சுடாத இரவும் தொடாத உறவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 10,151 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஞாயிற்றுக் கிழமை இரவில், திங்கள் வந்தது. தேய்ந்து வளர்ந்த அத்திங்களைக் கண்டு, செவ்வாய்த் தாமரைகள் அழுது கொண்டிருந்தன. அரக்காம்பல் என்னும் அல்லிகள் அப்போது சிரித்துக்கொண்டிருந்தன.

அந்த ஊரும், தடாகத்திலுள்ள நீரும்; கலப்பைகள் உழுதுவைத்த சேறும், இரவு நேரத்தில் ஒற்றுமையாக உறங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அவள் மட்டும் உறங்கவில்லை.

சுடாத இரவும், இரண்டு நாட்களாகத் தொடாத உறவும், அவளுடைய இளமை உணர்ச்சிகளை எழுப்பிவிட்டதால், உள்ளத்தில் ஏக்கமும், ஏக்கம் வந்ததால் அவளுக்குத் தூக்கமும் வரவில்லை.

அக்காள் தங்கையோடு பிறக்காத அந்த அழகு நிலா, அப்போது அவள் வீட்டுக்கு நேராக வந்து, அவளுடைய பருவ முகத்தைப் பார்த்தது. அண்ணன் தம்பிகளோடு பிறந்த அவள், அந்த அழுக்கு நிலவை அண்ணாந்து பார்த்தாள்.

வெளிச்சத்தைக் கடன்வாங்கும் அந்த வெள்ளி நிலா, அப்போது அவளுக்குப் பனியையும் தந்தது. உள்ளத்தில் பிணியையும் தந்தது.

ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையே, அவள் தன் பெற்றோரை உற்று நோக்கினாள். அந்நள்ளிரவில் அவர்கள் இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

நல்ல சமயம், இதனை நழுவ விடக் கூடாது என எண்ணிக் கொண்டு, தன் காற் சிலம்புகளைக் கழற்றி ஓரிடத்தில் வைத்துவிட்டு, வெளியே புறப்பட்டாள்.

வழியில், நாயொன்று அவளைக் கண்டு குலைத்தது. அந்த நாயை விரட்டுவதற்காகத் தரையில் கிடந்த கல்லொன்றை எடுத்தாள். அது, தரையில் நன்றாகப் பதிந்திருந்ததால், அவள் எவ்வளவோ முயன்றும் அக்கல்லை எடுப்பதற்கு முடியவில்லை. இவ்வூரிலுள்ளவர்கள், மகா மடையர்களாக இருக்க வேண்டும். இல்லை யென்றால், இந்தக் கல்லைக் கட்டிப் போட்டு விட்டு நாயை அவிழத்து விடுவார்களா? என்று எண்ணிக் கொண்டே, அவள் விரைவாக நடந்தாள்.

மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 326-ல் சிந்து நதியைக் கடந்து, தட்சசீலத்திற்கு வந்து சேர்ந்தானே அதுபோல, அவளுடைய அன்புக் காதலன் அந்த நள்ளிரவில், ஓர் ஆற்றைக் கடந்து, அடுத்துள்ள சிற்றுர் வழியாக ஓர் இலுப்பைத் தோப்புக்கு வந்து சேர்ந்தான். சிறிது நேரத்தில் அவளும் அங்கு வந்து சேர்ந்தாள். நெஞ்சிலே நின்றவன், அவள் கேரிலே நின்றான். நிலவிலே வெந்தவள், அவன் நிழலிலே நின்றாள்.

அவன் தன்மையாகவும்
அவள் முன்னிலையாகவும்
அவன் மோனையாகவும்
அவள் எதுகையாகவும் அப்போது இருந்தனர்.

“களைத்திருப்பவர்களுக்கு, வழி பெருந்தூரமாக இருக்கிறது” என்று அவன் சொன்னான்.

“விழித்திருப்பவர்களுக்கு இரவு மிகவும் நீண்டிருக்கிறது” என்று அவள் சொன்னாள்.

“இந்த நள்ளிரவில் நாம் மட்டும்தான் விழித்துக் கொண்டிருக்கிறோம்” என்றான்.

“ஏன்? நம்மைப் போலவே கள்வர்களும் விழித்துக் கொண்டிருப்பார்கள்” என்றாள் அவள்.

கள்வர்கள் விழித்துக் கொண்டிருப்பது – திருடுவதற்காக!

காதலர்கள் விழித்துக் கொண்டிருப்பது – தீண்டுவதற்காக!

திருடுவது குற்றமாகும்;

தீண்டுவது சுற்றமாகும் என்றான் அவன்.

“ஆரணங்கைத் தீண்டுவதும்
ஆண்டவனை வேண்டுவதும்-அவரவர் சுயநலத் திற்காகத்தான்” என்றாள் அவள்.

“அன்றாடம் நாம் சந்திப்பதும் அதற்காகத்தான்” என்றான் அவன்.

அவள் சிரித்தாள். அவளுடைய பல்வெளிச் சத்தைக் கண்டு, பால்நிலா வெளிச்சம் வெட்கப்பட்டது.

அவன், அப்போது அவளை நோக்கி, “இந்த நிலா வெளிச்சத்தில் நீ இப்போது மிகவும் அழகாக இருக்கிறாய்” என்றான்.

“இப்போது மட்டுமென்ன, நான் எப்போதுமே அழகாக இருப்பவள் தான். செம்பொன்னும், சிவந்த ரோஜாவும் எப்போதுமே அழகாகத்தானே இருக்கும்” என்றாள்.

“உன்னிடம் தனமும் இருக்கிறது.
உன் பேச்சில் நூதனமும் இருக்கிறது.
உன் மலர்விழியில் மயக்கமும் இருக்கிறது.
அதில் தேவையற்ற மையும் இருக்கிறது” என்றான்.

“என்ன! தேவையற்றமையா? கண்ணுக்கு மையிடுவது தேவையற்றதா?” என்று கேட்டாள்.

“ஆமாம்! உண்ணும் உணவுக்கு நெய் தேவைதான். மின்னும் கண்ணுக்கு மை தேவையா? பெண்கள் தங்கள் கண்களுக்கு மையிட்டுக் கொள்வது கவர்ச்சிக்காகவும், ஆண்களின் உள்ளங்களைக் கவர்வதற்காகவும் தானே” என்றான்.

“இல்லை! மங்கையர் மையிட்டுக் கொள்வது ஆண்களின் நன்மைக்காகவே அன்றி, அவர்கள் வாழ்வை நாசப்படுத்துவதற்காக அல்ல” என்றாள்.

“ஆண்களின் நன்மைக்காகவா மங்கையர் மையிட்டுக் கொள்கின்றனர்?”

“ஆமாம்! நச்சுத்தன்மையுள்ள வெப்பம், ஒரு பெண்ணின் உடலில் இருப்பதைவிட, அவளுடைய கண்ணில் அதிகமிருக்கிறது. அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவள் தன் கண்களுக்கு மையிட்டுக் கொள்கிறாள். அதனால் அவனுடைய கணவனுக்கும், அவளைச் சந்திக்கும் ஆண்களுக்கும் பரிகாரம் ஏற்படுகிறது. மை வைத்துக் கொள்ளாவிட்டால் அந்த வெப்பம், ஆண்களின் உடல் நலத்தை அதிகமாக பாதித்துவிடும். அதனால்தான் அவர்கள் மையிட்டுக் கொள்கின்றனர்” என்றாள்.

“நீ ஒரு மருத்துவரின் மகளல்லவா? அதனால்தான் இதைப் பற்றி நீ இவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாய். ஆமாம், உன் தந்தையை எல்லோரும் ‘வயிற்றுவலி வைத்தியர்’ என்று அழைக்கின்றார்களே அது ஏன்? அவருக்கு அடிக்கடிவயிற்றுவலி வருவதுண்டோ?” என்று கேட்டான்.

அப்போது அவள் அவனை நோக்கி “வாதிடுவதில் மிகவும் வல்லவராக விளங்கிய அப்பைய தீட்சிதர் என்பவருக்குத்தான் அன்றாடம் நண்பகல் நேரத்தில் வயிற்றுவலி வருமாம். அவரைப் போல் என் தந்தைக்கு வயிற்றுவலியும் கிடையாது. வேறு வலிகளாலும் அவர் இதுவரை துன்புற்றதில்லை. பிறருக்கு வரும் வயிற்று வலியை அவர் குணப்படுத்துவதில் வல்லவர். அதனால் தான் அவரை எல்லோரும் வயிற்றுவலி வைத்தியர் என்று அழைக்கின்றனர். என் தந்தையை மிகச் சாதா ரணமானவர் என்று நினைத்து விடாதீர்கள். அவர் ஒரு மருத்துவமேதை. அவருடைய தந்தையும் அவருடைய பாட்டனும் புகழ்பெற்ற மருத்துவர்களாக விளங்கிய வர்கள். ஜான் பஹ்டன் என்பவர், மன்னர் ஷாஜகான் மகளுக்கும், அஜீஸ்தீனே என்பவர், பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்குக்கும், இங்கிலாந்து டாக்டர் எஸ்லி என் பவர், ராஜாராம் மோகன்ராய்க்கும், ஆலங்குடி வேணுகோபால் நாயுடு என்பவர், அறிஞர் அரசஞ் சண்முகனாருக்கும் மருத்துவம் பார்த்த மகா மேதாவிகள். அதுபோலவே வலயவட்டத்தில் வாழ்ந்த தனுக்கோடி வைத்தியர் என்பவர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு வைத்தியம் பார்த்தவர். அவர் யார் தெரியுமா? அவர் என் முப்பாட்டன்.

ஷென்லுங் என்னும் சீன மருத்துவன் நூறு மூலி கைகளைத் தானே தின்று பார்த்து, அவை மருந்துக்கு நல்லவை என்று கண்டுபிடித்தானாம். என் பாட்டனாரோ, ஆயிரம் மூலிகைகளைத் தின்றுபார்த்து அவற்றின் குணங்களைப்பற்றி அரியதோர் ஆராய்ச்சி நூல் எழுதியவர். அவர் டாக்டர் டி. எம். நாயரைப் போல் காது, மூக்கு, தொண்டை இவற்றைப் பற்றிய நோய்களைக் குணப்படுத்துவதிலும் வல்லவர். என் தந்தையும் இந்த நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லவர். என் தந்தை எதிலும் நிதானமானவர். மிகவும் சிக்கன மானவர். அதுவேண்டும் இது வேண்டும் என்று நான் அவரிடத்தில் கேட்டால், கேட்டவுடனே அவர் வாங்கித் தரமாட்டார் என்று கூறினாள்.

அதைக் கேட்டவுடன் அவன் அவளை நோக்கி, “பாலானது அவ்வளவு விரைவில் தயிராவதில்லை. உலகத்தில் பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏன்? நீயும் இப்படித்தான். நான் கேட்டால் நீ மட்டும் உடனே கொடுத்துவிடுகிறாயா என்ன?” என்றான்.

“நீங்கள் கேட்பது, உணவாக இருந்தால் நான், அதனை உடனே கொடுத்து விடலாம். நீங்கள் அடிக்கடி என்னிடம் ஒற்றடம் அல்லவா கேட்கிறீர்கள். ஒருபெண் தன் உதடுகளை உடனே கொடுத்து விடலாமா?” என்றாள்.

அதைக் கேட்டவுடன் அவன் சிரித்தான்.

“இரவு பூத்திருப்பதைப், போல, இந்த இலுப்பை மரங்களும் பூத்திருப்பதைப் பாருங்கள்” என்றாள் அவள்.

“இளவேனிற் பருவம் வந்தால் இலுப்பை மரங்களும் பூக்கும். வரிநிறப் பாதிரி அரும்புகளும் வாய்திறந்து மலரும்” என்றான் அவன்.

“ஆமாம்! பாதிரிமரம் என்று அம்மரத்தை நாம் அழைக்கிறோமே, நம் நாட்டுக்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்களில் யாரோ ஒருவர் அம்மரத்தைத் தம் தோட்டத்தில் வளர்த்ததால், அதற்கு அப்பெயர் வந்திருக்குமேர்?” என்று கேட்டாள்.

“நீ சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே! முருகையன் என்னும் பெயருடைய ஒருவன், தன்னுடைய கொல்லையில் ஒரு முருங்கை மரத்தை வளர்த்தால், அம்மரத்தை முருங்கை மரம் என்று அழைக்காமல் முருகையன் மரம் என்று அழைத்தால், அதனை யாராவது ஒப்புக் கொள்வார்களா?” என்று அவன் அவளைத் திருப்பிக் கேட்டான்.

அப்போது அவளது மெல்லிய தோளின் மீது இலுப்பைப் பூ ஒன்று விழுந்தது. அவள் அதனை எடுத்துப் பார்த்துவிட்டு, “இலுப்பைப் பூவுக்கு இரண்டு பக்கமும் ஓட்டை இருக்கிறதே” என்றாள்.

“இலுப்பைப் பூவுக்காவது, வாயிலும் வயிற்றிலும் ஓட்டை இருக்கிறது. இந்நாட்டில் பலருக்கு, முதுகிலும் மூளையிலும் அல்லவா ஓட்டைகள் இருக்கின்றன”, என்றான்.

“இப்படிப்பட்ட ஓட்டை மனிதர்களை நாம் வேட்டைக்கு அனுப்பினாலும், வெற்றியோடு திரும்பமாட்டார்கள். அவர்களைக் கோட்டைக்கு அனுப்பினாலும் அரசியலை அசிங்கப்படுத்தி விடுவார்கள்” என்றாள்.

அப்போது, அவர்களைக் கடந்து உடும்பு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட அவன், அவளை நோக்கி, “இதோபார் உடும்பொன்று ஓடுகிறது” என்றான். அவள் அந்த உடும்பைப் பார்த்தாள். அப்போது அவன் அவளிடத்தில்,

“உடும்பு நூறாண்டுகள் உயிரோடிருக்கும். பாம்பு ஆயிரம் ஆண்டுகள் உயிரோடிருக்கும். குளத்தில் போட்ட சேலை, எத்தனையோ ஆண்டுகள் அப்படியே இருக்கும்” என்றான்.

“இவற்றைப் போல் ஒருவன் நெடுங்காலம் வாழ்வதால் மட்டும் பயனில்லை. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரைப் போன்றும், ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியைப் போன்றும், முப்பதாண்டுகளே இவ்வுலகத்தில் வாழ்பவனாக இருந்தாலும், அதற்குள் அவன் பல அரிய செயல்களைச் செய்பவனாக இருத்தல் வேண்டும். மேலை நாட்டில் பிறந்த மோசாத் என்னும் புகழ்பெற்ற பாடகன், தனது 9வது வயதிலேயே பெருங் கச்சேரி களில் பாடத் தொடங்கிவிட்டான். பேஸ்ஸே என் பவன் 15வது வயதிலேயே சொற்பொழிவாற்றுவதில் சிறந்து விளங்கினான். வாஷிங்டன் இர்வின் என்பவன் 17வது வயதிலேயே பெரிய பத்திரிகையாசிரியனாகி விட்டான். அலெக்சாந்தர் 21வது வயதினிலேயே திக் விஜயத்திற்குக் கிளம்பிவிட்டான். வில்லியம் பிட் என்பவன், 24வது வயதிலேயே இங்கிலாந்தில் நிதியமைச்சராகப் பதவியேற்றான். இவர்களைப் போன்று மக்கள் அரிய செயல் புரிதல் வேண்டும்” என்றாள்.

அதனைக் கேட்ட அவன், அவளை நோக்கி, “அவர்களைப் போன்று அரிய செயல் செய்ய என்னால் இயலாவிடினும், சில உரிய செயல்களை என்னால் செய்ய முடியும். ஜான் பன்வார்ட் என்னும் ஓவியன், மூன்று மைல் நீளமுள்ள துணியில் பெரிய ஓவியமொன்றை ஆறு வருட காலம் பாடுபட்டு அருமையாகத் தீட்டினானாம் அவனைப்போல் ஆறு வருட காலம் தொடர்ந்து ஓவியம் தீட்ட முடியாது என்றாலும், ஆறு வருட காலம் தொடர்ந்து உன்னை முத்தமிட முடியும். இது தான் என்னால் முடிந்த அரிய செயல்” என்று சொல்லிக் கொண்டே அவளைத் தழுவுவதற்கு முயன்றான். அவள் நாணத்தோடு நகர்ந்தாள். அவன் அவளுடைய கரத்தைத் தொட்டுத் தடவியபடி, “குறிஞ்சி பாடிய கபிலரின் கரங்கள் மிகவும் மெல்லியதாக இருந்ததெனச் சங்கப்பாடல் ஒன்றில் படித்தறிந்தேன். இப்போது உன் கரங்களைப் பிடித்தறிந்தேன்” என்றான்.

“முடிவதற்கு முன் நடத்தும் முதல் ஒத்திகையா இது” என்று அவள் கேட்டாள்.

“குற்றாலக் குறவஞ்சியைப்போல் ஒரு குறவஞ்சியும், முக்கூடற்பள்ளுப்போல் ஒரு பள்ளும், வருணகுலா தித்தன் மடல்போல் ஒரு மடலும் கிடையாது. ஆடல் பாடல், அழகு இம்மூன்றும் ஒருங்கமைந்து விளங்கும் உன்னைப்போல் பேரழகு படைத்த பெண்ணும் இவ்வுலகில் கிடையாது. அழகுதான் பெண்களின் கையிருப்பு. நீ ஓர் அதிசயமான நெருப்பு. நீ பூக்களில் சிறந்த தாமரைப்பூ, அதுவும் எட்டாம் நாளில் மலரும் தாமரைப்பூவன்று. முதல் நாளன்று மலரும் தாமரைப் பூ”, என்றான்.

“முதல்நாள் மலர்கின்ற தாமரையாக இருந்தா லென்ன? எட்டாம் நாள் மலர்கின்ற தாமரையாக இருந்தாலென்ன? இரண்டும் ஒன்றுதானே” என்று கேட்டாள்.

“இரண்டும் ஒன்றுதான் என்றாலும், அதன் மலர்ச்சியிலும் வளர்ச்சியிலும் பல மாறுதல்கள் இருக்கின்றன. தாமரைமலர், எட்டு நாட்கள் வரையிலும், காலையில் மலர்ந்து, மாலையில் குவியும் இயல்புடையது. அதன் முதல்நாள் மலர்ச்சியிலேதான் தேனிருக்கும். மறுநாள் அதில் தேனிராது. அதுமட்டுமல்ல, அப்பூவிலுள்ள புறவிதழ்கள் ஒவ்வொருநாளும், ஒவ்வொன்றாகக் கருகும். நீ அப்படிப்பட்ட தாமரையல்லவே!” என்றான் அவன்.

“நீங்கள் என்னைப் புகழ்ந்தது போதும். இந்த ஆண்களே எப்போதும் இப்படித்தான். பெண்களைக் கண்டுவிட்டால், அவர்களைத் தம் வாய் வலியெடுக்கும் வரையில் வர்ணித்துக் கொண்டே இருப்பார்கள்” என்றாள்.

அடிக்கடி தன் உதடுகளால் அவள் உதடுகளைத் துடைத்துவிடுபவன், அப்போது அவளுடைய காய் மேடுகளையும், கனிமேடுகளையும் தொட்டான். அவள் அவனை நோக்கி, “திபேத்திய நாடோடிகள் குதிரை ஏறுவதிலும், குறிபார்த்துச் சுடுவதிலும் வல்லவர்கள். நீங்களோ, குறிப்பறிந்து நடப்பதிலும், குறிபார்த்துத் தொடுவதிலும் வல்லவர்” என்று சொல்லிக்கொண்டே, நல்ல நல்ல மலர் போன்ற அவள் மெல்ல மெல்ல நடந்தாள்.

மெதுவாக நடந்தால், புல் கூட ஊசியைப்போல் குத்தும் என்று கூறிக் கொண்டே அவளை இறுகத் தழுவினான். அதனால் அவளுடைய கடைக்கண்கள் சிவந்தன. முத்தமிட்டான். அவளுடைய உதடுகள் வெளுத்தன.

கீழே திணை மயக்கம்.

மேலே இணை மயக்கம்.

– எச்சில் இரவு, முதற் பதிப்பு: ஜனவரி 1980, சுரதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *