மௌன மொழிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 21,457 
 

பரபரப்பான வேலைகளிடையே சைலண்ட் மோடிலிருந்து மொபைல் கிர்..கிர்ரென்று அதிரவும் எடுத்த மித்ரா,

“ஹலோ…”

“ஹலோ.. மித்ராவா ? நான் உங்க வாசகன் பேசறேன்.. இந்த வாரம் சலங்கையில் நீங்க எழுதியிருந்த மன ஓசை சிறுகதை நல்லாயிருந்தது…எதேச்சையாத்தான் படிக்க முடிஞ்சது…”

“ரொம்ப நன்றிங்க… உங்க பேர்?”

“என் பேர் பிரஷாந்த்…. சேலத்திலர்ந்து பேசறேன்…! “

பேரை கேட்டதும்…. ஆச்சர்யமாகிப்போனவள், “பிரஷாந்த் நீங்களா? நான் நினைச்சே பார்க்கலை… எப்படி இருக்கீங்க…? ரொம்ப நாளாச்சி இல்ல … அதான் சட்டுனு போன் வாய்ஸ் கண்டுபிடிக்க முடியலை…”

“ஆமா உன் நெம்பரை எப்படி கண்டுபிடிச்சேன்னு நீ கேட்கவே இல்லையே?”

“சலங்கை பத்திரிக்கையில் கேட்டு வாங்கியிருப்பீங்க…”

“ம்ஹூம்… நீயே கண்டுபிடி…”

“அத விட்டா என் அண்ணன் கிட்ட கேட்டு வாங்கியிருப்பீங்க… இதெல்லாம் பெரிய கண்டுபிடிப்பா…? சில்லறையை சிதறியது போல் சிரித்தாள்.

“மித்ரா… உன் சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு…”

“ம்.. இப்ப சொல்லி என்ன பிரயோஜனம் …? மறுபடியும் சிரித்தவள், “எப்படி இருக்கீங்க? லைப் எப்படி போயிட்டிருக்கு…இந்திரா எப்படி இருக்காங்க.. உங்க பசங்க எப்படி படிக்கிறாங்க…?” கேள்விகளை இடைவெளி இல்லாமல் அடுக்கினாள்.

“அப்ப சொல்லாம விட்டது வேற சூழல் மித்ரா… சரி அதை விடு… இந்திரா ரொம்ப நல்லாருக்காங்க. பசங்களும் நல்லா படிக்கிறாங்க.. . உன் லைப் எப்படி இருக்கு…. கணவர், குழந்தைகள் சௌக்யமா? ஊர்ல விசேஷத்துல எல்லாம் பார்க்கும் போது உங்கிட்ட அவ்வளவா பேச முடிஞ்சதே இல்லை… சரி இந்த கதையை படிச்சதும் பாராட்டனும்னு சொல்லித்தான் உங்க அண்ணங்கிட்ட இந்த நெம்பரை வாங்கினேன்..”

“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேங்க… நான் நானா வாழ அத்தனை சுதந்திரத்தையும் அவர் தந்திருக்கிறார்… அதனால்தான் இவ்வளவு தூரம் என்னால் வெளியில் வர முடிஞ்சிருக்கு…”

“சரி மித்ரா இன்னும் நிறைய சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்…. ! உங்கிட்ட மனம் திறந்து நிறைய பேசனும்னு தோணுது… நாளைக்கு மதியம் போன் பண்றேன்… இப்ப ஒரு அவசர வேலையிருக்கு…” போனை வைத்தான்.

***

“மித்ரா உன் சிரிப்பு ரொம்ப நல்லாருக்கு…”

“ம்… இப்ப சொல்லி என்ன பிரயோஜனம்..?” மித்ராவின் விகல்பம் இல்லாத பேச்சும் சிரிப்பும் தூக்கத்தை நிறுத்தி நடந்து போன நிகழ்வுகள் மனதை சுற்றி கொண்டிருந்தது…. பிரஷாந்த் படுக்கையை விட்டு பால்கணியில் வந்து அமர்ந்தான். சில்லென்ற காற்று இதமாயிருந்தது.

உனக்கு தெரியுமா மித்ரா… நான் உம்மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தேன்னு…? உன்னை பத்தி பேச்சை எடுத்தாலே உங்க அண்ணன் திட்டுவான்… “டேய்… இப்படியெல்லாம் பேசக்கூடாதுடா… அவ சின்ன பொண்ணு இப்பத்தான் படிக்கிறா… எங்கப்பாவுக்கு அவளை நிறைய படிக்க வைக்கனும்னு கனவெல்லாம் இருக்கு…”

என்னால் உங்கிட்டயும் தைரியமா பேச முடிஞ்சதில்ல… மித்ரா.. நான் உன் வீட்டுக்கு வந்தாலே புத்தகத்தை எடுத்துக்கிட்டு நீ மாடிக்கு போய்டுவே…. உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது… உம்மேல் வச்சிருந்த காதலை… பக்கபக்கமா எழுதி வச்சிருந்தேன்…. உங்கப்பா கிட்ட… அதான் மாமாகிட்ட கேட்கவும் எனக்கு ரொம்ப பயம் மித்ரா… பயம்னா உன் மேல் வச்சிருந்த காதலை விட மாமா மேல வச்சிருந்த மரியாதை கலந்த பயம்தான் என்னை தடுத்துடுச்சி… எங்கப்பா போன பின்னாடி மாமாதானே எல்லாம் எங்களுக்கு….அதில்லாம… நீ கடைசியா செல்லமா வளர்ந்தவ… மாமா உன்ன செல்வாக்கா வளர்த்தாரு… என் குடும்பத்தில வந்து நீ கஷ்டப்படனுமான்ற ஒரே கேள்விதான் என்னை உன் கிட்ட எதுவுமே சொல்ல விடாம தடுத்துடுச்சி…

அப்புறம் நாட்கள் எப்படி எப்படியோ போச்சு…. இந்திரா எம்மேல் வச்சிருந்த அன்பிற்கு கட்டுப்பட்டுட்டேன். அவ வேற சாதின்னு யாரும் சம்மதிக்கமாட்டாங்கன்னு எதோ அவசர கோலத்துல வீட்டை விட்டு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்….. அப்ப சொந்தக்காரங்க எல்லாம் பழிச்சப்ப… உங்கப்பா அதான் மாமா மட்டும்தான் எங்களை வாழ்த்தி சேர்த்துக்கிட்டாரு….

உங்க அண்ணன் ரொம்ப கோவமா சண்டை போட்டான்… அழுதான்..” டேய்… மித்ரா படிப்பு முடிஞ்சதும் உனக்கு கட்டி கொடுக்கனும்னு நானும் அப்பாவும் மனசுக்குள்ள வைச்சிருந்தோம்..” ன்னு சொன்னப்ப… நான் எதையோ இழந்துட்ட மாதிரி ரொம்ப பீல் பண்ணேன்…

நீ என்னை நேசிச்சியான்னு எனக்கு தெரியாது… நான் தவற விட்டுட்டேன் மித்ரா…. ஒரே காரணம் நீ சந்தோஷமா இருக்கனும்னுதான்…! இது உனக்கு தெரியாமலே போகட்டும்… இதெல்லாம் நினைவுகள்லயாவது பரிமாறிக்கலாம்னுதான் நாளைக்கு போன் பண்றதா சொன்னேன்…. இல்ல மித்ரா… நான் போன் பண்ணலை…. அழகான குழந்தை குடும்பம்னு அற்புதமா ரெண்டு பேருமே ஒரு வாழ்க்கையில இருக்கோம்… நீ என்னை தப்பா நினைச்சிட கூடாது நான் உனக்கு போன் பண்ணலே… நீ சந்தோஷமாயிரு ..!”

மனம் வெறுமையானதும்… பிரஷாந்த் கண்களை தூக்கம் இறுக பற்றி கொண்டது.

***

“மித்ரா உன் சிரிப்பு ரொம்ப நல்லாருக்கு…”

நீங்க இப்படி ஒரு நாளாவது பேசமாட்டிங்களான்னு அப்ப நினைச்சிருக்கேன் மாமா.. அப்ப நான் காதலை பத்தி எல்லாம் ஒண்ணும் நினைச்சதில்ல…. ஆனா என் பிரெண்டு வினோதினிதான் என்னை ரொம்ப வம்பு பண்ணுவா, “ஏய் உன் மாமன் ஹீரோ மாதிரி இருக்காண்டி…. உனக்கு பிடிக்கலைன்னா சொல்லுடி நான் லவ் பண்றேன்..ன்னு.! நீங்க வீட்டுக்குள்ள வரும்போதெல்லாம் அண்ணா என்னை உள்ளே போன்னு சொல்லும்… நானும் போய்டுவேன். ஆனா லேசா ஒரு தரம் உங்களை பார்த்துட்டுதான் போவேன்.

நீங்க அப்பா மேல் வச்சிருந்த மரியாதை, அண்ணாவிடம் கொண்டிருந்த நட்பு எல்லாம் உங்களை மெல்ல பிடிக்க வைச்சது. உங்களுக்கு தெரியுமா உங்க போட்டோ எல்லாம் ஒவ்வொரு ஆல்பத்திருந்து உருவி என் நோட்புக்கில யாருக்கும் தெரியாம ஒளிச்சி வச்சிருந்தேன்… ! உங்களோட டூ வீலர்ல உட்கார்ந்து ஒண்ணா சினிமாக்கு போற மாதிரி எல்லாம் கற்பனை பண்ணியிருக்கேன்… உங்களுக்கு ஒரு முறை அடிப்பட்டப்ப கோயிலுக்கு போயி சாமிகிட்ட உங்களுக்காக வேண்டிக்கிட்டு சாப்பிடாம கூட இருந்திருக்கேன். நான் பத்தாவது பாஸ் பண்ணிட்ட உடனே உங்க கிட்ட பேசனும்னு ஆசையா ஸ்வீட் கொடுக்கிற சாக்குல அத்தை வீட்டுக்கு வந்தேன். அந்த சமயம் நீங்க இல்ல… அத்தை மட்டும் ஆசிர்வாதம் பண்ணி என்னை நல்லா படின்னு அனுப்பி வச்சாங்க.

படிப்புல ஆர்வமா ரெண்டு வருஷம் போய்கிட்டிருந்தது… அப்பதான் மாமா திடீர்னு அந்த செய்தி வந்துச்சி…. நீங்க அந்த பெண்ணை விரும்பி ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதா.. உங்களை சொந்தக்காரங்க எல்லாம் திட்டினாங்க….கண்டபடி பேசினாங்க… எங்கப்பாதான் உங்களுக்கு ஆதரவா பேசினார் நடந்தது நடந்து போச்சி தவறா பேசறது எல்லாம் பாவம்… நீங்க ரெண்டு பேரும் நல்லாயிருக்கனும்னு வாழ்த்தினார். நாளைக்கு நீங்க போன் பண்ணா நடந்ததெல்லாம் சொல்லலாம்னு நினைச்சேன் மாமா…

வேண்டாம் மாமா…நான் உங்களை நினைச்சது உங்களுக்கு தெரியாமயே போகட்டும்…! ஒருவேளை நான் நினைச்சிருந்தேன்னு உங்களுக்கு தெரிஞ்சா வாழ்க்கையை தவற விட்டுட்டோமோன்னு நீங்க நினைக்க கூடாது. இந்திரா , குழந்தைகளோட நீங்க நல்லா இருங்க. நானும் சந்தோஷமாயிருக்கேன்…! நாளைக்கு நீங்க போன் பண்ணாலும் நான் எடுக்க மாட்டேன் மாமா..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *