அரிசிச்சோறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 7,857 
 

பாட்டி, தட்டில் வைத்த களி உருண்டையைப் பார்த்த குமாருக்கு கோபமாக வந்தது. என்ன ஆயா எப்பப் பார்த்தாலும் களியைக் கிண்டிப்போடறே? அரிசிச் சோறு கிடையாதா? நானும் தங்கச்சியும் தினமும் இதத்தான் தின்னுக்கிட்டிருக்கோம் என்றான். நான் என்னப்பா பண்றது. ரேஷங்கார்டும் அடகுல இருக்கு. உங்கப்பன் ஊரிலிருந்து வந்துதான் அரிசி வாங்கணும். அதுவரைக்கும் இதான் என்றபடியே தட்டில் கத்தரிக்காய்க் குழம்பை ஊற்றினாள்.

பாவம் அவள் என்ன செய்வாள்? இருக்கும் கொஞ்ச நிலத்திலும் தண்ணீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாகக் கிடக்கு. அவள் மகன் சரவணனும் மருமகள் சுலோசனாவும் பஞ்சம் பிழைக்க சென்னை போயிருக்கிறார்கள். கட்டட வேலையில் சித்தாள் வேலை செய்து வருகிறார்கள். பதினைந்து நாளுக்கு ஒருமுறை ஆரணியிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இவர்கள் ஊர் சீவலம்பாக்கத்திற்கு வந்துபோவார்கள். வரும்போது வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் வாங்கிவருவார்கள். ஏழுவயது குமார், ஐந்து வயது ராணி இருவரும் இப்பொழுது பாட்டியின் பராமரிப்பில்தான் இருக்கிறார்கள்.

மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டு சாப்பிட்டுமுடித்தான் சரவணன். ராணிக்கு அவ்வளவு விவரம் வரவில்லை. அவள் எப்பொழுதுபோல் சாப்பிட்டாள். அவளுக்கு அம்மா,அப்பா வரும்போது என்று பாட்டிச் சொன்ன வார்த்தைகள்தான் காதில் இனிப்பாக விழுந்தது.

“ஆயா, அம்மா, அப்பா எப்போ வறாங்க? “ என்று ஏக்கமாகக் கேட்டாள். அதற்கு, பாட்டி, இன்னிக்கு விசாலக்கிழமையா, நாளை மத்தாநா சனிக்கிளமை வாரக்கூலி வாங்கிண்டு வருவாங்க” கூலி விஷயம் புரியாவிட்டாலும் அம்மா, அப்பா வரப்போறாங்க என்கிற விஷயம் மட்டும் இருவருக்கும் புரிந்து உற்சாகமானார்கள்.

“ஏய், சுலோசனா, என்ன பேருக்கு ஏத்தாமாதிரி சுலோவா நடந்தார” குரல் கேட்டு திடுக்கிட்டாள். கட்டட சூப்பர்வைசர்தான் எதிரில். வேகமா வேலையப் பாப்பியா, என்னமோ தலைல கல்லைச்சுமந்துகிட்டு, அன்னநடை நடக்கறே?” சுயநினைவுக்கு வந்தாள். “என்னமோ, பிள்ளைங்க நாபகம் எடுத்தது. அதான்” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே கல்லை இறக்கிவைத்தாள். மதியம் சாப்பாட்டுநேரம் வந்துவிட்டதால் வேலையாட்கள் எல்லோரும் எடுத்துவைத்துக்கொண்டு உட்கார்ந்தார்கள். சரவணனும் சேர்ந்து சாப்பிடுவதற்காக சுலோசனா எதிரில் வந்து உட்கார்ந்துகொண்டான். அவனுக்கும் குழைந்தைகள் நினைவுதான். இன்று சனிக்கிழமை. வாரக்கூலி கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு எந்நேரமானாலும் ஊருக்குப் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

“ஏங்க, நம்ம இரண்டுபேர் கூலியும் சேர்ந்து இன்னிக்கு ஒரு 3500 ரூபா வருமாங்க?” என்று கேட்டாள் சுலோசனா.

“நான் ராத்திரி வேலை செஞ்சதுக்கும் சேர்த்து 5700 ரூபா வரணும். எங்க கொடுக்கப்போறாங்க? என்னமோ காரணம் சொல்லி 5000ந்தான் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன். அத்த வைச்சுக்கிட்டு, என்னத்தப் பண்ணப்போறேனோ, கடனைக்கட்டறதா, வீட்டுக்குச் சாமான் வாங்கிப்போடறதா தெரியல புள்ள.”

“இன்னிக்குப் போகும்போது புள்ளைங்களுக்கு ஏதாச்சும் வாங்கிட்டுப்போகணுங்க. ஊருக்குப்போனவுடன் ஒரு மூட்டை அரிசி வாங்கிப்போடணுங்க. பெரியவன் அரிசிச்சோறுன்னு எப்போதும் சொல்ல்ண்டிருக்கான். அத்தைக்கிட்டேச் சொல்லி இனிமே வாரத்துக்கு ரெண்டுவாட்டி சோறாக்கிப்போடச்சொல்லணும். போனதடவையே சட்டை வாங்கிட்டு வறேனு சொல்லிருக்கேன்”

“எனக்கு மட்டும் ஆசையில்லையா? கையிலே காசே இல்லையே, என்ன பண்றது?”

சுலோசனா கைகழுவிவிட்டு வந்தாள். புடவைத்தலைப்பு நுனியில் முடிபோட்டுருந்தைப் பிரித்து மூணு நூறு ரூபாய் நோட்டுக்களை சரவணனிடம் நீட்டினாள். “கடைசி நேரத்திலே நீ இப்படிச் சொல்வேனு எனக்கு தெரியும்யா. அதனால்தான் இந்த ரூபாயை பத்திரமா வைச்சிட்டிருந்தேன். இந்தா, சாப்பாட்டுநேரம் முடியறத்துக்குள்ள போய் புள்ளைங்களுக்கு துணி எடுத்துட்டு வந்துடுய்யா” என்றாள். வேகமாகச் சாப்பிட்டுவிட்டு, சரவணன் கிளம்பினான். “மழை வரும்போல இருக்கு. சீக்கிரமா போய்ட்டு வந்துடு” என்று வழியனுப்பினாள்.

அவள் சொன்னது மாதரியே சரவணன் திரும்பிய சிறிதுநேரத்தில் மழை பெரிதாக இடி,மின்னலுடன் பெய்ய ஆரம்பித்தது.

வேலைநேரம் முடிந்தது. எல்லோரும் கைகால் கழுவிக்கொண்டு உடைகளைத்திருத்திக் கொண்டு கூலி வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

அங்குக் கட்டப்பட்டு வரும் கட்டிடம் 10 மாடிக்கட்டிடம். பக்கத்துலேயே அதேபோல் இன்னோரு கட்டிடமும் வேலையாகிக்கொண்டிருந்தது. அங்கு வேலை செய்தவர்களும் கூலி வாங்க இந்தக்கட்டிடத்துக்கு வந்து குழுமினார்கள். தவிர மழைக்கு ஒதுங்கியவர்கள் என்று அங்கு ஒரே இரைச்சலாக இருந்தது.

அதற்குள் ஒரு குரல், கூலி முதமாடிலே கொடுக்கறாங்க, அங்கப்போய் வாங்கிக்கோங்க எனவும் எல்லோரும் படியேறினார்கள்.

சுலோசனாவும் குழந்தைகள் சட்டை இருந்த பையைக் கையில் பிடித்துக்கொண்டு சரவணனுடன் போனாள்.

யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பெரிய மின்னல்,இடி. அடுத்த நிமிடம் பூகம்பம் வந்ததுபோல் கட்டிடம் ஆடியது. அப்படியே முழுக்கட்டிடமும் நொறுங்கிவிழுந்தது. சரவணனுடன் சுலோசனா கையில் பையுடன் குழந்தைகள் நினைவிலேயே மண்ணில் புதையுண்டாள்.

சீவலம்பாக்கம் கிராமத்தில், சரவணன் வீடு இருந்த தெருவினுள் ஒரு வேன் நுழைந்து கொண்டிருந்தது. குமாரும், ராணியும் ஓ,வென கத்திக்கொண்டே அதன் பின்னால், ஐய்யா, அம்மாவும், அப்பாவும் வந்துட்டாங்க என்று மகிழ்ச்சியாக ஒன்றுமறியாமல் ஓடினார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *