கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 15,108 
 

நீ என்னை விட உயரம் சற்று குறைவு. கப்பல் தரை தட்டுவது போல என் கண்கள் உன் உச்சந்தலை தட்டும். நேருக்கு நேர் நின்று பேசுகையில் என் கண்கள் சில சமயங்களில் உன் நெற்றி வகிடில் வாகனமாக தறிகெட்டு ஓடத் துவங்கும். அங்குமிங்கும் பார்வையை அலையவிட்டபடி பேசுகிற வழக்கம் கொண்ட நீ, சடாரென நிமிரும் போதெல்லாம் காதல் விபத்தொன்று நிகழ்ந்தென்னை தடுமாறச் செய்யும். துவக்கத்திலே ‘ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் நீ?’ என்ற கேள்வி உன் பார்வையில் இருக்கும். போகப் போக அது ‘மறுபடியுமா’ என்று கேட்கத் துவங்கியது.

அப்போது நாம் காதல் வயப்பட்டிருக்கவில்லை. முன்பே முடிவு செய்தது போல, விதி உன்னையும் என்னையும் ஒரே கல்லூரியில் கொண்டு வந்து சேர்த்திருந்தது. உனக்கும் எனக்குமான உறவு தெரியாமலே விடுதியிலும் வகுப்புகளிலும் அடிக்கடி சந்தித்து கொண்டிருந்தோம். மலையுச்சியிலிருக்கும் ஒரு சின்ன வீட்டுக்குள் அடைந்தே கிடந்தால், வெளியே இருக்கும் அழகான உலகின் சாத்தியங்கள் எப்படி புலப்படாதோ, அப்படித் தான் நீயும் நானும் ஒரு சின்ன உலகத்திற்குள் உழன்று கொண்டிருந்தோம். அந்த உலகத்திற்கு வெளியே அழகழகான பூக்களும் பட்டாம் பூச்சிகளும் கொண்ட புல்வெளியாக காதல் பரந்து விரிந்து கிடந்தது.

உன்னை முதலில் அன்னியவளாக அறிந்தேன். பின்னர் தெரிந்தவளாக, பின்னர் தோழியாக. நான் உன் மீது கொண்டது நட்பா என்பதில் எனக்கு இன்னமும் ஐயமே. இரும்பு மேஜையின் மீது வைக்கப்பட்ட ஒற்றை நாணயத்தை அதிவேகமாக கீழிருந்து செலுத்தும் காந்தம் போல, மேலே என் நட்பை செலுத்தியது காதலே என்று நினைக்கிறேன். வித்தையின் முடிவில் லாவகமாக நாணயத்தை காந்தத்தோடு சேர்த்து எடுத்திருக்கலாம் தான், ஆனால் நான் அவசரக்காரன். ஏற்கனவே தாமதமாகிக் கொண்டிருந்தது. என் இரு கைகளையும் மேலே தூக்கி ‘இதற்கு மேல் என்னால் ஆகாது’ என்று சொல்லி விட்டு அந்த மலை வீட்டை விட்டு வெளியேறி, வெளியே இருந்த காதலோடு சேர்ந்து கொண்டேன்.

காதல் வர என்ன காரணம் என்ற அபத்தமான கேள்வியை நீ கேட்டே விட்டாய். இது என்ன கேள்வி? நான் பதில் சொல்லவில்லை. பின்னாளில் நீ காதல் வயப்பட்ட உடன் இதே கேள்வியை உன்னை கேட்டு கேலி செய்யலாம் என்று நினைத்து கொண்டேன். ஆனாலும் நீ பலம் கொண்டவள் தான். நான் வெளியேறியதும் கதவை படாரென அடைத்து சாத்திக் கொண்டாய். ஜன்னல்கள் ஒளிக்கு மறுப்பு சொல்லி மூடிக் கிடந்தது. உன் வேர்களை நீ இன்னும் ஆழமாக வளரவிட்டு உறுதியாக நின்றாய். காதலை மறுத்ததும் ஒரு சூறாவளியாக நான் வருவேன் என்று நினைத்தாய் போலும்.

நான் சம்மதம் கேட்டால் என்ன சொல்வது என்பது தொடங்கி நான் கேட்கக் கூடிய கடைசி கேள்வி வரை யோசித்து நீ பதில் தயாராக வைத்திருந்தாய். உன்னை சொல்லி குற்றமில்லை. எவனோ ஒரு முட்டாள் இந்த ‘காதலுக்கு சம்மதம் கேட்கிற சடங்கை’ ஆரம்பித்து வைத்து போயிருந்தான். எனக்கு அதெல்லாம் செய்வதில் இஷ்டமில்லை. என்னால் காதலிக்க மட்டுமே முடியும். உனக்கு காதல் வந்தால் நீ வரத்தானே போகிறாய். இதற்கு மேல் இதில் கேட்பதற்கும் தருவதற்கும் என்ன புடலங்காய் இருக்கிறது? அதனால் நான் உன்னை எதுவும் கேட்கவில்லை. நான் காதலிக்கிறேன் என்பதை மட்டும் மறைக்காமல் சொல்லிவிட்டு நகர்ந்தேன். நீ என்னை மறுப்பதற்காக திரட்டி வைத்திருந்த அத்தனை பலமும் பதில்களும் ‘என்ன இது’ என்று உன்னை ஆச்சர்யத்தில் திரும்பி பார்த்தன.

அதன் பின்னர் தான் சங்கதியே. காதலை மறைக்கிற ஆள் நான் இல்லை என்பது போலவே, நட்பை முறிக்கிற ஆள் நீயும் இல்லை. காதலில் நாம் இருவரும் ஒரு ஒப்புதலுக்கு வந்தோமோ இல்லையோ, நீ நீனாக இருப்பது நான் நானாக இருப்பது என்ற ஒப்புதலுக்கு வந்தோம். அதிலேயே உனக்கும் எனக்குமான ஒற்றுமை உனக்கு புலப்பட்டிருக்க வேண்டும்.

பெருமேகக் கூட்டம் மெதுவாக கலையத் தொடங்கியிருந்த மாலைப் பொழுதொன்றில், நம்முடன் ஒரே ஒரு வருடம் படித்த அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து துக்கக் செய்தி வந்திருந்தது. மறந்தவர்களும், வர மறுத்தவர்களும் போக தனியாக நான் மட்டும் விடுதியிலிருந்து புறப்பட்டு வெளியே நடக்கும் போது, என் பின்னால் வந்து கொண்டிருந்தாய். காதல் என்னை நிறுத்தியிருக்கலாம், ஆனால் என்னை வழிநடத்தியது கண்ணியம் மட்டுமே. இருவரும் வீட்டை எப்படியாவது கண்டு பிடித்து போய் விடலாம் என்று புறப்பட்டோம். துளியும் காதல் கலக்காத சில கணங்களை கழித்து விட்டு விடுதி திரும்பி நடந்தோம். அன்று இரவு, கதவிடுக்கின் வழியே விழும் மெல்லிய வெளிச்சக் கோடாய் உன் உலகில் நான் விழுந்திருந்தேன்.

அதற்குப் பின்பான ஒவ்வொரு நாளையும் நான் நினைவுகளின் அத்தனை பைகளிலும் அடைத்து அடைத்து திணித்து வைத்திருக்கிறேன். நீ, நான், காதல் – மூவருக்குமான பரவச விளையாட்டு அது. அடுத்த ஊரில் பெய்கிற மழை உன் ஊர் எல்லையை நோக்கி வந்து கொண்டிருக்க, முன்னாள் சைக்கிளில் அதை துரத்திச் சென்றிருக்கிறாயா? அப்படியான பரவசம் எனக்கு.

நீ கொஞ்சம் கொஞ்சமாக உன்னை இழந்து கொண்டிருந்தாய். இல்லை இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக என்னை அறிந்து கொண்டிருந்தாய். எது எதுவோ பேசிக் கொண்டிருப்போம். சிலவற்றை பேசாமலும் இருந்தோம். இப்போது யோசித்து பார்த்தால் இதெல்லாம் என் தந்திரம் தான் என்று தோன்றுகிறது. உன்னை நீயும் என்னை நானும் அறிந்து கொண்ட பிறகு காதலில் விழுவது தவிர வேறு வழியில்லை என்று எனக்குத் தெரியும்.

அந்தக் காலங்களில் நீ மிகவும் பதட்டமாக இருப்பாய். பெருங்காற்று வீசும் போது தத்தளிப்பது போல. உனக்கு அப்போதெல்லாம் எத்தனை நடுக்கமாக இருக்கும் என்று நீ பின்னாளில் சொல்கிற போது உன்னை அப்படியே இழுத்து அணைத்துக்கொள்ளலாம் போல இருக்கும். ஹ்ம். இன்று வரை அந்த பாக்கியம் எனக்கில்லை.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உன் நடுக்கம் குறைந்தது. பேச்சில் சின்னதான உரிமையும் கேலியும் சேர்ந்திருந்தது. சின்ன சின்ன விருப்பங்களிலும் கோபங்களிலும் காதலை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாய். சூரியனை மறைத்திருக்கும் அந்தி மேகம், விளிம்புகளில் பொன்னென மின்னுவது போல, உன் கண்ணில் அத்தனை பிரகாசம். வெளியே காத்துக் கொண்டிருந்த என்னையும் காதலையும் நீ வேடிக்கை பார்க்கத் துவங்கினாய், பார்க்காதது போல. வாசல் திறந்து விளக்கு வைப்பது, ஜன்னல் திறந்து வராத மழையை தேடுவது என்றான உன் காரியங்களை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம். மண்ணில் விழுகிற முதல் மழைத்துளி போல யோசித்து யோசித்து நீ உன் பாதத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே வைத்தாய். அன்றிரவு பெருமழை பெய்தது.

இப்போது ஆட்டம் எப்படி மாறிவிட்டது? நீ காதலை சொல்வதற்கு முன்தினம் வரை நான் ஒரு இளவரசன் போல அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தேன். எப்படி எல்லாம் பேசிக்கொண்டிருந்தேன்? பொடி வைத்து பேசினேன், கவிதையாகப் பேசினேன், பெரிய மகான் போல பேசினேன். நீ காதலைச் சொன்னதும் அத்தனையும் பறிபோனது. இப்போது நீ ராணி ஆகியிருந்தாய். என் ஆட்டம் அத்தனைக்கும் பதில் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறாய். சுருக்கமாக, பேசுவது என் வேலை இல்லை என்பது உன் கருத்து. கேட்பது மட்டுமே என் வேலை.

பேச்சு, பேச்சு, பேச்சு – வாய் ஓயாமல் பேச்சு. உன்னைத் தான் சொல்கிறேன். எங்கே நீ இத்தனை காதலையும் ஒளித்து வைத்திருந்தாயோ? பிரமிப்பாக இருக்கிறது.

இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று நீ அனுப்பிய தகவல் வந்ததும் என் அத்தனை நினைவுகளையும் ரத்து செய்தேன். இதோ நீ வந்ததும் “இந்த உடை அழகாக இருக்கிறது என்று அவன் சொன்னான் இவள் சொன்னாள்” என்று ஆரம்பிப்பாய். உன் உடையை பற்றி இன்று நான் பேசப்போவதில்லை என்று முடிவு செய்துகொள்வேன். என் மூக்கு ஏன் இப்படி இருக்கிறது என்று மீண்டும் சலிப்பாய். அப்போது தான் முத்தமிட வசதியாக இருக்கும் என்று சொன்னதும், சிரித்துக்கொண்டே நீ சொல்லும் கெட்ட வார்த்தையை பெற்றே நான் அன்றைய பேச்சை துவக்கி வைப்பேன். சிரிப்பிலும் கேலியிலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது காதல்.

இன்று இத்தனை உருக்கமாக அழகாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. உனக்கு இது தெரிந்தால் அவ்வளவு தான்! பேச வந்த அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டு கச்சேரியை ஆரம்பிப்பாய். “என்ன? ஏதாவது மலையுச்சி வீட்டிற்கு என்னை பெயின்ட் அடிக்க வைத்துக்கொண்டிருக்கிறாயா?” என்று ஆரம்பிக்கும் போதே எனக்கு சிரிப்பு வந்து விடும்.

தேவதைகளை காதலிக்கிறவர்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது. காதலித்தால் உன் போன்ற குட்டிப் பிசாசுகளை காதலிக்க வேண்டும்.

இன்றும் நீ என்னிடம் அதே கேள்வியை கேட்பாய். ஏனோ அடிக்கடி உன்னை நினைத்துக் கொண்டு சிரித்தேன் என்று. கதவுகளும் ஜன்னல்களும் திறந்தே கிடக்கும் அந்த மலையுச்சி வீட்டிற்குள் ஒரு பட்டாம்பூச்சி புகுந்து வெளியேறும் போதெல்லாம் நமக்கு அனிச்சையாக ஒரு சிரிப்பு வரும் என்று கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். ஆனால் அதை எல்லா நேரமும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அதுவும் உன்னிடம்? வெகு நேரம் பேசிவிட்டு பிரிய மனமில்லாமல் பிரிகிற ஒரு மழை நாள் இரவில் என் பெயரும் சில தொடர்புள்ளிகளுமாக ஒரு குறுந்தகவல் அனுப்பி ஒரு உரையாடலை நீ துவக்குவாய். காதல் உச்சத்தில் இருக்கும் ரம்மிய கணம் அது. அப்போது என் இந்த கண்டுபிடிப்பை ஒரு கதை போல நான் சொல்ல சொல்ல நீ கேட்பாய். அது வரை சிரிப்பான ஆயிரம் காரணங்களை மாற்றி மாற்றி நீயும் நானும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கலாம்.

– அலுவலகத்தில் நடந்த ஒரு போட்டிக்காக எழுதியது. (டிசம்பர் 2008)

Print Friendly, PDF & Email

2 thoughts on “நீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *