எங்களுக்கு ஒரு துணை தேவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 5,111 
 

கொழும்பு ரோயல் கல்லூரியில் என் கணித ஆசிரியராக இருந்தவர் கணபதிப்பிள்ளை மாஸ்டர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். .நான் படித்த கொழும்பு ரோயல் கல்லூரியில் அவர் தான் கணிதம், பெளதீகம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் . அவரிடம் படித்து பொறியியலாளராக வந்தவர்களில் நானும் ஒருவன் . கணபதி மாஸ்டர் எனக்கு உறவினர் கூட. யாழ் குடாநாட்டில் பருத்தித்துறை ஊரைப் பிறப்பிடமாக கொண்டவர் . அவரின் தந்தை முத்துப்பிள்ளை, முதலியார் பரம்பரையில் வந்த படியால் சாதி சனம் பார்ப்பவர் . கணபதிப்பிள்ளை படித்தது பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் அவர் பல்கலைக்கழகத்தில் தன்னோடு படித்த கண்டியை சேர்ந்த சிங்களப பெண் மல்லிகாவை காதலித்தார். அவளை திருமணம் செய்ய சம்மதம் பெற பெற்றோர்களிடம் சென்றார் கணபதி

“ நீ யாரைக் கேட்டு கணபதி ஒரு சிங்களத்தியை காதலித்து அவளை திருமணம் செய்ய போறன் என்று வந்து எங்கள் சம்மதம் கேட்கிறாய் ?. உனக்கு நல்லாகத் தெரியும் உன் சித்தப்பா குடும்பத்தை 1956 ஆம் அண்டு இனக் கலவரத்தின் போது சிங்கள காடையர்கள் கல்ஓயாவில் கொலை செய்ததை. அதுக்கு பிறகு எங்கள் குடுமபத்துக்கு சிங்களவரை காட்டக் கூடாது என்று”

“ அப்பா அது நடந்து பல வருசமாச்சசு . அந்த காடையருக்கும் நான் திருமணம் செய்யப் போகும் மல்லிகாவுக்கும் என்ன தொடர்பு “?

“ எனக்கு காரணம் சொல்ல வருகிறியா . நீ ஒரு சிங்களத்தியை முடித்தால் என் குலப் பெருமை பாதிக்கப் படும் . உனக்காக உன் தாய் மாமன் மகள் சுகந்தி காத்துக் கொண்டு இருக்கிறாள் அது தெரியுமா உனக்கு “

“ அப்பா அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் அது தெரியுமா உங்களுக்கு.? நான் காதலித்த மல்லிகாவை கை விட என்னால் முடியாது”. இப்படி தந்தையோடு வாக்குவாதம் பட்டு பருத்தித்துறையை விட்டு சென்ற கணபதி. பின் ஊருக்கு திரும்பவில்லை. பருத்தித்துறையில் வாழப் பிடிக்காமல் கொழும்பில் மல்லிகாவோடு வாழ்ந்தவர் இருவரும் கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆசிரியர்களாக இருந்தனர் . பம்பலப்பிட்டி விசாகா வீதியில் உள்ள ஒரு இரு அறைகள் உள்ள அப்பார்ட்மெண்டில் இருவரும் குடித்தனம் நடத்தினார்கள். திருமணம் ஆகியும் அவர்களுக்குப் பிள்ளைப் பாக்கியம் கிட்டவில்லை . நான் அப்போது புல்லேர்ஸ் வீதியில் உள்ள நீர்பாசன திணைக்களத்தில் பொறியியலாளராக வேலை . பல வருடங்களுக்கு பின் ஒரு நாள் கணபதி மாஸ்டரை நான் ஒரு கடையில் தற்செயலாக சந்திக்க நேரிட்டது:

“என்ன மாஸ்டர் தனியாக ஷாப்பிங் செய்ய வந்திருக்குறீர்கள். உங்கள் மிசிஸ் மல்லிகா டீச்சர் உங்களோடு வரவில்லயா”? நான் அவரைக்கேட்டேன்

அவர் பேசவில்லை . அவர் கண்களில் இருந்து நீர் வந்ததைக் கண்டேன்

“என் மாஸ்டர் அழுகுறீர்கள்’”?

“ரவி, மல்லிகா டீச்சர் என்னை தனியாக தவிக்க விட்டு போய் ஐயிந்து வருடங்கள் ஆகிவிட்டது”

”அப்படி என்ன நடந்தது மல்லிகா டீச்சருக்கு “?

“அவவுக்கு மார்பில் புற்றுநோய் வந்து நான்கு வருஷத்துக்கு முந்தி என்னை விட்டு போயிட்டா .”:

“அட கடவுளே .உங்கள் இருவரினதும் ஒற்றுமையை பார்த்து என் மனைவி அடிக்கடி பெருமையாகப் பேசுவாள் . அவளுக்கு மல்லிகா டீச்சரைத் தெரியும் . உங்களையும் மல்லிகா டீச்சரையும் கோவிலில் என் மனைவி சந்தித்து டீச்சரோடு பேசி இருக்கிறாள் அது சரி நீங்கள் இப்ப தனியாகவா இருக்குறீர்கள் “ ?

“எங்கள் இருவரையும் எங்கள் பெற்றோர்களும் இனத்தவர்களும் ஒதுக்கி வைத்து விட்டார்கள். இனம் மாறி நாங்கள் திருமணம் செய்ததே கரணம். இப்போ சிங்களவர் தமிழர் பிரச்னை பற்றி உனக்குத் தெரியும் தானே . எனக்கு பருத்தித்துறைக்கு போய் வாழ விருப்பமில்லை. கொழும்பு வாழ்க்கை பிடித்து விட்டது எனக்கு இருவருடைய பென்சன் வருகுது. அதோடு டியூஷன் கொடுத்து பணம் வருகுது. பெண் ஒருத்தி வீட்டை தினமும் வந்து என் ஆடைகள் தோய்த்து வீட்டை ஒழுங்குசெய்து சமைத்து தந்துவிட்டு போவாள். இப்ப எனக்கு எழுபது வயதாகிறது என்னால் ஓடி ஆடி வேலை செய்வது கஷ்டம் .பிள்ளைகள் இல்லாததின் அருமை இப்ப கடைசிக் காலத்தில் தெரிகிறது. அதோடு எனக்கு பிரசர் வேறு ”

“மாஸ்டர் ஒரு நாளைக்கு என் மனைவி புனிதாவோடு உங்கள் வீட்டை போன் செய்து போட்டு வாறன் உங்கள அட்ரசை தரமுடியுமா “? : கணபதி மாஸ்டர் தனது பிஸ்னஸ் கார்டை தந்தார் . கார்டை பார்த்து விட்டு “ என்ன மாஸ்டர் உங்களிடம் கணித டியூஷனுக்கு பல பொடியன்கள் வாறாங்கள் போல இருக்கு.” நான் கேட்டேன்

“எனக்கு பொழுதுபோக வேண்டாமே . ஒரு நாளைக்கு சனி ஞாயிறு தவிர்த்து பத்து மாணவர்களுக்கு . டியூஷன் கொடுக்கிறன். அதிலை வருகிற வருமானம் என் வைத்திய செலவுக்கும ஒரு அனாதை பிள்ளைகள் மடத்துக்கும் போகுது “

“என்ன அனாதை பிள்ளைகள் மடத்துக்கு உதவுசெய்கிறீர்களா”?

“ஆமாடா ரவி எனக்கோ பிள்ளைகள் இல்லை. நானும் இப்ப ஒரு அனாதை தானே “?

நான் பதில் சொல்லவில்லை

****

கணபதிபிள்ளை மாஸ்டரை சந்தித்து சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு சனிக்கிழமை நானும் என் மனைவியும் அவருக்கு பிடித்த உணவை சமைத்துக் கொண்டு அவரின் அப்பார்ட்மெண்டுக்குப் போனோம் .

அங்கு வீட்டில் அவர் பெண் ஒருத்தியை எங்களுக்கு அறிமுகப் படுத்தினார்

“ரவி, . புனிதா, இனி நானும் இவவும் தான் ஒருவருக்கு ஒருவர் துணை. இவ்வளவு காலமும் என் வீட்டுக்கு வந்து வீட்டை ஒழுங்கு செய்து என் துணிமணிகளை சலவை செய்து . சமைத்து வைத்து விட்டு இவ போனவ. இவ பெயர் தாமரா இவவும் ஒரு விதவை. ஒரு தனியார் வைத்தியசாலையில் நேர்சாக வேலை செய்கிறா. என் காலம் சென்ற மனைவியின் ஒரே தங்கச்சி . இவவுக்கு ஒரே ஒரு மகன் அவன் பிற நாடு போய் விட்டான் இவவை கவனிப்பதில்லை “ எங்களுக்கு தமாராவை மாஸ்டர்.

அறிமுகப்படுத்தினார்

அப்பெண்ணின் சாயல் மல்லிகா டீச்சர் போலவே இருந்தது

“:உங்களுக்கு துணை என்றால் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டீர்களா மாஸ்டர் “ நான் கேட்டேன்.

“ஆமாம் நாங்கள் இருவரும் இப்போ கணவனும் மனைவியும். ஏன் இந்த வயதில்லை நாங்கள் எங்கள் தனிமையைப் போக்க திருமணம் செய்யக் கூடாதா? தாமராவுக்கு வயசு அறுபது. எனக்கு வயசு எழுபது .” என்றார் மாஸ்டர் .

“அது உங்கள் விருப்பம். இருவர் மனம் ஓன்று சேர்ந்தால் வயசு., இனம். மதம் முக்கியமில்லை. எப்போ உங்கள் திருமணம் நடந்தது மாஸ்டர் “?

“போன மாதம் பம்பலபிட்டிய கோவிலில், என் மாணவர்களின் பெற்றோரின் உதவியோடு நாநனும் தாமராவும் திருமணம் செய்து கொண்டோம்.” என்றார் மாஸ்டர் அமைதியாக .

”அது நல்ல முடிவு மாஸ்டர் ஆனால் எங்களுக்கு மனசுக்குள் ஒரு மனவருத்தம்” புனிதா சொன்னாள்.

“என்ன வருத்தம்”? தாமரா கேட்டாள்.

”எங்களையும் உங்கள் திருமணத்துக்கு அழைத்து இருக்கலாமே “என்றாள் என் மனைவி.

(யாவும் புனைவு )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *