உயிர் கவசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 8,383 
 

வேகமாக வாகனங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் சாலையில், போக்குவரத்து சமிக்கை, தனது சிகப்பு விலக்கை காட்ட, அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்க, பாதசாரிகள் நடக்க அனுமதிக்கப்பட்டவுடன், ரேகா தனது குழந்தை கிரணுடன், சாலையை கடந்தாள். வாகங்களின் சத்ததிற்கு இடையில் தனது அலுவலகத்திற்குள் நுழைந்து, தன் பணியை துவங்கினாள். ஒரு தொண்டு நிறுவனத்தில், கண் மற்றும் உடல் உறுப்பு தானத்தை பற்றி அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அவளின் வேலை. அதை திறம்பட செய்து, அலுவலகத்தில் நற்சான்றிதழ்கள் பல பெற்றவள். அன்று தன் மகன் கிரணின் பிறந்தநாள். அந்நாளிலேயே மகனின் பெயரையும், உடல் உறுப்பு தானத்தில் சேர்த்துவிட்டு, இருவரும் வீட்டிற்கு சென்றனர்.

அன்று மாலை ரேகாவின் தம்பி கவுதம், வீட்டிற்கு வந்தான். கிரணுக்கு பரிசு பொருட்களை வாங்கிக்கொண்டு, வாடிய முகமாக உள்ளே நுழைந்தான். சிறுது நேரம் கிரணை கொஞ்சி, பரிசு பொருட்களை தந்துவிட்டு, சமையலறையில் இருந்த ரேகாவிடம்,

“என்னக்கா!!! மாமா இன்னும் வரலைய?” என கேட்க,

“இல்லடா, அவர் இன்னும் வரலை. ஏன் கேட்குற?…”

சற்று தயக்கதுடன்

“அவர் நேத்திக்கு நைட், தண்ணி அடிச்சிட்டு, யாரோ ஒரு பொண்ணு மேல வண்டிய இடிச்சிட்டாராம்”.

“ஐயோ!!! உனக்கு யாரு சொன்னா?”

“நம்ம பால்காரர் பையனும், மாமாவும் ஒன்னதான் வண்டியில வந்தாங்கலாம். அந்த பையன்தான் சொன்னான்”

“அந்த பொண்ணுக்கு என்னாச்சு?”

“தெரியல. மாமா நிக்காம வந்துட்டாராம். மாமாவை குடிக்க வேண்டாம்னு சொல்லு. அப்படி குடிச்சா, வண்டி ஓட்ட வேண்டாமுன்னு சொல்லுக்கா”

“சரிடா. நான் சொல்றேன். நேத்து நீ மறந்து வச்சிட்டு போன உன் ஹெல்மட். எடுத்துட்டு போ”

“இந்த ஹெல்மெட்ட நான் போற இடத்திலெல்லாம் மறந்து வச்சுடுறேன்” என்று இரு சக்கர வாகன தலை கவசத்தை எடுத்துக்கொண்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தான் கவுதம்.

மகன் கிரணை உறங்க வைத்துவிட்டு, கணவனின் செயலை எண்ணி கவலை கொண்டாள். கணவன் ராமுவின் வரவை எதிர்ப்பார்த்து கொண்டிருந்தாள். வாகன சத்தம் கேட்டவுடன், கதவை திறந்தாள். ராமு குடிபோதையில் தனது நான்கு சக்கர வண்டியிலிருந்து தள்ளாடி இறங்கினான்.

“என்னங்க, இன்னக்கிம் தண்ணியா? உங்கள இந்த நிலைமையில், நம்ம பையன் பார்த்தா என்னாகும். அவனை வருங்காலத்துல, இது போன்ற தவறு செய்ய, நாமலே தூண்டியது போல ஆகாதா?”

“சாரி ரேகா. இனிமே நான் குடிக்க மாட்டேன். கிரண் தூங்கிட்டானா?”

“ம்… தூங்கிட்டான்”

“சாரி ம்மா… இன்னக்கி ஆபீஸ்ல ரொம்ப வேலை. அதான் கேக் கட் பண்ண நேரத்துக்கு வர முடியல.”

“குடிச்சுட்டு வர மட்டும் நேரம் இருந்ததாங்க… கிரண் எவ்ளோ நேரமா உங்களுக்காக வெயிட் பண்ணினா தெரியுமா? இப்போ தான் தூங்கினான்.”

தட்டு தடுமாறிய அவனை மெதுவாக தன் அறைக்கு அழைத்து சென்றாள். ராமு படுக்கையில் படுத்தவாறு, தூங்கிக்கொண்டிருந்த தன் மகனின் தலையை வருடி

“சாரிடா… தங்கம்…..” என்று போதையிலேயே உறங்கிவிட்டான்.

மறுநாள் காலையில் தினசரி நாளிதழை புரட்டிய போது, ஒரு பெண் வாகனம் மோதி இறந்து விட்டதாகவும், மோதிய வாகனத்தையும் ஓட்டுனரையும் அடையாளம் காண முடியவில்லை எனவும், வாகனம் நிற்காமல் சென்று விட்டது என்ற செய்தியை படித்த ரேகா, இதை தன் கணவன்தான் செய்திருப்பாரோ? என நினைத்து மனம் கலங்கினாள். இதை ராமுவிடம் கேட்டு விடவேண்டும் என ராமுவை நோக்கி விரைந்தாள்.

விடுமுறை நாள் என்பதால், காலை முதல் ராமு தனது மகன் கிரணுடன் விளையாடி கொண்டிருந்தான். பத்திரிக்கையில் படித்ததை கேட்டாள் ரேகா.

“ஏங்க… முந்தாநாள் நைட், நீங்க என்ன பண்ணினிங்க?”

“என்ன பண்ணிங்கன்னா? என்ன அர்த்தம்? கேட்க வரத தெளிவா கேளு”

கோபத்துடன் “முந்தாநாள் நீங்க தண்ணியடிச்சுட்டு, காரை வேகமா ஓட்டி, ரோட்ல வந்த ஒரு பொண்ணு மேல இடுச்சிருக்கிங்க. உண்மையா? இல்லையா?”

“ம்ம்ம்…. இருந்துருக்கலாம். அதுக்கென்ன இப்ப?”

“ஒரு உயிரோட விளையாண்டுட்டு, ரொம்ப ஈசியா இப்படி சொல்ல எப்படி மனசு வருது”

“உனக்கு என்ன அந்த பொண்ணு சொந்தமா? பந்தமா? ஏன் நீ கவலை படுற”

“ஒருத்தர் மேல இறக்கப்படுரத்துக்கு சொந்தமாவோ? பந்தமாவோ? இருக்க வேண்டிய அவசியம் இல்லங்க….”

“ஏதோ தெரியாமல் நடந்திரிச்சு”

“தெரியாம நடக்கல. நீங்க தண்ணி அடிச்சதன் விளைவு. இந்தாங்க….இந்த பேப்பர பாருங்க.. அந்த பொண்ணு இறந்துட்டலாம்..” என கூறிக்கொண்டே அழுதாள்.

நாளிதழை வாங்கி படித்த பிறகு “சரி விடு… அழாத… இதை நீயே பெருசு பண்ணி என்ன காட்டி கொடுத்துருவ போல” என கூற,

அவ்வார்த்தையை கேட்டவுடன் அவளுக்கு மேலும் கோபம் வரவே… இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அவ்வேளையில் ராமுவிற்கு கைபேசியில் அழைப்பு வர, கோபத்துடன் நண்பர்களை அழைத்து கொண்டு, மது அருந்த சென்றுவிட்டான்.

நீண்ட நேர அழுகைக்கு பிறகு, ரேகா அந்த பெண்ணின் இறப்புக்கு தன் கணவன் தான் காரணம் என்று நினைத்து மனம் நெருடி கொண்டிருக்க, கவுதம் வந்தான்

“என்ன அக்கா… கவலையா இருக்க!”

“நான் உன் மாமாட்ட அந்த ஆக்சிடென்ட் பத்தி கேட்டேன்”

”அதுக்கு மாமா என்ன சொன்னாரு?”

“என்ன சொல்லுவாறு? என்கிட்ட சண்ட போட்டாரு”

“விடுக்கா.. சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடன் பேசிக்கலாம். நீ கவலைய விடு”

“இல்ல கெளதம்.. எனக்கு அவர் தண்ணி அடிச்சது கூட பெருசா தோனல. ஆனால் அதனால் ஒரு உயிர் போயிருக்கு. அது அவருக்கு பெருசாவே இல்லைங்கற மாதிரி பேசுறார். ஒரு உயிரின் மதிப்பும், வலியும், முக்கியத்துவமும் அவருக்கு தெரியலயா? இல்ல தெரிஞ்சும் இப்படி பன்றரான்னு தான் எனக்கு கவலையா இருக்கு”

“அக்கா.. நீ இவ்வளவு யோசிக்கிற அளவுக்கு மாமா ஒன்னும் குழப்பவாதி இல்ல..நீ அவர்கிட்ட சண்டை போட்டுருப்ப… அதான் அவரு அப்படி பேசிருப்பார். இப்ப மாமா எங்க?”

“என்கிட்ட கோபித்துக்கொண்டு மறுபடியும் குடிக்க போய்ட்டார்”

“சரி.. விடுக்கா. நீ அத நினைச்சு கவலை படாத. நான் மாமாட்ட பேசிக்கிறேன். நீ கவலைய விடு. நான் இப்போ கிரணை என் ஃபிரண்டு கல்யாணத்துக்கு கூட்டிட்டு போறேன்” என அனுமதி கேட்க, அவளும் அனுப்பி வைத்தாள். அன்றும் தலை கவசத்தை மறந்துவிட்டு சென்றான் கவுதம்.

இரவு மணி ஒன்பதாகியும் கவுதமும் கிரணும் வரவில்லை. ராமுவின் வண்டி சத்தம் கேட்க, ரேகா கதவை திறந்தாள். அன்றும் ராமு குடிபோதையில் வண்டியிலிருந்து தள்ளாடி இறங்கினான். வண்டியின் முன்புறம் அடிப்பட்டு, நெளிந்திருந்தது.

“என்ன!! வண்டி அடிபட்டு இருக்கிறது. ஏதும் ஆக்சிடென்ட் ஆயிருச்சா?” என்ற ரேகாவின் கேள்விக்கு

“தெரியல… நீ வாயை திறக்காமல் சும்மாயிரு” என ராமு, போதையில் தெளிவில்லாமல் உளறினான்.

வீட்டினுள் ராமுவை படுக்க வைத்த, சில மணித்துளிகளில் ரேகாவின் கைபேசிக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்றாள்.

”ஹலோ!!!”

“மேடம் உங்க பையன் கிரணும், அவர் கூட வந்த நபரும் ஆக்சிடென்ட்ல அடிப்பட்டு, ஆஸ்பத்திரியில் வைச்சிருக்கோம். கொஞ்சம் சீக்கிரமா வரமுடியுமா?” என்பதை கேட்ட ரேகா, அழுது கொண்டே மருத்துவமனைக்கு விரைந்தாள். போதையிலிருந்த ராமுவால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.

மருத்துவமனைக்கு சென்ற ரேகாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. வரவேற்பு அறைக்கு சென்று மகனையும், கிரணையும் பற்றி வினவினாள். மகன் கிரண் இறந்துவிட்டான் எனவும், கவுதம் தலைக்கவசம் அணியாததால், அவன் தலையின் பின் பகுதியில் அடிப்பட்டு, கண் பார்வை இழந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு அவ்விடமே மயங்கி விழுந்தாள் ரேகா.

சில மாதங்களுக்கு பிறகு..

கிரணின் உடல் உறுப்புகள் வேறு சிலருக்கு பொருத்தப்பட்டு, அவன் இறந்த பின்பும், அவர்களின் மூலம் வாழ்ந்து கொண்டிருந்தான். இறந்த கிரணின் கண் கவுதமிற்கு பொருத்தப்பட்டது. கவுதமின் கண்ணில் கிரணை கண்டாள் ரேகா. குடிபோதையில் வாகனத்தை ஒட்டி, தன் மகனை கொன்றுவிட்டோமே என்ற குற்றவுணர்வில், மனநலம் பாதிக்கபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தான் ராமு.

“இப்பல்லாம் ஹெல்மெட்ட நான் மறக்கறது இல்ல” என கவுதம்.

போக்குவரத்து துறை எத்தனை சட்ட திட்டங்கள் கொண்டு வந்தாலும், வாகன ஓட்டிகளான நாம் சரியாக விதிகளை கடை பிடித்து, முறையாக வாகனத்தை ஓட்டும் வரை, இது போன்ற விபத்துக்களை தவிர்க்க இயலாது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *