கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 10,735 
 

மலை மந்திர் முருகன் கோவில் படிக்கட்டுகளில் இறங்கும்போதுதான் தன்னுடைய காரை லாக் செய்யாமல் வந்துவிட்டதை உணர்ந்தாள் ப்ரியா. விறுவிறுவென்று படிக்கட்டுகளில் இறங்கி செருப்பை அணிந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக கார் நிறுத்தும் இடம் நோக்கி சென்றாள். மாலை வெயிலில் அழகாய் மின்னியது அந்த உயர் ரக கார். காரை பார்த்த பிறகுதான் ப்ரியாவிற்கு போன உயிரே திரும்பி வந்தது. இந்த தில்லியில் பூட்டியிருக்கும் காரையே திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள். நல்லவேளை என் கார் தப்பித்தது என்றெண்ணியபடியே கதவைத் திறந்து ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவள் அதிர்ந்தாள். அருகே மெளனமாய் அமர்ந்திருந்தான் அருண்.

அருணைக் கண்டதும் அதுவும் இவ்வளவு பக்கத்தில் தன்னுடைய காரில் அமர்ந்திருக்கும் அருணைக் கண்டதும் ப்ரியாவிற்கு குப்பென்று வியர்த்தது.
ஆறு வருடங்கள் கழித்து அவனைக் கண்டவுடன் இனம் புரியாத ஒரு பயம் தொற்றிக்கொண்டது. முதலில் அவன் தானா என்கிற சந்தேகம் கூட ஏற்பட்டது காரணம் அப்போது சட்டை பேண்ட் அணிபவன் இப்போது ஜீன்ஸும், டீ-சர்ட்டும், கூலிங்கிளாஸுமாய் ஆளே மாறியிருந்தான். தன் அருகே அருண் உட்கார்ந்திருப்பதை அவள் கணவன் பார்த்தால் என்னவாகும் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. காரணம் திருமணத்திற்கு முன் அருணை உயிருக்கு உயிராய் நேசித்தவள் ப்ரியா.

சென்னையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதுதான் அருணுக்கும் ப்ரியாவிற்கும் காதல் மலர்ந்தது. பார்வை பரிமாற்றத்தில் கொஞ்ச நாட்கள், பின் மெல்ல மெல்ல ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்தது நேசம். முதலில் ப்ரியாதான் காதலை சொன்னாள். கொஞ்சம் தயங்கித் தயங்கிதான் பேசுவான் அருண். அவனது ஏழ்மையும் ப்ரியா பணக்கார குடும்பப்பெண் என்பதாலும் முதலில் கொஞ்சம் தயங்கியபடியே பேசுவான் அருண். நாட்கள் ஓடியதில் உடல்வேறு உயிர் ஒன்று என்கிற நிலைக்கு வந்துவிட்டனர் இருவரும். ஒரு நாள் திடீரென்று ப்ரியாவிற்கு அதிகாலையில் போன் செய்தான் அருண்.

“என்னடா இவ்ளோ சீக்கிரம் போன் பண்ற” தூக்க கலக்கத்தில் கேட்டாள் ப்ரியா.

“செல்லம், இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு மெரினாவுக்கு வந்துடு, காரணம் கேட்காத..நீ வா சொல்றேன்”

அன்று மாலை நான்கு மணிக்கு கடற்கரை சென்று காத்திருந்தவள், பின்னாலிருந்து அருணின் குரல் கேட்டு திரும்பினாள். அங்கே பத்து பதினைந்து சிறுவர்களுடன் கையில் ஒரு பெரிய கேக்குடன் நின்றுகொண்டிருந்தான் அருண்.

“ஹேய் இன்னைக்கு என்னோட பர்த்டேகூட இல்லையே ஏன் இந்த அமர்க்களம் அருண்?” விழிகள் மலர கேட்டவளின் அழகிய முகத்தை தன் கைகளில் ஏந்தி பேச ஆரம்பித்தான் அருண் “இன்னைக்கு நாம காதலிக்க ஆரம்பிச்சு சரியா ஒருவருசம் ஆகுது ப்ரியா. என்னோட உயிரை நான் சந்திச்ச நாள். என் வாழ்க்கையில எப்பவுமே மறக்க முடியாத பொன்நாள். ஐ லவ் யூ டா” அவனை இறுக அணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் ப்ரியா.

பூகம்பம் சொல்லிக்கொண்டா வருகிறது? ப்ரியாவின் காதலுக்கு அவள் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. “நம்ம சாதியென்ன அவன் சாதி என்ன? அதுமட்டுமில்ல ப்ரியா, நம்ம வீட்டுல கைகட்டி நின்னு வேலை செய்யறானே முத்துச்சாமி அவனை விட குறைவாதான் அருணால சம்பாதிக்க முடியும். தேவதை மாதிரி எம் பொண்ணை வளர்த்துருக்கேன். போயும் போயும் ஒரு பரதேசிக்கா உன்னை கல்யாணம் பண்ணி கொடுப்பேன். இப்பவே அவன மறந்துட்டு நான் சொல்ற மாப்பிள்ளையை கட்டிக்கோ. சினிமாத்தனமா ஏதாவது பண்ண நினைச்சா உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன். உன்னை பெத்ததுக்கு உங்க அம்மாவை கொன்னு பொதச்சுருவேன்”

மூன்று நாட்கள் அடம்பிடித்துப் பார்த்து ஓய்ந்துபோனாள் ப்ரியா. விறுவிறுவென்று திருமண ஏற்பாடுகள் நடந்தன. தில்லியில் அரசாங்க பதவியில் இருக்கும் நரேனுக்கும் ப்ரியாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அப்பாவின் மிரட்டலிலும் அம்மாவின் கெஞ்சலிலும் ப்ரியாவின் தீர்க்கம் குறைந்து காதல் காணாமல் போனது.

கல்லூரியில் எல்லோருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு தன் ஸ்கூட்டி இருக்கும் இடத்திற்கு சென்றவள் அங்கே அருணைக் கண்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் மெளனமாய் நின்றாள். வேகமாய் அவள் அருகே வந்தவன் அவள் கழுத்தைப் பிடித்து கண்ணுக்கு நேராக ஊடுருவி ஒரு பார்வை பார்த்துவிட்டு சொன்னான் “எவ்ளோ தைரியம் இருந்தா எவனோ ஒருத்தனை கட்டிக்க சம்மதிப்ப, நீ எங்க போனாலும் உனக்கு நான் தாண்டி எமன்” அவள் பேச ஆரம்பிப்பதற்குள் போய்விட்டான். கொஞ்ச நேரம் அழுதுகொண்டு அப்படியே நின்றாள்.

ஆறு வருடத்திற்கு முன்பு நடந்தவை அனைத்தும் மின்னலாய் மனதில் பளிச்சிட்டு மறைந்தது.இத்தனை வருடம் வராதவன் இப்போது வந்திருக்கிறானே என்ன ஆகுமோ என்று பயந்தபடியே பேச ஆரம்பிப்பதற்குள் அவளது கார் கண்ணாடியை தட்டி வெளியே வருமாறு சைகை செய்தாள் ஒரு பெண். அருகில் ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்.

குழப்பத்துடன் இறங்கி “என்னம்மா என்ன வேணும்?” என்றாள்.

“சாரி மேடம் அங்க உட்கார்ந்திருக்கிறது என்னோட ஹஸ்பெண்ட், உங்க காரும் எங்க காரும் பக்கத்துல நின்னதால தெரியாம உங்க கார்ல ஏறி உட்கார்ந்திருக்கார்” ஓ இவள்தான் அருணின் மனைவியா என்று நினைத்துக்கொண்டு

“உங்க காருக்கும் என் காருக்கும் அவருக்கு வித்தியாசம் தெரியாதா?” சற்று சலிப்புடன் கேட்டாள்.

“கொஞ்ச நாளைக்கு முன்னால நடந்த ஆக்ஸிடெண்ட்ல அவரோட ரெண்டு கண்ணுலயும் பார்வை போயிடுச்சு அதனாலதான் தெரியாம உங்க கார்ல ஏறி உட்கார்ந்திருக்கார். வெரி சாரி மேடம்” சொல்லிவிட்டு அருகில் நின்ற சிறுமியிடம்
“ப்ரியா போய் அப்பாவ கூட்டிக்கிட்டு வாம்மா” என்றாள். அப்பாவை கூட்டிச்செல்ல ஓடினாள் அச்சிறுமி. வார்த்தைகள் தொலைந்து ஊமையாய் நின்றிருந்தாள் அருணின் முன்னாள் காதலி ப்ரியா.

– Wednesday, September 3, 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *