இரக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 9,174 
 

முக்கால் கெஜம் ஜாக்கெட் துணி வாங்குவதற்காக மூன்று மணி நேரம் சைனாபஜாரைச் சுற்றிச் சுற்றி வந்த பிறகு, முரளியும், சரளாவும் வீட்டுக்குச் செல்வதற்காகப் பஸ்நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

‘நாக்கை வரட்டுகிறது; எங்கேயாவது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தேவலையே ‘ ‘ என்று சுற்று முற்றும் பார்த்தாள் சரளா.

‘சரியாய்ப் போச்சி, அந்தப் பக்கம் இருக்கும்போதே அதைச் சொல்லியிருக்கக் கூடாதா ? இந்தப் பக்கம் வந்த பிறகுதான் சொல்லவேண்டுமா ? ‘ என்றான் முரளி அலுப்புடன்.

‘இதுதான் நுண்ணிடைப் பெண் ஒருத்திக்காக நீங்கள் நூற்றிரண்டு மலைகளைச் சாடும் லட்சணமாக்கும் ? ‘ என்றாள் சரளா.

தனக்காகத் தன் இனத்தையே பழிக்கும் அவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவது. அவனுக்காக நூற்றிரண்டு மலைகளைச் சாடாவிட்டாலும் நூற்றிரண்டடி நீளமுள்ள சாலையையாவது சாடுவோம் என்று அவன் திரும்பினான். அப்போது அழுதுவடியும் ஆண்சிங்கத்தின் குரலொன்று கேட்கவே இருவரும் திரும்பிப் பார்த்தனர்; எதிர்த்தாற் போலிருந்த நீதி மன்றத்திற்கு எதிரே யாரோ ஒருவன் தலைவிரி கோலமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான்.

‘பாவம் என்ன கஷ்டமோ ‘ என்றாள் சரளா.

‘எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், பிறர் கஷ்டத்துக்கு நாம் காரணமல்ல என்பது எங்கள் பேராசிரியர் வாக்கு ‘ ‘ என்றான் முரளி.

‘அவர் கிடக்கிறார் ‘ அதற்காக கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடராக நாம் வாழ்வதா, என்ன ? வாருங்கள், போய் என்னவென்று விசாரிப்போம் ‘ என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றாள் அவள்.

‘என்னய்யா என்ன நடந்தது ? ‘ அவ்வளவுதான்; அவனுடைய கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை நான் எப்படி அம்மா, சொல்வேன் ? எப்படி ஊருக்குத் திரும்பிப் போவேன் ? ‘ என்று அவன் கதறினான்.

‘ஏன், உனக்கு இந்த ஊர் இல்லையா ? ‘ என்று கேட்டாள் அவள்.

‘இல்லை, எனக்கு இளிச்சவாயன் பட்டி ? ‘

‘இங்கே எதற்கு வந்தாய் ? ‘

‘அந்த வெட்கக் கேட்டை ஏன் கேட்கறீங்க, எனக்கு ஸினிமா ஸ்டார் ஜில்ஜில் சுந்தரியைக் கண்ணாலம் பண்ணிக்கணும்ணு ஆசை ‘

‘ம்…

‘அதுக்காக நான் பணம் சேர்க்கிறதுக்குள்ள அவளுக்கு வயசாயிப் போச்சு ‘ ‘

‘ம்…. ‘

‘அடுத்தாற்போல் புல்புல் தாராவைக் கண்ணாலம் பண்ணிக்கலாம்னு பார்த்தேன் ‘ ‘

‘ம்…. ‘

‘அவளுக்கும் வயசாயிப்போச்சி ‘ ‘

‘அடபாவமே, அவர்களுக்கு வயசாக ஆக உனக்கு மட்டும் வயசு குறைந்து கொண்டே வந்ததாக்கும் ? ‘ என்றான் முரளி குறுக்கிட்டு.

‘ரொம்ப அழகாத்தான் இருக்கு ‘ இப்படிப்பட்டவர்களுடைய அறியாமைக்காக நாம் அழுவதா, சிரிப்பதா ? வாயை மூடிக் கொண்டு பேசாமலிருங்கள் ‘ ‘ என்றாள் சரளா.

‘இதோ மூடிக் கொண்டு விட்டேன் ‘ ‘ என்று அவன் உடனே தன் வாயை மூடிக் கொண்டு விட்டான்.

‘ம், அப்புறம்… ? ‘

‘கடைசியா குமாரி குலோப்ஜானையாச்சும் கண்ணாலம் பண்ணிக்கலாம்னு நெனைச்சி, அவளுக்கு ஒரு கடிதாசி எழுதிப் போட்டேன் ‘ ‘

‘ம்…… ‘

‘அதுக்கு வேண்டிய பணத்தை எடுத்துகிட்டு அடுத்த நாளே வரும்படி அவ குமாஸ்தா பதில் எழுதியிருந்தான் ‘ ‘

‘ம்….. ‘

‘சந்தோஷத்துக்குக் கேக்கணுமா ? கண்ணு போட்டமாடு, குட்டி போட்ட ஆடு எல்லாத்தையும் வித்து ஐநூறுரூபா எடுத்துகிட்டுப் பறந்து வந்தேன் ‘ ‘

‘ம்…… ‘

‘சொன்னது சொன்னபடி குமாஸ்தா ஸ்டேஷனுக்கும் வந்திருந்தான்…. ‘ ‘

‘ம்……. ‘

‘கேட்டது கேட்டபடி நான் ஐநூறு ரூவாயை எடுத்து அவன் கையிலே கொடுத்தேன் ‘ ‘

‘ஐயோ பாவம் ‘ ‘

‘ரெண்டு பேருமாகச் சேர்ந்து இங்கே வந்தோம்…… ‘ ‘

‘எங்கே வந்தீர்கள் ? ‘

‘இங்கேயே தான் ‘ ‘

‘ம்…… ‘

‘அவன் என்னை வெளியே நிறுத்திப்பிட்டு, ‘கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்துகிட்டு இரு; அம்மா என்ன பண்றாங்கன்னு பார்த்துவிட்டு ஒரு நிமிஷத்துல வயந்துட்றேன் ‘னு உள்ளே போனான். ஒரு நிமிசம் ரெண்டு நிமிசமாச்சு; ஒரு மணியாச்சு; இரண்டு மணியாச்சு; ஒரு நாள் ரெண்டு நாளாச்சு, போனவன் போனவன்தான்; திரும்பி வரவேயில்லை ‘ ‘

‘அவன் எப்படி வருவான் ? ‘

‘அதுக்கப்புறம் என்னடான்னா, இங்கே வரவங்க போறவங்க எல்லாம் ‘இது குலோப்ஜான் வீடில்லே, ஐ கோர்ட்டுன்னு சொல்லிச் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க ‘ ‘

‘அவர்கள் கிடக்கிறார்கள் ‘ நீ வா, எதற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் எழுதிவைப்போம் ‘ ‘ என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றாள் சரளா. முரளியும் அவளைத் தொடர்ந்தான்.

போலீஸார் அவன் விலாசத்தை குறித்து வைத்துக் கொண்டு, ‘தகவல் கிடைத்ததும் தெரிவிக்கிறோம் ‘ என்றார்கள்.

‘அப்படின்னா நான் ஊருக்குப் போகலாமுங்களா ? ‘

‘பேஷாய்ப் போகலாம் ‘ ‘

அவ்வளவுதான்; ‘அதுக்குக் கூட எங்கிட்ட பணம் இல்லீங்களே ‘ ‘ என்று அவன் மறுபடியும் அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டான். சரளா அவனிடம் பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

‘நல்ல வேளை ‘ குலோப் ஜானையே கொண்டு வந்து அவனுக்கு கல்யாணம் செய்து வைக்காமல் விட்டாயே, அந்த மட்டும் சந்தோஷம் ‘ ‘ என்றான் முரளி.

அலைந்த அலைச்சல் தீர, ஆளுக்கோர் ஐஸ்கிரீமுக்குப் பதிலாக ஆளுக்கு இரண்டு ஐஸ்கிரீமை அவர்கள் தீர்த்துக் கட்டிக் கொண்டிருந்தபோது, ‘என்னடா, என்ன கெடைச்சது ? ‘ என்றான் அவர்களுக்கு சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவன், இன்னொருவனை நோக்கி.

‘பத்துரூபாய் தாண்டா ‘ அதுவும் அவன் கொடுக்கலே, அவனோட ஒரு குட்டி வந்தா பாரு, அவ கொடுத்தா ‘ ‘ என்றான் இவன்.

‘போயும் போயும் இன்னிக்குப் பொம்பிளைதானா கெடைச்சா, ஏமாத்த ? ஐயோ, பாவம் ‘ என்றான் அவன்.

சரளா இதைக் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினாள் ? அதே குலோப்ஜான் காதலன் ‘

அவளை அவன் கண்டதும் தன் சகாவுடன் வெளியே விரைந்தான்.

‘போலீஸ், போலீஸ் ‘ ‘ என்று கத்தினாள் சரளா, ஆத்திரத்துடன்.

‘ஸ், போலீசை ஏன் அனாவசியமாக கூப்பிடுகிறாய் ? அவர்களிடம் நீ இரக்கம் காட்டலாம். உன்னிடம் அவர்கள் இரக்கம் காட்டக் கூடாதா ? ‘ என்றான் முரளி.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *