இடிந்த கோட்டை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 9,177 
 

1

சமீபத்தில் ஒரு பழைய சிநேகிதர் வீட்டுக்கு நான் போயிருந்த போது அவருடைய குழந்தை என்னை ஒரு கேள்வி கேட்டாள். “மாமா! இப்போதெல்லாம் நீங்கள் ஏன் கதையே எழுதுவதில்லை?” என்றாள். யுத்தத்தினால் காகிதம் ரொம்பக் கிராக்கியென்றும், நானே எழுதிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் எழுதுவதை விகடனில் போட முடியாதல்லவா என்றும், இம்மாதிரி அவளுக்கு ஏதேதோ சால்ஜாப்பு சொன்னேன். முக்கியமான காரணத்தை மட்டும் அவளுக்குச் சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன்:

உலக வாழ்க்கையில் உண்மையாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்க பார்க்க கதையாவது காரணமாவது என்று எனக்குத் தோன்றிவிடுகிறது. கதையில் கற்பனை செய்ய முடியாத அத்தனை அதிசயமான சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. ஒரு விசேஷமென்னவென்றால், அந்த அதிசய சம்பவங்களைக் குறித்து யாருக்கும் சந்தேகம் உண்டாவதில்லை. இப்படியும் நடக்குமா என்று எண்ணுவதில்லை. வெகு தூரத்தில் நடந்த சம்பவமானாலும் பத்திரிகைகளில் வந்து விட்டால் பூரணமாய் நம்பிவிடுவார்கள்.

உதாரணமாக, சென்ற மாதத்தில் நடந்த ஒரு விபரீத அதிசயத்தைக் கேளுங்கள்: பெங்களூரில் ஒரு விவாகம் நடந்தது. மணமகனும் மணமகளும் ஏழைகள். கல்யாணம் ஆனதும், மாப்பிள்ளையும் பெண்ணும் இன்னும் அவர்களைச் சேர்ந்தவர்களும் சாலையோடு போய்க் கொண்டிருந்தார்கள். வழியில் மணப்பெண் அவளுடைய தோழி ஒருத்தியுடன் ஒரு மரத்தடியில் ஒதுங்கிச் சற்று இளைப்பாற உட்கார்ந்தாள். அப்போது அந்த மரத்தின் கிளை ஒன்று ஒடிந்து விழுந்தது. அது அந்த மணப்பெண்ணின் தலையில் விழுந்தது! மணப்பெண் தட்சணம் உயிர் துறந்தாள்!

இந்தப் பரிதாப சம்பவம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதுவே ஒரு கதையில் வந்திருந்தால், நாம் இலேசில் நம்பிவிடுவோமா? “அந்த மணப்பெண் அந்த மரத்தடிக்குத் தானா போயிருக்க வேண்டும்? வேறு மரத்தடிக்குப் போயிருக்கக் கூடாதா? அந்த மரக்கிளை ஐந்து நிமிஷத்துக்கு முன்பே ஒடிந்து விழுந்திருக்கக் கூடாதா? அதுவும் மணப்பெண் தலையில் பார்த்துத்தானா விழ வேண்டும்? பக்கத்திலுள்ள யார் தலையிலாவது விழக்கூடாதா?” என்று ஆயிரம் ஆட்சேபங்களைச் சொல்வோம்.

இதை நினைக்கும் போது தான், எனக்குக் கதை எதற்காக எழுதவேண்டுமென்று தோன்றுகிறது. என் நண்பனின் பெண்ணைப் போன்றவர்களைத் திருப்தி செய்வதற்காக ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டுமென்றால் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் ஒன்றையே எழுதிவிடலாமென்றும் தோன்றுகிறது! அத்தகைய வாழ்க்கைச் சம்பவம் ஒன்றைத்தான் இப்போது எழுத உத்தேசித்திருக்கிறேன்.

2

ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை நானும் என் சிநேகிதர்கள் இருவரும் திருவண்ணாமலைக்குப் போனோம். அண்ணாமலைநாதர், ரமணரிஷிகள், எஸ்.வி.வி. ஆகிய இந்த மூன்று பேரையும் பார்த்துவரும் நோக்கத்துடன் நாங்கள் புறப்பட்டோ ம். அப்போது எஸ்.வி.வி. தமது ஆங்கிலக் கட்டுரைகளில் “ஜயா” என்னும் நாகரிக நங்கையைப் பற்றி அடிக்கடி எழுதிக் கொண்டிருந்தார். “இப்படிப்பட்ட மாதரசியை வாழ்க்கைத் துணையாக அடைந்த பாக்கியசாலி யாரோ? அவரை அவசியம் பார்க்க வேண்டும்!” என்று எங்களுக்கு ஆவலாயிருந்தது.

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குப் போகும் வழியில் செஞ்சிக் கோட்டை இருக்கிறது. அந்தக் கோட்டையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் எனக்கு வெகு நாளாக உண்டு. போகும் போது கோட்டைக்கு அருகில் மோட்டார் வண்டியை நிறுத்திவிட்டு, அந்தச் சரித்திரப் பிரசித்திப் பெற்ற பிரதேசத்துக்குள் சென்று சுற்றிப் பார்த்தோம். பாழடைந்த அரண்மனைகளையும், அந்தப் புரங்களையும், மண்டபங்களையும், மதில்களையும், நெற்களஞ்சியங்களையும், குதிரைக் கொட்டாரங்களையும் பார்க்கப் பார்க்க, பிரயாண ஆரம்பத்தில் எங்கள் உள்ளத்தில் இருந்த உற்சாகமெல்லாம் போய் சோர்வு அதிகமாகிக் கொண்டு வந்தது. ஆனாலும் அந்தக் காட்சியில் ஏதோ ஓர் அபூர்வமான கவர்ச்சியுமிருந்தது. வெகுநேரம் சுற்றிச் சுற்றி களைத்துப் போன பிறகு, கிளம்ப மனமில்லாமல் தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றோம்.

திருவண்ணாமலைக்கு இரவு போய்ச் சேர்ந்தோம். இராத்திரிக்கு ராத்திரியே கதவை இடித்து, எஸ்.வி.வி.யை எழுப்பி, “நீங்கள் தானே எஸ்.வி.வி. என்கிறது? ஜயா சௌக்கியமா? அவளுடையப் பொய்ப்பற்கள் இப்போது எப்படியிருக்கின்றன?” என்றெல்லாம் விசாரித்து அளவளாவித் திருப்தியடைந்தோம்.

மறுநாள் அண்ணாமலைநாதரையும் ரமண ரிஷிகளையும் தரிசனம் செய்து கொண்டோ ம். சாயங்காலம் வெயில் தாழ்ந்த பிறகு சென்னையை நோக்கிக் கிளம்பினோம்.

சூரியாஸ்தமான சமயத்தில் வண்டி செஞ்சியை அடைந்தது. எனக்கு இன்னொரு தடவை அங்கே இறங்கிப் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்று தோன்றிற்று. என் நண்பர்களுக்கு அது சம்மதமில்லை. “நீர் வேண்டுமானால் போய்ப் பார்த்து விட்டு வாரும். நாங்கள் ஊருக்குள் போய் ஒரு கப் காப்பி கிடைக்குமா என்று பார்க்கிறோம்” என்றார்கள். காப்பி என்றதும், நான் அங்கு இறங்காமல் வந்து விடுவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் என் மனத்திலிருந்த தாகம் காப்பியின் மோகத்தை வென்று விட்டது. “சரி நீங்கள் போங்கள். நான் இன்னொரு தடவை பார்த்துவிட்டுத் தான் வருவேன்” என்று சொல்லிவிட்டு இறங்கினேன். “அரைமணிக்குள் திரும்பி வந்து ஹாரன் அடிக்கிறோம். அதற்குள் பார்த்து விட்டு வந்து விட வேணும்” என்றார்கள். தடதடவென்று சத்தம் போட்டுக் கொண்டு வண்டி கிளம்பிச் சென்றது.

வண்டி போயிற்றோ, இல்லையோ, அந்த ஏகாந்தப் பிரதேசத்தில் நிசப்தம் குடிகொண்டது. என்னுடைய கால் செருப்பின் சப்தத்தைக் கேட்டு நானே திடுக்கிட்டேன். அந்தி நேரத்தில் அந்த நிர்மானுஷ்யமான பிரதேசத்துக்குள் தன்னந்தனியாகச் சென்ற போது மனத்தில் ஒரு விதக் கலக்கமும் பரபரப்பும் உண்டாயின. “சீ! இதென்ன காரணமில்லாத பயம்?” என்று என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன்.

3

மேற்குத் திசையிலிருந்த குன்றுகளுக்குப் பின்னால் சூரியன் திடீரென்று மறைந்தது. வெகு சீக்கிரத்தில் கையெழுத்து மறையும் நேரம் வந்து விட்டது. அப்போது நான் பழைய பாழடைந்த கட்டிடங்களைத் தாண்டிக் கொண்டிருந்தேன். இருளடைந்த பாழும் மண்டபங்களிலிருந்து வௌவால்கள் ‘இறக்கை’யை அடித்துக் கொள்ளுகிற சத்தம் கேட்டது. என் மனத்தில் பய உணர்ச்சி அதிகமாயிற்று. நல்ல வேளையாக அன்று பௌர்ணமியாதலால் கிழக்கே பூரண சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தான். நிமிஷத்துக்கு நிமிஷம் நிலவின் பிரகாசம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அன்று பௌர்ணமியாக மட்டும் இராவிட்டால், நான் மேலே போயிருக்க மாட்டேன். பாதி வழியிலேயே திரும்பி இருப்பேன்.

பாழுங் கட்டிடங்களைத் தாண்டிப் போன பிறகு, குன்றின் மேல் ஏறுவதற்கு அமைந்த படிகள் இருக்கின்றன. இந்தப் படிகளில் கொஞ்ச தூரம் ஏறிச்சென்று அங்கிருந்துப் பார்த்தால் அந்த இடிந்த கோட்டைப் பிரதேசம் முழுவதையும் பார்க்கலாம் அப்படி ஒரு தடவை பார்த்து விட்டுத் திரும்பிப் போக வேண்டுமென்று தான் இவ்வளவு தூரம் நான் வந்தது. படிகளில் ஏறத் தொடங்கினேன். இருபது முப்பது படிகளுக்கு மேல் ஒரு திருப்பம் இருக்கிறது. அங்கு நான் திரும்பியதும் மேலே அடி எடுத்து வைக்க முடியாமல் திகைத்துப் போய் நின்றேன்! ஏனெனில், அங்கே திருப்பத்தின் முதல் படியில் ஒரு மனுஷன் உட்கார்ந்திருந்தான்! அவன் ஓர் இளைஞன். நாகரிகமாக வேஷ்டி, ஜிப்பா அணிந்தவன். தலையை அழகாகக் கிராப் செய்து வாரி விட்டுக் கொண்டிருந்தான். முகம் களையான முகம்; புத்திசாலி என்றும் தோன்றியது. இப்படிப்பட்ட பையனைச் சாதாரணமாக வேறு எங்கே பார்த்தாலும், பயமோ, அதிசயமோ உண்டாக நியாயமில்லை. ஆனால் அந்த வேளையில், அந்த நிர்மானுஷ்யப் பிரதேசத்தில், அவனைத் திடீரென்று வெகு சமீபத்தில் பார்த்ததும் பாம்பை மிதித்தவன் போல் துணுக்குற்றுப் போனேன்.

அந்த வாலிபன் முகத்திலும் ஆச்சரியமும் திகைப்பும் காணப்பட்டன. ஆனால் அவன் தான் முதலில் சமாளித்துக் கொண்டான். “யார் ஸார் நீங்கள்? இந்த ஊர் இல்லை போலிருக்கிறதே?” என்றான். பேச்சுக் குரல் கேட்டதும் எனக்குத் தைரியம் உண்டாகி விட்டது. ‘நல்ல வேளை! இங்கே ஒரு மனுஷன் இருக்கிறானே! போகிற போது சேர்ந்து போகலாம்’ என்று மனதிற்குள் நினைத்தேன். பிறகு நான் அங்கு வந்த காரணத்தைக் கூறினேன்.

“ஆமாம்; இந்த இடத்திலிருந்து வெண்ணிலாவில் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எனக்குக் கூட ரொம்பவும் பிடிக்கும். அடிக்கடி இங்கு நான் வருவதுண்டு,” என்றான்.

அவனருகில் நானும் உட்கார்ந்து, “உமக்கு இந்த ஊர் தானா?” என்று கேட்டேன். “இல்லை. என் சொந்த ஊர் பெரிய குளம். பக்கத்து ஊர்ப் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயராகயிருக்கிறேன். வந்து மூன்று வருஷமாயிற்று,” என்றான்.

4

அவன் செகண்டரி ட்ரெயினிங் ஆனவன் என்றும், பெயர் குமாரஸ்வாமி என்றும் தெரிந்து கொண்டேன். தன் கையால் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அவன் சொன்னபோது, “கல்யாணம் ஆகவில்லையா?” என்று கேட்டேன்.

“கல்யாணமா?” என்று சொல்லி அவன் வானத்துச் சந்திரனை நோக்கினான். பிறகு, பெருமூச்சு விட்டுக் கொண்டு என்னைப் பார்த்து “இதுவரைக்கும் இல்லை,” என்றான். அப்போது அவனுடைய பார்வையும் புன்னகையும் ஏதோ ஒரு மாதிரியாக இருந்தன.

பின்னர் அவனாகவே, “ஆனால் பெண் நிச்சயமாகியிருக்கிறது,” என்றான்.

“எந்த ஊரில்?” என்று கேட்டேன்.

“இதே ஊரில், இதே இடத்தில்தான். பெண் நிச்சயமாகி முந்நூறு வருஷமாகிறது…” என்று கூறி, ஒரு நிமிஷம் தயங்கினான்.

பிறகு, “இன்றைக்குத்தான் கல்யாணம்” என்று சொல்லி முடித்தான்.

என்னுடைய நெஞ்சு அடித்துக் கொள்ளத் தொடங்கிற்று. ஐயோ! இவனுக்குச் சித்தப் பிரமை போலிருக்கிறதே! இந்த ஏகாந்தமான பிரதேசத்தில் அஸ்தமன வேளையில் இவனிடம் வந்து அகப்பட்டு கொண்டோமே?

மெதுவாக அங்கிருந்து கிளம்புவதற்கு நான் யத்தனைக்கையில், அவன், என் மனதிலுள்ளதைத் தெரிந்து கொண்டவன் போல், “எனக்கு மூளை சரியாயில்லையென்று நினைக்கிறீர்களாக்கும். அப்படித்தான் தோன்றும். எனக்கே சில சமயம் இதெல்லாம் சித்தப் பிரமையோ என்று தோன்றுகிறது. உங்களுக்குச் சாவகாசமிருந்தால் முழு விவரமும் சொல்கிறேன். எத்தனையோ நாளாக, யாரிடமாவது என்னுடைய அநுபவங்களைச் சொல்ல வேண்டுமென்று எனக்கு ஆசையுண்டு,” என்றான்.

அவன் பைத்தியக்காரன் என்ற எண்ணம் எனக்கு மாறிவிட்டது. ஏதோ ரொம்பவும் துக்கப்பட்டவன், துக்க மிகுதியினால் இப்படிப் பேசுகிறான் என்று தோன்றியது. அவனுடைய கதையைக் கேட்டுவிட்டு கூடுமானால் அவனுக்கு யோசனை சொல்லி உதவி செய்ய வேண்டுமென்ற ஆசையும் உண்டாயிற்று.

“சீக்கிரமாகச் சொல்லி முடித்தால் கேட்டு விட்டுப் போகிறேன்,” என்றேன்.

5

குமாரஸ்வாமி நன்றி ததும்பிய கண்களுடன் என்னைப் பார்த்தான். “ஆகட்டும்! சுருக்கமாக முடித்து விடுகிறேன்,” என்றான். ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மேலே சொல்லத் தொடங்கினான்.

“பக்கத்துக் கிராமத்தில் நான் உபாத்தியாயர் வேலைக்கு வந்து வருஷம் மூன்று ஆயிற்றென்று சொன்னேனல்லவா? வந்து ஆறு மாதத்துக்கெல்லாம் சில சினேகிதர்களுடன் இந்தச் செஞ்சிக் கோட்டைக்கு ஒரு முறை வந்திருந்தேன். இந்தப் பாழடைந்த பிரதேசம் எப்படியோ என் மனத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. அடிக்கடி இங்கே வர வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. யாராவது துணைக்குக் கிடைத்த போதெல்லாம் அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். கொஞ்ச நாளில் யாரும் துணை கிடைப்பது அருமையாகி விட்டது. எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரும், ‘வெறுமே அந்தச் சுடுகாட்டில் என்ன வேலை?’ என்று சொல்லி வர மறுத்து விட்டார்கள். பிறகு பள்ளிக் கூடத்துப் பசங்கள் சிலரை அழைத்துக் கொண்டு வரத் தொடங்கினேன். நாளடைவில் அவர்களுக்கும் அலுப்பு வந்து விட்டது.

அப்புறம் நான் இங்கே தனியாகவே வருவதற்கு ஆரம்பித்தேன். ஞாயிற்றுக்கிழமை முதலிய விடுமுறை நாட்களில் பிற்பகலில் இங்கு வந்து சுற்றிச் சுற்றி அலைந்து விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடுவேன்.

அம்மாதிரி ஒரு நாள் தனியாக இங்கு வந்திருந்த அன்று தற்செயலாகப் பௌர்ணமியாயிருந்தது. இது நடந்து சுமார் ஒரு வருஷம் இருக்கும். இன்று போல் தான் அன்றும் பூரண சந்திரன் வெள்ளி நிலாவைப் பொழிந்து கொண்டிருந்தான். இந்த இடத்தை விட்டுப் போக மனமில்லாமல் ஏதேதோ ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன். முந்நூறு வருஷத்துக்கு முன்பு இதே நேரத்தில் இந்த பிரதேசம் எவ்வளவு கலகலப்பாய் இருந்திருக்கும். தூரத்திலே கோட்டைக் கதவுகளைச் சாத்துவார்கள்; அரண்மனையில் மேளவாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்கும்; குதிரையேறிய கோட்டைக் காவலர்கள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருப்பார்கள்; கோயிலில் தீபாராதனை மணி அடித்துக் கொண்டிருக்கும்; மண்டபங்களில் மட மாதர்கள் நடனமாடிக் கொண்டிருப்பார்கள். ராஜகுமாரிகள் அந்தப்புரங்களில் பாதச் சிலம்பு ஒலிக்க நடமாடுவார்கள்…

இப்படி நான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் திடீரென்று எனக்கு மயிக்கூச்சல் எறிந்தது. இது என்ன ஆச்சரியம்! நிஜமாகவே சதங்கை ஒலி கேட்பது போலிருக்கிறதே? காது கொடுத்துக் கேட்டேன். எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, ஒரு பெண்மணி பாதச் சிலம்பு கிலுகிலுவென்று சப்திக்க நடந்து வருவதுபோல் ஒரு பிரமை உண்டாயிற்று. அது இந்த உலகத்து ஒலிதானோ? அல்லது வேறு உலகத்தைச் சேர்ந்ததோ? அந்த ஒலியை முன் ஒரு தடவை எப்போதோ, எங்கேயோ, கேட்டிருப்பது போன்ற உணர்ச்சியும் எனக்கு உண்டாயிற்று.

6

ஒரு நிமிஷத்தில் என் உடம்பெல்லாம் சொட்ட நனைந்து போகும்படி வியர்த்துவிட்டது. அந்த மாயையிலிருந்து விடுதலை பெறுவதற்காக தேகத்தை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டி எழுந்து நின்றேன். விரைந்து ஊர் போய்ச் சேர்ந்தேன். அன்று ராத்திரி நான் ஒரு கண நேரமும் தூங்க வில்லை. காலையில் என்னைப் பார்த்தவர்கள், “என்னப்பா, முகம் இப்படி வெளிறிப் போயிருக்கிறது? பேயடித்தவன் போலிருக்கிறாயே?” என்றார்கள். உண்மையில், நேற்றிரவு பேயுலகத்துக்குப் போய் விட்டுத் தான் நான் திரும்பினேனோ? மறுபடியும் இந்தக் கோட்டைப் பக்கமே வருவதில்லையென்று அன்றைய தினம் தீர்மானம் செய்து கொண்டேன். ஆனால், நாளாக ஆக இந்தத் தீர்மானத்தின் பலம் குறைந்து வந்தது; பௌர்ணமி நெருங்க நெருங்க, இங்கே வரவேண்டுமென்ற என் ஆசையும் வளர்ந்து வந்தது. கடைசியில் அடுத்த பௌர்ணமியன்று அந்த ஆசையை அடக்க முடியாமல் கிளம்பினேன். ஏதோ ஒரு பெரிய சக்தி என்னைப் பிடித்துக் கவர்ந்து இழுப்பதாகவே தோன்றியது.

இதே இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டேன். பொன்வட்டத் தகட்டைப்போல் பூரண சந்திரன் மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அஸ்தமித்து இரண்டு மூன்று நாழிகை ஆயிற்று, ‘சரி, அன்று நாம் கேட்ட சிலம்பொலி வெறும் பிரமைதான்’ என்று எண்ணி எழுந்திருக்க முயன்றேன். ஆனால் பாதி எழுந்தவன் மறுபடியும் உட்கார்ந்து விட்டேன். ஏனெனில், அந்த இனிய சிலம்பொலி அப்போது கேட்கத் தொடங்கியது. முதலில் வெகு தூரத்தில் வேறு லோகத்திலிருந்தே வருவது போலிருந்தது நேரம் ஆக ஆக, நெருங்கி வருவது போல் தோன்றியது. அதற்குமேல் என்னால் அங்கிருக்க முடியவில்லை. எழுந்திருந்து ஓடத் தொடங்கினேன். சிலம்பொலி என்னைப் பின் தொடரவில்லையென்று தெரிந்த பிறகு, கொஞ்சம் சாவதானமாக நடந்தேன். ஆனாலும், ஊர்ப் போய்ச் சேரும் வரையில் என் உடம்பு நடுங்கிக் கொண்டுதானிருந்தது.

பிறகு, இங்கே வரக்கூடாதென்ற எண்ணத்தை முழுதும் விட்டு விட்டேன். சாவகாசம் கிடைத்த போதெல்லாம் வரத் தொடங்கினேன். அடிக்கடி பல தடவைகளில் வந்தும் அந்த மாதிரி அநுபவம் எதுவும் ஏற்படாத படியால் ஏமாற்ற மடைந்தேன். ஒரு வேளை பௌர்ணமிக்கும் அந்தச் சிலம்பொலிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தினால், அடுத்த பௌர்ணமியன்று போனேன். சந்தேகம் உறுதியாயிற்று. முன் போலவே, சிறிது நேரத்துக்கெல்லாம் சிலம்பொலி கேட்டது. இம்முறை நான் எழுந்து போகவில்லை. என்ன தான் நடக்கிறது என்று பார்க்கத் தீர்மானித்து உட்கார்ந்திருந்தேன். சிலம்பின் ஒலி நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னால் அதோ அந்தப் படியண்டை வந்ததும் சப்தம் நின்றது. அந்த ஒலி நெருங்கி வந்த போது, ஓர் அபூர்வ பரிமள வாசனை பரவி வந்ததாகத் தோன்றியது. சந்தன வாசனை மாதிரி இருந்தது. ஆனால் மிக மிக இலேசாயிருந்தது. அது வாசனை தானா? அல்லது வாசனையின் ஞாபகமா? எனக்குத் தெரியவில்லை.

சிறிது நேரம் நான் மெய்ம்மறந்து சிலை போல் உட்கார்ந்திருந்தேன். பிறகு, சற்று முன் நின்ற இடத்திலிருந்து மறுபடி சிலம்பின் ஒலி கேட்க ஆரம்பித்தது.

அது படிகளின் மீது ஏறுவது போலவும் எனக்குப் பின்னால் இருந்த மேல் படியில் வந்து நிற்பது போலவும் தோன்றியது. அந்த மிருதுவான சந்தனவாசனை என்னை முற்றும் சூழ்ந்து கொண்டது. தேகத்தின் ஒவ்வொரு ரோமத் துவாரம் வழியாகவும் நான் அந்த இன்ப மணத்தை அநுபவித்தேன். இப்படி எத்தனை நேரம் மதி மயங்கி இருந்தேனோ தெரியாது. என் தலைக்கு மேலே வெகு சமீபத்தில், இருதயத்தைப் பிளக்கும்படியான ஒரு விம்மல் சத்தம் கேட்டது. அடுத்த விநாடி என் மீது சலசலவென்று நீர்த்துளிகள் விழுந்தன. அளவிலாத திகில் கொண்டவனாய்த் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தேன். அப்படி எழுந்திருந்த போது என் மேலே மிக மிருதுவான பட்டுத்துணி உராய்வது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. பிறகு இவ்விடத்தில் நிற்பதற்குத் தைரியமில்லாமல், அவசரமாய்ப் படிகளில் இறங்கத் தொடங்கினேன். போகும்போது உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.

மறு பௌர்ணமி எப்போது வரப் போகிறதென்று காத்திருந்தேன். அன்று ஏன் அவ்வளவு அவசரப்பட்டு எழுந்து வந்தோம் என்று என்னை நானே நிந்தித்துக் கொண்டிருந்தேன். அடுத்த பௌர்ணமியும் வந்தது. வழக்கம் போல் இந்தப் படியில் வந்து உட்கார்ந்திருந்தேன். அன்று சதங்கையொலி ரொம்பவும் தயங்கித் தயங்கி வந்ததாகத் தோன்றியது. எனக்கு முன்னால் சற்று நின்றது. பிறகு மேலே ஏறி, எனக்குப் பின்னால் போய் நின்றது. முன் போலவே, அந்த இனிய சந்தன வாசனை என்னைச் சூழ்ந்தது. ஆனால் முன் தடவையைப் போல் இலேசாக இல்லை.

7

சந்தேகமற உணர்ந்து அநுபவிக்கக் கூடியதாயிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பூப்போன்ற மெல்லிய கரங்களால் யாரோ என் தோள்களைக் கட்டித் தழுவுவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. தலையிலிருந்து கால் வரையில் நான் புளங்காகிதங் கொண்டேன். அந்த ஸ்பரிசம் அவ்வளவு உண்மையாகத் தோன்றியபடியால் தழுவிய கைகளைப் பிடித்துக் கொள்ள என் கரங்களை உயர்த்தினேன். ஆனால் என் கைகள் ஒன்றையும் பிடிக்கவில்லை. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். வெறும் வெட்ட வெளிதான் இருந்தது. அப்படியே நான் மூர்ச்சையடைந்து விழுந்திருக்க வேண்டும். எனக்கு மூர்ச்சை தெளிந்த போது சந்திரன் ஆகாயத்தில் வெகு தூரம் உயர வந்து விட்டது. தள்ளாடிக் கொண்டு நடந்து வீடு சென்றேன். என்னை இன்பப் பரவசத்தில் ஆழ்த்தி மூர்ச்சடையச் செய்த அந்த ஆலிங்கனத்தை நினைக்கும் போதெல்லாம் மயிர்க் கூச்சல் உண்டாயிற்று.

மறுநாள் சூரியோதயம் ஆனபோது முதல் நாள் மாலை அனுபவம் வெறும் பொய்யென்று தோன்றிற்று. எனக்கு ஏதோ சித்தப் பிரமைதான் உண்டாகி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறதென்று நினைத்து, பயந்து போனேன்.

இனி மேல், இந்தக் கோட்டைப் பக்கம் வரக் கூடாதென்றும் உறுதி செய்து கொண்டேன். ஆனால், அந்த உறுதி வெகு சீக்கிரத்திலேயே குலைந்து போயிற்று. அன்று பள்ளிக்கூடத்துக்குப் போனதும் பிள்ளைகள் சிலர், “ஏன், ஸார்! உங்களிடம் என்ன சார் சந்தன வாசனை கம்மென்று வருகிறதே! எங்கேயாவது கல்யாணத்துக்குப் போயிருந்தீர்களா?” என்றார்கள்.

ஆகவே, என்னுடைய அனுபவம் வெறும் பிரமையல்ல; மயக்கமல்ல. உண்மையாகவே, பிரதி பௌர்ணமியும் ஒரு மாயரூப மோஹினி என்னைத் தேடி வருகிறாள். அவள் யார்? எப்படிப் பட்டவள்? எதற்காக இந்த ஏழை உபாத்தியாயரைத் தேடி வருகிறாள்? என்றாவது ஒரு நாள் அவளை ரூபத்துடன் நான் காண்பேனா? இந்த அற்புத அனுபவத்தின் மர்மம் இன்னதென்பதைத் தெரிந்து கொள்வேனா?

இதற்குப் பதில் அடுத்த பௌர்ணமியன்று எனக்குக் கிடைத்தது. அன்று வழக்கம்போல் சதங்கையொலி கேட்டதும் நான் ஒலி வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தேன். மெய் சிலிர்த்துத் திகைத்துப் போனேன். உண்மையாகவே ஒரு பெண்ணுருவம் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவ்வுருவம் நடந்து வருவதாகத் தோன்றவில்லை; காற்றில் மிதந்து வருவதாகத் தோன்றியது. அது உண்மை உருவந்தானா? அல்லது, உரு வெளித் தோற்றமா? அருகில் நெருங்க நெருங்க, ஒரு நிஜப் பெண் தான் வருகிறாள் என்று நிச்சயமாயிற்று.

8

படங்களிலே நாம் பார்த்திருக்கும் ராஜபுத்திர கன்னிகைகளைப் போல் அவள் பாவாடையும் தாவணியும் அணிந்திருந்தாள். ஆபரணங்களும் அம்மாதிரியே இருந்தன. தாவணியின் தலைப்பைத் தலையில் முக்காடுப் போட்டுக் கொண்டிருந்தாள். வெண்ணிலாவின் ஒளி அவள் முகத்தில் பட்டபோது, உண்மையில் அந்த முகத்திலிருந்து தான் நிலவொளி வீசுகிறதோ என்று தோன்றியது.

அருகில் அவள் நெருங்க நெருங்க, முகம் தெரிந்த முகம் போல் காணப்பட்டது. எப்போதோ, எங்கேயோ, அவளை நான் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். குலாவியிருக்கிறேன். ஆனால் எங்கே? எப்போது – இப்படி நான் சிந்தித்துக் கொண்டிருக்கையிலே, அவள் என் அருகில் வந்து நின்றாள். அவளுடைய பரந்த கண்களால் என்னை நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கண்களில் ததும்பிய நீர்த்துளிகள் வெண்ணிலவில் முத்தைப் போல் பிரகாசித்தன. அப்படிப் பார்த்த வண்ணம், ‘குமார்! என்னை ஞாபகம் இருக்கிறதா?’ என்று கேட்டாள். அந்த இனிய குரல் என் காதில் விழுந்ததும், என் இருதயம் விம்மி வெடிப்பது போலிருந்தது. எப்போதோ ஒரு சமயம், அவளுடைய கையை நான் பிடித்துக் கொண்டு ‘இந்த ஜன்மத்தில் மட்டும் அல்ல, ஏழேழு ஜன்மத்திலும் உன்னை நான் மறவேன்; இது சத்தியம்!” என்று அவளுக்கு வாக்கு கொடுத்தது மிகப் பழைய ஒரு கனவைப் போல் ஞாபகம் வந்தது. அவளுடைய கேள்விக்கு ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தேன். அந்தக் கணத்தில் ஸ்மரணையற்றுக் கீழே விழுந்தேன்…”

குமாரஸ்வாமி சொன்ன கதையை ஏட்டில் படிக்கும் போது உங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறதோ, என்னவோ, தெரியாது. ஆனால் எனக்கென்னவோ அவன் சொல்லி வந்த போது எல்லாம் நிஜமாகவே தோன்றிக் கொண்டிருந்தது. அந்த இடமும் அந்த நேரமும் சேர்ந்து அப்படி என்னை மயக்கியிருக்க வேண்டும். தான் மூர்ச்சையடைந்த கட்டத்தில் குமாரஸ்வாமி கதையை நிறுத்தி விட்டு எழுந்திருந்து நின்றான். நாற்புறமும் ஒரு தடவை சுற்றிப் பார்த்தான். பிறகு, மறுபடியும் உட்கார்ந்தான்.

“அப்புறம் என்ன நடந்தது?” என்று ஆவலுடன் கேட்டேன்.

குமாரஸ்வாமி தொடர்ந்து சொல்லத் தொடங்கினான்.

9

“எனக்கு மூர்ச்சை தெளிந்தபோது, ஒரு பெண்ணின் மடியில் நான் தலையை வைத்துப் படுத்திருப்பதையும் அவள் தன் மென்மையான கரங்களால் என் நெற்றியைத் தடவிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். உடனே துள்ளி எழுந்து சற்று விலகி உட்கார்ந்தேன்.

“குமார்! ஏன் என்னைக் கண்டு பயப்படுகிறீர்கள்? என்னை ஞாபகம் இல்லையா? நான் தான் உங்கள் மாலதி,” என்று அவள் கூறியது இனிய சங்கீதம் போல என் செவியில் விழுந்தது.

மாலதி! மாலதி! – எவ்வளவு இனிமையான பெயர்! என் மனதுக்குள் நாலு தடவை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

‘நினைத்துப் பாருங்கள், குமார்! இதே மாதிரி பால் போல் நிலவு எரித்த ஒரு பௌர்ணமியில், இதே இடத்தில் நீங்கள் என்னிடம் விடைபெற்றுக் கொள்ளவில்லையா? என்னை மறக்காதீர்கள் என்று நான் சொன்னேன். இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, ஏழேழு ஜன்மத்திலும் மறக்க மாட்டேன் என்று என் கையில் அடித்து, சத்தியம் செய்து கொடுத்தீர்கள். ஞாபகம் இல்லையா?’ என்று மாலதி கேட்டாள்.

நான் மூர்ச்சையடைவதற்கு முன்பு இந்தக் காட்சிதான் புகையுண்ட சித்திரம்போல் என் மனக் கண்ணின் முன் தோன்றிற்று என்று சொன்னேனல்லவா? அவளும் அதைச் சொன்னது, அது வெறும் தோற்றமல்ல – உண்மையில் நடந்த சம்பவம் என்பது எனக்கு நிச்சயமாயிற்று.

மாலதியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். கங்கு கரையில்லாத பிரேமையுடன் என்னை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய விரிந்த கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதையும் கண்டேன். என் உள்ளம் உருகிற்று. அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு ‘ஞாபகம் இருக்கிறது. மாலதி! அந்த வாக்குறுதியை இன்னொரு தடவையும் அளிக்கிறேன். உன்னை ஏழேழு ஜன்மத்திலும் மறக்கமாட்டேன்,’ என்றேன்.

10

பிறகு, அவள் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடைய பூர்வ சரித்திரத்தை ஞாபகப்படுத்தினாள். அவள் சொல்லச் சொல்ல, முந்நூறு வருஷத்துக்கு முந்திய அந்தச் சம்பவங்கள் எல்லாம், தெளிவில்லாத ஒரு பழைய கனவைப் போல் எனக்கு ஞாபகம் வந்தன.”

குமாரஸ்வாமி இங்கே நிறுத்தி, “இந்தச் செஞ்சிக் கோட்டையின் பூர்வ சரித்திரத்தைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான்.

“இங்கே தேசிங்குராஜா என்று ஒருவன் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேறொன்றும் தெரியாது,” என்றேன்.

தேசிங்குராஜன் கதை வெறும் கட்டுக்கதை. அதற்குச் சரித்திரத்தில் ஆதாரம் கிடையாது. நானோ உண்மைச் சம்பவத்தைக் கூறப் போகிறேன். சுமார் முந்நூறு வருஷங்களுக்கு முன்பு இந்தச் செஞ்சியில் பிரிதிவிசிங் என்னும் ராஜா இருந்தார். அவர் வீர ராஜபுத்திர வம்சத்தவர். அவருடைய முன்னோர் ஒருவர் டில்லியில் பட்டாணியர் ஆண்ட காலத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க மனமில்லாமல் தெற்கு நோக்கி வந்து இந்தக் கோட்டையைக் கட்டிக் கொண்டாராம். இந்தக் கோட்டையையும், இதைச் சுற்றியுள்ள சிறு பிரதேசத்தையும் அந்த வம்சத்தார் சுதந்திரமாக ஆண்டு வந்தார்கள். மொகலாய சைன்யங்களால் பலமுறை முயன்றும் இந்தக் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை. பிரிதிவிசிங்கும் சுதந்திர ராஜாவாக இந்தச் சிறு ராஜ்யத்தை ஆண்டு வந்தார்.

அந்த ராஜாவுக்கு ஒரு புத்திரி இருந்தாள். அவளுடைய பெயர், மாலதி. குழந்தைப் பிராயத்தில் அவளுக்குக் கல்வி கற்பித்த தமிழ் உபாத்தியாயருக்கு ஒரு பிள்ளை இருந்தான். அவனுக்குச் சுகுமாரன் என்று பெயர். குழந்தைகளாய் இருந்தபோது இவர்கள் இருவரும் ஒருங்கே கல்வி பயின்றார்கள். சுகுமாரனுக்குச் சங்கீதத்தில் ரொம்பவும் ஆர்வம் இருந்தது. அவனுக்குக் கொஞ்சம் வயதானதும் தேச யாத்திரை செய்து சங்கீதத்தில் உயர்ந்த பயிற்சி பெற்று வருவதற்காகக் கிளம்பினான். தஞ்சாவூரிலும், விஜய நகரத்திலும் கொஞ்ச காலம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டான். பிறகு மகாராஷ்டிரத்துக்குப் போய் அப்போது பிரசித்தியாகிக் கொண்டிருந்த அபங்கங்கள் கற்றுக் கொண்டான். அங்கிருந்து டில்லிக்குப் போய் பெயர் பெற்ற தான்சேனுடைய சிஷ்யர்களிடம் இந்துஸ்தானி சங்கீதமும் பயின்றான்.

11

அவன் திரும்பி வந்ததும் செஞ்சி ராஜசபையில் அவனுடைய சங்கீதக் கச்சேரி நடந்தது. ராஜகுமாரி மாலதியும் திரைபோட்ட மேன்மாடத்திலிருந்து தன் பால்ய நண்பனுடைய சங்கிதத்தைக் கேட்டாள். இது சுகுமாரனுக்கும் தெரிந்திருந்தது. அதனால் தானோ என்னவோ அன்று அவன் அற்புதமாய்ப் பாடினான். அவனுடைய பாட்டு கேவலம் பூலோகத்துச் சங்கீதமாக இல்லை; நாரதர் தும்புறு முதலிய தெய்வலோகத்து இசைவாணர்கள் இப்படித்தான் பாடுவார்களோ என்று நினைக்கும்படி, தேவகானமாகவே பொழிந்தான். அந்தக் கானத்தைக் கேட்டு சபையோர் அனைவரும் பரவசமானார்கள். ஆனால், எல்லாரிலும் அதிகமாக அந்தக் கானத்தின் இன்பத்தை அனுபவித்தவள் ராஜகுமாரி மாலதிதான். அவள் அந்தத் தெய்வ கீதத்தின் இன்பத்துக்குத் தன்னுடைய இருதயத்தையே பரிசாகக் கொடுத்தாள்.

சில நாள்களுக்குப் பிறகு சுகுமாரனிடம் தான் சங்கீதம் கற்றுக் கொள்ள விரும்புவதாக மாலதி தகப்பனாரிடம் தெரிவித்தாள். அந்தக் காலத்தில் ராஜகன்னிகைகள் கோஷா அனுசரிப்பார்கள். ஆனால், உபாத்தியாயர் மகன் தானே என்ற எண்ணத்தினாலும் தன்னுடைய அருமை புதல்வியின் விருப்பத்துக்கு மாறு சொல்ல மனமின்றியும் ராஜா சம்மதித்தார்.

மாலதி, ராஜபுத்திர வம்சத்தினள் ஆனதால் அவளுக்கு இயற்கையாக வடநாட்டுச் சங்கீதத்தில் தான் ஆசை இருந்தது. சுகுமாரனிடம் அவள் இந்துஸ்தானி சங்கீதம் கற்றுக் கொண்டு வந்தாள். பரஸ்பரம் அவர்களுடைய காதலும் வளர்ந்து வந்தது. இந்தக் காதல் விபரீதத்தில் தான் முடியும் என்று சுகுமாரன் பல தடவை எடுத்துச் சொன்னான். ஆனால் மாலதி கேட்கவில்லை. தான் சுகுமாரனைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும், தகப்பனாரை எப்படியாவது அதற்குச் சம்மதிக்கச் செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டு வந்தாள். இப்படியிருக்கையில், எதிர்பாராத விதத்தில் ஒரு பெரிய ஆபத்து வந்தது. செஞ்சி ராஜாக்களை ஆற்காட்டு நவாபுகள் வெகு காலமாகச் சிநேகிதர்களாக நடத்தி வந்தார்கள். வடக்கேயிருந்து வந்த மொகலாய சைனியங்களுடன் அவர்கள் சண்டையிட்ட காலங்களில் செஞ்சி ராஜாக்களின் உதவியைக் கோரிப் பெற்றார்கள். அவர்களிடம் கப்பம் வாங்குவது கிடையாது.

அப்போது ஆற்காட்டில் நவாபாய் இருந்தவர் மாலதியின் ரூபலாவண்யங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். டில்லி பாதுஷாக்கள் சிலர் ராஜபுத்திர கன்னிகைகளை மணந்திருக்கும் விஷயமும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர்களைப் போல் தாமும் ஒரு ராஜபுத்திர கன்னிகையை மணக்க வேண்டுமென்று நவாப் தீர்மானித்து, பிரிதிவிசிங்குக்கும் தூது அனுப்பினார். பிரிதிவிசிங்குக்கும் தமக்கும் உள்ள சிநேக பாந்தவ்யத்தை விவாக சம்பந்தத்தின் மூலம் நிரந்தரமாகச் செய்து கொள்ள விரும்புவதாய் அவர் சொல்லி அனுப்பினார். பிரிதிவிசிங் இஷ்டப்பட்டு அவ்விதம் செய்யாவிட்டால், பின்னால் கட்டாயத்தின் மேல் செய்ய வேண்டியதாயிருக்குமென்றும் எச்சரிக்கை செய்தார். செஞ்சியின் மேல் படையெடுப்பதற்கு ஒரு பெரிய சைனியம் தயாராயிருப்பதாகவும் தூதன் தெரியப்படுத்தினான்.

12

இந்தச் செய்தி கேட்டதும் பிரிதிவிசிங் அளவிலாத கோபங்கொண்டு துடிதுடித்தார். மந்திராலோசனை சபை கூட்டி, யோசனை கேட்டார். சபையில் யாரும் யோசனை சொல்லத் துணியவில்லை. ராஜகுமாரியை நவாபுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்தால் யுத்தத்திற்குத் தயாராக வேண்டும். முந்நூறு வீரர்களை வைத்துக் கொண்டு முப்பதினாயிரம் வீரர்கள் அடங்கிய சைனியத்தோடு சண்டை போட முடியுமா? ‘நவாபுக்கு உங்கள் பெண்ணைக் கொடுங்கள்’ என்று சொல்லவும் யாருக்கும் தைரியம் வரவில்லை.

இந்த நிலைமையில், உபாத்தியாயரின் புதல்வன் சுகுமாரன் எழுந்து யோசனை கூற முன் வந்தான். நவாபின் கோரிக்கையை மறுத்து விட வேண்டியது தான் என்று அவன் தைரியமாய்க் கூறினான். ‘நவாப் படையெடுத்து வந்தால் வரட்டும். இந்தக் கோட்டைக்குள் இருந்து கொண்டு குறைந்தது ஆறு மாதம் நவாபின் படைகளை எதிர்த்து நிற்கலாம். மகாராஷ்டிரத்தில் சிவாஜி மகாராஜா இந்து தர்மத்தை ரக்ஷிப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார். அவருக்குச் செய்தி அனுப்பினால் கட்டாயம் நம்முடைய உதவிக்கு வருவார். நானே போய் அழைத்து வருகிறேன்’ என்றான். பிரிதிவிசிங் மிகவும் சந்தோஷமடைந்து சுகுமாரனை மகாராஷ்டிரத்துக்கு அனுப்ப இசைந்தார்.

மாசிமகத்துப் பௌர்ணமியன்று இரவு மாலதியைச் சுகுமாரன் சந்தித்து, தான் சிவாஜி மகாராஜாவிடம் தூது போகப் போவதைத் தெரிவித்து விடை கேட்டான். இந்தக் காரியத்தைத் தான் செய்து முடித்தால், மகாராஜா மன மகிழ்ந்து மாலதியைத் தனக்கு மணம் செய்து கொடுக்க இசையலாம் என்றும் கூறினான். மாலதிக்கும் இந்த நம்பிக்கை ஏற்பட்டது. ஆனாலும் சுகுமாரனைப் பிரிவது அவளுக்குப் பெருந்துன்பத்தையளித்தது. அப்பொழுது தான் “என்னை மறந்துவிடாதீர்கள்” என்று அவள் மனமுருகிக் கூறினாள். சுகுமாரனும் “ஏழேழு ஜன்மத்திலும் மறக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்தான்.

சுகுமாரன் போய்ச் சில நாளைக்கெல்லாம் பிரிதிவிசிங்குக்கு மற்ற மந்திரிகள் துர்போதனை செய்து அவருடைய மன உறுதியைக் குலைத்தார்கள். ‘சிவாஜியாவது இங்கே வருவதாவது; நடக்காத காரியம். சுகுமாரன் பைத்தியக்காரன்; உலகம் தெரியாதவன்; ஏதோ போயிருக்கிறான். அவன் சிவாஜியைப் பார்ப்பதே நிச்சயமில்லை; நவாபுடன் சமாதானம் செய்து கொள்வதே நலம்,’ என்றார்கள்.

மாலதியும் ஒரு தவறு செய்தாள். ஒரு நாள் தந்தையிடம் பிரியமாய்ப் பேசிக் கொண்டிருந்த போது சுகுமாரனிடம் தான் கொண்டிருந்த காதலைப் பற்றிச் சொல்லி, தன்னை அவனுக்கே கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். இதனால் பிரிதிவிசிங்கின் மனம் அடியோடு மாறிவிட்டது. ‘சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வியாஜத்தில் இப்படியா என் பெண்ணின் மனத்தை அந்தப்பாவி வசப்படுத்தி விட்டான்!’ என்ற எண்ணம் அவருக்குப் பெரிதும் ஆத்திர மூட்டியது. அதைவிட, நவாபுக்குக் கொடுப்பதே நலம் என்று எண்ணினார். பெரிய பெரிய ராஜபுத்திர மன்னர்கள் ஏற்கெனவே மொகலாயர்களுக்குப் பெண் கொடுத்து வழி காட்டியிருக்கவில்லையா? நாம் மட்டும் கொடுத்தால் என்ன தப்பு? நம்முடைய பெண்ணும் – அவளுடைய அழகுக்கும் சாமர்த்தியத்திற்கும் ஒரு நூர்ஜஹானைப் போல் ஆகலாமல்லவா?

13

இப்படியெல்லாம் நினைத்தார் அந்தப் பேராசை பிடித்தக் கிழவர். தம் குமாரியின் மன விருப்பத்தை அவர் ஒரு பெரிய காரியமாகவே கருதவில்லை. நவாபுக்குத் தம்முடைய சம்மதத்தையும் தெரிவித்து விட்டார்.

மாலதிக்கு இது தெரிந்தபோது இடியுண்ட நாகத்தைப் போல் துடிதுடித்தாள். ‘ஏழு ஜன்மத்திலும் தன்னை மறப்பதில்லை’ என்று வாக்களித்துவிட்டுப் போன சுகுமாரனுக்குத் துரோகம் செய்து, இன்னொருவனை மணப்பதென்பது அவளால் நினைக்கவே முடியாத காரியமாயிருந்தது. தகப்பனாரிடம் எவ்வளவோ சொல்லி மன்றாடிப் பார்த்தாள். ஒன்றும் பலிக்கவில்லை. கடைசியாக, ஒரு நாள் இரவு, அரண்மனையிலிருந்து யாரும் அறியாமல் எழுந்து சென்று, இந்தக் கோட்டையின் அதிதேவதையான காளி கோயிலுக்குச் சென்றாள். அந்தக் கோயிலுக்கு அருகில் மிக ஆழமான சுனையொன்று இருக்கிறது. அம்மனைத் தியானித்துக் கொண்டே அந்தச் சுனையில் விழுந்து உயிர் துறந்தாள்.

பிரிதிவிசிங்கிற்கு இந்த விபத்தினால் பைத்தியம் பிடித்து விட்டது. அவருக்கு வேறு புதல்வர்கள் இல்லை. எனவே, கோட்டையை இலேசாக ஆற்காட்டு நவாபு கைப்பற்றிக் கொண்டார்.

சிவாஜியைக் காணச் சென்ற சுகுமாரன், எவ்வளவோ கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளாகி கடைசியில் அந்த மகாவீரரை நேரில் கண்டான். அவனுடைய வேண்டுகோளை சிவாஜியினால் நிராகரிக்க முடியவில்லை. அவருக்கும் வெகு காலமாகத் தெற்கு நோக்கி வரவேண்டுமென்ற எண்ணமிருந்தபடியால், ஒரு பெரிய சைனியத்துடன் கிளம்பி வந்தார். கோட்டை ஒரே நாளில் சிவாஜி வசமாயிற்று. ஆனால் சுகுமாரன் கோட்டைக்குள் வரவில்லை. மாலதியின் கதியை அறிந்ததும், அவனுக்கு உலக வாழ்க்கையில் வைராக்கியம் உண்டாகி விட்டது. கையில் சுரைக்காய்த் தம்பூர் ஏந்திய வண்ணம், அவன் உலக அநித்யத்தைப் பற்றியும் காதலின் மேன்மையைப் பற்றியும் பாடிக் கொண்டு தேச சஞ்சாரம் செய்யப் போய் விட்டான்.

அந்தச் சுகுமாரன் தான் நான். ஆறு ஜன்மத்துக்குப் பிறகு ஏழாவது ஜன்மத்தில் இங்கு வந்து சேர்ந்தேன்.

சரி, ரொம்ப நேரமாகி விட்டதே! நீங்கள் போக வேண்டாமா? உங்கல் சிநேகிதர்கள் காத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?” என்றான் குமாரஸ்வாமி.

14

ஆமாம்; ரொம்ப நேரம் ஆகிவிட்டது. வாஸ்தவந்தான். மணி ஏழரை, எட்டுக்கூட இருக்கும். சாலைப் பக்கம் காது கொடுத்துக் கேட்டேன். மோட்டார் ஹாரன் சப்தம் கேட்கவில்லை.

குமாரஸ்வாமி முன்பைவிட அதிகப் பரபரப்பு அடைந்திருப்பதையும், நான் அவ்விடம் விட்டு போக வேண்டுமென அவன் விரும்புகிறானென்பதையும் கண்டேன். அவன் கூறியதெல்லாம் உண்மையாயிருக்க முடியுமா? இன்று பௌர்ணமி ஆயிற்றே! ஒரு வேளை அந்த ஆவி உருவ மோகினி இன்றைக்கு இங்கு வருவாளோ? என் கண்ணுக்குக் கூடப் புலப்படுவாளோ?

ஒரு பக்கம் எனக்குப் பயமாயிருந்தது; இன்னொரு புறத்தில் உண்மையை அறியாமல் அவ்விடம் விட்டுப் போகவும் மனம் வரவில்லை.

“முக்கியமான விஷயம் நீர் சொல்லவில்லையே? சுனையில் விழுந்த மாலதி என்ன ஆனாள்? நீர் ஏழாவது ஜன்மம் எடுத்து வரும் வரையில் அவள் என்ன செய்து கொண்டிருந்தாள்?” என்று கேட்டேன்.

“ஓஹோ! அதை நான் சொல்லவில்லையே? இப்படித் தான் எனக்குச் சில சமயம் மனம் குழம்பிப் போகிறது,” என்றான் குமாரஸ்வாமி. அப்புறம் அவன் சொன்னது முன்னே கூறியதெல்லாம் தூக்கி அடிப்பதாயிருந்தது. அப்படி நம்பத்தகாததாயிருந்தது. அதோடு கொஞ்சம் முன்பின் குழப்பமாகவும் இருந்தது. அவன் கூறியதை ஒழுங்கு படுத்தி நானே இங்கே சுருக்கமாக சொல்லி விடுகிறேன்:-

காளி கோயில் சுனையில் மாலதி விழுந்தால் அல்லவா? விழும்போதே அவளுக்கு ஞாபகம் தவறிவிட்டது. மறுபடி உணர்வு வந்த போது தன்னை காளித்தாய் தன் கரங்களில் ஏந்திக் கொண்டிருப்பதைக் கண்டாள்! ‘குழந்தாய்! என்ன காரியம் செய்தாய்? நரபலி வாங்கிக் கொண்டேன் என்று என்னையல்லவா ஜனங்கள் நிந்திப்பார்கள்? இப்படிச் செய்யலாமா?’ என்று காளிமாதா கூறியது அவள் காதில் விழுந்தது. மாலதி தான் இப்போது சூட்சும சரீரத்தில் இருப்பதையும் உணரவில்லை. முன் போலவே ஸ்தூல தேகங் கொண்டிருப்பதாகவும் காளித்தாய் தனக்கு மரணம் நேராமல் காப்பாற்றியதாகவும் எண்ணினாள். உடனே காளிமாதாவின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

‘தாயே! ஒரு வரம் எனக்கு கொடுக்க வேண்டும். கொடுத்தால் தான் காலை விடுவேன்’ என்று கதறினாள். தாயார் கொடுப்பதாக வாக்களித்து, ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘அம்மா, நான் சொல்ல வேண்டுமா? உனக்குத் தெரியாதா? நான் சுகுமாரனையே பதியாக அடைய வேண்டும். இந்த வரந்தான் எனக்கு வேண்டும்’ என்று கோரினாள்.

15

அப்போது மாதா அவளுக்கு அவளுடைய உண்மை நிலைமையை உணர்த்தினாள். அவள் தேகத்தை இழந்து விட்டதையும் ஆவி ரூபத்தில் இருப்பதையும் தெரிவித்து, ஆகையால் இன்னொரு ஜன்மம் எடுத்துத் தான் சுகுமாரனைக் கணவனாக அடைய முடியுமென்று சொன்னாள்.

மாலதி மாதாவின் காலை விடவில்லை. ‘மறு ஜன்மத்தில் எனக்கு ஞாபகம் இருப்பது என்ன நிச்சயம்? அதெல்லாம் முடியாது. இந்த ஜன்மத்தில் நான் இந்த நினைவோடேயே சுகுமாரனை அடைய வேண்டும்’, என்று பிடிவாதம் பிடித்தாள். ‘அப்படியானால், நீ முந்நூறு வருஷம் காத்திருக்க வேண்டும் அத்தனை நாளும் இந்த மலை பிரதேசத்தில் ஆவி ரூபத்தில் அலைய வேண்டும். ஒவ்வொரு விநாடியும் உனக்கு ஒரு யுகமாக இருக்கும். இதற்குச் சம்மதமா?’ என்று காளி அம்மன் கேட்டாள். மாலதி ‘எவ்வளவு யுகமானாலும் காத்திருப்பேன்’ என்றாள். ‘சரி’ அப்படியானால் நீ கேட்கும் வரம் கொடுக்கிறேன்; இந்த ஞாபகத்துடனேயே நீ சுகுமாரனை அவனுடைய ஏழாவது ஜன்மத்தில் அடைவாய். ஒவ்வொரு ஜன்மத்திலும் அவன் இங்கு ஒரு முறை வருவான். நீ அவனைக் காண்பாய்; ஆனால் அவன் உன்னைக் காண மாட்டான். ஏழாவது ஜன்மத்தில் அவன் வரும் போது உன்னுடைய உருவம் அவனுடைய கண்ணுக்குப் புலப்படும். என்னுடைய சந்நிதியில் நீங்கள் கல்யாணம் செய்து கொள்வீர்கள்’ என்று காளி மாதா வரங்கொடுத்தாள்.

மாலதி அன்று முதல் ஆவி உருவத்தில் செஞ்சிக் கோட்டையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கோட்டையில் நடந்த சகல விஷயங்களையும் அவள் பார்த்து வந்தாள். ஆனால் அவளை யாரும் பார்க்கவில்லை. காளி மாதா கூறியது போலவே அவளுக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்தது. நாளுக்கு நாள் சுகுமாரனிடம் அவள் கொண்டிருந்த பிரேமையின் தாபமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. தேகம் இல்லாதபடியால் கண்ணீர் விட்டு அழ முடியவில்லை. புலம்ப முடியவில்லை. இம்மாதிரி வழிகளில் தாபத்தைத் தணித்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு தாபமும் உள்ளத்துக்குள்ளேயே குமுறி வெடித்துக் கொண்டிருந்தது. காளி மாதாவின் வாக்கின்படி, ஒவ்வொரு ஜன்மத்திலும் சுகுமாரன் ஒரு தடவை செஞ்சிக்கு வந்து கொண்டிருந்தான். அப்போதெல்லாம் மாலதி அநுபவித்த வேதனைக்கு அளவேயில்லை. அவனை இவள் ஒவ்வொரு தடவையும் தெரிந்து கொண்டாள். அவனுக்கு இவள் இருப்பதே தெரியவில்லை. ஆனால், அவனும் கூட அவ்விடம் வந்ததும் இன்னதென்று தெரியாத கிலேசத்தை அடைந்து ஒவ்வொரு முறையும் அவ்விடத்தை விட்டுப் போவதற்குத் தயங்கினான்.

கடைசியில், சுகுமாரன் இந்த ஏழாவது ஜன்மம் எடுத்து வந்தபோது தான் காளித்தாய் அருளிய வரத்தின் பிரகாரம் அவளுடைய மனோரதம் நிறைவேறிற்று. குமாரஸ்வாமியின் முன்னால் அவள் உருவம் பெற்று வரவும் அவனுடன் வார்த்தையாடவும் முடிந்தது. குமாரஸ்வாமிக்கும் அவள் சொன்னவுடனே அந்தப் பூர்வஜன்ம சம்பவங்கள் எல்லாம் ஒருவாறு ஞாபகத்திற்கு வந்தன.

“அவ்வளவுதான் கதை. உங்களுக்கு நேரமாகி விட்டதல்லவா?” என்று சொல்லி எழுந்திருந்தான் குமாரஸ்வாமி.

நானும் எழுந்து நின்று, “நீர் வரவில்லையா? இங்கேயே இருக்கப் போகிறீரா?” என்று, கேட்டேன்.

குமாரஸ்வாமி ஆகாயத்தில் மேலே வந்து கொண்டிருந்த பூரண சந்திரனைப் பார்த்தான். “இன்று பௌர்ணமி என்பது தெரியவில்லையா?”

இத்தனை நேரமும் என் மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்த கேள்வியை இப்போது கேட்டேன்.

“உம்முடைய மாலதி இப்போது வருவாள் என்று எதிர்பார்க்கிறீரா?”

குமாரஸ்வாமி சிரித்தான். “நான் சொன்னதில் உங்களுக்கு நம்பிக்கையே ஏற்படவில்லை போலிருக்கிறது?” என்றான்.

16

அந்தச் சமயத்தில், தூரத்தில் கிணு கிணு வென்னும் கால் சதங்கைச் சப்தமும், கைவளையல்கள் குலுங்கும் சப்தமும் கேட்டது. எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. உடம்பெல்லாம் வியர்வை துளித்தது. சப்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். சற்றுத் தூரத்தில், செடிகளின் மறைவில் ஒரு பெண் உருவம் காணப்பட்டது. தெரிந்த வரையில் மணப்பெண்ணைப் போல் அந்த உருவத்துக்குச் சிங்காரிக்கப்பட்டிருந்தது. குமாரஸ்வாமி இரண்டே பாய்ச்சலில் அந்தப் பக்கம் பாய்ந்து சென்றான்.

எனக்கு உடம்பெல்லாம் வெடவெடவென்று நடுங்கிற்று. அதே சமயத்தில் சாலையில் மோட்டார் ஹாரனின் சப்தம் அலறியது. அது கொஞ்ச நேரமாய்ச் சப்தமிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். எனக்கு அப்போதுதான் காதில் விழுந்தது.

மோட்டார் ஹாரனின் சப்தம் வந்த திசையை நோக்கி நான் விரைவாக நடந்தேன். திரும்பிப் பார்க்கப் பயமாயிருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் பயம் அதிகமாயிற்று. சற்று நேரத்துக்கெல்லாம் ஓடத் தொடங்கினேன்.

சாலைக்கு ஒரு பர்லாங்கு தூரத்தில் நான் வந்த போது என் நண்பர்கள் எதிரில் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நான் ஒருவாறு சமாளித்துக் கொண்டேன். ஆனாலும் நான் பயந்து ஓடிவந்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்து போயிற்று. மெதுவாகக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் மோட்டாரில் சேர்த்தார்கள்.

கார் கிளம்பியதும் எனக்குத் தைரியம் உண்டாயிற்று. அவர்கள் வருவதற்கு ஏன் அவ்வளவு தாமதம் என்று கேட்டேன். ஊருக்குள்ளிருந்து கிளம்பிய போது கார் தகராறு செய்ய ஆரம்பித்ததென்றும், ‘ஸ்டார்ட்’ ஆகவில்லையென்றும், அதைக் கிளப்புவதற்கு ரொம்ப நேரம் ஆகிவிட்டதென்றும் சொன்னார்கள். ஆனாலும், அரை மணிக்கு முன்பே அங்கு வந்து விட்டதாகவும், ஹாரன் அடித்து அடித்துப் பார்த்தும் நான் வரக் காணாதபடியால் அவர்கள் பயந்து போய் என்னைத் தேடிவதற்கு வந்ததாகவும் சொன்னார்கள்.

எனக்கு ஏன் அத்தனை நேரம், வழி தவறி விட்டதா என்று கேட்டார்கள். ஆமாம் என்று நான் சொன்னேன். என்னுடைய அனுபவத்தைக் கூறினால் நம்பமாட்டார்கள். பரிகாசம் செய்வார்கள் என்று பயந்தேன்.

செஞ்சிக்கு அடுத்தாற்போல் மின்னலூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் வீதி வழியாக நாங்கள் சென்றபோது அங்கே ஒரு பெரிய கொட்டாரப் பந்தல் வீதியை அடைத்துப் போட்டிருப்பதைப் பார்த்தோம். காரைத் திருப்பி வேறு வழியாகப் போக வேண்டியிருந்தது. அங்கு என்ன விசேஷம் என்று கேட்டதற்கு, அந்த ஊர் ஜமீன்தார் மகளுக்கு அடுத்த வாரத்தில் கல்யாணம் என்றும், அதற்காகப் பந்தல் போட்டிருக்கிறதென்றும் தெரிந்தது.

கல்யாணப் பேச்சு வந்ததும், “இன்று ராத்திரி செஞ்சிக் கோட்டையில் ஒரு கல்யாணம் நடக்கும்” என்று நான் வாய் தவறிச் சொல்லிவிட்டேன். உடனே, என் சிநேகிதர்கள் பிடித்துக் கொண்டார்கள். என்ன, என்ன என்று குடைந்து கேட்டதன் மேல் அவர்களுக்கு விவரம் கூறினேன். நான் எதிர்பார்த்தது போலவே அவர்கள் கதையை முழுதும் நம்பவில்லை. ஆனாலும், நான் உடம்பெல்லாம் நடுங்கிக்கொண்டு திரும்பி வந்ததை எண்ணி நான் சொன்னதில் ஏதாவது உண்மை இருக்குமோ என்றும், சந்தேகித்தார்கள்.

சென்னை சேர்ந்து இரண்டு மூன்று நாளைக்கெல்லாம் என்னுடைய செஞ்சி அனுபவத்தில் எனக்கே சந்தேகம் உண்டாகி விட்டது. வேறு காரியங்களில் மனத்தைச் செலுத்தி அதை மறப்பதற்கு முயன்றேன்.

மூன்றாம் நாள் மாலை வெளியான தினசரிப் பத்திரிகைகளில் ஒரு மூலையில் பிரசுரிக்கப்பட்டிருந்த பின்வரும் செய்தி எனக்குச் செஞ்சியை மறுபடியும் நினைவூட்டியது.

ஒரு பரிதாப சம்பவம்

“பிரசித்தி பெற்ற செஞ்சிக் கோட்டையில் நேற்றுப் பௌர்ணமியன்று மிகவும் பரிதாபமான ஒரு சம்பவம் நடந்தது. அன்று இரவு அங்கேயுள்ள அம்மன் கோயிலுக்கு முன்னால், சுனையின் கரையில் ஒரு வாலிபனும், ஓர் இளம் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார்கள். அவர்கள் நஞ்சு அருந்தி உயிர் விட்டிருக்க வேண்டுமென்று வைத்திய பரிசோதனையில் வெளியாயிற்று.

இளைஞன் இவ்வூர் எலிமெண்டரி பாடசாலையில் உபாத்தியாயர். சமீபத்தில் அவனுக்கு வேறு ஊருக்கு மாற்றல் உத்தரவு வந்திருந்ததாம். காலஞ்சென்ற பெண் இவ்வூர் ஜமீன்தார் சேஷாசல ரெட்டியாரின் ஏக புதல்வி. இந்தப் பெண்ணுக்கு அடுத்த வாரத்தில் கல்யாணம் நடக்க ஏற்பாடாகியிருந்ததென்பது குறிப்பிடத் தக்கது. குமாரஸ்வாமி என்கிற அந்த இளைஞனும் இந்தப் பெண்ணும் பரஸ்பரம் காதல் கொண்டிருந்தார்களென்றும், அவர்களுடைய கல்யாணத்துக்கு ஜமீன்தார் சம்மதிக்காமல் வேறு பணக்கார இடத்தில் பெண்ணைக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தபடியால் இந்த விபரீத சம்பவம் நேர்ந்ததென்றும் சொல்லப்படுகிறது. அந்த இளங் காதலர்களின் பரிதாப முடிவைக் குறித்து எல்லாரும் வருத்தப் பட்டாலும் ‘இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட காதல் உண்டா?’ என்று அதிசயத்துடன் பேசிக் கொள்கிறார்கள்…”

இந்தச் செய்தியைப் படித்ததும், சாதாரணமாய்க் கல் நெஞ்சனென்று பெயர் வாங்கிய என் கண்களிலிருந்து கலகலவென்று நீர் பொழிந்தது. அந்த இளங் காதலர்களின் அகால மரணத்தினால் விளைந்த துக்கத்துடன், “ஆகா! தமிழ்நாடு ஓர் அபூர்வ கதாசிரியனையல்லவா இழந்துவிட்டது!” என்று எண்ணியும் வருந்தினேன்.

அடப் பாவி! என்னிடம் மட்டும் கதை சொல்லாமல் உண்மையைச் சொல்லியிருக்கக் கூடாதா? அப்படிச் சொல்லியிருந்தால், “அசட்டுப் பிள்ளை! காதல், பிரேமை என்பதெல்லாம் மூன்று நாள் பைத்தியம்! தேசத்துக்காக உயிரைக் கொடுத்தாலும் புண்ணியம் உண்டு,” என்று உபமான உபமேயங்களுடன் புத்தி சொல்லிக் காப்பாற்றியிருப்பேனே?

Print Friendly, PDF & Email

1 thought on “இடிந்த கோட்டை

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு விறுவிறுப்பான கதையைப் படித்து மகிழ்ந்தேன்.. கல்கியின் கதைகள் காலத்தால் அழியாதவை..பதிவிட்டமைக்கு நன்றி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *