கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 18,390 
 

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சேகரிடம், ‘எங்க ஸ்கூல்ல நேத்து ஒரு சின்னப் பிரச்னை…’ எனச் சொல்லிக்கொண்டே வந்து தரையில் உட்கார்ந்தாள் கோமதி.

‘ஹெச்.எம்-க்கும் உனக்குமா?’

‘சீச்சீ… அந்த ஆளு ஒரு மண்ணாந்த. ஸ்கூல்ல என்ன நடக்குதுன்னே அவருக்குத் தெரியாது. வருவார்; தூங்குவார்; சாயங்காலம் வீட்டுக்குப் போய்டுவார். அதுக்குத்தான் அறுபதாயிரம் சம்பளம்.’

‘பசங்க யாரையாவது அடிச்சுட்டியா, ரத்தக்காயம் எதுவும் ஆகிருச்சா?’

‘என்னைப் பேசவிடுங்க. இல்லாட்டி டி.வி-யைப் பாருங்க. குறுக்கக் குறுக்கப் பேசிக்கிட்டு…’ – கோமதி முறைத்தாள்.

ஆஃபர்அப்போதும் தொலைக்காட்சியில் இருந்து பார்வையைத் திருப்பாமலேயே, ‘நீ எப்பவும் ஊர் உலகம் எல்லாம் சுத்திவந்துதானே கதை சொல்வ. ஒருநாளும் விஷயத்துக்கு நேரா வர மாட்ட…’ எனச் சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தான் சேகர். அப்போதும் அவனுடைய மனமும் கண்களும் தொலைக்காட்சியில்தான் இருந்தன.

‘உங்க அளவுக்கு ஒண்ணும் நான் புத்திசாலி இல்ல…’ எனக் கிண்டலாகச் சொல்லி சலித்துக்கொண்டே விஷயத்துக்கு வந்தாள் கோமதி.

‘நேத்து பன்னிரண்டு மணிக்கு,

அஞ்சாங் க்ளாஸ் பையன் ஒருத்தன் வந்தான். கூடவே அவன் அம்மாவும் வந்தாங்க. ‘ஏன்டா இவ்வளவு லேட்டு?’னு கேட்டேன். ‘காலையில எங்க ஊட்டுல சோறு ஆக்கல. அதான் லேட்டு’னு சொன்னதும், நான் அந்தப் பொம்பளகிட்ட ‘என்னம்மா ஆச்சு?’னு கேட்டேன்.

‘கொஞ்சம் உடம்பு சரியில்லீங்க’னு சொன்னாங்க.

உடனே அந்தப் பையன், ‘பொய் டீச்சர்… எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை. அதான் சோறு ஆக்கல’னு சொன்னான். நான் அந்தப் பொம்பள முகத்தைப் பார்த்தேன். வீங்கிப்போய் இருந்துச்சு. ஆளைப் பார்க்கவே முடியல. ‘என்னம்மா ஆச்சு?’னு கேட்டதுமே அந்தப் பொம்பள கண்ணுல தண்ணி வந்துருச்சு. அழுதுக்கிட்டே, ‘காலையிலயே தண்ணியைப் போட்டு வந்துருச்சு. ‘எதுக்கு காலைலயே தண்ணியைப் போட்ட?’னு கேட்டதுதான். சண்டயாகிருச்சு’னு சொல்லிட்டு அழுதுட்டாங்க. மனசுக்குக் கஷ்டமாப்போச்சு.’

ஆச்சர்யப்பட்ட மாதிரி சேகர் கேட்டான், ‘உனக்கா?’

‘சும்மா இருங்க. சின்ன வயசுலேயே புள்ளைங்க எவ்வளவு கருத்தா இருக்கு பாருங்க?’ எனச் சொன்ன கோமதி, குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்த படுக்கை அறையைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு சேகர் பக்கம் திரும்பி, ”’காலையிலேயே எப்படி பிராந்தி கெடச்சுது?’னு கேட்டதுக்கு, ‘ஊருக்கு ஊரு குடிக்கிற தண்ணி கிணறு இருக்கோ… இல்லியோ பிராந்திக் கடை மட்டும் இல்லாம இருக்காது’னு அந்தப் பொம்பள சொன்னதும், எனக்கு ஆச்சர்யமாப்போச்சு. காலையிலயேவா குடிப்பாங்க?’ என ஆச்சர்யமாகக் கேட்டாள் கோமதி. சேகர் பதில் எதுவும் சொல்லவில்லை. தொலைக்காட்சி பார்த்தவாறே இருந்தான்.

‘அந்த ஊர்ல யாரோ செத்துட்டாங்களாம். அதனாலதான் அந்தப் பையனோட அப்பன் குடிச்சிருக்கான். இழவு விழுந்த வீட்டுல எப்படித்தான் குடிக்கிறாங்களோ?!’ என அங்கலாய்ப்பாகச் சொன்னாள் கோமதி.

சிரித்துக்கொண்டே சேகர் சொன்னான்… ‘இது எல்லா ஊர்லயும் நடக்கிறதுதான். எங்க ஊர்ல யாரு செத்தாலும் முதல்ல இழவு சொல்ல ஆளு விட மாட்டாங்க. பிராந்திக் கடைக்குத்தான் ஆள் விடுவாங்க. சாவுச் செய்தி தெரிஞ்சதும் ஊரு ஆளுங்க எல்லாம் ஒண்ணா வந்து நின்னுக்கிட்டு, ‘முதல்ல சரக்குக்கு ஆளு விடு. அப்புறம்தான் மத்தது எல்லாம்’னு சொல்வாங்க. சரக்கு வந்தாதான் மத்த வேலைகள் நடக்கும்; பிணமும் சுடுகாட்டுக்குப் போவும்’ – சேகர் சந்தோஷமாகச் சிரித்தான்.

‘செத்த வீட்டுல எப்படித்தான் குடிக்கிறாங் களோ’ – கோமதி சலித்துக்கொண்டாள்.

‘அதெல்லாம் உனக்குப் புரியாது. அது ஒரு ஜாலி. ஆனா, இப்படி எல்லா சாதியிலயும் நடக்காது’ எனச் சொல்லிவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்த சேகர், திடீரென நினைவுக்கு வந்த மாதிரி, ‘அப்புறம் அந்தப் பொம்பள என்ன சொன்னா?’ எனக் கேட்டான்.

‘அந்தப் பையன்கிட்ட ‘உங்க அப்பா- அம்மாவுக்குத்தானே சண்டை… உனக்கு என்ன, நீ ஸ்கூலுக்கு வரவேண்டியதுதானே?’னு கேட்டதுக்கு, ‘எங்க அப்பா, அம்மாவை அடிக்கிறப்ப நான் மறிச்சா விட்டுருவாரு டீச்சர். அப்புறம் எங்க அம்மா சண்டயில சுருக்கு மாட்டி செத்துரக் கூடாதுன்னு இன்னமுட்டும் வீட்டுல காவல் இருந்தேன் டீச்சர்’னு அவன் சொன்னதும் எனக்குப் பாவமாப்போச்சு. அந்தப் பொம்பள, தன் பையனைக் கட்டிப்பிடிச்சு க்ளாஸ் ரூம்னுகூடப் பார்க்காம ‘என் சாமிடா நீ’னு சொல்லி அழுதது. மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு’ – கோமதியின் குரலில் அவ்வளவு இரக்கம்.

‘இதுவாவது பரவாயில்ல… போன வாரம் எங்க ஸ்கூல்ல எட்டாவது படிக்கிற பையன் ஒருத்தன் மொட்டை போட்டு வந்தான். ‘என்னடா மொட்டை… திருப்பதிக்குப் போனியா?’னு கேட்டேன், ‘எங்க அம்மா மருந்தைக் குடிச்சிட்டுச் செத்துப்போயிருச்சு சார்’னு சொன்னான். கேட்டதும் எனக்குச் சங்கடமாப்போச்சு. அந்தப் பையனைப் பார்க்கிறப்ப எல்லாம் கஷ்டமா இருக்கும்’ எனச் சொன்னபோது, காலிங் பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டது.

‘இந்த நேரத்துல யாரா இருக்கும்?’ – கோமதி கேட்டாள்.

‘தெரியல’ எனச் சொல்லிவிட்டு, சேகர் தொலைக்காட்சியைப் பார்த்தான்.

‘அந்த விளம்பரம், இந்த விளம்பரம்னு நோட்டீஸைக் கொடுக்கிறதுக்கு எந்தச் சனியனாவது பெல் அடிக்கும். போய்ப் பாருங்க. நான் பசங்களுக்குப் பருப்பு நெய் சாதம் ரெடி பண்றேன். அப்புறமா எழுப்பி ஊட்டிவிடலாம்’ எனச் சொல்லிவிட்டு, கோமதி எழுந்து சமையல் அறை பக்கம் போனாள்.

சேகர் எழுந்து வந்து வாசல் கதவைத் திறந்தான். ஓர் இளம்பெண் நின்றிருந்தாள். ஆளைப் பார்த்ததுமே சேகருக்கு என்ன கேட்பது எனத் தெரியவில்லை.

‘திருப்பதிக்கு, மேல்மருவத்தூருக்கு, பழநிக்குப் போறேன். காணிக்கை கொடுங்க…’ எனக் கேட்க வந்த பெண் மாதிரி இல்லை. ‘கல்யாணம் நடக்கல, மாங்கல்யப் பிச்சை போடுங்க’ எனக் கேட்டுக்கொண்டு ஓர் இளம்பெண்ணும், ஒரு கிழவியும் வருவார்கள். அந்த மாதிரியும் இல்லை. ‘வாய் ஊமை, காது செவிடு… உதவி செய்யுங்கள்’ என ஓர் அட்டையில் அச்சடித்துக்கொண்டு, உதவி கேட்டு வரும் பெண் மாதிரியும் தெரியவில்லை. ‘பைபிள் க்ளாஸ் எடுக்கிறோம். உங்களுக்காக ஜெபிக்கிறோம்’ எனச் சொல்லிக்கொண்டு வரும் பெண்கள் மாதிரியும் தெரியவில்லை.

ஆஃபர்2கையில் பைபிள் இல்லை; பெரிய ஃபைல் இருந்தது. ‘முகவரி கேட்பாளோ?’ என்ற சந்தேகத்தில் ‘என்ன வேணும்?’ எனக் கேட்டான் சேகர்.

‘உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சார்.’

‘என்கிட்டயா… என்ன விஷயம்?’

‘ஒரு நிமிஷம் உட்கார்ந்து பேசலாமா சார்?’

‘பைபிள் க்ளாஸா?’

‘இல்ல சார்.’

‘பின்ன?’ எனக் கேட்ட சேகர், உள்ளே திரும்பிப் பார்த்து ”கோமதி…” எனக் கூப்பிட்டான். இவன் பெண்களை சாதாரணமாகப் பார்த்தாலே, கோமதி ஆயிரம் கேள்விகள் கேட்பாள். பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால்… ரணகளம்தான். ”கோமதி…” என மீண்டும் கூப்பிட்டான்.

‘யாரா இருந்தாலும் ஒண்ணும் வேண்டாம்னு சொல்லி அனுப்பிடுங்க…’ – உள்ளே இருந்தே கோமதி கத்தினாள்.

‘ஒரு நிமிஷம் சார்’ – அந்தப் பெண் கையில் வைத்திருந்த ஃபைலைத் திறக்கப்போனாள்.

‘வேலை இருக்கு. விஷயத்தைச் சொல்லுங்க.’

‘ஒரு நிமிஷம் சார்… ப்ளீஸ்!’

சேகருக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அதனால் ”கோமதி…” என மீண்டும் கூப்பிட்டான். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்தான். முகத்தில் இருந்து வழிந்த வியர்வை, கழுத்தில் இறங்கிக்கொண்டிருந்தது. வெயிலில் களைத்துப்போய் இருந்தாள். பார்ப்பதற்கு அழகாக, இளமையாக இருந்தாள். அதனாலேயே அவளிடம் பேசுவதற்கு அவனுக்குத் தயக்கம். முனகுவது மாதிரி, ‘நிழல்ல வந்து நில்லுங்க’ எனச் சொன்னான். தான் சொன்னது கோமதிக்குத் தெரிந்துவிடப்போகிறது என்ற கவலையில் மீண்டும் ”கோமதி…” எனக் கூப்பிட்டான். அப்போது கேட்டைத் தாண்டி வந்து நின்றாள் அந்தப் பெண்.

‘எதுவா இருந்தாலும் முடியாதுனு சொல்ல வேண்டியதுதானே? என்னை எதுக்குக் கூப்புடுறீங்க?’ எனக் கேட்டுக்கொண்டே, வாசலுக்கு வந்தாள் கோமதி. வந்த வேகத்திலேயே, ‘துணிக் கடை விளம்பரமா?’ எனக் கேட்டாள் அதிகாரமாக; அலட்சியமாக.

‘இல்ல மேடம்’ – அந்தப் பெண் பணிவாகச் சொன்னாள்.

‘நகைக் கடை?’

‘இல்ல.’

‘மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷினா… எக்ஸ்சேஞ்ச் ஆஃபரா?’

‘இல்ல.’

‘டிக்ஷனரி, புக்ஸ்… விக்கிறீங்களா?’

‘அதெல்லாம் இல்ல மேடம்.’

‘வாஷிங் பவுடர், சோப்பா?’

அந்தப் பெண் பேசாமல் இருந்தாள். கோமதி, கேள்விகளை நிறுத்தவில்லை.

‘பழைய புடவை வாங்கிறவங்களா?’

‘இல்ல மேடம்.’

‘பைபிள் க்ளாஸ் எடுக்கிறவங்களா?’

‘கொஞ்சம் பேசாம இரு. முதல்ல விஷயத்தைக் கேளு’ என சேகர் சொன்னதும், கோமதிக்குக் கோபம் வந்துவிட்டது.

‘ ‘மூலம், பௌத்திரம், அற்புத சுகம் அளிக்கும் கூட்ட அழைப்பு’னு தினம் தினம் வந்து உசுர எடுக்கிறாங்க. அது உங்களுக்குத் தெரியுமா?’ – கோமதியின் குரலில் வேகம் கூடிவிட்டது.

‘நான் ஞானாலயா மெட்ரிக் ஸ்கூல்ல இருந்து வர்றேன் மேடம். உங்க பிள்ளைங்களை எங்க ஸ்கூல்ல சேக்கிறதைப் பத்தி கொஞ்சம் பேசணும்.’

‘அப்படியா… ஆச்சர்யமா இருக்கே, என்ன விஷயம்?’ – கோமதியின் குரலில் குழைவு ஏற்பட்டிருந்தது.

‘உங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்குல்ல மேடம்… ட்வின்ஸ். அவங்களை ஸ்கூல்ல சேர்த்துட்டீங்களா?’

‘இல்ல.’

‘எங்க ஸ்கூல்ல சேர்க்கிறீங்களா?’

‘ரெண்டரை வயசுதானே ஆகுது. அதுக்குள்ள எப்படிச் சேக்க முடியும்? சரி… எங்க குழந்தைங்க ட்வின்ஸ்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’

‘விசாரிச்சோம்… யார் யார் வீட்டுல குழந்தைங்க இருக்குனு நகராட்சியில லிஸ்ட் வாங்கிட்டோம். ரெண்டரை வயசா இருந்தாலும் ப்ரி-கே.ஜி-யில அட்மிஷன் போடலாம் மேடம்.’

‘அதுக்கே இன்னும் மூணு மாசம் இருக்கே!’

‘சரஸ்வதி பூஜை அன்னைக்கு அட்மிஷன் போட்டுரலாம். அப்ப பிரச்னை வராது. ரெண்டு பிள்ளைங்களுக்கு அட்மிஷன் போட்டா, ஒரு பிள்ளைக்கு ஃபீஸ் கன்செஷன் உண்டு.’

‘அப்படியா!’ – கோமதி சிரித்தாள்.

‘விருத்தாச்சலத்தில் எங்க ஸ்கூல்தான் மேடம் டாப்.’

‘தெரியும்… அட்மிஷனுக்காக வீடு தேடி வந்ததுதான் ஆச்சர்யம்.’

‘டென்த், ப்ளஸ் டூ – ரெண்டுலயும் எங்க ஸ்கூல்தான் மாவட்டத்திலேயே ஃபர்ஸ்ட் ரேங்க்’ – அந்தப் பெண் உற்சாகமாகச் சொன்னாள்.

‘பேப்பர்ல பார்த்தேன். லோக்கல் டி.வி விளம்பரத்துல பார்த்தேன். நியூஸ் பேப்பர்ல வெச்சிருந்த நோட்டீஸ்லயும், அப்புறம் தெருவுக்குத் தெரு வெச்சிருந்த டிஜிட்டல் பேனர்லயும் பார்த்தேன். உங்க ஸ்கூலைப் பார்த்தா, ஐ.டி கம்பெனி மாதிரி இருக்கும்’ எனச் சொன்ன சேகர், அந்தப் பெண்ணைக் கவனமாகப் பார்த்தான். மறுநொடியே கோமதியை அவசரமாகப் பார்த்தான்.

‘சினிமாவுக்கு விளம்பரம் செய்யுற மாதிரிதான் இப்ப ஸ்கூல் விளம்பரமும் இருக்கு’ – அவன் சொன்னதை, கோமதிகூட காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

‘எல்லா க்ளாஸ் ரூமும் ஏ.சி சார்’ – அந்தப் பெண் சிரித்தாள். அவளுடைய சிரிப்பு அழகாக இருந்த மாதிரி சேகருக்குத் தோன்றியது.

‘ப்ளஸ் ஒண்ணுல ஒரு அட்மிஷன் போட்டா, ப்ரி-கே.ஜி ஸீட் ஒண்ணு ஃப்ரீ சார்.’

‘ஆச்சர்யமா இருக்கே. ஃபீஸே கிடையாதா?’ – கோமதி வியப்புடன் கேட்டாள்.

‘இல்ல மேடம். அதே மாதிரி ஞானாலயா ரியல் எஸ்டேட்ல ஒரு ப்ளாட் வாங்கினாலும் ஒரு ப்ரி-கே.ஜி ஸீட் ஃப்ரீ.’

‘ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்கிற மாதிரியா?’ எனக் கேட்டு சேகர் சிரித்தான்.

அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், தான் சொல்ல நினைத்ததை வரிசையாக, அந்தப் பெண் சொல்ல ஆரம்பித்தாள்.

‘ஸ்கூல்ல சேர்த்துட்டு, ஃபீஸ் கட்ட பணம் இல்லைன்னா கவலைப்படவேண்டியது இல்ல சார். ஞானாலயா ஃபைனான்ஸ்ல லோன் வாங்கிக்கலாம். அதோடு ஞானாலயா சிட் ஃபண்ட்ஸ்ல சீட்டும் சேர்ந்துக்கலாம். ஞானாலயா ஜவுளிக் கடைக்குப் போய், ஸ்டூடன்ட் ஐ.டி கார்டு காட்டினா, 10 பெர்சென்ட் டிஸ்கவுன்ட் தருவாங்க. அதே மாதிரி ஞானாலயா நகைக் கடைக்குப் போனா, ஒரு பெர்சென்ட் லெஸ் பண்ணுவாங்க சார்.’

‘ஆச்சர்யமா இருக்கே! ஞானாலயா ஸ்கூல்லயா இந்த மாதிரி எல்லாம் செய்றாங்க?’ – கோமதியின் குரலில் அவ்வளவு வியப்பு.

‘ஏப்ரல், மே மாசம் அட்மிஷன் போடுறவங்களுக்கு ஒரு குலுக்கல் ரசீது தருவோம். கார், பைக், வாஷிங் மெஷின், கோல்டு காயின்னு பல பரிசுகள் உண்டு மேடம்.’

‘நல்ல ஆஃபர்’ என சேகர் சொன்னான்.

அந்தப் பெண் பேசவில்லை. கர்ச்சீஃப்பால் வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.

‘குலுக்கல்ல பரிசு விழுமா?’ – ஆர்வமாகக் கேட்டாள் கோமதி.

‘கட்டாயம் விழும் மேடம்’ – அவளுடைய குரலில் அவ்வளவு உறுதி இருந்தது. இதுதான் சந்தர்ப்பம் என்பது மாதிரி, அந்தப் பெண் ஃபைலில் வைத்திருந்த ஒரு விளம்பர நோட்டீஸை எடுத்துக் கொடுத்தாள்.

அதை வாங்கிப் பார்த்த கோமதி, ‘இவ்வளவு பரிசா?!’ என ஆச்சர்யமாகக் கேட்டாள்; லேசாகச் சிரித்தாள்.

‘ஆமா’ என்பது மாதிரி அந்தப் பெண் தலையாட்டினாள்.

‘ஒரு ப்ளாட் வாங்கினா ஒரு ப்ரி-கே.ஜி ஸீட் ஃப்ரீனு சொன்னீங்களே, ப்ளாட் எங்க இருக்கு?’

‘ஸ்கூலுக்குப் பின்னாலயே ஞானாலயா நகர்னு போட்டிருக்காங்க மேடம்.’

‘நல்ல இடமாச்சே. விலை என்ன இருக்கும்?’ – ஆர்வமாகக் கேட்டாள் கோமதி.

‘தெரியல மேடம். நம்பர் இருக்கு. கான்டாக்ட் பண்ணிப்பாருங்க’ எனச் சொன்னதோடு, ஃபைலில் இருந்து ஞானாலயா ரியல் எஸ்டேட் விளம்பர நோட்டீஸ் ஒன்றையும் எடுத்துக் கொடுத்தாள்.

நோட்டீஸை வாங்கிப் பார்த்த கோமதி, ‘அங்க இடம் வாங்கி வீடு கட்டினா, பசங்களை ஈஸியா ஸ்கூலுக்கு அனுப்பிடலாம். டென்ஷன் இருக்காது. ப்ளஸ் டூ வரைக்கும் ஒரே ஸ்கூல்ல படிச்சுருங்க…’ என சேகரிடம் சொன்னாள்.

அவள் சொன்னதைச் சரியாகக் காதில் வாங்காமல், அவன் அந்தப் பெண்ணைப் பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்தான்.

‘இந்த வருஷத்தில் இருந்து ஸ்கூல்லயே ஸ்நாக்ஸ், வெஜ் சூப், ஃபுரூட் ஜூஸ், வாட்டர், லஞ்ச் எல்லாம் கொடுக்கிறோம். தமிழ்நாட்லயே எங்க ஸ்கூல்லதான் இந்த சிஸ்டத்தை ஃபர்ஸ்ட் ஆரம்பிச்சிருக்கோம். இதுக்கு பேரன்ட்ஸ் கிட்டயும் பப்ளிக்லயும் நல்ல ரெஸ்பான்ஸ். அதனாலயே அட்மிஷன்ஸ் கூடியிருக்கு’ எனச் சொல்லிவிட்டு, ஃபைலில் இருந்து ஓர் அட்டையை எடுத்துக் கொடுத்தாள். அதில் பள்ளியில் 11 மணிக்கு என்னென்ன ஸ்நாக்ஸ் வழங்கப்படுகின்றன, சூப், ஜூஸ், மதியம் என்னென்ன லஞ்ச் வழங்கப்படுகின்றன, மாலையில் என்னென்ன ஸ்நாக்ஸ் வழங்கப்படுகின்றன… என்ற பட்டியல் இருந்தது. பல சூப்கள், ஜூஸ்களின் பெயர்களும், ஸ்நாக்ஸ்களின் பெயர்களும் புதிதாக இருந்தன. அந்த அட்டை, ஸ்டார் ஹோட்டலில் வைக்கப்படும் மெனு லிஸ்ட் மாதிரி இருந்தது; உயர்ந்த தரத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது. சூப், ஜூஸ், ஸ்நாக்ஸ் மதிய உணவுப் பட்டியலைப் படித்துவிட்டு சேகரும் கோமதியும் அசந்துவிட்டனர். அதை நம்புவதற்கு அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால், ஞானாலயா என்ற பள்ளியின் பெயர் அவர்களை நம்பவைத்தது.

‘நல்ல விஷயமாவும் இருக்கு, புது விஷயமாவும் இருக்கு. இந்த மாதிரி ஒவ்வொரு ஸ்கூல்லயும் செஞ்சிட்டா, பேரன்ட்ஸுக்குப் பாதி வேலை குறைஞ்சிரும்; டென்ஷனும் போயிரும்” – கோமதி மகிழ்ச்சி பொங்கச் சிரித்தாள். சேகரும் சிரித்தான்.

‘பேரன்ட்ஸுக்கு எதுக்கு வீண் சிரமம்னு நாங்களே எல்லாத்தையும் பார்த்துக்கிறோம். இந்த விஷயம் நல்லா ரீச் ஆகிருக்கு மேடம்’ – அந்தப் பெண் சிரித்தாள்.

‘குழந்தையை மட்டும் நாங்க பெத்துக்கிட்டா போதும். பணத்தை மட்டும் நாங்க கட்டினா போதும். மத்ததை எல்லாம் நீங்களே பார்த்துக்குவீங்க…’ – சேகர் சிரித்தான். அந்தப் பெண் சிரிக்கவில்லை; தலை கவிழ்ந்துகொண்டாள்.

‘சும்மா இருங்க. எந்த நேரத்துல என்ன பேசுறதுன்னு இல்லாம. அதிர்ஷ்டம் தானா வந்திருக்குன்னு தெரியாம… நீங்க போய் ஞானாலயாவுல ஸீட் வாங்கிருவீங்களா? அவனவன் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரிகிட்ட போயி நிக்கிறான். அதுக்கே ஸீட் கிடைக்க மாட்டேங்குது’ – சேகரைத் திட்டுவது மாதிரி கோமதி சொன்னாள்.

‘ஃபீஸ் எவ்வளவு?’ என சேகர் கேட்டான். அதற்காகவே காத்திருந்த மாதிரி அந்தப் பெண், ஃபைலில் இருந்து இன்னும் ஓர் அட்டையை எடுத்துக் கொடுத்தாள். மளிகைக் கடை பட்டியல் மாதிரி இருந்தது. உடை, நோட் புக்ஸ், அட்மிஷன் ஃபீஸ், வேன் ஃபீஸ்… என ஒரு பக்கம் முழுவதும் அச்சிடப்பட்டு இருந்தது. பட்டியலைப் படித்த சேகர் ஆச்சர்யத்துடன், ”ப்ரி-கே.ஜி ஃபீஸ் ஒரு லட்சமா?!’ எனக் கேட்டான்.

‘ஆமாம்’ என்பது மாதிரி அந்தப் பெண் தலையை மட்டும் ஆட்டினாள்.

‘ப்ரி-கே.ஜி., எல்.கே.ஜி குழந்தைகளுக்கு எதுக்கு யோகா, ஸ்மார்ட் க்ளாஸ், நீச்சல், கராத்தே, கம்ப்யூட்டர் பயிற்சி எல்லாம்… எல்லாத்துக்கும் ஃபீஸ் போட்டிருக்கு?’

‘இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு இதெல்லாம் மஸ்ட் சார். இன்டர்நேஷனல் லெவலுக்கு கோச்சிங் இருக்கும்.’

‘ப்ரி-கே.ஜி., எல்.கே.ஜி குழந்தைகளுக்கு சரியா நடக்கவே முடியாது. அதுங்களுக்கு கராத்தே, நீச்சல், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் க்ளாஸ், யோகா… இதெல்லாம் ஆச்சர்யமா இருக்கு. டூர் ஃபீஸ்னு வேற போட்டிருக்கு?’ – சேகரின் குரலில் கடுமை ஏறியிருந்தது.

‘டூர் உண்டு சார்… கம்ப்பல்ஸரி.’

கோமதிக்குக் கோபம் வந்துவிட்டது.

‘சும்மா இருங்க. ஞானாலயா ஸ்கூல்ல அட்மிஷன் கிடைக்கிறதே பெருசு. நிறைய ஆஃபர் வேற தந்திருக்காங்க. ஸ்கூல் கேம்பஸ்ல தமிழ்ல பேசுனா ஃபைன் போட்டுருவாங்க தெரியுமா?’ என மகிழ்ச்சியான குரலில் சொன்னாள்.

‘எதுக்கு ஆஃபர் தர்றதுனு ஒரு கணக்கு வேண்டாமா? ஃபீஸ் ரொம்ப அதிகமா இருக்கு’ – சேகர் சொன்னதை, கோமதி காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

கோமதியின் பேச்சு அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது மாதிரி இருந்தது.

‘நிறைய எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ் எல்லாம் இருக்கு மேடம். இதைப் பாருங்க…’ எனச் சொல்லிவிட்டு ஃபைலில் இருந்து மேலும் ஒரு நோட்டீஸை எடுத்துக் கொடுத்தாள். அது நகைக் கடை, துணிக் கடை விளம்பரம் செய்ய பல நிறங்களில் அச்சடித்த காகிதம் மாதிரி இருந்தது.

‘டான்ஸ் உண்டு, மியூசிக் உண்டு, கல்ச்சுரல் புரோகிராம் உண்டு, லிட்ரரி புரோகிராம்ஸ் உண்டு. அப்புறம் ஒவ்வோர் ஆண்டு விழாவுக்கும் சினிமா ஸ்டார்ஸ் வருவாங்க. விழா கிராண்டா நடக்கும்!” – அந்தப் பெண் சிரித்தாள்.

‘தெரியும்… போன வருஷம் ஸ்ரீயா வந்தாங்க. நாங்க வந்து பார்த்தோமே!’ – கோமதி சிரித்தாள்.

‘ஆர்.டி.ஓ சாரோட பசங்க, டி.எஸ்.பி பசங்க, டி.யூ.ஓ பசங்க எல்லாம் எங்க ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. கடலூர், பாண்டியில எங்க ஸ்கூலுக்கு பிராஞ்ச் இருக்கு மேடம்.’

‘ஊர்லயே உங்க ஸ்கூல்தான் பெருசு. ஊர்ல இருக்கிற உயர் அதிகாரிங்களோட பசங்க எல்லாரும் உங்க ஸ்கூல்லதான் படிக்கிறாங்க’ – சேகர் சொன்னான்.

‘மெடிக்கல் கட் ஆஃப், இன்ஜினீயரிங் கட் ஆஃப்-ல எங்க ஸ்கூல் பசங்கதான் அதிகம் வாங்கியிருக்காங்க. ஒவ்வொரு வருஷமும் மாவட்டத்துலயே அதிக ரேங்க் வாங்கிற ஸ்கூல். டென்த்லயும் ப்ளஸ் டூ-லயும் ஆல் பாஸ் மட்டும் இல்லை, எல்லாருமே எபவ் நைன்டி த்ரீ பெர்சென்ட்டுக்கு மேலதான் மேடம்’ – பெருமையாகச் சொன்னாள் அந்தப் பெண்.

‘தெரியும். டாப் ரேங்க் ஸ்கூல்தான். உங்க ஸ்கூல்ல அட்மிஷனுக்காக மந்திரி சிபாரிசு வரை போவாங்க. இந்த வருஷம் என்ன நீங்களே வந்திருக்கீங்க? ஆஃபர் வேற தர்றீங்க. அதிசயமா இருக்கே. புள்ள பிடிக்க வர்ற ஆளு மாதிரி வந்திருக்கீங்களே!” – சிரித்துக்கொண்டே சேகர் கேட்டான். அந்தப் பெண் முகம் மாறிவிட்டது.

‘இந்த வருஷம் புதுசா மூணு சி.பி.எஸ்.இ ஸ்கூல் நம்ப ஊருக்கு வந்துருச்சு. எல்லா பேரன்ட்ஸும் இப்ப சி.பி.எஸ்.இ-தான் விரும்புறாங்க. புதுசா வந்திருக்கிற ஸ்கூல்ல முதல்முறையா புதுப்புது ஆஃபர் தர்றாங்க, வீடு வீடா போயி அட்மிஷன் போடுறாங்க. அதனால எங்க ஸ்கூல் அட்மிஷன் பாதிச்சுரும்னு நினைக்கிறோம். எத்தனை ஸ்கூல் வந்தாலும், எங்க ஸ்கூல் ஸ்டாண்டர்டு வராது. அதோடு டார்கெட் ரீச் பண்ணுங்கனு எங்க கரஸ் சொல்லிட்டார்!” – நிதானமாகச் சொன்னாள் அந்தப் பெண்.

‘டார்கெட்டா?’ – ஆச்சர்யத்துடன் கேட்டான் சேகர்.

‘ஆமாம் சார். ப்ரி-கே.ஜி-யில் இருந்து ப்ளஸ்டூ வரை எல்லா க்ளாஸ்லயும் ஐந்நூறு பசங்க இருக்கணும். முன்னால எங்ககிட்ட மெட்ரிக் மட்டும்தான் இருந்தது. இந்த வருஷம் சி.பி.எஸ்.இ-யும் ஆரம்பிச்சிருக்கோம். அதனாலதான் ஸ்பாட் அட்மிஷன்!” சந்தோஷமாகச் சொன்னாள் அந்தப் பெண்.

‘எங்க பசங்களை சி.பி.எஸ்.இ-யிலதான் சேர்ப்போம். அதுதான் நல்லது’ – பெருமையாகச் சொன்னாள் கோமதி.

‘அட்மிஷன் போட்டுறலாமா மேடம்?’ – உற்சாகமாகக் கேட்டாள் அந்தப் பெண்.

‘இங்கேயேவா?’

‘ஆமாம் மேடம்.’

‘ஃபீஸ் எங்கே கட்டுறது?’

‘எங்கிட்டயும் கட்டலாம்… ஸ்கூல்ல வந்தும் கட்டலாம். இப்ப எங்கிட்ட கட்டினா அட்வான்ஸ் குலுக்கல் ரசீது, ஜவுளிக் கடை, நகைக் கடை, ப்ளாட் கூப்பன் எல்லாத்தையும் இங்கேயே கொடுத்துருவேன். நீங்க வீணா அலையவேண்டியது இல்லை. என்னைக்கு ஸ்கூலுக்கு வரணும்கிறதை நாங்க போன், இ-மெயில், எஸ்.எம்.எஸ்-ல சொல்லிருவோம். வேன் வீட்டுக்கு வந்துரும். எல்லா ரூட்லயும் எங்க ஸ்கூல் வேன் 40 கி.மீ தூரம் வரை போகுது. நீங்க பிள்ளைங்களை அனுப்பினா மட்டும் போதும்’ – மனப்பாடம் செய்து வைத்திருந்ததை ஒப்பிப்பது மாதிரி, அந்தப் பெண் சொன்னாள். அவளுடைய முகத்தில் வியர்வை அடங்கி, மலர்ச்சி கூடியிருந்தது.

‘மூணு மாசம் குறையுதே. வயசு பிரச்னை வராதா?’ – குழப்பமாகக் கேட்டாள் கோமதி.

‘அதெல்லாம் வராது மேடம். சரஸ்வதி பூஜை அன்னைக்கு அட்மிஷன் போட்டதா கணக்குல காட்டிருவோம்.’

‘இப்ப எவ்வளவு பணம் கட்டணும்?’

‘இருக்கிறதைக் கட்டலாம். மீதியை ஆபீஸ்ல கட்டலாம்’ – அந்தப் பெண் சிரித்தாள்.

‘அவசரப்படாதே…’ என சேகர் சொன்னான்.

‘சும்மா இருங்க… வீட்டுலயே வேலை முடியுது.’

‘நீங்க ஸ்கூல்ல என்னவா இருக்கீங்க?’ என சேகர் கேட்டதுமே கழுத்தில் மாட்டியிருந்த அடையாள அட்டையைக் காட்டி ”டீச்சர்” எனச் சொன்னாள்.

‘பேர்?’

‘புஷ்பா.’

‘சம்பளம்?’

‘ஆறாயிரம் சார்…’

‘சோப்பு விளம்பரம் மாதிரி இப்ப டீச்சர்ஸ் ஸ்கூல் விளம்பரம் செய்றாங்க’ – சேகர் சிரித்தான்.

‘உள்ளே வாங்க’ என கோமதி சொன்னாள்.

‘எதுக்கு அவசரப்படுற?” என சேகர் சொன்னதை, காதில் வாங்கும் மனநிலையில் கோமதி இல்லை. ஒரே வார்த்தையாக சொன்னாள்… ‘ஞானாலயா ஸ்கூல் பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. பிள்ளைங்க ஞானாலயாவுல படிக்கிறதே பெருமை தெரியுமா?’

தெருவில் போன இரண்டு பெண்கள் புஷ்பாவைப் பார்த்துவிட்டு ‘என்னாச்சு இன்னும் முடியலையா?’ எனக் கேட்டுக்கொண்டே வந்தார்கள். அவர்கள் புஷ்பா அணிந்திருந்த உடை போலவே அணிந்திருந்தார்கள்.

லேசாகச் சிரித்துக்கொண்டே, ‘இவங்க… மஜிதா பர்வீன், லதா. என்கூட வேலை செய்றாங்க. அடுத்த தெருவுல ஒரு குழந்தை இருந்தது. அதை அட்மிஷன் கேட்கிறதுக்குப் போனாங்க’ எனச் சொன்னாள்.

‘போட்டாச்சா?’ எனச் சந்தேகத்துடன் கோமதி, பர்வீனிடம் கேட்டாள்.

‘போட்டாச்சு ஃபுல் பேமென்ட்டும் கட்டிட்டாங்க’ – மஜிதா பர்வீன் சிரித்தாள்.

‘உள்ளே வாங்க. ஏப்ரல் மாச வெயில் கொல்லுது’ என கோமதி சொன்னாள்.

‘அவசரப் படாத. நல்ல நேரமா… இல்லையானு பார்க்க வேண்டாமா?’ எனக் கேட்டான் சேகர். பிறகு, மஜிதா பர்வீனைப் பார்த்தான்.

‘அடுத்த தெருவுல ஒரு பிள்ளை இருக்காம். பார்த்துட்டு வர்றேன்” எனச் சொல்லிவிட்டு லதா நடக்க ஆரம்பித்தாள்.

‘சரி’ என்பதுபோல் புஷ்பாவும் மஜிதா பர்வீனும் தலையாட்டினார்கள்.

‘ஒரு லட்சம் கட்ட முடியுமா?’ என சேகர் கேட்டதற்கு, அலட்சியமாக கோமதி சொன்னாள்… ‘நம்ப ரெண்டு பேருக்கும் மாசத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல சம்பளம் வருதுல்ல. அப்புறம் என்ன? இவ்வளவு சம்பளம் வாங்கிக்கிட்டு சின்ன ஸ்கூல்ல பசங்களைச் சேர்த்தா, மத்த டீச்சர்ஸ் நம்பளை மட்டமா நினைக்க மாட்டாங்களா?’

சேகர் பேசாமல் தெருவைப் பார்த்தான்.

‘டென்த் படிக்கிறப்பவும் ப்ளஸ் டூ படிக்கிறப்பவும், டீச்சர்ஸ் மூணு மாசம் லீவ் போட்டுட்டுப் போய் ராசிபுரம், நாமக்கல்ல வீடு எடுத்துத் தங்கி, பசங்களைப் படிக்க வைக் கிறாங்க. அந்த மாதிரி உங்களால செய்ய முடியுமா? சட்டம்தான் பேச முடியும்’ எனச் சொல்லி முறைத்தாள் கோமதி.

‘சரி… உன் இஷ்டம். நல்ல நேரம் பாரு.’

‘நாமதான் கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சோம். நம்ப பிள்ளைங்களாவது நல்ல ஸ்கூல்ல படிக்கட்டுமே!’

‘சரி.’

‘காலண்டரைப் பார்க்கிறேன்’ எனச் சொல்லிவிட்டு, கோமதி வீட்டுக்குள் போனாள்; ஃபைலில் இருந்த சேர்க்கை விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு புஷ்பா வீட்டுக்குள் போனாள்; அவளோடு மஜிதா பர்வீனும் போனாள்; கடைசியாக சேகரும் போனான்… சேர்க்கை விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடுவதற்காக!

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *