அன்பு மலர்களும் அரவிந்தனும்

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 26,715 
 

நியூ யார்க் ஏர் போர்ட் . டெர்மினசில் அரவிந்த் உட்கார்ந்த்ருந்தார்

பக்கத்தில் உள்ளவர் கேட்டார்.

‘எங்கே போறீங்க !’

‘சென்னைக்கு’

‘வந்துட்டுப் போறீங்களா !’

‘இல்லை .இங்கேதான் இருக்கேன் .ஊர் ஞாபகம் வந்தது.போகிறேன் .’

அதற்குள் அவர் மனைவி வந்து விட்டாள்.;யார் கிட்டே பேசறீங்க ‘!

‘நம்ம ஊர்காரர்தான் .சென்னை போகிறார்’.

இந்த சம்பாஷணை அவருக்கு பழக்கமான ஒன்று.

எப்பொழுது ஊருக்குப் போனாலும் வந்தாலும் நம்ம ஊர் மனிதர்கள் தன்னை மறந்து கேட்கும் கேள்வி பதில்கள் !

ஒரு’ கபசினோ’ வாங்கி இடத்தில் உட்கார்ந்த்ருந்தார்

பக்கத்துக்கு சீட்டில் எப்பொழுதும் அவள் இருப்பாள். எங்கு போனாலும் ‘நான் பார்த்துக்கிறேன் .நீங்க காபி வாங்கிட்டு வாங்க.என்று சொல்லி எங்கேயும் வர மாட்டாள். அவள் இல்லை. என்ன செய்வது!.

ஒரு நாள் நான் கூட இல்லாமப் போய் விடுவேன் இந்த ஏர்போர்ட் மக்கள் யாவரும் இருப்பார்கள். இது அவர் நினைப்பு.

அப்பொழுது வீல்சேர்ல் ஒரு பெண்மணி. கூட வந்த பையன் என நினைக்கிறேன் இவர் அருகில் விட்டு விட்டு ஏதோ வாங்கப் போய் விட்டான்.

தலை குனிந்து கொண்டிருந்த அந்தப் பெண்மணி நிமிர்ந்து பார்க்கலானாள்.

எப்போதாவது யாராகிலும் நம்மைப் பார்த்தால் ஒரு பிரமை ஏற்ப்படும். அவருக்கு அது வந்தது.

திரும்பிப் பார்த்தா. அவள் அழுது கொண்டிருந்தாள். உற்றுப் பார்த்தார்.

‘மங்கை !நீயா! என்றார் ஆச்சர்யத்துடன்.

யாரை அவருக்கு பார்க்காமல் இவ்வளவு நாட்கள் இருந்தாரோ, அவள்தான்.

ஆமாம். நான்தான்!

பழைய ரவிவர்மா சித்திரம்! பொலிவு மங்கி இருந்தது.

ஏன் இப்படி ஆகி விட்டாய்?

நீங்கள் மட்டும் என்னவாம்! எப்படியோ இருக்கிறீர்கள்!.

முடிந்த வாழ்கையின் தொடர் அற்றுப் போனால் மீண்டும் அந்த இறைவன்தான் இன்னொரு ஆட்டம் கொடுக்க வேண்டும் .கொடுத்தான்! எப்பொழுது! எல்லாம் முடிந்த பிறகு!

மங்கை! நாம் வாழ்ந்து முடிந்தவர்கள். எல்லாம் முடிந்து எப்பொழுதோ வேறு வேறாக ஆகிவிட்டோம். தெய்வச் செயல் நம்மை இரு பிரிந்த நண்பர்களைப் போல சேர்த்து இருக்கிறது.

அந்தரங்கம் என்பது முடிந்து விட்டது என்றார்.

இந்தப் பேச்சுக் கேட்டு எவ்வளவு நாளாச்சு! அவள் சொன்னாள் .

அதற்குள் அந்தப் பையன் வந்து விட்டான்.

‘சீனு!இது நமக்குத் தெரிந்தவர்தான் அரவிந்த் அவர் பெயர். சென்னை போகிறார்.

சீனு பேசினான். ‘இதுதான் கடவுள் செயல் !நான் எப்படி இவளை அனுப்புவது என்று கவுண்டரில் போய் யாராகிலும் தெரிந்தவர் உண்டா எனப் பார்க்கப் போயிருந்தேன். நாங்க பிட்ஸ்பர்க் லிருந்து வருகிறோம். எனக்கு நாளை இங்கே மீட்டிங் இருக்கு. அம்மா நடக்க கொஞ்சம் சிரமம். தெய்வமாப் பார்த்து உங்களை அனுப்பிசிருக்கு!.

சார்! இங்கிருந்து துபாய் வரை நீங்கள் உதவி செஞ்சாப் போரும். அங்கிருந்து திருவனந்தபுரம் போய் விடுவாங்க. அங்கே உறவினர்கள் வருவார்கள்.’

ஒரு பக்கம் ஷாக்! மறு பக்கம் புரியாத புதிர் போல!

‘தம்பி! நீங்க கவலைப் படாமப் போய் விட்டு வாங்க! நான் பார்த்துக்கிறேன். திருவனந்தபுரம் வரை ஏற்பாடு செய்கிறேன் ‘

‘அம்மா! நான் கிளம்பலாமா! பத்திரமாப் போய் விட்டு வா. மாமா பார்த்துப்பார் ‘.

சீனு நிம்மதியாகப் போய் விட்டான்.

‘மங்கை! உன் டிக்கெட்டையும் பாஸ்போர்டையும் கொடு. பக்கத்திலே சீட் இருக்கா பார்க்கலாம்.

கொடுத்தாள். பார்த்தார். அவளுடையது பிசினெஸ் கிளாஸ். இவருடையது எக்கானமி. நேரா கௌண்டரில் போய் அடிக்கடி பயணம் செய்வதால் தனக்கும் பிசினெஸ் கிளாஸ் கேட்டார். முதலில் முரண்டு பிடித்தார்கள். பிறகு அந்த பெண் உடல் நலக்குறைவு காரணம் காட்டி கொடுத்தார்கள். இது வரை வந்தது உள்நாடு. இதுதான் பிரதான ப்ளைட்.

வீல்சேர் ஆசாமி வந்தான். செக்கிங் முடிந்து உள்ளே பக்கத்துக்கு சீட்களில் உட்கார்ந்தார்கள்.

மங்கை அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் எங்கே ?!

‘அவள் போய் மூணு வருஷம் ஆச்சு ‘

‘உனக்கு என்னாச்சு! தனியா வந்திருக்கே?. அவர் எங்கே?

‘அவரும் போய்ட்டார் ‘

அதற்குள் எர்ஹோஸ்தஸ் போர்வை கொடுத்து குடிக்க ஏதாகிலும் வேணுமா என்று கேட்டாள்.

தண்ணீர் போரும் என்று சொல்லி விட்டாள்.

ஆக அடுத்த பதினாலு மணி நேரம் இவளுடந்தான் பயணம். அது இறைவன் சித்தம்!

படுக்கையை விரித்து அவள் காலை நீட்டிக் கொண்டாள்.

அவர் தூங்கவே இல்லை!

பழைய நினைவுகள்! ஐம்பது ஆண்டுகளுக்கு முன்!

நெல்லையில் உறவினர் கல்யாண வீட்டில் இவளைப் பார்த்தான். இவன் மாமா பெண் புவனாவுடன்.

‘அரவிந்த் கையிலே காமேராவா? எங்களைப் படம் எடு’ என்றாள்

புவனா

ஐந்தாறு படங்கள் எடுத்தான். அழகு தேவதையாக இருந்தாள்.

“படம் எப்போ கிடைக்கும்?’ அவள் பேசின முதல் வார்த்தைகள்!

அடுத்த மாதம் இங்கு வருவேன் அப்பொழுது தருகிறேன்’ என்று சொன்னான்.

அதற்குள் சாப்பிடக் கூப்பிட்டார்கள். பந்தி சாப்பாடு! அவர்களுக்கு அருகே இடம் போட்டார்கள். கை கழுவும் இடத்தில் அவள் காத்திருந்தாள். அவனுக்கு ஒன்றும் புரிய வில்லை!

ஹாலில் போய் உட்கார்ந்தான் .

ஆறுமோ ஆவல், ஆறுமுகனை நேரில் காணாது! பாட்டு ஒன்று கேட்டது. அவள்தான் பாடினாள். பாட்டு முடிந்ததும் எழுந்தான்.

அவள் பக்கம் திரும்பினான் .

‘போகாதீர்கள் ‘என்று சைகை செய்தாள்.

ஆச்சர்யமாக இருந்தது! மறுபக்கம் ஏதோ ஒரு புத்துணர்ச்சி! அந்த சைகையின் வேகம்! கண்களில் அன்புப் பார்வை! அவனுக்குள் புதிய பரபரப்பு!. அவள் பாடிக்கொண்டே இருந்தாள் .இவன் அசையவே இல்லை!

‘உட்கார்ந்து கேட்டதற்கு நன்றி’ சொல்லி விட்டுப் போனாள்.

மறு நாள்! மாமா வீட்டில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தான்.

புவனா வந்தாள் ‘என்னடா இது! சொக்குப்பொடி போட்டாயா !மங்கை உன்னைப் பற்றியே பேசறா விடாமல்!

அவன் சிரித்தான்.

நமக்கு ஒரு அதிர்ஷ்டமா! ஒரு அழகுச் சிலை அன்பைச் சொல்லுமா!

பின்னாலே அவளே வந்து கொண்டிருந்தாள்.

‘என்ன கண்கள் சிகப்பா இருக்கு! தூங்கிநேளா இல்லையா?நானும் தூங்கவில்லை!’ சொல்லிக்கொண்டே உள்ளே போனாள் .

கதைகளில் வருவது போல இருமனங்களும் ஒரு எண்ணத்தில் ஒன்றியதின் விளைவு தூக்கமின்மை!

சிவந்த மேனியில் கருமை ஒட்டிய சேலையில் அழகிய நெடிய

கூந்தல் மணக்க நடந்த அவள் பாதங்களின் சிவப்பு அந்தச் சேலையை இன்னும் கருமையாகக் காண்பித்தது .!

அழகென்று நினைத்தால் ஆண்டவன் இப்படித்தான் படைப்பானோ !

புவனா வந்தாள் .

‘என்னடா! குளித்தாயா !டிபன் சாப்பிட்டாயா? என்ன ப்ரோகிராம் இன்னைக்கு உனக்கு?

‘ஒன்றும் இல்லை ‘

‘அப்படியானால் நாங்கள் திருசெந்தூர் போறோம் .வா !’என்றாள் .

இறைவன் அள்ளிக் கொடுத்த வரத்தை மெருகு ஏற்றுவது போல இருந்தது !

‘என்னடா! பேசாமே இருக்கே? வரயா !இல்லையா !’

வருகிறேன் ‘ என்றான் .

அது தானே பார்த்தேன்!அவ என்னடான்னா அவரை வரச்சொல் என்று பிடுங்கி எடுக்கிறாள் .என்னமோ நடக்குது இங்கே !

புவனா சிரித்தாள்!

‘நானே என்னில் இல்லை! இறைவா !உன்னிடத்தில் வருகிறேன் .என்னை இணைத்துவிடு அவளுடன்! ‘என காதல் கடவுள் முருகனிடம் கருணை வேண்டினான் அவன் !

வேன் வந்தது !

டிரைவர் லோகநாதன் அவன் பால்ய நண்பன் .

ஏய் ! அரவிந்து !எப்போ வந்தே ?மெட்ராஸ் லியா இருக்கே? பார்த்து நாளாச்சு .

‘லோகு ! வண்டி ஒன்னோடதா?

ஆமாம்! நான் ட்ராவல்ஸ் நடத்தறேன் .பையன் வர லேட்டாகும்னு நான் கொண்டு வந்தேன்

அதற்குள் மங்கை வந்தாள் .’எங்கே மாட்டேன்னு சொல்லிடுவீங்களோன்னு பார்த்தேன் .எத்தனை சீட் பார்க்கலாம் ‘

கதவைத் திறக்கப் போனாள் .

‘நான் திறந்து காட்டுகிறேன்’ என்று அவனும் போக ஒரு பிடியை இரு கைகள் திறந்தன !

அவளையே பார்த்த அவன் ‘சிகப்பான கைக்குப் பக்கத்தில் என்னைப் பார் !இது சரியாகுமா’ அவளைக் கேட்டு விட்டான் .

அதற்குள் ஒரு படபடப்பும் உஷ்ணமும் அவனுக்கே புதிதாக இருந்தது .’நிறம் கைகளில் இல்லை!மனசுலே இருக்கு. அது எப்போதோ உங்களிடம் போய் விட்டது ‘என்று சொல்லிவிட்டுப் போனாள் .

ஏய் !அரவிந்து ! பாப்பா அப்படி பளிச்சினு சொல்லிட்டுப் போகுது !

கட்டிக்கப் போறியா ‘ லோகு சிரித்தான் .

‘லோகு !படுத்தாதே !எனக்கே தெரியலே !

‘இதோ பாரு அரவிந்து!இவ்வளவு அழகா எந்தப் பொண்ணும் சொல்லமாட்டா. அதிர்ஷ்டம் கதவைத் தட்டுது. அவ்வளவுதான் சொல்லுவேன். பையன் வருவான், சாவியைக் குடு. எனக்கு வேலை இருக்கு’. லோகு போய்ட்டான் .

வேன் கிளம்பி பாளை ஹை ரோடில் போய்க்கொண்டிருந்தது

அவனுக்குப் பின்னால் இடம். அருகிலேயே அவர்கள் ஏதோ கேலி செய்து கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு இயல்பான சூழ் நிலையினில் அவன் இல்லை .கண்களை மூடிக் கொண்டே வந்தான்.

நடுவில் ஒரு முறை மங்கையைப் பார்த்தான் .அவள் இவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இதழோரப் புன்னகையும் ஏதோ ஒரு கவிதை உலகத்திற்கு அவனைத் தள்ளியது ஏதோ என்று எண்ணாதே!உனக்காக என் புன்னகை ஒரு தனிப் பொலிவு பெறுகிறது !அதற்காகவே நான் இருக்கிறேன் .அவன் அவனோடு இல்லை!அவன் மனம் எப்பொழுதோ எதிர் சீட்டுக்கு போய் விட்டது !

ஆலய வாசலில் வேன் நின்றது ,கடல் நீரில் கால்கள் நனைக்க மெதுவாக நடந்தான்.பின்னால் மங்கையும் புவனாவும் .

அலைகளில் நின்ற வாரே பின்னால் வேலுடன் கோபுரத்தைப் பார்த்தான்.அவன் கண்கள் கலங்கி இருந்தது.

மங்கை! என் மேல் உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை! வார்த்தைகள் வர வில்லை அவனுக்கு.

மங்கை சிரித்தாள்.’இப்போ நான் சந்தோஷமா இருக்கேன். இரண்டு நாள் கழித்து நீங்க ஊருக்குப் போனதும் போய் விடும் .இதற்க்கு மேல் எனக்கு சொல்லத் தெரியல்லே.!

அந்தக் காலம் !இப்பொழுது போல செல் ,கணினி கிடையாது.காதலை நேரில் பேசித்தான் தீர்க்க வேண்டும்.

ஆலயவாசலுக்கு நடந்தான் .கூட்டம் இருந்தது.பின்னால் புவனா மட்டும் வந்து கொண்டிருந்தாள் .

புவனா! எனக்கேன் இந்த சோதனை?

‘எனக்கே தெரியலைடா!இப்படி ஒரு ஆசை அவளிடம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது .எனக்கு கல்யாணம் நிச்சயமாகப் போகிறது.

இந்தக் கோவிலில் எனக்காக எதுவும் வேண்டப் போவது இல்லை .

உங்களுக்காக வேண்டப்போகிறேன்.அவள் என் உயிர்த் தோழி .

உன்னையோ எல்லாருக்கும் பிடிக்கும்.நீங்கள் வாழ வேண்டும் .எனக்கு சந்தோஷமே அதுதான்.

உள்ளே செந்திலாண்டவன் விபுதி அபிஷேகத்தில் அபயக்கரம் காட்டி நின்றான் .

‘எல்லாம் வல்ல இறைவா ! என் வாழ்வு இனிதாகுமா !என்று சொல்லி

போத்தி கொடுத்த திருநீறு அவன் நெற்றி முழுவதும் பரவியது.

சன்னதியை சுற்றி வந்தான்.

அப்பா!சிவப்பழமாக காட்சி அளிக்கறீர்கள் எதாவது வேண்டுதலா !

சிரித்த முகத்துடன் மங்கை கேட்டாள்.

வெளியே வா ,சொல்லுகிறேன் இது இறைவன் இருக்கும் இடம் .என்றான்

‘இப்போ சொல்லுங்கள் ‘

‘நினைத்தது நடக்குமா மங்கை ‘.

என்னைப் பொறுத்த வரைக்கும் அது நீங்கள்தான் .என்னாலே வேறு எதுவும் நினைக்க முடிய வில்லை .

மங்கை அழுதாள்.அவளால் முடியவில்லை .

ஆர்பரித்தக் கடலை நோக்கி அவனும் அழுதான் .

இளகிய மனங்களுக்கு கண்ணீர்தான் எடுத்துக் காட்டு !

வரும்போது ஒரு சராசரி மனிதனாகத்தான் வந்தான்.

இப்படி ஒரு ஆவலுக்கும் அன்பிற்கும் கட்டுப்பட்டு இனி வரும் நாட்கள் இவர்களது இல்லாமல் ,ஏங்கும் அன்பிற்கு தள்ளப்பட்டு தனிமை,பிரிவு,தவிப்பு என ஏங்கி இயல்பான வாழ்க்கை இனி எப்படியெல்லாம் ஆகுமோ!

இந்த வலிமையை இவர்களால் தாங்க முடியவில்லை !

இயல்பான சூழ்நிலையை இவர்கள் இழந்து விட்டார்கள் .

இறங்கும் இடம் வந்தது.

வண்டியின் கைப்பிடியில் கை வைக்கு முன் அவன் புறங்கை மேலே அவள் கை இருந்தது .அவளுடைய எழுச்சி மிக்க காதல் உணர்வலைகளின் வேகம் ஏக்கத்துடன் அவள் இறுக்கிய போது அவன் செயலற்றுப் போனான் .அந்த நேரத்தை அவனால் என்றும் மறக்க முடியாது.

மனிதப் பண்பாட்டிற்கு மாறாத இரு உள்ளங்களுக்கிடையே இறுக்கமான எண்ணங்களும் இனிமை தரும் என்பது காலத்தால் அழியாத சுவடுகள்!.

இனி வரும் நாட்களில் எத்தனையோ அர்த்தங்கள்,கவிதைகள் சொல்லும்.

அந்தக் காலத்தில் காதலர்கள் இருந்தார்கள் .சூழ்நிலை இல்லை!மனம் விட்டுப் பேசும் நேரம் மிகக் குறைவு.இப்போதுள்ள செல்போன் ,கணினி இல்லாத காலம் அது .ஒரு வித பயம் ,வரைமுறை இருந்தது .

காதலில் அன்பும் எதிர் கால ஏக்கமும் நம்பிக்கையும் ஒளிர்ந்த காலம்

ஊருக்குப் போகும் நாள் வந்தது .மாமி சிரித்தாள்புவனா கல்யாணத்திற்கு வா .இனி அடிக்கடி உன்னைப் பார்க்கலாம் .அவள் சிரிப்பில் அர்த்தம் இருந்தது.’போகும் போது இந்தப் பை மங்கை வீட்டில்

கொடுத்துட்டுப் போ.அவர்களையும் பார்த்த மாதிரி இருக்கும் ‘

மாமி மறுபடியும் சிரித்தாள் !

நெல்லையில் வீடுகள் கொஞ்சம் நீளம் .மங்கை வீட்டுக் கதவை தட்டி விட்டு நின்றான் .மங்கையின் அம்மா திறந்தாள் .

‘அட! அரவிந்து !உள்ளே வா !ஊருக்குக் கிளம்பிட்டாயா?உட்காரு .காபி தருகிறேன் .’

என் மாமி இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள் ‘

சரி !இரு .காபி கொண்டு வருகிறேன் ‘ என்று உள்ளே போனாள்.பிறகு வாசல் கதவு திறந்தது. மங்கை வந்து கொண்டிருந்தாள் .

‘வருகிறேன் என்று சொல்லக் கூடாதா !அன்றைக்கும் சொல்லாமல் போய் விட்டீர்கள் ‘ சொல்லும் வசதி இல்லாத காலம் .எப்படி சொல்வது!

எட்டிப் பார்த்தாள்.அம்மாவைக் காணோம் .

‘எப்போ வருவீர்கள் !இப்படி விட்டுட்டுப் போங்கோ !நான் தவிக்கட்டும் !

உங்களுக்கு என்ன !ஆபிஸ் வேலை சொல்லிட்டுப் போய்டுவீங்க !என்னாலே இனிமே பாட்டுக் கூட பாட முடியாது .’

ஏன் ‘ என்றான்

‘கேட்டால் அழுகை வந்திடும் .உங்க நினைப்பு என்னோடு ஒட்டிண்டாச்சு!உங்களைப் பார்த்தால் தான் நிம்மதி வரும் ‘

அவனுக்கு அப்பொழுதே அவளை இழுத்துண்டு ஓடிடலாமா என்று இருந்தது .

அந்தக் காலம் !தைரியம் அவனுக்கும் இல்லை !அவளுக்கும் இல்லை!

அது அவ்வளவு சுலபமில்லை !

‘நான் என் அப்பாவிடம் சொல்லுகிறேன் .உன் அம்மாவிடம் சொல்லு ‘

அதற்குள் அவள் அம்மா ஒரு பார்சலுடன் வந்தாள்’.இந்தா! ரயிலுக்கு கொஞ்சம் முறுக்கு .அடுத்த டிரிப் எப்போ ?’

‘புவனா கல்யாணத்திற்கு வருவேன் ,தாத்தா பார்க்க வருவேன் ‘

வரும்போது கட்டாயம் இங்கு வா .மங்கை! அந்த காபி பாத்தரத்தை எடுத்துண்டு வா ‘என்று சொல்லி விட்டு உள்ளே போனாள் .

‘அதென்ன !புவனா தாத்தா ! என்னை பார்க்கிற நினைப்பு இல்லையா?’

‘நீ தான் முதல் ! இப்போ எப்படிச் சொல்வேன் !அடுத்த முறை கட்டாயம் சொல்வேன் ‘என்றான் .

பின்னால் நகர்ந்தான் ,துளிர்ந்த கண்ணீரைத் தொடைக்க முடியாமல் !

காபி பாத்திரம் அப்படியே இருந்தது .அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் .

இது திரைப்படமோ காவியமோ இல்லை.அவளால் அவனிடம் ஓடி வர முடியாது .கலங்கிய கண்களுடன் அந்த அழகிய முகத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டு இறங்கினான்.

நெல்லையை விட்டுப் போகும் போது எப்பொழுதும் ஊரின் பாசம் ஒரு சோகம் கொடுக்கும் !இப்பொழுது அது பெரும் சுமையாக மாறினது!.

சென்னையில் நண்பன் நவீன் ஸ்டுடியோவில் போட்டோக்கள் பிரிண்ட் போட்டான்.நவீன் ரொம்ப அழகாக போட்டிருந்தான்

ஒரு மாதம் கழிந்தது ,புவனா கல்யாணப் பத்திரிக்கை வந்தது .அரவிந்த் அப்பா அம்மாவுடன் ஒரு வாரம் முன்னாலேயே புறப்பட்டுப் போனான்.

நேரம் வந்தது ,அன்று மாலை மங்கை புவனாவுடன் மாடியில் இருந்தாள் .

அரவிந்த் !எதுவும் சரிப்பட்டு வரும் போல இல்லை இவ ரெடியாக இருக்கா!நேரா சாலைக் குமார சுவாமி கோயில்லே போய் கல்யாணம் பண்ணிக்கோ .என்ன சொல்றே !

அவன் நிமிர்ந்து பார்த்தான் .

‘என்னால் இப்பொழுதே முடியும் .அவளுக்கு ஒரு தங்கை ,உடம்பு சரியில்லாத அப்பா ,நல்ல அம்மா இவர்கள் மனம் நோக கோவில் கல்யாணம் செய்து பிரளயம் செய்ய விரும்பலை .நான் கோழை அல்ல.என் அப்பாவிடம் சொல்லி நல்ல படியாக ஏற்பாடு செய்வேன் .

புவனா போல தன் கல்யாண சமயத்தில் கூட தோழிக்காக பாடு படும் ஒரு பெண் எந்தக் காலத்திலும் காண்பது அரிது !

அந்தப் பெண் மங்கை பாவம் !அவளுக்கு போராட்டமும் வேதனைகளும் தாங்கும் நிலையில் அவள் இல்லை .மென்மையான பெண் மனதிற்கு முதல் காதல் உணர்வும் பரிமாணங்களும் எண்ணிலடங்காதவை .நல்ல தீர்வு வரும் வரை தாங்க முடியாது .தன் உணர்வு தன்னிடம் இருக்காது !தள்ளிப் போய் நின்று தவிக்க வைக்கும் !

சமூகம்!,அந்தஸ்து ,அவரவர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வாறு பேசும்

வார்த்தைகள் !எதுவும் இவனுக்கு உதவுவதாக இல்லை. புவனா போல

இன்னொருவர் இல்லை !

கட்டுப்பாடு,கோட்பாடு ,தன்மை ஒருவர் மனதை புரிய வைக்கும் பண்பு !

எதுவும் இல்லாத காலம் அது !

ஒரு பெண்ணுடன் பேசுவதே பெரிய தவறாக எண்ணும் காலம்!ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எல்லாம் பெட்டியில் அடங்கியவை .

தூய மனங்கள் இருந்தது !காதல் இருந்தது ! ஆனால் விருப்பம்களைவெளியிட வழியே இல்லை

.

இவ்வளவு நாட்கள் பழகியதே பெரும் சாதனை !

மங்கை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்

சூழ்நிலை !

உள்ளங்கள் தான் ஒன்றாக பிணைந்ததே தவிர அவனும் மங்கையும்

நெருங்கி மூச்சு கூட விட முடியாது .

பயம் !கட்டுப்பாடு நெறி !

அவளோ எனக்கு வீட்டில் பேச பயமாக இருக்கு என்கிறாள் .

இவனோ கவலைப் படாதே !என் பெற்றோரிடம் சொல்லி சம்மதம் வாங்கி நல்லபடியாக ஏற்பாடு செய்கிறேன் என்றான்.

கீழே சென்றான்.

மாமா இவனுக்காக நின்று கொண்டிருந்தார் .

வா!வெளியே போய்ப் பேசலாம் .தோட்டத்துப் பக்கம் கூட்டிப் போனார்.

‘உன் டைரி போட்டோ எல்லாவற்றையும் பார்த்து உன் அப்பா ரொம்பக் கோபப் பட்டார்.ஒரு வழியாக சமாதானம் செய்தேன் .எனக்கு நீயும் வேணும் அந்தப் பொண்ணும் வேணும் .நாளை அல்லது மறு நாள் பேசி முடிக்கிறேன் .கொஞ்சம் பொறுத்துக்கோ .அதற்குள்ளே

வேறு ஏதாகிலும் பண்ணாதே ‘

அவனுக்கு எதோ பரிசு கிடைத்த சந்தோஷம்.நேரே மாடிக்கு ஓடிப் போய் நடந்ததை சொன்னான் .புவனாவும் இருந்தாள் .

‘மங்கை!மாமா பேசினாலும் உன் வீட்டில் தான் இருக்கிறது .இப்போ என் பக்கம் கிளியர் ‘என்றான் .

அவள் கண்கள் படபடத்தன !முகம் இன்னும் சிவப்பாக ஆயிற்று .ஒரு மெருகுடன் சிறிய புன்முறுவலுடன் கிடைக்காத பொருள் கிடைத்த

நிறைவு தானாகத் தெரிந்தது!. அவள் பேசினாள்

‘அப்படியே உங்களோடு இப்பவே வந்திடணும்போல இருக்கு !

அப்பா! இன்னும் கொஞ்ச நாள் !அப்புறமா நீங்க ஆபிஸ் கூடப் போக முடியாது .நாள் முழுக்க உங்களோடு ஒட்டிண்டு விடவே மாட்டேன் !

இந்த செந்திலாண்டவன் நம்மைப் பார்க்க வைச்சார் .சேர்த்தும் வைப்பார்.கடல் அலையிலே பயந்து பயந்து பார்துண்டோமே அது இருக்காது .கையைப் பிடித்துக்கொண்டு கடல்லே குளிக்கும் காலம் வரும் ‘

புவனாவும் அரவிந்தும் பிரமிப்பாக அவளையே பார்த்தார்கள் .

கட்டுக் கடங்காத காதல் பரிமாணங்கள் சூழ்நிலைக்காக மனதுற்குள்ளே மருகி நல்ல செய்தி வரும் போது தன்னையும் மீறி

ஆசைப் பொக்கிஷங்கள் வார்த்தைகளாக சிதறி தெள்ளிய நீரோடை போல மனதில் இருந்து ஓடி வந்தன !

மாசில்லாத இரு மனங்கள் இணைந்த எழிலான நேரம் அது!

அதற்க்கு இணை எதுவும் இல்லை!

அந்தக் காலத்தில் காதலித்தாலும் ,ஆயிரம் மைல் வேகத்தில் தெரிந்தாலும் ஒரு ஐந்து அடி இடைவெளி எப்போதும் இருந்தது .காதல் உரிமை இருந்தது .கட்டித் தழுவிக் காதல் மொழி பேசுவது கடினம் .

இன்று போல ஏக்கப் பெருமூச்சை எதிர் எதிரே நெஞ்சங்களில் பாய்ச்ச முடியாது! பயம் இருந்தது!

மிகச் சோதனையான காலம்

எக்ஸ் க்குஸ்மீ ! விமானப் பெண் எழுப்பினாள்! உங்கள் சாப்பாடு தயார். அவரை எழுப்பினாள். அவள் தூங்கவேயில்லை ,அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் .

விமானம் அட்லாண்டிக் கடலில் பறந்து கொண்டிருந்தது.

மங்கை பேசினாள்.’ஐம்பது வருஷத்துக்கு என்று தப்பாக நினைக்காதீர்கள். அப்போ என்ன நடந்தது!

அரவிந்தன் அவள் முகத்தைப் பார்த்தார் .’முதலில் எல்லாம் சம்மதம் சரி என்று சொன்னவர்கள் உங்கள் வீட்டில் அந்தஸ்து ,தகுதி எல்லாம் பார்த்தார்கள் .அது யாருடைய முடிவு என்பது உனக்குத் தான் தெரியும்.

நான் ஊர் பக்கமே வரவில்லை .மாமா மிக வருத்ததுடன் எழுதினார்.

எனக்காக இறங்கி வந்த என் தந்தைக்கு மதிப்பு குறைந்தது.

மங்கை பதில் பேசவில்லை .

அவர் சொன்னார்.’எல்லாம் முடிந்து நாமும் முடியும் நிலையில் இருக்கிறோம்.இது பற்றிப் பேசும் நாள் போய் விட்டது..ஆனால் ஒன்று. எங்களுடைய அந்தஸ்தும் மதிப்பும் அன்றிலிருந்து இன்று வரை குறையவே இல்லை.

‘நான் என்ன செய்வது! என்னதான் அழுது புரண்டாலும் என் அம்மாவிற்கும் எனக்கும் அதிகாரம் இல்லை இது மற்றவர் தீர்மானம்..சரி! உங்களைப் பற்றி சொல்லுங்கள் ‘என்றாள் அவள் .

அரவிந்தன் சொன்னார் .

‘அந்த மூன்று வருடங்கள் நான் ரொம்ப மோசமான நிலையில் இருந்தேன்.சரி வர ஆபிஸ் போகவில்லை.என் பெற்றோர் பயந்து விட்டார்கள் .என் அம்மாவின் அக்கா(பெரியம்மா) என்னை கல்கத்தா தட்சினேஸ்வர் ராமகிருஷ்ணர் ஆலயத்திற்கு கூட்டிச் சென்றார்கள் .என் பெரியம்மா எப்பவும் துறவி போல இருப்பவர்.

ஒரு நாள் அன்னை சாரதா தியான மண்டபத்தில் உட்கார்த்தி உபதேசம் செய்து அங்கேயே அமரச் செய்தார்கள் .கண்ணை மூடிக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருந்தேன் .

முதலில் தெரியவில்லை .பிறகு எனக்கு புத்துயிர் வந்த மாதிரி ஒரு மாற்றம் .மனதில் ஒரு வித உணர்ச்சிகள்.! அன்றிலிருந்து வாழ்கையே மாறி விட்டது.பிறகு உடல் நலமில்லாத தாத்தாவைப் பார்க்க நெல்லை போனேன்.அவரின் விருப்பத்திற்காக ஒரு கிராமத்தில் பெண் பார்க்கப் போனேன் .

இரண்டு வரிசையிலும் வாசலில் என்னையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .உள்ளே போனேன்.மறுபடியும் ஒரு குற்ற உணர்ச்சி !உனக்குப் பதிலாக இன்னொரு பெண்ணை பார்க்கத் தடுமாறினேன்.

நான் அவளிடம் பேச வேண்டும் என்று சொன்னதை யாரும் விரும்பவில்லை.நம்ம காலத்தில் அது அதிசயம்!

ஆனால் அவளோ ‘நான் தயார்’ என்று எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டாள்.நான் ஆரம்பித்தேன் ‘ இதே ஊரில் என்னுடைய கடந்த நாட்களில் ‘ என்று .

அவள் சொன்னாள்.’உங்களுக்கு நடந்தது எங்களுக்குத் தெரியும் .உங்கள் சூழ்நிலையும் தெரியும்.

‘நான் இப்படி ஒரு கிராமத்தில் எனக்குப் பெண் பிடிக்க வில்லை என்று சொன்னால் உன் நிலைமை என்ன ஆகும் !எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கு.ஒரு முடிவு தெரியாமல் பேச வந்தேன் ..

அவள் சொன்னாள்.’ பிடிக்கவில்லை என்றால் கவலை இல்லை.ஆனால் உங்கள் கடந்த கால வாழ்கையை இந்த இடத்தில பேசினதால் உங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, என்னால் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்கையை தர முடியும் ‘என்று மிக அமைதியாகச் சொன்னாள் .

திருமணம் நடந்தது.

ஒரு நாள் நான் அழுதேன் !

அவள் சொன்னாள்’ இந்த அழுகை இன்றோடு முடியட்டும் கணவன் மனைவி உறவு வெறும் தாம்பூலம் மாற்றி தாலி கட்டி தாம்பத்தியத்தில் உண்டானது அல்ல !.புரிந்து கொள்ளுங்கள் ! உள்ளம் தூய்மை யானது என்பதால்தான் அது அவரவர் உடலுக்குள்ளேயே வெளி மாசு படாமல் செயல் படுகிறது.

அதற்க்கு உணர்வு கொடுங்கள் !புரிந்து செயல் படுங்கள் !

எதிரே நின்றவள் எனக்கு மனைவியாகத் தோன்ற வில்லை!.இடிந்த என் மனதிற்கும் வாழ்க்கைக்கும் அந்த பகவான் ராமகிருஷ்ணர் கொடுத்த வரம் என்று நினைத்தேன்

மங்கை!உன்னோடு என் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்த எனக்கு மங்காத மறுவாழ்வு கொடுத்தாள் என் மனைவி ஸ்ரீவித்யா !

ஒரு நல்ல மனைவியைப் பற்றி ,ஒரு காலத்தில் உயிராக இருந்த காதலியிடம் சொல்லும் மனிதன் நான் ஒருவன்தான் என்று நினைக்கிறேன் .

மங்கை எழுந்திருக்க நினைத்தாள். சிரமப் பட்டாள். அரவிந்தன் உடனே ‘எழுந்து வா !நான் கொண்டு விடுகிறேன் ‘என்று கையைப் பிடித்துக்கொண்டு ,டாய்லட் முடித்த பிறகு கொண்டு விட்டார்.

அவள் சொன்னாள் ‘இந்தக் கை பிடிக்க ஒரு காலத்தில் தூங்காமல்

கனவு கண்டேன் .கடவுள் சித்தம் பார்த்தீர்களா !’

அரவிந்தன் சிரித்தார் !.

“இது உதவி ! அது வாழ்க்கை ! உதவி என்றும் இருக்கும் .ஆனால் வாழ்க்கை முடிந்து போன ஒன்று ! என் மனைவிக்கு நிறைய செய்திருக்கிறேன் .’

ரொம்ப சிரமப்பட்டார்களா ‘?

‘எங்கள் வாழ்க்கை ரொம்பவும் நன்றாக இருந்தது .நல்ல சூழ்நிலை ! அன்பான குடும்பம் .அவளுடன் நிறைய நாடுகள் சுற்றி இருக்கிறேன் . கடைசி எட்டு வருஷங்கள் உன்னைப் போல நடக்க சிரமப்பட்டாள். இரவு பகல் பாராது கண் விழித்து பணிவிடை செய்து இருக்கிறேன். ஒரு நல்ல பெண்மணிக்கு பணி செய்து என் நன்றிக்கடனை நிறைவு செய்தேன் .

ஸ்ரீவித்யா சொல்லும் வார்த்தைகள் இருக்கும் உணர்விற்கு மதிப்பு கொடுங்கள். அது உங்களை உயர்த்தி விடும் ”

மங்கையின் கண்களில் நீர் கசிந்து கண்ணாடியைக் கழட்டித் தொடைத்துக் கொண்டாள்

“நீங்கள் ரொம்பக் கொடுத்து வைத்தவர் ”

தூக்கம் வந்தது! துபாயும் வந்தது !

அரவிந்தன் அவளை பத்திரமாக டெர்மினலில் கொண்டு விட்டார்.அவளுக்காக காத்து இருந்தார் .

‘உங்களுக்கு நேரம் ஆகலையா”

இல்லை !இங்கே என் மருமகனுடன் ஒரு வாரம் இருந்திட்டு பின் சென்னை போவேன் .அவனிடம் சொல்லி விட்டேன் .

மங்கை கேட்டாள்’ என்னைப் பற்றியே ஒன்றும் கேட்கவில்லையே !’

மங்கை! தப்பா நினைச்சுக்காதே !கேட்கத் தோணலை !

மங்கையின் வீல்சேர் விமானம் வாசலுக்குச் சென்றது .

மங்கை கண்கள் மீண்டும் குளமாயின !

அரவிந்தன் மெதுவாக நடந்தார் .

வாழ்க்கையின் மென்மையையும் உண்மையான உணர்வுகளையும்

அன்பு மலர்களாக இவர்கள் வழி நடத்தினர் !.

Print Friendly, PDF & Email

4 thoughts on “அன்பு மலர்களும் அரவிந்தனும்

    1. தங்கள் அன்பான இதயம் தொடும் விமர்சனத்திற்கு மிக்க நன்றி..

  1. அழகான கதை

    கண்களில் நீர் துளித்தது

    காதல் அழிவற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *