அந்தரங்கம் புனிதமானது

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 109,431 
 

“ஒரு நிமிஷம் இருங்கள்; கூப்பிடுகிறேன்… நீங்கள் யார் பேசறது?” என்ற கேள்வி வந்ததும் பல்லைக் கடித்துக் கொண்டு பதில் சொன்னான்: “நான் – அவர் மகன் வேணு!”

சற்றுக் கழித்து அவனது தந்தையின் குரல் போனில் ஒலித்தது. “ஹலோ! நான் தான் சுந்தரம் …”

– அதுவரை இருந்த தைரியம், ஆத்திரம், வெறுப்பு யாவும் குழம்பி வேணுவுக்கு உதடுகளும் நெஞ்சும் துடித்தன. அவனது பேச்சு குழறிற்று; இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பேசினான்: “நான் வேணு பேசறேன்… நான் உங்களோடு கொஞ்சம் பேசணும்… ம் … தனியாப் பேசணும்.”

“சரி… இன்னும் கொஞ்ச நாழிலே நான் வீட்டுக்கு வந்துடுவேன்…”

“இல்லே… அதைப்பத்தி… வீட்டிலே பேச எனக்கு விருப்பமில்லே… நீங்க அங்கேயே இருக்கிறதானா, இப்பவே பத்து நிமிஷத்திலே நான் அங்கே வரேன்…”

“ஓ ஐஸீ! சரி… வாயேன்…”

“தாங்க்ஸ்…”

-ரிஸீவரை வைத்துவிட்டு நெற்றியில் பொங்கி இருந்த வியர்வையைத் துடைத்து விட்டுக்கொண்டான் வேணு. இன்னும் கூட அவனுக்கு நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. அவன் என்னென்னவோ பேசத் தன்னைத்தானே ஒரு மகத்தான காரியத்திற்குத் தயார் செய்து கொள்கிற தோரணையில் உள்ளங்கையில் குத்திக் கொண்டு செருமினான்.

“ம்… இது என்னோட கடமை! இந்தக் குடும்பம் சீர் குலையாம பாதுகாக்க வேண்டியது என்னோட கடமை! ஒரு சின்னப்பையன் – தன் மகனே – தன்னைக் கண்டிக்கிற அளவு தான் நடத்தை கெட்டுப் போனதை அவர் உணர வேணாமா? மானக்கேடான விஷயம்தான்!… நான் ஆத்திரப்படாமல் நியாயத்தைப் பேசி, அவரோட கேடு கெட்ட ரகசியத்தை அவருக்கே மொதல்லே அம்பலப்படுத்தணும்….
‘அதெல்லாம் இல்லை; அப்படி இப்படி’ன்னு அவர் மழுப்பப் பார்ப்பார்…. ம்ஹ்ம்! அவரோட மேஜை டிராயர்லே இருந்த அந்தக் கடுதாசியை… கர்மம்… காதல் கடிதம்… அதெ ஞாபகமா எடுத்துக்கறேன்… என் மேஜை டிராயருக்குக் கள்ளச்சாவி போட்டயோன்னு அவர் ஆத்திரப்படலாம். இவர் கள்ளக் காதலைக் கண்டுபிடிக்க நான் செய்த இந்தக் கள்ளத்தனம் ஒன்றும் பெரிய தப்பில்லை… முந்தாநாள் ராத்திரிகூட அவளோட ரெண்டாவது ஷோவுக்குச் சினிமாவுக்குப் போயிருந்ததைப் பார்த்த அப்புறம்தானே இந்தத் தொடர்பின் முழு உண்மையையும் கண்டு பிடிக்கணும்னு நானே அவர் அறையைச் சோதனை போட்டேன்!….”

-வேணு அவசர அவசரமாக உடையணிந்து வெளியே புறப்படுகிற சமயத்தில், லேடீஸ் கிளப்புக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவன் தாய் ரமணியம்மாள் எதிர்ப்பட்டாள்.

சில நாட்களாகவே அவனது போக்கும் பேச்சும் ஒரு மாதிரியாக இருப்பதை அவளது தாயுள்ளம் உணர்ந்தது.

இப்போது அவனைத் திடீரெனப் பார்த்ததும் அவனது தோற்றத்தைக் கண்டு அவள் கலவரமடைந்தாள்.

“அவன் சரியாகச் சாப்பிடாமல் தூக்கம் கூட இல்லாமல் இருக்கிறானோ?” என்று, அவனது சோர்ந்திருக்கும் தோற்றத்தைக் கண்டு சந்தேகம் கொண்டாள். இவன் இளைத்துக் கறுத்துப் போயிருந்தான். க்ஷவரம் செய்து கொள்ளாததால் மேல் உதட்டிலும் மேவாயிலும் கன்ன மூலங்களிலும் இளரோமம் அடர்ந்திருந்தது… அவன் எதைக் குறித்தோ மிகுந்த மனோவியாகூலத்திற்கு ஆளாகி இருக்கிறான் என்று அவன் கண்களில் கலங்கிய சோர்விலும், கீழ் இமைகளுக்கடியில் படிந்திருந்த கருமையிலும் அவள் கண்டு கொண்டாள்.

அவன் வயது வந்த ஆண்மகன். அவனுக்கு ஏதேனும் அந்தரங்கமான பிரச்னைகள் இருக்கலாம். அதில் தான் தலையிடுவது நாகரிகமாகாது என்ற கட்டுப்பாட்டுணர்வுடன் அவள் அவனை நெருங்கி வந்தாள்.

“என்னடா வேணு… எங்கே கிளம்பிட்டே?” என்று ஆதரவாக அவன் தோள்களைப் பற்றினாள். அவனுக்கு உடம்பு கூசிற்று.

“கொஞ்சம் வேலை இருக்கு” என்று அழுத்தமாக அவன் பதில் சொன்னான்.

“வாட் இஸ் ராங் வித் யூ? சரி… என்னவாக இருந்தாலும் – நான் உனக்கு உதவ முடியும்னா சொல்லு…” என்று ஆங்கிலத்தில் கூறினாள்.

“தாங்க்ஸ்” என்று அவளைக் கடந்து போக யத்தனிக்கையில் அவனை நிறுத்தினாள் அம்மா.

“போ… போயி… என்னவோ ஸ்பெஷலா டிபன் பண்ணி இருக்கா சமையல்காரப் பாட்டி… சாப்பிட்டுட்டுப் போயேன்” என்று கொஞ்சி உபசாரம் செய்துவிட்டு, தனக்கும் நாழியாவதைக் கைக்கடிகாரத்தில் பார்த்துவிட்டு அவள் வெளியேறினாள்.

வேணு ஒரு விநாடி தலை குனிந்து யோசித்து நின்றான்.

“இந்த அசட்டு அம்மாவை இந்த அப்பாதான் எப்படி ஏமாற்றித் துரோகம் புரிந்து கொண்டிருக்கிறார்” என்று தோன்றியது வேணுவுக்கு. அதன் பிறகு, இந்த வயதிலும் இவள் செய்து கொள்ளுகிற அலங்காரமும் பவுடர் பூச்சும் உதட்டுச் சாயமும் கையுயர்ந்த ரவிக்கையும் கீச்சுக் குரலில் பேசுகிற இங்கிலீஷ் பேச்சும் காண வயிற்றைப் பீறிக்கொண்டு ஆத்திரமும் அருவருப்பும் பொங்கிற்று அவனுக்கு.
ஹாலில், அப்போதுதான் கான்வென்ட்டிலிருந்து வந்திருந்த அவனது இரண்டு தம்பிகளும் ஆறு வயதுத் தங்கையும் சோபாவில் அமர்ந்து ஷீசையும் ஸாக்சையும் கழற்றிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கும்போது வேணுவின் நெஞ்சில் துக்கமும் பரிவும் பொங்கியடைத்தன.

“இந்தப் பொறுப்பற்ற தாயும் ஒழுக்கங்கெட்ட தந்தையும் இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் குட்டிச் சுவராக்கிவிடப் போகிறார்கள்” என்று நினைத்தபோது… இதற்குத் தான் என்ன செய்ய முடியும் என்று குழம்பினான் அவன்.

“இதற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்! அது என் கடமை… நான் என்ன இன்னும் சின்னக் குழந்தையா? எனக்கு இருபத்தியொரு வயதாகிறது… லீகலி, ஐ ஆம் அன் அடல்ட்!”

திடீரென்று அவன் தன்னை வளர்த்த தாத்தாவையும் பாட்டியையும் நினைத்துக் கொண்டான்.

“நல்ல வேளை! இந்தக் கேடுகெட்ட சூழ்நிலையில் வளராமல் போனேனே நான்!”

வேணுவின் தந்தை சுந்தரமும் தாய் ரமணியும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் வெவ்வேறு ஜாதியினர் என்பதால் பெற்றோரை விரோதித்துக்கொண்டே அவளைக் கைப்பிடித்தார் சுந்தரம்.

ரமணியம்மாள் சிறு வயதில் கான்வென்ட்டில் படித்து வெள்ளைக்காரப் பாணியில் வளர்க்கப்பட்டவள். மேற்கத்திய கலாசாரத்தில் அவளது குடும்பமே திளைத்தது. அக்காலத்தில் சுந்தரத்திற்கு அவளிடம் ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு அதுவே கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.

அந்த ஈடுபாட்டின் காரணமாகப் பெற்றோரையும் விரோதித்து அவளைக் கலப்பு மணம் புரிந்து கொண்ட பின் இரண்டாண்டுக் காலம் பெற்றோருடன் தொடர்பே இல்லாதிருந்தார் சுந்தரம். இரண்டு வருஷங்களுக்குப் பின் வேணு பிறந்தான்.

புத்திர பாசத்தைத் துறந்திருந்த சுந்தரத்தின் தந்தை கணபதியாப் பிள்ளையும் அவர் மனைவி விசாலமும் பேரக் குழந்தையைப் பார்க்க கிராமத்திலிருந்து ரயிலேறிப் பட்டணத்துக்கு ஓடி வந்தார்கள்; கொஞ்சம் கொஞ்சமாய்ப் பகைமை விலகி சுந்தரத்திற்கும் அவன் பெற்றோருக்கும் உறவுப் பாலம் அமைத்தவன் வேணுதான்.

வேணுவுக்கு ஆறு வயதாகும்போது கணபதியாப் பிள்ளை பேரனைத் தான் அழைத்துச் செல்வதாகக் கூறினார். எவளோ ஒருத்திக்கு, ஏதோ ஒரு நாகரிகத்துக்குத் தாங்கள் ஆசாரமாக வளர்த்த பிள்ளையைப் பறி கொடுத்து விட்டோமே என்ற நிரந்தர ஏக்கத்திற்கு ஆளாகிப் போன கணபதியாப் பிள்ளை அதை ஈடுசெய்து கொள்வதைப்போல் பேரனை ஸ்வீகரித்துக்கொண்டார். வேணு தாத்தாவின் வீட்டிலேயே வளர்ந்து படித்துக் கொண்டிருந்தான். பெற்றோரின் வீடு என்பது அவனுக்கு எப்போதாகிலும் லீவிலே வந்து தங்கிச் செல்லும் உறவுக்காரர்களின் குடும்பம் போலாயிற்று.

சுந்தரத்தின் தந்தை கணபதியாப் பிள்ளை வீர சைவம்; தமிழ்ப் புலமையுடையவர். சிவ பக்தர். அவர் மனைவி விசாலம் சென்ற நூற்றாண்டுத் தமிழ்ப் பெண்மையின் கடைசிப் பிரதிநிதி. புருஷனின் முன்னே உட்கார்ந்து பேச மாட்டாள்.

வேணு எப்போதேனும் லீவுக்குத் தாய் தந்தையரிடம் வரும்போது அவர்களின் வாழ்க்கைமுறை, நடை உடை யாவும் ஓர் அந்நியத் தன்மை கொண்டு அவர்களே தனக்கு மிகவும் அந்நியமானவர்கள் போல உணர்ந்தான். சிறு வயதில் எல்லாம் அந்த அனுபவம், தாத்தா-பாட்டியிடம் போய்ச் சிரிக்க சிரிக்க விளக்கிச் சொல்லிப் பரிகசிக்கவே அவனுக்கு உதவிற்று. பின்னர் வயது ஏற ஏற அவன் தாத்தா-பாட்டியோடு, தாய் தந்தையரை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தான். அவன் மனத்தில் தாத்தாவும் பாட்டியும் லட்சியத் தம்பதியாகவும், நமது பண்பாட்டின் ஆதர்சமாகவும் ஏற்றம் பெற்றனர்.

என்னதான் பாசமிருந்த போதிலும் அவனுக்குத் தன் தாய் தந்தையர் மீது உயரிய மதிப்புத் தோன்றவில்லை.

வேணு ஹைஸ்கூல் படிப்பை முடித்துவிட்டுப் பக்கத்து டவுனாகிய சிதம்பரத்தில் கல்லூரியிலும் சேர்ந்தான். அவன் கல்வி எவ்வளவுதான் நவீன முற்றிருந்த போதிலும் அவனது வாழ்க்கை நவீன முறைகளுக்கு இலக்காகவில்லை.

இப்போது கல்லூரிப் படிப்பு முடிந்த பின் அவன் சென்னைக்கு வந்து சில மாதங்கள் தான் ஆயின…

அவனால் தாத்தாவையும் பாட்டியையும் பிரிந்து வரவே முடியவில்லை.

“நான் ஒண்ணும் உத்தியோகம் பார்க்க வேணாம்… படிச்சவங்க எல்லாம் நகரத்துக்கும் உத்தியோகத்துக்கும் போறதனாலேதான் நம்ப தேசம் இப்படி இருக்கு. நான் இங்கேயே இருந்து விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறேனே” என்று அவன் தாத்தாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்; அவன் யோசனை பாட்டிக்கும் கூடப் பிடித்திருந்தது.

ஆனால், வெகுநேரம் கண்களை மூடிக்கொண்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த தாத்தா பாட்டியிடம் பதில் சொன்னார்: “நீயும் என்ன அவனோட சேர்ந்து பேசறே? நம்ம பையனை விட்டுட்டு இருந்தப்போ உன் மனசு கேட்டுதா? அது மாதிரிதானே அவனைப் பெத்தவளுக்கும் இருக்கும். படிப்புன்னு ஒரு காரணத்தை வெச்சி இவ்வளவு காலம் இருந்தாச்சு. இப்ப அவன் பெத்தவங்களுக்குப் பிள்ளையா அங்கே போயி இருக்கறதுதான் நியாயம்.”

“நான் வரலேன்னு அங்கே யாரும் அழலே!” என்று மறித்துச் சொன்னான் வேணு.

“வேணு! நீ எங்களோட இருக்கறதிலே உன்னைவிட எங்களுக்கு சந்தோஷம்னு நான் சொல்லணுமா? இப்ப நீ கொஞ்ச நாள் போய் இரு. அப்புறம் போகப் போகப் பாப்பம்… இவ்வளவும் சொல்றேனே… நீ அந்தப் பக்கம் ரயிலேறிப் போனப்பறம் நானும் உன் பாட்டியும் எப்படி நாளைத் தள்ளப் போறமோ?… அதுக்கென்ன, நீ லீவிலே போவியே அந்த மாதிரிப் போயி கொஞ்ச நாள் அங்கே இரு… என்ன நான் சொல்றது?” என்று அவர் எவ்வளவோ சமாதானங்கள் கூறிய பின்னரே அவன் சென்னைக்கு வரச் சம்மதித்தான்.

முன்பெல்லாம் லீவு நாட்களில் வந்து முழுசாக இரண்டு மாதங்கள் தன் தாய் தந்தையோடு தங்கி இருந்தபோது ஏற்படாத சலிப்பு இப்போது இரண்டே வாரங்களில் ஏற்பட்டது! அவனுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை.

தன் தாயும் தந்தையும் டைனிங் டேபிளில் எதிர் எதிரே உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதும், காலையில் எட்டு மணி வரைக்கும் அவள் தூங்குவதும், தன் தந்தை ஓடி ஓடித் தாய்க்கு ஊழியம் செய்வதும் அவனுக்கு அருவருப்பாக இருந்தன.

அவன் மனதில், அறுபது வயதாகியும் அதிகாலையில் எழுந்து நீராடி மஞ்சளும் குங்குமமுமாய்த் திகழும் பாட்டியின் உருவமே அடிக்கடி எழுந்தது. அவள் தாத்தாவுக்கு இந்த வயதிலும் பணிவிடை புரியும் மகத்துவத்தை எண்ணி எண்ணி ஒவ்வொரு நிகழ்ச்சியாகக் கற்பனையில் கண்டு இவர்களின் நடைமுறையோடு அவன் பொருத்திப் பார்த்தான்.

‘இந்த அப்பா சரியான பெண்டாட்டிதாசன்!’ என்று தோன்றியது அவனுக்கு. இந்த அம்மா பாட்டுக்குச் சினிமாவுக்குப் போவதும் லேடீஸ் கிளப்புக்குப் போவதும் அதைப் பற்றி அவர் ஒன்றுமே கேட்காமலிருப்பதும், அதே மாதிரி அவரைப் பற்றி இவளும் அக்கறையில்லாமலிருப்பதும் – ஐயே! என்ன உறவு? என்ன வாழ்க்கை? என்று மனம் சலித்தது.

“சரி! நமக்கென்ன போயிற்று. தாத்தாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுக் கொஞ்ச நாள் இருந்து விட்டுக் கிராமத்தோடு போய்விட வேண்டியதுதான்” என்றிருந்த வேணுவுக்கு மேலும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் அருவருப்பையும் மூட்டத்தக்க அந்தச் சம்பவம் சென்ற வாரம் நடந்தது.

இரவு எட்டு மணி இருக்கும். டெலிபோன் மணி அடித்தது. சுந்தரம் அப்போது மாடியில் இருந்தார். வேணு ரிஸீவரை எடுத்தான்.

“ஹலோ!” – அவன் போன் நம்பரையும் சொன்னான்.

“நான்தான் வத்ஸலா பேசறேன்… காலேஜிலேயே மீட் பண்ணனும்னு வந்தேன்… நீங்க அதுக்குள்ளே போயிட்டீங்க… ‘ஸவுண்ட் ஆப் ம்யூஸிக்’ இன்னிக்கித்தான் கடைசியாம்… நைட் போலாமா?… என்ன ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க!”

வேணுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஒரு ‘ராங் நெம்பர் கால்’ என்று அவன் ஆரம்பத்தில் கொண்ட சந்தேகம், காலேஜில் மீட் பண்ண வந்ததாகக் கூறியதில் அடிபட்டுப் போயிற்று! எதுவும் செய்யத் தோன்றாமல் ரிஸீவரை டெலிபோன் மீது வைத்து விட்டு, அந்த அறையை விட்டே ஓடிப் போய்விட்டான் வேணு. பக்கத்தறைத் தனிமையில் போய் உட்கார்ந்து கொண்ட வேணுவின் மனம் அலை பாய்ந்தது.

‘அப்பாவைத் தவிர வயது வந்த ஓர் ஆணின் குரல் வேறு யாருடையதாகவும் இருக்காது’ என்ற தைரியத்தில் வழக்கமாகப் பேசுகின்ற ஒருத்தியாகத்தான் அவள் – அந்த வத்ஸலா – இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக நம்பினான்.

சற்று நேரத்தில் மீண்டும் மணி அடித்தது. அடித்துக் கொண்டே இருந்தது! வேணு இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.

மாடியிலிருந்து இறங்கி வந்த சுந்தரம் தானே போய் ரிஸீவரை எடுத்தார்.

“ஹலோ?”- டெலிபோன் நம்பரைச் சொன்னார்.

வேணு மௌ¢ள எழுந்து சென்று டெலிபோன் இருக்கின்ற ஹாலுக்கும் அவன் இருந்த அறைக்கும் இடையேயுள்ள பலகையில் காதை வைத்துக்கொண்டு உரையாடலைக் கவனித்தான்; ஆம்; ஒட்டுக் கேட்டான். அவன் தந்தை ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“இல்லையே, நான் மாடியில் இருந்தேன்…ம்…த்சொ…”

“……..”

“இட் இஸ் ஆல்ரைட்…”

“…….”

“ஒரு வேளை என் மூத்த மகனாக இருக்கலாம்… ஆமா! அவன் ஊர்லேயே இருந்தான்… இப்பதான்…. ஆமாம்…”

“…….”

“வேறு யாரும் ‘அடல்ட்’ இல்லையே!”

“…….”

“சரி… நான் சமாளித்துக் கொள்கிறேன்… ஓ.கே!….”

“…….”

“டோண்ட் ஒரி!”

“…….”

“ஓ… வாட் ஆர் யூ டாக்கிங்?…”

“…….”

“பை….”

சம்பாஷணை முடிவடைகின்ற தருவாயில் வேணு அறையிலிருந்து நழுவி வெளியேறி விட்டான்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இன்றுவரை அவன் அவர் முகத்தில் விழிக்கவில்லை. ஒரே வீட்டில் இருந்தும் மிக சாமர்த்தியமாக அவர் கண்ணில் படாமல் அவன் தப்பித்துக் கொண்டிருந்தான்.
சில நாட்களுக்கு முன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவன் மாடியில் உள்ள தன் தந்தையின் தனியறைக்குச் சென்றான். தனது ஐயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அவனுக்கு மேலும் சில துப்புகள் தேவைப்பட்டன.

மாற்றுச் சாவிகள் போட்டு அவரது மேஜை, அலமாரி முதலியவற்றைத் திறந்து துருவினான். அவ்விதம் ஒரு திருடனைப்போல் நடந்து கொள்வதில் அவனுக்கு அவமானமேதும் ஏற்படவில்லை. அதனினும் பெருத்த அவமானத்துக்கு அவனை ஆளாக்கத்தக்க சில துப்புகள் கிடைத்ததால் அந்தத் தனது காரியம் சரியே என்று அவன் நினைத்தான்.

“நான் ஏன் பயப்பட வேண்டும்? தப்பு செய்கிற அப்பாவைக் கண்டு நான் ஏன் ஒளிய வேண்டும்… இதைப்பற்றி அவர் புத்தியில் உறைக்கிற மாதிரி நான் எடுத்துக் கூறி அவரைத் திருத்த வேண்டும்… இது என் கடமை… எப்படி எங்கே அவரிடம் இதைப் பற்றிப் பேசுவது?… வீட்டில் பேசினால் அம்மாவுக்கு விஷயம் தெரிந்து போகுமே!… அவரை வெளியில் எங்காவது சந்தித்துப் பேச வேண்டும்…. என் பேச்சை அவர் ஏற்றுக்கொள்ளாவிட்டால்?… அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். முதலில் தைரியமாக இது விஷயமாய் அவரிடம் உடைத்துப் பேசிவிட வேண்டும்…” என்று இரவு பகலாக இந்த விவகாரம் குறித்து நெஞ்சு பொருமி, நினைவு குழம்பி இறுதியாக நேற்று அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

“எப்படியும் நாளைக்கு அவரிடம் நேருக்கு நேர் உடைத்துப் பேசிவிடுவது. இதில் நான் பயப்பட என்ன இருக்கிறது? நான் என்ன குழந்தையா? ஐ ஆம் அன் அடல்ட்!”

***

கடற்கரையை ஒட்டிப் புதிகாகப் போடப்பட்டுள்ள உட்புறச் சாலையில் அந்த மோரீஸ் மைனர் காரை நிறுத்தினார் சுந்தரம். அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வேணு முதலில் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான். அவன் பார்வை தூரத்துக் கடலை வெறித்தது… காற்றில் அலைபாய்ந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சற்றுத் தள்ளி மணலில் போய் நின்று கொண்டான் அவன். அவன் மனதில் கடந்த பத்து நிமிஷமாய் – த்ன் தந்தையைக் கல்லூரியில் சந்தித்து இங்கு வந்து சேர்ந்தது வரை – எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற குழப்பம்தான் குடிகொண்டிருந்தது. என்னதான் தப்பு செய்திருந்தாலும் ஒரு தந்தையிடம் மகன் பேசக்கூடாத முறையில், தான் ஆத்திரத்தில் அறிவை இழந்துவிடக் கூடாதே என்ற அச்சம் வேறு எழுந்தது.

காரிலிருந்து இறங்கிய சுந்தரம் தனது கோட்டைக் கழட்டி காருக்குள் மடித்து ஸீட்டின் மேல் போட்டுக் கண்ணாடிகளை உயர்த்திக் காரின் கதவுகளைப் பூட்டி விட்டு வந்தார்.

அவன் பக்கத்தில் வந்து நின்று கைக்கடிகாரத்தைப் பார்த்து “மணி ஐந்துதான் ஆகிறது” என்று அவன் காதில் படுகிற மாதிரி தானே சொல்லிக் கொண்டார் சுந்தரம்.

“அதுதான் கூட்டத்தைக் காணோம்” என்று வலிந்த புன்னகையுடன் அவனும் கூறினான்.

கடற்கரை மணலில் இன்னும் நிழல் இறங்கவில்லை.

அவர்கள் இருவரும் திடீரென மௌனமாகிச் சற்று மணலில் கடலை நோக்கி நடந்தனர். அந்த இருவரையும் பார்க்கும் யாருக்கும் அவர்கள் தந்தையும் மகனும் என்று தோன்றாது. அண்ணனும் தம்பியும் போலவோ, ஆசிரியரும் மாணவனும் போலவோதான் அவர்கள் இருந்தனர். முகச் சாயலில் இருவருக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. தந்தையின் அளவே உயரமிருந்தும் அவரைப் போல் சதைப் பற்றில்லாத அவனது உருவம் அவரை விடவும் நெடிதாய்த் தோன்றியது.

அவன் தலைகுனிந்து நடக்கையில் மணலில் அழுந்திப் புதையும் தனது பாதங்களையே பார்த்தான்.

மனசில் இருந்த கனம் விநாடி தோறும் மிகுந்தது; நெஞ்சில் குமுறுகிற ஆத்திரம் திடீரென்று தொண்டைக்கு வந்து அடைக்கிறது. முகம் சிவந்து சிவந்து குழம்புகிறது. உதட்டை இறுக இறுகக் கடித்துக் கொள்கிறான்…

அவன் தலைநிமிர்ந்து தூரத்துக் கடல் அலையை வெறித்தபோது அவனது கண் இமைகளின் இரண்டு கடைக்கோடியிலும் கலங்கிய கண்ணீர் வீசியடித்த காற்றால் சில்லென இமைக் கடையில் பரந்து படர்கிறது…

அவர் அவனை மிகுந்த ஆதரவோடு பார்த்தார். ஒருமுறை செருமினார். அவன் அவரைத் திரும்பிப் பார்த்தபோது அவனைச் சாந்தப்படுத்தும் தோரணையில் அவர் புன்முறுவல் செய்தார். அவனது உதடுகள் துடித்தன.

“இங்கே உட்காரலாமா?” என்றார் அவர்.

அவன் பதில் சொல்லாமல் உட்கார்ந்துகொண்டான்.

– எப்படி ஆரம்பிப்பது?

அவன் அவர் முகத்தை வெறித்துப் பார்ப்பதும், பின்னந்தலை குனிந்து யோசிப்பதும், மணலில் கிறுக்குவதுமாகக் கொஞ்சம் நேரத்தைக் கழித்தான்…

அவன் எது குறித்துத் தன்னிடம் தனிமையில் பேச வந்திருக்கிறான் என்று சுந்தரம் அறிந்தே வைத்திருந்தார். அந்த ‘டெலிபோன் கால்’ சம்பவத்துக்குப் பிறகு இந்த ஒரு வாரமாய்த் தான் அவனைப் பார்க்கவேயில்லை என்ற பிரக்ஞை அவருக்கும் இருந்தது. எனினும் அவன் அதனால் பாதிக்கப்பட்டிருந்தும், வயது வந்த இளைஞன் என்ற காரணத்தால் நாகரிகமாக அது விஷயமாய் ஒரு சந்திப்பைத் தவிர்த்து வருகிறான் என்றும் அவர் கருதி இருந்தார்.

ஆனால், இப்போது அது சம்பந்தமாய் அவன் மிகவும் ஆழமாகப் பாதிக்கப்பட்டு அது குறித்துத் தன்னிடம் பேசவே தயாராகி வந்திருக்கின்ற நிலைமை அவருக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றாலும், ஒரு கோழை போல் அந்தச் சந்திப்பைத் தவிர்க்க முயல்வது சரியல்ல என்பதனாலேயே அவனிடம் அவர் இப்போது எதிர்ப்பட்டு நிற்கிறார்.

எனினும் அவர் தானாகவே எதுவும் பேச விரும்பவில்லை.

அவன் திடீரென்று தனக்குத்தானே பேசிக்கொள்கிற மாதிரி முனகினான்: “ஐ ஆம் ஸாரி! – இது ரொம்பவும் வெட்கப்படத்தக்க அவக்கேடான விஷயம்” என்று ஆங்கிலத்தில் கூறினான். அதைத் தொடர்ந்து அவன் அவரிடம் கேட்டான்: “நான் எதைக் குறித்துச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா?”

அவர் கொஞ்சமும் பதற்றமில்லாமல் ‘புரிகிறது’ என்பதாகத் தலையை ஆட்டினார்.

அவரது பதற்றமின்மையைக் கண்டபோதுதான் அவனுக்கு ஓர் ஆவேசமே வந்துவிட்டது.

“நீங்கள் இப்படிப்பட்ட மனிதராக இருப்பீர்கள் என்று நான் கற்பனைகூடச் செய்ததில்லை…”- அவன் உணர்ச்சி மிகுதியால் முறுக்கேறிய தனது கைகளைப் பிசைந்து கொண்டான். காற்றில் தலை கலைந்து பரக்கக் குமுறுகின்ற உள்ளத்து உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு மார்பு பதை பதைக்க, சீறிச் சீறி மூச்சு விட்டான்.

“வேணு! டோண்ட் பி ஸில்லி… நீ என்ன சின்னக் குழந்தையா?… பொறுமையா யோசி” என்று அவனது தோளில் தட்டிக் கொடுத்தார் சுந்தரம்.

“எஸ்…எஸ்… ஐ ஆம் அன் அடல்ட்” என்று பல்லைக் கடித்தவாறே சொன்னான். பிறகு தொடர்ந்து ஆங்கிலத்திலேயே கூறினான்.

– அந்த அந்நிய மொழியில்தான் ஒரு தகப்பனும் மகனும் இதுபோன்ற விஷயங்களை விவாதிக்க முடியும் என்று எண்ணினான் போலும்!

“உங்களுக்கு அந்த டெலிபோன் சம்பவம் நினைவிருக்கிறதா? அன்றிலிருந்து உங்களை நான் கவனித்தே வருகிறேன்… என்னுடைய தந்தை இப்படி ஒரு ஸ்திரீ லோலனாக இருப்பார் என்று நான் நினைத்ததே இல்லை. இது நம் குடும்பத்தைப் பற்றிய பிரச்னை அல்லவா?… உங்கள் வயதுக்கும் தரத்துக்கும் உகந்த செயலா இது?… இந்த அம்மா இருக்கே அது ஒரு அசடு! நீங்கள் அவங்களை வாழ்க்கை பூராவும் இப்படியே வஞ்சித்து வந்திருக்கிறீர்கள்!…” அவன் பேசும்போது குறுக்கிடாமல் சிகரெட்டைப் பற்றவைத்துப் புகைத்துக் கொண்டிருந்த அவர், திடீரென இப்போது இடைமறித்துச் சொன்னார்:

“ப்ளீஸ்! உன் அம்மாவை இது சம்பந்தமாய் இழுக்காதே! உனது அபிப்பிராயங்கள் – அது எவ்வளவு வரைமுறையில்லாமலிருந்தாலும் நீ சொல்லு – நான் கேட்கிறேன்… உன் அம்மாவை இதில் கொண்டு வராதே! உன்னைவிட எனக்கு அவளைத் தெரியும். உனக்கு என்னைத் தெரிந்திருக்கிறதே, அதற்கு மேலாக அவளுக்கு என்னைத் தெரியும் – நாங்கள் இருபத்தைந்து வருஷங்கள் தாம்பத்தியம் நடத்தியவர்கள்; எங்கள் இறுதிக்காலம் வரை ஒன்றாக வாழ்க்கை நடத்துவோம்… நீ மேலே சொல்லு!”

“நீங்கள் அம்மாவை வஞ்சித்து ஏமாற்றி ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் என்னை ஏமாற்ற முடியாது…”

உன்னை ஏமாற்ற வேண்டிய அவசியமே எனக்கு இல்லை என்பதுபோல் அவர் சிரித்துக் கொண்டார்.

“அந்த போன் நிகழ்ச்சியை மட்டும் வைத்து உங்களைப் பற்றி இந்த முடிவுக்கு நான் வந்துவிடவில்லை… இரண்டாவது முறை நீங்கள் போனில் பேசினீர்களே அந்தப் பேச்சை நான் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்… அதன் பிறகு இரவு ஒன்பது மணிக்கு மேல் காரை எடுத்துக்கொண்டு ஓடினீர்களே… உங்கள் இருவரையும் நான் தியேட்டரிலும் பார்த்தேன். இதனால் மட்டும் ஒருவரைச் சந்தேகித்துவிட முடியுமா?… அதனால்தான் உங்கள் அறையில் புகுந்து உங்கள் மேஜை டிராயர், அலமாரி யாவற்றையும் நான் சோதித்துப் பார்த்தேன்… உங்களின் காதல் கடிதங்கள் – ஒரு பைலே இருக்கிறதே- அதில் ஒன்று இதோ!” என்று அவன் ஆத்திரத்துடன் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவர் மேல் விட்டெறிந்தான்…

பிறகு அவன் வேறு புறம் திரும்பிக்கொண்டு கண் கலங்கினான். தொண்டையில் அழுகை அடைத்தது.

கடற்கரைச் சாலையில் நீல விளக்குகள் எரிய ஆரம்பித்தன. மணல் வெளியில் ஜனக் கும்பல் குழுமி இருந்தது… ஒரு சிறு கும்பல் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தக் கும்பல் அவர்களைக் கடந்து செல்லும் வரை அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தனர். பின்னர் வேணுதான் பேச்சை ஆரம்பித்தான்:

“நீங்கள் என்னைப் பெற்ற தகப்பன். உங்களுக்கு நான் இதையெல்லாம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டதை எண்ணினால் எனக்கு வருத்தமாகத் தானிருக்கிறது… இனிமேலாவது நீங்கள் உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்… அதற்காகத்தான் சொல்கிறேன்…”

அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல் அவன் மௌனமானான். சுந்தரம் மௌனமாகப் பெருமூச்செறிந்தவாறு வானத்தைப் பார்த்தவாறிருந்தார்… இவனிடம் இது குறித்துத் தான் என்ன பேசுவது என்பதைவிட, என்ன பேசக்கூடாது என்பதிலேயே அவர் கவனமாக இருந்தார்.

அவன் திடீரென அவரைப் பார்த்துக் கேட்டான்:

“தாத்தா சொல்லியிருக்கிறார் – நீங்களும் அம்மாவும் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டீர்கள் என்று… இந்தக் காதல் விவகாரங்கள் எல்லாம் கடைசியில் இப்படித்தான் ஆகுமோ?” என்று சிறிது குத்தலாகவும் கேலியாகவும் கேட்டு அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

சுந்தரம் சிகரெட்டைப் புகைத்தவாறு சற்றுக் குனிந்த தலையுடன் யோசித்தவாறிருந்தார். ஒரு பெருமூச்சுடன் முகம் நிமிர்ந்து வேணுவைப் பார்த்தார். எதைப்பற்றியோ அவனிடம் விளக்கிப் பேச நினைத்து, ‘வயது வேறு; அனுபவம் வேறு; அதிலிருந்து பெறுகின்ற முதிர்ச்சி வேறு!’ என்று அவருக்குத் தோன்றியதால், அவர் அவனுக்கு விளக்க நினைத்த விஷயத்தை விடுத்து வேறொன்றைப் பற்றிப் பேசினார்.

“சரி, இதுபற்றியெல்லாம் உன்னைப் பாதிக்கின்ற விஷயம் என்ன? அதைச் சொல்லு.”

அவர் இப்படிக் கேட்டதும் அவனுக்கு ஒரு பக்கம் கோபமும் இன்னொரு பக்கம் இந்த மனிதர் என்னதானாகி விட்டார் என்ற பரிதாபமும் ஏற்பட ஒரு சிறு புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தான்.

“அப்பா!… நீங்கள் ஒரு புரபசர்; கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர். நான்கு குழந்தைகளின் தந்தை. இத்தனை வயதுக்குமேல் நீங்கள் ஒரு விடலைபோல் திரிவதனால் உங்கள் குடும்ப அந்தஸ்து, சமூக அந்தஸ்து இவை யாவும் சீர்குலைந்து விடுகிறதே – என்று உங்களின் வயது வந்த மகன் கவலைப்படுவது தப்பு என்கிறீர்களா? அதில் அவனுக்குச் சம்பந்தமில்லை என்கிறீர்களா?”

அவன் பேசும்போது அவர் மகனின் முகத்தை நேருக்கு நேர் கூர்ந்து பார்த்தார். அவன் முகத்தில் ஒரு பக்கம் வெளிச்சமும் மறுபக்கம் இருளும் படிந்திருந்த போதிலும் தன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவனுடைய பார்வை நாலு புறமும் அலைவதை அவரால் கவனிக்க முடிந்தது.

“வேணு… நீ வயது வந்தவன் என்று சொல்லுகிறாய். அது உண்மையும் கூட. ஆனால், வயது வந்த ஒரு மனிதனுக்குரிய வளர்ச்சியை உன்னிடம் காணோமே… முதலில் ஒரு தகப்பன் என்ற முறையில் என்னுடைய ‘பர்ஸனல்’ விவகாரங்களை – அந்தரங்க விவகாரங்களை – உன்னிடம் பரிமாறிக் கொள்வது அவசியம் என்று எனக்குத் தோன்றவில்லை. நீ எனது சமூக அந்தஸ்து, குடும்ப அந்தஸ்து முதலியவை பற்றிக் கவலைப்படுவதாகச் சொல்கிறாய். ரொம்ப நல்லது. அந்த எனது தகுதிகளுக்கு ஒரு குந்தகமும் வராது. அதனைக் காப்பாற்றிக் கொள்வதில் உன்னைவிட எனக்கு அக்கறை உண்டு. அவற்றுக்கு இழுக்கு வரும் பட்சத்தில் அதனை எதிர்த்துச் சமாளிக்கும் வலிமை எனக்கு உண்டு என்பதை உனக்கு நான் எப்படி நிரூபிப்பது? ஏன் நிரூபிக்க வேண்டும்?…”

– அவர் குரல் தீர்மானமானதாகவும் கனமானதாகவும் இருந்தது. அவர் கொஞ்சம்கூடப் பதட்டமோ குற்ற உணர்ச்சியின் குறுகுறுப்போ இல்லாமல் தன்னிடம் பேசுகிறதைக் கேட்கையில் வேணுவுக்குத் தான் செய்வதுதான் தப்போ என்ற சிறு பயம் நெஞ்சுள் துடித்தது. இருந்தாலும் ‘இத்தனை வயதுக்குமேல் இவ்வளவு கேவலமாக ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தும் என்ன தைரியத்துடன் தன்னிடம் வாய்ச் சாதுரியம் காட்டுகிறார் இவர்’ என்ற நினைப்பு மேலோங்கி வர, அவன் கோபமுற்றான்.

“எனக்கு ஏன் நிரூபிக்க வேண்டும் என்றா கேட்கிறீர்கள்? நான் உங்கள் மனைவியின் மகன். நீங்கள் அவளுக்குத் துரோகம் செய்கிறீர்கள்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆங்கிலத்தில் கூறினான்.

“ம்… அவள் என்னைப்பற்றி உன்னிடம் புகார் செய்தாளா, என்ன?” என்று அவர் அமைதியாகக் கேட்டார்.

“இல்லை…”

“பின் எதற்கு நீ அத்துமீறி எங்கள் தாம்பத்திய விவகாரத்தில் குறுக்கிடுகிறாய்?…”

“ஐ ஆம் யுவர் ஸன்!… நான் உங்கள் மகன் – இது என் கடமை.”

“நோ ஸன்… இது உன் கடமை இல்லை! இதில் தலையிடும் அதிகாரம் ஒரு மகனுக்கு இல்லை மகனே!”

வேணு உதட்டைக் கடித்துக் கொண்டான். அவனுக்கு அழுகை வந்தது… அவரை வாய்க்கு வந்தபடி வைது தீர்த்து விட்டு இனிமேல் அவர் முகத்திலேயே விழிக்கக் கூடாத அளவுக்கு உறவை முறித்துக் கொண்டு ஓடி விடலாம் என்று தோன்றியது.

அவனுடைய தவிப்பையும் மனப் புழுக்கத்தையும் கண்டு அவருக்கு வருத்தமாக இருந்தது. தனக்குச் சம்பந்தமில்லாத, தன்னால் தாங்கமுடியாத விஷயங்களைப் பொருட்படுத்தாமல் ஒதுக்க முடியாத பலவீனத்தால் அந்த இளம் உள்ளம் இப்படி வதைபடுகிறதே என்ற கனிவுடன் அவன் கையைப் பற்றினார் அவர்.

“வேணு…”

சிறு குழந்தை மாதிரி பிணங்கிக்கொண்டு அவன் அவர் கையை உதறினான். இப்போது அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. அழுகை அடைக்கும் குரலில் அவன் நெஞ்சு இளகக் கேட்டான்…
“அப்பா… எனக்கு இந்த விஷயம் ரொம்ப அவமானமா இருக்கே… நீங்க… என்னத்துக்கு… இப்படியெல்லாம் நடந்து கொள்ளணும்…”

அவர் தன்னுள் சிரித்துக் கொண்டார்.

“மை பாய், வயது வந்த ஆண் பிள்ளை என்று மீசை முறுக்கற நீ இப்படி கேட்கலாமா? உன்னோட நல்ல உணர்ச்சி எனக்குப் புரியுது. என்னைப் பத்தித் தப்பாத் தோணினால், அதை மனசிலேயே அடக்கி வை… காலப் போக்கிலே எது சரி, எது தப்பு – எந்த அளவுக்கு எது தப்பு எது சரின்னு உனக்க்குப் போகப் போகப் புரியும்… நீ செய்த காரியங்களை எல்லாம் உன்மேல் பாசமுள்ள ஒரு தகப்பன்கிற முறையிலே நான் மன்னிக்கறேன். யோசிச்சுப் பார்… தகப்பனின் தனிப்பட்ட விஷயங்களைத் தெரிஞ்சுக்கறதுக்காக ஒரு மகனே அவனை உளவு பாக்கறதும், கள்ளத்தனமா அவனது அந்தரங்கங்களில் பிரவேசிக்கிறதும் ரொம்பவும் அவமானகரமானது இல்லையா?… நான் உன்னுடைய ஸ்தானத்தில் இருந்தா இந்தச் செயலுக்காக வாழ்க்கை முழுவதும் வெட்கப்படுவேன்…”

அவர் அவனை மன்னித்து விட்டதாகவும், அவன் செய்த குற்றத்துக்கு அவனை வெட்கப்படும்படியாகவும் கூறுவதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எனினும், தொடர்ந்து அவரிடம் தான் பேசி அவரைத் திருத்துவதோ, அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதோ தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்று அவன் உணர்ந்தான்.

***

“அம்மா!”

அவர்கள் பெற்ற பிள்ளைகளிலேயே ரமணியம்மாளை அம்மாவென்றும், சுந்தரத்தை அப்பாவென்றும் அழைப்பவன் வேணு ஒருவன் தான். மற்றவர்கள் அனைவரும் ‘மம்மி’ ‘டாடி’ தான்.
மாடி வராந்தாவில் வந்து நின்ற வேணு “அம்மா”வென்று அழைத்தபோது, ரமணி அம்மாள் சாவகாசமாக ஈஸிசேரில் சாய்ந்து, ‘ஜீலியன் ஹக்ஸ்லி’ எழுதின ஒரு புத்தகத்தைப் புரட்டி சுவாரஸ்யமான ஒரு பாராவைப் படித்துக் கொண்டிருந்தாள்.

வேணு அந்தப் புத்தகத்தின் அட்டையைக் கூர்ந்து பார்த்து வாய்க்குள் படித்துக் கொண்டான்.

‘நாலெட்ஜ், மொராலிட்டி, அன்ட் டெஸ்டினி!’

“அம்மா! நீ படிக்கறதுக்கு இடைஞ்சலா வந்துட்டேனா?”

“சீ சீ! இதென்ன ஃபார்மாலிட்டி? வா… இப்படி உக்காரு…” என்று கனிவுடன் அழைத்தாள் ரமணி அம்மாள்.

வேணு வராந்தாவில் கிடந்த ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ரமணியம்மாள் அவனை வாஞ்சையோடும், தனக்கு இவ்வளவு பெரிய பிள்ளை இருப்பதைத் திடீரென உணர்ந்த பெருமிதத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கை விரல்களின் நகத்தை பிய்த்தவாறு குனிந்த தலையோடு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்.

இத்தனை நாட்களுக்குப் பிறகு அவன் தன் மனத்தில் உறுத்திக்கொண்டிருக்கும் ஏதோ ஓர் அந்தரங்கமான அவனது பிரச்சினை குறித்துத் தன்னோடு விவாதிக்கவோ யோசனை கேட்கவோ வந்திருக்கிறான் என்பதாக எண்ணி ஒருவகைப் பூரிப்புக்கு ஆளாகி விட்டிருந்தாள் அவள்.

எனினும் அவன் பேசத் தயங்குவதைக் கண்டு அவளே ஆரம்பித்தாள்.

“என்ன வேணு… இங்கே உனக்கு லைஃப் ரொம்ப போர் அடிக்கிறதோ?”

“ம்…” என்று தலை நிமிர்ந்த வேணு “போர் அடிக்கறதுங்கறது இல்லே… எனக்கு இந்த லைஃப் பிடிக்கலே… நான் என்ன இருந்தாலும் ஒரு மொபஸல் டைப்தானே? நீங்கள்ளாம் ரொம்ப நாகரிகமா – அல்ட்ரா நாகரிகமா – வாழற வாழ்க்கை எனக்குச் சரிப்பட்டு வரலே…” என்று சொல்லிவிட்டு மீண்டும் தலை குனிந்து உள்ளங்கையில் விரலால் சித்திரம் வரைய ஆரம்பித்தான்.

சற்று நேர மௌனத்துக்குப் பின் ரமணியம்மாள் சொன்னாள்:

“உன்னுடைய குழப்பம் என்னன்னு எனக்குச் சரியா புரிஞ்சுக்க முடியலே… நாங்க இத்தனை வருஷமா எப்படி வாழ்ந்து வரோமோ அப்பிடித்தான் இருக்கோம்னு நான் நினைக்கிறேன். புதுசா பொருத்தமில்லாத ‘அல்ட்ரா’ நாகரிகம் ஏதும் வந்துட்டதா எனக்குத் தோணலே… உன் மனசிலே இருக்கிறதெ வெளிப்படையா சொன்னாத்தானே எனக்குப் புரியும்…” என்றூ அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே இவன் மனசில் என்னத்தை வைத்துக் கொண்டு இவ்விதம் குழம்புகிறான் என்றறிய அவளும் பிரயாசைப்பட்டாள்.

“எனக்கு இங்கே ஏண்டா வந்தோம்னு இருக்கு… யாரோ அந்நியர் வீட்டிலே இருக்கிற மாதிரி இருக்கு. இங்கேயுள்ள பழக்க வழக்கங்களும் எனக்கு ரொம்ப அந்நியமா இருக்கு… உங்க உறவுகளும் பாசமும் எல்லாம் வெளிப்பூச்சா இருக்கு. நீங்க ரொம்பவும் பொய்யானதொரு வாழ்க்கை வாழறீங்க. நான் திரும்பவும் தாத்தா வீட்டுக்குப் போயிடலாம்னு நெனைக்கிறேன்…” அவன் நிறுத்தி நிறுத்தித் தௌ¤வாகக் கூறியவற்றை அவளும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பிறகு இருவருமே சற்று அமைதியாக இருந்தனர். அப்போது மத்தியான நேரம். மணி பதினொன்றாகி இருந்ததால், வீடு அமைதியாக இருந்தது. கீழே சமையல் அறையில் சமையற்காரப் பாட்டிகூடத் தூங்கிக் கொண்டிருந்தாள். வீடும் வீதியும் ஓவென்று வெறிச்சோடிக் கிடந்தது.

“வேணு… திடீர்னு உனக்கு இப்போ இது ஒரு பிரச்னையாகிப் போன காரணம் என்ன?… தாத்தா வீட்டு வாழ்க்கைக்கும், நம்ப வீட்டுச் சூழ்நிலைக்கும் நெறைய வித்தியாசம் இருக்கும்னு எனக்கும் புரியுது. ஆனா உன் வயசுக்கு நியாயமா அந்த வாழ்க்கைதானே ‘போர’டிக்கணும்! – சரி – ருசிகள்ங்கறதே பழக்கத்தினால் படிகிற பயிற்சிதானே… ஆனாலும் இதுதானே உன் வீடு. உனக்குப் பிடிச்சமாதிரி நீ இங்கே வாழறதெ யாராவது தடுக்கிறாங்களா என்ன? எது இருந்தாலும் இல்லேன்னாலும் இன்னொருத்தர் சுதந்திரத்திலே மற்றவர் தலையிடற, அதிகாரம் பண்ற, ஆட்டிப் படைக்கிற போக்கு மட்டும் நம்ப வீட்டிலே யாருக்கும் கெடையாது… உனக்கு ஞாபகம் இருக்குதோ, என்னமோ?… உங்க பாட்டியும் தாத்தாவும் இங்கே வந்துட்டுப் பொறப்பட்டப்போ – அவங்களோட போகணும்னு நீ அடம் பிடிச்சே!… அவங்களுக்கும் உன்னைக் கூட்டிக்கிட்டுப் போயி வெச்சிக்கணும்னு ஆசை!… உன் ஆசைக்காகவே தான் மனசொப்பி அனுப்பினேன்… அந்த அளவுக்கு இந்த வீட்டிலே குழந்தைகளின் சுதந்திரத்துக்குக் கூட அவ்வளவு மதிப்பு என்னைக்கும் உண்டு… உனக்கும் இங்கே உன் விருப்பப்படி இருக்கறதுலே என்ன தடை… ம்… சொல்லு வேணு!” என்று முகத்தைப் பார்த்தபோது அவன் மௌனமாக அவளை வெறித்துப் பார்த்தான்.

“அதனாலே – உனக்கு ஊருக்கே போகணுங்கறதுக்கு வேற ஏதோ காரணம் இருக்கணும்னு எனக்குத் தோணுது… என்ன சரிதானே?” என்று லேசான சிரிப்புடன் கேட்டாள் ரமணி அம்மாள்.

“ஆமாம்…வேற காரணம் இருக்கு…” என்று கூறித் தன் மனத்துள் கிடந்து அரிக்கும் தந்தையைப் பற்றிய உண்மைகளை அவளிடம் கூறுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் அவன் தவித்தான்.
“வேணு!… அதுவுமில்லாமல் நீ என்னென்னவோ சொல்றியே; ஏதோ வெளிப்பூச்சுன்னும் பொய்யின்னும் இந்த வாழ்க்கையைப் பத்தி ஏதோ சொன்னே… என்ன விஷயம்? நீ எப்படி எங்களைப் பத்தி அப்படி அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வரலாம்… நீ எதை வெளிப்பூச்சுன்னு நெனைக்கிறே? எல்லா வாழ்க்கையிலும் ஏதோ ஒரு அளவுக்கு ஏதோ ஒருவிதமான வெளிப்பூச்சு இருக்கத்தான் செய்யும் வேணு. நீ எதைப்பத்தி சொல்றே? உன் மனசு ரொம்ப ஆழமாக் காயப்பட்டுத்தான் இப்படி ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வருதுன்னு எனக்குத் தோணுது… என்ன நடந்தது சொல்லேன்…”

இப்போது அவன் சட்டைப் பையிலிருந்து கர்சீப்பை எடுத்து மூக்கையும் கண்களையும் அழுந்தத் துடைத்துக் கொண்டான். முகமே சிவந்து குழம்பியிருந்தது.

“அம்மா… எனக்கு அப்பாவின் நடத்தை புடிக்கலே…” என்று வானத்தை வெறித்தவாறு முகம் திரும்பிக் கூறினான். அவளிடமிருந்து பதிலில்லை. அந்தத் தைரியத்தில் அவள் முகத்தைத் திரும்பிப் பாராமல் தொடர்ந்து சொன்னான்:

“உனக்கும் அப்பாவுக்கும் மனஸ்தாபம் வருமே, உங்கள் குடும்பத்தின் அமைதி என்னாலே கெட்டுப் போகுமேன்னு நெனச்சி நெனச்சித்தான் நான் இத்தனை நாளா குழம்பிக்கிட்டே இருந்தேன். கெட்டுப்போகிற ஒரு குடும்பத்தின், அமைதி மட்டும் கெடாமலிருப்பது எத்தனை நாளைக்கு முடியும்?… அவர் உனக்குத் துரோகம் பண்றாரு அம்மா. இது எனக்குத் தெரிஞ்சும் நான் இதை உன்னிடம் மறைச்சு வெச்சா அந்தத் துரோகத்துக்கு நானும் உடந்தைன்னு அர்த்தம்… அதனால் தான் இந்த அவமானகரமான குடும்பத்திலே இருக்க எனக்குப் புடிக்கலே… அவரை நானா திருத்த முடியும்?… முடிஞ்சா நீ திருத்து… இது உங்க விஷயம்… நான் போறேன்” என்று படபடவென்று கூறிவிட்டு அதற்குமேல் அந்தத் தாயின் முகத்தைப் பார்க்கத் தைரியமில்லாமல் அவன் அங்கிருந்து ஓடிவிடத் துடித்தான்.

அவன் மனசில், அவள் அழுவாளோ, அழுதுகொண்டே அவரைப்பற்றிக் குத்திக் குடைந்து எதையாவது கேட்பாளோ, ஆத்திரப்பட்டு அந்தத் துரோகமிழைத்த கணவனைச் சபிப்பாளோ, தான் பல காலம் சந்தேகப்பட்டு மனசில் வைத்திருந்த விஷயம் மகன் வரைக்கும் தெரிந்து விட்டதே என்று அவமானத்தால் சாம்பி விடுவாளே என்று அஞ்சியே ஒரு குற்றவாளி மாதிரி அவன் அவளிடமிருந்து தப்பியோட யத்தனித்தான்.

“வேணு!” என்று அமைதியான, உணர்ச்சி மிகுதியால் சற்றுக் கனத்துவிட்ட அவனது தாயின் குரல் அவனைத் தடுத்தது.

அவள் முகத்தில் தான் எதிர்பார்த்த எந்தக் குறியுமில்லாமல் அவள் மிகுந்த கனிவுடன் புன்னகை காட்டி “உட்காரு” என்றதும் நாற்காலியிலிருந்து எழுந்த வேணு மீண்டும் உட்கார்ந்தான்.

“நீ ஏதோ உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்னை எதையோப் பேசப் போறேன்லு நான் நெனைச்சேன். அப்பாவைப் பத்திய பிரச்னையா அது!… நல்ல வேடிக்கை!” என்று அவள் கசிந்து சிரித்தாள்.

“அப்படின்னா உனக்கு ஏற்கனவே அதெப் பத்தியெல்லாம் தெரியுமா?” என்று முனகுவது போல் கேட்டான் அவன்.

“நான் அதெப்பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க விரும்பினதில்லே வேணு…” என்று ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினாள் அவள்.

அவள் தொடர்ந்து சொன்னாள்:

“இதோ பார். அவர் உன் அப்பாங்கிறது எவ்வளவு உண்மையோ – என் புருஷன்ங்கிறது எவ்வளவு உண்மையோ – அவ்வளவு உண்மை அவர் ஒரு புரபசர்ங்கிறதும், அவர் ஒரு பெரிய அறிவாளி, படிப்பாளி, சமூக அந்தஸ்து மிக்கவர்ங்கறதும்… இல்லியா?…”

அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

அவளே சொன்னாள்:

“நீ எது எதுக்காக வெல்லாம் உன் அப்பாவை நினைச்சுப் பெருமைப்படலாமோ அதையெல்லாம் விட்டுட்டு, எதைப் பத்தி உனக்கு முழுசாத் தெரியாதோ, எது ரொம்பவும் அந்தரங்கமானதோ அதைக் குடைஞ்சு வருத்தப்படறதும் அவமானப்படறதும் சரின்னு தோணுதா உனக்கு?”

அவன் திடீரென்று கொதித்துப் போய்ச் சொன்னான். “முழுசாத் தெரிஞ்சுதான் அம்மா பேசறேன். ஐ ஹாவ் புரூப்ஸ்! என்னால் நிரூபிக்க முடியும்… அவருக்கு வந்த போன்கால்… அவர் பேசறதை நான் என் காதாலே கேட்டேனே… அன்னிக்கி ராத்திரி தியேட்டர்லே அதுக்காகவே போயி இந்தக் கண்ணாலே பார்த்தேனே… அவர் ரூமில் இருக்கிற டிராயர்லே அவருக்கு வந்த லவ் லெட்டர்ஸ் ஒரு பைலே இருக்கே… அவர் முகத்திலேயே அதை வீசி எறிஞ்சப்ப அவராலேயே அதை மறுக்க முடியலே…. அம்மா!”

“ஓ! இட் ஈஸ் எ ஷேம் ஆன் யூ! புரூப்ஸ் இருக்காம் புரூப்ஸ்! வேணு, பெரிய மனிதர்களையும் பிரபலமானவங்களையும் அவதூறு செய்யறதே தொழிலாகக் கொண்டிருக்கே சில மஞ்சள் பத்திரிகைங்க… அவங்ககிட்டேயும் அதுக்கெல்லாம் புரூப் இருக்கும். அதுக்கெல்லாம் புரூப் இருக்காதுன்னா அதை மஞ்சள் பத்திரிகைன்னு கௌரவமானவங்க ஒதுக்கறாங்க? அது ஒரு மனுஷனுடைய பெருமை திறமை எல்லாத்தையும் விட்டுட்டு அவனுடைய அந்தரங்கமான பலவீனங்களைப் பத்திப் பேசறதை ஒரு பிழைப்பா வெச்சிருக்கிறதனாலே சமுதாயத்துக்கோ நாகரிகத்துக்கோ கேடுதானே ஒழிய, லாபமில்லே. அதனாலே தான் நாம மஞ்சள் பத்திரிகைகளைக் கண்டா அருவருத்து ஒதுக்கறோம்?… இப்ப நீ பண்ணி இருக்கியே இதுக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு. நீயும் அவங்க மாதிரிதான் ‘புரூப்’ இருக்கு என்கிறே…. வேணு… எனக்கு உன்னை நெனச்சி ரொம்ப வருத்தமா இருக்கு…. ஷேம். இட் ஈஸ் அ ஷேம் ஆன் யூ!” என்று ரமணியம்மாள் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.

“நீ நெஜமா, இப்படியெல்லாம் செய்தியா… வேணு… எவ்வளவு உயர்ந்த மனுஷனை எவ்வளவு கேவலமா நடத்திட்டே!” என்று கூறுகையில் உடலும் மனமும் அவளுக்குப் பதறின.

“இவள் என்ன மனுஷி! இவள் என்ன மனைவி!” என்று புரியாமல் திகைத்தான் வேணு.

“அம்மா – உன்னுடைய நல்லதுக்கும் இந்தக் குடும்பத்தோட நன்மைக்கும்தான் தப்புன்னு தெரிஞ்சும் நான் அவர் விஷயத்திலே அப்படி நடந்துகிட்டேன்…” என்று அவளுடைய நிலையைப் பார்த்து அவன் சமாதானம் கூற முயன்றான்.

“வேணு… எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா…. அவரை நெனச்சி இல்லே… உன்னைப் பாக்கறப்போ எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா… நீ அப்படி நடந்துக்கலாமா? ஒரு தகப்பன்கிட்டே ஒரு மகன்…. ஐயோ! என்னாலே கற்பனை செய்து பார்க்கக்கூட முடியலே வேணு!”

“அவர் உனக்குத் துரோகம் செய்யறார்னு தெரிஞ்சும்…”

“இட் இஸ் மை பிராப்ளம்!” என்று அவள் இடைமறித்துக் கூவினாள்: “அது என் விவகாரம்!… உனக்கு எங்க தாம்பத்தியம் பற்றிய அந்தரங்கத்தில் தலையிட என்ன உரிமை?” என்று அருவருத்து உடல் சிலிர்த்தாள்.

“சொல்றேன் கேள். நாங்க இருபத்தைஞ்சு வருஷம் அமைதியா வாழ்ந்திருக்கோம். கடைசிவரைக்கும் அப்படியே வாழ்வோம்… அதனால்தான் அந்த அமைதியை – அந்தச் சந்தோஷத்தைக் கெடுத்துக்கற எந்த விஷயத்திலேயும் நான் தலையிட விரும்பறது இல்லே… எனக்கும் லேசாத் தெரியும்… அதனால் என்ன? என்னை விட அவருக்கு இனிய துணை யாரும் இருக்க முடியாது… நீ சொல்றியே அதைப் பத்தி எனக்கு மனசுக்குள்ளே ஆழ்ந்த வருத்தம் உண்டுதான்.” இதைச் சொல்லும்போது எவ்வளவு அடக்கியும் அடங்காமல், அவளது இதயத்தில் பாறையாய் ரகசியமாய்க் கனத்துக் கிடக்கும் ஓர் ஆழ்ந்த துயரம் உருகிற்று… கண்களில் தாரை தாரையாய் வடியும் கண்ணீரை – மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்தவாறே அங்கிருந்து எழுந்து சென்று வராந்தாவில் ஒரு நிமிஷம் நின்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் மகனின் எதிரே அமர்ந்தாள்.

“வேணு! நீ நினைக்கிற மாதிரி வாழ்க்கை அவ்வளவு ‘ஸிம்ப்பிள்’ இல்லேடா… அது ரொம்ப சிக்கலானது. குழப்பமானது வேணு. அந்தச் சிக்கலிலும் அந்தக் குழப்பத்திலும் எப்படி ஒரு குடும்பத்தை அமைதியாகவும் சந்தோஷமாகவும் நடத்தறதுங்கறதுதான் வாழ்க்கைக் கலை!… பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லேன்னா – அன்பு காதல்ங்கறதுக்கெல்லாம் அர்த்தமே இல்லை. உன்னை மாதிரி நான் நடந்துகிட்டிருந்தா இந்தக் குடும்ப அமைதியும் அவரோட கௌரவமும் குலைஞ்சு போறதுக்கு நானே காரணமாகிப் போயிருப்பேன்… என்னுடைய ‘பொஸஸ்ஸிவ்னஸ்’காக – என்னுடைய பிடியில் அவர் இருக்கணும்கறதுக்காக, இந்தக் குடும்பத்தோட அமைதியையும், அவரோட கௌரவத்தையும், என் குழந்தைகளின் எதிர்காலத்தையும் விலையாக் கொடுக்கிற அளவு நான் சுயநலக்காரியாகறது எவ்வளவு கேவலமானது!… இப்படியெல்லாம் நான் சொல்றதைக் கேட்டு நான் ஏதோ ரகசியமான சோகத்தை அனுபவிச்சிக்கிட்டு வாழறேன்னு நீ கற்பனை செய்து கொள்ளாதே! ஆனால், என் மனசிலே ஒரு சின்னத் துயரம் இல்லாமல் இல்லை. முழுமையான ஆனந்தம் என்பது அவ்வளவு சுலபமானதா என்ன?…”

“பேச எனக்கு உரிமை இருக்கா இல்லியாங்கறது பிரச்னையே இல்லே… அதனாலே என்ன பலன்னு யோசிக்க வேண்டாமா? இப்போ என்ன நஷ்டம்னு நான் யோசிச்சேன்… நான் அதைப் பத்தி பேசாதது ஒரு பண்பு வேணு… ஆமாம், ஒருத்தரை நாம் மதிக்கிறோம்கறதுக்கு என்ன அர்த்தம்? அவங்களோட அந்தரங்கத்தை – பிரைவஸியை – தெரிஞ்சுக்கறதுக்குப் பலவந்தமா முயற்சி செய்யாமே இருக்கறதுதான். ஒருத்தர் மேலே அன்பு செலுத்தறதுன்னா என்ன? அவங்களோட அந்தரங்கமான ஒரு பலவீனம் நமக்குத் தெரிஞ்சபோதிலும், அதுக்காக அவங்களோட மத்த தகுதிகளையும், பெருமைகளையும் குலைக்காமல், அந்தப் பலவீனமும் சேர்ந்தது தான் அவங்கன்னு புரிஞ்சுகொள்றது தான்…”

“ஓ! ஒருவரின் அந்தரங்கம் எவ்வளவு புனிதமானது! இட் இஸ் ஸம்திங் ஸேக்ரட் வேணு! இதிலே இன்னொரு இரண்டாவது நபரின் பிரவேசம் – அது யாராயிருந்தாலும் ரொம்பக் காட்டுமிராண்டித்தனமானது… அசிங்கமானது…”

“அம்மா…நீ அவரோட மனைவி!”

“ஸோ வாட்? அந்த உரிமையை நான் துஷ்பிரயோகம் செஞ்சா அந்த உரிமையே எனக்கு மறுக்கப்படலாம் இல்லையா?”

“உன் விஷயத்தில் அவர் அப்படி இருப்பாரா?”

“இருப்பாரான்னா கேட்டே? இருக்கிறார் வேணு… ஒரு புருஷன் தன் மனைவியையோ, ஒரு மனைவி தன் புருஷனையோ சந்தேகப்படறதுக்கும், பரஸ்பரம் அந்தரங்கமான விவகாரங்களை எல்லை கடந்து ஆராயறதுக்கும் காரணமே கெடையாது. ஒரே ஒரு காரணம் தான். அவங்க தங்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா நினைச்சிக்கறதுதான் காரணம்…”

“புருஷன்… மனைவி – மகன் – தாய் – தகப்பன் எல்லாருமே ஒரு உறவுக்கு உட்பட்டவங்கதான் – ஆனா ஒவ்வொருவரும் ஒரு ஸெபரேட் இண்டிவிஜிவல் – தனி யூனிட் இல்லியா? ஒவ்வொரு தனி மனுஷனுக்கும் ஒரு தனிப்பட்ட அந்தரங்கம் உண்டு. அதை கௌரவிக்கணும் வேணு… யார் மேலே நமக்கு ரொம்ப மதிப்போ அவங்க அந்தரங்கத்தை நாம் ரொம்ப ஜாக்கரதையா கௌரவிக்கணும்… உன் அப்பாவை நீ என்னன்னு நெனைச்சே?… என்னாலே நீ கேட்ட மாதிரி அவரைக் கேட்க முடியுமா? கற்பனை பண்ணக்கூடச் சக்தி இல்லேப்பா எனக்கு… ஓ! நீ என்ன செஞ்சுட்டே?”

“பரவாயில்லை. உங்க அப்பா ரொம்ப ஸ்ட்ராங் மேன்! இதைத் தாங்கிக்குவார்… அவர் தனது பலவீனங்களையும் தாண்டி வருவார்… நிச்சயம் தாண்டி வந்துடுவார். வாழ்க்கை நொம்பச் சிக்கலானது வேணு. வாழ்க்கையைப் புரிஞ்சுக்கணும். இந்தப் புத்தகத்தைப் படிச்சுப் பார் – உனக்கு இது மாதிரி சிந்தனைகள் விசாலமான பார்வையைத் தரும்.”

வேணுவுக்கு ஒரே குழப்பமாக் இருந்தது. அவன் மனத்தில் தாத்தாவும் பாட்டியும் மட்டும்தான் லட்சியத் தம்பதியாய்த் தோன்றினர்.

அவனுக்கு புரியவே இல்லை – அவர்கள் தாத்தாவும் பாட்டியுமாகவே கலியாணம் செய்து, தாத்தாவும் பாட்டியுமாகவே தாம்பத்யம் நடத்தி வாழ்ந்திருக்கவில்லை என்பது.

***

சில நாட்களுக்குப் பின் ஒருநாள் மாலை. கல்லூரியிலிருந்து வந்த சுந்தரம் உடைகளைக் களைந்து கொண்டிருந்தபோது, இரண்டு நாட்களுக்கு முன்பு சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்விட்ட வேணுவிடமிருந்து வந்த கடிதத்தைக் கொண்டு வந்து அவரிடம் தந்தாள் ரமணி அம்மாள்.

அதில் முக்கியமான கடைசி வரிகள் இவைதான்:

“நான் தாத்தாவின் பேரனாகத்தான் இருக்க லாயக்கானவன். வந்துவிட்டேன். உங்கள் வாழ்க்கை நெறிகள் புரியாமல் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு,வேணு.”

கடிதத்தைப் படித்து முடித்ததும் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்…

“பழைமைவாதிகள் என்பவர்கள் எழுபது வயதுக்கு மேல்தான் இருக்கணும்கறது இல்லே… இருபது வயசிலேயும் இருக்கலாம்…” என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

ரமணி அம்மாள் சற்று நேரம் அவர் முகத்தையே ஏக்கத்தோடு வெறித்து நோக்கினாள்… அவள் கண்கள் சிவந்து கலங்கின…

அவள் தனது ஆழ்ந்த துயரத்தையே ஒரு புன்முறுவலாக்கி அவரிடம் கேட்டாள்: “இன்னுமா… நீங்கள்… நீங்கள்….” என்று துடித்த அவள் உதடுகள் தனது கன்னத்தில் அழுந்தும்படி அவர் அவளைத் தழுவிக் கொண்டார்.

அதன் பிறகு நடந்தவை, அவர்களின் அந்தரங்க விவகாரங்கள்!

– ஜெயகாந்தன் சிறுகதைகள் – முதற்பதிப்பு 1973 – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

Print Friendly, PDF & Email

3 thoughts on “அந்தரங்கம் புனிதமானது

  1. இப்பொழுது எனக்கு புரிந்துவிட்டது. ஆனால் அந்த மகனின் நிலைமையில்தான் நானும் ஒரு மகளாய்

  2. ஜெயகாந்தன் என்ற சிங்கம் தன் மீசைகளைக் கூராக்கிக்கொண்ட எண்ணற்ற சுறுகதைகளுள் ‘அந்தரங்கம் புனிதமானதும்’ ஒன்று.

    இந்த சிறுகதை காலம் காலமாக சிறுக சிறுக பொதுபுத்தியில் இந்த சமூக கட்டமைப்பு ஏற்படுத்தி இருக்கும் கட்டமைப்பின் அஸ்திவாரத்தை நோக்கி பலமாக வீசும் ஒரு சவுக்கடி. அந்த அடிக்கு காரணகர்த்தவாக பாட்டியும் தாத்தாவும் இருக்க, அடியை வாங்குகிறது வேணு என்ற குறியிடான இளைய சமுதாயம்.

    என்ன உறவானாலும் அந்த உறவின் பயனாக நமக்கு கொடுத்திருக்கும் உரிமையைக் கொண்டு மற்றொருவர் அந்தரங்கத்தை தன் மூக்கைக் கொண்டு நுழைவது அசிங்கமும் அவமானமுமானது.
    அதையே இங்கு ஜெயகாந்தன் என்ற சிங்கம் செய்திருக்கிறது.

    நன்றி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *