ஆலமர பேய்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 63,120 
 

நண்பர்களுக்குள் விளையாட்டாய் ஆரம்பித்த பேச்சு சீரியசாகிவிட்டது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்கள், அட விட்டுத்தொலையுங்கப்பா என்றுஅந்த பேச்சை திசை திருப்ப முயற்சித்தாலும் பேச்சு மீண்டும் மீண்டும் அந்த இடத்திலேயே வந்து நின்றது.

இதற்கும் இவர்கள் இளைஞர்கள். வயது இருபதுக்கு மேல் இருபத்தை ஐந்துக்குள் இருக்கலாம். சிலர் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவர்கள், சிலர் படிக்காமல் ஊரை சுற்றி வலம் வந்து கொண்டிருப்பவர்கள்.. பேசிக்கொண்டிருந்த இடம் கிராமங்களுக்கே உரித்தான பெரிய ஆலமரமும், அதை சுற்றி போடப்பட்டிருந்த திண்டும். உச்சி வெயில் தாண்டி சாப்பிட்ட உணவு செரிக்க வெளியில் வந்தவர்கள் இந்த இடம் வசதியாக இருக்க வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அன்று ஏனோ பெரியவர்கள் அந்த இடத்தில் ஒருவர் கூட இல்லை. இருந்தால் இது வயசானவங்க இடம் என்று வேறு பக்கம் போயிருப்பார்கள். இந்த பேச்சும் வந்திருக்காது. உட்கார்ந்து ஏதோ ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தவர்களில் சண்முக சுந்தரம் என்பவன் ஆலமரத்தை அண்ணாந்து பார்த்து ஏண்டா இம்மாம் பெரிய ஆலமரமா இருக்கு !எத்தனை வருசமா இருந்திருக்கும்?

எப்படியும் அறுபது எழுபது வருசம் இருக்கும் பதில் சொன்னான் கணேசன்

அப்ப நம்ம ஊர்ல இரண்டு தலைமுறைய பார்த்திருக்கும், இல்லையா.

இருக்கலாம் அதுக்கு என்ன? உங்க தாத்தாகிட்ட கேட்டு பாரு, அவர் சின்ன் வயசுல இருந்தப்ப இந்த மரம் இருந்துச்சான்னு !.

எங்க தாத்தா சொல்லியிருக்காரு அவங்கப்பா காலத்துல இருந்து இந்த மரம் இருந்திருக்காம்.

அப்ப இருந்து இப்ப வரைக்கும் செத்தவங்க எல்லாம் இந்த மரத்துல வந்து உட்கார்ந்துவாங்க

மரத்துல எதுக்குடா வந்து உட்கார்ந்துக்கணும்?

இல்லைடா எங்கம்மா கூட சொல்லும், இராத்திரி ஆனா ஆலமரம், புளிய மரம் பக்கம் போகக்கூடாதுண்ணு.

அவங்க சும்மாவாச்சும் சொல்லியிருப்பாங்க.

இல்லடா நிசமா, ஆலமரத்துலதான் பேய் எல்லாம் இருக்கும்னு சொல்லியிருக்காங்க.

“பேய்” பற்றிய பேச்சு சுவாரசியமாக இருந்ததால் இவர்களை சுற்றி இருந்த மற்ற இளைஞர்களும் தங்களுக்கு தெரிந்த பேய் கதைகளை அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள், தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று கதைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆரம்பத்திலே இருந்து பேயை பற்றி எதிர்த்து பேசிக்கொண்டிருந்த கணேசனுக்கு இது கெளவர பிரச்சினை ஆகிவிட்டது. டேய் சும்மா கதை விடாதீங்கடா பேயும் இல்லை பிசாசும் இல்லை.

உனக்கு தெரியாதுடா, நான் பேயயை பாத்துருக்கேன்.

அவனை உற்று பார்த்த கணேசன் உண்மையா நீ பார்த்தியா?

இவனின் மிரட்டலான கேள்வியில் சற்று திகைத்து போன அந்த இளைஞன் ஆமாண்டா சின்ன வயசுல பாத்துருக்கேன். அப்ப அது பேயின்னு தெரியலை, எங்கப்பாதான் அது பேயா இருக்கலாமுன்னு சொன்னாரு.

எப்ப பார்த்த?

அந்த இளைஞனுக்கு இப்பொழுது தான் சொன்ன கதையை நம்ப வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

இவனாக ஒரு கற்பனையை தட்டி விட்டு சொல்ல ஆரம்பித்தான் “ஒருக்கா நானும் எங்கப்பாவும் இராத்திரி காவலுக்கு போயிட்டு இருக்கும்போது நம்ம சுடுகாடு தாண்டி இருக்குதுல்ல அந்த ஆலமரத்துல இருந்து வெள்ளையா ஒரு உருவம் சர்ர்ன்னு மரத்து மேல பறந்து போனதை பார்த்தேன். அப்படியே பயந்து எங்கப்பா கிட்ட சொன்ன உடனே அவர் சரி சீக்கிரமா நட அப்படீன்னு என் கையை பிடிச்சுகிட்டு அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பிச்சாரு. அப்புறம் நம்ம மாரியம்மன் கோயில் கிட்ட வந்த பின்னாலதான் சொன்னாரு, டேய் அது பேயாத்தான் இருக்கும், நல்ல வேளை யாரை பார்த்தாலும், ஒரே அடிதான் இரத்தம் கக்கி அந்த இடத்துலயே செத்துடுவாங்க அப்படீன்னு சொன்னாரு.

மற்றவர்கள் அவன் சொன்ன வித்த்திலேயே சிலிர்த்துப்போய் உட்கார்ந்தார்கள் இந்த கதையை கேட்டு

கணேசன் மட்டும் ஏண்டா எல்லாரும் அந்த வழியாத்தான் போக வர இருக்கோம், அதெப்படி உனக்கு மட்டும் பேய் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு.

அந்த இளைஞனுக்கு அனைவரின் முன்னால் இவன் இப்படி சொன்னது மான பிரச்சினை ஆகிவிட்டது.

சரிடா உனக்கு தைரியம் இருந்தால் இன்னைக்கு இராத்திரி அந்த சுடுகாட்டு ஆலமரத்துல போய் ஒரு ஆணி அடிச்சிட்டு வந்திரு பாப்போம்.

சரிடா இன்னைக்கு இராத்திரி நான் அங்க போய் ஆணி அடிச்சிட்டு வந்துட்டன்னா என்ன தருவே.

இந்த பேச்சு சுற்றியுள்ளவர்களுக்கு உற்சாகத்தை தர நான் பத்து “உக்கி” உன் முன்னாடி போடறேன்.

பத்து “உக்கி” பத்தாது, ஐம்பதாவது போடணும், பேய் இல்லை பேய் இல்லைன்னு இவங்க முன்னாடி சொல்லிட்டு போடணும் சரியா?

அந்த இளைஞனுக்கு முகம் வேர்த்து விட்டது, இருந்தாலும் சரிடா நான் ஒத்துக்கறேன். நீங்க எல்லாம் சாட்சி. இன்னைக்கு இராத்திரி அதுவும் பன்னெண்டு மணிக்கு சரியா அந்த மரத்துல ஆணி அடிச்சிட்டு வரணும்.

சரி ஒத்துக்கொண்டான் கணேசன்.

பந்தயம் கட்டிய கணேசனும் சரி, பந்தயம் போட்ட அந்த இளைஞனும் சரி வீட்டில் பயந்து போய் இருந்தார்கள். ஏதாவது விபரீதமாகி விட்டால் !

பேசாமல் வேணாண்டா என்று சொல்லிவிடலாம என்ற் நினைத்தான் அந்த இளைஞன்.

கணேசனும் பேசாமல் முடியாது அப்படீன்னு சொல்லிடலாமா?நினைத்தான்

இருவருமே யோசித்து யோசித்து முடிவெடுப்பதற்குள் மாலை முடிந்து இருள் வந்து விட்டது.

கணேசனின் அம்மா கூட கேட்டாள் என்னடா சரியா சாபிடாம எந்திரிச்சிட்ட?

இவனுக்கு இராத்திபன்னெண்டுமணிக்குசுடுகாட்டுலஆணிஅடிச்சுட்டுவர்றவேலைஎல்லாம்செய்ய முடியுமா? இந்த பயமே இரவு உணவை சாப்பிட முடியாமல் எழ வைத்து விட்டது.

அந்த இளைஞன் வீட்டிலும் அதே நிலைதான், பேசாம அவன்கிட்டபோய்போக வேண்டாமுன்னு சொல்லிடலாமா?

இரவு மணி பதினொன்றுக்கு மேல் கணேசனது நெஞ்சு பட படவென அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது. பேசாமல் படுத்து விடலாமா, கேட்டா தூங்கிட்டேன்னு சொல்லிடலாமாயோசித்தான்.அம்மா, அப்பா எல்லோரும் தூங்கி விட்டார்கள். இவன் மட்டும் வரும் தூக்கத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, புரண்டு புரண்டு படுத்தான்.

ஏதோ குருட்டு தைரியம், சட்டென எழுந்தான், தனியாக எடுத்து வைத்திருந்த ஆணியை எடுத்துக்கொண்டான், அதை அடிப்பதற்கு ஒரு கல்லையும் வைத்திருந்தான், அதையும் கையில் எடுத்துக்கொண்டான். எதற்கும் ஒரு துண்டை எடுத்து கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டான். கதவை நோக்கி அடி மேல் அடி எடுத்து நடந்தான், வீட்டில் யாரும் விழித்துக்கொள்ளக்கூடாதே !

கரேல் என்ற இருட்டு அவனது தைரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க செய்தது. நெஞ்சு கூட்டுக்குள் இருதயம் அடித்துக்கொள்வது நன்கு கேட்டது.

ர்..ர்…ர்..வண்டுகளின் ரீங்காரம், அவனது வீட்டிலிருந்து அந்த தெருவரை இருந்த தைரியம் சுடுகாட்டு பாதைக்கு திரும்பியதும் சுத்தமாக போய் விட்டது. வேண்டாம் வீட்டுக்கு போய் விடலாம், முடிவு செய்து திரும்பலாம் என்றால் மறுபடி அந்த தெருவுக்குள் நடந்து வீட்டை அடைவதற்கும் பயமாக இருந்தது.

அந்த பக்கமும் போகாமல் இந்த பக்கமும் போகாமல் நின்று கொண்டிருந்தான். படபடக்கும் மனசு கொஞ்சம் நிதானமானபின், மெல்ல சுடுகாட்டு பக்கம் நடக்க தொடங்கினான்.

இப்பொழுது நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது. பேயை பார்த்தால்தான் நாய் ஊளையிடும் என்று பேசிக்கொண்டிருந்தார்களே, அப்படியானால் பேய் வந்து விட்டதா? நாக்கு உலர்ந்து விட்டது. தண்ணீர் தாகம் தொண்டையை வாட்டியது.

சரக்..சரக்.நடக்கும்போது யாரோ இவனை பார்ப்பது போல தோன்றியது, திரும்பி பார்க்கவும் பயம், கால்கள் கூட நடுங்க ஆரம்பித்து விட்டது. மெல்ல மெல்ல எட்டு வைத்து நடந்தது கூட தொலைதூரம் நடப்பதாக பட்டது.

கடவுளே சீக்கிரம் அந்த ஆல மரம் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். தினமும் அந்த வழியாக நடந்து செல்லும் பாதைதான், ஆனால் இப்பொழுது ஒரு அடி எடுத்து வைக்க மனசு இந்த துடிப்பு துடிக்கிறது.

எப்படியோ அந்த ஆலமரம் அருகில் சென்று விட்டான். அந்த மரத்தின் பிரமாண்டம் இப்பொழுது இவனை பயமுறுத்தியது. ஆலமரம் அகன்று விரிந்து நிறைய விழுதுகளோடு

இருந்தது.

ஒவ்வொரு விழுதாய் தாண்டி மரத்தின் அருகில் போய் விட்டான்.மரத்தையும் தொட்டு விட்டான். வலதுகையில்கல்இருந்த்தால்இடதுகையை பாக்கெட்டுக்குள் விட்டு ஆணியை எடுப்பதற்கு முடியாமல் நடுங்கிக்கொண்டிருந்தது. வலது கையில் வைத்திருந்த கல் கையை விட்டு நழுவி தொம் என்று விழுந்தது. அந்த சத்தம் அப்படியே அவனது இருதயத்தை நிறுத்துவது போல் இருந்தது.

உடல் முழுவதும் வேர்வை ஆறாக வழிந்தது. எப்படியோ ஆணியை எடுத்து விட்டான்.

மெல்ல குனிந்து அந்த இருளில் துழாவி ஒரு கல்லை எடுத்து விட்டான். அது இவன் போட்ட கல்லா தெரியவில்லை, ஏதொவொன்று. அப்படியே தடவி ஆணியை மரத்தில் வைத்து இறுக்கி பிடித்துக்கொண்டான். கை நடுக்கத்தில் ஆணி விழுந்து விட்டால், எடுக்க முடியாது.

ஆணி மேல் “டப்” என்று அடித்தான். சத்தம் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.

ஆனால் ஆணி பதியவில்லை. மீண்டும், அடிக்க ஆரம்பித்தான். ஆணி இப்பொழுது, கல்லடிக்கு மரத்தில் பதிய ஆரம்பித்தது

ஆணி இப்பொழுது மரத்தில் வேகமாக இறங்க ஆரம்பித்தது. ஒரு வழியாய் அடிப்பதை நிறுத்தியவன், கல்லை அங்கேயே மெதுவாய் கீழே போட்டான்.

அப்பாடி வந்த வேலை முடிந்து விட்டது. பந்தயம் கட்டியபடி மரத்தில் ஆணி அடித்து விட்டோம். மனதில் அந்த பயத்தையும் மீறி ஏற்பட்ட திருப்தியில் திரும்ப எத்தனித்தான்.

ஆனால் திரும்ப முடியவில்லை. அப்படியே ஏதோ ஒன்று அவன் கழுத்தை இறுக்கி சுற்ற ஆரம்பித்தது.

ஐயோ பேய் என்று கத்த நினைத்து அது கூட முடியாமல் அப்படியே மயங்கி கீழே சாய்ந்தான். அப்படியே தொட்டில் போல அவன் உடம்பு தொங்கி “டம் என்று கீழே விழுந்த்து.

மறு நாள் விடியற்காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர்கள் ஆலமரத்தடியில் யாரோ கிடப்பதை பார்த்து அங்கு சென்றால் அந்த ஊர் கிட்டய்யா மகன்

“கணேசன்” அடையாளம் கண்டு அவசரமாய் மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.

நான்கைந்து நாட்கள் ஓடியிருந்தன. கணேசன் இப்பொழுது அந்த ஊரில் ஹீரோ ஆகி விட்டான். இராத்திரி பன்னெண்டு மணீக்கு ஆலமரத்துல போய் ஆணி அடிச்சு வந்தவன்”

எல்லோரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் அவன் மனசுக்கு மட்டும் ஆணி அடித்த பின் அவன் கழுத்தை சுற்றி இறுக்கி தன்னை மயக்கமுற வைத்தது பேய்தானோ என்ற சந்தேகம் மட்டும் இருந்த்து.

அவனுக்கு தெரியுமா ? கழுத்தை சுற்றி போட்டிருந்த துண்டையும் சேர்த்து ஆணி அடித்த்தால் இவன் திரும்பியதும், அந்த துண்டு இவன் கழுத்தை இறுக்கி விட்டது. பேய்தான் கழுத்தை இறுக்க ஆரம்பித்துவிட்டது என்ற பயத்தில் அப்படியே மயங்கி விட்டான், நல்ல வேளை, இவன் பாரம் தாங்காமல் அந்த துண்டு கிழிந்து கீழே விழுந்ததால், கழுத்தை இறுக்காமல் தப்பித்துக்கொண்டான்.

Print Friendly, PDF & Email

1 thought on “ஆலமர பேய்

  1. பேய்க் கதை:
    நாம் இரவு நேரங்களில் தனியாகச் செல்லும் போது
    1)திருடன் பற்றிய பயம்.
    2)வெளிச்சம் இல்லாததால் இருட்டு பயம்.
    3)எதிரிகள் பற்றிய பயம்.
    4)விஷப்பூச்சிகள் பயம்.
    இவைகளுக்கு மேலாக பேய் என்ற பயம்.
    பேய்:பிசாசு,சைத்தான் ,கெட்ட ஆவி இவைகளைப் பேய் என்கிறோம்.ஒரு சில நேரங்களில் நமது எண்ணங்களின் பிரபலிப்பு பேயாக தோன்றிவிடும். மாறிவிடும். புராணங்களில்,குர்ஆன்- ல் கிறிஸ்துவ வேதத்தில் பேய்களைப் பற்றி படித்திருக்கின்றேன். கிறிஸ்துவ வேதத்தில் பேயானது இறைவனை சோதிக்கின்றதே!
    இயேவின் புதுமைகளில் பிசாசுகள் பன்றிகளின் மீது சென்று கடலில் விழுந்து மாய்கின்றன.மசூதிகளில் இன்றும் பார்வை பார்க்கின்றனர்.இந்துக்கள் என்றால் சொல்லவும் வேண்டுமோ! பேய்கள் இலகுவாக மனிதர்களைப்
    பிடிக்கின்றனவாக இருக்கின்றன.
    நிறைவேறாத ஆசை உள்ளவர்கள்.இறந்தால் தங்கள் ஆயுட்காலம் வரை பேயாக அழைவார்கள் என்பது ஐதீகம்.இதற்காக நல்ல சுலோகங்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.மனித வாழ்வில் பிசாக்களின் சோதனைகளை வெல்ல வேண்டும். ஆனாலும் இரவு நேரங்களில் தன் பயம் அனைவருக்கும் வரும்.அந்த மாதிரி நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அனைத்தும் இறைவன் உண்டாக்கினதே.
    ஆனாலும் மனிதன் கூட தவம் இருந்து வரம் பெற்று இறைவனோடு மோதுகின்றார்களே.அப்படி இருக்க பிசாசுகள் பற்றி சொல்ல வேண்டுமோ!.
    எங்கள் ஊருக்கு W.Pudupatty -க்கும் மெயின் இடையில் ஒரு காலத்தில் ஒற்றைப் பனைமரம்
    இருந்தது.அதில் இசக்கி இருந்ததாகச் சொல்வார்கள்.இதைக் காரணம் காட்டி மரங்களை கடத்தினார்கள்.நிறையப்பேர் இறந்திருக்கிறார்கள்.கடைசி பஸ்ஸை தவறவிட்டவர்கள் பெரும்பாலும் சோதனைக்கு ஆளாவார்கள்.அந்த மரம் அருகே வரும் போது தானாக பயம் வந்து விடும்.நான் நிறைய வாட்டி தனியாகச்சென்று இருக்கின்றேன்.இன்று நினைத்தாலும் உடல் புல்லரிக்கும்.இது போல் பணி நடக்கும் இடங்கள் அங்கிருந்து தங்கிருக்கும் இடங்கள் இரவு நேரம் என்றாலே ஒரு பயம்தான்.
    இப்போது தான் Bikes (two wheelers,Four wheelers வந்துருச்சே.ஆனாலும் சரியாக Drive பண்ணவில்லை என்றால் ரோட்டில் ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிடப்பார்கள்.ஆகவே இரவு நேரங்களில்பயணிப்பது
    தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
    இன்று பேய் என்பதற்கு பயப்படவேண்டி வராது.ஆனால் மனிதர்களின் ஆசைகளுக்கு பயப்படனும்.நான் நிறையப் பேய்களைப்பார்த்திருக்கிறேன்.
    அவைகளை வெல்வதற்கு இறைவன் கருணை நமக்கு வேண்டும்.நமது எண்ணங்களில் மாறுபாடு நல்லஎண்ணங்களைத் தவிர மற்ற எண்ணங்கள் வந்தால் பேய் நம்மோடு இருக்கின்றது என்று அர்த்தம்.ஆகவே தான் இரவு நேரங்களில் அனைவரும்கூட்டாக இருப்பார்கள். சாதியப்பேய் உண்டு ,சமூகப்பேய் உண்டு,பதவிப்பேய் உண்டு,இப்படி நிறையப்பேய்
    இருக்கின்றன.”நான்படித்த ஆலமரத்துப் பேய் கதை நன்று”
    S.Xavierraj.BE
    9994752581
    635703139890

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *