நினைவெல்லாம் நித்யா…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,725 
 

“மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு” சத்தம்போட்டு என்னை
எழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு.

துள்ளி எழுந்து தமிழகத்தின் மிகப் பிரபலமான அந்த வார இதழில் என் சிறுகதையை
கண்டவுடன் கண்ணில் நீர்துளிர்த்துவிட்டது.

எத்தனை வருட தவம் இது! எத்தனை வருட முயற்சி இது! வானத்து தேவதைகளே
எங்கே சென்றீர்கள்? உலகப் புகழ்பெறப்போகும் எழுத்தாளனுக்கு கிடைத்த முதல்
பரிசுக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்களா?

மேகங்களே இன்றுமட்டும் பூக்களை மழையாக பொழியுங்கள். சரித்திரத்தில் இடம்பெறப்போகும்
ஒரு முக்கிய எழுத்தாளன் இன்று பிறந்திருக்கிறான் என்று உலகிற்கு சொல்லுங்கள்.

என் கைகள் சிறகாக மாறி விண்ணோக்கி பறக்க ஆரம்பித்த நொடியில்…

“டேய் என்னடா அமைதியாகிட்ட?” உலுக்கிய நண்பன் என்னை மீண்டும் இவ்வுலகிற்கு
அழைத்துவந்தான்.

“மச்சான்,என்கிட்ட கூட சொல்லவே இல்லை எப்போடா கதைய அனுப்பினே?” ஆர்வமுடன் கேட்டான்
நண்பன்.

அப்பொழுதுதான் எனக்கு உறைத்தது. இந்தக் கதையை நான் அனுப்பவே இல்லையே! யார் அனுப்பி இருப்பார்கள்?

“நான் அனுப்பவே இல்லடா,எனக்கே ரொம்ப குழப்பமா இருக்கு….யார் அனுப்பி இருப்பாங்க?”

“என்னது நீ அனுப்பலையா? அப்போ யாரா இருக்கும்…ம்ம்…டேய் அவளாதான் இருக்கும்டா” கண்ணடித்தான்
நண்பன்.

நித்யாதான் அந்த “அவள்”. என் காதலி. பூக்களின் மனித வடிவம். என் கல்லூரியில் படிக்கின்ற ஐந்தடிமல்லிச்சரம்.

அவள் அனுப்பி இருப்பாளா என்று எண்ணிக்கொண்டே
கல்லூரிக்கு சென்றேன்.

“கங்கிராட்ஸ் டா” கைகுடுத்தாள் நித்யா.

“ஏண்டி, என் கதைய பத்திரிக்கைக்கு அனுப்பினா சொல்லமாட்டியா” செல்லக்கோபத்துடன் கேட்டேன்.

“என்னடா சொல்ற,நான் அனுப்பலையே” குழப்பத்துடன் என்னைப் பார்த்தாள் என் நித்யா.

“என்னது நீ அனுப்பலையா? அப்போ எப்படி வந்தவுடனே கங்கிராட்ஸ் சொன்ன?”

“நோட்டீஸ் போர்ட்ல போட்டிருந்துச்சு அதனாலதான் சொன்னேன்”

“என்ன நடக்குதுன்னே புரியலை பத்திரிக்கைக்கு யார் அனுப்பினதுன்னு தெரியலை,அதுக்குள்ள நோட்டீஸ் போர்ட்ல வேற போட்டிருக்குன்னு சொல்ற, யார் இதை எல்லாம் பண்ணினது?”

“நான் தான்” பின்னாலிருந்து குரல்கேட்டது…

அங்கே…

திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்….மின்விசிறி நின்றிருந்தது…அறைத்தோழனின் குறட்டைச்சத்தம் தவிர
வேறு எதுவும் இல்லை…

அடடா எல்லாம் கனவா? சரி, கனவுலயாவது நம்ம கதைய பப்ளிஷ் பண்றாங்களே…. என்னை நானே சமாதான படுத்திக்கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்.

நித்யா சிரித்துக்கொண்டே கேட்டாள்…. “இதுதான் கதையா, இதே மாதிரி பலதடவை வந்துருச்சுடா”

தெரியும்டி செல்லம்…ஆனால் கனவுன்னு தெரிஞ்சதும் கதை முடிஞ்சிடும். ஆனா என் கதை இன்னும்
முடியலை…

அப்படியா எப்படி டா சொல்ற?

அதுவந்துடி….

இறந்த காதலியின் நினைவுகளுடன் தனியே இருட்டில் பேசிக்கொண்டிருந்த
என்னை கவலை கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர் என் விடுதி நண்பர்கள்.

– Tuesday, November 27, 2007

Print Friendly, PDF & Email

1 thought on “நினைவெல்லாம் நித்யா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *