அவளுக்கென்று காத்திருக்கும் குடும்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 8,043 
 

டாக்டர் ரேவதி! யெஸ், என்று நிமிர்ந்தவளிடம். எதிரில் நின்ற இருவரில் ஒருவர் கார்டு ஒன்றை நீட்டி பத்திரிக்கையில் இருந்து வர்றோம், இன்னக்கு ஒன்பது மணிக்கு எங்களுக்கு இணடர்வியூ கொடுக்கறீங்கன்னு சொல்லியிருக்கிறீங்க, யெஸ்,யெஸ்,உட்காருங்க இப்பவே ஆரம்பிச்சுக்கலாமா? ஒரு ஐஞ்சு நிமிசம் உங்களை போட்டோ எடுத்துக்கறோம், என்று பல்வேறு கோணங்களில் படம் எடுத்துக்கொண்டனர்.பின் எதிரில் உட்கார்ந்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

கேள்விகள் முடிந்த பின் மேடம், இப்ப உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க எதற்கு என்று ரேவதி புருவத்தை உயர்த்த உங்களைப்பற்றி நாங்கள் அறிமுகப்படுத்த தேவைப்படும், சாரி, நீங்கள் டாக்டர் ரேவதி, ஸ்டான்லி மருத்துவக்-கல்லூரியில் படித்தவர், தற்பொழுது அரசு மருத்துமனையில் டாக்டராக உள்ளார், இது போதுமே, ப்ளீஸ், அவளின் வார்த்தைக்கு, ஓ.கே, ரொம்ப நனறி மேடம், மீண்டும் சந்திப்போம் விடைபெற்றுக்கொண்டனர். ஆயாசமாக சோபாவில் சாய்ந்தாள் ரேவதி !.

கோயம்புத்தூரில் இன்று ரேவதி புகழ் பெற்ற பொது மருத்துவர், அரசாங்க மருத்துவ மனையில் பணிபுரிந்து கொண்டு இந்த அளவுக்கு பேரும் புகழும் பெறுவதற்கு காரணம் அவள் நோயாளிகளிடம் காட்டும் அக்கறைதான்.அவள் தனிக்கட்டை, தன் பங்களாவிலிருந்து அங்கு தங்கி வேலை பார்க்கும் ஒரு வேலைக்காரப்பெண்ணிடம் சொல்லிவிட்டு காலை எட்டு மணிக்கு கிளம்பினால் என்றால், இரவு எட்டு மணிக்கே வீட்டுக்கு வருவாள், அதனால் அங்கிருக்கும் வேலைக்காரப்பெண் தனக்கு மட்டும் காலையிலும், மதியமும் ஏதோ சமைத்து சாப்பிட்டுவிடுவாள், இரவு சமைத்து வை என்று ரேவதி சொன்னால் சமைத்துவைப்பாள், மற்றபடி அவளின் உடைகளை துவைக்க,வீடு கூட்ட, என்று தனியாக வேலைக்காரர்கள்
வந்து செய்து கொடுத்து சென்றுவிடுவார்கள்.ரேவதியின் சம்பாத்தியம் அவளோடு சேர்த்து அந்த வேலைக்காரர்களுக்கு போதுமானதாக இருந்ததால், அவள் தனியாக ப்ராக்டீஸ் செய்ய ஆசைப்படவில்லை.வயதும் நாற்பது ஆகிவிட்டதால் இனி என்ன என்று அவளுள் ஒரு விரக்தி மனப்பானமை கூட வந்துவிட்டது.தன்னுடன் பணி புரியும் மருத்துவர்களுடன் கூட அளவோடுதான் பழகுவாள்.

“எக்ஸ்கியூஸ் மீ” குரலைக்கேட்டு திரும்பி பார்த்தவள் அந்த அழகு குழந்தைபெண்ணை பார்த்து வியந்து போனாள், கொஞ்சம் அந்த ‘லயன் டேட்ஸ்” பாட்டிலை எடுத்து தருகிறீர்களா? அந்தக்கடையில் கொஞ்சம் ரொட்டி,பழங்கள், வாங்க வந்தவள் அந்த குழந்தைக்கு எட்டாததால் அருகில் இருந்த அவளிடம் சொல்ல “யெஸ்” என்ற வழக்கமான உச்சரிப்புடன் அவள் அதை எடுத்து அவளிடம் கொடுத்து “யுவர் குட் நேம் ப்ளீஸ்” என்று கேட்க யாமினி என்று அழகு குரலில் சொல்லிவிட்டு ‘சாரி” என் அப்பா அங்க பில் போட்டுட்டு இருக்காரு அதனால இதையும் சேர்த்து பில் போடனும் நான் வரட்டுமா? ரொம்ப தாங்க்ஸ் என்று சிட்டாய் பறந்தாள், வைத்த விழி வாங்காது அவள் செலவதை பார்த்துக்கொண்டிருந்தவள் அந்த பெண் கொண்டு வந்ததை வாங்குவதற்காக திரும்பியவனை பார்த்தவள் அதிர்ந்தாள்.”ரவி” இவன் எப்படி இங்கு ! அதற்குள் அவர்கள் இருவரும் பில் கட்டி பேசிக்கொண்டே வெளியே செலவதை பார்த்தவள் மனம் பட பட வென அடித்துக்கொண்டது. என் ரவியின் குழந்தையா இவள், ஓடிப்போய் பேச வேண்டும் என்று துடித்த மனதை அடக்கிக்கொண்டாள்.

அதற்குப்பின் அவளால் அங்கு நிற்க முடியவில்லை, காய்ச்சல் வருவது போல் இருந்த்து, அவள் மனது தறிகெட்டு ஓட அதை தடுக்க முடியாமல் தடுமாறினாள். இனி இங்கிருந்தால் சமாளிக்கமுடியாது என்று உணர்ந்தவள் எடுத்தவரை போதும் என முடிவு செய்து விரு விருவென பில் போடும் இடத்துக்கு வந்து எடுத்தவற்றை கொட்டி எப்படியோ பணம் கட்டி எடுத்து காருக்கு வந்தவள் உடனடியாக காரை எடுத்து வீட்டுக்கு விரைந்து, எதிரில் வந்த வேலைக்காரப்பெண்ணிடம் வாங்கி வந்தவைகளை கொடுத்துவிட்டு அவள் அறைக்கு சென்று விழுந்தவள்தான், அவள் நினைவுகள் குதிரைவேகத்தில் ஓட ஆரம்பித்துவிட்டன.

கோயமுத்தூரில்தான் இருக்கிறானா? அமெரிக்காவை விட்டு எப்பொழுது வந்தான்? நல்ல அழகான குழந்தைக்கு தந்தையாயிருக்கிறான்? அப்படியானால் அந்த குழந்தையின் அம்மா எங்கே? நல்ல கேள்வி தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள், வீட்டில்தான் இருக்க வேண்டும்.

சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி! முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று இரண்டாமாண்டு மாணவர்கள் அறிமுகப்படுத்திக்கொண்ட போது ரவி வலியப்போய் ரேவதியிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.அதன் பின் ரேவதியின் கலகலப்பும் புத்திக்கூர்மையும் அவளுக்கு ஆண் பெண் பேதமின்றி ஒரு பொ¢ய நட்பு வட்டாரத்தை உருவாக்கியிருந்த்து, அதையும் மீறி அவள் மனதில் ஊடுருவ ரவி பல முயற்சிகள் செய்து கடைசியில் வெற்றி பெற்றான். ஆனால் ஒரு கண்டிசனுடன்,படிப்பு முடியும் வரை எந்த விதமான ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் இருக்கவேண்டும்,அதன் பின்னரே காதல்,திருமணம், ஆகியவை. இதில் ஓரளவு கட்டுப்பாட்டுடனே இருவரும் இருந்தனர்.

ரவி மேற்படிப்பு படிக்க அமெரிக்கா செல்ல ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தான் இவளுக்காக ஒரு வருடம் காத்திருக்கவும் முடிவு செய்து காத்திருக்க இவள் படிப்பு முடித்து வெளி வந்து ஒரு மாதத்திற்குள் தாங்க முடியாத வயிற்று வலி என்று துடித்தபோது அவள் பெற்றோர் அவளை மருத்துவமனையில் சேர்த்தபோதுதான் அவளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்த்து.அவளது கர்ப்பப்பை சேதாரமாகியிருந்த்தால் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடுத்துவிட்டனர்.அவளைப்பொறுத்தவரை இனி எதிர்கால சந்ததிக்கு அவள் தகுதி இல்லாதவள் என முடிவு செய்து கொண்டாள்.

“ரவி” கண்ணீர்டன் எத்தனை முறை எடுத்துச்சொல்லியும் பிடிவாதமாய் மறுத்து விட்டாள் ரேவதி. நீ நன்றாக இருக்க வேண்டும், எனக்கு இதைத்தவிர வேறு எண்ணமில்லை, என்று அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, இனி அவனுடன் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்று கோயமுத்தூர் வந்தவள்தான், அதன் பின் இந்த பதினைந்து வருட காலம் தன் வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக்கொண்டாள்.
அதற்கும் இன்று ஒரு பூகம்பம் வந்துவிட்டது.

அந்தக்குழந்தையை மீண்டும் பார்க்கவேண்டும் என்ற அவளின் ஆவல் பன் மடங்காக பெருகிக்கொண்டே போன வேளையில், ஒரு நாள் அவள் சைக்கிளில் தன்னை தாண்டி செல்வதை பார்த்தவள் உணர்ச்சிவசப்பட்டு ‘யாமினி” என்று கூப்பிட அந்தபெண் திரும்பி இவளை பார்த்து யோசித்தவள் ஞாபகம் வந்தவளாக ஹலோ ஆண்ட்டி எப்படி
இருக்கீங்க? என்று சைக்கிளை திருப்பிக்கொண்டு இவளிடம் வந்தாள்.”குட்” ஞாபகம் வெச்சிருக்கிறியே, என்றவள் உங்க வீடு எங்க இருக்கு என்று கேட்டாள்.

அவள் இப்படியே ரைட்டுல் திரும்பி போனா அங்கிருக்கு, வர்றீங்களா எங்க வீட்டுக்கு என்று கேட்டவளிடம், இன்னோரு நாள் வர்றேன் ஆமா வீட்டுல யார் யார் எல்லாம் இருக்கிறீங்க?

நானும், எங்க அப்பாவும் மட்டும்தான் இங்கிருக்கோம்,இது எங்க அத்தை வீடு, நாங்க இங்க பத்து நாள் இருப்போம் அப்புறம் அமெரிக்காவுக்கு போயிடுவோம், என்று சொல்ல

அப்ப உங்க அம்மா..என்று கேட்க அந்தப்பெண் முகம் மாறினாள்.

சாரி சாரி..தப்பா கேட்டுட்டனா? அன்று அவள் தடுமாற முகம் மாறிப்போன அந்த பெண் இட்ஸ் ஓகே, ஆண்ட்டி, எங்க அம்மா எங்களை விட்டு பிரிஞ்சுட்டாங்க, குரலில் வருத்தம் தென்பட்டது.இவள் மனதில் பெரும் பாரம் வந்து ஏறிக்கொண்டது. பை ஆண்ட்டி என்று அந்தப்பெண் விடைபெற்றது கூட அவள் கவனத்தை கவரவில்லை.

எதற்காக அந்தகுழந்தையின் தாய் அவளை விட்டு சென்றாள்? இவள் மனம் இவளையே கேள்விகேட்க அந்தக்கேள்வியின் உளைச்சல் தாங்காமல் ரவியை எப்படியாவது பார்த்து பேசிவிடுவது என்று முடிவு செய்தாள்.

“ரவி” அவளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான், அவனின் பார்வை தாங்காமல் ரேவதி தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள், எப்படி எப்படியோ முயற்சி செய்து அவனை சந்திக்க போராடி ஒரு வழியாக வெற்றி பெற்றவள், அவன் எதிரில் வந்தவுடன் எதுவும் சொல்ல்த்தொ¢யாமல் தடுமாற்றமாய் உட்கார்ந்திருந்தாள்.

பேசு ரேவதி எங்கூட பேசனும்னுதான வந்திருக்க அப்புறம் ஏன் இப்படி உட்கார்ந்திருக்க, என்று கேட்டவனிடம் மெல்ல யாமினிய வழியில பார்த்தேன் அவ அம்மாவ பத்தி கேட்டப்ப அவ அம்மா உங்களை விட்டு போயிட்டதா
சொன்னா, எனக்கு மனசு கேக்கல, அந்தக்குழந்தைய விட்டு போக அவளுக்கு மனசு எப்படி வந்துச்சு?

ரவி மெல்ல அவ அம்மா இப்ப உயிரோட இல்ல,என்று மெல்லிய குரலில் சொல்ல அவள் அதிர்ந்து போய் நின்றாள். எப்படி?கேட்டவளிடம் அழுகை மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்த்து, அவ அம்மா மட்டுமல்ல அப்பாவும் இறந்துட்டாங்க, சொன்னவனிடம் அவள் அதிர்ச்சியுடன் பார்க்க ஆமா, என் தங்கச்சியோட குழந்தைதான் அவள், இவ ஒரு வயசு குழந்தையா இருக்கும்போது ஒரு ஆக்சிடெண்ட்ல இரண்டு பேரும் இறந்துட்டாங்க, ஒரு குழந்தைய எனக்கு தர முடியாது அப்படீன்னு சொல்லி என்னை விட்டுப்போன ஒரு பெண்ணால மனசு பாதிச்சிருந்த எனக்கு ஆண்டவனா ஒரு குழந்தைய கொடுத்திருக்கான்னு என் தங்கச்சி குழந்தைக்கு நானேஅப்பாவா இருந்துட்டு வர்றேன், அவ அம்மாவ கேட்கறப்ப என்னை விட்டுட்டு போனவளையே நினைச்சு உங்கம்மா எங்கிட்டயிருந்து போயிட்டான்னு சொல்லிவச்சிருக்கேன். சொல்லிவிட்டு கண்ணீரை துடைத்துக்கொண்டான்

அழுதுகொண்டே இருந்தாள் ரேவதி, எவ்வளவு பொ¢ய தவறு செய்தி¢ருக்கிறேன், பொ¢ய தியாகம் செய்வதாய் நினைத்துக்கொண்டு ரவியின் வாழ்க்கையை வதைத்திருக்கிறேன்.

எனக்கு மன்னிப்பே கிடையாதா? மெல்ல தலை நிமிர்ந்து நான் உங்களோட வர அனுமதிப்பீங்களா என்று கேட்க நாங்க இரண்டு பேரும் அதுக்காகத்தான் காத்திருக்கிறோம், ஆனா என்னைவிட்டு போனது நீதான்னும், அதுக்காக மன்னிப்பு கேட்டு அவ மனசுக்குள்ள நீ நுழைஞ்சு அவ அம்மாவாவே வந்துட்டா என்னோட இந்த பிரச்னை தீர்ந்துடும் கண்டிப்பா! நம்மோட குழந்தைக்கிட்ட நான் மன்னிப்பு கேட்கறதுல எனக்கு எந்த
பயமோ தயக்கமோ கிடையாது.

பத்து நாள் லீவு கேட்ட ரேவதியை ஆச்சர்யமுடன் பார்த்தார் மருத்துவமனியின் “டீன்” ஆமா சார் ரொம்ப நாளா என்னை விட்டு போன என் குழந்தைய நான் பார்த்துக்கணும், அதுக்காகத்தான்.

இந்த பத்து நாளுக்குள் யாமினியின் அம்மா நான்தான் என்றும்அவளை விட்டு பிரிந்தது தவறுதான் என்றும் அவளுக்கு நிரூபித்து அவர்களுடன் நிச்சயம் சேர்வாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *