யாரைத்தான் நம்புவதோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம் குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2021
பார்வையிட்டோர்: 38,612 
 

இரண்டு நாட்களாய் ராம்குமாருக்கும் அவன் மனைவிக்கும் சண்டை.

மனைவியின் தாய் மாமா இவளுக்கு வரவேண்டிய பங்காக இரண்டு லட்சம் ரூபாயை, கொடுத்திருந்தார். வங்கியில் போட்டிருந்த அந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்றும், அதில் அவளுக்கு நகை வாங்க சொல்லி வற்புறுத்தி கொண்டிருக்கிறாள்.

ராம்குமாருக்கோ வறுமை நிலையில் இருக்கும் தன் குடும்பத்தில் பிளஸ் டூ முடித்துவிட்டு இஞ்சீனியரிங்க் படிப்புக்கு அனுமதி கிடைத்தும் பணம் கட்ட வசதி இல்லாமல் இருப்பவனுக்கு கொடுக்கலாம் என்று கேட்டான்.

அவள் நினைத்தால் தாரளமாய் கொடுக்கலாம், நன்கு படித்திருக்கிறான் என்ற தகுதி மட்டும் உள்ள இவனுக்கு பெண்ணை கட்டிக்கொடுத்து அவர் நிறுவனத்தில் ஒரு வேலையும் கொடுத்து, கெளரவமாய் ஒரு காரையும் கொடுத்திருக்கிறார்.ஆனால் தன்னால் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து தன் குடும்பத்துக்கு உதவ முடியவில்லை. நினைக்க நினைக்க கோபமாய் வந்தது ராம்குமாருக்கு.

தளம் இரண்டு பெங்களூர் செல்லும் இண்டர்சிட்டி இரயில் நின்று கொண்டிருக்க ஜே..ஜே என்று பிரயாணிகள் கூட்டமாய் வருவதும் போவதுமாய் இருந்தனர். இரயில் நிலையத்தில், தளம் ஒன்றுக்கும், இரண்டுக்கும் நடுவில் சாகவாசமாய் நின்று கொண்டிருந்த ஜேம்சின் கண்களில் அந்த ஜோடி தட்டுப்பட்டது. சாதாரணமாய் அது போல் பல ஜோடிகள் வருவதும் போவதுமாய் இருப்பது சகஜமென்றாலும், சட்டென இந்த ஜோடி அவன் கவனத்தை கவர்ந்த்தற்கு காரணம் இருபத்தி ஐந்து வயது மதிக்கக்கூடிய அந்த பெண்ணின் கையில் வைத்திருந்த சூட்கேஸ்தான். அவள் அதை சாதாரணமாய் எடுத்து வந்திருந்தாலும் அவன் பார்வைக்கு வித்தியாசமாய் பட்டிருக்காது, அவள் நாற்புறமும் விழிகளை விரித்து பார்த்துக்கொண்டு வர அதை விட சற்று மூத்த வயது தோற்றமுடைய இளைஞன் அவளுடன் வெளிறிய முகத்துடன் நடந்து வந்தது ஜேம்சின் மூளைக்கு ஒரு எச்சரிக்கை அலாரம் அடித்தது.

சட்டென தன் கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கி விட்டு மெல்ல அந்த ஜோடியை பின் தொடர்ந்தான். அவர்கள் பெங்களூர் கிளம்ப போகும் இரயிலில் ஏற போகிறார்களா? மனது இந்த கேள்வியை கேட்டாலும், அவர்கள் இவ்வளவு மெதுவாக நடப்பதை பார்த்தால் இந்த இரயிலில் ஏறுபவர்களை போல் தெரியவில்லை.

செல்லில் அழைப்பு வர காதில் வைத்தவனிடம் நீ ராம் குமார்தானே என்று அநாகரிகமாய் ஒரு குரல் மிரட்டும் தோணியில் கேட்கவும் ஒரு நிமிடம் அதிர்ந்து

ஆமாம் என்றான், குரலில் எரிச்சலை காட்டினான்.உன்னோட குழந்தை இப்ப எங்க கிட்டதான் இருக்கான், சட்டென அமைதியானது. இவன் ஹலோ..நீங்க யாரு பேசறீங்க? என் குழந்தை உங்க கிட்டே எதுக்கு வரணும்? குரலில் காட்டம்.

மீண்டும் குரல் உயிர்பித்து கேள்வியெல்லாம் கேட்காத. உன்னுடைய குழந்தை இப்ப எங்ககிட்டே இருக்குது. அது பேரென்ன? ம்.. பிரசாத், சரிதானே இவனுக்கு பக்கென்றிருந்தது. ஹலோ யார் நீங்க, தயவு செய்து என் குழந்தையை ஒண்ணும் பண்ணிடாதீங்க…குரலில் பதட்டத்தை காட்டினான்.

இப்ப போனை வை, அப்புறமா கூப்பிடறேன், இரக்கமே இல்லாமல் துண்டிக்கப்பட்டது. இவன் ஹலோ..ஹலோ என்று கத்தியும் பதிலில்லை. மீண்டும் “கால் ஹிஸ்டரிக்கு” சென்று இப்பொழுது வந்த அழைப்பின் நமபருக்கு மீண்டும் கூப்பிட அது இறந்து போயிருந்தது.

உடனே மனைவிக்கு போன் போட்டான். ரிங்க் போயிக்கொண்டிருந்தது. சீக்கிரம் எடு..சீக்கிரம் எடு மனதுக்குள் உசுப்பிக்கொண்டிருக்க அது பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தது.

ஹலோ..ஹா மனைவியின் குரல்..பானு, எங்கிருக்கே? ஏங்க காய்கறிக் கடையிலதான் இருக்கேன், ஹரி எங்கே? அவனை வீட்டுல வேலைக்காரிகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன். ஏன் என்னாச்சு? அவள் குரலில் பதட்டம். உடனே வீட்டுக்கு போ, வேலைக்காரி இருக்காளா பாரு, நான் அங்கே வர்றேன். அதற்கு மேல் எதுவும் பேசாமல் வீட்டுக்கு விரைந்தான்.

இவன் வந்து சேர்ந்த பொழுது அவன் மனைவி வெளியில் நின்று கொண்டிருந்தாள். இவன் போனதும் ஏங்க வேலைக்காரியை காணோம். வீடு பூட்டி இருந்ததை பார்த்த உடனே ராம்குமார் அதிர்ச்சி அடைந்து விட்டான். உள்ளம் நடுங்க ஆரம்பித்து விட்டது. இவன் மனைவிக்கு எதுவும் புரியவில்லை. பத்து நிமிசம் பாத்துக்க காய் வாங்கிட்டு வந்திடறேன்னு சொல்லிட்டு தானே போனேன், அதுக்குள்ள எங்கே போனா? ஏங்க என்னாச்சுங்க, எதுக்கு பிரசாத் இருக்கானான்னு கேட்டீங்க? இவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. பிரசாத்தை கடத்தி விட்டார்கள் என்று சொன்னால் என்ன ஆகும்?

மனைவியிடம் உண்மையை சொல்லலாம் என்று நினைக்கும்போது மீண்டும் செல் போனில் இருந்து அழைப்பு. சட்டென போனை எடுத்து நடுங்கும் குரலில் ஹலோ..என்றான்.

என்னப்பா கன்பார்ம் பண்ணிட்டியா? வேலைக்காரியை நம்பி உன் பொண்டாட்டி விட்டுட்டு போனாளே, அதுதான் எங்களுக்கு வசதியா போச்சு. இப்பவும் ஒண்ணும் கெட்டு போயிடலை. உன் குழந்தை உனக்கு வேணுமின்னா இரண்டு லட்சம் ரூபாய் ஒரு சூட்கேசுல போட்டுகிட்டு நம்ம இரயில்வே ஸ்டேசன்ல பிளாட்பார்ம் இரண்டுல நில்லு. நம்ம ஆளுங்க உன் கிட்டே வந்து சூட்கேசை வாங்கிக்குங்குவானுங்க.

இரண்டு லட்சம் ரூபாயா? இவன் அதிர்ச்சியாய் கேட்க, அவன் மனைவிக்கு ஏதோ புரிந்தது போல பதட்டத்துடன் அவன் தோளை பற்றினாள். என்னாப்பா உன் கிட்டே பணம் இல்லையா? நேத்துத்தான பேங்குல இருந்து பணம் எடுத்து உன் பொண்டாட்டிக்கு நகை வாங்கனும்னு பீரோவுல வச்சிருக்கயில்லை அதை எடுத்துட்டு வா.

ராஸ்கல்..நான் பேங்க் போய் பணம் எடுத்த்தெல்லாம் தெரிந்திருக்கிறது, கண்டிப்பாய் தெரிந்தவனாய் இருக்க வேண்டும். இங்க பாரு அவ்வளவு பணம் எல்லாம் எங்கிட்டே இல்லை, நான் போலீசுக்கு போக வேண்டி இருக்கும். இவன் மிரட்ட அவன் கெக்கலிட்டு சிரிப்பது தெரிந்தது. இங்க பாரு நீ போலீசுக்கு போ அப்புறம் என்ன நடக்கும்னு பாரு.. குரலில் தெரிந்த உறுதி இவனை பயமுறுத்தியது.

இங்க பாரு தயவு செய்து என் குழந்தையை என் கிட்டே கொடுத்துடு.

அப்படி வா வழிக்கு. இங்க பாரு நீ ஒண்ணும் செய்ய வேண்டாம், உன் பீரோவுல வச்சிருக்கற இரண்டு லட்ச ரூபாயை எடுத்துகிட்டு நேரா இரயில்வே ஸ்டேசனுக்கு வா, எங்க ஆளுங்க உன் பின்னாடியே வருவானுங்க, சட்டுனு உன் கையில குழந்தையை கொடுத்துட்டு சூட்கேசை வாங்கிட்டு போயிகிட்டே இருப்பானுங்க.

“என் குழந்தை கண்டிப்பா கிடைச்சுடுமா?”.

“நாங்க சொன்னா சொன்ன மாதிரி நடப்போம், கவலைப்படாமே வா”.

அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் எல்லா விவரங்களையும் சொன்னான்.

“நீ பணம் வச்சிருக்கறதை யார் கிட்டேயாவது சொன்னியா? இல்லையே?”.

“அன்னைக்கு பேங்குல பணம் எடுக்கும்போது என் பிரண்டு பத்மாகிட்டே சொன்னேன்”.

“நீ பேசிகிட்டு இருந்ததை பேங்குல எவனோ கேட்டுகிட்டு இருந்திருக்கான், இப்ப குழந்தையை வச்சுகிட்டு மிரட்டறான்”.

“சரி வா, சீக்கிரம்”.

தேடி பிடித்து ஒரு பழைய சூட்கேசை எடுத்தவன் அதில் அவசரமாய் பீரோவில் வைத்திருந்த பணம் இரண்டு லட்சத்தை எடுத்து பெட்டியில் வைத்தான். வெளியில் நின்று கொண்டிருந்த காரில் மனைவியையும் ஏற்றிக்கொண்டு இரயில்வே ஸ்டேசன் விரைந்தான்.

உள்ளே வருமுன்னர் அவள் கையில் சூட்கேசை கொடுத்து, “நீ இதை கையில பிடிச்சுகிட்டு பின்னாடியே வா. நான் முன்னாடி நம்ம குழந்தையை எடுத்துட்டு யாராவது வாரங்களான்னு பார்த்துட்டு வரேன்”.

அந்த ஜோடியின் பின்னால் வந்து கொண்டிருந்த ஜேம்சின் தொழில் புத்தி சட்டென உஷாரானது, அவர்களை மிக அருகில் நெருங்கியவன் எதிரில் வந்த பெரும் கூட்டம் இவர்களை கடக்க முற்படும்போது சட்டென அந்த பெண்ணின் கையில் இருந்த சூட்கேசை பறித்து அப்படியே அந்த கூட்டத்தோடு ஐக்கியமாகி திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

“ஏங்க..ஏங்க..ஒரு ஆள் சூட்கேசை புடுங்கிட்டு ஓடறானுங்க”, மனைவியின் அலறல் கேட்டு சட்டென திரும்பியவன் ஒரு நிமிடம் தடுமாறி அதற்குள் ஜேம்சின் பின் புறம் தெரிய அவனை விரட்ட ஆரம்பித்தான், அவன் மனைவிக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அவளும் அவன் பின்னாள் ஓடினாள். இதற்குள் வளைந்து வளைந்து அந்த கூட்டத்தில் ஓடினாலும் விடாமல் விரட்டி வந்தான் ராம்குமார். இப்பொழுது ஜேம்சுக்கு இந்த கூட்டமே இடைஞ்சலாய் ஆகி விட்டது. இவன் திருடன் திருடன் என்று கூவிக்கொண்டே ஓருவனை விரட்டுவதை பார்த்த சிலர் ஜேம்சை விரட்ட ஆரம்பித்தனர்..

தரை தளத்து வரை வந்தவன் அதற்கு மேல் விரட்டி வந்தவர்களை சமாளிக்க முடியாமல் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு காரை அடையாளம் வைத்து, பின் கதவை திறக்க அது பூட்டாமல் இருந்ததால் சட்டென திறந்து கொண்டது. அதில் சூட்கேசை போட்டு விட்டு அங்கிருந்த நான்கைந்து கார்களுக்கு நடுவே ஓடி மறைந்து விட்டான்.

அதற்குள் கார் அருகே ஓடி வந்த நின்ற ராம்குமார், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றான், அதற்குள் அவன் பின்னால் ஓடி வந்து அவன் தோளை பற்றி நின்றாள் அவன் மனைவி, “அய்யோ அவன் ஓடிட்டானே, இப்ப பணமும் போச்சு, நம்ம குழந்தையும் போச்சே”, அழுதவாறு அவன் தோளில் சரிந்தாள். அதற்குள் அங்கு மெல்ல சிறு கூட்டம் இவர்களை சுற்றி வந்து ஆளாளுக்கு ஒரு அறிவுரை சொன்னார்கள்.

“சரி வா, முதல்ல வீட்டுக்கு போகலாம்”, சொன்னவளை வெறித்து பார்த்த அவன் மனைவி “நேரா போலீசுக்கு போலாங்க”, சுற்றி நின்றவர்கள் “அதுதான் சரி, உடனே போலீசுல கம்பிளெயிண்ட் கொடுங்க”.

அவளை ஏற்றிக்கொண்டு சர்ரென்று காரை கிளப்பியவன் “அழுகாதே முதல்ல வீட்டுக்கு போவோம், அப்புறம் அடுத்து போலீசுக்கு போகலாம்”. காரை அழுத்தினான்.

வீட்டுக்கு வந்தவர்கள் அதிர்ச்சியிடன் வியப்பாய் நின்று விட்டனர். வேலைக்காரி குழந்தையுடன் காத்திருந்தாள்.

ராம்குமாரின் மனைவி காரை விட்டு இறங்கி அப்படியே ஓடி சென்று குழந்தையை வாங்கியவள் கட்டி அணைத்து மாறி மாறி முத்தமிட்டாள்.குழந்தை திணறியது.ராம் குமார் மெல்ல வேலைக்காரியிடம் வந்து எங்க போயிருந்தே வேல்மணீ கேட்டான்.

“அம்மா வர்றதுக்கு பத்து நிமிசம் ஆகும்னு சொல்லியிருந்துச்சா, நான் அதுக்குள்ள வீட்டுக்கு போயி கரெண்ட் பில் கட்டற கார்டு எடுத்துட்டு கரண்டு ஆபிஸ் போயி பணத்தை கட்டிட்டு வந்துடலாமுன்னு போயிட்டேன். கட்டி முடிச்சுட்டு, லேட்டாயிடுச்சேன்னு ஆட்டோ பிடிச்சு வந்தேன், வந்து பார்த்தா நீங்க இரண்டு பேரும் வந்துட்டு போனதா எதிர்த்த வீட்டுக்காரங்க சொன்னாங்க, ஏங்க..எதுனாலும் நடந்துடுச்சா..”

“ம்..ஓண்ணும் நடக்கலை..” பெருமூச்சுடன் சொன்னவன், “நல்ல வேளை குழந்தைக்கு ஒண்ணுமில்லை”, அவன் மனைவியிடம் “சரி சரி உள்ளே போ..”.

அவர்களை உள்ளே போகச்சொல்லிவிட்டு நிறுத்தி வைத்திருந்த காரை நோக்கி வந்தவன் பின்புறம் கதவை திறந்து உள்ளே பத்திரமாய் படுத்து கிடக்கும் சூட்கேசை பார்த்து மெல்ல சிரித்தான்.

மறு நாள் வேலைக்காரி வேல்மணி “ஏங்க சார் என்னையும் பாப்பாவையும் எங்க வீட்டுக்கு போயிட்டு இரண்டு மணி நேரம் கழிச்சு வர சொன்னீங்க?”.

கேட்டவளிடம் “எல்லாம் ஒரு காரியமாத்தான், இதை எல்லாம் அம்மாகிட்ட சொல்லிட்டு இருக்காதே. உன் புருசன் ஜேம்ஸை இன்னைக்கு சாயங்காலம் காந்தி பார்க்கு கிட்ட வர சொல்லிடு”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *