அப்பளம் சதுரமானது

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 12,570 
 

“என்ன ஓர் அலட்சியமிருந்தால் நீ இப்படிச் செய்து இருக்கவேண்டும்? அதை எத்தனை வருஷமாக வைத்திருக்கிறேன் தெரியுமா? உன்னுடைய டைஜஸ்ட் பத்திரிகைகளைப் பதிலுக்குப் பதில் நான் இதே பாய்லரில் போட்டுச் சுடச்சுட வெந்நீர் காயவைத்துக் குளிக்கவில்லையானால் என் பெயர் அப்புசாமி இல்லை” என்று கோபமாகச் சூளுரைத்தார் அப்புசாமி.

அவரது வாக்கிங் ஸ்டிக்கை, ஏதோ சாதாரணக் கோலென்று நினைத்து, தவறுதலாகப் பாய்லரில் போட்டுவிட்டிருந்தாள் சீதாப்பாட்டி.

அப்புசாமியின் கோபத்துக்குக் காரணம் அதுவே.

“ஆயிரத்தெட்டு முறை ‘ஸாரி’ சொல்லி அபாலஜி கேட்டுவிட்டேன். அப்புறமும் தொண தொண தொண என்று…”

“அந்தக் கதையெல்லாம் வேண்டாம்” என்றார் அப்புசாமி. “எனக்கு நஷ்டஈடு மாதிரி, பதிலுக்கு நல்ல வெள்ளிப் பிடிபோட்ட கைத்தடி மரியாதையாகச் செய்து கொடுத்துவிடு. நான் என்ன, வேளைக்கொரு வேஷ்டி கேட்கிறேனா? டெரிலின் சட்டை கேட்கிறேனா? தலைக்கு வகை வகையாக எண்ணெய் கேட்கிறேனா?”

குறுக்கே, “தாத்தா என்ன சொல்கிறார்?” என்று குரல் கேட்டது.

யார் இது சண்டை வேளையில் சைத்தான் மாதிரி என்று திரும்பிப் பார்த்தார் அப்புசாமி.

கீதாப்பாட்டி!

“வாருங்கள் கீதா மாமி, வாருங்கள் ஜஸ்ட் நெள உங்களைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று சீதாப்பாட்டி வரவேற்றாள்.

அப்புசாமி பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டார்.

காற்றாடி சம்பவத்துக்கப்புறம் இரண்டு கிழவிகளும் குலாவ ஆரம்பித்துவிட்டது அவருக்குத் தாங்கமுடியாத எரிச்சலைத் தந்து கொண்டிருந்தது.

அவர்களது பேச்சில் அதிகமாக அரைபடுவது அப்புசாமியின் தலையாதலால் அவருக்கு அந்த ஜோடி சந்தித்தால் பற்றிக் கொண்டுவரும்.

சீதாப்பாட்டி, “வேறு வேலை என்ன? ஆல்வேஸ் எதையாவது நச்சரித்துக் கொண்டிருப்பதுதான் இவர் வேலை. இப்போது ஹி இஸ் ஆ·ப்பர் எ வாக்கிங் ஸ்டிக் . கைத்தடி ஒன்று வேணுமாம்” என்றாள்.

“ஆமாம்” என்று மோவாயில் இடித்துக் கொண்டாள் கீதாப்பாட்டி. “அது இல்லாமல் நடக்க வரவில்லை யாக்கும்?”

சீதாப்பாட்டி. “இருங்கள் மாமி. இதோ ‘ஓவல்’ கலந்துகொண்டு வருகிறேன்… ப்ளீஸ்… வேண்டாம், கீணடாம் என்று சொல்லக்கூடாது” என்று உள்ளே போய் ஓவல் கொண்டுவந்து கொடுத்தாள்.

அதை வாங்கி உதடு படாமல் சூடாகத் தூக்கி ஊற்றிக்கொண்டாள் கீதாப்பாட்டி.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அப்புசாமிக்குப் பொறுக்கவில்லை. ஒரு நாள்கூட இந்தச் சீதா இவ்வளுவு ‘திக்’ காக ஓவல் தனக்குக் கலந்து தந்ததில்லை. வடுமாங்காய் போடும் ரகசியம், மாங்காய்த் தொக்கு மாதக்கணக்கில் கெடாமலிருக்கும் ரகசியம், அகலமாகப் பொரியும் அப்பள ரகசியம், நைஸ் சப்பாத்தி செய்வது இன்னும் இதுபோன்ற சமையல் நுட்பங்பளை கீதாப்பாட்டியிடம் தெரிந்துகொள்வதற்காக சீதா இப்படி இவளோடு உறவு கொண்டாடுவதையும். ஓவல் டின்னைக் கரைத்துக் கரைத்து அவளுக்கு ஊற்றுவதையும் அவரால் பொறுக்கமுடியவில்லை. அதையாவது பொறுத்துக் கொள்ளலாம், மத்தளத்துக்கு இருபுறம் தாக்குப்போல மனைவி ஒருபுறம் இங்கிலீஷிலும் கீதாப்பாட்டி ஒருபுறம் கிராமியத்திலும் அவரை நைய நையத் திட்டுவதை அவரால் சகிக்கமுடியவில்லை.

“நன்றாயிருக்கிறதா ஓவல்?” என்று கீதாப்பாட்டியைக் கேட்டுவிட்டார் அப்புசாமி.

சீதாப்பாட்டி ஓர் அதட்டல் போட்டாள். “ஷட் அப்! கொஞ்சம்கூட டீஸன்ஸி தெரியாதவராக இருக்கிறீர்களே?”

கீதாப்பாட்டி சமாதானம் செய்தாள்.

“சீதா மாமி… விடுங்கோ… கெழட்டு நப்பாசை… என்ன கண்ணாராவியோ!… உங்களுக்கு இப்படி ஒருத்தர் வந்து வாய்த்திருக்க வேண்டாம்..”

எஸ் எஸ்… என்ன செய்வது?” என்று சீதாப்பாட்டி, அப்புசாமி இன்னும் அங்கேயே சூடுபட்ட பூனைபோல் உர்ரென்று உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, “இன்னும் எழுந்து போகலையா நீங்கள்?” என்று ஓர் அதட்டல் போட்டாள்.

அப்புசாமி குத்துச்சண்டையில் தோற்ற பயில்வான் உதட்டைத் துடைத்துக்கொள்வதைப் போலப்புறங்கையால் உதட்டோரத்தைத் துடைத்துக் கொண்டு மாடிக்கு புறப்பட்டார்.

மறுநாள் ரசகுண்டுவைக் கூப்பிடுகிற சாக்கில் கீதாப்பாட்டியின் வீட்டுக்கு அப்புசாமி புறப்பட்டார்.

“யாரது கதவைத் தூளடிக்கிறது? ஏற்கெனவே உளுத்துப்போய் மாவு கொட்டறது? நீ வேற அதை மோதுகிறாயாடாப்பா…” என்று நலுக்கென்று தாளைத் தள்ளின கீதாப்பாட்டி, அப்புசாமி புன்னகையுடன் நிற்பதைப் பார்த்ததும், “யார் கழுத்தை அறுக்க வந்திருக்கிறீர்? ரசமும் இல்லை. குண்டுமில்லை வாசற்படியை விட்டு இறங்கும் கீழே. சீதா மாமிகிட்டே சொல்லிக் கொண்டு வந்தீரா, இஷ்டத்துக்குக் கிளம்பி வந்து விட்டீரா… வயசான காலத்திலே பொழுது போகலையானால், காப்பிக்கொட்டை திரியும். ஏன் ஊரைச் சுற்றித் திரிகிறீர்? விவரம் தெரியாத உன் பேரனோடு உமக்கு என்ன வேலை? அந்தப் பிள்ளைக்குப் பதினேழு நடக்கிறது உமக்கென்ன, தொண்ணூத்தேழா? நூற்றேழா?… உமக்கு அவனோடு என்ன ஊர் சுற்றல்? சொல்றேன் காதில் விழவில்லையா?” என்று பிடித்துக்கொண்டாள்.

அப்புசாமி, “பெரியம்மா… என்னை ரொம்ப ரொம்ப மன்னிக்கணும்…” என்றார் கைகூப்பி.

கீதாப்பாட்டி அசந்துவிட்டாள்.

“என்னை எதுக்கய்யா கும்பிடறீர்… நான் என்ன மதுரை மீனாட்சியா, காஞ்சி காமாட்சியா?”

“பாட்டி… மன்னிக்கணும், மாமி… உங்களுக்குக் காற்றாடியாலே நான் புத்தி கெட்டதனமாக விபத்தை உண்டாக்கிவிட்டேன்… ஆனால் நீங்க பேப்பரைப் பார்த்தீர்களா… ரசகுண்டு படிப்பானே…”

“பேப்பரை நான் எதற்குப் பாக்கணும்? உம்ம மாதிரிப் பொழுதுபோகாமல் தெருச் சுற்றுகிறவர்கள் பார்க்கிறது பேப்பர். எங்க வீட்டுக்காரரைக்கூட நான் பேப்பர் படிக்கவிடமாட்டேன். பேப்பர் என்னத்துக்கு பேப்பர்? ஒவ்வொரு மனுஷாளும் ஒரு பேப்பர். நான் சொல்லுவேன் ஆயிரம் பேப்பர் சமாசாரம் இதுக்குக் காசைக் கொட்டிப் பொடி எழுத்துலே படிக்கணுமா பேப்பர்…”

அப்புசாமி, ” நீங்க படிக்கணும் என்று நான் சொல்ல வரவில்லை. அதுலே உங்க போட்டோவும் என் பெண்சாதி எழுதின கடுதாசியும் அச்சாயிருந்ததே பார்த்தீர்களா?… இதோ… இதைப் பாருங்கள்…” என்றார்.

“என்னது?”

“கீதாப்பாட்டியிடம் ஜிப்பாவுக்குள் மடித்துப் போட்டு கொண்டுவந்த பேப்பரை அப்புசாமி எடுத்துப் பிரித்துக் கொடுத்தார். பிறகு விவரித்தார் :

“ஊரே உங்க பின்னாடி சிரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு. மூஞ்சிலேயும், தலையிலேயும். கீறலும், கட்டுமாக இது யாருடைய படம் என்று எல்லாரும் சிரிக்கிறார்கள். என்னதான் என் மனைவி என்றாலும் உண்மையை ஒப்புக்கொள்ளணுமில்லையா? அவள் இந்த பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினாள், காற்றாடி கயிறாலே ஜனங்களுக்கு ஆபத்து என்று. அவர்கள், “உன் கடுதாசிக்கு என்ன ஆதாரம். போடமுடியாது என்று சொல்லிவிட்டார்கள்.”

“இந்தச் சமயத்தில்தான் என் பொல்லாத வேளை என் காத்தாடி உங்கள் கழுத்தை அறுத்துத் தொலைத்தது. இவள் சாமார்த்தியமாக உங்களை போட்டோ பிடித்தாள். பத்திரிகைக்கு ‘இதோ பாருடா ஆதாரம் ஒரு கிழவி கழுத்து மூஞ்சி அறுந்து கோரம் பிடுங்க இருக்கிறாள். என் கடுதாசியைப் போடுடா’ண்ணு அனுப்பிவிட்டாள், உங்க போட்டோவை. உங்களைப் பலியாடு மாதிரி உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு இது தெரிவில்லையே. இந்த ஒரு சமாசாரத்தைத் தவிர சீதே ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுதான்…”

கீதாப்பாட்டி வைத்தகண் வாங்காமல், தன் புகைப் படத்தைப் பேப்பரில் பார்த்துக் கொண்டிருந்தாள். “ஆகா! என்ன திவ்யமா அச்சாயிருக்கிறது. என் போட்டோவைக் கூடப் போட்டிருக்கிறார்களே! அச்சில் நான் இப்படியா இருக்கிறேன். உலகம் முழுவதும் இப்போ என்னைத் தெரிந்து போச்சே. கீழே என் பேர்கூடப் போட்டிருக்கிறது போல் இருக்கிறதே… விதவிதமாகத் தலையிலே கட்டுப் போட்டிருந்தாலும், அந்தக் கண்ணு பேசறதே. என் தலை என் கழுத்து… என் கண்ணு அச்சாக அப்படியே நான் நான்…”

“நீ… நீ… நீ… நாசமாய்ப் போக!” என்று அப்புசாமி திட்டிக்கொண்டே திரும்பினார்.

“எங்கே ஆள் அப்ஸ்காண்ட் ஆகிவிட்டீர்கள்? வீட்டை பார்த்துக்கொள்ள ஆளைத்தேடினால் காணோமே?” என்று சீதாப்பாட்டி தன் கையில் ஒரு பளபளக்கும் வெள்ளி அப்பளக் குழவியை ஆட்டிக்கொண்டே கடுங் கோபமாகப் பேசினாள்.

அப்புசாமி, அவளது கோபத்தையோ வசனத்தையோ காதில் போட்டுக் கொள்ளவில்லை பளபளவென்று புத்தம் புதுசாகக் கண்ணைப் பறிப்பதுபோல வெள்ளியலான அந்தப் புதிய பொருளைப் பார்த்து வியந்தார்.

“என்ன அது சீதே? வெள்ளி அப்பளக் குளவி வாங்கினாயா? ஜோராக இருக்கிறதே… என்ன விலை? ஆமாம் வெள்ளியில் எதற்கு அப்பளப் குழவி? இட வருமோ?” என்று கேள்விகளை அடுக்கினார்.

“இது இடுவதற்கு வாங்கவில்லை. உங்கள் மாதிரி சகுனிகளின் தலையில் போடுவதற்கான ‘வெபன்’. கீதா மாமியிடம் என்னைப்பற்றிக் கோள் சொல்லிமுடித்தாகி விட்டதா? பலன் கிடைத்ததா?”

அப்புசாமி மிரண்டுபோனார். ‘அட கஷ்டமே’ இவள் எங்கே வந்து, அதைக் கவனித்தாள்?”

சீதாப்பாட்டி வெற்றி மதர்ப்புடன் சிரித்தாவாறு, “ஐ பிட்டி யூ. மை டீப்பஸ்ட் அனுதாபங்கள். நீங்கள் ஒரு நாட்டோவை முறிக்கலாம், ஒரு ஸீட் பிளாக்கை மட்டும் ஒன்றும் செய்து கொள்ளமுடியாது. தெரிந்து கொள்ளுங்கள்.” என்றாள் “கீதா மாமி கிராமத்துக்குப் புறப்படப் போகிறாள், தெரியுமா உங்களுக்கு? அவளுக்குக் ‘கிராண்ட்’ சென்ட் ஆ·ப் கொடுக்கப்போகிறோம், பா.மு.கழக சார்பாக, இந்த அம்மாளுக்கு நான் ப்ரெசென்ட் செய்யப் போகிறேன்.”

வெள்ளி அப்பளக் குழவி! எத்தனை ரூபாய் இருக்கும்.

அப்புசாமிக்கு அடிவயிற்றிலிருந்து அனல் கிளம்பி நாசி வழியே புரட்சி மூச்சாக வெளியே வந்தது.

“எதற்கு அநத்க காந்தாரிக்கு வெள்ளி அப்பளக்குழவி? இங்கே என்ன பணம் கொட்டிக் கிடக்கிறது என்று எண்ணமா? யார் அப்பன் வீட்டு சொத்து பாழாய்ப் போகிறது. வாரிவிட? கேவலம் எனக்கு வெள்ளிப்பிடிபோட்ட ஒரு கைத்தடி வாங்கித்தரக் கணக்குப் பார்க்கிறே? உத்தரத்தைப்பா¡க்கிறே? இப்போது முந்நூறு ரூபாய் செலவழித்து வெள்ளியிலே அப்பளக் குழவி என்ன வேண்டியிருக்கிறது. வழியோடு போகிற ஒரு கிழவிக்கு…”

சீதாப்பாட்டி முறிவலித்துக் கெண்டாள். “திஸ் இஸ் நாட் மை பர்சனல் மணி, மைடியர்! அண்டர்ஸ்டாண்ட்? கழக ·பண்டிலிருந்து பணம் எடுத்து, கழக சார்பாக ப்ரஸண்ட் செய்கிறோம்… ஸீரீஸ் அ·ப் சமையல் லெக்சர்ஸ் கொடுத்தாளல்லவா கீதா மாமி, அதைப் பாராட்டியும் கடைசியாக அவள் கண்டுபிடித்த ‘சதுர அப்பளம்’ இன்வென்ஷனுக்காகவும் இதைத் தருகிறோம்”

“சதுர அப்பளமா? சகிக்கவில்லையே? உங்கள் கழகத்திலிருக்கிற கிழட்டு மாடுகளுக்கும் உனக்கும் பொழுது போகவில்லையானால் இப்படியா கொட்டமடிப்பது? அப்பளத்தைச் சதுரமாகச் செய்தால் பொரிகிறது எப்படி? இது ஒரு கண்டுபிடிப்பு. இதற்கு ஒரு பாராட்டு. இதற்கு ஒரு பரிசளிப்பு… ஏ… பா.மு.கழகமே… உன்னைக் கேட்பார் இல்லையா? உன் நிதி இந்தக் கதியில்தான் அழிய வேண்டுமா? இல்லை, தெரியாமல்தான் கேட்கிறேன்… உலகத்தில் இதுவரை சதுர அப்பளம் என்று ஒன்று வந்ததில்லை… இது அடுக்காது” அப்புசாமி ஆவேசத்துடன் பேசினார்.

“மிஸ்டர் வாக்கிங் ஸ்டிக், ஸ்டிக் டு தி பாயிண்ட் உங்களுக்குச் சதுர அப்பளத்தைப் பற்றித் தெரிய வேண்டுமானால் ஒரு ஸாரி கட்டிக்கொண்டு எங்கள் பா.மு.க.வில் மெம்பராயிருந்திருக்கவேண்டும். கீதாவின் இன்வென்ஷனை, தியரிடிகலாக எங்கள் கழகத்தில் நான் டயக்ராம் போட்டு விளக்கினபோது வந்து பார்த்திருக்க வேண்டும்.”

“அந்தக் கண்ணராவியை நான் பார்க்காததே நல்லது” என்று அப்புசாமி மாடி ஏறினார்.

சீதாப்பாட்டி, “ப்ளீஸ்… ஜஸ்ட் எமினிட்” என்று ஓர் உறைமேல் என்னவோ அவசரமாக எழுதிக்கொண்டுவந்து நீட்டினாள்.

அப்புசாமி பார்த்தார். உறையின்மேல் ‘மிஸ்டர் அப்புசாமி’ என்று போட்டிருந்தது.

“என்ன இருக்கு உள்ளே?”

“கீதாப்பாட்டிக்கு செண்ட் ஆ·ப் செலிப்ரேஷன் நடத்தப்போகிறோம்-.. அந்த வைபவத்துக்கு இன்விடேஷன்.

அப்புசாமி, “என்றைக்கு விழா?” என்று கேட்டு வைத்துக்கெண்டார் அவர் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது.

கிராமத்துக்குப் புறப்படும் கீதாப்பாட்டிக்கு அப்பளக் குழவி தந்து கெளரவிக்கும் தினம்.

பா.மு.காக அங்கத்தினர்கள் ஜேஜே என்று கழக அலுவலகத்தின் மாடியில் கூடியிருந்தார்கள்.

கீதாப்பாட்டியை அழைத்துவர, “கார் போயாச்சா, போயாச்சா?” என்று தலைவி சீதாப்பாட்டி நாலைந்து தரம் கேட்டுவிட்டாள்.

பத்து நிமிடம் கழிந்தது.

“கீதா மாமி வந்தாயிற்று. வந்தாயிற்று…” என்று குரல்கள் கிளம்பின.

தலைவரான சீதாப்பாட்டி முன்னொருதரம் வரவேற்றதற்கும் இப்போது வரவேற்பதற்கும்தான் எவ்வளவு வித்தியசம்.

எழுந்து ஓடி சென்று கீதாப்பாட்டியை நெஞ்சோடு அணைத்து, மார்போடு தழுவிக்கொண்டு “லெட் மி ஹவ் தி ப்ளஷர் அ·ப் வெல்கமிங் யூ… என் சார்பாகவும் கழக சார்பாகவும்!” என வரவேற்றாள்.

ஒரே கைத்தட்டல். கீதாப்பாட்டிக்கு கண்ணில் நீரே வந்துவிட்டது.

“அந்தக் கரெண்ட்டை எடுத்து இப்படி வையுங்கோடியம்மா…” என்று கேட்டுக்கொண்டாள்.

நாத் தழுதழுக்க உடனே பேசத் தொடங்கிவிட்டாள்.

“என்னமோடியம்மா. இந்தப் பட்டணத்தைப்பத்தி நான் மகாத் தில்லுமுல்லுப்பிடிச்ச தேசம்னு கெணத்துத் தவளையாட்டமா நெனைச்சுக்கொண்டு இருந்துவிட்டேன். லோகத்திலே பலாப்பழம்தான் இருக்கு. மேலே சொறசெறண்ணு… அதை யார் சீந்துவார்? அந்த மாதிரிப் பட்டணத்துக்காரன்…(ஒரே கைத்தட்டல்) நீங்களெல்லாம் ரொம்ப ரப்பாவும் டப்பாவும் இருக்கிறதாக ஒரு நினைப்பு. முக்கியமா, பட்டணத்தார் ஏமாத்தறவர்கள்னு ஒரு பேர் லோகத்திலே எந்தப் பாவியோ கட்டிட்டான. அவன் ஈரேழு பதினாலு ஜன்மத்துக்கும், இருக்க வீடில்லாமல் உடுத்தத் துணி இல்லாமல், குடிக்கக் கஞ்சி இல்லாமல் தவிக்கப்போறான்… நானும் இந்தப் பட்டணத்துக்குப் புதுசா வந்தப்போ அப்படித்தான் நினைச்சுட்டேன். பிரசிடெண்ட் சீதா மாமி மாதிரி இந்தத் திரிலோகத்திலே ஒருத்தி இருக்கமாட்டாள். அப்படிப்பட்ட மகா உத்தமியோட நான் போட்ட சண்டை கொஞ்ச நஞ்சமில்லை. சீதா மாமி என்னை ரொம்ப ரொம்பக் கெளரவித்து விட்டாள். சீதா மாமின்னா என்ன, இந்தக்கழகம்னா என்ன, இவர் வேறு… சங்கம் வேறு இல்லை. நான் என்னவோ, பைத்தியக்காரி மாதிரி ஓர் அப்பளத் தினுசு கண்டுபிடிச்சேன்… அதை லோகப் பிரசித்தி பண்றமாதிரி அதற்கு, இங்கிலீஸ்லே ராவாப் பகலாக் கணக்குப் போட்டு, லண்டன்காரர்கூடப் புரிஞ்சிக்கிறாப்பலே சீதாமாமி பிரக்யாதி செய்துட்டு…அதற்கான பரிசு இந்தாடி அம்மாண்ணு எனக்கு வெள்ளிலே ஏதோ அப்பளக் குழவி இருநூறு முன்னூறு ரூபாபெறுமானது. தூக்கித்தர ஏற்பாடு பண்ணிவிட்டாள்.(கைதட்டல்) எனக்குக் கண்ணாலே ஜலம் கொட்டறது. நான் உட்கார்ந்துடறேன். பேச முடியலே…”

பெட்டியிலிருந்து பளபளக்கும் கனமான வெள்ளி அப்பளக் குழவியை சீதாப்பாட்டி எடுத்தாள்.

கீதாப்பாட்டியின் கண்களில் ஒளி நிரம்பியது ஆர்வத்துடன், கையை நீட்டினாள்.

சீதாப்பாட்டிக்கு உணர்ச்சி வேகத்தில் கைநடுங்கியது. தொப்பென்று அப்பளக் குழவி கீழே விழுந்தது.

அடுத்தகணம், ‘ஆ!’ ‘ஆ!’ என்னது?’ ‘கல்லா?’ ‘மாக்கல்லா?’ ‘களிமண்ணா?’ ‘கில்ட்…’ ‘வெறும் பாலிஷ்!’ என்று பல வியப்புக் குரல்கள் கிளம்பின.

கீதாப்பாட்டி ஒரு கணம்தான் திகைத்து நின்றாள். மறுகணம் கண்ணகி மாதிரி விருட்டென்று எழுந்தாள். கழுதைகளா? பட்டணத்து வேலையைக் காட்டிட்டீங்களா? யாருடி உங்களை வெள்ளிக் குழவி வேணும்னு கேட்டா? என்னை ஏமாத்தி என் மூக்கை அறுக்கவா சதி பண்ணினீர்கள்? ஏண்டி சீதாக் கிழவி… நீ நன்னாயிருப்பியா… உன் சாமார்தியத்தை என்கிட்டயாடி காட்டறே? கழகத்துலே தந்த ரூபாயை நீயே முழுங்கிட்டு இந்த மாதிரி மாக்கல்லுக் கொழவி வாங்கி …ஏண்டி… ஏண்டி…”

சீதாப்பாட்டி மயக்கமாகிவிட்டாள்.

அப்புசாமி, பொருட் செறிவுள்ள புன்னகையோடு நழுவி கொண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *