என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். இருவரும் கொஞ்ச நேரம் பழைய நினைவுகளை அசைப்போட்டு சிரித்துக் கொண்டோம். கல்யாண ஏற்பாடுகள் வெகுவாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. கல்யாணச் சாப்பாட்டுக்கு இலைப்போட்டார்கள். எல்லோரும் போய் அமர்ந்தார்கள். நானும் வெள்ளையனும் கூட அவர்களுடன் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தோம். இலைப்போட்டு தண்ணீர் தெளித்து பசியை விரட்ட ஆவலோடு காத்திருந்தேன். பரந்த இலையில் பாயாசத்தை முதலில் ஊற்றினார்கள். ஊர்ல அப்பா சொல்லுவாறு, “தம்பி… கல்யாணத்த சிக்கனமா முடிக்கனுமுன்னு நினைக்கிறவங்க சாப்பாடு போடும்போது முதல்ல பாயாசத்தைதான் ஊத்தூவாங்க” என்பார். நான் எதுக்கு அப்படி செய்யுறாங்கன்னு கேள்வி கேட்ட போதுதான் எனக்கு விஷியமே புரிய ஆரமித்தது. இனிப்பு சாப்பிட்ட பிற்பாடு சாப்பாடு நிறைய சாப்பிட முடியாது. கல்யாணத்துல சாப்பாடு செலவுதான் அதிகம் வரும். வரவங்களுக்கு சாப்பாடு நல்லா போட்டுட்டா போதும் எதுவும் பேசமாட்டாங்க. சாப்பாடு சரியில்லன்னா அது நொட்டம், இது நொட்டம்முன்னு ஏதாவது புரளி பேசிட்டுருப்பாங்க. இப்படி சாப்பாட்டு செலவை குறைக்கிறதுக்குத்தான் இப்படி பண்ணுவாங்க. அதனால்தான் இன்றையக் கல்யாண வீடுகளில்கூட இனிப்பை முதலில் இலையில் வைக்கிறார்கள். பாயாசத்தை வாயில் எடுத்து உறிஞ்சிக்கொண்டே அப்பா சொன்னதை நினைத்துக் கொண்டேன்.

என்னோடு பந்தியில் உட்காந்தவர்கள் அனைவரும் எழுந்து விட்டார்கள். வெள்ளையனும் சாப்பிட்டு முடித்திருந்தான். நான் வீட்டிலே சாப்பிடுகிற மாதிரி பொறுமையாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். “ஏ கதிர் சீக்கிரம் எழுந்தர்றா… எல்லாரும் எழுந்து போயிட்டாங்க…” இப்போது நான் அவசர அவசரமாக சாப்பிட்டேன். அதற்குள் இலை எடுக்கும் அம்மா பக்கத்தில் வந்து விட்டார்கள். என்னுடைய வரிசையில் என் இலையை மட்டும் எடுக்காமல் எனக்காக நின்று கொண்டிருந்தார்கள். “தம்பி பொறுமையா சாப்பிடுங்க… விக்கிக்க போவுது. தண்ணி குடிங்க… நீங்க சாப்பிட்ட பிற்பாடு நான் இலையை எடுத்துக்கிறேன்” என்றாள் அந்த அம்மா. அவர்களிடம் தலையை மட்டும் ஆட்டிவிட்டு புன்னகை செய்தேன். அப்பொழுதுதான் கவனித்தேன், நான் வரும்போது வீட்டை சாணியால் மெழுகிகிட்டு இருந்த அதே அம்மாதான். நான் சாப்பிட்ட எச்சில் இலையை தூக்கி எடுத்த போது எச்சில் ரசமானது அந்தம்மாவின் கைகளை நனைத்தது. ஆனாலும் அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாது மீண்டும் தன் வேலையை தொடங்க ஆரமித்தார்கள்.

எனக்கு பின்னால் வந்த அனைத்து பந்திகளிலும் அந்தம்மாதான் எச்சில் இலையினை எடுத்தார்கள். எனக்கென்னவோ மனசு ஒருமாதிரியாக இருந்தது. இலையில் ரசமும் பாயாசமும் ஊற்றி உள்ளங்கை நெனைய நாக்கை சுழற்றி நக்கி நக்கி சாப்பிடுவார்கள். அவர்களின் எச்சில் பட்ட இலையை ஒரு பெண் கைவைத்து எடுக்கனுமா? இது தவறு என நினைத்தேன். அதுவும் அந்தம்மாவைப் பார்த்தப்போது பூ பொட்டு இல்லாமல் விதவை என்றே தோன்றியது. திருமண வேளைகள் அனைத்தும் முடிந்து நானும் வெள்ளையனும் தனியே அமர்ந்திருந்தோம். பெண் அழைப்பின் போது வெள்ளையன் வழிந்ததைச் சொல்லி அவனை கிண்டலடித்தேன். பேச்சு வாக்கில் எச்சில் இலையை எடுக்கும் அந்தம்மாவைப் பற்றி விசாரித்தேன்.

“எங்க அத்தைதான். பேரு விசாலாட்சி. மாமா ஒரு விபத்துல செத்துட்டாரு. குழந்தையும் இல்ல. பக்கத்து தெருவுலதான் இருக்காங்க…” என்று சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தான்.

“என்னாடா அத்தைன்னு சொல்ற… அவுங்கள போயி எச்சி இலையை எடுக்கச்சொல்லி… இன்னும் அவுங்கள கஷ்டப்படுத்துற… வருபோது கூட குண்டா நிறையா சாணியைக் கரைச்சிட்டு நின்னுட்டு இருந்தாங்க…”

“இல்ல கதிர்.. நாங்கெல்லாம் ஒன்னும் சொல்லல. அவங்களே இழுத்துப்போட்டுட்டு செய்யிறாங்க” என்றான்.

“சொந்த அண்ணன் வீட்டு கல்யாணம். மேம்போக்கா வந்து உட்காந்து இருக்க வேண்டாமா? அப்பப்ப சின்னதா வேலை. இது போதாதா? ” என்றான் கதிர்.

“கதிர்… இது கிராமம். இங்கெல்லாம் இப்படித்தான். ஒரு வீட்டுல விஷேசமுன்னா பக்கத்துல இருக்கிற ஆம்பிளைங்க, பொம்பிளைங்க எல்லாம் வந்து ஒன்னா வேலை செய்வாங்க… சாப்பிடும் போது பாத்தல்ல.. ஆம்பிளைங்க எல்லாம் பந்தி பரிமாறுனாங்க.. . பொம்பளைங்க சமைச்சாங்க… எங்க பெரிய சித்தி, அத்தை, அக்கா, பக்கத்து வீட்டு மாரியக்கான்னு எல்லாரும் இருந்தாங்கல்ல ”

“சரிதான் வெள்ளையன். எல்லாரும் கலந்து வேலை செய்யிறது நல்லதுதான். நான் அதை சொல்லல. எச்சிஇலையை எடுக்கிறது மட்டும் அந்தம்மாதான செய்யுது. அதைத்தான் சொன்னேன்”

“எச்சில் இலை எடுக்கிறது புண்ணியம். அது வேற யாருக்கும் கிடைக்காது தெரியுமா?. அதெல்லாம் உனக்கு தெரியாது கதிர்.”

“என்னது… புண்ணியமா? அப்படின்னா நீ எடுக்கிறது? இல்லன்னா, நீ இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே உங்க சொந்தக்காரங்கள எடுக்க சொல்றது? ஏ புண்ணியத்தை அந்த விசாலாட்சி அம்மா மட்டும் எடுத்துக்கனும். ”

வெள்ளையனிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. யோசனையில் ஆழ்ந்தான். “ நீ என்னோட நல்ல நண்பன். உனக்கு விடிஞ்சா கல்யாணம். நான் உன்னை கோபப்படுத்தனுமுன்னு சொல்லல. என் மனசுக்கு பட்டிச்சி அதான் சொன்னேன்.” என்றான் கதிர்.

அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசவில்லை. மற்ற சில விஷியங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். “தம்பி சீக்கிரம் தூங்கு… காலையில எழுந்திருக்கணும்” என்று வெள்ளையனின் அம்மா சொல்லிட்டுப் போனாங்க. நாங்க ரெண்டு பேரும் தூங்குவதற்கு கிளம்பினோம். போகிற வழியில்தான் சமையலுக்காக பாக்கு மரத்தால் சதுரமாகக் கட்டி தென்னங்கீற்றை மேலே போட்டிருந்தார்கள். அதற்கு பக்கத்தில் அந்த நேரத்திலும் விறகு அடுப்பால் சோறாக்கியக் கரிப்பாத்திரப்பண்டங்கள் அனைத்தும் சுத்தமாக வௌக்கி வைத்திருப்பதைக் கண்டேன். வெள்ளையன் உள்ளே படுக்கச்சொல்லி விட்டு நான் அந்த அம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன்.

“அம்மா… நான் வெள்ளையனின் பிரண்டு” என்று விசாலாட்சி அம்மாவிடம் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

கொஞ்ச நேர மௌனத்திற்று பிறகு “எந்த ஊருப்பா” என்றார். நான் பிறந்தது முதல் படித்தது வரை சொன்னேன். நானும் “உங்களப்பத்தி சொல்லுங்கம்மா… நீங்க ஏ எச்சில் இலையை எடுக்கிறது, பாத்திரம் கழுவுறது எதுக்கு? உங்களுக்கு துணையா யாரும் இத செய்ய மாட்டாங்களா? நீங்க மட்டும் தனியா செஞ்சிட்டு இருக்கீங்க?” என்றேன்.

“நானும் கல்யாணம் ஆகி ராணி மாதிரி இருந்தேன். புருஷன் செத்ததுக்கு அப்புறம் நல்ல காரியங்களுக்கு முன்ன நிக்கிறதுக்கு எனக்கே கூச்சமாய் இருந்தது. அதுமட்டும் இல்லாம யாராவது எதாவது சொல்லுவாங்களான்னு கூட பயமாவும் இருந்தது. அதனால நானே ஒதுங்கி நிக்க ஆரமிச்சிட்டேன். ஒரு மூணு வருஷத்துக்கு முன்னால எங்க நாத்தனார் வீட்டு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். சொந்தகாரங்க எல்லோரும் ஒருஒரு வேலையா செஞ்சாங்க. நானும் அவுங்க கூடமாட உதவி செஞ்சேன். கொஞ்ச நேரத்துக்கு பிற்பாடு புழக்கடை பக்கம் வெளிய போலாம்முன்னு போனேன். அங்க என் நாத்தினார்கிட்ட தூரத்து உறவுப்பெண், “என்ன பாஞ்சாலை, தாலி அறுத்தவ கல்யாண வீடுன்னு கூட பார்க்காம அங்கிட்டும் இங்கிட்டும் சுத்திட்டு திரியரா… நீ சொல்ல மாட்டியா?” என்றாள்.

“என்ன சொல்றது. எங்க வீட்டுக்கார்ரோட தங்கச்சி… அதான்…” என்று பாஞ்சாலை இழுத்தாள்.

“இதெல்லாம் பாத்தா முடியுமா? சொல்லித்தான் ஆகனும். நல்ல விஷேசங்கல்ல கலந்துக்க கூடாது. அப்படியே வந்தாலும் இலை எடுக்கிறது, பாத்திரம் கழுவுறதுன்னு ஒதுங்கியே இருந்திட்டு போயிடுனும். இதெல்லாம் தெரியாதா அவளுக்கு?” என்றாள்

பாஞ்சாலை ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள். புழக்கடையில் நின்று கேட்டுக் கொண்டிருந்த நான் மனசு ஒடிஞ்சி போயிட்டேன். கொஞ்ச நாளைக்கு எந்தவொரு காரியங்களுக்கும் போகாமதான் இருந்தேன். முக்கியமான விஷேசங்கல்ல மட்டும் கலந்துக்குவேன். சரி வேலை ஏதாவது செய்யனுமில்ல… அதனால நானே இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய ஆரமிச்சேன். கூடமாட இருந்தவங்க எல்லாம் ஒவ்வொருத்தரா போயி, நான் மட்டும் தனியா செய்ய ஆரமிச்சிட்டேன்.

அதுக்கப்புறம் நான் விஷேசத்துக்குப் போனாவே, “ இந்தா விசாலாட்சி வந்துட்டா… இனிமே இந்த வேலையெல்லாம் அவளே பாத்துப்பா.” என்றார்கள். எனக்கு இந்த வேலை செய்யுறது கூட கஷ்டமா தெரியல. என்னோட ரத்த உறவுக்கூட யாருமே, விசா… எதுக்கு பண்ணனும், அவ பண்ண மாட்டான்னு ஒருத்தர் கூட எனக்கு வக்காழத்து வாங்க வரல… என்று சொல்லிக்கொண்டே அழுத கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

வெள்ளையன் குடும்பம் மீது எனக்கு கோபம் வந்தது. என்கிட்ட மனசுவிட்டு சொன்னதனால கண்டிப்பா விசாலாட்சி அம்மாவுடைய மனபாரம் குறைஞ்சி இருக்கும். நேரம் ஆனதனால நானும் தூங்க வந்துட்டன். மனசு வலித்தது. கிராமங்களில் பெண்களுக்கு இதுபோன்ற வழக்கம் இருப்பதை அறிந்து நொந்து கொண்டேன். அடுத்தநாள் வெள்ளையனை வாழ்த்தி மொய் எழுதிவிட்டேன். மலை கிராமத்தில் இருந்து சைக்கிளில் விசாலாட்சி அம்மாவின் நினைவோடு பயணமானேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “எச்சில் இலை

  1. இந்தியாவில் பெண்களின் சமுதாய நிலை மாறாதவரை இந்தியா ஒருநாளும் உலக தரத்தில் முன்னேற முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *