மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ். சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும் நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின் தோழி கீதா அவளை எச்சரித்தாள்.
படு கிழங்கள்கூட இப்படி சாட்டிங்கில் ஏதாவது இளைஞன் படத்தைப் போட்டு இளம்பெண்களிடம் ஜொள்விட்டு பேசுவதாக
ஆனால் மாலினி நம்புவதாக இல்லை. ”வெப் கேமராவில் உன் தியானேஷை வரச் சொல்லுடி” என்றதற்கு அவன் ‘நாம் பார்க்காமலேயே லவ் பண்ணுவோம், இறுதியில் சந்திப்போம்” என்று கூறவும் மாலினிக்கும் சந்தேகம் தட்டியது.
கீதாவிடம் ஐடியா கேட்டாள்.
கீதா ஒரு ஐடியா கூறினாள். கம்ப்யூட்டரில் இல்லாமல் உங்கள் கைப்பட ஒரு கடிதம் அனுப்புங்கள் என்று மெசேஜ் தட்டச் சொன்னாள். அவனும் அனுப்புவதாகச் சொல்லி மெசேஜ் அனுப்பினான்.
இரண்டு நாளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட கடிதம் வந்தது.
கடிதத்தைப் படித்த கீதா சொன்னாள்.
”அடியேய் உன் ஆளூ ஆதாம் ஏவாளுக்குப் பொறந்த மூத்த பையன்டி, வயசு எப்படியும் அறுபதுக்கு மேலிருக்கும்”
எப்படிச் சொல்றே?
தமிழ் எழுத்தை உன் ஆளு எப்படி எழுதியிருக்கிறார் பாரு. எழுத்துச் சீர்திருத்தம் வர்றதுக்கு முன்னாடி வர்ற முறையில இதை பயன்படுத்திருக்கிறார். நம்ம ஏஜ் பசங்க இப்படி எழுதவே மாட்டாங்க”
என்று கீதா விளக்கவும் , கம்ப்யூட்டரில் அமர்ந்து அந்த ஜொள் ‘கிழவனுக்கு’ கெட்ட கெட்ட வார்த்தையில் மெயிலை தட்ட ஆரம்பித்தாள் மாலினி
– வி.சகிதா முருகன் (ஜனவரி 2013)