நீண்டு அகன்ற அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு பருத்த ஆலமரம் போல பரந்து விரிந்து காட்சியளித்தது. பல்வகைப் பறவைகள் அதில் வாசம் செய்தன. மன்னிக்கணும், பல்வகை மனிதர்கள் அதில் வசித்து வந்தார்கள்.
முறையே பணி செய்து, போதுமென ஓய்வு பெற்று, அறுபதைக் கடந்த ஜெகந்நாதனும், ராமசாமியும் அங்கு வந்ததிலிருந்து நண்பர்களும் ஆனார்கள்.’ப்லாக் ஈ’இல் நாலாவது மாடியில் ராமசாமியின் வீடு. சில ப்லாக் தள்ளி ‘ஐ’இல் கீழ் தளத்தில் ஜெகன் வீடு. தினம் மாலை ஒருவர் வீடு மாறி ஒருவர் வந்து, சில மணி நேரங்கள் அரட்டை அடித்து விட்டு செல்வது வழக்கம்.
“வாங்க ஜெகன். என்ன இன்னிக்கு கொஞ்சம் லேட்டு” என்று நண்பரை வரவேற்றார் ராமசாமி.
“என்ன தான் தினம் வந்தாலும், சில முறை தவறுதலாய்ப் போயிடுது. இப்ப கூட பாருங்க, ப்லாக் எஃப் போய் கதவ தட்ட, ஒரு பாயம்மா கதவத் தெறக்கறாங்க ! நீங்க அப்படி எல்லாம் இல்லையேனு யோசிச்சா, அப்ப தான் புரியுது ப்லாக் மாத்தி வந்திருக்கேன் என்று” என்று சொல்லி இடி இடி எனச் சிரித்தார் ஜெகன்.
“குசும்பு புடிச்ச கிழவரையா நீர். பாயம்மாவ பாக்கறதுக்காகவே போயிட்டு, என் மேல பழிய போடறீர்” என்று சினம் கொள்வது போல நடித்தார் ராமசாமி.
“நான் பாயம்மாவ பாக்கப் போனது இருக்கட்டும். இந்தக் கதையையும் கேளும். என் நண்பனின் மகன் ஒருவன் பாலாஜி என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியரா சேர்ந்திருக்கான். ஆரம்ப நாட்களில் சில வாரங்கள் கவனித்திருக்கிறான், மாணவர்களில் சிலர் காணாமல் போவதும், புதுமுகங்கள் வருவதையும்.”
“நீர் என்ன சொல்லப் போறீர் என்று புரிந்து விட்டது. என்ன வகுப்பு மாறி வந்து போனார்கள் … சரியா … கண்டுபிடிச்சிட்டேன் பாரும்” என்று பெருமிதம் கொண்டார் ராமசாமி.
“வயசுக்கேத்த பொறுமை எப்ப தான் வரப்போகுதோ உமக்கு. இப்படி குறுக்கே பேசக்கூடாது, அப்புறம் சுவாரஸ்யம் கொறஞ்சு போயிடும், பொறுமையா கேளும்” என்று தொடர்ந்தார் ஜெகன்.
ஒரு நாள், புதுசா வந்த சில முகங்களை, ‘எங்கே இவ்வளவு நாட்கள் காணலை, இப்ப தான் உங்களைப் பார்க்கிறேன்’ என்று கேட்டிருக்கிறான். ஒருவன், ‘நான் இந்த பக்கத்தில் இருக்கும் வெங்கடேஸ்வரா என்ஜினியரிங் கல்லூரிய நம்ம கல்லூரினு நெனச்சுப் போயிட்டேன்’ என்றானாம். மற்றவளோ, நான் அந்தப் பக்கம் இருக்கும் மேரிமாதா என்ஜினியரிங் கல்லூரிக்குப் போயிட்டேன் என்றிருக்கிறாள்.
இவனுக்கோ ஆச்சரியம் தாங்கலை. ‘அப்ப காணாமப் போனவங்க ??!!’ என்று வியந்து கேட்க, ‘அவங்க எல்லோருமே, இதே போல அதே தெருவில் வருசையாய் இருக்கும், ராஜு என்ஜினியரிங் கல்லூரி, விக்ரம் என்ஜினியரிங் கல்லூரி, ஜலால் என்ஜினியரிங் கல்லூரி என்று ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்’ என்றிருக்கின்றனர் கோரஸாய்.
உடனே, தான் சரியான கல்லூரியில் தான் இருக்கிறோமா என ஒருமுறை வெளியே வந்து தகர போர்டைப் பார்த்து உறுதி செய்திருக்கிறான்.” என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி, இடி முழக்கச் சிரிப்பைத் தொடர்ந்தார் ஜெகன்.