வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 15, 2021
பார்வையிட்டோர்: 10,843 
 

அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

“தேரை நகர்த்த ஆரம்பிக்கலாமா?” ‘என்று பொதுவாகக் கேட்டார் கோபாலகிருஷ்ணன், விழாவேந்தனும் தேர்த் தொண்டர் ‘ களும்பச்சைக் கொடி காட்ட அங்கங்கே தயாராக நின்றார்கள்.

சக்ரவர்த்தியும் அவர் மனைவியும் மற்ற அரண் மனை வாசி களும் தேர் நகரப் போ வதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நீங்களும் வடம் பிடித்து இழுக்கலாம்” என்று சக்ரவர்த்தியை அழைத்தார் கோபாலகிருஷ்ணன்.

முதலில் கலைஞர் வடத்தைப் பிடித்து விழாவைத் தொடங்கி வைக்க, அவரோடு சக்ரவர்த்தியும் மற்ற நாட்டுத் தலைவர்களும் சேர்ந்து இழுத்தார்கள்.

அதிர்வேட்டுகளும், தாரை தப்பட்டைகளும் எக்காள மிட்டன. பெரிய பெரிய பலூன்கள் ஆகாசத்தில் பறந்தன!.

ஜப்பானியரும் தமிழ்நாட்டவரும் சேர்ந்து வடத்தை இழுத்தபோது பின்னாலிருந்து சிலர் உலுக்கு மரம் போட்டுத் தேரை நகர்த்த உதவி செய்தார்கள்.

அந்த அபூர்வக் காட்சி, இரண்டு நாட்டுக் கலாசாரங்களும் இணைந்து உறவுக்குக் கைகொடுப்பதுபோல் இருந்தது!

தமிழ்நாட்டு கமர்கட், கலர் மிட்டாய், அரிசிப் பொறி, பட்டாணிக் கடலை இவ்வளவும் தேரோடும் வீதி ஓரங்களில் கடை பரப்பப்பட்டிருந்தன.

மிக்கிமாட்டோ, மட்ஸுயா, மட்ஸுஜகாயா, மிட்ஸுகோஷி, நேஷனல், ஸீக்கோ, ஸண்ட்டோரி, ஸோனி ஸான்யோ, காஸியோ, போன்ற ஜப்பானின் புகழ் பெற்ற நிறுவனத்தினர் தங்கள் தங்கள் பெயர்களில் அங்கங்கே ‘தண்ணீர்ப் பந்தல் தர்மம்’ செய்து கொண்டிருந்தரர்கள்!

தேருக்கு முன்னால் நாதஸ்வரம், பாண்டு வாத்தியம் ஓதுவார்கள் இசையுடன், பொய்க்கால் குதிரை, புலிவேடம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஜன வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்தன.

மாடிகளிலிருந்து பைனாகுலர் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பார்வையாளர்கள் சிலர் தேர் வருவதைக் கண்டுவிட்டு ‘There There’ என்று உற்சாகக் குரல் எழுப்பினர்.

அவர்கள் ‘There There’ என்று ஆங்கிலத்தில் சொன்னது, ‘தேர் தேர்’ என்று தமிழில் சொல்வது போலிருந்தது!.

அப்படி இப்படி என்று தேரைத் தெருமுனைக்குக் கொண்டு போய்ச் சேர்க்க ஏறத்தாழ மணி இரண்டாகிவிட்டது. ஒரு மணி நேரம் லஞ்ச் ‘ப்ரேக்’ விட்டதும் தேரைத் திருப்பி அடுத்த வீதிக்குக் கொண்டுபோய் ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

“தேரோட்டத்தின் முக்கிய கட்டமே இனிமேல்தான்” என்றார் விழாவேந்தன், நூறு இருநூறு பேர் சேர்ந்து தேர் வடங்களைத் தூக்கிச் சென்று அடுத்த தெருவில் கொண்டு போய்ப் போட்டதும், சிலர் சக்கரங்களுக்குக் கீழே வலிமை மிக்க ஸ்டீல் தகடுகளை வைத்து அவற்றின் மீது விளக்கெண்ணெய் டின்களை உடைத்து ஊற்றினார்கள், வழவழப்பான அந்தத் தகடுகளின் மீது தேர்ச் சக்கரங்கள் வழுக்கிக்கொண்டு திரும்பப் போகும் அபூர்வக் காட்சியைக் காணப் பல்லாயிரக்கணக்கான பேர் அந்த முச்சந்திக் கட்டடங்கள் மீதும் மொட்டைமாடிகளின் மீதும் கூடியிருந்தனர். சக்ரவர்த்தியும் அவர், குடும்பத்தாரும் அரண்மனைக்குள்ளேயே உயரமாய்க் கட்டப்பட்டிருந்த கண்ணாடி மாளிகையில் நின்ற வண்ணம் தேர் திரும்பப் போகும் வேடிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

விழா வேந்தனும் புள்ளி சுப்புடுவும் இங்குமங்கும் ஓடி ஆடி, “ம், தள்ளுங்க! முட்டுக்கட்டை போடுங்க! ஆச்சா, போச்சா!” என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தொம்பைகள் காற்றிலே ஊசலாட, தேர் ஜாம் ஜாம் என்று கம்பீரமாய் அடுத்த வீதியில் திரும்பியபோது, உயரத்தில் பறந்து வந்த ஹெலிகாப்டர் விமானம் தேரின் தலைக்கு மேலே வட்டமடித்துப் பறந்து மலர் மாரி பொழிந்தது!

“காஞ்சிபுரத்தில் கருடசேவையன்று தேர் ஊர்வலத்தின் போது கருடன் இப்படித்தான் ஆகாசத்தில் பறந்து வட்டமடிப்பது வழக்கம்” என்றார் புள்ளி சுப்புடு.

கலர் மிட்டாய், கொட்டாங்கச்சி வாத்தியம், அதிர் வேட்டுப்புகை, ஜப்பானியச் சிறுவர்கள் கையில் மிட்டாய்ரிஸ்ட் வாச் கட்டிக்கொள்வது போன்ற வேடிக்கைகளை டெலிவிஷனில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர், விழாவுக்கு வரமுடியாத ஜப்பானிய மக்கள்!

***

மறுநாள் மாலைதான் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. இரவு விருந்துக்குப் பின்னர் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த தேர்க் குழுவினர் அத்தனை பேருக்கும் சக்ரவர்த்தி தம்பதியர் பரிசுகள் வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.

வடம் பிடித்து இழுத்தவர்கள் எல்லோரையும் சக்ரவர்த்தி மேடைக்கு அழைத்து ஒவ்வொருவரையும் கைகுலுக்கி “நீங்கள் உதவி செய்யவில்லையென்றால் தேர் நகர்ந்திருக்காது. உங்களுக்கு நன்றி கூறுவதுடன் உங்களுடைய கையில் இந்த லீக்கோ ரிஸ்ட் வாச்சை என் அன்பளிப்பாகக் கட்டி மகிழ்கிறேன்” என்று கூறி ஒவ்வொருவர் கையிலும் வாச்சைக் கட்டிவிட்டார்!

அடுத்தாற்போல் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனை அழைத்து ‘உலகத்தின் உயர்ந்த பண்பாளர்’ என்ற எழுத்துக்கள் பொறித்த தங்கப்பதக்கம் ஒன்றை அவர் கழுத்தில் அணிவித்தார். அத்துடன் நிஸ்ஸான் (க்ளோரியா) கார் ஒன்றும் அவருக்குப் பரிசாக அளித்தார்.

“ஓடி ஆடி வேலை செய்து விழாவை வெற்றிகரமாக்கிய விழாவேந்தனுக்கு சக்ரவர்த்தி என்ன பரிசு தரப் போகிறாரோ?” என்று சிலர் அந்தக் கூட்டத்தில் பேசிக்கொண்டனர்.

அவர் எங்கே ஆடினார்? ஓடமட்டும்தனே செய்தார்! பத்மா சுப்ரமணியம், சுதாராணி ரகுபதி இவங்கதானே ஆடினாங்க!” என்றார் மனோரமா.

விழாவேந்தனுக்கு டோயோடா (கிரௌன்) கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துக் கைகுலுக்கினார் சக்ரவர்த்தி.

TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0108-pic

தயாளு அம்மாள், எம். எஸ். சுப்புலட்சுமி, ராஜாத்தி. அம்மாள், மனோரமா, மணிகிருஷ்ணசாமி, பத்மாசுப்ரமணியம், சுதாராணி ரகுபதி ஆகிய ஏழு வி.ஐ.பிக்களுக்கும் மகாராணி ஏழு வைர நெக்லஸும் முத்துமாலைகளும் அணிவித்து கௌரவித்தார். மனோரமாவுக்கு மட்டும் மதிப்புமிக்க கிமோனோ உடை ஒன்றும் சிறப்புப் பரிசாகக் கொடுத்தார்.

நாமகிரிப்பேடடை கிருஷ்ணனுக்கு ஒரு மிட்ஸுபுஷி வேனும், தங்கச் சங்கிலியும், தவில்காரர்களுக்கு வைர மோதிரங்களும் கணபதி ஸ்தபதி, நன்னன் இருவருக்கும் வி.ஸி.ஆருடன் கூடிய இரண்டு டி.வி. செட்டுகளுடன் வைர மோதிரங்களும் பரிசாகக் கொடுத்து நன்றி தெரிவித்தார்.

புள்ளி சுப்புடுவுக்கு லேட்டஸ்ட் மாடல் காஸியோ கால்குலேட்டருடன் நிக்கான் காமிராவும் கொடுத்து வாழ்த்தினார். தமிழ்நாட்டிலிருந்து வந்து விழாவுக்காக அரும்பாடுபட்ட அத்தனை தமிழர்களுக்கும் ஆளுக்கொரு ஸோனி டூ-இன்-ஒன்!

கடைசியாக, நல்லி குப்புசாமி ஜப்பான் சக்ரவர்த்திக்கும் மகாராணிக்கும் பொன்னாடை போர்த்தி தமிழ்நாட்டின் சார்பில் நன்றி கூறினார். சக்ரவர்த்தி அவருக்கு நவரத்னக் கற்கள் பதித்த மோதிரம் ஒன்றை வழங்கி பதில் மரியாதை செய்தார்.

அதே மேடையில் இருபத்து நாலு காரட்டில் இரண்டடி உயரத்தில் செய்யப்பட்ட தங்கத்தேர், ஒன்றைக் கலைஞருக்குப் பரிசாகத் தந்த சக்ரவர்த்தி கலைஞரைக் கட்டித் தழுவிக்கொண்ட காட்சி மறக்கமுடியாதது.

ஊருக்குப் புறப்படுமுன் எல்லோரும் அரண்மனையைப் பின்னணியாக வைத்து சக்ரவர்த்தி குடும்பத்தாருடன் ஒரு க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

“மட்டா டோஸா! திரும்பி வாருங்கள்” என்று உளம் கனிந்து கைகூப்பி வழி அனுப்பி வைத்தனர் மகாராஜாவும் மகாராணியும்.

கண்களில் நீர் தளும்ப சக்ரவர்த்தியையும் மகாராணியையும் பிரிய மனமின்றி “ஸயோனாரா! போய் வருகிறோம்” என்று சொல்லிப் புறப்பட்டனர் தேரோட்டக் குழுவினர்.

– முற்றும்

முதற் பதிப்பு – ஜனவரி 1991, அசோக் உமா பப்ளிகேஷன்ஸ், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *