கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 20, 2011
பார்வையிட்டோர்: 18,589 
 

தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20  ஞாயிற்றுகிழமை, 1998, அப்போது அவளுக்கு வயது இருபத்திமூன்று,

கோகிலவாணியை இப்போது யாருக்கும் நினைவிருக்காது, ஒருவேளை நீங்கள் தினசரி பேப்பரைத் தவறாமல் படிக்கின்றவராகயிருந்தால் உங்கள் நினைவின் ஏதாவது ஒரு மூலையில் அவள் பெயர் ஒட்டிக் கொண்டிருக்க கூடும், ஆனால் தினசரி செய்திகளை யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவை சாலைவிபத்துக்களைக் கூட சுவாரஸ்யமான நிகழ்வாக மாற்றிவிடுகின்றன, ரத்தக்கறை படியாத நாளிதழ்களேயில்லை,

விபத்தில் இறந்த உடல்களின் புகைப்படங்களை ஏன் நாளிதழ்கள் இவ்வளவு பெரியதாக வெளியிடுகின்ற்ன, யார் அதைக் காண்பதற்கு ஆசைப்படுகின்றன மனிதன், ஒருவேளை வன்முறையின் களியாட்டத்தை நாம் உள்ளுற விரும்புகிறோமோ, கோகிலவாணியை தலைப்பு செய்தியாக்கியதற்கு நாம் காரணமில்லை என்று ஒதுங்கிக் கொள்ளமுடியாது, அவள் நம்மைக் குற்றம் சொல்லவில்லை, ஆனால் அவள் நம்மை கண்டு பயப்படுகிறாள், நம் யாவரையும் விட்டு விலகிப் போயிருக்கிறாள்,

இன்றைக்கும் அவளது கால்கள் சாலையில் நடப்பதற்கு பயப்படுகின்றன, கைகள் தன்னை அறியாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றன, யாராவது அருகில் வருவதைக் கண்டால் கண்கள் காற்றிலாடும் அகல்விளக்கின் சுடரைப்போல தட்டளிகின்றன, இவ்வளவு ஏன்  அவளுக்கு உறக்கத்தில் கூட நிம்மதியில்லை, குரூரக்கனவுகளால் திடுக்கிட்டு அலறுகிறாள்,

அவள் சாகவாசமாகப் புழங்கி திரிந்த உலகம் ஒருநாளில் அவளிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டது, தோழிகள். குடும்பம். படிப்பு, வேலை அத்தனையும் அவளிடமிருந்து உதிர்ந்து போய்விட்டிருந்தது, களிம்பு மருந்துகளும் டஜன் கணக்கான மாத்திரைகளும் ரணசிகிட்சையும் அவளது அன்றாட உலகமாகியிருக்கிறது, அழுதழுது ஒய்ந்து ஒடுங்கிப் போயிருக்கிறாள், பலநேரங்களில் தன்னைக் கழிப்பறை மூலையில் வீசி எறியப்பட்ட பாதி எரிந்துபோன தீக்குச்சி ஒன்றை போலவே  உணர்ந்திருக்கிறாள்,

ஒரு சம்பவம் என்று எளிதாக நாளிதழ்களால் விவரிக்கப்பட்ட அந்த துயர நிகழ்வு இப்படியாகத் தான் செய்திதாளில் விவரிக்கபட்டிருந்தது

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் கோகிலவாணி என்ற 23 வயது பெண் மீது துரை என்ற வாலிபர் ஆசிட் வீசினார். இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் துரை என்பவர் கோகிலவாணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் கோகிலவாணியோ மகேஷ் என்ற கல்லூரி மாணவனை காதலித்து வந்திருக்கிறார்

தனது காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று கோகிலவாணியை துரை பலமுறை எச்சரித்திருக்கிறான், ஆனால் துரையின் காதலை அவள் ஏற்றுக் கொள்ளவேயில்லை, இதனால் ஆத்திரமான துரை தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணா சஞ்சய் ஆகியோருடன் கூடிப் பேசி கோகிலவாணியின் முகத்தில் ஆசிட் வீச தம்புசெட்டி தெருவில் உள்ள ஒரு கடையில் சல்பியூரிக்ஆசிட்டை வாங்கியிருக்கிறான். மறுநாள் காலை கிண்டி ரயில்நிலையத்திற்கு செல்லும் வழியில் கோகிலவாணியை வழிமறித்து ஆசிட்டை ஊற்றிவிட்டுத் துரை தப்பியோடினான்.

இதனால் கோகிலவாணியின் முகம்  வெந்து போனது. சம்பவ இடத்தில் அலறியபடியே மயங்கி  விழுந்த அவளை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 60 சதவீத அளவுக்கு முகம்வெந்து போய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரை மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

***

பதினைந்து வயதிலே காதலிப்பதை பற்றிய கற்பனைகள் கோகிலவாணிக்குள் புகுந்துவிட்டன, பள்ளி நேரத்தில் அதைப்பற்றியே அவளும் தோழிகளும் ரகசியமாக பேசிக் கொண்டிருப்பார்கள், காதலைப்பற்றி பேசும்போதெல்லாம் பனிக்கட்டியை உள்ளங்கையில் வைத்துக் கொண்டிருப்பதை போல அவள் உடலில் கிளர்ச்சி உருவாவதை உணர்ந்திருக்கிறாள்,

சாலையில், பயணத்தில், பொதுஇடங்களில் தென்படும் பதின்வயது இளைஞர்களை காணும் போதெல்லாம் இதில் யார் தன்னைக் காதலிக்கப்போகிறவன் என்று குறுகுறுப்பாக இருக்கும், அவள் காதலிப்பதற்காக ஏங்கினாள், யாராலோ காதலிக்கபடுவதற்காக காத்துக் கொண்டேயிருந்தாள், அதைப்பற்றி தனது நோட்டில் நிறைய கிறுக்கி வைத்திருக்கிறாள், கவிதைகள் கூட எழுதியிருக்கிறாள்

அவளுக்கு திவாகர் என்ற பெயர் பிடித்துப் போயிருந்த்து, இவ்வளவிற்கும் அந்த பெயரில் ஒருவரையும் தெரியாது, ஆனால் ஏனோ அந்த பெயர் பிடித்திருந்த்து, அந்தப்பெயரிலே ஒருவனை காதலிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கூட தோன்றியது, ஆனால் அது நடக்குமா என்ன,

அந்த பெயரை தன் பெயரோடு சேர்த்து திவாகர் கோகிலவாணி என்று ரகசியமாக எழுதி பார்த்துக் கொண்டேயிருப்பாள், ஒரு நாள் தோழி இந்திரா அவளிடம் யாருடி அந்த திவாகர் என்று கேட்டதற்கு பக்கத்துவீட்டில் இருக்கின்ற பையன் அவனை நான் லவ் பண்ணுகிறேன் என்று பொய் சொன்னாள்,

அந்த பொய்யை இந்திரா நம்பிவிட்டதோடு அந்த காதல் எப்படி ஆரம்பித்த்து, எவ்வளவு நாளாக நடக்கிறது என்று கேட்கத்துவங்கிவிட்டாள், அவளுக்காகவே கோகிலவாணி நிறைய கற்பனை செய்து திவாகரை பற்றி கதைகதையாக சொல்லிக் கொண்டேயிருப்பாள்,

அதை கேட்டதில் இருந்து இந்திராவும் யாரையாவது காதலிக்க விருமபினாள், ஆனால் எப்படிக் காதலிப்பது என்று பயமாக இருந்த்து, அவர்கள் டியூசன் படிக்கப் போகின்ற வீட்டில் இருந்த முரளிடம் இந்திரா தயங்கி தயங்கி தான் அவளை காதலிப்பதாகச் சொன்னாள், அவன் தானும் அவளை காதலிப்பதாக சொல்லி மாடிஅறைக்கு வரச்சொல்லியிருந்தான்,

பயமும் ஆர்வமுமாக மாடிக்குப்போன இந்திரா கத்தி அலறியபடியே கிழே இறங்கி ஒடிவந்தாள், என்னடி ஆச்சு என்று கோகிலா கேட்ட போது இந்திரா பதில் சொல்லவேயில்லை, அழுது கொண்டேயிருந்தாள், வீடு திரும்பும் போது பேருந்தில் வைத்து லவ் பண்றேனு சொல்லிட்டு கிஸ் குடுத்து உதட்டை கடிச்சிட்டான்டி, அசிங்கமாக இருக்கு, என்று சொல்லியபடியே கண்ணீர் விட்டாள்,

கோகிலவாணிக்கு நல்லவேளை நாம் யாரையும் காதலிக்கவில்லை என்று தோன்றியது, மறுநாள் முழுவதும் இந்திரா லவ் பண்ணுவது தவறு என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள், உள்ளுற அதை ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இந்திராவிற்காக தானும் திவாகரை லவ் பண்ணுவதை விட்டுவிட்டதாக சொன்னாள் கோகிலவாணி, ஆனால் மனதிற்குள் பலவந்தமாக கிஸ் பண்ணாத  நல்லபையனாகப் பார்த்து லவ் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்த்து

***

கோகிலவாணி எட்டாவது படிக்கும் போது ருதுவெய்தினாள், பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்டு சில மாதங்கள் அருகாமையில் இருந்த எஸ்டிடி பூத்தில் வேலை செய்தாள், அங்கே வரும் இளைஞர்களில் ஒருவன் கூட அவளை கண்டுகொள்ளவேயில்லை, கருத்துப்போய் மெலிந்த உடலோடு இருப்பதால் தான் தன்னை எவருக்கும் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொள்வாள், அவளிடம் இரண்டே இரண்டு நல்ல சுடிதார்கள் இருந்தன, அதையே மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு வேலைக்கு போவாள், சம்பளப்பணத்தில் மஞ்சளும் சந்தனமும் கலந்த டர்மெரிக் கிரிம் வாங்கி உடல்முழுவதும் பூசிப் பார்த்தாள், பேர் அண்ட் லவ்லியை வாங்கி ரகசியமாக உபயோகித்து பார்த்திருக்கிறாள், பாலில் குங்குமப்பூபோட்டு குடித்து அழகை மேம்படுத்த முயன்றிருக்கிறாள், அப்படியிருந்தும் அவள் மீது யாருக்கும் ஈர்ப்பு ஏற்படவேயில்லை.

எஸ்டிடி பூத் நடத்தும் சொக்கநாதன் தினசரி அவளை அனுப்பி சிகரெட் வாங்கி வரச்சொல்வான், அவள் ஒரு பெண் என்று கூடகவனிக்காமல் பச்சை பச்சையாக போனில் பேசிக் கொண்டிருப்பான், தன்னை ஒரு பெண்ணாக கூட அவன் மதிப்பதில்லையே என்ற ஆதங்கம் கோகிலவாணிக்கு நிறைய இருந்தது,

தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் போது தனக்கு மட்டும் ஏன் கழுத்து எலும்புகள் இப்படி தூக்கி கொண்டிருக்கின்றன, தாடை ஒடுங்கிப்போயிருக்கிறது என்று ஆத்திரமாக வரும், தன்னை எப்படியாவது அழகாக்கி கொண்டுவிட வேண்டும் என்று புதுசுபுதுசாக சோப்பு வாங்கி பார்த்தாள், தலைமயிரை சுருளவிட்டு பார்த்தாள், மூன்று மாதம் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பிற்கு கூட போய்வந்தாள், ஆனாலும் யாரும் அவளைக் காதலிக்கவேயில்லை

ஒரு மாலைநேரம் போன் செய்யவந்த ஜீன்ஸ் மற்றும் வெள்ளைகோடு போட்ட சட்டை அணிந்த இளைஞன் அவளிடம் வேண்டும் என்றே சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்துவிட்டு அவளது பெயரை கேட்டு தெரிந்து கொண்டு போனான், அந்த நிமிசமே அவன் மீது காதல் உருவாக ஆரம்பித்தது,  அவன் மறுபடி எப்போது வருவான் என்று காத்துக் கொண்டேயிருந்தாள், பெயர் கூட தெரியாமல் அவனை மனதிற்குள் காதலித்து கொண்டிருந்தாள்

ஆனால் ஒருநாள் அந்த பையன் பைக்கில் ஒரு இளம்பெண்ணை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சினிமா தியேட்டர் பக்கமாக போகையில் அவளை கையை காட்டி ஏதோ சொல்லிவிட்டு போவதை கண்டதும் அவன் மீது ஆத்திரமாக வந்தது,

காதலிக்க துவங்கும் முன்பே காதல் தோல்வியிடைந்துவிட்ட கோபத்தில் அவள் இரண்டு மூன்று நாட்கள் மதியச்சாப்பாடை சாப்பிடாமலே தூக்கி எறிந்தாள், ஆனால் பசியை அவள் காதலால் வெல்லமுடியவில்லை,

சில வேளைகளில் கடற்ரைக்கு போகையில் இவ்வளவு பேர் எப்படி காதலிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும், கடலை வேடிக்கை பார்ப்பதை விடவும் காதலர்களையே பார்த்துக் கொண்டிருப்பாள், அவளை விட சுமாராக உள்ள பெண்கள் கூட காதலிக்கிறார்கள், தன்னை ஏன் ஒருவரும் காதலிக்கவில்லை என்று ஆதங்கமாக இருக்கும், அதை நினைத்து நிறைய கவலைப்பட்டிருக்கிறாள், அதிகமாக சம்பளம் வாங்குகின்ற பெண்ணால் இருந்தால் காதலிப்பார்கள் என்று இந்திரா சொன்னதை கேட்டது தாங்கமுடியாத வருத்தமாக இருந்தது, காதல் மட்டும் தான் அவள் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோல் போல நினைத்துக் கொண்டிருந்தாள்

மாம்பலத்தில் சொக்கநாதன் புதிதாக துவங்கியிருந்த ஜெராக்ஸ் கடைக்கு அவளை இடம் மாற்றிய போது தினசரி மின்சார ரயிலில் போய்வர வேண்டிய அவசியமானது, அப்படி தான் மகேஷை சந்தித்தாள், இரண்டுநாட்களில் பேசிப்பழகிவிட்டான்,

மகேஷ் அவளை விட ஒல்லியாக இருந்தான், பெரும்பாலும் நீலநிற பேண்ட் தான் அணிந்துவருவான், ஒரு ஒரியண்ட் சலூனில் வேலை செய்து கொண்டிருப்பதாக சொன்னான், மகேஷை அவளுக்கு பிடித்து போனது, தினமும் மகேஷ்  அவளுக்காக  டிபன் பாக்ஸில் ஏதாவது ஒரு உணவு கொண்டுவருவான், ரயிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால்கூட அவன் கை அவள் மீது படாமல் பார்த்துக் கொள்வான், அவளது தண்ணீர்பாட்டிலை வாங்கி குடிக்கும் போது கூட அண்ணாந்து தான் குடிப்பான், அதை விடவும் அவள் புது உடையோ. பாசியோ. பொட்டோ. ஹேர்கிளிப்போ எது அணிந்து வந்தாலும் இது உன்க்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது என்று பாராட்டுவான், அதனாலே தான் ஒரு நல்லவனை காதலிப்பதாக பெருமை கொண்டாள் கோகிலவாணி.

ஒருநாள் மாலை மகேஷ் வருவதற்காக மாம்பலம் ரயில் நிலையத்தின் அருகில் காத்திருந்த போது கால்வலிக்கிறது என்று ஒரு பைக்கில் சாய்ந்து நின்றிருந்தாள், எதிர் கடையில் இருந்து ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், அவன் தன்னை பார்க்கிறான் என்று உணர்ந்த மறுநிமிசம் தனது துப்பட்டாவை சரிசெய்துவிட்டு தலையை குனிந்து கொண்டாள் கோகிலவாணி, அந்த இளைஞன் ஒரு சிகரெட்டை பற்றவைத்துவிட்டு அவளை பார்த்துக் கொண்டே புகையை ஊதிக் கெர்ண்டிருந்தான், மகேஷ் வருவதற்கு தாமதமாவது ஆத்திரமாக வந்தது, அவன் சிகரெட்டை அணைத்துவிட்டு அருகில் வந்து நின்று இது என் பைக், வேணும்னா ஏறி உட்காந்துகிடலாம் , இல்லை எங்கே போகணும்னு சொல்லுங்க நானே கொண்டுபோய்விடுறேன் என்று சொல்லி சிரித்தான்,

அதை பவ்வியமாக அவன் சொன்னவிதம் அவளுக்கு சிரிப்பாக வந்த்து, அதை கேட்ட அந்த இளைஞன் பைக்சாவியை எடுத்து நீங்களே வேணும்னாலும் ஒட்டிகிட்டு போகலாம் என்றான், கோகிலவாணி வேண்டாம் என்று மறுத்துவிட்டு சிரிப்போடு நகர்ந்து  நின்று கொண்டாள், அந்த இளைஞன் அவளிடம் வீடு எங்க என்று கேட்டான், அவள் பதில்சொல்லாமல் ஸ்டேஷனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் தன் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை வாறிவிட்டபடியே ஒரு பபிள்கம்மை எடுத்து அவளிடம் நீட்டினான்,

அவள் விடுவிடுவென ரயில்நிலையத்தின் உள்பகுதியை நோக்கி நடந்து போக துவங்கினாள், அவன் சிரிப்பது கேட்டது, மகேஷ் வந்து சேரும்வரை அவள் திரும்பி பார்க்க்கவேயில்லை, மகேஷிடம் அந்த இளைஞனை பற்றி சொல்லவா வேண்டாமா என்று தயக்கமாக இருந்த்து, ஆனால் சொல்லவேயில்லை,

இரண்டு நாட்களின் பின்பு அந்த பைக் இளைஞனை மறுபடியும் ரயிலில் பார்த்தாள், அவன் நெருங்கி அருகில் வந்து நின்று அவளையே பார்த்தபடியே வந்தான்,  கோகிலவாணி அவனை ஒரக்கண்ணால் பார்க்கும் போது அவன் உதட்டை கடிப்பதும் உள்ளங்கையில் ஐ லவ்யூ, யுவர்ஸ் துரை என்று தன் பேனாவில் எழுதிக்காட்டுவதும், கள்ளசிரிப்புடன் கையசைப்பதுமாக இருந்தான்,

ஒருவாரத்தின் பிறகு ஒருநாள் காலையில் அவள் ரயிலை விட்டு இறங்கி நடக்கும்போது அருகில் வந்து உனக்காக தான் தினம் தாம்பரத்துல இருந்து இதே ரயில்ல வர்றேன் என்றான், , கோகிலவாணி  அவனிடம் பேசவேயில்லை

அவனோ நெடுநாள் பழகியவன் போல அருகில் வந்து படத்துக்குப் போவமா என்று கேட்டான், அவளுக்கு அதை கேட்ட போது பயமாக வந்த்து, அதைக்காட்டிக் கொள்ளாமல் எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்றாள்,

துரை சிரித்தபடியே அப்போ நீ என்னை லவ் பண்ணலையா என்று கேட்டான், கோகிலவாணி கோபத்துடன் நான் எதுக்கு உன்னை லவ் பண்ண்ணும் என்று கேட்டாள்,

அப்போ அன்னைக்கு மட்டும் சிரிச்சே, தினம்தினம் லுக்விட்டயே அது எதுக்கு என்றான் துரை,

நான் ஒண்ணும் உன்னை லவ் பண்ணலே, நான் மகேஷை லவ் பண்றேன், பிரச்சனை பண்ணாம போயிடு என்றாள்,

உடனே துரை பச்சை பச்சையாக அவளை திட்டியதோடு நீ என்னை லவ் பண்ணிதான் ஆகணும், நான் டிசைட் பண்ணிட்டேன் என்றான், அவனுக்கு பயந்து கொண்டு சில நாட்கள் பஸ்ஸில் வரத்துவங்கினாள்,

ஒருநாள் மகேஷிடம் ஒரு பையன் தன்னை பின்னாடியே துரத்துவதாக சொன்னாள், மகேஷ் சற்றே கலக்கத்துடன் நான் பேசிப்பாக்குறேன் என்று ஆறுதல் சொன்னான், அதன் இரண்டு நாட்களுக்கு பிறகு மகேஷ்ஷை பார்க்கவே முடியவேயில்லை, அவனை தேடி ஒரியண்ட் சலூனுக்கு போன போது மகேஷின் முகத்தில் அடிவாங்கிய  வீக்கமிருந்த்து,

மகேஷ் தலையை குனிந்தபடியே அந்த ரௌடிப்பய துரை என்னை அடிச்சிட்டான் கோகிலா, நாம ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்தா கொன்னுருவேன் சொல்றான், என்ன செய்றதுனு தெரியலை, சலூன் ஒனர்கிட்டே யோசனை கேட்டேன், லவ் எல்லாம் எனக்கு சரிப்படாதுனு சொல்றார், இப்போ என்ன செய்றதுனு தெரியலை ஒரே குழப்பமா இருக்கு என்றான், கோகிலவாணி அங்கேயே அழுதாள், மகேஷ் சலூன் ஒனரிடம் சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு போய் அருகாமை தேநீர்கடையில் ராகிமால்ட் வாங்கி தந்து நிறைய அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைத்தான்.

அதன்பிறகு மகேஷ் அவளை பார்க்க வரவேயில்லை, ஆனால் கோகிலாவால் காதலைவிட முடியவில்லை, திரும்பவும் ஒருநாள் மகேஷை காண சலூனுக்கு போனாள், அப்போது சலூனில் யாருமேயில்லை, மகேஷ் மட்டும் தனியே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான், அவளை பார்த்தவுடன் சலூன் நாற்காலியில் உட்கார சொன்னான், எதிரில் உள்ள கண்ணாடியில் அவள் முகம் தெரிந்த்து, மகேஷ் சிரிப்போடு உனக்கு முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணிவிடவா என்று கேட்டான்,

கோகிலவாணி ஆத்திரத்துடன் அவனை திட்டினாள், பிறகு ஆவேசமானவள் போல அவனை கட்டியணைத்து இறுக்கமாக முத்தம் கொடுத்தாள், அதன்பிறகு இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டேயிருந்தார்கள், ஒன்றாக அன்று வீடு திரும்பினார்கள், கோகிலவாணி மறுபடியும் காதலிக்க துவங்கினாள்,

ஆனால் அவர்களை ஒன்றாக உதயம் தியேட்டரில் பார்த்த துரை நான் மட்டும் தான்டி உன்னை லவ் பண்ணுவேன், வேற யாரு உன்னை லவ் பண்ணினாலும் நீ செத்தே, உன் மேல ஆசிட் ஊத்திருவேன், பாத்துக்கோ என்று கடுமையாகத் திட்டினான், கோகிலவாணிக்கு அது உண்மையாகப் போகிறது என்று அப்போது தெரியாது,

அதன் இரண்டு நாட்களுக்கு பிறகு துரை நிறைய குடித்துவிட்டு அவளது ஜெராக்ஸ் கடைக்கு வந்து நீ என்னை லவ் பண்றயா இல்லையானு இப்பவே தெரியணும் சொல்லுடி,  என்று மிரட்டினான், கோகிலவாணி அவனிடம் பேசவேயில்லை, அவன் அசிங்கமாக கத்தினான், அவனுக்கு பயந்து சில நாட்கள் வேலைக்கு போகாமலும் இருந்தாள், ஆனால் அவன் விடவேயில்லை, வீட்டின் முன்பு வந்து நின்று கொண்டேயிருந்தான், குளியல் அறையை ஒட்டிய சந்தின் இடைவெளியில் வந்து நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பான், அவளுக்கு பயமாகவும் நடுக்கமாகவும் இருந்தது

••

துரை அவள் மீது ஆசிட் ஊற்றுவதற்கு முந்திய நாள் காலையில் கோகிலவாணியின் அப்பாவிடம் யாரோ அவள் மகேஷை காதலிக்கிறாள் என்பதை பற்றி சொல்லியிருந்தார்கள், அதற்காக அப்பா தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அவள் முகத்தில் மாறிமாறி அறைந்ததோடு மகேஷின் ஜாதியை சொல்லி கேவலமாகத் திட்டியதோடு அவள் தன்னுடைய மகள் என்பதையும் மறந்து ஆபாசமான வசைகளை பொழிந்தார்,

அவர் கூடவே செல்வம் அண்ணனும் சேர்ந்து கொண்டு அவன் மட்டும் இல்லைப்பா, துரைனு இன்னொரு பையனும் இவ பின்னாடி சுத்துறான், ஒரே நேரத்தில ரெண்டு பையக கூட சுத்துறா என்று ஏற்றிவிட்டான்,

அப்பா அவள் தலைமயிரை பிடித்து இழுத்து சுவரோடு முட்டவைத்து ஒடுகாலி நாயி என்று மறுபடியும் ஏச ஆரம்பித்தார், அம்மா அவரது பலமான பிடியில் இருந்து கோகிலாவை விடுவித்து சோற்றுகரண்டியால் காலிலும் புட்டத்திலும் அடித்தாள், கோகிலவாணி காதலுக்காக தான் அடிபடுகிறோம் என்பதால் அழுது கத்தவேயில்லை

••

ஆசிட் ஊற்றப்பட போகின்ற நாளின் காலையில் துரை அவள் முன்னால் வந்து நின்றபோது எப்படியாவது அவனிடம் கெஞ்சிப்பேசி தான் மகேஷை காதலிப்பதை புரிய வைத்துவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் கோகிலா,

ஆனால் துரை ஒருவார்த்தை கூட அவளிடம் பேசவும் இல்லை, பேசவிடவும் இல்லை, பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுப்பது போல சிறிய பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை வெளியே எடுத்தான், தொலைவில் மின்சார ரயில் வருவதற்காக ஒசை  கேட்டது, அவள் ரயில் நிலையத்தின் படியை நோக்கி நடப்பதற்கு அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றினான்,

கொதிக்கும் நெருப்பினுள் முகத்தை நுழைத்துவிட்டது போல எரிய ஆரம்பித்த்து, காது முகம் நாசி கன்னம் என்று அத்தனையும் உருகியோடுவது போல தாங்கமுடியாத வலி பீறிட்டது, கோகிலவாணி அலறினான், கூட்டத்தை விலக்கி கொண்டு துரை ஒடுவது தெரிந்தது, அவள் முன்னிருந்த உலகம் மெல்ல புகைமூட்டம் கொண்டு மயங்க துவங்கியது,

••

கோகிலவாணி ஆறு வாரங்கள் மருத்துவமனையில் சிகிட்சை பெற்றாள், வலது பக்க முகம் முற்றிலும் எரிந்து போயிருந்த்து, காதின் நுனி சிதைந்து போனதால் பாதி காதே மிச்சமாக இருந்த்து, ஆசிட் முகத்தில் பட்டதோடு பின்னந்தலை வரை பரவியிருந்த காரணத்தால் அவளது தலைமயிரையும் பாதி கத்தரித்து இருந்தார்கள், அவளது தோற்றத்தை காண அவளாலே சகிக்கமுடியவில்லை

அவள் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவளது அப்பாவும் அம்மாவும் உறவினர்களும் மாறிமாறி அவளை மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டேயிருந்தார்கள்,

கோகிலவாணியின் எரிந்த முகத்தை கண்ட அப்பா  அப்படி என்னடி உனக்கு லவ்வு கேட்குது, செத்து போயிருந்தா சனியின் விட்டுச்சினு தலைமுழுகிட்டு போயிருப்பேன், இனிமே உன்னை எவன் கட்டிகிடுவான், உன்னை எங்கே கொண்டு போய் தள்ளுறது என்று தனது முகத்தில் மாறிமாறி அடித்துக் கொண்டு அழுதார்,

எதற்காக காதலிக்க ஆசைப்பட்டோம், காதல் என்பது இது தானா, ஏன் துரை இப்படி தன்முகத்தில் ஆசிட் ஊற்றினான், அவளுக்கு நினைக்க நினைக்க அழுகையும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது

அவள் கூட படித்த மாணவிகள், தெரிந்தவர்கள், தோழிகள் எவரும் அவளைப்பார்க்க வரவேயில்லை, ஆசிட் அடிக்கப்பட்டவளின் தோழி என்று யார் சொல்லிக் கொள்ள ஆசைப்படுவார்கள், மகேஷ் கூட அவளை பார்க்க வரவேயில்லை,

பெண் மருத்துவர் அவள் முகத்தை துடைத்தபடியே உனக்கு எத்தனை லவ்வர்டி என்று நக்கலாக கேட்பார், கோகிலவாணி பதில் சொல்வதேயில்லை,

மருந்தாளுனரும் அவள் முகத்தில் உள்ள காயத்தை துடைத்தபடியே இனிமே உன்னை ஒரு பையனும் திரும்பி பார்க்கமாட்டான், நீ எங்கே வேணும்னாலும் போகலாம், எந்த நேரம் வேணும்னாலும் வீட்டுக்கு வரலாம், உன்னை யாரு பாலோ பண்ண போறாங்க என்பார்,

கோகிலவாணிக்கு ஆத்திரமாக வரும் ஆனால் வாய் திறந்து பேசமாட்டாள் , இப்படி அவமானப்பட்டு வாழ்வதற்கு பதிலாக பேசாமல் அப்பா சொன்னது போல செத்துப்போயிருக்கலாம், எதற்காக பிழைத்துக் கொண்டோம், மிச்சமிருக்கும் வாழ்க்கையை எப்படி கடத்தப்போகிறோம், அந்த வலி ஆசிட்டின் கொதிப்பை விட அதிகமாக இருந்த்து

••

கோகிலவாணி அந்த வழக்கிற்காக இருபத்தியாறு முறை கோர்ட்டிற்கு சென்று வர நேர்ந்த்து, ஒவ்வொரு முறையும் அவளது காதலை யாராவது பரிகாசம் செய்வார்கள், எரிந்த முகத்தை காட்டி அவளது கதையை சொல்லிச் சிரிப்பார்கள், விசாரணைக்கு மகேஷ் வரமறுத்துவிட்டதுடன் தான் அவளை ஒருபோதும் காதலிக்கவேயில்லை என்று காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறான், துரையோ அவள் தன்னை பலமாதங்கள் காதலித்து ஏமாற்றிவிட்டதாக போலீஸில் வாக்குமூலம் தந்திருந்தான், கோகிலவாணி தான் யாரையும் காதலிக்கவில்லை, துரை தன்னை காதலிக்கும்படியாக மிரட்டினான் என்றே சொன்னாள், வழக்கறிஞர் அவள் யாரோடாவது பாலுறவு கொண்டிருக்கிறாளா, ஆண் நண்பர்க்ள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று துருவிதுருவி கேட்டார்,  கோகிலவாணி நீதிமன்றத்தில் நிறைய முறை அழுதிருக்கிறாள், ஆனால் யாரும் அவளை தேற்றவேயில்லை, முடிவில் துரை  தண்டிக்கப்பட்டான்

***

பாதி எரிந்த முகத்துடன்  எலிவால்முடி போல கொஞசம் தலைமயிருடன் கோகிலவாணி வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடந்தாள், டிவி பார்ப்பது கூட கிடையாது, தலையில் பூ வைத்துக்  கொள்வதோ, கண்ணாடி பார்த்து திருநீறு வைத்துக் கொள்வதோ கூட கிடையாது, ,இரண்டு முறை அவளுக்கு கல்யாணப்பேச்சு துவங்கியது, ஆனால் எவரும் அவளை கட்டிக் கொள்ள முன்வரவேயில்லை, கோகிலவாணி தனிமையை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டில் இருந்தபடியே காளான் வளர்த்துவிற்பனை செய்ய துவங்கினாள், தினமும் அம்மாவும் அப்பாவும் அவளை வாய்க்கு வாய் திட்டினார்கள், வீட்டின் எந்த விசேசத்திலும் அவள் கலந்து கொள்ள அனுமதிக்கபடவேயில்லை, சிரிப்பை மறந்தவளாக  கோகிலவாணி ஒரு நடைப்பிணம் போலவே வாழ்ந்து கொண்டிருந்தாள்

***

உபாசனா என்ற தன்னார்வ நிறுவனம் அவளை தஙகள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்ட போது அவளுக்கு வயது முப்பத்திரெண்டை கடந்திருந்த்து, அது பார்வையற்றவர்களுக்காக சேவை செய்யும் நிறுவனம், பார்வைக்குறைபாடு கொண்டவர்களே அங்கு பெரும்பாலும் பணியாற்றிக் கெர்ண்டிருந்தனர், அதனால் யாரும் அவளை கேலி செய்வார்கள் என்ற பயமின்றி அவள் வேலைக்கு போய்வரத்துவங்கினாள், அங்குள்ள நூலகத்தில் இருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்துக் கொண்டேயிருப்பாள்,

சில சமயம் அவள் அறியாமல் உடலின்பம் பற்றி மனது நாட்டம் கொள்ள துவங்கும் அப்போது விரலால் முகத்தை தடவிக் கொள்வாள்,, மின்சாரத்தில் கைப்பட்டது போல மனது உடனே அந்த நினைவில் இருந்து தன்னை துண்டித்துக் கொள்ளும்

***

சென்றவருடத்தில் ஒரு நாள் கடற்கரையில் தற்செயலாக துரையை பார்த்தாள், அவனுக்கு திருமணமாகி பெண் குழந்தையிருந்த்து, இரண்டு வயதான அந்த குழந்தை ஒரு வண்ணபந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது, மணலில் உட்கார்ந்தடிபயே துரையின் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தாள், நல்லநிறம், அரஞ்சு நிற புடவை கட்டியிருந்தாள், கையில் ஒரு ஹேண்ட்பேக், கழுத்தில் நிறைய நகை போட்டிருந்தாள், துரையும் முழுக்கை சட்டை அணிந்து தலையை படிய வாறியிருந்தான்,

ஏனோ துரையின் மனைவியிடம் போய் பேச வேண்டும் போலிருந்த்து, அந்த குழந்தையை ஒருமுறை கொஞ்சலாமா என்று கூட தோன்றியது, அவள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை துரை கவனித்தவுடன் மனைவியிடம் ஏதோ சொன்னான், அவர்கள் எழுந்து கொண்டார்கள்,

நாம் தானே துரை மீது கோபமும் வெறுப்பும் கொள்ள வேண்டும், அவன் ஏன் தன்னை பார்த்தவுடனே எழுந்து ஒடுகிறான், பயமா, கடந்தகாலத்தின் நினைவுகள் எதுவும் தன்முன்னால் வந்துநின்றுவிடக்கூடாது என்ற பதைபதைப்பா என்ற யோசனையுடன் அவர்கள் போவதையே கோகிலவாணி பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

ஒரு பெண் மீது ஆசிட் அடித்தவன் என்று அவனை பார்த்தால் யாராவது சொல்வார்களா என்ன? அவனுக்கு ஆசிட் வீசியது என்பது ஒரு சம்பவம், ஆனால் தனக்கு, கண்ணில் இருந்து துரை மறையும்வரை அவனையே பார்த்துக் கொண்டேயிருந்தாள்,

கடற்கரையெங்கும் காதலர்கள் நிரம்பியிருந்தார்கள், இவர்களில் ஏதோவொரு பெண் தன்னை போல முகம் எரிந்து போககூடும், அல்லது வன்கொலை செய்யப்படவும் கூடலாம், வசை. அடி. உதை, எரிப்பு, கொலை இவை தான் காதலின் சின்னங்களா, காதல் வன்முறையில் தான்   வேர் ஊன்றியிருக்கிறதா,

அவள் கடல் அலைகளை பார்த்துக் கொண்டேயிருந்தான், இருட்டும்வரை வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று தோனற்வேயில்லை

உலகம் தன்னை கைவிட்டு யாருமற்ற நிர்கதிக்கு உள்ளாக்கி வைத்திருப்பதை உணர்ந்து கொண்டவளை போல நீண்ட நேரத்தின் பிறகு ரயில் நிலையத்தை நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தாள்,

ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்த போது ஏனோ தனக்கு முப்பத்தியாறு வயது முடிந்துவிட்டது என்பது நினைவிற்கு வந்தது.

ரயில் செல்லும்போது வீசிய கடற்காற்று தழும்புகள் நிறைந்த முகத்தில் பட்டதும் மனது தானே காதலைப்பற்றி நினைத்துக் கொள்ள துவங்கியது, உடனே மனதிற்குள்ளிருந்து இத்தனை வருசங்களாகியும் மறையாத திராவகத்தின் எரி மணமும் திகுதிகுப்பும் பீறிட்டு கிளம்பியது, தன்னை மீறிய உள்ளார்ந்த வலியை அவளால் தாஙகிக் கொள்ள முடியவில்லை

கோகிலவாணி திரும்பி பார்த்தாள், எதிர்சீட்டில் ஒரு இளம்பெண் ஒரு இளைஞன் மடியில் சாய்ந்து கொண்டு ரகசியமான குரலில் பேசியபடியே காதலித்துக் கொண்டிருந்தாள்,

கோகிலவாணி அவர்களை பார்க்காமல் வெளியே இருந்த இருட்டையே பார்த்துக் கொண்டு வந்தாள், இருட்டில் பறந்த மின்மினி பூச்சி ஒன்று முகத்தை உரசிக் கொண்டு போனது,

காதல்ஜோடி பேசிச்சிரிப்பதைக் கேட்க கேட்க கோகிலவாணி தன்னை அறியாமல் விசும்பத் துவங்கினாள், தன் காதலை  உலகம் ஏன் ஏற்க  மறுத்தது, எதற்காக தனக்கு இவ்வளவு குரூரமான தண்டனை வழங்கபட்டது என்பதை நினைத்து அவள் அழுது கொண்டேயிருந்தாள், ரயிலின் கூடவே மின்மினிகள் பறந்து வந்து  கொண்டேயிருந்தன, அது இருட்டிற்கு கண்கள் முளைத்து அவள் அழுவதை பார்த்துக் கொண்டிருப்பதை போலவே இருந்தது

– தீபாவளி மலரில் வெளியான சிறுகதை.

Print Friendly, PDF & Email

1 thought on “கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

  1. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்துவிட்டால்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *