பணப்பெட்டியுடன் ஓட்டம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 10,832 
 

மாலைநேரம்.

ஆரஞ்சு வண்ணச் சூரியன் மேறகுமலைச் சாரலில் ஒளியத் துவங்கினான்.மாரியம்மன் கோவில் கலகலத்தது. கலர் பார்க்கும் விடலையர்களைத் தவிர்த்து சீனு தனியாக நின்று அம்மனைக் கும்பிட்டான் கூடவே ரகுவையும் நினைத்துக் கொண்டான்.

இம்மாதிரி வேலைகளுக்கு ரகுதான் லாயக்கு. அவனை எங்கே பார்ப்பது நாளொரு திருட்டும் பொழுதொரு ஜெயிலுமாய் அலைகிறவன் அவன்.

அர்ச்சகர் கொடுத்த திருநீற்றை நெற்றியில் இட்டுக் கொண்டு வெளியே வந்தான்.சீனு. தூரத்தில் ஆட்டோ ஸ்டாணட் ஓரமாய் சீனுவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ரகுதான் நின்றிருந்தான்.

“டேய் ரகு! ” உரக்கக் கூப்பிட்டான்.

சட்டென முடியை சிலுப்பிக் கொண்டு திரும்பினான் ரகு.

“டேய் சீனு நீயா! என்னப்பா என்ன அக்கரையா கூப்பிடற ஏதாச்சும் கல்யாணம் கான ஏதாச்சுமா?”

“அட நீ ஒண்ணு அது ஒண்ணுதான் குறைச்சல்.”

“உனக்கென்னப்பா.வேலைக்குப்போறே.மாசமானா சம்பளம்.”

“இங்க பார் ரகு. இநதக் காலத்திலே சம்பளம். உத்யோகம் இதெல்லாம் ஒண்ணும் நடக்காது எம் முதலாளியைப் பாரு. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்காதான் வியாபாரம் பண்றான். பாங்குக்கு போறதுக்கும் வர்றதுக்கும்தான் என்னை நம்பறான் அனாவசியமாய் சம்பளத்தைத் தவிர பைசா கழுவின தண்ணியக் கூட காட்ட மாட்டேங்றான். அதனாலே ஒருபிளான் பண்ணியிருக்கேன். நீ தான் உதவி பண்ணனும்.”

“பிளானப்பத்தி அப்புறம் பேசுவோம் மொதல்ல அய்யர் கடை இடலியைப் பத்திக் கொஞ்சம் பேசணுமாம். போலாமா?”.

“ம்”

கிருஷ்ணா கபே காற்று வாங்கியது.

உண்மையிலேயே கிளீனர் பையன் ஈக்களை விரட்ட படாதபாடு பட்டுக்கொண்டிருந்தான். இருவரும் உட்கார்ந்தார்கள்.

கிருஷணய்யர் கேட்காமலே சுடச்சுட இட்லியை இலையில் வைத்தார்.

ரகு “ஐயரே தொண்ட ஒருமாதிரியிருக்கு கொஞ்சம் வெண்ணீர் கொண்டா.” என விரட்டினான்.

“இப்ப சொல்லு”

“நாளைக்குக் காலையிலே ஒரு பார்ட்டிக்குக் கொடுக்கறதுக்காக பாங்கியிலே நாலு லட்சம் எடுத்துட்டு வரப் போறோம். நானும் டிரைவர் மட்டும்தான் கார்லே போறோம். சாயிபாபா காலனி “கோவைபாங்கிலே“ பணத்தை எடுத்துட்டு தடாகம் ரோடு வழியா வருவோம். ஜி.சி.டி தாண்டினதும் ஈ காக்கா கூட அந்தநேரத்திலே இருக்காது. திக்பாரஸ்ட். ரெண்டு பக்கமும் கருவேலமரங்கள்தான் நிக்கும். ஆனைகட்டி போற பஸ்களும் பன்னென்டு மணிக்குத்தான் லாரிக எப்பவாச்சும் வரும். அங்க ஒருசின்ன பால மிருக்கும். அந்த பாலத்துக்குப் பின்னாடி நீ நிக்கணும். காரை நிறுத்திட்டு இறங்குவோம்.”

“எதுக்கு”

“ ஒண்ணுமில்லே. ஒண்ணுக்குப் போகத்தான். அங்கதான் போறது வழக்கம்.”

“ ஓகோ!”

“நாங்க ரெண்டுபேரும் இறங்கி ஜிப்பை திறக்கறதுக்குள்ளே பின்பக்கமாக சட்டுன்னு பெட்டிய எடுத்துட்டு ஏதாவது கட்டையாலே முதல்லே லேசா என் மண்டையப் பாத்து அடி. நா கீழே விழுந்துடுவேன். முடிஞ்சா அவனையும் ரெண்டு சாத்து சாத்து. அவனும் கீழே விழுந்துடுவான். டைம் பார்த்துட்டு பாங்க்குக்கு போன் பண்ணுவாரு பணத்தை எடுத்தாச்சுன்னா கண்டிப்பா காரெடுத்துட்டு தேடிட்டு வருவாரு. ஆஸ்பத்திரிலே.சேர்ப்பாரு. போலிஸ்லே கம்ப்ளைண்ட் கொடுப்பாரு. நீ பெட்டிய நம்ம ரூம்லே வச்சுட்டு தைரியமா உலா வரலாம் ரெண்டுநாள் கழிச்சு, டிஸ்சார்ஜ் ஆயிடுவேன். போலிஸ் விசாரணையில் என்னைய விட டிரைவர் தெளிவா சொல்வான். நா கவலைப் படாம வீடு வந்து சேர்ந்துடறேன். நைட்டோட நைட்டா மங்களுர் எக்ஸ்பிரஸ்லே வடக்கே எங்கியாவது கிராமத்தில செட்டிலாயிடலாம்.”

தன் திட்டத்தை விஸ்தாரமாய் விளக்கினான் சீனு.

“நீ என்ன சொன்னாலும் சரி எனக்கென்னவோ இது வொர்க்அவுட் ஆகிறமாதிரி தெரியல.”

“ நோ நோ கண்டிப்பா சக்ஸஸ் ஆகும். நாளைக்குக் காலையிலே நீ தயாரா இரு.”

சீனு புறப்பட்டான்.

மறுநாள் திட்டப்படி எல்லாமே சரியாக நடந்தது. ஆனாலும் எல்லோரும் அவசரக்காரர்களாய் போய்விட்டதால் கொஞசம் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே நடந்துவிட்டது.

திட்டப்படி சீனுவும் டிரைவரும் பணம் நாலு லட்சத்தை பெட்டியில் சுமந்து கொண்டு பதட்டப்படாமல் தடாகம்ரோடு சின்னப் பாலத்தினருகே காரை நிறுத்திவிட்டு இறங்கி முள்வேலி ஓரமாய் ஒதுங்கிய அதே வேளையில் ரகு நல்ல இரும்புத்தடியால் மண்டையைப் பார்த்து நெஜமாகவே இருவரையும் செமத்தியாய் தாக்கினான். நிஜமாகவே இருவரும் மயங்கி விழுந்தனர். இருவரின் மண்டையிலிருந்தும் ரத்தம் லேசாய் எட்டிப்பார்த்தது. இப்போது ரகு உஷாரானான். அவனுடைய திட்டப்படி இன்னும் இரண்டு மைலில் வரும் இடையர் பாளையத்தில் பஸ் ஏறி ஆனைகட்டி வழியாய் கேரளா சென்று கேரளாவாசி ஆகிவிடுவது எனபது அவன் திட்டம். பெட்டியை தூக்கிக் கொண்டு கண்மண் தெரியாமல் ஓடீனான். அவனுடைய துரதிர்ஷ்டம் அழகேசன் சாலையிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் குடிபோதையில் இவனையே குறிபார்த்து சரியாய் மோதி மரத்தோடு சாய்த்துவிட்டு பயத்தில் இறங்கி வந்த வழியே ஓடிவிட்டான்.

லாரி இடையில் சிக்கிய ரகுவும் பணப்பெட்டியும் ஒரு சேர வாயைப் பிளந்தனர்.

பெட்டியில் அடுக்கப்பட்டிருந்த நான்கு லட்சங்களும் கோவை நகர காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அரசின் வனத்துறை கருவேலமரங்களில் போய் உட்காரத் துவங்கின.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *