சாதிகள் இல்லையடி பாப்பா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,648 
 

நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்ணுறே?” – நர்மதா.

“”எங்க பேச்சுப் பேசிப் பழகியே ஆகணும்னு ஏன் நர்மதா பிடிவாதம் பிடிக்கிறே… எங்க உறவுலேயே நாங்க தமிழ்தான் பேசிக்கறோம்” என்றான் ரமேஷ், நர்மதாவைப் பார்த்தபடி.

இருவரும் வீட்டைவிட்டு, ஊரை விட்டு ஈரோட்டுக்கு ஓடிவந்து இரண்டு நாட்களாகிவிட்டன. வெகுதூரத்தில் இருந்தெல்லாம் ஓடிவந்துவிடவில்லை. ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஊரில் இருந்து ஓடிவந்து குமரன்ஸ்ரீ லாட்ஜில் அறை எடுத்துத் தங்கிவிட்டார்கள்.

சாதிகள் இல்லையடி பாப்பாரமேஷ் சுள்ளியம்புத்தூரில் தான் சில ஆண்டுகளாகத் தறி ஓட்டுகிறான். வாரம் எப்படியும் ஆயிரத்து ஐநூறுக்குப் பக்கமாய் சம்பாதிப்பவன். நர்மதாவோ கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தவள். அவளுடைய அப்பா டெய்லரிங் கடை வைத்திருந்தார்.

காதல் யார் யாருக்கு எப்போது பூக்கும் என்பதைத்தான் சொல்லவே முடிவதில்லையே. நர்மதா தன் அப்பாவுடன் ஒரு தோழியைப் போலத்தான் பழகினாள். வீட்டுக்கும் ஒரே பெண். தோழனைப் போல பழகிய அப்பாவிடம் கூட தன் காதலைச் சொல்லாமல், ஓடி வந்துவிடும் அளவுக்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது. காதலைச் சொன்னால் தோழன் விசாரிப்பார், காதலன் யாரென்று. காதலன் மூங்கில் பாளையத்துப் பையன் என்று எப்படிச் சொல்வாள்? தோழன் ஏற்றுக் கொள்வாரா? சரி, சாமி ரொம்ப சிறப்பு என்று கூறி என் பெண்ணின் சாமர்த்தியமே சாமர்த்தியம்தான் என்று அக்கம்பக்கமெல்லாம் தம்பட்டமா போடுவார்?

கல்லூரியில் சல்பியூரிக் ஆசிட் பற்றி படிக்க வேண்டிய நர்மதா லாட்ஜ் அறையில் தெலுங்கு சொல்லிக்குடு என்று ரமேஷிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவனோ அபிராமி தியேட்டரில் மதியக் காட்சி “பச்சை என்கிற காத்து’ பார்க்க போகலாம் என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான் நர்மதாவிடம். விழிகளை மிரட்டுவதுபோல உருட்டி விழித்து ஆள் காட்டி விரலை உதட்டருகே வைத்துக் காட்டினாள் நர்மதா!

“”நேனு படத்துக்கு ராலேது.. நுவ்வு ராரா… சரசுக்கு ராரா” என்று இரு கைகளையும் நீட்டினாள் நர்மதா. நல்லவேளை லாட்ஜ் சுவரில் எந்தக் கடவுள் படமும் மாட்டப்பட்டிருக்கவில்லை. இந்தப் பெண் படிப்பில் மண்ணை வாரிக் கொட்டிவிட்டு இங்கு வந்து மெத்தையில் அமர்ந்து கொண்டு ஏன் இப்படி? என்று எந்தக் கடவுளாக இருந்தாலும் வருத்தப்பட்டிருக்கும்.

ரமேஷ் வேறுவழியில்லாமல் அவள் கரங்களுக்குள் சிறைப்பட்டான். அவனை வாரி இழுத்து தன் மீது போட்டுக் கொண்ட நர்மதா, “”நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்றே?” என்றாள். மீண்டும் அதைக் கேட்கும் மனநிலையில் ரமேஷ் இல்லை.

சமயம் பார்த்து கதவு தடதடவென தட்டப்பட்டது. இருவரும் மிரண்டுபோய் விலகினார்கள். ரமேஷிற்கு உள்ளூர இரண்டு நாட்களாகவே பயம். இவள் குடும்பத்தார்கள் தேடி வந்து தன்னை மிதித்துவிட்டு, இவளைக் கூட்டிப் போய்விடுவார்களோ என்று. அப்படியாகத்தான் இருக்கும். ஆனால் நர்மதா முகத்தில் இவனைப் போன்ற பதட்டம் எதுவும் இருக்கவில்லை. எப்போதும் போலவே கலவரமின்றி இருந்தாள். கதவு மீண்டும் தடதடத்தது.

நர்மதா கட்டிலை விட்டிறங்கிச் சென்று தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்தாள். எதிரே காக்கி உடுப்புக்காரர், “”ஒத்தும்மா…” என்று குரல் கொடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தார். அறையை நோட்டம்போட்டுவிட்டு, “”நீதான் ரமேஷாடா?” என்றார், ஒதுங்கி நின்றிருந்த இவனிடம். “”ஆமாங்க சார்” என்று முனகினான்.

“”எப்படா இவளை கூட்டிட்டு ஓடி வந்தே? எங்க வச்சு இவளுக்குத் தாலி கட்டினே? காலைல இருந்து ஈரோட்டுல ஒரு லாட்ஜ் விடாம நானும் இன்ஸ்பெக்டர் ஐயாவும் தேடு தேடுன்னு தேடிட்டு வர்றோம்… சொல்றா?” என்று கேட்ட அவர் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“”ரெண்டு நாள் ஆச்சுங்க சார்… திண்டல் மலையில முருகன் முன்னால தாலி கட்டினார் சார்” என்று நர்மதாதான் பதில் கூறினாள்.

“”சரி நடங்க போலாம்” என்றார்.

“”எங்கே சார்?” என்றான் ரமேஷ்.

“”ஓ… சொன்னால் தான் கிளம்புவியா?” என்று ஓர் உறுமல் உறுமினார்.
ரமேஷ் லுங்கியை உறுவிவிட்டு பேண்ட்டை அணிந்து கொண்டான். நர்மதா அவன் லுங்கியை மடித்து தன் பேக்கில் போட்டுக் கொண்டு ஜிப்பை இழுத்துவிட்டு தோளில் போட்டுக் கொண்டு அறைக்கு வெளியே வந்தாள். ரமேஷ் வெளிவர, காக்கி உடுப்புக்காரர் வெளிவந்தார். “”கீழே ஐயா ஜீப்ல இருப்பார்… பார்த்ததும் ரெண்டு பேரும் ஒரு சலாம் வச்சுடுங்க” படிகளில் இறங்கியவரின் பின்னால் இருவரும் இறங்கினார்கள்.

நர்மதா தன் அப்பாதான் ஒருவேளை பெண்ணைக் காணோம். இந்த ரமேஷ் பயல் கடத்திட்டுப் போயிட்டான் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருப்பாரோ என்று நினைத்தாள். மேஜர் ஆகாத மைனர் பெண் என்று வேறு கொடுத்திருப்பாரோ என்ற யோசனையில் கீழே வர, லாட்ஜ் வாயிலில் நின்றிருந்த ஜீப் அவர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு விரைந்தது.

காவல் நிலையத்துக்குள் நுழைந்த ரமேஷ் தன் அம்மாவையும், அப்பாவையும் பார்த்து அதிர்ந்தான். இவர்கள் ஏன் இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள்? அவன் எதிர்பார்த்து வந்ததோ நர்மதாவின் அப்பா, அம்மாவை. அதேபோல்தான் நர்மதாவும் தந்தையை எதிர்நோக்கி வந்தவள், அவர் ஸ்டேசனில் இல்லாததைக் கண்டு நிம்மதியானாள்.

ரமேஷைப் பார்த்ததுமே அவன் அம்மா “ஓ’வென அழத் துவங்கினாள்.

“”அட பாடுவாசிகுக்கா… உனக்கு உடம்பு திமிரெடுத்துப் போச்சாடா… என்ன காரியமடா பண்ணி வச்சிருக்கே… இனிமே உங்கப்பன் வீதியிலே எப்படிடா நடப்பாரு?” என்று அழுகையினூடே அவள் ஒப்பாரி வைத்தாள்.

“”இந்தாம்மா… இதென்ன போலீஸ் ஸ்டேசனா? உங்க ஊடா? அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சா உன்னையும் தூக்கி உள்ளார போட்டுடுவாரு ஐயா” என்று காக்கி சட்டை ஒருவர் சப்தமிட, ரமேஷின் அம்மா ஒப்பாரியை நிறுத்தினாள். அவள் பார்வை நர்மதாவிடம் சென்றது. “காத்தடிச்சா காணாமப் போற ஈக்குமாத்து குச்சி கணக்கா இருந்துட்டு இந்தப் பிள்ளை எம்மவனைக் கூட்டிட்டுப் போயிடுச்சே. இந்த மடையன் இவகிட்ட என்னத்தக் கண்டுட்டான்?’ என்று யோசித்தாள்.

இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து தன் நாற்காலியில் அமர்ந்தார். ரமேஷின் அம்மாவும், அப்பாவும் எழுந்து சுவர் ஓரமாக நின்று கொண்டார்கள். இன்ஸ்பெக்டர் நர்மதாவைப் பார்த்தார்.

“”பையன் அப்பாவி… அவனை ஆசை வார்த்தை காட்டி நீதான் கூட்டிட்டுப் போயிட்டதா இந்தப் பையனோட அம்மா புகார் குடுத்திருக்குது உன் மேல. நீ என்ன சொல்றே?” என்றார் இன்ஸ்பெக்டர் நர்மதாவிடம்.

“”ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்சுங்க சார்… கல்யாணம் பண்ணிக்க நினைச்சோம். ரெண்டு பேரும் விருப்பத்தோடதான் கட்டிக்கிட்டோம் சார்”

“”நீ என்ன படிச்சிருக்கே?”

“”காலேஜ் போயிட்டிருக்கேன் சார்… ஒருவாரம் லீவ் லெட்டர் குடுத்திருக்கேன். அடுத்த வாரம் போயிடுவேன் சார்… ”

“”உன் வீட்டுல சம்மதிச்சாங்களா?”

“”இல்ல சார்… என் வீட்டுக்காரர்தான் சார் என்னைப் படிக்கணும்னு சொல்றார். அவர் சொன்னதாலதான் ஒருவாரம் லீவு போட்டேன்”

“”ஏம்பா… உன் பேர் என்ன?… ம்… ரமேஷ்… இந்தப் பொண்ணு சொல்றது நிஜம்தானா?”

“”ஆமாங்க, சார்… நான்தான் பத்தாவது பெயில் ஆனதும் படிப்பை நிப்பாட்டிட்டு தறிக்குப் போயிட்டு இருக்கேன். என் சம்சாரமாவது நல்லா படிக்கட்டும் சார். எங்க வழுவுல பத்தாவது தாண்டுனவங்க ஒருத்தரும் இல்லிங்க”

“”எம் பையன் ஏமாந்த பையனுங்க சாமி. இவ அவனை முந்தானையில முடிஞ்சு வச்சுட்டா… அவன் கண்ணைப் பாருங்க சாமி நல்லா… இந்தப் புள்ளை ஏதோ மருந்து மாயம் பண்ணிட்டா என் பையனுக்கு… மந்திரிச்சு உட்டவனாட்டம் பேசுறான் பாருங்க… சாமி… இந்தப் பொண்ணோட அப்பன் டெய்லர் கடை வெச்சிருக்காப்லைங்க சாமி… ஊர் பெரிய மனுசங்க அத்தனை பேரும் நல்ல பழக்கம். நாளைக்கி எம் பையனை ஆள் வச்சு அடிச்சு என்ஹச் ரோட்டுல வீசிட்டா, பையனுக்கு நானெங்கீங்க சாமி போவேன்? நீங்களே நாயத்தைச் சொல்லுங்க. நடந்ததுக்குப் பின்னாடி வான்னா வருமா உசுரு?” ரமேஷின் அம்மா இடையில் பேசினாள்.

“”நீ சும்மா இரும்மா.. மருந்து வச்சா மாயம் பண்ணிட்டாள்னு பேசிட்டு…” என்று அதட்டியதும் அமைதியானாள் ரமேஷின் அம்மா.

“”பையனோட அப்பா என்ன ஊமையா? எதுவும் பேசாம வெறிச்சுப் பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? உனக்கு என்னய்யா பண்ணணும் நாங்க?” இன்ஸ்பெக்டர் கோபம் வந்ததுபோல் காட்டிக் கொண்டு சப்தமாய்க் கேட்டார்.

“”எங்க பையனைக் கூட்டிட்டு நாங்க போறோமுங்க சார்…”

“”இப்போ உன் மருமகளை தெருவுல உட்டுட்டு போறயா? அதுக்கு உன் பையன் ஒத்துக்கோணும்ல.. நீயே கேட்டுப் பாரு உன் பையன் கிட்ட”

“”சாதி வேற சாதிங்க அந்தப் புள்ளை… எங்க கூட எங்க வீட்டுல வந்து இருக்காதுங்க. எங்க சாதிப் புள்ளைய என் பையன் கட்டியிருந்தா ஒரு பிரச்னையும் இல்லீங்கோ… இப்படித்தான் இவனோட அண்ணன்காரன் ஒரு வருசத்துக்கும் மிந்தி வேற சாதிப் பிள்ளையோட ஓடிப் போயிட்டான் கோபிக்கு. ஒரே வாரத்துல தனியா ஊடு வந்தான். ஏன்டான்னு கேட்டதுக்கு அந்தப் பிள்ளை கறி திங்கக் கூடாதுங்குதுன்னு சொல்லுதாம். சோறு ஆக்கத் தெரியலையாம். தினமும் கடையில சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லுதுன்னு ஓடியே வந்துட்டான். அவனுக்குப் பொண்ணு குடுக்குறதுக்கு இப்ப யாரும் இல்ல. இவனுக்கும் நாளைக்கு அந்த கதிதானுங்கோ… ஓரு வாரமோ, ஒரு மாசமோ கழிச்சு இவன் வர்றதுக்கு இப்பவே கூட்டிட்டுப் போயிடுறேனுங்க”

“”என்னடா ரமேசு… உங்கப்பன் சரியாத்தான் சொல்றான். நீ என்ன சொல்றே?”
“”எங்கப்பன் சொல்லுதுன்னு நம்பி வந்த புள்ளைய நட்டாத்துல வுட்டுட்டு போவமாட்டனுங்க சார்”

“”உன் அண்ணன்தான் முடியாதுன்னு திரும்பி வந்துட்டானாமே”

“”ஒரு பொண்டாட்டி சொல்றான்னா கறி திங்காம இருக்க முடியாதுங்களா சார் அவனால? கறிக்காக வாழ்க்கையைப் பாதில உட்டுட்டு எவனாச்சும் வீடு வருவானுங்களா சார்? எங்க அப்பா, அம்மாவே வேற வேற ஜாதிங்க. அவுங்க ஒண்ணா வாழலையா?” ரமேஷ் கேட்டான்.

“”சரி உடு… ஏம்மா உங்கப்பா போன் நெம்பர் இருக்கா?” என்றார் நர்மதாவிடம்.

“”இருக்கு சார்” என்று நம்பர் சொன்னாள். இன்ஸ்பெக்டர் அவள் சொன்ன எண்களை தன் அலைபேசியில் பதிவு செய்து ரிங் விட்டார்.

“”உன் அப்பா பேர் என்னம்மா?” என்றார். சொன்னாள்.

“”ஏம்பா ராமமூர்த்தியா? நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். உன் பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு புருசனோட ஸ்டேஷன் வந்திருக்குது. பத்து நிமிசத்துல ஸ்டேசனுக்கு வா” என்றார்.

“”பொண்ணு பேர் என்ன சொல்லுச்சுங்க சார்?”

“”நர்மதா”

“”அப்படி ஒரு பொண்ணே எனக்கு இல்ல சார்” போன் கட் ஆகியது.

“”என்னம்மா… உன் அப்பன் நர்மதான்னு ஒரு பொண்ணே எனக்கு இல்லைன்னுட்டு கட் பண்ணிட்டான்”

“”என் மேல கோபமா இருப்பாப்ல சார்… அதை நாங்க பின்னாடி சரி பண்ணிப்போம் சார்… ” என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். தூசு போல ஒவ்வொரு பிரச்னையையும் பேசுகிறதே இந்தப் பெண்.

“”ஏம்பா உன் பையன் சொல்றது மாதிரி நீ வேற ஜாதி. உன் மனைவி வேற ஜாதியா? அப்பவோ காதல் கல்யாணம் பண்ணிட்ட நீ இப்ப ஏன் உன் பையனோட காதலை ஏத்துக்க மாட்டீங்றீயே?”

“”என்னோட ஜாதியிலோ… என் மனைவியோட ஜாதியிலோ இவன் கட்டியிருந்தா எனக்கும் ஒண்ணும் பிரச்னை இல்லீங்களே சார்… மூணாவது ஜாதியாப் போயிட்டாளே இந்தப் பொண்ணு. அந்தக் காலத்துல நான் கல்யாணம் பண்ணிட்ட பொறவு பட்ட கஷ்டமெல்லாம் நெஞ்சுல ஆணி அடிச்ச மாதிரி இறங்கிடுச்சுங்களே… இரண்டு சாதிக்காரங்க கூடவும் ஓர் ஒட்டும் உறவும் எங்களால வச்சுக்க முடியலையே… எத்தனை துன்பம்… எத்தனை வேதனை… இதெல்லாம் என்னோட பையனுக்கும் இனி சாவுற வரைக்கும் வரும்ங்கல்ல… ஒரு நல்லது கெட்டதுக்குப் போக முடியாம என்னங்க வாழ்க்கை வாழ்றது? இதெல்லாம் இவனுக்குத் தெரியுமுங்க… நான் சொல்லியா இனி தனியா தெரிஞ்சுக்கப் போறான்?”

“”ஏன்டா காதல் பண்ணி கல்யாணமும் பண்ணி ரெண்டு பிள்ளைகளையும் ஏன் பெத்தோம்னு இப்ப உட்கார்ந்து ரெண்டு பேரும் கவலைப்படறீங்களா? உங்க ரெண்டு பேர் சொந்தத்துலயும் உங்களுக்கு பொண்ணு கொடுக்க யாரும் வரவே போறதில்ல. பையன் தைரியமா அவனே அவனுக்குன்னு ஒரு பொண்ணைத் தேடிட்டான்னு சந்தோசப்படாம… பிரிச்சுக் கூட்டிட்டு போறதுல நிக்கறீங்க… அந்தப் பொண்ணோட அப்பன் என்னடான்னா அப்படி ஒரு பொண்ணே எனக்கு இல்லீங்கறான். நீயும் உன் பையனைக் கூட்டிட்டுப் போயிடு. அந்தப் பொண்ணு போய் கெணத்துலேயோ, குட்டையிலேயோ விழுந்து சாவட்டும். அதுக்குப் பிறகு உங்க மூணு பேரையும் தூக்கி வந்து ஜெயில்ல போடறேன்”

“”சாமி இப்படிச் சொல்றீங்களே”

“”பின்னே என்ன சொல்றது? காலைல இருந்து தேடி ஈரோட்டு வீதியில அலைஞ்சு இவங்களே உன் கண்ணு முன்னால உசுரோட கொண்டு வந்து காட்டியிருக்கிறோம். லாட்ஜில ரெண்டு நாள் குடும்பம் நடத்தியிருக்கான். என்ன அழிச்சான் புழிச்சான் விளையாட்டா படுதா உனக்கு! இதுக்கு வேற கேஸ் இருக்குது. அதை உன் பையன் பேர்ல போட்டு உள்ளார தூக்கிப் போட்டுடறேன்” இன்ஸ்பெக்டர் கோபமாய்ப் பேசினார்.

“”சார் இவரோட அப்பா அம்மா கூட அவங்க கூப்பிட்டாலும் போகலை சார்” என்றாள் நர்மதா.

“”அட என்னம்மா நீ… உனக்காகத்தான் பேசிட்டு இருக்கேன் நான்”

“”புரியுதுங்க சார்… கள்ளியம்புதூர்ல இவரோட நண்பர் தங்கி இருக்கிற ரூமை இவருக்காகத் தர்றேன்னு சொல்லிட்டாராம். எனக்கு இவர் இருக்கார். இவருக்கு நான் இருக்கேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கறோம் சார்… கூழோ கஞ்சியோ இவர் ஊத்துறதைக் குடிச்சுக்கறேன்னு வசனம் எல்லாம் பேசலை சார் நான். நாங்க நல்லா வாழ்வோம் சார்… இவங்க வாழ்க்கையோட போராடவே இல்லைங்க சார்… அதான் சோர்ந்து போய் பேசுறாங்க.. நாம நல்ல நிலையில் இருந்தால்தான் சார், நாலு பேர் நம்மைத் தேடி வருவாங்க. காதல்ல நாங்க ஜெயிச்சுட்டோம். வாழ்க்கையில இனி ஜெயிக்க போராடுவோம் சார்…” என்று நர்மதா கூறியபடியே ரமேஷின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“”சந்தோஷமாப் போய் வாழ்க்கைல ஜெயிச்சுக் காட்டுங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

– அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *