ஆகாசத்தின் உத்தரவு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 19,988 
 

சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து இருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமும் இல்லாமல் கருத்த நிறமுடைய ஓர் ஆள் கும்பிட்டுக் கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வை யைக்கூடத் துடைக்க வில்லை.

கீழே வைத்திருந்த பையில் இருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்து, தரையில் விரித்துப்போட்டான். பையில் இருந்த பொரிகடலை பொட்டலத்தை எடுத்துப் பிரித்துவைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்துவைத்து அதில் ஊதுவத்தியைச் செருகினான். குவாட்டர் பிராந்தி பாட்டில் இரண்டு, சிகரெட் டப்பி ஒன்றை எடுத்து அடுக்கினான். எலுமிச்சைப்பழம், கற்பூரம், தேங்காய், பூ, வெற்றிலைபாக்கு… என்று படையலுக்கு உரிய பொருள்களை எடுத்துவைத்தான். கற்பூரத்தை எடுத்து, சாமி குதிரையின் காலடியில் வைத்து ஏற்றினான். கற்பூர தீபத்தில் மூன்று முறை காட்டிவிட்டு தேங்காயை உடைத்தான்; ஊதுவத்தியைக் கொளுத்தினான். எலுமிச்சைப்பழத்தை எடுத்து, அருகில் இருந்த சூலத்தில் செருகி இரண்டு இரண்டாக நான்கு பழங்களைப் பிளந்தான். அதில் திருநீறு, குங்குமத்தைத் தடவிவைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டான். எழுந்து எலுமிச்சைப்பழத் துண்டுகளை எடுத்துக் கும்பிட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு நான்கு திசைகளிலும் விட்டெறிந்தான்.

Akasam

பொரிகடலையை ஒரு பிடி அள்ளி, குதிரை மீது இருந்த சாமியின் பக்கம் விசிறினான். எஞ்சியதை நான்கு திசைகளிலும் தூவினான். பிராந்தி பாட்டிலில் ஒன்றைத் திறந்து தண்ணீர் தெளிப்பது மாதிரி சாமி மேடையைச் சுற்றிவந்து தெளித்தான். குதிரையின் மீதும் கொஞ்சம் தெளித்தான். நான்கு வாழைப்பழங்களை எடுத்து தோலை உரித்துவிட்டு, மாவு பிசைவது மாதிரி பிசைந்தான். நான்கு உருண்டைகளாக்கி நான்கு திசைகளிலும் விட்டெறிந்தான். குதிரையின் காலடியில் கொட்டிக்கிடந்த திருநீறு, குங்குமத்தை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்தான்.

நான்கு திசைகளிலும் பார்த்தான். ஏழு, எட்டு வன்னிமரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டிருந்தன. ஒரு வேப்பமரம், கால் மைல், அரை மைல் தூரம் தள்ளி சவுக்குத் தோப்புகள், மக்காச்சோளக் காடுகள் இருந்தன. கோயிலைச் சுற்றி எதுவும் இல்லை. வெறும் கட்டாந்தரை, களர் நிலமாக இருந்தது. ஆடு-மாடுகள்கூடக் கண்ணில் படவில்லை. சாமியின் பக்கம் திரும்பிக் கும்பிட்டான். ரகசியம் மாதிரி முணுமுணுத்தான்.

”இன்னிக்கி மாசி மகம். தெப்பத் திருநா நடக்கிற எடத்துக்குத் தொழிலுக்குப் போவப்போறேன். அதான் ஒங்கிட்ட உத்தரவு கேக்க வந்தேன். நீ உத்தரவு குடுத்தாப் போறேன். இல்லைன்னா, திரும்பி வூட்டுக்குப் போறேன்!” என்றபடி அவன் கோயிலைச் சுற்றிலும் பார்த்தான். ஆட்கள் நடமாட்டம் இல்லை. காக்கா-குருவிகள்கூட இல்லை.

காற்றின் அசைவு மட்டும்தான் இருந்தது என்பதைக் கவனித்தவன்… சாமியிடம் ரகசியம் மாதிரி சொன்னான், ”இன்னிக்குத் தொழிலுக்குப் போகவா… வாணாமா? உத்தரவு குடு. பல்லி வந்து எனக்குச் சகுனம் சொன்னாத்தான் போவேன். அதுவும் பீச்ச கை பக்கம் தாங்கல்ல சொல்லக் கூடாது. போற காரியம் விடியாது. சோத்து கை பக்கம் ஏவல்ல சொல்லணும். அப்பத்தான் போற காரியம் ஜெயிக்கும். புரியுதா? இன்னம் செத்தயில இருட்டிப்புடும். சட்டுனு உத்தரவு குடு” என்று சொல்லிவிட்டு அந்த ஆள் தரையில் உட்கார்ந்தான்.

அவனுடைய பார்வை சிமென்ட் மேடை, குதிரை, சாமி சிலை… என்று அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தது. அதோடு தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று காதுகளைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக்கொண்டிருந்தான்.

ஐந்து, பத்து நிமிடங்கள் வரை உட்கார்ந்திருந்தான். தட்டான் பறக்கிற சத்தம்கூடக் கேட்கவில்லை. மேற்கில் பார்த்தான், சூரியன் சீக்கிரத்தில் மறைந்துவிடும் போல் இருந்தது. அவனுடைய முகம் கடுகடுவென்று மாறியது. சாமியிடம் கோபித்துக்கொண்டவன் மாதிரி சொன்னான், ”இங்கிருந்து நடந்து ரெண்டு மைலு தாண்டிப் போயித்தான் காரப் புடிக்கணும். அப்பறம் அங்க இருந்து அரை மணி நேரம். கார வுட்டு எறங்குனா தெப்பத் திருநா நடக்கிற எடத்துக்கு நடந்து போவணும். இங்கியே லேட்டாப் போனா, காரியம் ஆவுமா? கூட்டம் கலஞ்சிப்புடாதா? கூட்டம் கலஞ்சிப் புட்டா? நான் போயி அலஞ்சி, திரிஞ்சி வெறும் ஆளா திரும்பணுமா? ஏன் எதுக்கும் பதிலு சொல்லாம குந்தியிருக்க? ‘காயா… பழமா?’னு சொல்லிடு. முடியாதுனா அப்பறம் எதுக்கு ஒம் மூஞ்சியில முழிக்கப்போறன்!” – தரையில் இருந்து அந்த ஆள் எழுந்தான்.

சாமி மேடையைச் சுற்றி வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். தரை, சிமென்ட் மேடை, குதிரை, சாமி என்று எல்லா இடத்திலும் பார்த்தான். பல்லி இருக்கிற மாதிரியே தெரியவில்லை. சத்தம் வருகிறதா என்று கவனித்தான். சாமி கோயிலுக்கு வரும் வழியைப் பார்த்தான். ஆட்கள் யாரும் வரவில்லை. மேற்கில் பார்த்தான். இன்னும் சற்றைக்கெல்லாம் சூரியன் மறைந்துவிடும்போல் இருந்தது.

நேராக சாமியின் முன் வந்து கோபமாகக் கேட்டான், ”குவாட்டரு பாட்லு, சிகரெட், எலுமிச்சங்கா, பூ, பழம்னு ஒனக்கு வேண்டிய எல்லாத்தையும் கொண்டாந்து படையல் போட்டுட்டேன். எல்லா கருமாதியும் செஞ்சப் பின்னாலயும் எனக்கு ஏன் உத்தரவு குடுக்க மாட்டேங்கிற? கை நெறயப் பொருளு கெடைக்கணும்; கெடைக்கிறதுலதான் பாதியக் கொண்டாந்து ஒனக்கு சூலம், மணி, அங்கவஸ்திரம், கோழி காவு, குவாட்டரு பாட்லுனு கல்லு கருமாந்தரம் எடுக்கிறனே அப்பறம் என்ன? எனக்கு ஏன் உத்தரவு குடுக்காம லேட்டாக்கிற?

போன வெள்ளிக்கிழமை வேப்பூர் சந்தைக்குப் போனேன். பாவப்பட்ட சனியந்தான் மாட்டுச்சி. பாவப்பட்டதுனு நெனச்சா, நான் எப்புடிச் சோறு திங்கிறது? என் வவுறு மண்ணையாத் திங்கும்? மறுநாளு ஒனக்குப் படையல் போட்டனா… இல்லியா? நேரமாவறது ஒனக்குத் தெரியலியா?” என்று கேட்ட அந்த ஆள், பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று கவனமாகக் கேட்டான்.

சலிப்பு மேலிட, ”சகுனத் தடங்கலோட போவக் கூடாதுனு ஒனக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.

வேப்பமரத்துக்குப் போனான். சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தான். சகுனம் கிடைக்கவில்லை. வேப்பமரத்துக்கு வடக்கில் இருந்த வன்னிமரத்துக்குக் கீழே போய் நின்றுகொண்டிருந்தான். நேரம் போனது. ஆனால், அவன் நினைத்த காரியம் நடக்கவில்லை. வெறுப்போடு திரும்பி வந்து சாமிக்கு நேரெதிராக நின்றுகொண்டு கோபத்தோடு கேட்டான்.

”உத்தரவு குடுக்காட்டி போ. போனவாட்டிக்கும் மொதவாட்டி என்னா செஞ்ச? ஒரே ஒரு செயினுதான் அம்புட்டுச்சி. வெரலு மொத்தத்துல இருக்கேனு பார்த்தா, கடைசியில அது கவரிங். அதுக்குத்தான் அம்மாம் அடி… ஒதை. மயிரான்… நீயா அம்மாம் அடியும் ஒதையும் வாங்குன? கவரிங் நகைக்குத்தான் பெரிய கூட்டமாக் கூடி அடிச்சானுவ. நகைக்காரி வந்து ‘கவரிங்’னு சொன்னதாலதான் உசுரோட உட்டானுவ. இல்லைன்னா போலீஸ், கோர்ட்டுனு ஒரு மாசம் ஜெயிலுக்குப் போயிருக்கணும்.

Akasam2

பெரிய கோயிலுக்கு உள்ளாரப் போவயிலதான் குண்டா இருக்கா, கிழவியா இருக்கானுதான் செயினை அறுத்தேன். அறியாப்புள்ளைவுளவிட அந்தக் கிழட்டு முண்டதான் அதிகமாச் சத்தம் போட்டா. ‘செயினை அறுத்திட்டான். புடி… புடி’னு அவ போட்ட சத்தத்துலதான் வழியில இருந்த தேங்காக் கடைக்காரன் வளைச்சிப் புடிச்சிட்டான். ‘ஓடியாங்க… ஓடியாங்க’னு கிழவி போட்ட சத்தத்துல கூட்டம் கூடிப்போச்சி. கதறக் கதற அடிச்சானுவ. பாவ-புண்ணியம் பார்க்கலை. சாமி கும்புட வந்த மொத்தக் கூட்டமும் கூடிப்போச்சி. ஆம்பள, பொம்பள எல்லாருந்தான் அடிச்சாங்க. காறி எம் மூஞ்சியிலயே துப்புனாங்க. தரும ஞாயம் பார்க்கலை!” – அந்த ஆளுடைய கண்களில் இருந்து நீர் வழிந்தது.

கண்ணீரை, புறங்கையால் துடைத்துவிட்டு உள்ளடங்கின குரலில் சொன்னான், ”அன்னிக்கி வாங்கின அடியை நெனச்சா, இப்பியும் வலிக்குது. கூட்டத்தில் இருந்து என்னைக் காப்பாத்திவுட ஒன்னால முடியல. எங் காலுக்கு ஓடுறதுக்குத் தெம்பக் குடுக்க ஒன்னால முடியல. ஒண்ணும் செய்யாததுக்கு நீ எதுக்கு ‘குலசாமி’னு இருக்கே? ‘ஆகாச வீரன்’னு ஒனக்கு எந்த மயிராண்டி பேரு வெச்சான்? என்னைவிட ஓக்கியன் ஒலகத்துல யாருங்கிறமாரிதான் எல்லாரும் அடிச்சாங்க.

ஒலகத்துல எவன் ஓக்கியம்? ‘பொய் சொன்னது இல்லை; பித்தலாட்டம் செஞ்சது இல்லை; அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டது இல்லை; தொட்டதும் இல்லை’னு சொல்ற ஓக்கியன் எவனும் இன்னும் பூமியில பொறக்கலை. நேரம் சரியில்லை. ஒன்னோட துணை எனக்கு இல்லை; ஒன்னோட அருளு இல்லை. அதான் அன்னிக்கி மாட்டிக்கிட்டேன்.

20 வயசுல காத்து மாரி ஓடுனேன். அப்ப முயலுகூட எங்கூடப் போட்டிபோட முடியாது. இப்ப ஓட முடியலை. வயசாயிடிச்சு. எங் காலுக்கு மின்னலா ஓடி மறையுற தெம்ப நீ குடுத்திருந்தா, நான் எதுக்கு மாட்டிக்கப்போறேன்? அம்மாம் அடியையும் ஒதையையும் வாங்கிக்கிட்டு ஒங்கிட்டத்தான் வந்து நிக்கிறேன். நீ உத்தரவு குடுக்க மாட்டேங்கிற. படையல வாங்கித் தின்னுப்புட்டு, எத்தனை தடவை என்னை அலையவெச்சி வெறுங்கையோட அனுப்பியிருக்க? அப்பல்லாம் ஒன்னையைத் திட்டுனனா? அன்னிக்கி பெரிய கோயில்ல நீதான் என்னை மாட்டிவுட்டுட்ட, மின்ன மாரி ஊராங்க அடியை என்னால தாங்க முடியுதா? நீ என்ன எனக்குப் பிறத்தியாளா… அந்நியமா? நீ எனக்குக் குலசாமி.

என்னை ஒனக்கே நல்லாத் தெரியும். திருநாவுக்குத் திருநா வந்து படையல் போடுற ஆளில்லை நானு. என்னோட மூணு புள்ளைங்களுக்கும் ஒன்னோட சந்நதியிலதான், மொட்டை போட்டேன்; காது குத்துனேன்; பேரும் வெச்சேன். எல்லாத்துக்கும் மேல எங்கம்மா ஒன்னோட பேரைத்தான எனக்கு ‘ஆகாசம்’னு வெச்சா. பேரைச் சொன்னா ஊருல மட்டும் இல்லை, போலீஸ் ஸ்டேசன்ல, கோர்ட்டுல எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, ஒன்னைப் பத்தி நான் எல்லார்கிட்டயும் பெருமையாத்தான் சொல்றேன். குத்தம் சொன்னனா? அதுக்கும் மேல எம் பெரிய மவனுக்கு ஒம் பேரைத்தான் ‘ஆகாஷ்’னு வெச்சிருக்கேன். ‘பிரமாதமான பேரு’னு சொல்றாங்க. அதுக்காச்சும் உத்தரவு குடுடா திருட்டுப்பயலே” என்று சொன்ன அந்த ஆள், மடியில் இருந்த ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் குடித்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். சகுனம் கிடைக்கிறதா என்று கூர்மையாகக் கவனித்தான். அவன் கேட்டது கிடைக்காததால் வெறுப்புற்று எஞ்சியிருந்த ஒரு பாட்டில் பிராந்தியைத் திறந்து கையில் ஊற்றி குதிரையின் மீதும், சாமியின் மீதும் சுள்ளென்று தெளித்தான்.

கோபம் மேலிட, ”இப்பயாச்சும் ஒன் ஆக்ரோசம் அடங்கி உத்தரவக் குடுடா” என்று கேட்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். பல்லி, கண்ணில் படவில்லை. வெறுப்படைந்துபோய் சொன்னான், ”இப்பத்தான் எல்லாம் பயலுவலும் ஒரம், பூச்சிமருந்துனு தெளிச்சி காட்டுல இருக்கிற பூச்சி, பொடுவ எல்லாத்தையும் கொன்னுப்புட்டானுவ. அப்பறம் எங்க இருந்து வரும் பல்லி?”

மேற்கில் பார்த்தான். சூரியன் மறைந்துவிட்டிருந்தது. லேசாக இருள் படர ஆரம்பித்திருந்தது தெரிந்தது. எப்போதையும்விட இப்போது அவனுக்குக் கோபம் கூடுதலாக வந்தது. வேகமாகக் கேட்டான், ”நேரமாவுறது ஒனக்குத் தெரியலியாடா?” – கோபத்தில் மேடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வெறுத்துப்போய் தரையில் உட்கார்ந்தான்.

சிறிது நேரம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவனுக்கு என்ன தோன்றியதோ வெடுக்கென்று தலையைத் தூக்கி ‘நீயெல்லாம் சாமியா?’ என்பது மாதிரி பார்த்தான். பிறகு, சண்டைக்காரனிடம் கேட்பது மாதிரி சாமியிடம் கேட்டான், ”எனக்குச் சோதனை வெக்கிறியா? இத்தினி வருசமா இல்லாம இன்னிக்கி ஏன் எனக்கு உத்தரவு குடுக்க மாட்டேங்கிற? ஒன்னோட உத்தரவு இல்லாம என்னிக்காச்சும் திருடப் போயிருக்கனா? நீ திருட்டுக்குப் பேர்போன சாமிதானே? திடுதிப்புனு நீ திருந்திப்புட்டா, நான் என்னா செய்யுறது? கருமாதி… எனக்கு வேற தொழிலும் தெரியாதே. ஒங்கிட்ட நான் என்னா கேக்கிறேன்? என்னை எம்.எல்.ஏ. ஆக்கு, எம்.பி. ஆக்கு, மந்திரியாக்கு, பணக்காரனாக்குன்னா கேட்கிறேன்? திருடப்போற எடத்துல மாட்டக் கூடாதுனுதானே கேட்கிறேன். அது பெரிய குத்தமா?

நான் திருடப்போறது மாடி வூடு கட்டவா? காரு, பங்களா வாங்கவா? நெலம் நீச்சு வாங்கவா? எம் பொண்டாட்டிக்கி வைரத்துல ஒட்டியாணம் செஞ்சி போடவா? கருமாதி… சோத்துக்குத்தானே செயினை அறுக்கப்போறேன். ஒரு நாளு போனா, ஒரு மாசம், ரெண்டு மாசம் பொழப்பு ஓடிப்புடும். கையில காசு இருக்கிறப்ப நான் திருடப் போறனா? எங்கப்பா, எங்கம்மா சம்பாரிச்சி வெச்சிருந்தா, நான் எதுக்கு சாமி சாட்சியா கட்டுன தாலியை அறுக்கப்போறேன்? பால் குடிக்கிற புள்ள இடுப்புல கெடக்கிற கொடிய அறுக்கப்போறேன்?”.

அப்போது, பல்லி கத்தியது மாதிரி அவனுக்குத் தோன்றியது. பேச்சை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரே நேரத்தில் பல்லி சகுனம் சொன்ன மாதிரியும் இருந்தது. சொல்லாத மாதிரியும் இருந்தது. சந்தேகத்தில் அசைவின்றி உட்கார்ந்திருந்து சத்தம் கேட்கிறதா என்று கவனித்தான். காற்றின் அசைவுகூட இல்லை. அவன் கடுப்பாகிவிட்டான். சாமியிடம் முறைப்பது மாதிரி சொன்னான், ”உத்தரவைக் குடு. முடியாதுனா வுடு. இங்க நிக்கிற சூலத்தை எல்லாம் புடுங்கிக்கிட்டுப் போயி பழைய இரும்புக் கடையில போட்டுட்டு அரிசி, பருப்பு வாங்கிப்புடுவேன். குலசாமியுமாச்சி… மசுருமாச்சினு போற ஆளு நானு… தெரியுமில்ல!” என்று சொன்னவனின் குரலின் வேகம் குறைந்தது.

தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னான், ”இதென்ன பழைய காலமா? சோளக் கதிரை அறுக்கிறது, நெல்லு கதிரை அறுக்கிறது, பூசணிக்காய், பரங்கிக்காய் அறுக்கிறதுன்னு அறுத்தாந்து சோறு திங்கிறதுக்கு. இப்பத்தான் எல்லாப் பயளுவுலும் பருத்திய ஊணுறான். சவுக்க நட்டுப்புடுறான். மிஞ்சினா கருப்பங்கயி. அதுவும் இல்லன்னா பிளாட்டா போட்டுடுறான். அப்பறம் எங்கேயிருந்து கதிரை அறுத்தாந்து சோறு திங்கறது? கோழி திருடுறது, ஆடு-மாடு திருடுறது, மோட்டார் கொட்டாயில் கரண்டு கம்பியைத் திருடுறதுனு எல்லாம் செஞ்சி பாத்தாச்சு. அதெல்லாம் ஒரு வார சோத்துக்குக்கூடத் தேற மாட்டேங்கிது. அதோடவும் உள்ளூர் பயலுவோ அடையாளம் கண்டுபுடிச்சி வந்துடுறானுவ. திருடன்கிற பேரோட உள்ளூர்ல குடும்பம் நடத்த முடியுமா?

இப்பல்லாம் எவன் ஆடு-மாடு வளக்குறான்? திருடறதுக்கு. ஊர்நாட்டுல கோழிகூட இல்லை. ஊருக்கு ஊரு பிராய்லர் கோழிக் கடையைப் போட்டுட்டானுவோ. காலம் மாறி, ஊரு நாடெல்லாம் மாறிப்போச்சுன்னு ஒனக்குத் தெரிய மாட்டேங்குது. அதனாலதான் ஒண்ணுத்துக்கும் ஒதவாத களர் நெலத்துல ஒன்னைக் கொண்டாந்து குடிவெச்சியிருக்கானுவ. ஒனக்கு ஒரு கூரைகூட போடல தெரியுமில்ல.

இப்பல்லாம் மோட்டார் வண்டி, காரு எடுத்துக்கிட்டுப் போயி திருடுறாங்க. ஊர் ஊராப் போயி ரூம் போட்டுத் தங்கித் திருடுறாங்க. சொல்லப்போனா கோயில்லயே திருடுறாங்க. உண்டியலை ஒடைக்கிறாங்க. கொஞ்சம் துணிஞ்சவங்க, சாமி சிலையவே திருடி விக்கிறாங்க. நான் அந்த மாரியா செய்யுறேன்? விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பெண்ணாடம், உளுந்தூர்பேட்டைனு சுத்திச் சுத்தி வரேன். பட்டப்பாட்டுல பாதிக்குப் பாதி வீணாப்போவுது. பாதிக்குப் பாதி கவரிங்கா இருக்கு. ஒனக்கு படையல் போடுற செலவு தண்ட கருமாதியாப் போவுது.

தங்கம், வைரம்னு போட்டுக்கிட்டு இருக்கிற நாயிவோ எல்லாம் எந்த எடத்துக்கு வந்தாலும் காருலியே வருதுவோ, எந்த எடத்துக்குப் போனாலும் காருலியே போவுதுவோ. கவரிங் மாட்டியிருக்கிற நாயிவோதான், சந்தைக்குச் சந்தை மஞ்சப்பையத் தூக்கிக்கிட்டு நடக்குதுவோ. காயி வாங்க வர்ற கிராக்கிவோ கவரிங்கத்தான் மாட்டியிருக்கும். பகலா இருந்தா, பார்த்து அறுக்கலாம். இருட்டுல எப்புடிப் பார்த்து அறுக்கிறது? முட்டுச்சந்துல, இருட்டுல வரும்போதுதானே செயினைப் புடிச்சி இழுக்க முடியும்? கவரிங் அம்புட்டுதுனு ஒனக்குப் படையல் போடாம இருந்திருக்கிறேனா? எப்ப கொற வெச்சேன்?”

சத்தம் கேட்டது மாதிரி இருக்கவே திரும்பிப் பார்த்தான் அந்த ஆள். ஆட்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. ஆடு, மாடு எதுவும் இல்லை. காக்கை, குருவி, பருந்து எதுவும் பறக்கவில்லை. மரங்கள்கூட அசையவில்லை. பிறகு எப்படி ஆள் வருவது மாதிரி சத்தம் கேட்டது? மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டதும் மீண்டும் சாமியிடம் சொன்னான், ”நெய்வேலியில் கைநெறயா பொருளு அம்புட்டப்ப ஒனக்கு ஒரு சூலம் வாங்கியாந்து நட்டுவெச்சேன். ஒரு கல்யாண ஊட்டுல செயின் அடிச்சப்ப, அதே விருத்தாசலம் ரெட்டைத் தெருவுல இருக்கிற கொசவன்கிட்ட சொல்லி ஒனக்கு வேட்டைக்கிப் போறதுக்கு ஒரு மங்குதிர வாங்கியாந்து வெச்சேன். ரெண்டு, மூணு முறை அங்கவஸ்திரம் வாங்கியாந்து போட்டேன்.

ஒருமுறை வெங்கல மணி வாங்கியாந்து கட்டினேன். வருசா வருசம் கோழி காவு கொடுத்து முப்பூசை போட்டிருக்கேன். எல்லாத்தையும் வாங்கித் தின்னுப்புட்டு இப்ப உத்தரவு குடுக்க மாட்டேங்கிற. குடுக்காட்டிப் போ. எம் மசுருக்கென்ன, நீதான் பட்டினி கெடப்ப!”

அந்த ஆள், பீடி ஒன்றைப் பற்றவைத்தான். புகையை ஊதிக்கொண்டே பல்லியைத் தேடினான். அது கண்ணில் படும் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாயில் இருந்து பீடியை எடுத்து தரையில் தேய்த்து அணைத்துவிட்டு சலிப்புடன் சொன்னான், ”என்னிக்கும் இல்லாம இன்னிக்கென்ன எங்கிட்ட ஒனக்கு வெளயாட்டு? எதுக்காக சகுனத்தைக் குடுக்காம சோதனை வெக்கிற? இப்பல்லாம் நான் செல்போனு எடுக்கிறதையும் உட்டுட்டேன். இப்ப அதுக்கு கிராக்கி இல்லை. ஆயிரத்துக்கே போனு வந்துடுச்சி. கஷ்டப்பட்டு அடி, மிதிபட்டு திருடிக்கிட்டுப் போயி கொடுத்தா 100, 50-தான் தரேன்ங்கிறானுவோ” – லேசாகச் சிரித்தான்.

பிறகு, ”திருட்டுப் பொருளுக்கு அதுக்கு மேல எவன் தருவான்? திருட்டுப் பொருளுனாலே அடிமாட்டு விலைதானே! அதனால இப்ப நான் செல்போன தொடுறதில்லைனு ஒனக்குத்தான் தெரியுமே!” – சட்டென்று வேகம் வந்துவிட்ட மாதிரி அடுத்து ஒரு பீடியைப் பற்றவைத்தான்.

மேற்கில் பார்த்தான். மறுநொடியே அவனுடைய முகம் கருத்துவிட்டது. வார்த்தைகளும் தடித்துவிட்டன. ”ஒன்னைச் சொல்லிக் குத்தமில்லடா. என்னைப் பெத்தவளைச் சொல்லணும். எல்லா கருமாதியும் அவதான் கத்துக்கொடுத்தா. இருட்டுனதும் பக்கத்து ஊட்டுல நின்ன முருங்கை மரத்துல இருந்து யாருக்கும் தெரியாம முருங்கக் கீரயை அவதான் ஒடிச்சியாரச் சொன்னா. நடைபாதையில நின்னுக்கிட்டு வயக்காட்டுல போயி புளிச்சக் கீரையைப் புடுங்கியாரச் சொன்னா. கம்பு கதிரை ஒடிச்சியாரச் சொன்னா. பரங்கிக்காயை, பூசணிக்காயை அறுத்துத் தூக்கியாரச் சொன்னா. எவன் ஊட்டு காட்டுலியோ கல்லச்செடியைப் புடுங்கியா. கத்திரிக்காயை, வெண்டக்காயைப் பறிச்சிக்கிட்டு வா. ஊரான் ஊட்டு புளியமரத்துல புளியாம்பழம் பறிச்சி வானு அவதான் சொன்னா. பஸ்ஸுல போவயில வயசைக் கொறச்சிச் சொல்லுனு சொல்லி, டிக்கெட் வாங்காம சண்டை போட்டா. கூலி வேலைக்குப் போனா வயசைக் கூட்டிச் சொல்லி சம்பளம் கேட்டு சண்டை போட்டா. தட்டு மாத்திப் பேச அவதான் கத்துக்குடுத்தா. எல்லா கருமாதியும் அந்தச் சண்டாளிதான் கத்துக்கொடுத்தா.

காலுல போட்டுக்கிட்டுப் போனா செருப்போட வாரு அறுந்துபோவும்னு நாளெல்லாம் கையிலயே செருப்பைத் தூக்கிக்கிட்டுப் போன உண்ணாமலை பெத்த புள்ளதான நானு? எல்லாத்துக்கும் அவ ஒங்கிட்டதான் வந்தா. நானும் ஒன்னத்தான் சுத்திச் சுத்தி வரேன். மத்தவங்கள மாரி மாசத்துக்கு ஒரு சாமிக்கிட்டியா போறேன்? மாசத்துக்கு ஒரு கோயிலுன்னா போறேன்? ஒரே சாமி நீதான்னு ஒங்கிட்டியே வரேன். நீ என்னடான்னா, சகுனம் சொல்ல மாட்டேங்கிற; உத்தரவு குடுக்க மாட்டேங்கிற!” என்று சொல்லிவிட்டு, வேகம் வந்தவன் மாதிரி தரையில் விழுந்து கும்பிட்டபடியே கிடந்தான்.

முனகுவது மாதிரி சொன்னான், ”என்னமோ ஒலக அதிசயமா நான் மட்டுந்தான் அடுத்தவனைக் கெடுக்கிறதுக்கு வேண்டுறேன்னு நெனக்காத. எவன் வந்து எனக்கு அடுத்தவனைக் கெடுக்காத மனசைக் குடு, அடுத்தவன் பொருளு மேல ஆசப்படாத மனசைக் குடு, அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப்படாத, அடுத்தவன் பொண்டாட்டியைப் பார்த்து ஆசைப்படாத மனசைக் குடு. என்னிக்கும் என்னை ஏழையாவே, பிச்சைக்காரனாவே வெச்சிருனு வேண்டுறவன் யாரு? கூரை வூட்டுலியே என்ன வெச்சிருனு சொல்றவன் யாரு?” என்று கேட்டபோது, பல்லி கத்தியது மாதிரியும், அதுவும் வலது கை பக்கம் கத்துவது மாதிரியும் இருந்தது. வெடுக்கென்று தலையைத் தூக்கி வலது கை பக்கம் பார்த்தான். பல்லி சகுனம் சொல்லிவிட்டதாகவே நம்பி உற்சாகத்தோடு எழுந்தான். சாமி கும்பிட்டான். சிரித்துக்கொண்டே, ”போதும்டா!” என்று சொன்னான்.

”இரு ‘பூவா, தலையா?’னு ஒரு தடவை பார்க்கிறேன். ‘காயா… பழமா?’னு தெரிஞ்சிட்டா துணிஞ்சி போயிடுவேன்” என்று சொல்லிக்கொண்டே பாக்கு தடிமனில் சிறு சிறு கற்களாக ஒரு பிடி பொறுக்கி எடுத்தான். இரண்டு கைகளுக்கு உள்ளும் கற்களை வைத்துக்கொண்டே சாமி கும்பிட்டான். மூன்று, நான்கு முறை குலுக்கிவிட்டு தரையில் போட்டான். உட்கார்ந்துகொண்டு பதற்றம் கூடக் கூட இரண்டு இரண்டு கற்களாக ஜோடி சேர்த்து பக்கத்தில் வைத்தான். கற்கள் குறைய குறைய அவனுடைய பதற்றம் கூடிக்கொண்டே இருந்தது. விரல்கள் நடுங்கின. லேசாக வியர்த்தது. கடைசி ஜோடி கற்களை எடுத்த பிறகு ஒரே ஒரு கல் மட்டும் எஞ்சிக்கிடப்பதைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்ந்தது; சிரித்தான். தங்கம் மாதிரி அந்தச் சிறு கல்லை எடுத்து மடியில் பத்திரப்படுத்தினான். ”ஒனக்கு அப்பப்ப கிறுக்குப் புடிச்சிப்போவும். என்னை வீணா அலையவுடுவ; காத்திருக்க வைப்ப. சில நேரம் புடிச்சிக் குடுத்திடுவ. ஆனா, இந்த முறை சகுனம் சொல்லிடிச்சு. இப்ப கல்லுலயும் பூ குடுத்திட்ட. ஒன்னோட தொண இல்லாம, ஒம் பேச்சைக் கேக்காம ஒரு எடத்துக்கும் அடி எடுத்துவைக்க மாட்டேன் தெரியுமில்ல!” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.

”நீ சக்தி உள்ள தெய்வம்டா. காரணம் இல்லாமியா ஒன்ன நான் கும்புடுவன்?” என்று கேட்டான். கும்பிட்டுக்கொண்டே சிமென்ட் மேடையை மூன்று சுற்றுச் சுற்றி வந்தான். குதிரையின் காலடியில் கிடந்த திருநீற்றை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு, ‘போற காரியம் நல்லபடியா முடிஞ்சதும் நாளக் காலையில வரேன்” – சொல்லிவிட்டு, நடைபாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இருட்டாக இருந்தாலும் அவனுடைய கால்களுக்குப் பாதை தெளிவாகத் தெரிந்தது!

– மே 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *