நடுக் கதையில் அப்புசாமி!

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 28, 2012
பார்வையிட்டோர்: 20,999 
 

துபாயிலிருந்து வந்த சித்தப்பா பெண் ஒரு பெரிய பொட்டலம் நிறைய பிஸ்தா வாங்கி வந்துவிட்டாள்.
வறுத்த பிஸ்தா மேல் ஓட்டுடன் அழகாக வாயைப் பிளந்து கொண்டு சற்றே அங்குமிங்கும் சில பல உப்புக் கரிப்புடன் பிரமாதமாக இருந்தது.

பிஸ்தாவில் அதன் உள்ளிருக்கும் பருப்பைவிட அதனுடைய ஓடு மிக அழகு. சின்னச் சின்னக் கிளிஞ்சல் மாதிரி அதைச் சேகரித்து வைக்கக்கூடத் தோன்றும்.

வேர்க்கடலைத் தோலை உரித்து குப்பையில் கடாசுவதுபோல பிஸ்தா ஓடுகளை நாங்கள் நினைத்தாலும் குப்பையில் போட முடியாது. காரணம், வீணா மாமா இரண்டொரு தினத்தில் வருவதாக இருந்தார்.

பிரிஜ்ஜிலிருந்து எடுத்து எப்படியும் அவருக்கு ஒரு ஆறேழு பிஸ்தாவை அழகாகத் தட்டில் வைத்துத் தராமல் இருக்க முடியாது.

அதைப் பார்த்ததும் அவர் கேட்கிற முதல் கேள்வி, ‘மேல் ஓடுகளையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கீங்களா’ என்பதாகத்தானிருக்கும்.

பத்திரமாகத் தூக்கிப் போட்டுட்டோம் என்றால் எங்களோடு பேசமாட்டார். புறப்பட்டுப் போனாலும் போய்விடுவார்.

பிஸ்தா மேல் ஓடுகளை வைத்து அழகான முத்து மாலை கட்டி விடுவார். அவர் தோளிலே தொங்கும் ஜோல்னாப் பையில் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கிஸ்கெட் இருக்காது. சிறு சிறு அட்டைகள், ஜிகினாக் காகிதம், ·பெவி ஸ்டிக், ·பெவிகால், கோந்து தினுசு, அனபாண்ட், சிறிய பெரிய கத்தி, கத்திரிக் கோல், கிளிப், எமரி பேப்பர். இப்படி ஒரு தினுசான கூட்டணிதான் இருக்கும்.

”எதையும் வீணடிக்கக்கூடாதுடா பயல்களா?” என்பார். எப்போது பார்த்தாலும் ‘வீணாக்கக்கூடாதுடா’ என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த அவரது பெயரே வீணா மாமா ஆகிவிட்டது. சின்ன வயசில், எங்களுக்கு பள்ளிப் பரீட்சை முடிந்ததும் கோணி ஊசியும் கார்டு போர்டு அட்டையும், வண்ண வண்ணப் பேப்பரும் மைதா மாவுப் பசையுமாய் டாணென்று ஆஜராகிவிடுவார்.

எங்கள் அடுத்த வருடப் புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் அட்டை போட்டுத் தருவது ஒரு ஆனந்தம் என்றால், கடந்த வருஷத்து நோட்டுப் புத்தகங்களில் எழுதப்படாத வெற்றுத்தாள்களை ஒன்று விடாமல் கிழித்து ரூல் போட்டது தனி, கணக்கு மார்ஜின் போட்டது தனி, வெற்றுப் பேப்பர் தனி என்று ரகவாரியாக பிரித்து கோணி ஊசியால் தைத்து ஓரங்களையெல்லாம் ஸ்கேல் வைத்து பிளேடால் துல்லியமாகக் கிழித்து கார்டு போர்டு அட்டையை அளவாக வெட்டி காலிகோ போட்டு ஒட்டி சகலவித உபசாரங்கள் செய்து புத்தம்புது நோட்டாக உருவாக்கி அந்த நோட்டு யாருக்கு என்பதை எழுதி லேபில் ஒட்டி விநியோகித்துவிட்டுத்தான் ஊருக்குப் புறப்படுவார்.

ஒருதரம் வீடு துடைக்கும் ‘மாப்’ பழசாகி விட்டதென்று கிணற்று மேடையில் போட்டிருந்தோம்.

வீணா மாமா வந்தார். ”வீணாப் போறதே அது” என்று பதறினார். எடுத்தார் கையில். பிரித்தார் தன் பையை. ஒருநாள் பூரா செலவிட்டார். மாப்பின் கந்தல் கிழிசலை அழகிய வாசல் தோரணமாக செய்துவிட்டார். பார்த்தவர்களெல்லாம் ”ரொம்ப அற்புதமாக இருக்கிறதே. எங்கே வாங்கினது?” என்று கேட்டார்கள்.

மாமாவுக்கு மகா மகழ்ச்சி. நாங்கள் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து ‘கைவண்ணச் செம்மல்’ என்ற பட்டத்தைத் தமாஷாக எங்கள் கையால் எழுதிக் கொடுத்தோம்.

அடுத்த தடவை அவர் வந்தபோது நாங்கள் எழுதிக்கொடுத்த பாராட்டுக் காகிதம் மகா மகா அந்தஸ்துடன் ஒரு பெரிய அரசாங்க விருது அட்டையில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மாமாவும் நாங்களும் சிரித்துக்கொண்டு இருக்கிற மாதிரி ஒரு புகைப்படமும் எப்படியோ ஒட்டு வேலை செய்து உருவாக்கி அதில் பதித்திருந்தார்.

இந்தத் தடவை மாமாவுக்கு நாங்கள் கொஞ்சம் பிஸ்தா பருப்பு ஓடுகளும், பேரிச்சப் பழ கொட்டைகளும், பலாக்கொட்டை, இருபது பழைய க்ரீட்டிங் கார்டு, இரண்டு பழைய காலண்டர், பழைய டேப் காசெட்டுகள், ஓடாத பாக்கெட் டிரான்ஸ்சிஸ்டர் ஆகியவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தோம்.

அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவர் வந்தது தீபாவளி சமயம். எங்களுக்கும் மகிழ்ச்சி. தீபாவளிக்கும் அவர் இருந்தால் எங்களை குஷிப்படுத்த என்னென்னவோ புதுப்புது ஐடியாவெல்லாம் செய்வார் என்று ஆசையாக இருந்தோம்.

ஆனால் என்ன ஒரு துரதிருஷ்டம். நாங்கள் சேகரித்து வைத்திருந்த பொருள்களையெல்லாம் எங்கள் தாயார் ஒட்டுமொத்தமாக வாரி குப்பைத் தொட்டியில் போட்டு அதையும் குப்பைக்காரர்கள் எடுத்துக்கொண்டுப் போயாச்சு.

சேலத்தில் நடந்த எங்கள் நண்பனின் வீட்டுக் கல்யாணத்துக்கு இரண்டு நாள் போய்விட்டு வருவதற்குள் இங்கே எங்கள் பொக்கிஷம் காலியாகிவிட்டது.

சோதனையாக தீபாவளிக்கு முதல் நாள் மாமா வந்துவிட்டார். ”என்னடா பசங்களா” என்று எங்களது தகரப் பெட்டிகளையும் அலமாரியையும் பார்த்தார்.

”அரிய பொக்கிஷமெல்லாம் குப்பையோடு போய்விட்டது” என்று ஒரு பாட்டம் முகாரி வைத்து அவரை சமாதானப்படுத்தினோம். ஆனாலும் அவருக்கு எங்கள்மீது கோபம். ஒரே உர்ரென்று இருந்தார்.

தீபாவளி தினம் தான் பாட்டுக்கு குளித்ததும் வெளியே வாக்கிங் கிளம்பிவிட்டார். நாங்களோ சிறுவர்கள். (நாங்கள் நாங்கள் என்று சொல்வது என்னையும் என் சகோதரனையும் எங்கள் அக்கா பையன் ஒருவனையும்தான்). அவரை சமாதான செய்ய வழி தெரியாமலும் தைரியமில்லாமலும் மெளனமாக அவரைப் பின் தொடர்ந்தோம்.

”எங்கே மாமா பட்டாசுக் கடைக்கா?” என்று அக்கா பையன் வத்தி வைத்தான்.

அவர் வெடுக்கென்று ”இந்த வருஷம் உங்களுக்க பத்து ரூபாய் பட்டாசுகூட நான் வாங்கித் தர முடியாது. பிஸ்தா ஓடு அவ்வளவு சுலபமா கிடைக்கக்கூடியதா? வீணடிச்சிடீங்களேடா?”

தெருவில் மெளன ஊர்வலமாக எங்கள் கோஷ்டி சென்று கொண்டிருந்தது.

”யோவ்! யோவ்! ஆட்டம் பாம். ஆட்டம் பாம்! போங்க அப்பால்லே.” என்று ஒரு குரல் எங்களை சகல திசைகளிலும் ஓட வைத்தது.

என் மாமா ஒரு ஆசாமிமீது படேரென்று மோதிக்கொண்டார். ”அய்யோ” என்று மாமா கத்த, மோதப்பட்டவர், ”நீ ஒரு அய்யோ என்றால் நான் இரண்டு அய்யோ. தெரிந்துகொள்” என்று கத்தினார்.

இதற்குள் நாங்களெல்லாம் மாமாவிடம் போய் ”என்ன ஆச்சு மாமா? யார் மேலே டேஷ் அடிச்சீங்க?” என்று கேட்டவாறே அவரை இடித்த பேர்வழியைப் பார்தோம். எங்களுக்குத் திக்கென்று ஒரு ஆச்சர்யம். ”மாமா. மாமா. உங்கள் வலி கிடக்கிட்டும். உங்களை இடிச்ச ஆளை நல்லாப் பார்த்தீங்களா. சீக்கிரம் பாருங்களேன். அப்புசாமித் தாத்தா மாதிரி இல்லை?

மாமாவும் அசந்துவிட்டார். அந்த தீபாவளி அரை குறை இருட்டில் மாமாமீது மோதிய பெரியவர் பார்க்க அப்புசாமி தாத்தா மாதிரியே இருந்தார்.

எங்கள் மாமா ஆச்சர்யம் தாங்காமல் ”சார். தப்பா நினைச்சுகாதீங்க. நீங்க அப்புசாமி தாத்தாதானே?” என்று கேட்டுவிட்டார்.

பதில் காரமாக வந்தது. ”யோவ். நல்ல நாள் அதுவுமா மூஞ்சு மொகரையைப் பேர்க்கிறாப்பிலே வந்து டேஷ் அடிக்கிறே. யாரானும் பொம்மானாட்டி ஆனாலும் தொலைகிறதுன்னு விட்டுடுவேன். நீ ஒரு ஆம்பிளை கெடா மாடு. என் கையிலிருந்த பட்டாசெல்லாம் சிதறிப் போச்சே. மரியாதையாப் பொறுக்கி கொடுங்க. நான் அப்புசாமிதான். அதுக்கு என்ன பண்ணப் போறே.”

மாமா ஆச்சரியப்பட்டவாறு ”நீங்க அப்புசாமி தாத்தாவேயா? இல்லை அவர் மாதிரி?” என்றார்.

அவர் கீழே விழுந்த பட்டாசுகளைப் பொறுக்கிக்கொண்டே ”வந்து பொறுக்குங்குடா முண்டங்களா. நான் அப்புசாமியா அவரைக்காய் சாமியா என்பது அப்புறம்”. என்று கோபித்தார்.

மாமா கெட்டிக்காரர் ”ஸாரி ஸார். எங்களை மன்னிச்சுக்கோங்க. தீபாவளி அன்னிக்கு உங்க மேலே மோதிண்டது, அதிருஷ்ட தேவதை மேலேயே மோதிண்ட மாதிரி. நீங்க அப்புசாமி தாத்தாவுக்குப் பிரதரா? அவர் மாதிரி இருக்கீங்களே. உடன் பிறப்பா?”

”உடன் பிறப்புமில்லே. கடன் பிறப்புமில்லே. கஷ்டப்பட்டு நான் பொறுக்கின பட்டாசையெல்லாம் தட்டி விட்டுட்டு பேட்டியா பேட்டி. எந்த டி.வி. ஜெயாவா, விஜய்யிலா, பொதிகையிலா எதுக்காகப் பேட்டி?”

மாமா சிரித்தார். ”எனக்குப் தெரிஞ்சுப் போச்சு. நீங்க பேசறதப் பார்த்தா அந்த அப்புசாமி தாத்தாவேதான் நீங்க. பாட்டிக்கிட்டே ஓயாம டோஸ் வாங்குவீங்களே. அதே தாத்தாதான். ஆம் ஐ கரெக்ட்.”

”ஆமாண்டா. நான் அப்புசாமியேதான். ஒரிஜினல் பட்டணம் பொடி மாதிரி. ஒரிஜினல் அப்புசாமியேதான். என் பொண்டாட்டி சீதேக் கிழவி எடக்கு பண்ணிட்டா. பட்டாசுக்குன்னு துட்டு ஒரு பைசா தரமாட்டேனுட்டா. ஆனால் நான் அசந்த கட்டை இல்லை. ‘வீடு வீடா பொறுக்கியாவது உன் எதிரிலே வெடிச்சுக் காட்டறேண்டி’ன்னு சபதம் போட்டுட்டு வந்தேன். ஒரு பை நிறைய சேர்த்துட்டேன். தாழி திரண்டு வர்ரப்போ வெண்ணெயை உடைச்சிட்டியே. பட்டாசெல்லாம் எங்கெங்கே சிதறி விழுந்துருக்கோ. மூக்குக் கண்ணாடியும் எங்கேயோ விழுந்துட்டது. நான் பட்டாசு தேடுவேனா, கண்ணாடி தேடுவேனா.”

மாமா உடனே எங்களைப் பார்த்து ”இடியட்ஸ்” என்று கோபித்து, ”தாத்தா தேடறார் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? நீங்களும் தேடுங்கடா? நானும் தேடறேன்” என்று கத்தினார்.

ஒரு வழியாக உரிய மன்னிப்புகளை வழங்கியபின் அப்புசாமி தனது தேடுதலை முடித்துக்கொண்டு எழுந்தார்.

அவர் கையிலிருந்த பிளாஸ்டிக் பையில் (டிரான்ஸ்பரண்ட் பை) அவர் இதுவரை திரட்டிய விதவிதமான பட்டாசுகள் அழகழகான வண்ணங்களில் காட்சி தந்தன.

அத்தனையும் வெடிக்காத மக்குப் பட்டாசுகள்.

எங்க மாமா ஆச்சரியத்துடன் கேட்டார். ”எதுக்கு தாத்தா இத்தனை பட்டாசு? பார்த்தால் எல்லாம் அவிசப் பட்டாசு மாதிரியே இருக்கே. எரியாத பட்டாசுன்னு சொல்றேன்.”

அப்புசாமி ஒரு பெருமூச்சு விட்டார். சில பட்டாசுக் காகிதங்கள் அவரது பெருமூச்சு தாளாமல் பறந்து அடங்கின. ”என்ன செய்யறது வாய்ச்சவள் சரியில்லையே. எந்த பொம்பளையாவது தீபாவளி அதுவுமா புருஷனை வீட்டை விட்டுத் துரத்துவாளா? நான் அவ மேலே வேணும்னே பட்டாசு கொளுத்திப் போடவுமில்லே, அவளுக்கோ புடவைக்கோ செய்கூலி சேதாரம் எதுவும் ஆகவும் இல்லை.

ஆனால் அவ கொழுப்பு, திமிரு ‘பத்து ரூபாகூட பட்டாசு அலவன்ஸ் தரமுடியாது. வீட்டைவிட்டு தொலைங்கோன்னு’ கேட்டைச் சாத்திட்டா. நான் சபதம் போட்டுவிட்டு வந்துவிட்டேன். ‘நாலு தெரு பொறுக்கியாவது நம்ம வீட்டு வாசலிலே பட்டாசு வெடிக்கிறேன்’னு.

தாத்தா சொன்னதைக் கவனியாமல் எங்க மாமா அவர் கையிலிருந்த பட்டாசுப் பையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்புசாமி தாத்தாவுக்கு மாமாவின் பார்வை அவ்வளவு செளகரியமாகப் படவில்லை. ‘கொள்ளிக் கண்ணன் போலிருக்கு. முட்டக் கண்ணைப் போட்டுக்கொண்டு பார்க்கிறான் பார்’ என்று நினைத்துக்கொண்டவர் போல பட்டாசுப் பையை தன் பின்புறமாக மறைத்துக்கொண்டார். மாமா கேட்டார். ”ஏன் தாத்தா அந்த பட்டாசெல்லாம் வெடிக்குமா? எல்லாம் வெடிக்காத பட்டாசு மாதிரி இருக்கே.”

அப்புசாமி கோபத்தோடு ”வாயை வைக்காதேய்யா. இத்தனை பட்டாசுகளிலும் கெட்ட பெண்டாட்டிகளுக்கு நடுவே நல்ல பெண்டாட்டி யாராவது இருப்பது போல ஒண்ணு ரெண்டு நல்ல பட்டாசும் இருக்கும். நான் என்ன பண்ணப்போறேன்னால் இத்தனை பட்டாசையும் ஒடைச்சு உள்ளிருக்கும் மருந்தையெல்லாம் கொட்டி பெரீய புஸ்வாணமா எங்க வீட்டு கியவியோட காருக்கு அடியில் வச்சு கொளுத்திடப்போறேன். அதுதான் அவளுக்கு நான் கொடுக்கப் போற தீபாவளிப் பரிசு. என்னை என்னமோ நினைச்சுக் கொண்டிருக்கா. நான் ஒரு பயங்கரவாதின்னு அவளுக்குத் தெரியாது.”

”ஆமாம் பாவம்” என்றார் மாமா அனுதாபத்தோடு. ”நீங்களும் எத்தனை தடவைதான் உங்கள் பயங்கரவாதத்தைப் பாட்டி மேலே காட்டுவீங்க. அவுங்களுக்கும் அலுக்கவில்லை. உங்களுக்கும் அலுக்கவில்லை.”

அப்புசாமிக்கு மாமாவின் நைஸ் பேச்சுப் பிடிக்கவில்லை. ”எங்க குடும்ப விஷயத்திலே அநாவசியாக வழியோடு போற நீங்க தலையிடறது எனக்குப் பிடிக்கலை. என் பட்டாசை இருட்டில் தட்டி விட்டுட்டுப் பேச்சு என்ன வேண்டியிருக்கு?” என்று கோபித்துக் கொண்டார்.

மாமா மன்னிப்புக் கோருவதுபோல ”சார். சார். நீங்க பெரியவர். தீபாவளி அதுவுமா என்னை ஆசிர்வாதம் பண்ணனும். அப்புறம் ஒரு விஷயம் நீங்க தப்பா நினைச்சுக்கக்கூடாது. நீங்க வைத்துக்கொண்டிருக்கிற பட்டாசுப் பையை ஒரு விலை போட்டுக் கொடுத்துடுங்க. நான் தர்ற பணத்திலே நீங்க தெளஸண்ட் வாலாவை வாங்கி பாட்டி எதிர்ல படபடான்னு வெடிக்கலாம். இதுதான் உங்க மேலே நான் மோதினதுக்கு நான் செய்யற பிராயசித்தம்.”

அப்புசாமி ”என்னடா?” என்று முதல் டாவைப் போட்டார். ”கிண்டலடிக்கிறியா? நானு உன் மாதிரி எத்தனை எத்தன்களைக் கண்டவன். என் பட்டாசையெல்லாம் கொள்ளையடித்துப் போகத் திட்டம் போடறியா?”

மாமா சட்டென்று ஒரு காரியம் செய்தார். அவர் புத்திசாலிதானே. தன் மணி பர்ஸை எடுத்து அதிலிருந்து ஒரு கற்றை ரூபாய் நோட்டை எடுத்து அப்புசாமி முன் காட்டினார்.

அப்புசாமி கற்றையாக அவ்வளவு நோட்டுகளைப் பார்த்து எத்தனையோ மாமாங்கம் ஆகிவிட்டது. ஆகவே ”சரி. சரி. உங்க நல்ல எண்ணத்துக்கு நான் குறுக்கே நிக்கலை. இப்பவே சொல்லிட்டேன் இதுல ஒண்ணுகூட வெடிக்காது. வேணுமானா பட்டாசை ஒடிச்சி மருந்தை புஸ்வாணமா கொளுத்தலாம். நான் உன்னை ஏதோ ஏமாத்திட்டேன்னு நினைச்சுக்காதே. பார்த்தா நல்லவனா இருக்கீர்” என்று கூறியவர் ரூபாயை வெடுக்கென்று வாங்கிக்கொண்டு படக்கென்று பட்டாசுப் பையை ஒப்படைத்து விட்டு இருளில் மறைந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *