தொ.மு.சி.ரகுநாதன்

 

தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

• ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார்.

• ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.

• தமிழின் முன்னோடி எழுத்தாளரான இவரது முதல் சிறுகதை 1941-ல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிந்தது. முதல் புதினம் ‘புயல்’ 1945-ல் வெளியானது. தமிழக கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ இவரது முக்கியமான நாவல். இது ‘செக்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமான பிரதிகள் விற்றன. பண்டைய இலக்கியம் குறித்த இவரது படைப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல் ‘இளங்கோ அடிகள் யார்?’ என்பதாகும்.

• இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, லெனின் கவிதாஞ்சலி ஆகியன இவரது முக்கியமான மொழிபெயர்ப்புகள்.

• புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது படைப்புகளை சேகரித்து வெளியிட்டு மகத்தான சேவை புரிந்துள்ளார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இந்த படைப்பு அவரைப் பற்றிய முக்கியப் பதிவாகப் போற்றப்படுகிறது.

• பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரண்டு தளங்களிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் புலமையுடனும் விளங்கியவர்.

• ‘பாரதியும் ஷெல்லியும்’, ‘கங்கையும் காவிரியும்’ ஆகிய படைப்புகள் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தை தமிழில் விரிவுபடுத்தினார்.

• ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இவரது இலக்கிய விமர்சன நூல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. சோவியத் லேண்ட் நேரு விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு, பாரதி விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.

• 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 2 நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த தொ.மு.சிதம்பர ரகுநாதன் 2001-ல் பாளையங்கோட்டையில் காலமானார்.

– 20 Oct 2014 (நன்றி: https://www.hindutamil.in/news/blogs/18529-10.html )

தொ.மு.சி ரகுநாதன்… புதுமைப்பித்தன், கு.ப.ரா இருவரையும் கலந்து வடித்த கலைஞன்! கதை சொல்லிகளின் கதை
Published:26 Jan 2018 2 AM (https://www.vikatan.com/)
தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதுகிறவர்களானாலும் சரி, தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் போடுகிறவர்களானாலும் சரி, இணையத்தில் சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதளக்காரர்களானாலும் சரி, ஞாபகமாகத் தவிர்த்துவிடும் ஒரு பெயர் தொ.மு.சி. ரகுநாதன். இவர் எழுதிய சிறுகதைகளை வாசித்த புதுமைப்பித்தனுக்கு, அந்தக் கதைகள் மிகவும் பிடித்துப்போய், யார் இந்தப் பையன் எனத் தேடித் தேடி, சென்னையில் தினமணி ஆபீஸில் அவரை முதன்முதலாகப் பார்த்தபோது “ஏ… நீ நம்ம ஆளுப்பா. உன்னைத்தான் இத்தனை நாளாகத் தேடிக்கொண்டிருந்தேன்” என்று சொல்லிக் கட்டியணைத்துக்கொண்டு, அந்த நிமிடத்திலிருந்து நெருக்கமாகிவிட்டாராம்.

அதன் பிறகு தன் இறுதிக்காலம் வரை அந்த நட்பையும் தோழமையையும் சிக்கெனப் பிடித்துக்கொண்டிருந்தவர் புதுமைப்பித்தன். அவர் சாகும் நாளில், கடைசி நிமிடத்தில் பார்க்க ஆசைப்பட்டு கண்கள் தேடியதும் இவரைத்தான். உடல் நோயால் வேதனை வந்தபோதெல்லாம் “ரகுநாதா…” என்று அரற்றியதாக கடைசி நிமிடத்தில் அவரோடு இருந்த சிதம்பரம் எழுதுகிறார்.

1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்’ நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல். செக் மொழியில் கமில் சுவலபில் மொழிபெயர்த்த அந்த நூல், 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. ரகுநாதன் எழுதிய `ஆனைத்தீ’ என்ற சிறுகதைக்கு ஈடான ஒரு கதையை, தமிழில் வேறு யாரும் எழுதவில்லை என்பது எழுத்தாளர் சுந்தரராமசாமியின் அழுத்தமான கருத்து. அவர் பெயரைப் புறக்கணிப்பதில் நியாயம் ஏதும் இருக்க முடியாது. அரசியல்தான் இருக்க முடியும்.

புதுமைப்பித்தனோடு சேர்ந்துகொண்டு கல்கி உள்ளிட்ட புகழ்பெற்ற இலக்கிய உலக ஜாம்பவான்களை எல்லாம் கூர்மையான விமர்சனக் கணைகளால் வீழ்த்தியவர் தொ.மு.சி.ரகுநாதன். அதிரடியான எழுத்துகளால் பலருடைய பகையைச் சம்பாதித்துக்கொண்டவர். ஆனால், உண்மையை எந்தவிதமான சமரசத்துக்கும் இடமின்றி உரக்கச் சொன்னவர். முற்போக்கு இலக்கியம் என்ற வகைமையின் பயணத்துக்கு முதன்முதலாகப் பாதை போட்டவர்.

1939-ம் ஆண்டிலிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ரகுநாதனின் கதைகள், 1949-ம் ஆண்டில் தொகுப்பாக வெளியானது. அந்தத் தொகுப்பில் இருந்த `நீயும் நானும்’ என்ற கதை, வாத பிரதிவாதங்களை இலக்கிய உலகில் உருவாக்கிப் பரபரப்பாகப் பேசியது. கம்யூனிஸ்ட்டுகள் மீதான அடக்குமுறைக் காலம். போலீஸாரால் தேடப்பட்டுவரும் ஒரு தொழிற்சங்கத் தலைவர், போலீஸ் கண்ணில் பட்டுவிடுகிறார். போலீஸ் அவரைத் துரத்துகிறது. அவர் தப்பி ஓடி ஓடி, ஒரு சந்தில் நுழைகிறார். அங்கே ஒரு குடிசை வாசலில் ஒரு பெண் உட்கார்ந்து தன் குழந்தைக்குப் பால் புகட்டிக்கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணும் தீவிரமான ஒரு தொழிற்சங்கவாதி. தன் தலைவரை போலீஸார் துரத்திவருவதைப் பார்த்த அந்தப் பெண், தலைவரை தன் குடிசைக்குள் நுழைத்து பின்வாசல் திறந்து தப்பி ஓடிவிடும்படி கூறுகிறாள். தலைவர் குடிசைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் போலீஸ் அவள் வீட்டுவாசலில் வந்து நின்றுவிட்டது. உடனே போலீஸ் உள்ளே போனால் தலைவர் பிடிபட்டுவிடுவார். என்ன செய்தாவது தலைவரைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் என்ன செய்வதென அவளுக்குத் தெரியவில்லை. திடீரென தன் மடியில் பால் குடித்துக்கொண்டிருந்த தன் குழந்தையின் கால்களைப் பிடித்துத் தூக்கிப் படிக்கட்டில் அதை ஓங்கி அடிக்கிறாள். தலை சிதறி குழந்தை இறந்துவிடுகிறது. இந்தக் கொடூரத்தைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுவிடுகிறார்கள். தலைவர் தப்பிவிடுகிறார்.

இது கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலதண்டாயுதம் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். இப்படியான சம்பவம், இங்கு மட்டும் நடக்கவில்லை. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் போரில் பின்வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஓரிடத்தில் நடந்துள்ளது. வியட்நாமிலும் ஜப்பானிலும் சோவியத் யூனியனிலும் இப்படிக் கட்சித் தலைவர்கள், தேசிய ராணுவம் இவர்களைக் காப்பதற்காகக் குழந்தையைக் கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

`ஆனாலும் உண்மையும் யதார்த்தமும் ஒன்றா? கலை என்பது நடந்ததை நடந்ததாக எழுதுவதா? அப்படியானால், நடந்ததும் யதார்த்தமும் ஒன்றா? சம்பவ உண்மைக்கும் கலை உண்மைக்கும் வேறுபாடு கிடையாதா? இப்படியெல்லாம் கேள்விகளை எழுப்பியது அந்தக் கதை.’ (பொன்னீலனின் தொ.மு.சி.ரகுநாதன் நூலிலிருந்து)

காவல்துறை களத்தில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடிக்கொண்டிருந்த அதே காலத்தில், எழுத்துலகில் கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ்காரர்களாலும் `சுத்த இலக்கியவாதி’களாலும் கடுமையாகத் தாக்கப்பட்ட காலமாகவும் இருந்தது. ஹிட்லர் சோவியத் மீது படையெடுத்துச் சென்று தோற்ற காலமாகவும் இருந்தது.

`அகில உலக கம்யூனிஸ்ட் இயக்கம் சமாதான பஜனை செய்துகொண்டே யுத்தத்துக்குத் திட்டமிட்டுவரும் இந்தச் சமயத்தில், கம்யூனிசத்தின் உண்மைத்தன்மையை ஆதரவாளர்களின் வாய்மொழியிலிருந்தே தெரிந்துகொள்வது அவசியம். அதற்காகவாவது இந்தக் கதைத் தொகுதியை வாசிக்கலாம்’ என்று ரகுநாதனின் முதல் சிறுகதைத் தொகுப்பைக் கடுமையான வார்த்தைகளோடு வரவேற்றது தினமணி நாளிதழ் (10-09-1950). அன்று கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கும் இந்தக் கதை மீது கடுமையான விமர்சனம் இருந்தது (தொ.மு.சி.ரகுநாதன் நினைவோடை-சுந்தர ராமசாமி). `நடந்ததைத்தானே எழுதியிருக்கிறார் அதற்கு ஏன் இத்தனை விமர்சனம்?’ என்று இந்தக் கதையை ஆதரித்தோரும் இருந்தனர்.

சிறுத்தொண்ட நாயனார் சிவனடியார் ஒருவர் கேட்டார் என்பதற்காகத்தான் பெற்ற பிள்ளையை வெட்டி கறி சமைத்து அன்போடு உபசரித்தார் என்ற கதையை, காலம் காலமாகக் கண்களை மூடி பக்திப்பரவசத்தோடு `சிவசிவா’ என்று கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு, உண்மையின் மீது கட்டப்பட்ட என் கதையை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்று தடாலடியாகத் திருப்பியடித்தார் ரகுநாதன்.

ஆரம்பத்தில் அப்படித் திருப்பி அடித்தாலும் பின்னாளில் `நீயும் நானும்’ கதையை தான் எழுதியவிதம் சரியல்ல என சுயவிமர்சனம் செய்துகொண்டார் ரகுநாதன். 1956-ம் ஆண்டில் இலங்கையில் பேசியபோது “நான் சொல்லியிருப்பது ஒரு சம்பவமே! கதை என்ற அளவில் அதன் உருவாக்கம் சரியானதல்ல. யதார்த்த இலக்கியத்தின் உயர்நிலையே மானுட அன்புதான். மானுட அன்பு என்னும் சுடரை உள்ளுக்குள்கொள்ளாத இலக்கியங்கள் யதார்த்த இலக்கியங்கள் ஆக மாட்டா” என்று தன் கதையை தானே மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார். இதுதான் ரகுநாதன். அத்தோடு நில்லாமல் யதார்த்த இலக்கியம் என்றால், அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மிகயீல் ஷோலக்கவ்வின் கதை ஒன்றைக் கூறுகிறார்.

`இரண்டாவது உலக யுத்தம் முடிவுக்கு வந்த நேரம், ஜெர்மனி வீழ்ச்சியடைந்துவிட்டது. ஆனாலும் போர் முற்றிலும் ஓய்ந்துவிடவில்லை. பாசிசத்தின் தலைமையிடமான ரீஸ்டாக் கட்டடத்தின் மீது செங்கொடியை ஏற்ற சோவியத்தின் செஞ்சேனை வீரர்கள் ஐந்து பேர் ஒருவரோடு ஒருவர் போட்டிபோட்டுக்கொண்டு செங்கொடியுடன் ஓடுகிறார்கள். கட்டட இடிபாடுகளுக்கு இடையே பிரசவத்துக்காகத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு ஜெர்மானியப் பெண்ணின் குரல் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. புதிய உயிரைப் பிறப்பிக்கும் வலியில் அவள் துடித்துக்கொண்டிருக்கிறாள். செங்கொடியைக் கீழே வைத்துவிட்டு அந்த ஐந்து பேரும் சேர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்காக அந்தப் பெண்மணியைத் தூக்குகிறார்கள். சாலையின் இருபக்கங்களும் பதுங்கியிருந்த ஜெர்மானிய ராணுவ வீரர்கள், அந்தச் செஞ்சேனை வீரர்களை ஒவ்வொருவராகச் சுட்டுக்கொல்கிறார்கள். கடைசி வீரர் அந்த நிறைசூலியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பிறந்த குழந்தையின் குரலைக் கேட்டு மகிழ்ந்தபடி வெளியே வரும்போது சுடப்பட்டு இறக்கிறார். முகத்தில் புன்னகையுடன் அந்தச் செஞ்சேனை வீரன் மடிகிறான்’. இந்தக் கதையில் சுடர்விடுவதுபோல யதார்த்தம் சுடர்விட வேண்டும் என ரகுநாதன் பேசி முடித்ததாக பொன்னீலன் எழுதுகிறார்.

ஆனால், பெரும் விவாதப் புயலைக் கிளப்பிய சிறுகதையாக அது விளங்கியது. சிறுகதை மட்டுமல்ல, நாவல் இலக்கியத்திலும் புயலைக் கிளப்பியவர் ரகுநாதன். அவருடைய முதல் நாவலான `முதலிரவு’, `காம உணர்ச்சி, மனிதனின் இதய உணர்ச்சியை மழுங்கடிக்கும் கீழ்த்தரமான உணர்ச்சி’ என்ற பழங்கொள்கையைத் தவிடுபொடியாக்குவதற்காக எழுதப்பட்டது. பரபரப்பாக விற்பனையாகிப் பல பதிப்புகளைக்கண்டது. அதன் அமோக விற்பனையில் பொறாமைகொண்ட சில பதிப்பாளர்கள், அந்த நாவலை ஆபாசம் என்றும் அதைத் தடைசெய்ய வேண்டும் என்றும் அரசிடம் புகார் செய்தார்கள். இதுபற்றி பொன்னீலன் எழுதுகிறார், `அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவிநாசிலிங்கம் செட்டியார் கட்டபிரம்மசாரி. தீவிர காந்தியவாதியான அவர், திருக்குறளில் இருந்தே காமத்துப்பாலை நீக்கிவிட வேண்டும் எனப் பேசியவர். நாவலில் ஓரினச்சேர்க்கை, முறை பிறழ்ந்த ஈரினச்சேர்க்கை, காந்தியப் பாலியல் நிலைக்கு எதிர்ப்பு எல்லாம் இருந்ததைப் பார்த்த அவர், புத்தகத்தைத் தடைசெய்து ஆணை பிறப்பித்தார்.

படைப்புலகில் இப்படி நுழையும்போதே பரபரப்பாகவும் அதிர்வெடிகளுடனும் நுழைந்தவரான ரகுநாதன், சாகும்பரியந்தம் வலுக்குறையாமல் அப்படியே இயங்கினார் என்பது வியப்பான செய்தி. நீயும் நானும் (1949), ஷணப்பித்தம் (1952), சேற்றிலே மலர்ந்த செந்தாமரை (1955), ரகுநாதன் கதைகள் (1957) ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளில் அவருடைய சிறுகதைகள் வந்தன. புதுமைப்பித்தனிடம் நாம் காணும் அதே கிண்டலும் நகையுணர்வும் சமூக விமர்சனமும் இன்னும் தெளிவான குரலில் ரகுநாதனின் கதைகளில் ஒலிக்கக் கேட்கலாம்.

பூடகமாகவோ இலைமறைக் காயாகவோ எழுதுவது ரகுநாதனுக்குப் பிடிக்காத ஒன்று. எழுத வேண்டும் என நினைத்துவிட்டால், தெளிவாகவும் வெளிப்படையாகவும் எழுதிவிடவேண்டியதுதானே என்பதுதான் ரகுநாதனின் போக்கு. அந்நிலைபாட்டின் சாட்சியங்களாக அவருடைய சிறுகதைகள் திகழ்கின்றன. அவர் அளவுக்கு சங்க இலக்கியங்களிலும் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களிலும் பாரதியிலும் புதுமைப்பித்தனிலும் ஆழ்ந்து தோய்ந்த இன்னொரு சிறுகதை எழுத்தாளரை தமிழ் இலக்கிய உலகம் இன்றுவரை பெறவில்லை.

`வென்றிலன் என்றபோதும்’ என்ற சிறுகதை மகாபாரதக் காவியத்தை மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட முக்கியமான சிறுகதை. ஐந்து பேருக்கு மனைவியாக்கப்பட்ட பாஞ்சாலிக்கு, கர்ணன் மீதுதான் உண்மையான காதல் என்று கதை அதகளமாகப் பயணிக்கிறது. திரௌபதி பேசுவதான பாணியில் இரண்டாம் அத்தியாயம் தொடங்குகிறது:

“அரண்மனை மேன்மாட முன்றிலில் நின்று அர்த்தமற்று வானைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மனதில் கவலைகள் மோதி மோதி நெஞ்சம் மரத்துப்போயிருந்தது. இறுகிப்போன இதயத்துக்குள்ளிருந்து குறுகுறுக்கும் நப்பாசையும், ஒதுக்க முடியாத துயரத்தின் உறுத்தலும் என்னை நிலைகொள்ளவிடாமல் அலட்டின. எனினும் கண்ணீர் சிந்தவோ, வாய்விட்டு அழுது நெஞ்சின் பளுவைக் குறைக்கவோ மனதில் தெம்பும் திறனும் இல்லை. காரணம், அன்றைய போர். ஒருபுறம் கர்ணன் என் காதலன். மறுபுறம் அர்ஜுனன் என் கணவன். இருவரும் போர் புரிகிறார்கள். இருவரில் யார் விழுவார்கள்? அவர்கள் வீழ்ச்சியைப் பொறுத்துதான் என் வாழ்க்கையும் இருக்கிறது. இப்படியெல்லாம் நெஞ்சக் குகையில் எண்ணங்கள் வெந்துகொண்டிருந்தன.”

கர்ணன் கொல்லப்பட்ட சேதி கேட்டு மனம் உடைந்து கட்டிலில் விழுந்து அழுகிறாள் பாஞ்சாலி. அவளுடைய நினைவுகளில் முன்னர் நடந்ததெல்லாம் சித்திரமாக விரிகின்றன. “ஐவருக்கும் நான் பத்தினியானேன். எனக்கு வாய்த்த ஐந்து கணவன்மார்களும் என்னிடம் நடந்துகொண்டவிதம்தான் என்னை கர்ணன் பற்றிய சிந்தனைக்கு மீண்டும் இழுத்துச் சென்றது. இந்த ஐவருக்கும் மேலாக கர்ணனிடம்தான் எனக்கு மனசு ஒட்டக்கூடிய பாசம் இருந்தது.

தருமபுத்திரன் ஒரு ரிஷிப்பிறவி. அவருக்கு மனைவி என்றால், சதி என்ற தெய்விகப் பொருள். அவர் பள்ளியறையில் வைத்துக்கொண்டுகூட, திடீரென நீதிசாஸ்திரம் போதிக்க ஆரம்பித்துவிடுவார். பீமரோ, காதலுக்கோ சல்லாபத்துக்கோ ஏற்றவர் அல்ல. இடிம்பைதான் அவருக்குச் சரியான மனைவி. வில்லை முறித்து என்னை மணந்த அர்ஜுனருக்கு, நான் பலரில் ஒருத்தி. அவருக்கு, சமயத்தில் ஒருத்தி வேண்டும். அது திரௌபதியானாலும் சுபத்திரையானாலும் ஒன்றுதான். நகுல சகாதேவர்கள் என் கண்ணுக்குக் கணவர்களாகவே தோன்றவில்லை. மதினியின் அன்பு அரவணைப்பில் ஒதுங்க எண்ணும் மைத்துனக் குஞ்சுகளாகத்தான் தோன்றினர்.

இதனால்தான் இந்த ஐவரில் எவர் மேலும் அன்பு செலுத்த முடியவில்லை. உலகமும் அவர்களும், என் பரிவையும் பச்சாதாபத்தையும் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளட்டும். எனினும், எனக்கு கர்ணன்மேல்தான் நேர்மையான அன்பு படர்ந்திருந்தது. கர்ணன் நினைவுதான் என் இளமையைக்கூட கட்டுக்குலையாமல் காத்துவந்தது. இன்று கர்ணன் மடிந்தார். அப்படியானால் ஒட்டிக்கொண்டிருந்த என் வாழ்க்கைக் கனவும் இன்றோடு உதிர்ந்தது என்றுதான் கொள்ளவேண்டுமா?”

இந்தக் கதையின் மையப்புள்ளியாக இருந்தது அர்ஜுனன் போரில் வென்றபோதும் அவன் கர்ணனிடம் தோற்றான் என்று நிறுவுவதே ஆகும். அர்ஜுனனின் புலம்பலாக வரும் வார்த்தைகள்…

“கர்ணன் என் அண்ணன்; என் எதிரி. இந்த உணர்ச்சியை என்னால் லகுவில் ஒதுக்கிவிட முடியவில்லை. இளமை முதல் அவனைப் பகைத்தே வந்திருக்கிறேன். இருவர் கைகளிலும் வில்லேறிய நாளிலிருந்து ஒருவருக்கொருவர் விரோதிதான். இன்று நான் கர்ணனைக் கொன்றுவிட்டேன். எனினும் நான் அவனை வென்றதாகவே எண்ண முடியவில்லை. கர்ணனின் மரணத்துக்காக இந்திரனும் கண்ணனும் அவனிடம் பிச்சை ஏற்கவேண்டியிருந்தது. தான் பெற்ற பிள்ளையிடம் தாய்மை உணர்ச்சியைக் காட்டி ஏமாற்றி, நாகாஸ்திரப் பிரயோகத்துக்கு குந்தி தடை விதிக்கவேண்டியிருந்தது. கடோத்கஜனை இந்தச் சூதில் பணயம் வைத்து வெட்டுக்கொடுக்கவேண்டி வந்தது. கர்ணனைக் கொன்றுவிட்டேன். எனினும் வெற்றி எனக்கல்ல.”

1940-களில் கலாசாரக் காவலர்கள் யாரும் தமிழகத்தில் தலையெடுத்திருக்கவில்லை. ஆதலால், பாஞ்சாலியின் ஆறாவது காதலை முன்னிறுத்திக் கலவரம் ஏதும் வெடிக்கவில்லை. இந்தக் கதையும் ரகுநாதனும் தப்பினார்கள். நமக்கு அற்புதமான ஒரு மறுவாசிப்புக் கதை கிடைத்தது. ரகுநாதனுக்கு இந்தப் பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயமும் ஆழ்ந்த புலமையும் பிதுரார்ஜிதச் சொத்தாகவே அவருக்கு வந்து சேர்ந்தது எனலாம்.

இவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான், புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை’, `நெல்லைப்பள்ளு’ போன்ற நூல்களை எழுதியவர். ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா, சிறந்த ஓவியர்; புகைப்படக் கலைஞர். அவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20 அன்று பிறந்தவர் ரகுநாதன். அவருக்கு ஓர் அண்ணன், மூன்று தமக்கையர், ஒரு தங்கை.

அண்ணன் பாஸ்கரத் தொண்டைமான் பிற்காலத்தில் மாவட்ட ஆட்சியாளராகவும், பெரும் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர். ரகுநாதனின் அப்பா ஒரு பிரம்ம சமாஜியார். வீட்டிலேயே பிரம்ம சமாஜக் கூட்டங்கள் நடக்கும். சமய நல்லிணக்கத்தில் ஈடுபாடுகொண்டவர். தாகூரிடம் ஈடுபாடுகொண்டவர். நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஆகவே, ஆரோக்கியமான செறிவான குடும்பப் பின்னணி ரகுநாதனுக்கு வாய்த்திருந்தது.

அவருடைய முழுப்பெயர் தொ.மு.சிதம்பர ரகுநாதன். கவிதைகளை மட்டும் திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் எழுதுவார். அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருநெல்வேலியில். 1942-ல் `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று, சிறை சென்றார். சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ நேர்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். தினமணி, முல்லை, சக்தி, சோவியத் நாடு போன்ற இதழ்களில் ஆசிரியர் குழுவிலும் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

பத்திரிகைத் துறையில் சலிப்பேற்பட்டு சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் `சாந்தி’ என்ற இலக்கிய இதழை அவரே தொடங்குகிறார். சுந்தர ராமசாமியும் நெல்லை எஸ்.வேலாயுதமும் உதவியாக இருக்கிறார்கள். குடும்பப் பாகப்பிரிவினையில் அவருக்குப் பணமாகக் கிடைத்த 3,000 ரூபாயை முதலீடாகக்கொண்டு அந்த இதழைத் தொடங்கி நடத்துகிறார். இரண்டு ஆண்டுகள் இலக்கியத்தில் சமரசமின்றி தரமான படைப்புகளுடன் அந்த இதழ் வெளிவருகிறது. தமிழ் ஒளி, ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் படைப்புகளை அதில் வெளியிட்டனர். பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே அந்த இதழ் நின்றுபோனது.

`சாந்தி’ இதழ்களை முழுமையாகத் தேடித் தொகுக்கும் பணியில் ரகுநாதனின் சீடரான தோழர் பேராசிரியர் ராமசந்திரன் ஈடுபட்டுள்ளார் என்பது ஆறுதல் அளிக்கும் தகவல்.

காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று
ஆனைத் தீக்கெடுத் தம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆயிழையென்றே
கொங்கலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்’
என்கிற மணிமேகலைப் பதிகத்திலிருந்து சொல்லெடுத்து ரகுநாதன் எழுதிய `ஆனைத்தீ’ என்ற சிறுகதை, அவரது கதைகளில் மிகச்சிறந்த படைப்பாகப் போற்றப்படுவது. `ஆனைத்தீ’ போல நெஞ்சில் மூண்டெழும் காமத்தீ பற்றிய கதை அது.

தாமிரபரணிக் கரையில் கருப்பந்துறை சுடுகாட்டுச் சுடலைமாடன் கோயில் சாமி கொண்டாடியான கட்டாரித்தேவனுக்கு நாட்டாமைக்காரத் தேவரின் மனைவி இசக்கியின் மீது தீராத இச்சை. “நல்ல மஞ்சக் கடம்புக் கட்டையில் செதுக்கி நிறுத்திய சித்திரப்பாவைபோல் இருப்பாள். தலையை அள்ளிச் செருகிக் கோழிவால் கொண்டை போட்டிருப்பாள். நெற்றியின் நடுவே ஓடி, உச்சி வகிடோடு முடியும் பச்சை குத்திய நாமம் அவளின் கண்களை அளக்க உதவும் கேந்திரமாகத் திகழும். அவளது அவயங்கள் யார் மனதையும் தடுமாறச் செய்யும். மாம்பழக் காவலுக்கு அவள்தான் தோட்டத்தில் இருப்பாள். கட்டாரித்தேவனுக்கு அவளோடு பேசுவதில் தனி இன்பம். மஞ்சள் பூசிய முகத்தில் துலாம்பரமாய் விளங்கும் வெற்றிலைக்காவி உதடுகளில் புன்னகை பூக்க, யாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசுவாள் இசக்கி.”

கட்டாரித்தேவனுக்குக் கலியாணம் ஆகியிருந்தபோதும் மனதில் எழும் குரூர ஆசையைக் கொல்ல முடியாமல் இருந்தான். சுடலைமாடனின் கொடை நடக்கும் அன்று, அவன் சாமியாடியாக வேடம் தரித்து சுடலையில் அமர்கிறான். மேளமும் தாளமும் பறை இசையுமாக சூழலே துடியாகி நிற்கிறது. அந்தக் காட்சியை நுட்பமாகவும் விரித்தும் ரகுநாதன் விவரிக்கும் பக்கங்கள் தமிழ் இலக்கியத்தின் உக்கிரமான பக்கங்களாக நம்மை நடுங்கச்செய்கின்றன. அதிலும் சுடலைக்குச் சென்று எரியும் பிணத்தின் வயிற்றுக்குள்ளிருந்து குடலை உருவி கட்டாரித்தேவன் வாயில் கவ்விக்கொண்டு திரும்ப ஓடிவரும் காட்சியை ரகுநாதன் விவரிப்பதை வாசிக்கும்போது நமக்கு ஈரக்குலை உண்மையிலேயே பதறும். எழுத்துக்கு இத்தனை ஆற்றல் உண்டா என வியக்கவைக்கும் பக்கங்கள் அவை.

கட்டாரித்தேவனின் கையாளாக வரும் வில்லுப்பாட்டுக் கலைஞன் வீராசாமிக்குக் கட்டாரியின் நோக்கும் போக்கும் எல்லாம் தெரியும். சுடலைக்குப் படையலாக வைக்கப்பட்ட சாராயத்தை கட்டாரி ஒரே மூச்சில் குடித்துவிட்டு அருள் வந்து இறங்குவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் இசக்கி வருகிறாள். அதைக் கட்டாரித்தேவன் பார்க்கிறான். அருள் வந்து இறங்கும் முன் அவள் வந்து அவனுக்குள் இறங்கிவிடுகிறாள்.

“தூரத்தில் இசக்கி பச்சைநிறக் கண்டாங்கிச் சேலையைச் சரிபண்ணியவாறே சிரித்துக்கொண்டு நின்றாள். இசக்கியின் வனப்பு கட்டாரியின் கண்களை ஈர்த்தன. கட்டாரிக்குத் தலைக்கிறக்கம் அதிகமாயிற்று. சுடலையையும் இசக்கியையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென ஒரே ஆகாகாரம் செய்துகொண்டே துள்ளி எழுந்தான் கட்டாரி. அவன் உடல் கிடு கிடென ஆடியது.”

இப்படித் தொடங்கும் அந்தக் காட்சிவிவரிப்பு ஆகாகாரமாக நம் மனங்களில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறது. சுடலையிலிருந்து திரும்பி வந்து வாயில் கவ்விய குடலுடன் அவன் ஆடுவது கண்டு ஊரே வாய் பொத்தி நடுங்கி கைகூப்பி நிற்கிறது. ஆனால், இசக்கி மட்டும் கும்பிடாமல் கையால் நாடியைத் தாங்கியவாறே அவனை வியப்புடன் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

வில்லுப்பாட்டுக் கலைஞன் சுடலைமாட சாமிக்கும் இசக்கிக்கும் உள்ள உறவைப் பாடுவதுபோல கட்டாரித்தேவனுக்கும் இந்த இசக்கிக்கும் உள்ள உறவை தன் சொந்தப்பாடலாகக் கட்டிப் பாடுகிறான்.

`ஏந்து நல்ல ஸ்தனமிரண்டாம்… இசக்கி.
இந்திராணி மார்பழகாம்… இசக்கி
பின்னழகைக் கண்டவர்கள்
பிரமித்து நின்றிடுவார்… இசக்கி
முன்னழகைக் கண்டாலோ
மோகிப்பார் ஆயிரம் பேர்… இசக்கி
இசக்கி… இசக்கி என்று உடுக்கடித்து கட்டாரித்தேவனின் ஆட்டத்துக்கு முறுக்கேற்றும் காட்சியும் இந்தக் கதையின் எழுச்சிகரமான பக்கங்களாகும்.

நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாட்டுமுறையோடும் அவர்களின் கலையோடும் பின்னிப்பிணைந்து மிளிரும் கதை இது என்றால், `சுருதிபேதம்’ என்னும் கதை கர்னாடக சங்கீதத்தைப் பின்னணி இசையாகக்கொண்டு நம்மை மயக்குகிறது. நாகஸ்வரக் கலைஞரான நாகமுத்து, தான் மையல்கொண்ட பெண்ணான செல்வத்தின் பாட்டுக்கு நாகஸ்வரம் வாசிக்கும்போது தாள லயத்தை மாற்றி குறும்பு செய்கிறான். போகப்போக ரசிகர்கள் அவள் பாட்டுக்கு இவன் எப்படி வாசிக்கிறான் எனப் பார்ப்பதற்கு மாறாக, இவன் வாசிப்புக்கு அவள் எப்படிப் பாடுகிறாள் என்று பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவள் பாடலை நிறுத்தி சபையிலேயே விக்கி விக்கி அழுதுவிடுகிறாள்.

தாசி வடிவாம்பாளின் மகளான அந்தச் செல்வத்தைத் தேடி குற்ற மனதுடனும் அவளைச் சென்றடையும் நோக்குடனும் நாகமுத்து செல்கிறான். கதையின் அடுத்த திருப்பத்தில் செல்வம் நாகமுத்துவின் காதல் மனைவி ஆகிறாள். அடுத்த காட்சியில் வடிவாம்பாள் சாகக் கிடக்கிறாள். அப்போது நாகமுத்துவை அழைத்து “உன் தகப்பன் வேல்சாமி நாதசுரக்காரருக்கும் எனக்கும் பிறந்தவள்தான் செல்வம். உன் அப்பா என்னை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டார். அதற்கு வஞ்சம் தீர்க்கவே உண்மையைச் சொல்லாமல் செல்வத்தை உனக்குக் கட்டிக்கொடுத்தேன். அவள் உன் தங்கை” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடுகிறாள். தங்கையுடனா இத்தனை நாள் சல்லாபித்திருந்தேன் என்ற குற்ற உணர்வில் குமைந்துபோகிறான் நாகமுத்து. பாட்டில் சுருதிபேதம் செய்த குற்றத்துக்கு என் வாழ்க்கையையே சுருதிபேதம் செய்துவிட்டாளே எனக் கலங்குகிறான். அப்புறம் எந்தப் பெண்ணுடனும் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள முடியாத உளவில் சிக்கலுக்கு அவன் ஆளாகிவிடுகிறான்.

கு.ப.ரா-வின் `ஆற்றாமை’ கதையில் சொன்ன அதே விஷயம் ரகுநாதனின் இந்தக் கதையில் இன்னும் அழுத்தமாகவும் தலைமுறைக் கோபமாகவும் பளிச்சென வெளிப்படுவதைக் காண வியப்பாக இருக்கிறது. இதைப்போல `கிரஹணம்’ என்ற கதையும் ஆண்-பெண் உறவுக்குள் ஏற்படும் ஊடல், கூடல் பற்றிய கதைதான்.

ரகுநாதனின் கதைகளை வாசிக்க வாசிக்க, இவர் புதுமைப்பித்தன், கு.ப.ரா இருவரையும் கலந்து வடித்த கலைஞரோ என்ற மயக்கம் நமக்கு ஏற்படுகிறது. ஆனால், சோகம் என்னவெனில் அவர் தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் நிறுத்திக்கொண்டார். 1957-க்குப் பிறகு அவர் சிறுகதைகள் எழுதவில்லை. ஆய்வுகளின் மீது கவனம் செலுத்தி அந்தத் துறையில் சாதனைகள் படைத்தார்.

அவரது `பாரதி:காலமும் கருத்தும்’ நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. இளங்கோவடிகள் யார் என்னும் ஆய்வு நூல், அதுகாறும் சேரன் செங்குட்டுவனின் தம்பிதான் இளங்கோவடிகள் என திராவிட இயக்கத்தார் கட்டியெழுப்பியிருந்த கற்பிதங்களை உடைத்து நொறுக்கி `இளங்கோ, மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவரே அல்ல. அவர் ஒரு தனவணிகச் செட்டியார்’ என்ற ஆதாரங்களுடன் நிறுவினார். அதனாலோ என்னவோ அந்த நூல் புறக்கணிக்கப்பட்டது. அத்தனை வலுவான நூலைக் கண்டுகொள்ளாமல், தன் சாவு சாக தமிழறிஞர்கள் அனுமதித்தார்கள். பெரும் கொடுமை அது.

புதுமைப்பித்தன் வரலாறு என்னும் நூல் அவரது படைப்புகளில் மகத்தான ஒன்றாக மதிக்கப்படுகிறது. அவர் இளவயதில் வெளியிட்ட `இலக்கிய விமர்சனம்’ என்னும் நூல் தமிழின் முன்னோடியான நூல் என எதிர் அணியைச் சேர்ந்த க.நா.சு உள்ளிட்ட பலராலும் மதிக்கப்படும் நூல்.

தன் இறுதிக்காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்தார். காலம் முழுவதும் யாரும் கிட்ட அண்ட முடியாத ஞானச்செருக்குடன் வாழ்ந்த அவர், பிற்காலத்தில் எளிதில் அணுக முடிபவராக மாறினார். அந்தக் காலத்தில் நானும் அவரை பாளையங்கோட்டை வீட்டில் சந்தித்து உரையாடும் சில வாய்ப்புகளைப் பெற்றேன். வாழ்நாள் முழுவதும் தன் புத்தகங்களோடும் எழுத்தோடுமே வாழ்ந்தார். மனைவி மக்களோடு (பெற்ற தாயுடனும்தான்) அவர் செலவழித்த நேரம் மிகக் குறைவு. எவரையும் சார்ந்திருக்காமல் தன் சொந்தக்கால்களில் நின்று சாதித்த அந்தக் கம்பீரமான ஆளுமை, 2001 டிசம்பர் 31 அன்று காலமானார்.

`வாழ்க்கை என்பது முடிவற்றது. வாழ்க்கையில் `சுபம் முற்றிற்று’ என்று வழிபடும் காலமே கிடையாது. அது முற்றுப்பெறாத விஷயம். அப்படி இருக்கும்போது இளம் எழுத்தாளர்கள் ஏன் வாழ்க்கையின் உன்னதம் அல்லது வீழ்ச்சி இவற்றை பற்றியே எழுத வேண்டும்? சாதாரணமான மன நெகிழ்ச்சியை வைத்துக்கொண்டு மனோதர்மம் என்ற இழை அறுந்துவிடாமல் கதை பின்னலாமே!’

(ரகுநாதனின் இலக்கிய விமர்சனம் நூலிலிருந்து…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *