“இதுவரைக்கும் படிச்சதெல்லாம் சும்மா தான். இனிமேல் தான் கவனமா இருக்கணும். எப்படியாவது இங்க சீட் வாங்கிறனும். என்ட்ரன்ஸ் நல்லா பண்ணு. கௌன்ஸிலிங்ல தைரியமா பேசு. எதுவும் தெரியாதுனு சொல்லாதே. என்ன சரியா ?”
அம்மாவும், அப்பாவும், இருபுறம் இருந்து மத்தளம் வாசிக்க, பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் ரேஷ்மா. ‘ஏன் இப்படி போட்டு டார்ச்சர் பண்றீங்க’ என்பது போல இருந்தது அவள் பார்வை.
“பக்கத்து வீட்டு பொண்ணு இங்க படிச்சு தான் எம்.ஐ.டி. சேர்ந்திருக்கா. ஞாபகம் இருக்கில்லங்க உங்களுக்கு” என்று அம்மா, அப்பாவை இடித்தாள்.
இரவெல்லாம் கண் விழித்துத் தயார் செய்ததில், காலையிலேயே சோர்வாய் இருந்தாள் ரேஷ்மா.
லீவு நாட்களில் கூட சும்மா இல்லை. அந்த கோச்சிங், இந்த கோச்சிங் என்று படு பி.ஸி. தான்.
“நீங்க ஹாஸ்டல் எடுத்துக்கிட்டீங்கனா, இங்க சீட் கண்டிப்பா கிடைக்கும்” என்றார்கள்.
“ஹாஸ்டலில் இருந்துவிடுவாளா ? பழக்கமே இல்லையே ! இன்று வரை எங்களை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை” என்றார் அப்பா.
“அதெல்லாம் பிள்ளைங்களோட பிள்ளைங்களா இருக்கும்போது பழகிடும் சார். சரி, போய் ஆஃபீஸ்ல ஃபீஸ் கட்டி, ரெஸிப்ட் வாங்கிக்கங்க” என்றார் ரேஷ்மாவை நேர்முகம் செய்த ஆசிரியை.
“ஸ்டூடண்ட் பேரு என்னங்க ?” என்றார் ரைட்டர்.
“ரேஷ்மா”
“எந்த க்ளாஸ் ?”
“எல்.கே.ஜி. !”