இதயத்தைத் தொட்டவள்..!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 27,174 
 

ஏதோ ஒன்று, அவனது இதயத்தை மெல்ல வருடியதால், முன்வரிசையில் உட்கார்ந்து தூங்கிவழிந்து கொண்டிருந்த தினேஷ் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான்.

கானக்குயில் ஒன்று மேடையில் கீதமிசைத்துக் கொண்டிருந்தது.

இது கனவல்ல நிஜம்தான் என்பது, அந்த அழகு மயில் அங்குமிங்கும் மெல்ல அசைந்து கொண்டிருந்ததில் அவனுக்குப் புரிந்தது.

சற்று முன்வரை அலட்சியமாய் மேடைப் பாடல்களைக் கேட்டுச் சலித்துப் போயிருந்த அவனது இதையத்தை உறையச் செய்தது தென்றலில் மிதந்து இதயத்தில் தேனாய்க் கலந்த அவளது குரலா? அல்லது கண்ணில் காட்சியாத் தெரிந்த அவளது இயற்கையான அழகா என்பது புரியவில்லை!

அவனுக்கு இதில் எது என்று புரியாத தடுமாற்றம்.

திடீரென விழித்துக் கொண்டதால், தன்னைச் சமாளித்துக் கொண்டு உசார் நிலையில் உட்கார்ந்து அவளது அந்தப் பாடலைக் கவனமாகச் செவிமடுத்தான்.

இதற்கு முதல் வந்து மேடையில் பாடியவர்களின் பாடல்கள் எந்த விதத்திலும் அவனைக் கவரவில்லை. தாலாட்டுப் பாடுவதுபோல இருந்ததால் எழுந்து போய்விடலாமோ என்றுகூட ஒரு சமயம் நினைத்தான்.

பாட்டை அருகே இருந்து ரசித்துக் கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்டு முதல் வரிசையில் உட்காருவதில் உள்ள பிரச்சனையே இதுதான். நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்றால், பாதிவேளையில் எழுந்து செல்லும்போது எல்லோரும் இவனை வேடிக்கை பார்ப்பார்களோ என்ற தயக்கம் எப்பொழுதும் மனதில் இருந்தது.

மேடைப்பாடகர்கள் சிலர் ரசிகர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. எதைத் தாங்கள் பாடினாலும் ரசிகர்கள் பொறுமையாய் இருந்து கேட்பார்கள் என்ற தப்பான எண்ணம் அவர்களுக்கிடையே இருந்திருக்கலாம்.

உண்மையிலேயே எப்படியான ரசிகர்கள் அங்கே இருக்கிறார்கள் என்று அந்த ரசிகர்களின் நாடி பிடித்துப் பார்த்து அவர்களைக் கவரக்கூடிய விதத்தில் பாடுபவர்கள்தான் வெகுவிரைவில் பிரபல்யமாகிறார்கள்.

அவர்கள்தான் தங்களுக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

எத்தனை மேடைகளில் இவளைப்போல எத்தனை பாடகிகளை இவன் பார்த்திருக்கிறான். அனேகமாக விலை உயர்ந்த சுடிதார் அணிந்து அழகுராணி போட்டியில் பங்குபற்றுவது போல, ஒலி வாங்கியைக் கையில் பிடித்துக் கொண்டு மேடையில் அசைந்து கொண்டு நின்றார்களே தவிர, இசையில் தங்கள் திறமையைக் காட்ட ஒருபோதும் அவர்கள் முனையவில்லை.

இன்றுமட்டும் ஏன் இந்தக் குழப்பம்? இவள் வித்தியாசமாய் இருந்தாள், இசைக்கேற்ப அசைந்தாள். இவளிடம் அவனைக் கவரக்கூடிய என்வென்று சொல்லமுடியாத ஏதோ ஒருவித கவர்ச்சி இருப்பதை மட்டும் புரிந்து கொண்டான்.

அவளோ ரசிகர்களுக்குப் பிடித்தமான, அப்போது பிரபல்யமான சில பாடல்களைத் தெரிந்தெடுத்து அவர்களின் ரசனைக்கேற்ப, நாடி பிடித்துப் பார்த்து, மேடையில் பாடிக் கொண்டிருந்தாள். அவனும் ஒரு பாடகன் என்பதால் அவள் தேர்ந்தெடுத்த பாடல்கள் எல்லாமே அவனுக்கும் பிடித்திருந்தன.

அவள் மேடையில் பாட, இவன் இங்கே வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு பாடலோடு ஒன்றிப் போயிருந்தான். அவ்வப்போது அவனை அறியாமலே அவனது கைகள் தாளம் போட்டன.

விழிகளும் நடனமாடுமா? நடனமாடும் என்பதை அப்போதுதான் அந்த மேடையில் அவளிடம் அவதானித்தான். அவ்வப்போது பாடலுக்கேற்ப அவள் மெல்ல அசைந்து கொண்டிருந்தாள். அவளுடைய அந்த மெல்லிய அசைவுகளுக்கேற்ப அழகிய விழிகளும் அசைந்து ரசிகர்களிடம் கதைகள் பலபேசின.

ஒவ்வொரு அசைவின்போதும் மெல்லிய சுகந்தம் காற்றோடு கலந்து அவனைத் தேடிவந்து தொடுவதுபோல இவன் உணர்ச்சி வசப்பட்டான். அதைச் சமாளிக்க, தன்னை ஆசுவாசப்படுத்தி, சுவாசத்தை உள்ளே நன்றாக இழுத்து விட்டான். தன்னை மறந்து, தன்னையே அவள் தளுவியது போன்ற உணர்வில் மனதுக்குள் பரவசப்பட்டான்.

‘முதல் முதல் பார்த்தேன் உன்னை..

முழுவதும் இழந்தேன் என்னை..!’

இனிய கீதம் ஒன்று அவனைத் தொட்டதும் அவன் சிலிர்த்தான். எல்லா ரசிகர்களைப் போலவும், என்றுமில்லாத ஒரு இனிய உணர்வில் அவனும்; மிதந்தான். அருகே இருந்தவரிடம் அவளின் பெயரைக் கேட்டு அறிந்து கொண்டான்.

‘திவாணி..!’ அவளைப் போலவே அழகான பெயர்.

தனக்காகவே அந்தப் பாடலைத் தெரிவு செய்து திவாணி பாடியிருப்பாளோ என்ற நினைப்பில் அப்படியே ரசித்துக் கொண்டு அதற்குள்ளே மூழ்கிப் போயிருந்தான். அவ்வப்போது பாடலுக்கு நடுவே இசை வெள்ளம் புரண்டபோது, கையிலே வைத்திருந்த ஒலி வாங்கியை அவள் மார்புக்கு நேரே நிறுத்தி தனது விழிகளால் சபையோரை தளுவிப் புன்னகைத்தாள்.

தன்னையே அவள் பார்த்துப் புன்னகைப்பது போல, முன் வரிசையில் உட்கார்ந்திருந்த இவன், அவள் பார்வை படும்போதெல்லாம் மெய்சிலிர்த்தான்.

பாடல் முடிந்து அவள் மேடையை விட்டு இறங்கி வந்தபோது இவன் அருகே சென்று தனக்குப் பிடித்த அந்தப் பாடலைப் பாடியதற்காக அவளை மனதாரப் புகழ்ந்தான்.

யார்தான் புகழை விரும்பமாட்டார்கள்!

‘தாங்யூ’ என்றாள் அவள் இனிய குரலில்.

நிறையப் பேசவேண்டும்போல இருந்தாலும் அவளது தாயார், பாதுகாப்பதிகாரி போல அவளுக்கு அருகே விறைப்பாக நின்றதால் மேற்கொண்டு அவனால் பேசமுடியவில்லை.

‘தாங்யூ’ என்று அவள் ஒரு வார்த்தை திருப்பிச் சொன்னதிலேயே அவன் மனம் நிறைந்து போயிருந்தான்.

வீட்டிற்குத் திரும்பிப் போகும்போது அவள் பாடிய அந்தப் பாடலை அவனும் முணுமுணுத்தான். எதையோ இழந்துவிட்ட உணர்வில் ஓவ்வொரு வரிகளையும் உணர்ந்து பாடினான். அவளும் அவனைப் போலவே மனதில் எதையாவது நினைத்துக் கொண்டு பாடியிருப்பாளோ?

அதன்பின் அவளது நிகழ்ச்சிகள் நடந்த இடமெல்லாம் இவனும் தேடிச் செல்லத் தொடங்கினான். அவ்வப்போது அவள் அவனைப் பார்த்துப் புன்னகை சிந்துவாள். இவன் தனக்குள் மகிழ்ந்து போவான்.

ஓரு நாள் அவள் பாடிவிட்டு மேடையில் இருந்து இறங்கி வரவே, அவன் எதிரே சென்று மலர்க் கொத்து ஒன்றைக் அவளுக்குக் கொடுத்தான்.

‘என்ன இது..?’ திவாணி செல்லமாய் சிணுங்கினாள்.

‘நான் உங்க ரசிகன், நல்ல நட்பிற்கு மலர்தான் அடையாளம், அதுதான் வாங்கி வந்தேன்! மறுக்காதீங்க.. பிளீஸ்..!’ என்றான் தினேஷ்.

‘உங்களுக்கு ஏன் வீண்சிரமம்!’ அவள் சற்றுத் தயங்கவே சட்டென்று மலர்க்கொத்தை அவளது கைகளில் திணித்தான்.

அவளால் அதை மறுக்க முடியவில்லை.

‘தாங்யூ..!’ அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவன் நீட்டிய மலர்க் கொத்தைப் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டாள்.

அவனோ சந்தோஷம் தாங்கமுடியாமல், மனசெல்லாம் கிளுகிளுக்க வீட்டிற்குச் சென்றான். வீட்டிற்குச் சென்றானா, செட்டைகட்டிப் பறந்தானா என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை.

மலர்ச் செண்டை மட்டுமல்ல, தனது இதயத்தையும் அவளிடம் பறி கொடுத்துவிட்டது போன்ற உணர்வில் அன்று முழுவதும் மிதந்தான்.

அவ்வப்போது இவன் அவளை வாழ்த்துவதும், அவள் பதிலுக்கு நன்றி சொல்வதும் ஒரு சம்பிரதாயம் போல அவர்களுக்கிடையே தொடர்ந்தது. இவனும் ஒரு பாடகன் என்பதை அறிந்த அவள் அவனை வாழ்த்துவதும் அவன் நன்றி சொல்வதுமாகத் தொடர்ந்த அவர்களின் தொடர்கதையில், திடீரெனப் பாதைமாறியது.

‘தம்பி சொல்லுறன் என்று குறைநினைக்காதையுங்கோ, எங்களுக்கு மானம்தான் பெரிது. அவள் பெரிய இடத்தில கலியாணம் கட்டி வாழப்போகிறவள். இனிமேல் இப்படி வந்து கதைக்கிறதை நீங்கள் நிறுத்திக் கொண்டால் நல்லது!’

அவன் இதைச் சற்றும் எதிர்பார்க்காததால் ஒரு கணம் அதிர்ந்து நின்றான்.

‘அம்மா என்னம்மா..? இப்படி மரியாதை இல்லாமல்..!’ திவாணி தயக்கத்தோடு சொல்லி முடிக்க முன்பாகவே, திவாணியை முறைத்துப் பார்த்த தாயாரின் குரல் உயர்ந்தது.

‘திவாணி நீ பேசாமல் இரு, கண்டவங்களோட எல்லாம் கதைச்சு மானத்தை வாங்காதை. நீ உயர உயரப் பறக்க வேண்டியவள். இவனோட இனிமேல் கதைக்கிறதை விட்டிடு!’ தாயார் அவளின் கையைப்பிடித்துத் தறதறவென்று அந்த இடத்தைவிட்டு இழுத்துச் சென்றாள்.

திவாணியின் தாயார் முகத்தில் அறைந்தது போல நேரடியாகவே அவனிடம் சொல்லிவிட்டு, திவாணியை இழுத்துச் சென்றபோது, திவாணி தாயாரை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாமல் மௌனமானாள்.

அவளது கண்கள் மட்டும் பனித்திருந்ததை தினேஷ் அவதானித்தான்.

வீட்டிற்குத் திரும்பி வந்த தினேஷ், எதையோ பறிகொடுத்தது போல மனமுடைந்து போனான். ஒரு பெண்னோடு பேசிப் பழகுவது தப்பா? அப்படிப் பழகும்போது பெண்ணைப் பெற்றவர்கள் ஏன் தப்பான பார்வையில் பார்க்கிறார்கள்?

இனிய நட்புத் தொடரும்போது நந்திபோல தாயார் ஏன் குறுக்கிடுகிறாள் என்பது அவனுக்குப் புரியாத புதிராய் இருந்தது. பதில் தெரியாக் கேள்விகளோடு, திவாணியின் தாயாரைத் திட்டித் தீர்த்துக் கொண்டு படுக்கைக்குச் சென்றான்.

நல்ல நட்புத்தான் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் கிடைத்தால் காதலாய்ப் பரிணமிக்கிறது என்பதும் அவனுக்குத் தெரியும். படுக்கையோ நொந்தது, எதையோ திடீரெனப் பறிகொடுத்து விட்டது போல அன்றிரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்தான்.

அதன்பின் திவாணியை அவன் காணவில்லை. எங்கோ எல்லாம் அவளைப் பற்றி விசாரித்தான். அவர்கள் ஊரைவிட்டுப் போய்விட்டதாக சொன்னார்கள்.

‘சிகரத்தைத் தொடவேண்டும் என்றால் நீயும் ஒரு சிறந்த பாடகனாக வரவேண்டும். உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. முயற்சி செய்தால் கட்டாயம் உன்னால் உயரப்பறக்க முடியும் தினேஷ்!’ என்று நண்பன் புத்திமதி சொன்னான்.

தினேஷ_ம் நண்பனின் புத்திமதியை ஏற்று இரு குரலில் பாடப் பயிற்சி பெற்றான். மிகப்பழைய பாடல் ஒன்றைத் தெரிவு செய்து அதையே இருகுரலில் பாடிப் பயிற்சி பெற்றான்.

வளையாபதி படத்தில் இடம் பெற்ற ‘குலுங்கிடும் பூவிலெல்லம் தேனருவி’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடலைத்தான் அவன் முதலில் தெரிவு செய்திருந்தான்.

திவாணியை நினைத்து அன்று மேடையில் அவனே ஆண் குரலிலும், பெண்குரலிலும் ஒரே பாடலை மாறிமாறிப் பாடியபோது ரசிகர்களின் கரகோஷம் வானத்தையே தொட்டது. கண்களை மூடி இசையை ரசித்தவர்கள் அவனுடன் ஒரு பெண்ணும் சேர்ந்து பாடியதாகத்தான் நினைத்தார்கள்.

வானத்து நட்சத்திரங்களாகப் பிரகாசிக்க வேண்டுமானால், உண்மையான திறமைகள் வெளிவரும் போதுதானே, ரசிகர்களைத் தானாகவே உருவாக்கி, வானத்து நட்சத்திரங்களாகப் பிரகாசிக்க முடியும்.

அவர்கள் கொடுத்த ஆதரவு, அவனால் ‘இன்னும் முடியும்’ என்ற நம்பிக்கையை அவனுக்குள் ஏற்படுத்தியது.

திவாணியின் புகழ் பரவியது போலவே, இருகுரல் மன்னன் என்று தினேஷின் புகழும் வேகமாகப் பரவத் தொடங்கியது. புகழ் பரவிதாலோ என்னவோ, தினேஷின் பாடலைக் கேட்ட, பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தினேஷை தனக்காக, தன்னுடைய இசையமைப்பில் ஒருபாடல் பாடும்படி அழைத்திருந்தார்.

தினேஷ_ம் அவர் விருப்பப்படியே ஆண்குரலில் அந்தப் பாடலைப் பாடியிருந்தான். பாடல் வெளிவந்தபோது அவனால் நம்பமுடியாமல் இருந்தது. அவனுடைய குரலோடு ஒரு பெண்குரலும் இணைந்திருந்தது. நிச்சயமாக அது திவாணியின் குரல்தான் என்பது அவனுக்குப் புரிந்தது.

திவாணியின் குரலும் அந்தப் பாடலில் இணைந்திருந்ததால் திரும்பத் திரும்ப அந்தப் பாடலைப் போட்டுக் கேட்டான்.

‘உன்னைச் சரணடைந்தேன்..

உன்னுள்ளே நான் பிறந்தேன்!’

ராஜா – ஜிக்கி ஜோடிபோல மீண்டும் ஒரு இளம் ஜோடி தினேஷ் – திவாணி என்று எங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பத்திரிகைகள் எல்லாம் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகப் புகழ்ந்து பாராட்டின.

ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், பாடல் ஒலிப்பதிவான போது கூட அவன் திவாணியைச் சந்திக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அந்தப் பாடலைக் கேட்கும்போது திவாணி அவன் மனதில் நிழலாடினாள்.

அவன் உள்ளத்தில் குடியிருந்த திவாணியைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தான்.

அவளுக்குத் திருமணமாகி இருக்குமா? என்னைக் கண்டால் பேசுவாளா?

இப்படிப் பலதையும் நினைத்து, எந்த முடிவும் எடுக்க முடியாமல் யோசனையில் ஆழ்ந்தபடி படுத்திருந்தான்.

தொலைபேசி கிணுகிணுத்தது.

‘ஹலோ..!’ என்றான்.

‘தினேஷ்.. நீங்களா..?’ இதயத்தை வருடியது மறுபக்கம்.

‘திவாணி..!’ தன்னை மறந்து கத்தினான்.

‘என்னை ஞாபகம் இருக்கா தினேஷ்..?’

‘என்ன திவாணி அப்படி சொல்லிவிட்டாய்? மறந்தால்தானே நினைப்பதற்கு! நீ எப்படி இருக்கிறாய்?’

‘நல்லாய் இருக்கேன்! நீங்க எப்படி இருக்கிறீங்க?’

‘ஏதோ, உயிரோடு இருக்கிறேன்..!’ என்றான் தினேஷ்.

‘ஏன் அப்படி விரக்தியோடு பேசிறீங்க..?’

நீ இல்லாத உலகில் நான் நடைபிணம்தான்! சட்டென்று பதில் சொல்ல நினைத்தாலும், அவன் சொல்லவில்லை.

‘என்ன தினேஷ் மௌனமாகிவிட்டீங்க, உங்ககூட நான் கொஞ்சம் பேசணும். எங்க வீட்டிற்கு வருவீங்களா?’ கெஞ்சுவது போலக் கேட்டாள்.

முகவரி கேட்டான்.

நீண்ட நாட்களின்பின் சந்திக்கப் போகிறோம் என்பதால் அவன் விலையுயர்ந்த ஆர்க்கிட் மலர்க்கொத்து ஒன்றை அவளுக்காக வாங்கிச் சென்றான்.

வாசற்கதவை அவள்தான் திறந்தாள்.

அவன் உள்ளே வந்து கதவை மூடி, பாத அணியை அகற்றிவிட்டு மலர்க்கொத்தை அவளிடம் நீட்டினான். முன்பு பார்த்ததைவிட அவள் மேலும் அழகாக இருந்தாள்.

அவளது தாயாரின் படம் மாலைபோட்டபடி சுவரில் தொங்குவதை அவதானித்தான்.

அவள் மலர்க்கொத்தைப் பெற்றுக் கொள்ளாமல், கைகளைக் கட்டிக் கொண்டு அவனை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

அந்தப் பார்வையில் இவன் ஒருகணம் குழம்பிப்போனான்.

‘என்ன திவாணி இப்படிப் பார்க்கிறாய்?’

‘உங்களுக்கு இந்தப் பூவைத்தவிர வேறு எதுவுமே கொடுக்கத் தெரியாதா?’ வாய்விட்டுக் கேட்டாள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கு முதலில் புரியவில்லை. அவளது விழிகளில் ஆவலோடு பதிலைத் தேடினான்.

‘இன்னும் புரியலையா? நானும் தனிமையில் தவிக்கிறேன்’ என்பதுபோல அவள் விழிகளை உயர்த்தி அவனை ஏக்கத்தோடு பார்த்தாள்.

உண்மையாவா?

ஏதோ புரிந்தது போல அவனது கைகள் அவனை அறியாமலே விரிந்தன.

அதற்காகவே காத்திருந்ததுபோல அவள் அந்தக் கைகளின் அரவணைப்பில் நுழைந்து அவனது பரந்த மார்பில் முகம்புதைத்து விம்மினாள்.

மனதில் உள்ள பாரத்தை அழுதால்தான் அவளால் இறக்கி வைக்க முடியும் என்று நினைத்து சிறிது நேரம் அப்படியே மௌனமாக நின்றான் தினேஷ்.

‘என்ன திவாணி..? ஏன் அழுகிறாய்..?’ அவளது தலையை வருடியபடி சற்றுப் பொறுத்துக் கேட்டான் தினேஷ்.

‘அழலை, இது ஆனந்தக் கண்ணீர், அம்மா இறந்தபின் நான் தனித்துப் போனேன், என்னதான் பணம் இருந்தாலும், என்னைப் புரிந்து கொண்ட ஒருவரின் இப்படியொரு அன்பான அணைப்புக்குத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன், அது நீங்கதான்!’ என்றாள் திவாணி.

‘உன்னைச் சரணடைந்தேன்

உன்னுள்ளே நான் பிறந்தேன்

என்னில் உறைந்திருந்தேன்

உன்னுள்ளே நான் கரைந்தேன்’

அவர்களை அறியாமலே, அவர்களின் இதயத்தைக் கரைத்த வார்த்தைகள் இசையாய் வெளிப்பட, அவர்களை ஒன்றாய்ச் சேர்த்து வைத்த அந்தப் பாடலை அவர்களை அறியாமலே ‘உன்னைச்சரணடைந்தேன்’ என்று ஒரே நேரத்தில் இருவரும் மெல்ல முணுமுணுத்த படி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்.

Print Friendly, PDF & Email

1 thought on “இதயத்தைத் தொட்டவள்..!

  1. என்னதான் புகழ், பணம், சொத்து சுகங்கள் என்று இருந்தாலும், அந்த நபரைப் புரிந்து கொண்ட ஒருவரின் உண்மையான உறவே வாழ்வை நிறைவு செய்கிறது. என்ற சீரிய கருத்தை இந்தக்கதையின்மூலம் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். கதாசிரியர் குரு அரவிந்தன் அவர்களுக்கு நிறைய இசை ஞானம் இருப்பதாகத் தெரிகிறது. Poetry is the mother of All arts என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், அவரின் பல கதைகளில் கவிதைகள் குறியீடாக நிற்பதைக் காணவும் முடிகிறது. குறிப்பாக காதல் கதைகளில்.
    ரசனை மிக்க எழுத்தாளருக்கு, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *