திணைமயக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,249 
 

தம்புராவின் சீரான சுருதி கதவின் இடுக்குகளின் வழி நுழைந்து குரலுடன் இயைந்து பயணித்து கொண்டு இருந்தது, அவள் வீட்டு வாசலை அடையும் போது. அழைப்பு மணியை அழுத்த தயக்கமாய் இருந்தது, வீட்டின் முகப்பு திண்ணையில் அமர்ந்து கொண்டேன், தண்ணீரில் செய்தது போல தண்ணென்று இருந்தது திண்ணை. காற்றின் தங்கு பைகளில் நிறைந்து வழியும் குரல் மெல்ல அறையெங்கும் நிறைந்து வெளியே வந்திருக்க வேண்டும், வீட்டினுள் நுழைந்தால் மனசெங்கும் அப்பி கொள்ளும் என்று தோன்றியது ஒரு சுகந்த பரிமள வாசமாய். குரலை யாராவது வாசனையோடு ஒப்பிடுவார்களா என்று தெரியவில்லை, ஆனால் இது தான் தோன்றியது எனக்கு.

சாஹித்யத்தின் கட்டுகளை கேட்கும் போது, சித்தரஞ்சனி என்று தோன்றியது ஊன்றி கவனிக்கையில் பழைய பாடலான காதல் கனிரசமே, பி.யூ. சின்னப்பா அல்லது தியாகராஜ பாகவதராய் இருக்கலாம். அப்பாவை கேட்டால் சொல்வார்… அதன் தொடர்ச்சியாய் வரும் சாரசம் வசீகர கண்கள் சீர் தரும், என்று கிட்டப்பாவும், பாகவதரும், சின்னப்பாவும் துக்கடாக்களாய் விழுவார்கள். அப்பாவின் இசை ஆர்வம் அலாதியானது… திடீரென்று சமரசம் உலாவும் இடமே… என்று சீர்காழியை தொடுவது அப்பாவுக்கு மட்டுமே சாத்தியம்.

இப்போது தெரிகிறது முழு சாஹித்யமும், நாததணு மனுஷம்… சங்கரம்… தியாகராஜ கிருதி… மோதக ராணிக மோக்தம சாம… வேதசாரம் எனும் போது அதன் வளைவுகளும், பிர்க்காகளும் என்னை சுற்றி ஒரு ஜலதாரைகளை பிரவகிக்க செய்தது போல இருந்தது. முழு கிருதியும் முடித்த பிறகு, அழைப்பு மணியை அழுத்தலாம் என்று தோன்றியது. கமலாவை எனக்கு ஒரு காமன் பிரண்ட் மூலமாக தான் தெரியும். சுரேஷ் என்ற அகத்தியன் தான் எனக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தான். அவளின் கல்கியில் வந்த சிறுகதையை பற்றி சொல்லி அவளை சந்திக்கலாம் என்று சொன்னவுடன், அடடா ஒரு எழுத்தாளர சந்திக்க போகிறோம்… அதுவும் பெண் எழுத்தாளர் என்று ஆர்வமாய் தலையாட்டினேன்.

அவள் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றான், இதே போல தான் அன்று திண்ணையில் என்னை உட்கார வைத்து விட்டு உள்ளே சென்றான்… அழிக்கம்பிகளில் உரிந்த பெயிண்டை எடுப்பதா இல்லை அப்படியே விட்டு விடுவதா என்று யோசித்து கொண்டு இருந்தேன்… ஹல்லோ என்று வந்தால் கமலா… வெண் பணியில் கருப்பு பூக்களும், கொடிகளும் சுற்றிய ஒரு சல்வாரின் துப்பட்டா முனையை தூக்கி போட்டுக் கொண்டு தலையை சாய்த்து, நான் கமலா நீங்க… நான் சொல்வதற்கு முன் அறிமுக சம்பிரதாயமாய் சுரேஷ், ஸ்ரீனிவாச ராகவன் என்றான். நான் ஆமாம் என்பது போல தலையாட்டினேன், உள்ள வாங்க என்று மாடிக்குச்செல்லும் படிக்கட்டில் என்னை உட்கார வைத்தாள். சுரேஷ் எதிரில் ஒரு மோடாவை போட்டு உட்கார்ந்து கொண்டான்… அவள் சுவரில் சாய்ந்தபடி நின்றவள், சுவிட்ச் பாக்ஸ் இடிப்பது போல இருந்ததால், தனக்கும் ஒரு மோடாவை எடுத்து வந்து அமர்ந்து கொண்டாள்.

சரிந்த மூக்கு, நெற்றி பொட்டுக்கும் மூக்கிற்கும் ஒரு சின்ன குழிவு வந்து மேடேறிய மூக்கு. சிறிது சரிந்த மாதிரி கண்ணாடி அணிந்திருந்தாள். மஞ்சள் கலந்த வெளுப்பு முகத்தில் அப்போது ஒரு சில மச்சம் போன்ற புள்ளிகள் இருந்த மாதிரி இருந்தது. பெரிய கண்கள், கண்ணாடியை மீறி தெரிந்தது… சற்று பெரிய முகம்… குளிர குளிர ஐஸ் க்ரீம் சாப்பிட்டதன் பின்னாடி வரும் குரலில் மெல்லிய உலோக தீற்றல் இருக்கிற மாதிரி இருந்தது… என்ன பண்ற என்ற அவளின் சம்பிரதாய விசாரிப்புகள் அத்தனை லயிக்கவில்லை எனக்கு… சுரேஷ் சுஜாதா, சுந்தர ராமசாமி என்று பேசிக்கொண்டிருந்தான்… கணையாழியின் கடைசிப்பக்கங்கள் பேச்சில் வழிந்தது… சுரேஷ் சுஜாதாவின் தீவிர ரசிகன்… கணேஷ் வசந்த் ஜோக்ஸ், சுஜாதாவை விட அவனுக்கு அதிகம் தெரியும். வாஷிங்டன் சலவைக்காரி ஜோக்கும் அவனுக்கு தெரிந்தால் அது ஆச்சரியமில்லை…

நான் அவள் எழுதிய சிறுகதை பற்றி பேசினேன்… ராமேஸ்வரத்தை சொந்த ஊராய் கொண்டவன்… படித்து முடித்து வேலை பார்த்து விட்டு வந்தவன் ராமேஸ்வரம் மாறி விட்டதை பார்த்து மனம் கனத்து திரும்புவதாய் இருக்கும்… அவள் எப்படி இருந்தது என்று கெட்ட போது… நான் எழுதி அனுப்புகிறேன் என்று சொன்னேன், அவளும் சரியென்று தன் முகவரியை கொடுத்தாள். சுரேஷ் இன்னும் கொஞ்சம் காலேஜ், ரகோத், சத்யா என்று பேசி விட்டு அசோகமித்திரன் படிச்சேன், தண்ணீர் னு ஒரு நாவல், ஒரே சோகம் அவர் சோகமித்திரன் தான் அசோகமித்திரன் என்று சொன்ன போது கண்ணில் நீர் வர சிரித்தாள்… மூன்று பேருக்கும் காப்பி அவள் அம்மாவின் கைகளில் இருந்தது… வாசம் அவளின் அம்மாவிற்கு முன்பாகவே வந்து குசலம் விசாரித்தது…

அவள் அம்மாவின் குரலில் சஷ்டி விரதததன்று அடிக்கும் சின்ன மணியின் சுனாதம் போல கணீரென்று, இனிமையாகவும், கம்பீரமாகவும் இருந்தது… காப்பி முடித்த பிறகு, கொஞ்சம் பேச்சை வளர்த்து இன்னொரு காப்பிக்கு எங்கும் போது வெளியே கிளம்பினோம்… தொடர்ந்து பேசுங்க… எழுதுங்க… என்று சொன்னவள் உடனே மாற்றி பேசு… எழுது என்றாள். அங்கு பிடித்து வளர்ந்த நட்பு இலக்கியம், சினிமா, கர்நாடக இசை என்று தொடர்ந்து வளர்ந்து பெருகியது… வாரம் தவறாமல் அவளை வந்து சந்திக்கும் எனக்கு இந்த வாரம் வித்யா லோலம் விதளித காலம்னு… புலர்ந்திருக்கு… அவளின் அம்மா வெளியே வந்தார்கள், கையை முந்தானையில் துடைத்துக் கொண்டே, அது என்னமோ எல்லோரும் இப்படி தான் வருகிறார்கள் கையில் இருக்கும் வேலையை இப்பத்தான் முடிச்சு துடைச்சுட்டு வர்றேங்கிற மாதிரி, அல்லது வேலையா இருந்தேன் வந்துட்டியாங்கிற மாதிரி, மேலும் தொடரும் சம்பாஷனைகளில் இருந்து, இது இரண்டாவது இல்லை முதலில் சொன்னதா என்பது தெரியவரும்.

ஸ்ரீனிவாசராகவன், இப்பதான் வந்தியா, இல்லை ரொம்ப நாழியாச்சா வந்து என்றவுடன், இல்ல மாமி இப்போதான் என்றேன். அவர்கள் வீட்டில் எல்லோரும் என்னை முழுப்பெயர் சொல்லிதான் அழைப்பது வழக்கம். கமலாவிற்கு என் பெயரை முழுக்க சொல்வது தான் பிடிக்கும், அதுவே அவள் வீட்டில் உள்ளவர்களுக்கும் சொல்லி, அதுவே ஒரு பழக்கமாகிவிட்டது. உள்ள வா, வந்துடுவா…இப்போ… என்றபடி ராதிகா!! என்று அழைத்துக் கொண்டே உள்ளே செல்வாள். ராதிகா கமலாவின் மற்றொரு பெயர். உள் நுழைந்து வழக்கமாய் நான் அமரும் மாடி படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டேன், மாமி ஒரு புத்தகம் கொடுத்துவிட்டு போனாள், கல்கி என்று ஞாபகம். புரட்டிய பக்கங்களில் ஏதும் சுவாரசியமாய் இருப்பதாக தெரியவில்லை, இரவு சூரியனோ ஏதோ ஒரு சிறுகதை, கண் தெரியாதவனைப் பற்றியது, கொஞ்சம் பச்சைக்கனவின் சாயல் இருந்தது போல தோன்றியது. பாதி படித்துக் கொண்டு இருக்கும்போதே வந்து நின்றாள் கமலா… ஒரு வெள்ளைப்புடவையும் அரக்குக் கலர் ரவிக்கையும் அணிந்திருந்தாள், வந்தவள் ராமர் கோயிலுக்கு போகலாமா.? என்றாள்

இருவரும் ராமர் கோயிலுக்கு சென்றோம், வழியில் அவள் ஒன்றும் பேசவில்லை, எப்போதும் பேசிக்கொண்டே வருபவளின் பேசாதனம் என்னை என்னவோ செய்தது. நானே ஆரம்பித்தேன்…

சித்தரஞ்சனி நல்லாயிருந்தது… உன் குரல் மாதிரியே இல்லை கமலா! உன் குரல்ல எப்போதும் இருக்க ஹஸ்கி ட்ரேஸஸ் இந்த குரலில் இல்லை என்றேன்.

அப்படியா! நான் பாடலை இன்னைக்கு, இன்ஃபேக்ட் எனக்கு இந்த பாட்டு பாடமே சொல்லிக்கலை, இது என் சின்ன அத்தை பாடியது, மாயவரத்துல இருந்து வந்திருக்கா…

எனக்கு வரன் வந்திருக்காம், யூ.எஸ், ல இருக்கானாம் சாப்ட் வேர்ல இருக்கானாம், ஜாதகம் எல்லாம் பொருந்தி போறதாம். இதுபோல ஒரு வரன் கிடைக்காதுன்னு எல்லோரும் சொல்றா! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை…

போட்டோ பார்த்தியா…

பார்த்துட்டேன் நன்னாதான் இருக்கான், கொஞ்சம் முன் மண்டைல முடி இல்லை, ஆனா அதுவும் அவனுக்கு பொருத்தமாத்தான் இருக்கு…

அப்புறம் என்ன அப்படியும் உனக்கு பிடிக்கலேன்னா வற்புறுத்துவாங்களா என்ன?

பிடிக்கலேன்னு சொல்லலை, ஆனா இப்போ தேவையான்னு தான் தோன்றது!

வற்புறுத்த மாட்டா, ஆனா ரொம்ப எதிர்பார்க்கிறா என்ன பண்ணட்டும்… இப்போ எனக்கு யுனைடெட் இண்டியால வேல கிடைச்சுருக்கு, பெங்களூர் போகனும்னு சொன்னா யாருக்கும் என்னை அங்க அனுப்ப இஷ்டம் இல்லை. எனக்கு பி.ஜி. முடிச்சது கல்யாணம் முடிக்கத்தான்னு நினைக்கும்போதெ ஜீரனிக்கமுடியலை. அவனுக்கு நான் வேலை பன்றது பிடிக்குமோ பிடிக்காதோ… நான் கண்ணாடி போட்டுருக்கத பாத்துட்டு காண்டாக்ட் போட சொல்றான் போல, அதிலயும் எனக்கு இஷ்டம் இல்லை. கண்ணாடில நான் பார்க்க நன்னாதானே இருக்கேன்…என்றவள் என் பதிலை எதிர்பார்க்காமல், சில சமயம் சம்மதிச்சுடலாம்னு தோன்றது, சில சமயம் வேண்டான்னு தோன்றது ஸ்ரீனிவாசராகவன். அவள் என்னிடம் பேசும்போது பிராமண பாஷையை முற்றிலும் விலக்க நினைப்பாள், சில சமயம் அவளையும் அறியாமல் வந்துவிடும்.

இங்க இருக்கிற வெள்ளைக்கலர் பாண்டியன் பஸ், அவிங்க இவிங்க, திருவிழா கலாட்டா, நட்பு எல்லாத்தையும் விட்டுட்டு போகனும்…

என்ன பன்றதுன்னு தெரியலை, ஆனாலும் இது பிரச்னையான்னு தெரியலை. நான் தான் முடிவெடுக்கனும், என்றவள் ராமர் சன்னதியை அடைந்ததும் மெதுவாய் செருமி பாடத்தொடங்கினாள்

“நிதி சாலசுகமா… ராமுனி சன்னிதி சேவ சுகமா… என்று கல்யாணியில் ஊற்றெடுத்தது, அவள் தெளிவடைவது போல தெரிந்தது எனக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *