அனுபவம் தந்த பாடம்

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,999 
 

அலுப்புடன் உள்ளே நுழைந்தாள் மைதிலி. ஆபீசில் வேலை அதிகம். ஆடிட்டிங் நடக்கிறது.
ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டான் நவீன்.
“”நவீன், அம்மா இப்பதான் உள்ளே நுழையறா. போய் முகம், கை, கால் கழுவிட்டு, காபி குடிச்சுட்டு வரட்டும்பா. நீ நல்ல பிள்ளை தானே. பாட்டிகிட்டே வா. நான் உனக்கு கதை சொல்றேன். ஸ்கூலில் சொல்லிக் கொடுத்த ரைம்ஸ் சொல்லு பார்ப்போம்,” ஒன்றாவது படிக்கும் பேரனை, தன்னிடம் அழைத்தாள் லட்சுமி.
“”மைதிலி, பால் அடுப்பில் சூடா காய்ச்சி வச்சிருக்கேன். காபி கலந்துக்கம்மா.”
அனுபவம் தந்த பாடம்காபி குடித்தபடி சோபாவில் அமர்ந்திருக்கும் மருமகளிடம் வந்தாள் லட்சுமி. “”பிள்ளையார் கோவில் வரைக்கும் போய்ட்டு வர்றேன். நவீன் பக்கத்து வீட்டிற்கு விளையாட போயிருக்கான். ராத்திரி சமையலுக்கு, காய்கறி நறுக்கி மேடையில் வச்சிருக்கேன். வரட்டுமா.”
“”போயிட்டு வாங்க அத்தை. இருட்டறதுக்குள் வந்துடுங்க.”
அனுசரணையான மாமியார். வேலைக்குப் போகும் மருமகளின் கஷ்டத்தை உணர்ந்து நடந்து கொள்பவள். அன்போடும், பிரியத்தோடும் பழகும் லட்சுமியின் கனிவான குணம். மைதிலியும், மாமியாரிடம் அன்போடு நடந்து கொள்வாள்.
“”மைதிலி, மணி பத்தாச்சு, இன்னும் அடுப்படியில் என்னம்மா செய்யற?”
“”பட்டாணி உரிச்சு வைக்கிறேன் அத்தை. காலையில் மசாலா போட சுலபமாக இருக்கும்.”
“”என்னம்மா, நான் செய்து தர மாட்டேனா… பொழுதுக்கும் ஆபீசிலும், வீட்டிலுமாக உழைக்கிறே. நேரத்துக்கு படுக்க வேண்டாமா! இங்கே கொடு… நான் உரிச்சு வைக்கிறேன். நீ போ. ராமு தூங்காமல் உட்கார்ந்திருக்கான். மனசு விட்டு பேசக்கூட, உங்களுக்கு நேரம் கிடைக்க மாட்டேங்குது.”
“”அத்தை, முழங்கால் வலின்னு சொல்லிட்டிருந்தீங்களே… வலிக்கு ஆயின்மென்ட், வாங்கி வந்து அலமாரியில் வச்சிருக்கேன். ஞாபகமாக தேய்ச்சுக்கிட்டு படுங்க.”
“”ஆகட்டும்மா… நீ போய் படு.”
ஆசிரியர் வேலை பார்த்து ரிட்டையர்ட் ஆனவள் லட்சுமி. கணவர் இறந்த பின், மகன் – மருமகளோடு இருந்தாள். பேரன் நவீனை குளிப்பாட்டி, ஸ்கூலுக்குக் கிளப்புவது, மருமகளுக்கு காலை நேரத்தில் அடுப்படியில் உதவுவது என்று, அவள் பொழுதுகள் நல்லபடியாகப் போனது.
அன்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கமான பரபரப்பு இல்லாமல், மெதுவாக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர் மைதிலியும், லட்சுமியும்.
அங்கு வந்த ராமு, “”அம்மா இன்னிக்கு சாயந்திரம் நானும், மைதிலியும், சினிமாவுக்கு போறோம். டிக்கெட் ரிசர்வ் பண்ணியிருக்கேன்,” என்று சொன்னான். “”போய்ட்டு வாங்கப்பா. எங்கே போறீங்க, வர்றீங்க? வீடு, ஆபீசுன்னு ரெண்டு பேருக்கும் பொழுது சரியா போகுது. நவீனை நான் பார்த்துக்கிறேன். சினிமா முடிஞ்சு, இரண்டு பேரும் ராத்திரி ஓட்டலில் சாப்பிட்டுட்டு வாங்க. மைதிலிக்கு பரோட்டாவும், பன்னீர் பட்டர் மசாலாவும் ரொம்பப் பிடிக்கும். வாங்கிக் கொடுப்பா.”
மாமியாரை, அன்புடன் பார்த்தாள் மைதிலி.
தன்னை எளிமையாக அலங்கரித்தபடி கணவனுடன் வரும் மருமகளைப் பார்த்தாள்.
“”போயிட்டு வர்றோம் அத்தை.”
“”நவீன் அப்பா, அம்மாவுக்கு டாட்டா சொல்லு.”
இடுப்பில் பேரனை சுமந்தபடி, மகன், மருமகளை வழியனுப்பி வைத்தாள். எதிர்வீட்டு கமலம் கேட்டை திறந்து உள்ளே வர,
“”வா, கமலம்,” அவளை வரவேற்க, கமலத்துடன் உள்ளே நுழைந்தாள் லட்சுமி.
“”இந்த வெள்ளிக்கிழமை, பெசன்ட் நகர் அஷ்டலஷ்மி கோவிலுக்கு போகலாம்ன்னு இருக்கேன். நீயும் வர்றியான்னு கேட்டுட்டு போகத் தான் வந்தேன்.”
லட்சுமியின் வயதை ஒத்தவள் கமலம். கணவனுடன் எதிர்வீட்டில் குடியிருந்தாள்.
“”எத்தனை மணிக்கு போறே கமலம்.”
“”எட்டு மணிப் போல் கிளம்பலாமா?”
“”என்னால முடியாதே! நவீனுக்கு ஸ்கூல் வேன் வந்து கிளம்ப எப்படியும் ஒன்பது மணி ஆயிடும். அதுக்கு முன்னால என்னால் வர முடியாது கமலம்.”
“”சரி, ஒன்பது மணிக்கே கிளம்பலாம். எங்கே உன் மகனும், மருமகளும் கிளம்பிட்டாங்க.”
“”சினிமாவுக்கு போறாங்க.”
“”பரவாயில்லை லட்சுமி. நீ, உன் மருமகளோடு எந்த பிரச்னையும் இல்லாம, ஒத்துமையாக இருக்கே. உன்னோட நல்ல குணம் தான் இதுக்குக் காரணம். உன்னைப் போல எல்லா மாமியாரும், அனுசரணையா நடந்துகிட்டா, இந்த உலகமே அன்பு மயமானதாக மாறிடும்.”
புன்னகையுடன் கமலத்தைப் பார்த்தாள். “”என் குணம் மட்டும் இதுக்குக் காரணம் இல்லை. அனுபவம் தந்த பாடம் கமலம்.”
“”என்ன சொல்ற?”
“”நான் கல்யாணமாகி, புகுந்து வீட்டுக்கு வந்தப்ப, என் மாமியார் என்னை மருமகளாக பார்க்கலை, போட்டிக்கு, அந்த வீட்டில் நுழைந்த எதிரியாகத் தான் பார்த்தாங்க. டீச்சர் வேலை பார்த்ததாலே வேலைக்கும் போய்ட்டு, வீட்டிலும் எல்லா வேலையும் நான்தான் பார்ப்பேன். அதிலும் ஏகப்பட்ட குற்றம் குறைகள், நான் வாய் மூடிட்டு இருந்தாலும், தேவையில்லாம வம்புக்கு இழுப்பாங்க. வீட்டில் தினமும் பிரச்னைதான். என் மகன் ராமு பிறந்த பிறகு, இன்னும் அதிகமாச்சு. என் கணவர், எனக்கும் சொல்ல முடியாம, அம்மாவையும் தட்டிக் கேட்க முடியாம, ரொம்பவும் மன வேதனைப் படுவாரு. சமயத்தில் வாழ்க்கையே நரகமாக தோணும். எனக்குக் கிடைச்ச அனுபவம் தான், என் மனசை தெளிவடைய வச்சுது. நான், என் மாமியார் மாதிரி இல்லாம, மருமகளோட கஷ்டங்களை உணர்ந்து, அவளை ஒரு மகளாக நடத்தணும்ன்னு முடிவு செய்தேன்.
என் மாமியாரைப் பார்த்து அவங்களை மாதிரி இருக்கக் கூடாதுங்கற பாடத்தை நான் கத்துக்கிட்டேன். என் மருமகள் என்னைப் பார்த்து, நாளைக்கு என்னைப்போல் இருக்கணுங்கற பாடத்தை கத்துப்பாள். அவளும் என்னைப் போல அவள் மருமகளிடம் நிச்சயம் அன்பு பாராட்டுவாள். இது ஒரு தொடர்கதையாக நீளும். நீ சொன்னது @பால இந்த உலகமே அன்புமயமானதாக மாறும். நான் சொல்றது சரிதானே.”
“”நூத்துக்கு நூறு உண்மை லட்சுமி. உன் அனுபவம் உனக்கு நல்ல பாடத்தை தான் கற்றுக்கொடுத்திருக்கு.”
பேரனை முத்தமிட்டபடி கமலத்தை பார்த்து, மனம் நிறைந்து சிரித்தாள்.

– ஆர். பிரவிணா (பிப்ரவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *