இன்று அவர்கள் நாளை நாம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,580 
 

விஸ்வநாதனின் அப்பா இறந்த தகவல் கிடைத்ததும், அண்ணா நகரிலிருந்து பொடி நடையாக வில்லிவாக்கத்துக்குப் புறப்பட்டேன். ஏ.ஸி. காரில் பந்தாவாகச் சென்னையைச் சுற்றி வந்த காலமொன்று இருந்தது. பிசினஸ் மந்தமான பிறகு, இப்போதெல்லாம் பஸ் அல்லது பொடி நடைதான்!

உடம்பைப் பள்ளிக்கூடத்தில் வைத்திருந்தார்கள். விஸ்வநாதனின் தாத்தா கட்டின பள்ளிக்கூடம். வாரிசு முறைப்படி தாத்தாவுக்குப் பிறகு அப்பா, அப்பாவுக்குப் பிறகு விஸ்வநாதன்தான் இப்போது கரஸ்பாண்டன்ட்!

நான் செழிப்பாக இருந்த காலத்தில் ஏற்பட்ட நட்பு, நொடித்துப் போன பின்பும் தொடர்வது பெரிய விஷயம்.

அப்பாக்களைப் பற்றிய பேச்சு வருகிறபோது, ‘எங்கப்பா 93 நாட் அவுட்’ என்று சொல்லிச் சிரிப்பான் விஸ்வநாதன். இப்போது, 94ல் அவுட் ஆனவருடைய உடலைச் சுற்றிக் குறைந்தபட்ச சம்பிரதாய சோகம்தான் நிலவியது என்பது, துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளப்போன எனக்கு ஆறுதலாகவும் அனுகூலமாகவும் இருந்தது.

விஸ்வநாதன் என் கையைப் பற்றிக் கூடத்துக்குக் கூட்டிப் போய், அப்பாவின் கால்மாட்டில் நிறுத்தினான். குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழைக்குள் படுத்திருந்தார். உயிர் எங்கேயோ! அதை உயிர் என்று சொல்லுவதா, ஆத்மா என்று சொல்லுவதா? உயிரோ, ஆத்மாவோ… அது இந்த உடலோடு ஒன்றியிருந்தபோது இந்த மனிதரைப் பார்க்க வாய்க்கவே இல்லையே என்கிற வருத்தம், அவருக்காகப் பிரார்த்தித்தபோது உறுத்தியது.

வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் காலியாக இருந்தன. என்னை உட்காரச் சொல்லி, விஸ்வநாதனும் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான். மற்ற நண்பர்கள் யாரும் இன்னும் வந்து சேரவில்லை. கார்களில் வருகிறவர்கள் சௌகரியமாகத்தான் வருவார்கள்.

கார்கள் வருமுன் கிளம்பிவிட வேண்டும் என்று நான் யோசித்துக்கொண்டு இருந்தபோது, ”எப்படி வந்தே?” என்று அவசியம் இல்லாத கேள்வி ஒன்றை முன் வைத்து, அவசியம் இல்லாத பொய் ஒன்றை என்னிடமிருந்து வரவழைத்தான் விஸ்வநாதன்.

”ம்..? ஆட்டோ!”

முந்தைய கேள்வியே உத்தமம் என்கிற மாதிரி, அவனுடைய அடுத்த கேள்வி வந்து விழுந்தது… ”ஆட்டோவுக்கு எவ்ளோ கேட்டான்?”

அடுத்த பொய்க்கு உருவம் கொடுப்பதற்குத் தடுமாறிப் போனேன். என்னதான் சோகம் தரை தட்டிக் கிடந்தாலும்… அடேய் விஸ்வநாதா, சாவு வீட்டில் வைத்து இப்படியெல்லாமாடா கேள்வி கேட்பாய்!

”ஒங்க வாப்பா எப்படியிருக்கார்?” என்றான் அடுத்தபடியாய். இது நியாயமான கேள்விதான் என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அநியாயமாக வாப்பா பற்றிய விசனத்தை எனக்குள் உசுப்பிவிட்டுவிட்டது. வாப்பாவின் உடல் நிலை மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது என்கிற கவலையை அவனோடு பகிர்ந்துகொண்டேன்.

ரெண்டு மாசமாகப் படுத்த படுக்கையாகக் கிடக்கிற வாப்பாவுக்கு சாப்பாடு செல்லவில்லை. அவ்வப்போது நினைவு தப்பிவிடுகிறது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஐந்து வேளைத் தொழுகையைப் பிடிவாதமாகக் கடைப்பிடித்து வருகிற வாப்பா, தொழுகையை மறந்து ரெண்டு மாசமாச்சு. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மசூதிக்குப் போய் மூணு மாசமாச்சு!

இதுபோன்ற வெளிப்படையான விசனங்களன்றி, விஸ்வநாதனோடு பகிர்ந்துகொள்ள முடியாத பிரத்யேகப் பிரச்னை ஒன்றும் பாறாங்கல்லாகத் தலை மேல் இறங்கத் தருணம் பார்த்துக் கொண்டு இருந்தது.

வாப்பா சாமான்யர் அல்லர். பன்னிரண்டாயிரம் ரூபாய் பென்ஷன் வாங்குகிறவர். என்னுடைய இன்றைய தரித்திரத்தில், இந்தப் பன்னிரண்டாயிரம் பன்னிரண்டு கோடி மாதிரி!

நான் திவாலாகிப் போன இந்த ரெண்டு வருஷமாக வாப்பாவின் பென்ஷனில்தான் வண்டி ஓடுகிறது என்பது பரிதாபமான உண்மை. வாப்பாவின் உயிர் இன்னும் எத்தனை வாரம் அல்லது எத்தனை நாள் தாங்கும் என்று சொல்லவியலாத இறுக்கமான சூழ்நிலை.

வாப்பாவின் உடல்நிலையும் மனநிலையும் மோசமாகும் என்று ஊகித்து, ஆறு மாசத்துக்கு முன்பே ஒரு செக் புத்தகம் முழுக்க வாப்பாவிடம் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டேன், அதிபுத்திசாலித்தனமாக.

வாப்பா பிரக்ஞையின்றிப் படுத்துக் கிடந்தாலும், ஒவ்வொரு முதல் தேதியன்றும் பன்னிரண்டாயிரம் கைக்கு வந்துவிடும். இன்றைக்கு தேதி 26. மாசம் முடிய இன்னும் ஐந்தே நாட்கள். 31ம் தேதி வரைக்கும் வாப்பா தாக்குப்பிடித்துவிட்டாரென்றால், முதல் தேதி செக்கைப் போட்டு முழுசாகப் பன்னிரண்டாயிரத்தையும் எடுத்துவிடலாம். அதற்கு முன்னால் வாப்பாவுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அவருடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விடும். என் செயல்பாடுகளும் முடங்கிவிடும். அல்லா, என்ன கேவலமான மனப்போக்கு இது!

விஸ்வநாதனின் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மறைவாக டீ குடித்துக்கொண்டு இருந்தார்கள். உறவினர்கள் வந்து சேர ஆரம்பித்திருந்தார்கள். நண்பர்கள் யாரும் இன்னும் வரவில்லை. கார்கள் வரும் முன்பு இடத்தைக் காலி பண்ணிவிட வேண்டும் என்று நான் எழுந்திருக்க முனைந்தபோது, மீண்டும் விஸ்வநாதன் பேச்சில் பிடித்துக்கொண்டான். ”அப்பாவோட கடைசி ஆசையை நிறைவேத்தி வெச்சுட்டேம்ப்பா!” என்றான். ”தான் இறந்ததும் தன்னோட உடம்பை இந்த ஸ்கூல்ல கொண்டுவந்து வைக்கணும்னு ஆசைப்பட்டார். அதே மாதிரி கொண்டுவந்து வெச்சாச்சு. எலெக்ட்ரிக் க்ரிமேஷன் பண்ணணும்னு சொன்னார். அதுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு..!”

”ம்…”

”நீங்க முஸ்லிம்ஸ் எரிக்க மாட்டீங்க, பொதச்சிருவீங்க இல்ல?”

”ஆமா!”

இவனுக்கு ஆறுதல் சொல்லக் கடமைப்பட்ட நான், இவனுடைய நீள நீள வாக்கியங்களுக்கு ஓரெழுத்து, ஈரெழுத்தில் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிற முரண்பாடு என்னை உறுத்திக்கொண்டு இருந்தபோது, மறுபடி விஸ்வநாதனே தொடர்ந்தான்… ”காலம் எவ்ளோ வேகமா போகுது பார்த்தியா! நாம சின்னப் பசங்களா இருந்தப்ப நம்ம தாத்தா, பாட்டி போய்ச் சேந்துட்டாங்க. நாம பெரியவங்களாகிக் கல்யாணம், கொழந்தை குட்டி, குடும்பம்னு ஆனப்புறம் நம்ம அப்பாஅம்மா ஒவ்வொருத்தரா போக ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம புள்ளைங்களைப் படிக்க வெச்சுக் கல்யாணம் பண்ணிக் குடுத்து, நீயும் நானும் பேரன், பேத்திகளைப் பார்ப்போம். அதுக்கப்புறம் நமக்கும் டைம் வந்துடும். நாட்கள் விர்ர்ர்னு ஓடிடும். நாம ரெடியாயிருக்கணும். நான் ரெடி. நீ ரெடியா?”

அப்பட்டமாக ஓர் உண்மையை எடுத்துவைத்த விஸ்வநாதனின் வார்த்தைகளில் கொஞ்சம் அதிர்ந்தேன். இன்னும் சில வருஷங்களில் இதே போல ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் இந்த விஸ்வநாதன், இதே பள்ளிக்கூட அறையில் படுத்திருக்க, அவனைப் பார்க்க நான் வருவேன். அல்லது, சலனங்கள் இழந்து நான் படுத்திருக்க, என்னைப் பார்க்க விஸ்வநாதன் வருவானா!

”என்ன, சத்தத்தையே காணல? பயந்துட்டியா?” என்று தோளில் இடித்தான். ”பயந்தா முடியுமா? ரெடியாகிட வேண்டியதுதான்” என்றேன். ”அம்மாவை அனுப்பிவெச்சாச்சு. வாப்பாவையும் அனுப்பி வெச்சிட்டு, ரெடியாகிடவேண்டியதுதான்!”

வாப்பாவை அனுப்பி வைப்பது பற்றிய நினைப்பு வந்தபோது, விரைவில் நேரவிருந்த அந்த இழப்பின் பலமுனைத் தாக்குதல்கள் என்னைக் காயப்படுத்தவும், கலவரப்படுத்தவும் முனைந்தன. சரி, இதற்கு மேல் இந்த இடத்தில் அமர்ந்திருக்க இயலாது என்று நான் உணர்ந்து புறப்படத் தயாரானபோது, இரண்டு கார்களில் எங்கள் இருவரின் சிநேகிதர்களும் வந்து இறங்குவது தெரிந்தது. ”கொஞ்சம் இரு, வர்றேன்” என்று விஸ்வநாதன் எழுந்து, கார்களை நோக்கி நடந்தான்.

நானும் எழுந்துகொண்டேன். சாவு வீட்டிலிருந்து கிளம்புகிறபோது சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டுவிட வேண்டும் என்று இஸ்லாத்தில் இல்லை என்றாலும், இங்கே அதுதான் முறை என்று இந்து நண்பர்கள் சொல்லி அறிந்திருக்கிறேன். இன்றைக்கு அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான். நண்பர்களின் கண்களில் படுவதற்கு முன், விச்சுவிடம் சொல்லிக்கொள்ளாமலேயே கழன்றுகொள்ள வேண்டும்.

போகிற போக்கில், உள் அறையில் இருந்த கண்ணாடிப் பேழையில் பார்வை பதிந்தது. உள்ளே சில பெண்கள் மட்டும் தங்களுக்குள் பேசிக்கொண்டு, சடலத்தின் மேல் கவனமில்லாமல் இருந்தார்கள். இறந்தவர் முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்த்துக்கொள்வோம் என்று உள்ளே எட்டெடுத்து வைத்தபோது, இங்கே கிடத்தப்பட்டு இருக்கிற இந்த உடலுக்கும், வீட்டிலே படுத்திருக்கிற வாப்பாவுக்கும் அப்படியன்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்று புரிந்தது.

யாரும் பார்க்கவில்லையென உறுதி செய்துகொண்டு, என் சட்டைப் பையிலிருந்து பாக்கெட் டைரியையும் பேனாவையும் வெளியே எடுத்து, ஃப்ரீஸர் பாக்ஸின் மேலே எழுதியிருந்த அந்த அமரர் சேவை நிறுவனத்தின் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டு அங்கிருந்து அகன்றேன்!

– 27th பெப்ரவரி 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *