தொலைந்தது போனவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 22,214 
 

மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை தி நகர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. சூரியனின் வெட்பத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் நகரம் நகர்ந்து கொண்டு இருக்க தனது பயணத்திற்கான இறுதி கட்ட ஷாப்பிங் செய்து கொண்டிருந்தான் திலீபன். திலீபனின் தந்தை தமிழ் ஈழத்தின் மீது கொண்ட பற்றால் திலீபன் என்று இவனுக்கு பெயர் வைத்தார்.

அலுவல் காரணமாய் திலீபன் ஆறு மாத ஆஸ்திரேலியா நாட்டு பயணத்திற்கு தயார் ஆகிவிட்டான். தனது நண்பர்களுக்கு எல்லாம் ட்ரீட் கொடுத்து முடித்தாகிவிட்டது. முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் அப்பா அம்மா தங்கை என குடும்பமே விமான நிலையம் வரை வந்து கை அசைத்து வழி அனுப்பியது.

அம்மா தன் முந்தானையால் கலங்கிய கண்களை மறைக்க முயற்சித்து கொண்டிருந்தாள். தங்கையின் பிரிவு இதுவரை இல்லாத பாசத்தை அடிமனதில் ஆழ்த்தி எடுத்தது. காரணமின்றி அவன் மனது தவித்து கொண்டிருந்தது.

விமான நிலையத்தில் அணைத்து நடைமுறைகலும் முடித்து வெற்றிகரமாக பாதுகாப்பு சோதனையை தாண்டி கேட் 4கில் அமர்ந்து தனது முகநூளில் தான் வெளிநாடு போகும் தகவலை அப்டேட் செய்தான்.

நள்ளிரவில் பயணம் துவங்கியது. உறங்கி கிடக்கும் மேகங்களுக்கு மேல் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டு இருந்தது. உறக்கம் பிடிக்கவில்லை இரவு நீண்டுகொண்டே இருந்தது. ஏதேதோ என்ன ஓட்டங்கள் மனதுக்குள் ஓடி கொண்டிருந்தது.

“ பயணம் என்பது வாழ்கையில் நடக்கும் ஒரு அற்புதம். ஒவ்வொரு பயணத்திற்கும் பின்னால் ஒரு அர்த்தம் உண்டு. ஒரே இடத்திற்கு செல்லும் போது ஒரு மனநிலையும், திரும்பும் போது வேறு மனநிலையையும் பயணம் நமக்கு உணர்த்தும். சில நேரங்களில் அது இனிமையானவையாக, எதிர்பார்ப்பு கொண்டவையாக, சில நேரங்களில் ஏமாற்றமும் வலியும் கொண்டவையாக ”.

சில்லென்று காலை காற்றுவீச அந்நிய நாட்டில் கால்தடம் பதித்தான் திலீபன். அவனை வரவேற்க முன்னிரவே மழை, மண்ணை குளிர்ச்சி ஆக்கி வைதிருந்தது. வேற்று மண்ணின் காற்றை சுவாசித்தபடி புது உலகை கண்டு ரசித்து கொண்டிருந்தான். புது மக்கள், காற்று, மொழி, இனம் என்ன அனைத்தும் புதியதாய் தெரிந்தது.

ஆஸ்திரேலியா அலுவலகத்தின் உதவியுடன் தனக்கு என்று ஒதிக்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ்சை அடைந்தான். பயணகளைப்பு மிகுதியால் நெடுநேரம் உறங்கிவிட்டான்.

மாலையில் கண்விழித்து, மேசையில் இருந்த காபி மேக்கரில் காபி போட்டு தனது லேப்டாப்பை திறந்து முகநூலை பார்க்க துவங்கினான். தனது நண்பர்களிடம் இருந்து வந்த வாழ்த்து தகவல்கள் பார்த்தபடி பொழுது கடந்தது. மறுநாள் முதல் தனது அலுவலகத்திற்கு சென்று தனது பணியை துவங்கினான். நாட்கள் கடந்தது.

ஒரு வார விடுமுறை நாளில் ஆஸ்திரேலியாவில் உள்ள குரண்ட பட்டாம்பூச்சி சரணாலயத்திற்கு சென்றிருந்தான். வண்ணத்து பூச்சிகளை படம் பிடித்து கொண்டிருந்தான் திலீபனின். பறந்துகொண்டிருக்கும் வண்ணத்து பூச்சிகளில் ஒன்று அவனை நோக்கி தரையில் நடந்து வருவதுபோல நெற்றியில் சின்னதாய் திருநீர் பூசி, கன்னத்தில் அழகாய் மை வைத்து, பட்டம்பூச்சி பட்டம்பூச்சி என தன் மழலை கொஞ்சும் குரலில் கத்தியபடி புன்னகைத்துக்கொண்டே ஒரு அழகிய பெண் குழந்தை அவனை நோக்கி ஓடிவருவதை தன் காமெராவின் கண்களால் பார்த்தான் .

குழந்தையை பார்த்த மறுகணமே தெரிந்துவிட்டது திலீபனுக்கு யாரோ தமிழ் குடும்பத்தின் குழந்தை என்று. அவன் குனிந்து தன்னை நோக்கி ஓடிவந்த குழந்தையை யாருடா செல்லம் நீங்க என்று கேட்டவாறு குழந்தையாய் தூக்கினான்.

தீப்தி எங்கடி ஓடுற, நில்லுடி என சொல்லிக்கொண்டே குழந்தையின் தாய் இந்திரா பின்னால் ஓடிவந்தால். குழந்தையை திலீபனின் கையில் பார்த்த அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டால் இந்திரா. அந்த அதிர்ச்சியில் இருந்த மீழ அவளுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டது.

திலீபன் நீ எப்படி இங்க என வார்த்தைகள் தடுமாற, உதடுகள் நடுங்க கேட்டால் இந்திரா. வாழ்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று திலீபன் எதிர் பார்க்கவில்லை. தான் விரும்பிய பெண்ணின் குழந்தை தன் கையில் இருக்க தன்னவளை மீண்டும் சிந்திப்போம் என்று. இந்திரா….. நீ எப்படி.., இந்த குழந்தை என தயங்கி தயங்கி கேட்டான்.

இருவரும் அருகில் உள்ள ஒரு காபி ஷாப்க்கு சென்று அமர்ந்தார்கள். குழந்தை திலீபனிடம் ஒட்டிக்கொண்டது. அவனிடம் ஏதோ மழலை பேச்சை பேசியபடி அவன் கன்னங்களை கிள்ளி சிரித்து கொண்டிருந்தது. மெதுவாக மௌனத்தை உடைத்து பேச துவங்கினாள் இந்திரா.

கல்யாணத்திற்கு பிறகு தன் கணவருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்துவிட்டது. இதோ இவதான் எங்க உலகம். வாழ்கை அப்படியே போகுது என்றாள். திலீபன் ஏதும் பேசவில்லை.

சிறிது நேரத்தில் காபி மேசைக்கு வந்தது. காபியை கலக்கியபடி பேச துவங்கினான் திலீபன். நான் சென்னைல தான் இருக்கேன் இந்திரா. இப்போ ஆறுமாசம் ஒரு ப்ரொஜெட் விஷயமா இங்க வந்திருக்கேன் என்றான். அவரு ஆபீஸ்ல இருந்து வர நேரம் ஆகிடுச்சி நான் போகனும். வீட்ல இல்லனா கஷ்டம் ஆகிடும் நான் கெளம்பனும் திலீபா. முடிஞ்சா மீண்டும் பாக்கலாம் என்று கூறி விடைபெற்றாள். அவள் சென்ற பிறகும் அதிர்ச்சியில் இருந்து மீழ முடியாமல் அதே இடத்தில அமர்ந்திருந்தான் திலீபன்.

காபிஷாப்பில் இருந்து வீட்டுக்கு காரில் புறப்பட்டான் திலீபன். அந்த வண்டியின் சக்கரத்தை விட அவன் மனது வேகமாய் ஓடிக்கொண்டு இருந்தது. தன் வீட்டை அடைந்த உடணே தனது டைரியை எடுத்து புரட்டினான் திலீபன். அவன் டைரி எழுதுவதை விட்டு நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. நான்கு வருடங்களுக்கு முன்பு வரை அவன் டைரியில் அணைத்து பக்கங்களிலும் இந்திராவின் பெயர் தான். மெதுவாக அந்த எழுத்துகளின் மேல் தன் விரல்களை வைத்து தடவி பார்த்தான். கண்கள் கலங்கிக்கொண்டு இருந்தது.

நான்கு வருடங்களுக்கு முன்பு அவன் இந்திராவை முதல் முதலில் பார்த்ததும் ஒரு பறவைகள் சரணாலயத்தில் தான். கால சுழற்சியில் இருவருக்கும் நட்பு மலர்ந்தது, பின்பு கனிந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் ஒருதலையாய் காதலித்து கொண்டிருந்தார்கள், மற்றொருவருக்கு தெரியாமல். வெளியில் இருந்து பார்பவருக்கு இருவருக்கும் உள்ளது நட்பு மட்டுமே. ஆனால் இருவருக்கும் தனி தணியாய் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு. இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் அதீத பாசமும் அக்கறையும் வைத்திருந்தனர். ஒரு நாள் கூட பேசாமல் இருந்ததில்லை. இருக்க முடிந்ததில்லை.

ஒரு சந்தர்பத்தில் திலீபன் அலுவல் காரணமாக மேற்குவங்காளம் சென்று இருந்தான். தனது பணிகளை முடித்து விட்டதாகவும். அவன் தங்கி இருக்கும் இடத்தில இருந்து இரவு இரயிலில் புறப்படும் மறுநாள் விடியற்காலை கொல்கத்தா இரயில் நிலையதில் நான்கு மணிக்கு சென்னை செல்லும் இரயிலை பிடிக்கணும் ஆனா எப்படி எந்திரிக்க போறேனோ தெரில, தூங்கிட்ட அவளவுதான் என்றன். அலாரம் வைத்து தூங்குட என்றல் இந்திரா. அலாரம் வைப்பதில் பிரெச்சனை இல்லை, அலாரம் சத்தம் என்னக்கி என் காதில் விழுந்து இருக்கு என்று சொல்லி சிரித்தான்.

மறுநாள் சரியாக 3.00 மணிக்கு இந்திராவிடம் இருந்து அழைப்பு வந்தது. அலாரம் சத்தம் கேட்காத திலீபனுக்கு, எத்தனை இரைச்சலுக்கு நடுவிலும் இந்திராவின் ரிங்டோன் மட்டும் புல்லாங்குழல் இசை போல கேட்டது. உடனே தூக்கத்தில் இருந்து விழித்து என்ன இந்த நேரத்துல கூப்பிடுற, ஏதேனும் பிரச்சனையா என்றான். லூசு நீ தான சொன்ன, 3 மணிக்கு எந்திரிகனும்னு அதான் போன் பண்ணேன் என்றாள்.

“அவனுக்காக அவள் விழித்திருந்தது அவனுக்கு பிடித்து இருந்தது. அவனுக்காக அவள் விழிதிருந்ததை அவள் ரசித்ருந்தால்”. இப்படி பலமுறை ஒருவர் மேல் ஒருவர் அன்பு காட்டி தன் அக்கறையையும் பாசத்தையும் வெளிப்படுத்தி கொண்டார்கள்.

ஒரு சமயம் திலீபன் பலமுறை அழைத்தும் இந்திராவிடம் இருந்து பதில் இல்லை. திலீபனுக்கு கோவம் கோவமாய் வந்தது. இனி அவள் கூப்பிடும் வரை ஆவலுடன் பேசபோவதில்லை என்று தனக்கு தானே சொல்லி கொண்டான். மாலையில் இந்திராவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. பேசகூடாது என்ற வீராப்பு அவள் பெயரை பார்த்த மறுநொடி ஓடைந்துவிட்டது.

தோய்ந்த குரலில் இந்திரா பேசினால். காலையில் இருந்து உடல் நிலை சரியில்லை என்றும், தனது அடிவயிற்றில் வலி ஏற்பட்டதை பற்றியும் அழுதுகொண்டே சொன்னால். திலீபனுக்கு புரியவில்லை. ஒரு பெண் தன் உடல் உபாதிகளை இந்த அளவு ஏன் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று. அவன் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம் என்று அவனுக்கு மெதுவாய் தான் விளங்கியது. அன்று முதல் அவன் இன்னும் அவளை அதிகமாய் நேசிக்க துவங்கினான்.

இப்படி பல சந்தர்பங்களில் தனக்கும் இந்திராவுக்கும் ஏற்பட்ட பல நிகழ்வுகளை அந்த டைரயின் பக்கங்களை புரட்டி பார்த்து நினைவுகளை அசைபோட்டு கொண்டிருக்க, டைரியில் அவன் கடைசியாய் எழுதின பக்கங்கள் வந்தன. இந்திராவும் திலிபனும் கடைசியாய் பேசிகொண்ட தருணங்களின் மிஞ்சி இருக்கும் சாட்சி அந்து டைரியில் உள்ள எழுத்துகள் மட்டுமே.

எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்க தொடங்கிட்டாங்க என அடிக்கடி சொல்ல துவங்கினால். திலீபனுக்கு அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை. ஒரு வேலை நாம் வெறும் நண்பர்கள் தான் என இந்திரா நினைவு படுதுகிறாலோ என தன்னையே பலமுறை கேட்டுகொண்டான். ஒரு நாள் திடீர் என்று நான் மாப்பிள்ளை பாக்க சரின்னு சொல்லிட்டேன் என்றாள் இந்திரா. திலீபனுக்கு விளங்க வில்லை.

இத்தனை நாள் இது காதல் என்று எண்ணிக்கொண்டு இருந்தவனுக்கு, இது வெறும் நட்பு மட்டும் தான் என அவள் சொன்னதுபோல் இருந்தது. இந்திராவுக்கு தன்னை போல் எந்த எண்ணமும் இல்லையோ என யோசிக்க துவங்கினான் திலீபன்.

இந்திராவோ, திலீபனிடம் இருந்து என்ன பதில் வரும் என காத்துகிடந்தால். இருவரும் ஒருவரை ஒருவர் காயபடுத்தி விட கூடாது என்று எண்ணி தங்கள் ஆசைகளையும், கனவுகளையும் பகிர்ந்துகொள்ளவே இல்லை.

இந்திரா தன்னை பெண்பார்க்க வருகிறார்கள், ஜாதகம் வந்தது என்று சொல்லும் போதெல்லாம் அவன் அணுஅணுவாய் துடித்துக்கொண்டு இருந்தான். இறுதியாய் ஒருநாள் தன் திருமணம் முடிவாகிவிட்டது என சொன்னாள் இந்திரா.

இருவருக்கும் ஆனா தொலைபேசி தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. இறுதியாக அந்த நாளும் வந்தது. இந்திராவின் திருமணத்துக்கு வண்ணத்துபூச்சிகள் நான்கு சட்டத்துக்குள் அடைபட்டு கிடப்பது போல ஒரு பரிசை கொடுத்துவிட்டு, கடைசியாய் அவளை பார்த்தவாறு வெளியே வந்தான். அதன் பிறகு அவன் அவளை பார்க்கவும் இல்லை, அந்த டைரியை தொடவும் இல்லை.

அன்று முதல் திலீபன் இந்திராவின் வாழ்கையில் இருந்து தொலைந்து போனான் (பறந்து போன வண்ணத்துபூச்சி ஆனான்).

திலீபன் என்ற பெயர் வைத்த ராசியோ என்னமோ, இவன் ஆசையும் நிறைவேறாமலே போனது. இந்த பயணத்தை துவங்கும்போது ஏதோ இந்த டைரியை தன்னுடன் எடுத்து கொண்டுபோகணும் என்று உள் மனசில் எண்ணம் வந்தது. அதம் அர்த்தம் இப்போது அவனுக்கு விளங்கியாய்த்து.

நாட்கள் ஓடியது. ஒருநாள் திலீபனின் முகநூளில் ப்ரென்ட் ரெகுஸ்ட் வந்து இருந்தது. யார் என்று பார்த்தல் இந்திரா. நீண்ட தயக்கத்துடன் அக்செப்ட் செய்தான். நான்கு வருடங்களுக்கு பிறகு இருவரும் பேச துவங்கினர். நான்கு வருடங்களில் இருவரிடமும் பல மாற்றங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து இருந்தனர். இருவரின் வார்த்தைகளிலும் முதிர்ச்சி தெரிந்தது. பல விஷயங்களை பேசி கொண்டனர். நான்கு வருட இடைவேளி குறைந்தது.

ஒருநாள் தன் மகள் தீப்தியின் பிறந்த நாள் விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டால். முதல் முறையாக இந்திராவின் வீட்டிற்கு சென்றான் திலீபன். அங்க இந்திரா கணவரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு அவ்வப்போது திலீபன் இந்திராவின் வீட்டுக்கு போக துவங்கினான். அவர் குடும்பத்தில் நெருக்கம் ஆனான். குறிப்பாக இந்திராவின் குழந்தையுடன்.

ஒரு கட்டத்தில் இந்திராவின் குழந்தை திலீபனை விட்டு பிரியாத அளவுக்கு ரொம்பவும் இணக்கம் ஆகிவிட்டது. எங்கு சென்றாலும் திலீபனின் கையை பிடித்து நடக்க ஆசை பட்டது. இந்திராவை போலவே அவள் குழந்தையும் அவனை திலீப் திலீப் என்ன மழலை குரலில் அழைப்பதை அவன் விரும்பினான், ரசித்தான். இப்படியே நாட்கள் ஓடின. திலீபனின் பயணமும் முடிவு பெரும் கட்டம் வந்தது.

மறுநாள் காலை அவன் இந்தியாவிற்கு புறப்பட தயாராக இருந்தான். அன்று இரவு அவனுக்கு இந்திராவின் வீட்டில் அவள் கைகளால் சமைத்த விருந்து சாப்பாடு முடித்துவிட்டு நள்ளிரவில் தன் வீட்டை அடைந்து நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த டைரியில் எழுது துவங்கினான்.

மறுநாள் விடியற்காலை விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். பிரியாவிடை கொடுக்க இந்திரா குடும்பத்தோடு விமான நிலையத்திற்கு வந்திருந்தாள். இந்திராவை இறக்கிவிட்டு தனது காரை பார்க்கிங் பண்ண சென்றான் இந்திராவின் கணவன். இந்திராவின் கைகளில் தூங்கி கொண்டு இருந்த குழந்தையை வாங்கி தான் தோள்களில் போட்டு குழந்தையின் கூந்தலில் வருடிகொடுத்தது அவன் விரல்கள்.

இந்திரா பேச துவங்கினால். திலீபா இன்னும் எத்தன நாள் இப்படியே இருப்ப, எனக்கு புரில, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. ஒரு புது வாழ்கையை வாழ ஆரம்பி. உன் திருமண அழைபிற்காக காத்திருப்பேன். சீக்கிரம் உன்ன குடும்பத்தோடு பார்க்கணும் என்றாள்.

திலீபன் தன் மனதுக்குள் சொல்லிகொண்டான், எனக்கு அன்று புரிந்திருந்தால், இன்று இப்படி நின்று கொண்டிருக்கமாட்டேன் என்று.

திலீபன் மௌனமாய் கேட்டுக்கொண்டு இருந்தான். இந்திரா தனது குடும்பத்தோடு திலீபனுக்கு பிரியாவிடை கொடுத்தால். இந்திராவின் குழந்தை நிகழ்வது ஏதும் உணராமல் தூங்கிகொண்டு இருந்தால். குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு திலீபன் பாதுகாப்பு சோதனையை தாண்டி நடக்கு துவங்கினான்.

தான் தனிமையில் இருக்க வாய்ப்பு கிடைக்கும் போதுதான் எல்லாருக்கும் தன்னை சுய மதிப்பீடு செய்யவும் தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கவும் நேரம் கிடைகின்றது. தன் கண்களை மூடி நினைவுகளை அசைபோட்டு கொண்டே திலீபன் விமானத்தில் அமர்ந்திருந்தான்.

மறுநாள் திலீபனை வரவேற்க சென்னையில் அவன் குடும்பம் தயார் ஆகிக்கொண்டு இருந்தது. ஆறுமாதம் கழித்து வரும் பிள்ளைக்கு திலீபனின் அம்மா ஆசை ஆசையாய் சமைத்து வைத்திருந்தால்.

இந்திரா மனசு எங்கோ பறந்துகொண்டு இருக்க, இந்திராவின் குழந்தை ஹால்லில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்து கொண்டு இருந்தால். குழந்தையின் விரல்கள் டிவி ரிமோட் பொத்தானை ஒவ்வொன்றாங்க அமிக்கி விளையாடி கொண்டிருந்தது. குழந்தையின் விரல்கள் ரிமோட்டின் வால்யூம் பொத்தானை தொடர்ந்து அழுத்தியதால் டிவியின் சத்தம் சமையல் அறிவை கேட்க, என்னடி பண்றனு இந்திரா கேட்டுக்கொண்டு ஹாலை நோக்கி வந்தால்.

டிவி ரிமோட்டை எடுத்து வால்யூம்மை குறைக்க முயன்றால். ஆங்கில செய்தி சேனலில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் மறைந்துவிட்டது, விமானத்தை பற்றி எந்த தகவலும் இல்லை என்ற செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இந்திராவின் விரல்கள் நடுக்கத்தில் ரிமோட் நழுவி தரையில் விழுந்தது சிதறியது. இந்திராவின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிந்துகொண்டிருந்தது. இந்திரா மனசுக்குள் சத்தமாய் கதறி அழுது கொண்டிருந்தாள்.

இந்திராவின் கண்ணீரை பார்த்த குழந்தை காரணம் புரியாமல் வாய்விட்டு சத்தமாய் அழ துவங்கியாது. இந்திராவின் வாழ்கையில் இருந்து மீண்டும் ஒருமுறை திலீபன் தொலைந்து போனான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *